Saturday, 11 September 2021

இறந்தும் அமெரிக்காவைத் தோற்கடித்த பின் லாடன்


 9/11 நியூ யோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவையும் உலகையும் அதிர வைத்தது. பின் லாடனின் அல் கெய்தா அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்கா சென்று கடன் அட்டை மூலம் விமான ஓட்டுனர் பயிற்ச்சி பெற்று மூன்று விமானங்களைக் கடத்தி இரண்டால் இரட்டைக் கோபுர்த்தைதாக்கினர். அமெரிக்கப் பாதுகப்புத் துறை இருக்கும் பெண்டகனைத் தாக்கச் சென்ற மூன்றாவது விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு தீவிரவாதிகள் விமானங்களை கடத்துகின்றார்கள் என்ற சேதியை அவரது மனைவி அனுப்பினார். அவர் மற்றப் பயணிகளுடன் சேர்ந்து விமானியைத் தாக்க விமானம் இடையில் விழுந்து நொருங்கியது. 

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு வழி செய்த அல் கெய்தா தலைவர் பின் லாடனைப் பிடிக்க அமெரிக்கா மூன்று ரில்லியன் டொலர்களைச் செலவு செய்தது. 

பின்லாடனை எப்படிக் கண்டு பிடித்தனர் என்ற விபரம் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்(Click):

பின் லாடன் இருப்பிடம் அறிந்த விபரம்  : https://www.veltharma.com/2011/05/blog-post_04.html

அமெரிக்காவை அழித்த பின்னர்தான் இஸ்லாமிய அரசை நிறுவ முடியும் என்ற கொள்கையுடைய பின் லாடன் செய்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புக் கெடுபிடிகளால் அமெரிக்காவின் வருமானம் குறைந்தது. அமெரிக்காவின் கடன் பளு அதிகரித்தது. இரண்டு தடவை அமெரிக்கா கடன் நெருக்கடியில் சிக்கியது. 

அமெரிக்கா சந்தித்த நிதி நெருக்கடி பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்: http://www.veltharma.com/2013/01/blog-post_3.html

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்கா எட்டு ரில்லியன் டொலர்களுக்கு மேல் செலவழித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு அதுவே காரணமாக அமைந்தது.

பொருளாதாரத் தாக்குதல்

ஆப்கானிஸ்த்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து போராடிய பின்  லாடன் அறிந்து கொண்ட உண்மை எதிரியைத் தோற்கடிக்க அவன் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் என்பதே. ஆப்கானை ஆக்கிரமித்ததால் அதிகரித்த பாதுகாப்புச் செலவு சோவியத்தில் நிதி நெருக்கடியை உருவாக்கி சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க நிதிச் சந்தையின் இருதயமாக இருந்த இரட்டைக் கோபுரத்தை பின் லாடன் தெரிவு செய்தது ஒரு பொருளாதாரத் தாக்குதலுக்குத்தான். தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு 16% இழப்பு ஏற்பட்டதை பின் லாடன் தன் அமைப்பினருக்கு சுட்டிக்காட்டினார். அந்த இழப்பின் பெறுமதி 640பில்லியன் டொலர்கள் என்றும் அதைத் தொடர்ந்து வந்த இழ்ப்புக்களையும் கூட்டினால் அமெரிக்காவின் மொத்த இழப்பு ஒரு ரில்லியன் டொலர் என்றார் பின் லாடன். அல் கெய்தா செலவழிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என தன் அமைப்பினருக்கு பின் லாடன் போதித்தார். இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியின் எதிரொலியாக உலகெங்கும் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. அதனால் உலகெங்கும் ஏற்பட்ட இழப்பு அளவிடப்படவில்லை. தாக்குதலின் பின்னர் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்தன.

பலஸ்த்தீனியர்களின் விடுதலை

1998-ம் ஆண்டு அல் கெய்தா அமைப்பினர் கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தி 224பேரைக் கொன்று 4,000பேரைக் கொன்றனர். அமெரிக்காவை அழித்த பின்னர்தான் பல்ஸ்த்தீனியர்களின் விடுதலை பெற முடியும் என்பதிலிலும் பின் லாடன் உறுதியாக இருந்தார். இந்த இரண்டு தூதுவரகங்களிலும் தாக்குதல் நடத்திய பின்னர் பில் லாடன் விடுத்த அறிக்கையில் பலஸ்த்தீனியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நிலையை உறுதி செய்யும் வரை அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

Investopedia என்னும் அமெரிக்க ஊடகத்தில்:

When America was attacked by terrorists on September 11, 2001, the entire business community felt the blow. Stock markets immediately nosedived, and almost every sector of the economy was damaged economically. The U.S. economy was already suffering through a moderate recession following the dotcom bubble, and the terrorist attacks added further injury to the struggling business community.வ்

எரிபொருள் என்னும் நலிவுப் புள்ளி (weakest point)

எரிபொருள் விலயேற்றம் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என தன் அமைப்பினருக்கு போதித்த பின் லாடன் தனது தாய் நாடாகிய சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் உற்பத்தி நிலையங்களைத் தாக்கும் படி உத்தரவிட்டார். அதற்காக அரபிய குடாநாட்டிற்கான அல் கெய்தா என்னும் ஒரு கிளை அமைப்பையும் உருவாக்கி பல எண்ணிக்கையிலான சிறு தாக்குதல்களை செய்ய தன் ஆதரவாளர்களைப் பணித்தார். அவரது அந்த உபாயத்தை Strategy of Thousand Cuts என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் விபரித்தனர். 

ச்

அமெரிக்காவிற்கு அல் கெய்தாவால் ஏற்பட்ட அச்சுறுத்தலாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவாலும் அமெரிக்காவில் இனக்குரோதமும் வலது சாரிக் கொள்கையும் வளர்ச்சியடைந்தது. அல் கெய்தாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிக அளவு அமெரிக்கர்கள் வலதுசாரிகளால் கொல்லப்பட்டனர். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அது மேலும் அதிகரித்தது. அதன் விளைவாக மக்களாட்சியில் நம்பிக்கையற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களின் வன்முறை அமெரிக்க மக்களாட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. 

பின் லாடனைப் பின்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்த்தானுக்கு வெளியே தாக்குதல் செய்வதைத் தவிர்த்து வந்த தலிபான்கள் போரைத் தாம் இழுத்தடித்தால் அமெரிக்காவில் பொருளாதார்ப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நம்பி போராடினார்கள். ஹக்கானி போன்ற அமைப்புக்களை போரில் பங்கு பெறச் செய்து தமது ஆளணி இழப்புக்களைக் குறைத்தார்கள். தலிபான்களிடம் பிடிபட்ட அமெரிக்கர்களிடம் அவர்கள் சொல்வது "கடிகாரம் உங்கள் கையில் ஆனால் நேரம் எங்கள் கையில்" அதாவது உங்களிடம் தொழில்நுட்பம் இருக்கின்றது அதனால் நேரத்தை வாங்க முடியாது போர் அதிக காலம் இழுபடும் போது நீங்கள் விலகிக் கொள்வீர்கள். தலிபான்கள் நினைத்தது நடந்தது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்லா எம்பக்கம் இருக்கின்றார். அவர் மீது நம்பிக்கையற்றவர்களை எம்மால் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். 2066-ம் ஆண்டு உலகில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையான மக்களாக இருப்பார்கள். 

கடந்த ஓராண்டாக அமெரிக்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் அப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை107 பேர் மட்டுமே. பாதுகாப்புச் செலவையும் உளவுத்துறைச் செலவையும் அதிகரித்தே இப்படி உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 9/11 தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகளை ஆளில்லாவிமானங்கள் மூலக் கொல்லும் திறனை அமெரிக்கா பெருமளவு வளர்த்துள்ளது. தீவிரவாதிகளின் தொடர்பாடலை உலகெங்கும் ஒட்டுக் கேட்கும் திறனையும் பல நாடுகள் வளர்த்துள்ளன. 

அல் கெய்தா உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஆப்கானிஸ்த்தானில் அழிக்கப்பட்டாலும் அதில் இருந்து உருவாகிய ஐ எஸ், அல் ஷபாப், பொக்கோ ஹரம், அல் நஸ்ரா போன்ற பல அமைப்புக்கள் இன்னும் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடையவுமில்லை. அமெரிக்காவில் அமைதி வரவுமில்லை.

Thursday, 9 September 2021

தலிபான்களின் காபந்து அரசு தேறுமா?

 

அமெரிக்கா தலைமையிலான அந்நியப் படையினர் வெளியேறி மூன்று வாரங்களின் பின்னர் தலிபான் அமைப்பு 2021 செப்டம்பர் 7-ம் திகதி ஆப்கானிஸ்த்தானுக்கான காபந்து அரசை அறிவித்துள்ளது. மூன்று வார தாமதம் உள்ளக இழுபறியா அல்லது நன்கு சிந்திக்க வேண்டி இருந்ததாலா என்பது பற்றி அறிய முடியவில்லை. அமெரிக்க சஞ்சிகை ஒன்று அதை all-Male அரசு என விபரித்துள்ளது. ஒரு நாளேடு பழைய தலிபான் போன்ற புதிய தலிபான்களைப் பாருங்கள் என்றது. முன்னைய ஆப்கான் அரசின் மகளின் விவகார அமைச்சர் ஹ்பீபா சராபி தலிபான்கள் மாறிவிட்டார்கள் என மேற்கு நாடுகள் நம்பியமை தவறு தான் சுட்டிக் காட்டியது உண்மையாகி விட்டது என்றார். இந்திய ஊடகம் ஒன்று தலிபான்களின் காபந்து அரசில் பாக்கிஸ்த்தானின் முத்திரை நன்கு பதிந்துள்ளது என்கின்றது.

அரசின் முக்கிய உறுப்பினர்கள்

தலிபான்கள் அறிவித்த காபந்து அரசின் தலைமை அமைச்சர் பொறுப்பில் உள்ள முல்லா முகம்மத் ஹசன் அக்குண்ட் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட ஒருவராவார். அத்துடன் அமெரிக்க குற்றத் தடுப்பு பிரிவான எஃப்.பி.ஐயால் தேடப்படும் ஒருவருமாவார். தலிபானின் உயர் அவையான ரெக்பாரி சுராவின் தலைமைப் பதவியை அவர் நீண்டகாலமாக வகித்திருந்தார். 1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்த்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் துணைத் தலைமை அமைச்சராகவும் அக்குண்ட் பணியாற்றினார். அவரது துணைத் தலைமை அமைச்சராக தலிபான்கள் சார்பில் அமெரிக்காவுடன் கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சு வார்த்தை நடத்திய முல்லா பரதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் மற்ற துணை தலைமை அமைச்சர் அப்துல் சலாம் கனாஃபியும் ஐக்கிய நாடுகள் சபையால் தடைவிதிக்கப்பட்டவர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை: பெண்ணங்கு இல்லை

கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பதில் வல்லவரான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் நாடுகளை அங்கீகரிப்பது தமது சபையின் பணியல்ல, அது உறுப்பு நாடுகளின் வேலை என்றார். ஆனால ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் பிரமிளா பற்றன் பெண்களுக்கு காபந்து அரசில் இடம் கொடுக்காமயை சுட்டிக்காட்டி அது புதிய அரசு பெண்களையும் சிறுமிகளையும் எப்படிக் கையாளப் போகின்றது என்பதை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது என்றார்.

சீனாவின் அரைகுறை வரவேற்பு. பொன்னொன்று கண்டேன்

ஆப்கானிஸ்த்தானில் மூன்று வாரங்கள் சட்ட அடிப்படையிலான ஆட்சியின்மையை முடிவிற்கு கொண்டு வந்தமையை வரவேற்பதாக சீனா அறிவித்துள்ளது. அதன் வரவேற்பு புதிய அரசையும் உள்ளடக்கியதாக தெரியவில்லை. ஆனால் புதிய அரசு அமைந்தமைக்கு “China attaches great important” என்ற சீனாவின் சொற்தொடரில் வரவேற்பையோ பாராட்டுதலையோ காணவில்லை. ஆனால் காபந்து அரசு அமைய முன்னரே தலிபான்களுடன் தாம் சிறந்த உறவை விரும்புவதாக சீனா அறிவித்து விட்டது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்கள் மீது நீண்ட காலமாக கண்வைத்திருக்கும் சீனா அதில் முடங்கிப் போயிருக்கும் தமது முதலீடு முதலீட்டைப் பிணை எடுப்பதையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது.

காத்திருக்கும் இரசியா

புதிய காபந்து அரசு தொடர்பாக புது டில்லியில் உள்ள இரசிய அரசுறவியலாளரிடம் ஊடகர்கள் கேள்வி எழுப்பிய போது இரசியா காந்திருந்து செயற்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் இரசியா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மேற்கு நாடுகளின் எதிர்வினை

ஐரோப்பிய ஒன்றியம் தன் புதிய ஆப்கான் அரசு தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது. ஆப்கானிஸ்த்தானுக்கான அங்கீகாரத்தையும் மனிதநேய உதவிகள் பற்றியும் கருத்தில் கொள்வதற்கு உகந்த வகையில் ஆப்கான் அரசு அங்குள்ள பல்வேறு சமூகத்தினரையும் மதத்தினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பீட்டர் ஸ்டனோ கருத்து வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்த்தானுக்கு பலதரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் அவசியமான ஒன்றாகும் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரையும் பெண்களையும் உள்ளடக்கிய அரசியலின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்துகின்றது. அமெரிக்கா புதிய ஆப்கான் அரசின் உறுப்பினர் சிலரின் கடந்த காலச் செயற்பாடுகளும் அவர்களின் தொடர்புகளும் தம்மைக் கரிசனைக்கு உள்ளாக்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் கருத்தில் கண்டனம் கலந்திருக்கவில்லை. அமெரிக்கா தலிபான்களின் சொற்களிலும் பார்க்க செயல்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்யும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜேர்மனியில் கூட்டம்

2021 செப்டம்பர் 08-ம் திகதி அமெரிக்காவும் ஜேர்மனியும் இணைந்து ஆப்கானிஸ்த்தானை எப்படிக் கையாள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை ஜேர்மனியின் ரம்ஸ்ரின் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் நடத்தின. ஜேர்மன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளின்கென் ஆகியோர் சந்தித்து அது தொடர்பாக உரையாடினார்கள். ஆப்கானிஸ்த்தானுக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு படையினரை ஜேர்மனி கடந்த 20 ஆண்டுகளில் அனுப்பியிருந்தது. இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இக்கூட்டம் ஆப்கானிஸ்த்தான் எதிர்காலத்தை மாற்றியமைக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆப்கானிஸ்த்தானின் காபந்து அரசு அமைந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அனஸ் ஹக்கானி அமெரிக்காவின் குவாட்டனாமோ சித்திரவதைக் கூடம் உட்பட பல சிறைகளைக் கண்டவர். அவர் கஷ்மீர் பிரச்சனையில் தாம் தலையிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தலிபான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இந்திய ஊடகங்கள் உட்பட பன்னாட்டு ஊடகங்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக அனஸ் ஹக்கானி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் தமது எதிரிகளுக்கு இந்தியா உதவி செய்தமையை தாம் மறந்து இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கு நாடுகள் போல் ஆப்கானிஸ்த்தானுடனான உறவில் பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதால் தலிபான்கள் இந்தியாவுடனான உறவை விரும்புகின்றார்கள் என்பது மட்டுமல்ல இந்தியாமீது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிக விருப்புக் கொண்ட ஆப்கானிஸ்த்தானின் பஷ்ரூன் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தலிபான்களில் பெரும்பான்மையானவர். இந்தியா இதை எழுதும் வரை இந்தியா புதிய ஆப்கான் அரசைப்பற்றி கருத்து வெளியிடவில்லை. இந்தியாவின் தாமதத்தை “கேந்திரோபாய காத்திருப்பு” என இந்திய அரசு ஆதரவாளரகளும் “துணிச்சலான முடிவெடுக்க முடியாமை” என இந்திய அரசை கடுமையாக விமர்ச்சிப்பவர்களும் கூறுகின்றனர். தலிபான்களின் இஸ்லாமியக் கோட்பாடு இந்தியாவின் டில்லிக்கு வடக்கே உள்ள தியோபந்த் என்னும் சிறு நகரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உருவானது. தியோபந்தி இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடினவர்கள். பஷ்ரூன் இனத்தினர் பலர் இந்தி சினிமாத்துறையில் சிறந்து விளங்குவதால் இந்தி சினிமாப் படங்களை ஆப்கானிஸ்த்தானில் வாழும் பஷ்ரூன்கள் விரும்பிப்பார்ப்பதால் அவர்கள் இதயங்களில் இந்தியாவிற்கு ஓர் இடம் உண்டு.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையா?

தலிபான்கள் காபந்து அரசை அறிவித்தற்கு முதல் நாள் அதாவது செப்டம்பர் 6-ம் திகதி தலிபான்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தானிய ஆளில்லா விமானங்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியவுடன்ச் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் இந்தியாவின் வெளியுறவுத் துறைப் பிரச்சனை மட்டுமல்ல அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சனையுமாகும். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியவுடன் கஷ்மீர் மக்கள் அங்குள்ள இந்தியப் படையினரைப் பார்த்து ஒரு நாள் நீங்களும் இப்படி வெளியேறுவீர்கள் என்றனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் உலகெங்கும் உள்ள இஸ்லாமியப் போராளி அமைப்புக்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கஷ்மீர் போராளிகள் அதற்கு விதிவிலக்கல்ல. மோடியின் செப்டம்பர் – 6-ம் திகதிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டதாக தகவல் இல்லை ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்த்தானில் இந்தியா செய்த முன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டைப் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கலாம். 2021 செப்டம்பர் 10-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய இந்திய உறுப்பினர் டி. எஸ் திருமூர்த்தி ஆப்கானிஸ்த்தான் எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் செய்வதற்கான தளமாகப் பாவிக்கப்படக்க் கூடாது என்றார். 

சர்ச்சைக்குரிய சிராயுதீர்ன் ஹக்கானி

பல நாடுகளும் பார்த்து முகம் சுளிப்பது உள்துறை அமைச்சர் சிராயுதீர்ன் ஹக்கானியையே. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி அமைப்பின் தலைவரான சிராயுதீர்ன் ஹக்கானியும் அமெரிக்க சட்ட நிறைவேற்றுப் பிரிவால் தேடப்படும் ஒருவராவர். ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானின் உளவுத் துறையும் படைத்துறையும் வளர்த்தெடுத்தன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த அமைப்பின் தலைவர் சிராயுதீர்ன் ஆவர்.

பாக்கிஸ்த்தான் உண்மையைச் சொல்லாது என்பதால் அதன் கருத்தை கருத்தில் எடுக்கத் தேவையில்லை. மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்களைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்த்தான் இருப்பதாலும் அங்குள்ள உட்கட்டுமான உட்கட்டுமான முதலீட்டு வாய்ப்பாலும் பல நாடுகளின் முதலீட்டாளர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றார்கள் என்பது புதிய ஆப்கான் காபந்து அரசு தொடர்பாக யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்து தெரிய வருகின்றது. அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்த்தானின் 9.5பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் இடை நிறுத்தி வைத்திருக்கும் உதவித் தொகைகளையும் கருத்தில் கொண்டு தலிபான்கள் தமது காபந்து அரசை அமைக்கவில்லை என்பது அந்த அரசில் தீவிரப்போக்குடையோரை உள்ளடக்கியதில் இருந்து தெரிய வருகின்றது.

Tuesday, 7 September 2021

இஸ்ரேலின் சிறையில் இருந்து தப்பிய பலஸ்த்தீனியப் போராளிகள்

 



பலஸ்த்தீனிய இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள். அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின் பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர். ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.

தப்பி ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும் மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப் நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.



இஸ்ரேலின் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில் ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.

Monday, 6 September 2021

சீனா சமூகவுடமையை(சோசலிஸம்) வலியுறுத்துவது ஏன்?

  


சீனாவின் ஏற்றுமதி சார் பொருளாதார வளர்ச்சியால் அங்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் தொகை மொத்த மக்கள் தொகையின் 3.3விழுக்காடாக உள்ளது. இதை இந்தியாவின் 29.3 விழுக்காடு வறியோர் தொகையுடன் ஒப்பிடுகையில் ஆச்சரியமாக இருக்கின்றது. இருந்தும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் சமத்துவமின்மை ஒழிக்கப்படவேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கின்றார். பொதுவுடமை மற்றும் சமூகவுடமையை வலியுறுத்தி வந்த சீனா 1979இல் அவற்றில் இருந்து விலகி அரை முதலாளித்துவ நாடாக தன்னை மாற்றி பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தது. அதனால் (அரசால் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, திறனற்ற) சீனப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிடையேயும் பல்வேறு மக்களிடையேயும் சமமான வருமானப்பங்கீடு சமூகவுடமையின் முக்கிய அம்சங்களாக இருப்பதுதான் சீனப்பாணி நவீனமயமாக்குதலாகும் என்கின்றார்.

சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும்

சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ஏற்றுமதியும் உட்கட்டுமான அபிவிருத்தியும் இப்போது தடைகளைச் சந்தித்துள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இனி சீன மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீனமக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களின் சராசரி தனிநபர் வருமானம் சீனர்களின் தனிநபர் வருமானத்திலும் 5.78 மடங்கு அதிகமானதாக உள்ளது. அதனால் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவதாகவும் சீனா 57வதாகவும் உள்ளன. அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் அமெரிக்கர்களின் கொள்வனவின் பங்கு எழுபது விழுக்காடாகும். சீனாவில் அது 39 விழுக்காடாக உள்ளது. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் அது 55 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியிலும் பார்க்க ஐந்து விழுக்காடு குறைவாகும். அதனால் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் ஐந்து விழுக்காடு குறைக்கப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் உலக அரங்கில் உறுதியாக நிற்பதற்கு அது ஏற்றுமதியில் தங்கியிருப்பது குறைக்கப்பட்டு உள்நாட்டு மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும். சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்க்யாங் இதற்காக ஒரு புதிய திட்டத்தை முன் வைத்துள்ளார். சீனாவில் உற்பத்திக் காரணிகளை திறன்படச் செயற்படுத்தல், அதிக வருமானம் உள்ளவர்களிடம் வரி அறவிட்டு குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு உதவி செய்தல், செல்வந்தர்கள் தாமாகவே வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி செய்தல். சீனாவின் புதிய திட்டம் “பொதுச் செழுமை” என அழைக்கப்படுகின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சி தனது செயற்திட்டங்களில் பொதுச் செழுமை முதலிடம் வகிக்கின்றது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2021-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆற்றிய உரைகளில் 65 தடவை “பொதுச் செழுமை” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது

அரை முதலாளித்துவ சீனா?

1978-ம் ஆண்டு “திறந்த கதவு” கொள்கை என்னும் பெயரில் சீனா வெளிநாட்டு முதலீடுகளையும் வேற்று நாடுகளுடனான வர்த்தகத்திர்கும் வழிவகுத்த1979-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தை ஆரம்பித்த சீனா 1979இல் அமெரிக்காவுடன் உறவையும் உருவாக்கியது. அதே ஆண்டில் சீனாவில் பல சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது ஆரம்பித்த சீனப் பொருளாதார வளர்ச்சி இன்றுவரை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு நாடும் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணவில்லை. தற்போது சீன அதிபர் ஜின்பிங் முன்வைக்கும் சமூகவுடமைக் கொள்கை சீனாவை “அரை முதளாளித்துவ நாடு” என்ற நிலையில் இருந்து விலக்கி முழுமையான சமூகவுடமை நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தினாலும் சீனா தனது தனியார் துறை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். சீனா அமெரிக்காவை விஞ்சி பொருளாதாரத்தில் வளராது என்கின்றார் கலிபோனியப் பல்கலைக்கழகமொன்றில் அரசறிவுத்துறைக்கு பொறுப்பான சீனரான MINXIN PEI.

சீனச் செல்வந்தர்கள்

ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் அமெரிக்காவில் 724பேரும் சீனாவில் 626பேரும் இந்தியாவில் 140பேரும் உள்ளனர். அதிக செல்வந்தர்கள் இருப்பது ஒரு முதலாளித்துவ நாடாக இருக்கும் அமெரிக்காவிற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சோசலிஸ நாடாக இருக்க முயலும் சீனாவிற்கு அது உகந்ததல்ல என்பது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கருத்து. சீனா இரசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இரசியா பொதுவுடமையைக் கைவிட்டு மக்களாட்சி நாடாக மாற்றப்பட்டாலும் அங்கு சில பெரும் செல்வந்தர்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூட ஒரு பெரும் செல்வந்தரே. சில பெரும் செல்வந்தர்கள் கையில் ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியும் இருப்பதை சிலராண்மை (Oligarchy) என்பர். இது மக்களாட்சிக்கும் சமுக்வுடமை ஆட்சிக்கும் முரணானதாகும். அதனால் சீனாவில் பெரும் செல்வந்தர்கள் உருவாகுவதை சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐயத்துடன் நோக்குகின்றார். சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனம் தனது பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது ஜீ ஜின்பிங் அதைத் தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்ததால் அவரது செல்வம் பத்து பில்லியன் டொலர்களால் குறைந்து போனது.

நடுத்தர வருமானப் பொறியை சீனா தவிர்க்க வேண்டும்

வருமானம் குறைந்த மக்களைக் கொண்ட நாட்டில் ஊழியக் கொடுப்பனவு குறைந்த அளவில் இருப்பதால் அங்கு செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் வருமானம் கூடிய நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளிலும் பார்க்க அதிக இலாபத்தைத் தரும். தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டால் மக்களின் வருமானம் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து கொண்டு போகும். அதனால் அந்த நாடு நடுத்தர வருமான நாடாக வளரும். அப்போது அந்த நாட்டில் ஊழியக் கொடுப்பனவு அதிகமாகும். அதனால் அந்த நாட்டில் வெளிநாட்டு முதலீடு குறையத் தொடங்கும். மக்கள் தொடர்ச்சியாக நடுத்தர வருமானமுள்ளவர்களாக மட்டும் இருப்பார்கள். இதை நடுத்தர வருமானப் பொறி என்பர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும். சீன அரசு தமது நாடு நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்காமல் இருக்க பெரு முயற்ச்சி செய்கின்றது. சீனாவில் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் தொகை தற்போது 400 மில்லியன்களாகும். இதை 2025இல் இருமடங்காக உயர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீன அதிபரினதும் தலைமை அமைச்சரினதும் புதிய கொள்கைகளுக்கு இணங்க சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான மா ஹுவாரெங்கிற்கு சொந்தமான டென்செண்ட் (Tencent) நிறுவனம் பொதுச் செழுமைக்கு என 7.7பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறைந்த வருமானமுள்ள மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். இது போன்று மேலும் பல செல்வந்தர்கள் நன் கொடைகளை வழங்கியுள்ளனர்.

செல்வந்தர்களின் பிள்ளைகளின் கல்வியில் கைவைத்த சீனா

சீனாவில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் இயங்குகின்றன. இவற்றில் பல செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்தனர். அதனால் அவர்களின் கல்வித்தரம் மற்றப் பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்த்தாகவும் உலகத் தரமானவயாகவும் இருந்தன. சீன அரசு ஒரே நாளில் அந்த கல்வி நிறுவனங்களை மூடி விட்டது. இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தனர். கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைச் செய்ததாக சீன அரசு அறிவித்தது.

சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு என ஓர் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள ஜீ ஜின்பிங் மக்கள் மத்தியிலும் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெறுவதற்காக “பொதுச் செழுமை”, சமூகவுடமை போன்ற பதங்களை கையில் எடுத்துள்ளாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பெரும் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து சீனாவின் ஆட்சி முறைமையையே மாற்றியமைக்க முயல்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜீ ஜின்பிங் பல கலைஞர்கள் புகழின் உச்சிக்கு போவதற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். பெரும் புகழ் பெற்ற சீன நடிகை ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கலைஞர்களுக்கு இரசிகர் மன்றம் அமைப்பவை போன்றவற்றையும் அவர் தடை செய்துள்ளார். இவை செல்வ சம பங்கீட்டுகாக அல்ல.

 

Sunday, 29 August 2021

தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

  


தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

ஆப்கானிஸ்த்தானில் பல் வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறாயிரமும் ஐ.எஸ்-கே அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரமும் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருநூறும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலிபான் அமைப்பினர் அல் கெய்தாவுடன் நல்லுறவை வைத்திருக்கின்றனர். ஹக்கானி அமைப்பினர் தலிபான்களுடனும் ஐ.எஸ் கே அமைப்பினருடனும் நல்லுறவை வைத்திருக்கின்றனர். தலிபான்கள்லும் பார்க்க ஹக்கானை அமைப்பினர் காபூல் நகரை கையாள்வதில் வல்லவர்கள். இதனால் தலிபான்கள் தமது நட்பு அமைப்பான ஹக்கானி அமைப்பினரிடம் காபூல் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்திருந்தனர். இதனால்தான் ஹக்கானி அமைப்புடன் நட்புடைய ஐ.எஸ்-கே அமைப்பினரால் காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் செய்து 16 அமெரிக்கர்கள் உட்பட பலரைக் கொல்ல முடிந்தது.

அமெரிக்காவின் தெரிவிக்கப்படும் அச்சம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மக்கோல் “நாம் 9/11இற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம் – ஆப்கானிஸ்த்தான் மீண்டும் பயங்கரவாத உற்பத்தி நிலம்” என்றார். அமெரிக்கப் படைத்தளபதி அல் கெய்தாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் வலையமைப்புக்களை ஆப்கானிஸ்த்தானில் துரிதமாக மீளக் கட்டியெழுப்பலாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவும் தலிபான்களும் கட்டார் தலைநகர் டோஹாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் அல் கெய்தா போன்ற அமெரிக்கா விரும்பாத திவிரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கோ அல்லது செயற்பாட்டிற்கோ தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

பஞ்சீர் தலையிடி

காபூலில் இருந்து வட கிழக்காக 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரகத கல் நிறைய உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் வட கூட்டமைப்பு என்னும் போராளி அமைப்பு திரண்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் துணை அதிபர் அமருல்லா சாலெ  கூட அங்கு போயிருக்கின்றார். தலிபான் தாக்குதலின் போது தப்பி ஓடிய ஆயிரக் கணக்கன அரச படையினரும் அங்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் தஜிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தஜிக்கிஸ்த்தான் நாடு ஆதரவு வழங்கலாம். தலிபான்களால் கொல்லப்பட்ட முன்னாள் வட கூட்டமைப்பின் தளபதியின் மகனான அஹமது மசூத்தும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் இருக்கின்றார். இவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலிபான்களை எதிர்க்கும் குழுக்களுக்கு படைக்கலன்களை அனுப்பவில்லை என்கிறது தஜிக்ஸ்தான் நாடு. அது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கின்றது.

தலிபான்களைப் பாராட்டிய அல் கெய்தா ஆதரவு ஊடகம்

தலிபான்களின் வெற்றி உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா வைத்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் உள்ள திவிரவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது உங்களுக்கும் நடக்கும் என இந்தியாவைப் பார்த்து சொல்கின்றன. இந்தியா வசம் இருக்கும் கஷ்மீர் பிரதேசதைப் பிரித்து பாக்கிஸ்த்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு தமக்கு தலிபான்கள் உதவி வழங்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.  தலிபானின் வெற்றிக்கு அல் கெய்தா தனது ஊடகத்தில் பாராட்டு தெரிவித்தது. “ஆப்கான் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது, இது இஸ்லாமின் வெற்றி” என்றது அல் கெய்தா.

அல் கெய்தா – தலிபான் வேறுபாடு

அல் கெய்தா அமைப்பு அமெரிக்காவை அழித்த பின்னர்தான் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை அமைத்த பின்னர் அமெரிக்காவை அழிக்கலாம் எனக் கருதியது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்த்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்ற கருத்துடையது. அது வெளிநாடுகளில் தாக்குதல் செய்வதில்லை. தலிபான் அமைப்பு பஸ்ருன் இனத்துக்கு உரியது என்ற கருத்து நிலவுகின்றது. அல் கெய்தா இனங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கையுடையது. அல் கெய்தா சியா மற்றும் சுனி என்ற பிளவையே விரும்புவதில்லை. ஆப்கானிஸ்த்தானில் 14 ஏற்றுக் கொள்ளப்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு பஸ்ருன் இனத்தவர் வாழ்கின்றனர் என மதிப்பிடப்படுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் வட பகுதியிலும் தென் மேற்குப் பகுதியிலும் பஸ்ருன் இனக்குழுமத்தினர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு குறைந்த அளவில் வாழ்கின்றனர். தஜிக் இனக்குழும மக்கள் 25விழுக்காட்டினர் உள்ளனர். உஸ்பெக் இனக்குழுமத்தினர் 9 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்த்தான் நிலப்பரப்பின் நூறு விழுக்காடும் தலிபான்கள் தற்போது தலிபானக்ளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நிலப்பரப்புக்கள் உள்ளூர் போர்ப்பிரப்புக்கள் கட்டுப்பாடிலும் பல நிலப்பரப்புக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்பு இருந்ததிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பு ஆப்கானிஸ்த்தானில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் இருக்கின்றது. அல் கெய்த தேவை ஏற்படும் போதெல்லாம் புதிய பெயரில் புதிய அமைப்புக்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்த்தானில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் அல் கெய்தா வேறு புதிய பெயரில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். அது அமெரிக்காவிற்கு டோஹா நகரில் தலிபான்கள் வழங்கிய உறுதி மொழிக்கு முரணானதல்ல என தலிபான்கள் வாதிடலாம்.

தலிபான்களின் வலி தனி வலி

தலிபான் தனது பொருளாதாரத்திலும் உலக நாடுகள் தம் அரசை அங்கீகரிப்பதிலும் உடனடிக் கவனம் செலுத்தும். இவற்றை நிறைவேற்றுவது தலிபானகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அல் கெய்தாவிற்கு ஆதரவு வழங்குவது இந்த இரண்டு முயற்ச்சிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பஸ்ருன் அல்லாத இனக் குழுமங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையிலும் தலிபான் இருக்கின்றது. பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானிற்கு 1919இல் சுதந்திரம் வழங்கிய போது பஸ்ருன் இன மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆப்கானிஸ்த்தானுடன் இணைத்தது. மற்றப் பகுதியை அப்போது தான் ஆண்டு கொண்டிருந்த தற்போது பாக்கிஸ்த்தானாக இருக்கும் நிலப்பரப்புடன் சேர்த்து வைத்தது. இதே வகையில் தான் குர்திஷ் மக்கள் வாழும் பிரதேசத்தையும் துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளுடன் இணைத்தது. எதிர் காலத்தில் பல்வேறு இனக்குழுமங்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் தனது குடியேற்ற ஆட்சிப் பிரதேசங்களை பிரித்தானியா நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டது. தலிபான் போராளிகளில் பலர் பாக்கிஸ்த்தானில் பஸ்ருன் இன மக்கள் வாழும் பிரதேசம் ஆப்கானிஸ்த்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். தலிபான் தலைமைக்கு இப்போது பாக்கிஸ்த்தானின் உறவு அவசியம் என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தான் எல்லையை மாற்றியமைக்க விரும்பும் தலிபான்களை சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த நிலையில் இன்னொரு தீவிரவாத அமைப்பை மீள்கட்டி எழுப்புவதில் தலிபான் தலைமை கவனம் செலுத்த முடியாது. அவை மட்டுமல்ல தொழில்நெறிஞர்கள் (Professionals) பலர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தமது அரசை முகாமை செய்வதில் தலிபான்கள் நெருக்கடியை எதிர் நோக்கலாம்.

குறைந்த அளவிலான அல் கெய்தா

அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் இருபது ஆண்டு கால நெருங்கிய உறவு உண்டு. அல் கெய்தா அமைப்பினர் தலிபான் அமைப்புக்குள் ஊடுருவியும் உள்ளனர் என நம்பப்படுகின்றது. அமெரிக்க உளவுத் துறையும் வெளியுறவுத் துறையும் “ஆப்பாக்” கொள்கை என ஒன்றை வகுத்திருந்தன. அது ஆப்கானிஸ்த்தானையும் பாக்கிஸ்த்தானையும் ஒரு பிரதேசமாகக் கருதி வகுக்கப்பட்டவை. தலிபானின் வெற்றி மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு தூண்டுதலாக அமையும். அல் கெய்தாவின் தலைவர்கள் பலர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தா போராளிகள் இருநூறு பேர் இருக்கலாம என மதிப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவிற்கு என்று ஓர் உலகளாவிய தலைவர் என்று சொல்லும்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளுக்கு என்றே தலைவர்கள் இருக்கின்றார்கள். ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு அல் கெய்தாவின் எதிரியாகவே செயற்படுகின்றது. ஆபிரிக்காவின் சஹாராவடி நிலப்பரப்பில் செயற்படும் பொக்கோ ஹரம், அல் ஷஹாப் போன்ற அமைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா யேமனில் முடங்கிப் போயுள்ளது. மேற்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் அல் கெய்தாவை தொடர்ந்து கண்காணிதுக் கொண்டிருக்கும் நிலையில் அக் கெய்தாவால் தலையெடுக்க முடியாது.

Thursday, 26 August 2021

ஆப்கானிஸ்த்தானுக்கு மாற்றாக திருகோணமலையா?

  



அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் வைத்திருந்த “படைத்தளத்திற்கு” மாற்றீடாக இலங்கை திருகோணமலயில் இடம் தேடுகின்றது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது கேந்திரோபாய நோக்கங்களுக்காகவும் தனது உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் உலகெங்கும் படைத்தளங்களை தனது நட்பு நாடுகளிலும் தனது ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிலும் வைத்திருக்கின்றது. அதே காரணங்களுக்காக உலகில் பல போர் முனைகளையும் தொடர்ச்சியாக திறந்து கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் இருபது ஆண்டுகள் நிலை கொண்டமைக்கு காரணம்:

1. அங்குள்ள தனக்கு ஆபத்தான தீவிரவாத அமைப்புக்களை ஒழிப்பது

2. அங்கு தனது படையினருக்கு ஒரு போர்ப்பயிற்ச்சிக் களத்தை உருவாக்குவது.

3. அங்குள்ள கனிம வளங்களைச் சுரண்டுவது

ஆக ஆப்கானிஸ்த்தான் அமெரிக்காவிற்கு ஒரு போர்க்களமாகவும் போர்ப்பயிற்ச்சிக் களமாகவும் பொருளாதார நலன்களுக்காகவும் பாவிக்கப் பட்டது. இருபது ஆண்டுகளில் சுழற்ச்சி முறையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கப் படையினருக்கு நேரடிப் போர்ப்பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிக கடினமான பூகோள அமைப்பைக் கொண்ட நிலப்பரப்பில் பயிற்ச்சி பெற்றுள்ளனர் அமெரிக்கப் படையினர்.

ஆப்கானிஸ்த்தான் பேரரசுகளின் புதைகுழி என ஒரு புறம் அழைக்கப்பட்டாலும் மறுபுறம் அது வளங்களின் தொட்டில் எனவும் அழைக்கப்படுகின்றது. ஒன்று முதல் மூன்றுவரையிலான ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்கள் அங்கு உள்ளன. ஒரு புறம் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிந்து கொண்டிருக்க மறுபுறம் அமெரிக்க நிறுவனங்கள் அங்குள்ள கனிம வளங்களை வரியின்றி தடையின்றி அகழ்ந்து எடுத்துக் கொண்டன.

ஒரு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளம் அமைத்து ஒரு எதிரி நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முயலும் போது படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள நாட்டில் படைத்தளம் அமைக்கும் நாட்டிற்கு கடும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. அமெரிக்கா பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அமைத்தது போல் ஆப்கானிஸ்த்தானில் அமைக்க முடியாது. அமைக்கவும் கூடாது.

இலங்கை திருகோணமலையில் பல ஏக்கர் நிலம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதை சிங்களத்து அரிச்சந்திரன் கெஹலிய ரம்புக்வெல மறுத்தும் உள்ளார். இலங்கையில் 1980களில் அமெரிக்காவிற்கு திருக்கோணமலையில் ஒரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையமும் சிலாபத்தில் நீர்மூழ்கிகளுக்கான அதிதாழ் அலைவரிசை (Ultra-Low wave) தொடர்பாடல் நிலையமும் தேவைப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அத்தேவையை இல்லாமற் செய்துள்ளது. அமெரிக்கா நீண்ட காலம் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

1990களில் தொடர்ச்சியாக கடலில் பயணிக்கும் தம் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலையம் இலங்கியின் கிழக்கு கரையோரத்தில் தேவைப்பட்டது.

தற்போது அமெரிக்காவின் விமானம் தாங்கிகளையும் அதன் பரிவாரக் கப்பல்களையும் பாதுகாக்க அதிக அளவு ஆளில்லா விமாங்கள் தேவைப்படுகின்றன. விமானம் தாங்கி கப்பல்களில் மட்டுப்படுத்தப்பட்ட இடம் உள்ள படியால் அவை பயணிக்கும் கடற்பரப்பில் உள்ள நாடுகளில் அமெரிக்கா புதிதாக உலகெங்கும் பல ஆளில்லா போர்விமானத்தளங்களை பெற முயல்கின்றது. தற்போது அமெரிக்கா இலங்கையில் தனக்கு என ஒரு நிலப்பரப்பு வேண்டும் என்ற நிலையில் இருப்பது அதற்காக மட்டுமே. அதன் ஓர் அம்சமாக அமெரிக்கா திருக்கோணமலையில் கண் வைத்திருக்கலாம்.

திருக்கோணமலை ஆப்கானிஸ்த்தானிற்கான மாற்றீடு அல்ல.

Sunday, 22 August 2021

சீனாவின் எண்மிய (டிஜிட்டல்) முன்னோக்கிப் பாய்ச்சல்

  


1994இல் மைக்குறோசொஃப்ற்றின் பில் கேட்ஸ் வங்கித்தொழில் அவசியம் ஆனால் வங்கிகள் அவசியமில்லை என்றார். இப்போது வங்கிகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணவைப்பீடு, பணம் மீளப்பெறல், பங்குகள் வாங்குதல் போன்ற பல நடவடிக்கைகளை கைப்பேசிகளில் உள்ள செயலிகள் மூலம் செய்ய முடியும். செயலிகள் மூலம் வங்கிகளில் எந்த நேரமும் வாடிக்கயாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பொருளாதார வளர்ச்சி, படைத்துறை வளர்ச்சி, போன்றவற்றிற்கு கணித் தொழில்நுட்பத்தின் பல்வேறுவகைகளிலும் முன்னேற வேண்டும் என்பதைச் சீனா உணர்ந்துள்ளது. சீனாவின் இணையவெளிப் பொருளாதாரம் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.4 விழுக்காடாகும். இது அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளினதிலும் பார்க்க அதிகமானதாகும். இந்தத் துறையை மேம்படுத்துவதன் மூலம் சீனா கைத்தொழில் உற்பத்தி துறையில் குன்றும் வளர்ச்சியை ஈடு செய்யலாம்.

கைப்பேசிச்செயலித் துறையில் முன்னோக்கிப் பாய்ந்த சீனா

மீகச்செயலி(SUPER APP) என்பது பல செயலிகள் செய்யக்கூடியவற்றைச் செய்யக் கூடிய ஒரே செயலி ஆகும். மீகச்செயலிகளை உருவாக்கி பயன்பாட்டில் விடுவதில் சீனா உலகில் முன்னணியில் இருக்கின்றது. சீனாவின் வீச்சற் (WeChat) என்னும் செயலிக்குச் சொந்தக்காரர்கள் முதலில் மீகச்செயலியை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து அலிப்பே என்னும் செயலி மூலம் பணக்கொடுப்பனவு செய்யும் நிறுவனம் வெற்றீகரமாக மீகச்செயலியை உருவாக்கிப் பயன்படுத்தியது. சீனாவைத் தொடர்ந்து பல ஆசிய நாடுகள் மீகச்செயலிகளை உருவாக்கியுள்ளன. மேற்கு நாட்டின் ஊபர் என்னும் வாடகைப் போக்கு வரத்து நிறுவனத்தின் செயலியிலும் பார்க்க மிகச் சிறந்த மீகச்செயலியை ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதால் மிகச்செயலிகள் ஊபர் நிறுவனத்தின் வர்த்தகத்தைத் தோல்வியடைய வைத்தன.

நிதித் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிப்பாய முயலும் சீனா

நிதிச்சேவைகள் (Financial Services) என்பது நிதித்துறையில் செயற்படும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், பங்குச் சந்தை, வீடு விற்பனை முகவரகங்கள் போன்றவை வழங்கும் சேவைகளாகும். நிதிச் சேவைகள் துறைக்கு தேவையான மென்பொருள்களையும் வன்பொருள்களையும் வழங்குவது நிதித்தொழில்நுட்பம் (FinTech) என அழைக்கப்படுகின்றது. இத்துறையில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், லித்துவேனியா, சுவிற்ச்சலாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரேலியா, கனடா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் முதற்தரப் பத்து நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் சீனா அப்பட்டியலில் 21-ம் இடத்தில் இருக்கின்றது. 21-ம் இடத்தில் இருந்தாலும் சீனா கடந்த சில ஆண்டுகளாக நிதித்தொழில்நுட்பத் துறையில் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. சீனப் பொருளாதாரத்தில் செய்யப்படும் கொடுப்பனவுகளில் 66விழுக்காடு கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படுகின்றன. சீனாவின் 1408மில்லியன் மக்களில் 780மில்லியன் மக்கள் கைப்பேசிச் செயலிகளூடாக தமது கொடுப்பனவுகளைச் செய்கின்றனர். சீனாவில் கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படும் கொடுப்பனவுகலின் பெறுமதி 52 ரில்லியன் டொலர்களாக இருக்கையில் அமெரிக்காவில் அது 98 மில்லியன்கள் மட்டுமே.

அகன்ற அலைவரிசையில் அதிகம் பாய்ந்த சீனா

தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் அகன்ற அலைவரிசையின் 4ஜீ (நான்காம் தலைமுறை) எனப்படுவது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்துதொழிற்றுறை உற்பத்திவர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச் செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது. 5ஜீ தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹூவாவே நிறுவனம் உலகின் முன்னோடியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் அது தம் நாடுகளில் உளவு பார்க்கின்றது எனக் குற்றம் சாட்டி ஹூவாவே நிறுவனம் தம் நாடுகளில் செயற்படுவதைத் தடை செய்துள்ளன.

நாணயத்தை எண்மிய மயப்படுத்தும் சீனா

வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் அதிக அளவு நிதிக்கொடுப்பனவுகள் இணையவெளியூடாக நடைபெறுவதால் சீனா தனது தேசிய நாணயமான யூவானை எண்மிய மயப்படுத்தியுள்ளது. அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகள் தமது நாணயங்களை எண்மியப்படுத்தும் திட்டத்தை வரைந்து கொண்டிருக்கையில் சீனா அதை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்க டொலரின் இடத்தை சீனாவின் யுவான் நாணயம் பிடிக்க வேண்டும் என்ற சீனக் கனவை நிறைவேற்றும் முதற்படியாக சீனாவின் எண்மிய நாணயம் அமையும் என சீன ஆட்சியாளர்கள் நம்புகின்றார்கள். சீனாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும், முக்கியமாக ஈரான், இரசியா போன்ற நாடுகள் தமது நாணயத்தை எண்மியப் படுத்தினால் அவை தமக்கிடையேயான கொடுப்பனவுகளை டொலர் மூலம் செய்வதை விட்டு எண்மிய நாணயங்களால் செய்ய முடியும்.

செயற்கை விவேகம்

சீனா தனது நாட்டில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தியதில் அதன் செயற்கை விவேகம் பெரும் பங்காற்றியது. முகமினங்காணல் தொழில்நுட்பத்தின் மூலம் சீனா நாட்டில் குற்றச் செயல்களையும் தீவிரவாதத்தையும் குறைக்க முயல்கின்றது. சீனாவில் 2.6மில்லியன் கண்காணிப்புக் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கையாகும். உலகிலேயே அதிக அளவு மக்களைக் கொண்ட சீனாவில் அரசும் தனியார் துறையினரும் மிக அதிக அளவு தரவுகளைக் கையாளவேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. இது செயற்கை விவேகம் மூலம் தரவுகளைக் கையாள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் செயற்கை விவேக மேம்பாட்டிற்கு சீனாவில் அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவதால் சீனாவில் செயற்கை விவேகம் வேகமாக முன்னேறி வருகின்றது.

எண்மியத் தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் எண்மிய குற்றச் செயல்களும் வளர்ந்து வருகின்றது. இதில் எல்லா நாடுகளும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே எண்மியத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மக்களுக்கு பயனுடையதாக அமையும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...