Wednesday 7 October 2020

ஆர்மேனிய அஜர்பைஜானியப் போர்

  


2020-09-27-ம் திகதி ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் போர் ஆரம்பித்துள்ளது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதற்கான போர் இதுவாகும். இப்போர் இந்த இரு நாடுகளுக்கும் ஆதரவு கொடுக்கும் வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே முறுகலை உருவாக்கும். அதனால் இரு சிறிய நாடுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் என இப்போரை ஒதுக்கிவிட ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். ஆர்மேனியாவில் கிருத்தவர்களும் அஜர்பைஜானில் துருக்கிய மொழி பேரும் இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர் என்பதால் நிலைமை மேலும் சிக்கலாகின்றது.

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியின் வரலாறு

ஆர்மேனியா முன்பு ஈரானின் ஒரு பகுதியாக இருந்தது. ஈரானிடமிருந்து இரசியா அதைக் ச்கைப்பற்றி சோவியத் ஒன்றிய நாடாக்கியது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி மக்களில் பெரும்பான்மையினர் ஆர்மேனியர்கள். இருந்தும் அது அஜர்பைஜானுடன் 1921-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் திகதி இரசியப் பொதுவுடமைக் கட்சி நகர்னோ கரபார்க் மலைப்பகுதி ஆர்மேனியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது. ஆனால் மறுநாள் ஜோசப் ஸ்டாலின் தலையிட்டு அது அஜர்பைஜானுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவை மாற்றினார். அப்பிராந்தியத்தின் 94விழுக்காடு மக்கள் தொகையினர் ஆர்மினியர்களாக இருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரை ஆர்மேனியர்கள் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இரு நாடுகளிடையே மோதலை தேவை ஏற்படும் போது உருவாக்கலாம் என்ற சதித்திட்டம் இருந்ததாக நம்பப்படுகின்றது. பின்பு தொடர்ச்சியான குடியேற்றத்தால் ஆர்மேனியர்களின் தொகை 76விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்து அஜர்பைஜான் தனிநாடாகிய போது நகர்னோ கரபார்க் மலைப்பகுதி அஜர்பைஜானின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதன் படியே ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற நாடுகளும் அஜர்பைஜானை அங்கீகரித்திருந்த படியால் இன்று வரை உலகச் சட்டத்தின் படி அஜர்பைஜானுக்கே அந்தப் பிராந்தியம் சொந்தமானதாகும்.

தனிநாட்டுப் பிரகடனமும் போரும்

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் வாழும் ஆர்மேனியர்கள் தொடர்ச்சியாக அஜர்பைஜான் அரசால் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கப்பட்டும் கலாச்சார அடிப்படையில் அடக்கப்பட்டும் வந்த படியால் அவர்கள் ஆர்மேனியாவுடன் இணைய விரும்பினர். 1988இல் தமது பிரதேசத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்தனர். அஜர்பைஜானியப் படைகள் அங்கு தலையிட்டதைத் தொடர்ந்து ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் போர் மூண்டது. ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் 1988-1992வரை நடந்த போரில் ஆர்மேனியா நகர்னோ கரபார்க் மலைப்பகுதியையும் மேலும் நிலப்பரப்புக்களையும் ஆர்மேனியா கைப்பற்றியது. முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. 1994இல் இருந்து இரசியா தலையிட்டதால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆர்மேனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் நகர்னோ கரபார்க் மலைப்பகுதி தன்னாட்சி உள்ள பிரதேசமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் எரிபொருள் உற்பத்தியால் செல்வம் திரட்டிய அஜர்பைனான் தன் படைவலுவையும் பெருக்கிக் கொண்டது. இப்போது தான் இழந்ததை மீளக் கைப்பற்ற முயல்கின்றது. இரண்டு நாடுகளும் இரசியாவிடமிருந்து படைக்கலன்களைக் கொள்வனவு செய்கின்றன. இரண்டு நாடுகளுடனும் இரசியா பொருளாதாரத் தொடர்புகளை வைத்துள்ளது. ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உண்டு.

அஜர்பைஜானிற்கு துருக்கி ஆதரவு

அஜர்பைஜானிற்கும் துருக்கிக்கும் இடையில் கலாச்சார மற்றும் வரலாற்று அடிப்படையிலான தொடர்புகள் உள்ளன. துருக்கியும் பாக்கிஸ்த்தானும் அஜர்பைஜானிற்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியர்கள் 1500பேரை துருக்கி அஜர்பையானிற்கு கூலிப்படைகளாக அனுப்பியுள்ளது. போரின் போது கொல்லப்பட்ட 50 சிரியர்களின் உடலங்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அஜர்பைஜான் படைகள் ஆளில்லாப் போர் விமானங்களின் உதவியுடன் முன்னேறியுள்ளன. அவற்றை துருக்கி வழங்கியிருக்கலாம். துருக்கிய விமானங்கள் வேவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆர்மேனியாவின் விமான எதிர்ப்பு நிலைகளை தாக்கி அழித்த அஜர்பைஜான் ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது ஆட்டிலறி நிலைகளை அழிக்கத் தொடங்கியுள்ளன. துருக்கிய F-16 போர் விமானம் ஆர்மேனியாவின் SU–25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மேனியா குற்றம் சாட்டுகின்றது.



ஆர்மேனியாவிற்கு இரசியா ஆதரவு வழங்க வேண்டியுள்ளது

இரசியாவின் Collective Security Treaty Organization என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் ஆர்மேனியாவும் உறுப்புரிமையுடையது. 1992 கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் இரசியா, ஆர்மேனியா, கஜகஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அந்த உடன்படிக்கையின் படி ஆர்மேனியா மீது தொடுக்கப்படும் தாக்குதலை மற்ற நாடுகள் தம்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதி ஆர்மீனியாவைப் பாதுகாக்க வேண்டும். ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உள்ளது. உடன்படிக்கையின் படி இரசியா ஆர்மேனியாவிற்கு உதவி செய்யாது போனால் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மற்ற நாடுகள் இரசியாமீது வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும். அது இரசியாவின் பிராந்திய நலன்களைப் பாதிக்கும்.

இருதலைக் கொள்ளி எறும்பாக ஈரான்

ஈரானுடன் 27மைல் நீள எல்லையைக் கொண்ட ஒரே கிருத்தவ நாடு ஆர்மேனியா. ஈரானின் ஒரு பகுதியாக இருந்த ஆர்மேனியாவின் கிருத்த மக்கள் பலர் இப்போதும் ஈரானில் வசிக்கின்றனர். பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட அஜர்பைஜானியர்களும் ஈரானில் வசிக்கின்றனர். இஸ்ரேலிடம் அதிக படைக்கலன்களை வாங்கிக் குவிக்கும் அஜர்பைஜானுடன் ஈரான் தொடர்பு வைப்பது ஈரான் உலகில் உருவாக்க முயலும் தனது விம்பத்திற்கு ஆபத்து. அஜர்பைஜான் இஸ்ரேலிடம் வாங்கிய ஆளில்லா விமானங்கள் ஈரனுக்கு அடிக்கடி அத்து மீறிப்பறக்கின்றன.  அஜர்பைஜானைப் பாவித்து இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரானை வேவு பார்ப்பதாக ஈரான் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. ஈரானியப் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் ஆர்மேனிய அஜர்பைஜானியப் போரில் ஈரான் பெரிதாக ஈடுபடாது. அஜர்பைஜானூடாக ஈரான் தனது சபாஹர் துறைமுகத்தில் இருந்து இரசியாவிற்கு ஒரு தொடரூந்து பாதையையும் அமைக்க முயல்கின்றது. இது போன்ற காரணங்களால் ஈரான் யாருக்கு ஆதரவளிப்பது எனத் தடுமாறுகின்றது. 

விலகி இருந்து இரசிக்கும் அமெரிக்கா

ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் நடக்கும் போரானது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் நிகராளிப் போர்(Proxy war) என அமெரிக்கா கருதுகின்றது. சிரியப் போரின் இறுதிக் கட்டத்தில் இரசியாவும் துருக்கியும் ஒன்றாக நின்று சிலகாலம் ஒத்துழைத்தது. அமெரிக்காவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் சிரியாவிலும் லிபியாலும் இரண்டு நாடுகளும் முரண்படத் தொடங்கின பிரான்சில் ஆர்மேனியர்கள் வாழ்கின்றனர். பிரான்ஸ் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றது. பிரான்சும் துருக்கியும் நேட்டோ உறுப்பு நாடுகள் என்பதால் நேட்டோ கூட்டமைப்பு விலகி நிற்கின்றது. அமெரிக்கா தனது நலன்கள் அங்கு பாதிப்படையவில்லை என்பதால் இந்தப் போரில் அக்கறை காட்டவில்லை. இதனால் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்த யாரும் இல்லை எனற நிலை உருவாகியுள்ளது.  

தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor)

இது பன்னிரண்டுக்கு மேற்பட்ட எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து மத்திய ஆசியாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கஸ்பியன் கடலூடாகவும் துருக்கியூடாகவும் கருங்கடலூடாகவும் எரிபொருள் வழங்கும் திட்டத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் இத்திட்டத்திற்கு தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அஜர்பைஜான், தேர்க்மேனிஸ்த்தான், கஜகஸ்த்தான், ஈராக் உட்படப் பல நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதன் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் தமது எரிபொருள் தேவைக்கு தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் பெரும்பகுதி எரிபொருள் அஜர்பைஜானுக்கு சொந்தமான கஸ்பியன் கடற்படுக்கையில் இருந்து பெறப்படுகின்றது. இத்திட்டத்தை ஆர்மேனியா அஜர்பைஜான் போர் மூலம் குழப்புவது இரசியாவிற்கு நன்மையளிக்கக் கூடியது. இரசியாவின் நேர்ட்ஸ்றீம் குழாய்க்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து பிரச்சனை கொடுப்பதற்கு இரசியா பழிவாங்குகின்றது எனச் சொல்லலாம். அஜர்பைஜான் நாள் ஒன்றிற்கு ஏழு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யையும் 780மில்லியன் கனவடி எரிவாயுவையும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அஜர்பைஜானில் இருந்து செல்லும் குழாய்கள் ஆர்மேனியாவிற்கு அண்மையில் உள்ள பிரதேசங்களூடாகச் செல்கின்றன.


ஐக்கிய நாடுகள் சபை ஆர்மேனியப்படைகள் நகர்னோ கரபார்க் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. துருக்கி தலையிட்டு போர் நிலைமையை அஜர்பைஜானுக்கு சாதகமாக மாற்றியதால் இரசியா ஆர்மேனியாவிற்கு ஆதரவாக செயற்பட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. அல்லது இரசியாவின் மற்ற நட்பு நாடுகள் இரசியாமீது ஐயம் கொள்ள முனையலாம். பொருளாதார அடைப்படையிலும் படைத்துறை அடிப்படையிலும் துருக்கி அகலக் கால் வைப்பதை இரசியா விரும்பலாம். இரசியா ஆர்மேனிய நிலங்களை தான் பாதுகாத்துக் கொண்டு பிரச்சனைக்குரிய நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் ஆர்மேனியா தனது முழு வலுவையும் பாவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அது போரைத் தீவிரப்படுத்தும்.

Monday 5 October 2020

அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்தியாவின் பாதுகாப்பு

  


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் ஒரு நாடு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும். சீனா சிறிது சிறிதாக இந்தியாவின் நிலப்பரப்பை படைக்கலன்களைப் பாவிக்காமல் இரகசியமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனப் போரியல் நிபுணர் “போர்க்கலையின் உச்சம் எனப்படுவது போர் செய்யாமல் எதிரியை விழுத்துவது” என்றார். சீனா கைப்பற்றிய இந்திய நிலங்களை ஒரு போரால் மட்டுமே இந்தியாவால் மீளக் கைப்பற்ற முடியும். ஆனால் போர் தொடுத்தால் பல விதத்திலும் பெரும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும். சீனாவும் இந்தியாவும் அணுக்குண்டை தாம் முதலில் பாவிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டன. அணுக்குண்டு பாவிக்காமல் போர் செய்தாலும் இரு நாடுகளும் பெரும் ஆளணி இழப்புக்களை, உட்கட்டுமான அழிவுகளை, பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதுடன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளி ஆகிய தளங்களில் உக்கிரமாக நடக்கும்.

பொருளாதார வலிமை மிக்க சீனா

இந்தியாவின் வான் படையினரும் தரைப்படையினரும் சீனா இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை தடுக்கும் முயற்ச்சியில் வெற்றியடைந்தாலும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல் வேறுபட்ட ஏவுகணைகளை சமாளிப்பது இந்தியாவிற்கு முடியாத காரியமாகலாம். சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க இரண்டரை மடங்காக இருக்கின்றது. சீனாவிடமிருக்கும் 3.4ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கையிருப்பு இந்தியாவினதிலும் பார்க்க எட்டு மடங்காகும். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேன்மை மிக்கதாக அமைந்தது. 2008இன் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையதாக இருந்தது. அதே போல 2020-ம் ஆண்டு கொவிட்-19 தொற்றுநோயின் பின்னர் பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தேய்வடையும் போது சீனாவினுடைய பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றது. 2008இன் பின்னர் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது போல் 2020இன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டாகத்தான் இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் வளரும் போது அதற்கு உரிய மரியாதை உலக அரங்கில் செலுத்தப்பட வேண்டும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 2017-ம் ஆண்டே சீனா உலக மேடையை முழுமையாக எடுக்க வேண்டும் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் Road & Belt Initiative மூலம் உலக ஆதிக்கத்தின் மையப்புள்ளியை அத்லாண்டிக்கில் இருந்து பசுபிக்கிற்கு மாற்ற நினைக்கின்றது என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர். 

கடலில் விழுமா சீனா?

சீனாவின் எரிபொருள் தேவையில் 87விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் 77 நாட்களுக்கு பாவிக்கக் கூடிய எரிபொருளை மட்டும் இருப்பில் வைத்திருக்க முடியும். சீனாவின் எரிபொருள் வழங்கலைத் துண்டிக்க சீனாவிற்கு எதிராக இந்தியாவால் இரண்டு கடல் முற்றுகைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து செய்யும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சீனக் கப்பல்கள் மலக்காய் நீரிணையூடாக பயணிப்பதைத் தடுத்தல்.  இரண்டாவது பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தையும் அதை ஒட்டியுள்ள கரையோரப் பிரதேசங்களை முற்றுகையிட வேண்டும். அதனால் சீனாவிற்கு செல்லும் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருள்கள் செல்வதையும் சீனாவில் இருந்து அதன் ஏற்றுமதிகள் உலகெங்கும் செல்வதையும் இந்தியா தடுக்க வேண்டும். இதற்கு பாக்கிஸ்த்தானின் கடற்படையை முற்றாக அழிக்க வேண்டும். அதனால் பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான போரில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும். ஆகையால் இரண்டாவது முற்றுகை தரைப்போரில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம். அந்தமான் நிக்கோபார் தீவில் இந்தியாவின் கடற்படை வலிமை சீனக் கடற்படை மலாக்கா நீரிணையை தாண்டி வர முடியாதபடி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். ஒஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவில் {Cocos (Keeling) islands} இந்தியா துரிதமாகப் படைக்கலன்களை குவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். உலக அரங்கில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக களம் இறங்கும் முடிவை எடுக்கச் செய்தால் இந்து மாக்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படைக்கு பிரெஞ்சுக் கடற்படை உதவி செய்யும் நிலை உருவாக்கலாம்.

படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு நிலையில் இந்தியாவின் நிலங்களை சிறிது சிறிதாக சீனா அபகரிப்பதை தடுப்பதற்கு இந்தியா தன்னை படைக்கல அடிப்படையிலும் அரசுறவியல் அடைப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் சீனாவிலும் வலிமையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா தன் படைத்துறை வலிமை  சீனாவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியா பல பொருளாதார தியாகங்களைச் செய்ய வேண்டும்.ன்ச்அரசுறவியல் அடிப்படையில் இந்தியா தன்னை வலிமைப்படுத்தச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். இந்திய சீனப் போர் நடக்கும் போது பாக்கிஸ்த்தானும் நேரடியாக போரில் இறங்கலாம் அல்லது இந்தியாவிற்கு பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீனாவிற்கு சாதகமாக போரைத் திருப்ப முயலலாம். இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிப்பதை நிறுத்த இந்தியாவின் படைத்துறை சீனாவிலும் வலிமையானதாக இருக்க வேண்டும் அல்லது இந்தியா சீனாவிற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட படியால் எந்த ஒரு நாடும் அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஜப்பான் அடிக்கடி வலியுறுத்தும் குவாட் என்னும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியாவைக் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா காட்டி வந்த தயக்கம் அந்தப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதே வேளை தென் கொரியாவும் வியட்னாமும் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன.

இரசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் இணைந்த படைக்கல உற்பத்தியும்

இரசியாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். அதனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்குதல் செய்வதை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும். சீன பல புதிய படைக்கலன்களை இரசியாவிடமிருந்தே வாங்குகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து புதிய படைக்கல உற்பத்தியில் ஈடுபட வேண்டும் அப்படி உற்பத்தி செய்யும் படைக்கலன்களை ஒரு நாட்டின் அனுமதியின்றி மற்ற நாடு எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இந்த அடிப்படியிலேயே செய்யப்பட்டது. இரசிய தொழில்நுட்பங்களை இரசியாவிடமிருந்து வாங்கும் படைக்கலன்களில் இருந்தே சீனா பெறுகின்ற படையால் இது சீனாவை படைக்கல உற்பத்தியில் பின்னடைவைச் சந்திக்க வைக்கும். உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரசியா முன்வந்துள்ளது. அதை சீனாவிற்கு விற்பனை செய்வதும் தடைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு முறைமைகளை இரசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

அரசுறவியல் மேம்பாடு

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் நடக்கும் போது அமெரிக்காவும் ஜப்பானும் மேலும் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கச் செய்யும் அளவிற்கு இந்திய அரசுறவுகள் மேம்பட்டவையாக இருக்க வேண்டும். சீனாவுடன் போர் செய்யும் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரும் அளவிற்கு சீனாவிற்கு நட்பு நாடுகள் இல்லை என்பது இந்தியாவிற்கு வாய்ப்பானதாகும். வியட்னாம் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகின்றன. வியட்னாமுடனான ஒத்துழைபு சீனாவை ஆத்திரப் படுத்தும் என இந்தியா இதுவரை தயக்கம் காட்டியது.

இந்தியாவில் அமெரிக்கப் படைத்தளம்.

கொல்கத்தாவில் அமெரிக்க கடற்படைத்தளமும் வான்படைத்தளமும் அமைத்தால் இந்திய சீனப் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமையும். ஜப்பானும் தென் கொரியாவும் தமது நாடுகளில் அமெரிக்கப் படைத்தளஙக்ளை அமைக்க அனுமதித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலோ உலக அரங்கின் அவற்றின் தனித்துவமான கொள்கைகளிலோ விட்டுக்கொடுப்புக்களை பெரிதாகச் செய்வதில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு பகுதியான சில்கிரி இணைப்புப் பாதையை சீனாவல் அசைக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தலம். அமெரிக்காவின் F-35 போவிமானங்கள் ஐம்பதையாவது இந்தியா வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப் படவேண்டும்.

பல் துறைப் படைக்கலன்கள்

ஆழ்கடலில் செயற்படக் கூடிய கடற்படை, அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் முனை அனுபவம் கொண்ட படைத்துறை, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் படைக்கலன்களை வாங்கக் கூடிய ஒரே நாடு என்ற நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக இருக்கின்றன. சீனாவின் மிகப் பெரிய பின்னடைவு பல ஆண்டுகளாக போர் முனை அனுபவம் இல்லாத படைத்துறை என்பதே. இந்திய சீனப் போர் என ஒன்று வரும்போது இந்தியாவின் செய்மதிகளை சீனா அழித்து இந்தியப்படையினரைன் தொடர்பாடல்களை சிதைக்கலாம். பதிலுக்கு இந்தியாவும் சீனச் செய்மதிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். இணையவெளித்தாக்குதல் பலவற்றை சீனா செய்யலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியைப் பெறவேண்டும். சுவீடனின் Gripen E fighter விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்தவை என நிருபணமானவை. சீனாவின் உளவு விமானங்களை இந்தியா செயலிழக்கச் செய்வதற்கு Gripen E fighter வாங்க வேண்டும். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுநிலைகளையும் போரின் ஆரம்பத்திலேயே இந்தியா அழிக்கும் அளவிற்கான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறவேண்டும். அவற்றை அழிக்க தரையில் இருந்தும் வானில் இருந்தும் பெருமளவு ஏவுகணைகளை போர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்தியா வீச வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை இந்தியாவிற்கு இரகசியமாக வழங்க அமெரிக்கா தயங்காது. இந்திய சீனப் போர் என்று ஒன்று வந்தால் சீனாவின் பொருளாதார நிலைகளை இந்தியா துவம்சம் செய்யும் என்ற உணர்வை சீனாவிற்கு இந்தியா ஏற்படுத்த வேண்டும். சீனா இந்தியாவிற்கு ஆறுபது பில்லியன் டொலருக்கும் அதிமான ஏற்றுமதியை இந்தியாவிற்கு செய்கின்றது.

இந்தியா மீதான அச்சத்தை சீனாவிற்கு ஏற்படுத்துவது இலகுவான ஒன்றல்ல அதே வேளை அது இயலாத ஒன்று அல்ல. இப்போதிருக்கும் இந்தியாவையிட்டு சீனா கலவரப்படவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவையிட்டு சீனா அச்சமடைந்துள்ளது. இந்தியா தனது தற்போதைய நிலையை மாற்றாவிடில் அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு சீனாவிடமிருந்து பல பிரச்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...