Friday 7 January 2022

மக்கள் எழுச்சி கஜக்ஸ்த்தானை ஒரு புவிசார் அரசியல் போட்டிக் களமக்குமா?

 


கஜக்ஸ்த்தானில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சியை அடக்க இரசியா, ஆர்மீனியா, பெலரஸ், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து படையினர் அங்கு 2021 ஜனவரி 6-ம் திகதி சென்றுள்ளனர். எரிபொருள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த கஜக்ஸ்த்தானில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் உலகச் சந்தையில் யுரேனியத்தின் விலை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. உலக யுரேனிய உற்பத்தியில் 40% கஜக்ஸ்த்தானில் செய்யப்படுகின்றது. உலக எரிபொருள் உற்பத்தியில் சவுதி அரேபியா செய்யும் ஆதிக்கத்திலும் பார்க்க நான்கு மடங்கு ஆதிக்கத்தை கஜக்ஸ்த்தான் செய்கின்றது. 140 நாடுகளைக் கொண்ட படைவலிமைப் பட்டியலில் கஜக்ஸ்த்தான் 61-ம் இடத்தில் இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்கியுள்ள கஜக்ஸ்த்தான் அதை முன்னேற்ற பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. 

பூகோள அமைப்பும் வரலாறும்

உலகிலேயெ தரையால் சூழப்பட்ட நாடுகளில் கஜக்ஸ்த்தான் நிலப்பரப்பில் மிகப் பெரிய நாடாகும். இந்த மத்திய ஆசிய நாடு கிழக்கில் ஆசிய நாடாகிய சீனாவையும் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவின் கஸ்பியன் கடலையும் இரசியாவையும் வடக்கில் இரசியாவையும் தெற்கில் தேர்க்மெனிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான் ஆகியவற்றையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. பத்தொன்பது மில்லியன் மக்களைக் கொண்ட கஜக்ஸ்த்தானில் 3.5மில்லியன் இரசியர்கள் வாழ்கின்றனர். எட்டாம் நூற்றாண்டில் பக்தாத் கலிஃபாவின் படையெடுப்பின் பின்னர் அது ஓர் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடாக மாற்றப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் நடந்த மங்கோலியப் படையெடுப்பின் பின்னர் தேர்கிக் இனக்குழுமம் அங்கு குடியேறியது. அது பின்னர் கஜக் என்னும் இனக்குழுமமாக மாற்றம் பெற்றது.

இரசிய ஆக்கிரமிப்பு

19-ம் நூற்றாண்டில் இரசியர்கள் மொங்கோலிய ஆட்சியை அகற்றி கஜக்ஸ்த்தானை ஆக்கிரமித்துக் கொண்டனர். பின்பு அங்கு பல இரசியர்களும் உக்ரேனியர்களும் குடியேறினர். ஏனைய நடுவண் ஆசிய நாடுகளில் 90%இற்கும் மேற்பட்டவரகள் இஸ்லாமியர்களாக இருக்கின்ற வேளையில் கஜக்ஸ்த்தானில் 70% இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ்கின்றனர். 23.1% கிருத்தவர்கள் அங்கு வாழ்கின்றனர். 1920இல் கஜக்ஸ்த்தான் சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் நூற்றுக் கணக்கான அணுக்குண்டு பரிசோதனை கஜக்ஸ்த்தானில் செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் ஏவூர்தி (ராக்கெட்) தளமும் அங்கு அமைக்கப்பட்டது. விண்வெளிக்கு முதலில் சோவியத் ஒன்றியம் மனிதனை அனுப்பிய ஏவூர்தி கஜக்ஸ்த்தானில் இருந்து ஏவப்பட்டது. 1986இல் சோவியத் அதிபர் மிக்காயில் கோர்பச்சேவ் கஜக்ஸ்த்தானின் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த கஜக்ஸ்த்தானியரை பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த ஓர் இரசியரை பதவிக்கு அமர்த்திய போது அங்கு மக்கள் சோவியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சோவியத் வீழ்ச்சியும் தனி நாடாகிய கஜக்ஸ்த்தான்

1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது கஜக்ஸ்த்தான் ஒரு தனி நாடாகியது. இரசியாவின் படைத்தளம், ஏவூர்தித் தளம் போன்றவை அங்கு இன்றுவரை உள்ளன. கஜக்ஸ்த்தானின் முதலாவது அதிபராக நர்சுல்த்தான் நாசர்பாயேவ் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தில் கஜக்ஸ்த்தானும் இணைந்து கொண்டது. 2004-ம் ஆண்டு உருவான இரசியா தலைமையிலான கூட்டு பாதுகப்பு ஒப்பந்த அமைப்பிலும் கஜக்ஸ்த்தான் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் அது இணைந்து கொண்டது. கஜக்ஸ்த்தானின் மசகு எண்ணெய் இருப்பு உலகில் 11வது இடத்தில் இருக்கின்றது. 80ரில்லியன் கன அடி அளவு கொண்ட எரிவாயுவும் அங்கு இருக்கின்றது. அத்துடன் குரோமைட், செப்பு, வொல்ஃப்ராம் (Wolfram), ஈயம், துத்த நாகம், யுரேனியம் ஆகியவை உட்பட பல கனிம வளங்களும் நிறைய உள்ளன. அதனால் அங்கு தன் ஆதிக்கத்தை செலுத்த சீனா இரகசியமாக பல நகர்வுகளைச் செய்துவருகின்றது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் கஜக்ஸ்த்தானிற்கு முக்கிய இடமுண்டு. சீனாவின் இஸ்லாமியர்கள் வாழும் மாகாணமான சிஞ்சியாங்கில் உள்ள பிரச்சனையால் கஜக்ஸ்த்தான் சீனாவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

இரசிய எதிர்ப்பு

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பின்னர் கஜக்ஸ்த்தான் இரசியாவுடன் நல்ல நட்புறவைப் பேணுகின்ற வேளையில் தமது நாட்டில் இரசிய ஆதிக்கத்தை அகற்றிக் கொண்டிருக்கின்றது. கஜக்ஸ்த்தானில் இருக்கும் இரசிய ஏவூர்தி தளத்தினால் அங்கு சூழல் மாசுபடுவதாக எதிர்ப்புக் காட்டப்படுகின்றது. துருக்கி, ஈரான், இரசியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் சிரிய அமைதிப் பேச்சு வார்த்தை கஜக்ஸ்த்தான் தலைநகர் நுர் சுல்த்தானில் (அஸ்டானா) நடக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஒர் இஸ்லாமிய அரசைக் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என Hizb ut Tahrir என்னும் ஒரு மதவாத அமைப்பு போராட்டம் நடத்துகின்றது.

எரிபொருள் விலை ஏற்றம்

கஜக்ஸ்த்தான் மக்களின் தனிநபர் வருமானம் $24,380 ஆக இருக்கின்றது. இதை இந்தியாவின் தனிநபர் வருமானமான $6,390 உடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருக்கின்ற போதிலும் வருமான சமபக்கீட்டின்மை கஜக்ஸ்த்தானிலும் மோசமாகவே இருக்கின்றது. எரிபொருள் வளம் நிறைந்த கஜக்ஸ்த்தானில் 2022 ஜனவரி 2-ம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். பல அரச சொத்துக்கள் தீயிடப்பட்டன. காவற்றுறயினருக்கு சொந்தமான பல வண்டிகள் தீக்கிரையாகின. ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரிலுள்ள விமானநிலையத்தைக் கைப்பற்றினர். ஆர்ப்பாட்டம் வெறும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரானதாக மட்டுமாக அமையாமல் நாட்டின் எதிர்காலம், சிறந்த மக்களாட்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. பிராந்திய தலைவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதை விடுத்து தேர்தல் மூலம் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

இரசியாவிற்கு கஜக்ஸ்த்தான் முக்கியம்

நர்சுல்த்தான் நாசர்பாயேவ் தொடரிந்து 28 ஆண்டுகள் கஜக்ஸ்த்தான் அதிபராக இருந்து 2009இல் பதவி விலகிய போதும் நாட்டின் பாதுகாப்புச் சபையின் தலைவராக இருந்து ஆட்சியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்தார். 2022 ஜனவரி 5-ம் திகதி நாட்டில் மக்கள் எழுச்சி நடந்து கொண்டிருக்கும் போது அவரை அப்பதவியில் இருந்து அகற்றிய பின்னர் தற்போதைய அதிபர் காசிம் ஜொமாட் தொக்கயேவ் பாதுகாப்புச் சபைத் தலைவரானார். முழு அமைச்சரவையையும் அவர் பதவி நீக்கம் செய்தார். பாதுகாப்புச் சபைத் தலைவராக அவர் செய்த முதல் நகர்வு மக்கள் எழுச்சியை அகற்ற இரசியப் படையினரை நாட்டுக்கு அழைத்தமையே. அழைப்பை மிகத்துரிதமாக ஏற்றுக் கொண்டு புட்டீன் செய்த நகர்வைப் பார்க்கும் போது அது ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தது போல் இருக்கின்றது. கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் அமைப்பு படையினர் என்ற முகமூடியுடன் ஆர்மேனியா, பெலரஸ், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாட்டுப் படைகளுடன் இரசியப் படையினர் கஜிக்ஸ்த்தான் கிளர்ச்சியை அடக்கச் சென்றுள்ளனர். கஜக்ஸ்த்தானில் உள்ள பைக்கொனூரில் உள்ள ஏவூர்தித் தளத்தையும் பல்வேறு படைத்தளஙக்ளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கு உண்டு. இரசியத் தேசியவாதிகள் கஜக்ஸ்த்தானின் வட பகுதியை இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். கஜக்ஸ்த்தானின் எரிபொருள் வளத்தில் 40% அதன் வட பிராந்தியத்தில் இருக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்கள் இரசிய ஆதரவு உள்ளவர்களாக இருப்பதால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை என்பதால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அதைச் செய்யவில்லை. இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் அடக்கும் முயற்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நிறப்புரட்சியா?

மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகளில் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் புரட்சியை நிறப்புரட்சி என இரசியா, சீனா போன்ற நாடுகள் அழைப்பதுண்டு. ஜோர்ஜியாவில் நடந்ததை ரோஸ் புரட்சி எனவும், உக்ரேனில் நடந்ததை ஒரேஞ் (ஆரேஞ்) புரட்சி எனவும் அழைக்கப்பட்டது. தற்போது கஜக்ஸ்த்தானில் நடப்பதையும் ஒரு நிறப்புரட்சி என்கின்றனர். பெலரஸ்ஸில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் முறைகேடாக வெற்றி பெற்றார் எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மேற்கு நாடுகள் செயற்பட்டன. இரசியாவில் இருந்து சென்ற தனியார் படை (கூலிப்படைக்கான கௌரவர் பெயர்) பெலரஸ் சென்று கிளர்ச்சியை அடக்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. கஜக்ஸ்த்தானில் நடக்கும் எழுச்சியும் அடக்கப்படலாம். ஆனால் இலகுவனதாக இருக்காது. தீவிரவான அடக்குமுறை பாவிக்கப்படும் போது கஜக்ஸ்த்தானியர்கள் நடுவே இரசியாமீதான வெறுப்பு அதிகமாகும். 

பனிப்போர்-2?

பனிப்போரில் கிடைத்த வெற்றியை உறுதி செய்ய நேட்டோ நாடுகள் தொடர்ந்து முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பனிப்போரில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்து இரண்டாம் சோவியத் ஒன்றியத்தை உருவாக்கும் புட்டீனின் முயற்ச்சிக்கு கஜக்ஸ்த்தானில் ஆப்பு வைக்கப்படுவதை அவர் அனுமதிக்க மாட்டார். கஜக்ஸ்த்தான் மக்கள் எழுச்சி எப்படி தீவிரமடைகின்றது எப்படித் திசை திருப்பப்படப் போகின்றது, எப்படி அடக்கப்படப் போகின்றது என்பதில் கஜக்ஸ்த்தானின் எதிர்காலமும் அதை ஒட்டி நிகழும் புவிசார் அரசியல் போட்டியும் அமையப்போகின்றது. பனிப்போர்-2 இரண்டின் ஆரம்பப் புள்ளிகளாக உக்ரேனும் கஜக்ஸ்த்தானும் அமையலாம். கஜக்ஸ்த்தானின் எதிர்க்கட்சிகள் இரசியாவின் ஆதிக்கத்தில் இருந்து தமது நாட்டை மீட்க மேற்கு நாடுகள் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

துருக்கி தற்போது கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்து எதையும் வெளிவிடவில்லை. துருக்கி இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் கஜக்ஸ்த்தான் ஒரு புவிசார் போட்டிக் களமாக மாறும். உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் கஜக்ஸ்த்தானை இரசியாவிற்கு எதிராக மாற்றும் முயற்ச்சியில் துருக்கியுடன் மேற்கு நாடுகள் இணையலாம்.

மத்திய ஆசிய நாடுகள் பற்றிய முன்னைய பதிவு:

https://www.veltharma.com/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE


Wednesday 5 January 2022

பல்துருவ ஆதிக்கமும் தமிழர்களும்

  

உலகத்தில் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போடுதல் பல்துருவ ஆதிக்கம் எனப்படும். இரண்டு நாடுகள் அதில் ஈடுபட்டால் அது இருதுருவ ஆதிக்கம் என்றும் ஒரு நாடுமட்டும் அதில் சிறந்து விளங்கினால் அது ஒரு துருவ ஆதிக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. பனிப்போரின் பின்னர் சோவியம் ஒன்றியம் வீழ்ச்சியடைந்துடன் அமெரிக்கா ஒரு துருவ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என வாதிடுவோர் உண்டு. அணுக்குண்டு வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பல்துருவ ஆதிக்கம் செலுத்துகின்றன என்போரும் உண்டு. அணுக்குண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது அதனால் மற்ற வல்லரசு நாட்டில் கணிசமான அழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவற்றை எடுத்துச் சென்று வீசக் கூடிய வலிமையும் இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

பொருளாதாரமும் துருவ ஆதிக்கமும்

உலகெங்கும் இருந்து மலிவு விலையில் மூலப் பொருள்களைப் பெற்று அதிலிருந்து குறைந்த செலவில் உற்ப்பத்தி செய்யும் பொருள்களை அதிக விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்வதே உலக ஆதிக்கத்தின் முதன்மை நோக்கம். முதலில் பிரித்தானியா தனது கைத்தொழில் புரட்சி மூலம் இதைச் செய்து உலக ஆதிக்கத்தைச் செய்தது. அதன் கடற்படை வலிமை அதற்கு உறுதுணையாக அமைந்தது. அதேவழியை அமெரிக்கா பின்பற்றி வெற்றிகண்டது. பிரித்தானியாவில் இருந்த கனிம வழங்களிலும் பார்க்க அதிக அளவு கனிம வளம் அமெரிக்காவில் இருக்கின்றது. அதனால் உலகில் பிரித்தானியா செய்த ஆதிக்கத்திலும் பார்க்க அதிக ஆதிக்கத்தை அமெரிக்காவால் செய்யக் கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக் கொள்கை முறியடிக்கப்பட்டதை தனக்கு ஒரு பாடமாக எடுத்த அமெரிக்கா புதிய குடியேற்றவாதம் எனப்படும் தனக்கு உகந்த ஆட்சியாளர்களை கேந்திர முக்கியத்துவம் வாய்த பிரதேசங்களில் ஆட்சியைல் அமர்த்தும் உபாயத்தை நிறைவேற்றியது. பின்னர் அது சவாலை எதிர்கொள்ளும் போது புதிய தாராண்மைவாதம், உலகமயமாதல் என தனது உபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளது.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர்

ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை

உலக வரலாற்றில் ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறையாத வல்லரசு எனச் சொல்லுமளவிற்கு கனடா முதல் நியூசீலாந்து வரை உலகின் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த பிரித்தானியாவால் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, இரசியா, சீனா ஜப்பான், சீனா போன்ற நாடுகளைக் கைப்பற்ற முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பின்னர் பல நாடுகளில் தனது மறைமுக ஆதிக்கத்தை செய்த அமெரிக்காவால் நடுவண் ஆசிய நாடுகள், இரசியா, கியூபா, சீனா ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவையும் பகைமையையும் பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாஇரசியாபிரசியாபிரான்ஸ்டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் உலக ஆதிக்கத்திற்கு போட்டி போட்டன.


முத்துருவ ஆதிக்கம் நிச்சயமாக உருவாகிவிட்டது

மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. ஆனால் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவை தமது அணுக்குண்டுகள் தாங்கிச் செல்லும் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளால் தாக்கக் கூடிய வலிமையை பெற்றுவிட்டனவோ அப்போது முத்துருவ ஆதிக்கம் தோன்றிவிட்டது. சிரியாவில் பஷார் அசாத் வேதியியல் குண்டுகளைத் தாக்கினால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும்; அதைத் தண்டிக்கும் முகமாக சிரியாமீது தாக்குதல் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் சூளுரைத்திருந்தார். ஆனால் அதையும் மீறி சிரியாவில் வேதியியல் குண்டு வீச்சு செய்யப்பட்ட போது அசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தடுத்துவிட்டார். சீனா தென் சீனக் கடலில் செயற்கை தீவை அமைப்பதை தடுப்போம் என அமெரிக்கா செய்த சூளுரையையும் மீறி சீனா தீவுகளை அமைத்ததுடன் அவற்றைப் படைத்தளங்களாகவும் மாற்றிவிட்டது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் தற்போது உலக ஆதிக்கத்தில் போட்டி போடுகின்றன. சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட சவாலிலும் பார்க்க மோசமான சவால் சீனாவால் 2020களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்திலும் பார்க்க வலுவான பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடந்த வர்த்தகத்திலும் பார்க்க பல மடங்கு வர்த்தகம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கின்றது.

இரசிய சீன ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கும்

2030இல் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.. இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் இரண்டு நாடுகளது தொழில்நுட்ப ஒத்துழைப்பும் ஒரு குறித்த அளவிற்கு மேல் போக முடியாது. இரசியாவும் சீனாவும் ஒன்ற்றின் வளர்ச்சியை மற்றது ஐயத்துடன் பார்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இருதுருவ ஆதிக்கமும் தமிழர்களும்

1980களில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த இருதுருவ ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்தது. அப்போது சீனா அமெரிக்காவுடன் இணைந்து “அமைதியான எழுச்சி” என்னுக் கொள்கையுடன் செயற்பட்டது. பங்களாதேசம் பிரிக்கப் பட்ட பின்னர் இரசியாவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவை அடக்குவதற்கு இலங்கையில் தனக்கு என சில படைத்துறை வசதிகளை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது. அதைத் தடுக்க இந்தியா தமிழர்களைத் தனது துருப்புச் சீடாக பயன்படுத்தியது. தமிழர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக உருவாகினர். 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரும் அமெரிக்க இந்திய முறுகல் இலஙகையில் தொடர்ந்தது. அமெரிக்க ஆதிக்கம் உலகில் அதிகரித்தும் இரசியா ஆதிக்கம் சரிந்தும் சீன ஆதிக்கம் அதிகரிக்கும் நிலை 1999-ம் ஆண்டு உருவானது. அப்போது அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நிலை உருவானது. 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் புவிசார் உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தியாமீதான பொருளாதாரத் தடை அமெரிக்காவால் நீக்கப்பட்டது. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி 2009இல் பேரழிவில் முடிந்தது.

வரவிருக்கும் பல்துருவ ஆதிக்கம்

இந்தியாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சி ஒரு சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவும் உலகில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக மாறும். உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் உலக ஆதிக்கத்தில் பெரும் பங்காற்றுவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருக்கும் கொள்கையை மாற்றி தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை வலுவடையும் போது. அது ஒரு உலகப் பெருவல்லரசாக உருவாகும். ஏற்கனவே பிரான்ஸ் என்ற வல்லரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், 2030அளவில் அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா என்ற ஐந்து துருவங்கள் உலகில் உருவாகும் போது தமிழர்கள் தமக்கு என ஒரு நட்பு நாட்டை பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்படும். தற்போது பல நாடுகளில் இளையோராக இருக்கும் தமிழர்கள் அப்போது சிறப்பாக செயற்பட்டால் ஈழவிடுதலை சாத்தியமாகும். இதனால் தான் 2008 மாவிரர் நாள் உரையில் இனி எமது விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர் இளையோர் முன்னெடுப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டது.

Sunday 2 January 2022

2022இல் உலகம் எப்படி இருக்கப் போகின்றது?

 



முன்னைய ஆண்டுகளில் இருந்து 2022இலும் தொடரும் பிரச்சனைகள்: 1. உக்ரேன் எல்லையில் இரசியப் படைக்குவிப்பு, 2. தைவானை ஆக்கிரமிக்க முயலும் சீனா, 3. செல்வாக்கிழந்த ஆட்சியாளரகள்,4. பணவீக்கமும் அரச நிதிப்பற்றாக்குறையும் 5. பெருந்தொற்று நோய், 6 பொருளாதாரப் பிரச்சனை.

உக்ரேன்

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் அமெரிக்கா இருமுனைப் போரை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டு திணறும் எனக் கருதப்பட்டது. இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு கடும் குளிர் நிலவும் ஜனவரி இறுதி உகந்ததாக இருக்கும். ஆனால் சீனாவின் 2022 பெப்ரவரியில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முதல் சீனா தைவானை ஆக்கிரமித்தால் மேற்கு நாடுகள், ஜப்பான், கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் போட்டியைப் புறக்கணிக்கும். அதனால் சீனா பெரும் இழப்பீட்டைச் சந்திக்க வேண்டிவரும். நேட்டோ நாடுகள் உக்ரேனைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றாலும் உக்ரேன் மீது இரசியா போர் தொடுக்கும் போது நேரடியாக நேட்டோப்படையை களமிறக்குவதற்கான வாய்ப்பு குறைவு. இரசிய படைகளை உள்ளே வரவிட்டு கரந்தடித் தாக்குதல் செய்வதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம். அத்தாக்குதலில் போலந்து மற்றும் துருக்கியப் படைகள் பெருமளவில் இரகசியமாகப் பங்கேற்பர். நேட்டோ நாடுகளின் புதிய படைக்கலன்களுடன் மரபு வழிப்போர்ப் பயிற்ச்சி பெற்ற படையினர் இரசிய ஆக்கிரமிப்பு படையினர் மீது தாக்குதல் செய்யும் போது பெருமளவு ஆளணி இழப்புக்களும் படைத்துறைப் பார ஊர்தி இழப்புக்களும் ஏற்படும். அமெரிக்காவின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் உக்ரேனின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் மாறலாம். 2022  பெப்ரவரி இறுதியில் உக்ரேனில் ஒரு மோதல் நடக்கும். 

தைவான்

சீனாவின் தைவான் ஆக்கிரமிப்பு நடப்பதற்கு பல வழிகள் உண்டு. தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் சீனா தைவானை ஆக்கிரமிக்க முயலலாம். அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. தைவானியர்களிடையே சீன எதிர்ப்பு மோசமாகிக் கொண்டே போகின்றது. சீனாவிற்கு அடிபணிய வேண்டும் என்ற எண்ணம் இளம் தைவானியர்களிடையே இல்லை. மிக அதிக ஏவுகணைகளை தைவான் மீது ஒரேயடியாக வீசி தைவானை தரை மட்டமாக்கி அடிபணிய வைக்க முயற்ச்சிக்கலாம். தைவான் சீனாவின் மேற்குகரையோர நகரங்கள் மீது தனது ஏவுகணைகளை வீசி சீனப் பொருளாதாரத்தை சிதைக்க முயலலாம். ஹொங் கொங்கையும் ஷாங்காயையும் இலக்கு வைத்து தைவான் பல ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் தனிய தன்னைப் பாதுகாக்க மாட்டாது. ஜப்பான் தைவானை ஆக்கிரமிக்கும் படைகளை இலக்கு வைத்து தைவானுக்கு அண்மையாக உள்ள தீவுகளில் பெருமளவு ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் நீரிணையக் கடக்க முயலும் சீனப் படைகளை ஜப்பானியக் கடற்படைகளும் அமெரிக்க கடற்படைகளும் இணைந்து முதலில் தடுக்கும். தடையை மீறிச் சீனப் படையினர் செல்ல முயன்றால் பெரும் கடற்போர் நடக்கலாம். அது முற்றிய நிலையில் அமெரிக்க நகரங்களையும் ஜப்பானையும் இலக்கு வைத்து சீனா தனது மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை வீசலாம். அது பல நேட்டோ நாடுகளையும் ஒஸ்ரேலியாவையும் தென்கொரியாவையும் வியட்னாமையும் சீனாவிற்கு எதிரான போரில் ஈடுபட வைக்கும். சீனாவின் இந்த போர்ச் சூழலைப் பயன்படுத்தி இந்தியா முழுக் கஷ்மீரையும் கைப்பற்ற முயலலாம். ஒது ஓர் உலகளாவிய போராக மாறும் இடர் உண்டு.

உலகப் பொருளாதாரம்

கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 2022இல் ஆறு மாதங்களாவது எடுக்கும். நோய்க்கான மருந்தும் 2022இல் பரவலாக பாவனைக்கு வந்துவிடும். உலகில் பல நாடுகளில் அரச துறையில் ஆட்குறைப்பு செய்யப்படும். ஓய்வூதியங்கள் பெறுவோர் சிக்கல்களைச் சந்திப்பார்கள். பணிபுரிவோர் வீட்டிலும் பணிமனையிலும் இருந்து செயற்படுவது 2022இல் நிரந்தரமாகிவிடும். 2022இல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல சிரமங்களை அரசுகள் எதிர் கொள்ளும். அதனால் உலகெங்கும் வட்டி விழுக்காடு அதிகமாக இருக்கும். பல நாடுகளின் திறைசேரிகள் விற்பனை செய்யும் கடன் முறிகள் எதிர்பார்த்த அளவு நன்மையத் தாராது. 2009இன் பின்னர் நடந்தது போல் அளவுசார் தளர்ச்சி எதிர்பார்க்கும் நன்மையைத் தராது.

சூழல் பாதுகாப்பு

மேற்கு நாடுகள் புவிப்பந்தை அசுத்தப்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் சீனா இந்தியா போன்ற நாடுகள் தாமும் தொடர்ந்து அசுத்தப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. இதனால் சூழல் வெப்பமாதலும் மாசுபடுத்தப் படுவதும் தேவையான அளவு குறைக்க முடியாமல் இருக்கும். புதுப்பிக்கக்கூடிய வலு (Renewable Energy) உற்பத்தியில் அதிக முதலீடுகள் செய்யப்படும். பசுமைக் கொள்கை பல நாடுகளில் வலிமையடையும்.

இந்தியா

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு 2022 ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருக்கின்றது. 2022இன் ஆரம்பத்தில் கோவா, மணிப்புரி, பஞ்சாம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கின்றது. நல்ல தலைவர் இல்லாத காங்கிரசுக் கட்சி ஆளும் பரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான வெற்றியின் இரகசியம் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் வலுவற்ற தலைமையில் தங்கியுள்ளது. இந்தியா 2022இல் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புண்டு.

இலங்கை

2021இல் இலங்கை அரசின் நடுவண் வங்கி அந்நியச் செல்வாணிக் கையிருப்பு இன்மையால் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டி ஏற்பட்டது. 2022 இலங்கையின் அரசுக்கு சொந்தமான வர்த்தக வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவை செயற்படா கடன்களால் நெருக்கடியை எதிர் நோக்கலாம். அவற்றுடன் ஹட்டன் நஷனல் வங்கி, வர்த்தக வங்கி போன்றவையும் நிதி நெருக்கடியைச் சந்திக்கலாம். அவற்றை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க முடியாமல் இலங்கையின் நடுவண் வங்கி திணறலாம். பெருமளவு நன்கொடை அல்லது உள்நாட்டுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து தப்ப முடியும். அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வதும் அதை அரசு இரும்புகரங்களால் அடக்குவதும் நடக்கும். இலங்கை ஆட்சியாளர்கள் படைத்துறையினரின் ஆட்சி வரும் என மிரட்டுவார்கள். ராஜபக்சே குடும்பத்தினர்களின் ஊழல்கள் பலவற்றை மேற்கு நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசியல்வாதிகள் அம்பலப் படுத்துவர். ஆட்சி கலையும் வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வார்கள். அமெரிக்காவுடனான SOFA ஒப்பந்தம் வேறு பெயரில் இலங்கையால் கைச்சாத்திடப்படலாம். இந்தியாவுடனான இலங்கையின் CEPA ஒப்பந்தம் மீளவும் காலம் கடத்தும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஈழத் தமிழர்கள்

மீண்டும் ஈழத்தமிழர்களை 13இற்குள் முடக்கும் முயற்ச்சி 2022இல் உறுதியாக முன்னெடுக்கப்படும். ஏற்கனவே பல அரசியல்வாதிகள் அதற்கு விலைபோன நிலையில் மேலும் பல அரசியல்வாதிகள் விலைபோக வாய்ப்புண்டு. இலங்கையை 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கும் ஆற்றல் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவைக் கையாளும் திறனை இலங்கை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டே வருகின்றது. எல்லாத் தமிழர்களும் இணைந்து இந்தியாவிடம் 13ஐ முழுமையாக நிறைவேற்ற வைக்கும் கோரிக்கை இறுதியில் இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாகவே அமையும். வலுவிழந்த நிலையில் இருக்கும் இலங்கை அரசு சிங்கள மக்கள் நடுவில் மேலும் செல்வாக்கு இழக்க வைக்கும் நகர்வான 13ஐ முழுமையாக நிறைவேற்றுவதைச் செய்ய மாட்டாது. இந்தியாவை ஏமாற்றுவதற்காக அரச ஆதரவுடன் 13இற்கு எதிரான கிளர்ச்சிகளை பிக்குகள் தலைமையில் பெருமளவு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இலங்கையில் உள்ள இந்தியாவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அதனால் 13-ம் திருத்தம் மேலும் வலுவிழந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம். இந்தியாவிற்கு எதிராக சிங்களவர்கள் செய்யும் கிளர்ச்சியை அமெரிக்கா ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும். காணாமற் போனோர் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது. காணி அபகரிப்பு தொடர்ந்து நடக்கும். ஜெனீவா இழுத்தடிப்பு தமிழர்களுக்கு பயனின்றி தொடரும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அமெரிக்கா தமிழரகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்பது மனப்பாலாகவே இருக்கும்.

சீனா

சீனா செய்ய முயலும் பொருளாதாரச் சீர்திருத்தம் சீன மக்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கும். சீன அதிபரின் பொதுச் செழுமைத் திட்டம் பல பணமுதலைகளின் மறைமுக எதிர்ப்புக்கு உள்ளாகும். உலக அரங்கில் சீனாவின் ஏற்றுமதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம். மோசமடைந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் சீர்திருத்தப்பட முடியாமல் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களும் உள்ளூராட்சிச் சபைகளும் பட்ட கடன்களை அடைக்க முடியாமல் திணறும். ஜீ ஜின்பிங் ஆட்சியிலும் கட்சியிலும் தன் பிடியை இறுக்க எடுக்கும் முயற்ச்சிகள் எதிர்ப்பை சந்திக்கும்.

இரசியா

பெலரஸ் மற்றும் மோல்டோ நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க இரசியா தொடர்ந்து முயற்ச்சி செய்யும். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனை சீர் செய்யப்படும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரிக்கும். தனது எரிவாயு ஏற்றுமதியை இரசியா அரசுறவியல் கருவியாக (Diplomatic Tool) மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாவிக்கும்.

படைக்கலப் போட்டி

உலக நாடுகளிடையே படைக்கலப் போட்டி மேலும் தீவிரமடையும். முன்னணி நாடுகள் எல்லாம் தமது படைத்துறைச் செலவை அதிகரிக்கும். அமெரிக்காவின் தொலைதூரக் குண்டு வீச்சுமானமன B-21 Raider, ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள், Ford Class விமானம் தாங்கிக் கப்பல்கள், இரசியாவின் எஸ்-500 ஏவுகணை எதிர்ப்பு முறைமை, சீனாவின் அடுத்த மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள், இந்தியாவின் அக்னி-6 ஏவுகணைகள் 2022-ம் ஆண்டு முழுமையான பாவனைக்கு வரும். ஜப்பான் தனது படைவலிமையைப் பெருக்கும். அமெரிக்காவுற்கு அடுத்தபடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்யும் நாடாக ஜப்பான் இருக்கும். ஆனால் அம்முயற்ச்சி 2022இல் நிறைவடைவதற்கான வாய்ப்பு குறைவு.

துருக்கி ஒரு குழப்படி பிள்ளை போல் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரியும். சவுதி அரேபியா அடங்கும். இஸ்ரேல்-ஈரான் முறுகல் மேலும் தீவிரமடைந்து அவை இணையவெளியில் மோசமாக மோதிக் கொள்ளும். செயற்கை விவேகம் பல மடங்கு முன்னேற்றம் அடையும். துளிம கணினித்துறை (Quantum Computing) பெருமளவு முன்னேற்றமடையும். ஈரன் – அமெரிக்க யூரேனியப் பதப்படுத்தல் பேச்சு வார்த்தை இழுபறியில் இருக்கும்.

நாடுகளிடையே முறுகல்கள் தீவிரமடைவதும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும், உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் புதிய படைக்கலன்களும், இயற்கை அனர்த்தங்களும் 2022இன் அம்சங்களாக இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...