Friday 3 April 2020

கொரோனாவும் அரசுகளும் சதிக்கோட்பாடுகளும்

கொரோனா நச்சுக்கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கின்றது. மனித வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல தொற்று நோய்கள் வந்திருந்தாலும் கொவிட்-19உலக நாடுகளுக்கு இடையிலான உறவிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா நச்சுக்கிருமியின் தோற்றம் பற்றி பல கற்பனைக் கதைகள் பரவுகின்றன.

சுகாதாரப் பிரச்சனையில் இருந்து பொருளாதாரப் பிரச்சனைவரை
சீனாவின் ஆரம்பித்ததாகக் கருதப்படும் கொவிட்-19முதலில் சுகாதாரப் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. அதற்குரிய மருந்தையும் சிகிச்சை வசதிகளையும் தேடும் போது அது ஒரு மருத்துவப் பிரச்சனையானது. அந்த இரண்டு பிரச்சனையையும் ஆரம்பத்தில் சீன அரசு கையாண்ட போது எழுந்த விமர்சனங்களால் அது அரசியல் பிரச்சனையாக மாறியது. சீனாவின் முக்கிய நகரமான உஃகான் தனிமைப் படுத்தப் பட்ட போதும் அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போதும் பெரும் பொருளாதாரப் பிரச்சனை எழுந்தது. சீனாவின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப் பட்டு 2020இன் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் தொழிற்றுறை உற்பத்தி 13.5% வீழ்ச்சியடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. 1979இன் பின்னர் முதற்றடவையாக சீனாவின் பொருளாதாரம் குன்றப் போகின்றது எனக் கருதப்படுகின்றது. சீனாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் உலகெங்கும் பல நாடுகளில் பரவியுள்ள கொவிட்-19அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் கௌரவப் பிரச்சனை
சீனாவில் இருந்துதான் கொரோனா உருவானது என்பதும் சீனா ஆரம்பத்தில் அந்த கிருமிகள் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளிவிடவில்லை என்ற குற்றச் சாட்டும் சீனாவிற்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. தான் கொரோனா கிருமிப்பரவலை மற்ற நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது என சீனா மார்தட்டுகின்றது. சீனா அரசு மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளால் 7.5மில்லியன் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்ற ஒரு பிரித்தானியப் பல்கலைக் கழகம் சீனா தனது நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால் 95% உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச் சாட்டையும் முன் வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் சீனாவை வாயாரப் புகழ்ந்துள்ளது. ஆனால் பல மேற்கு நாட்டு ஊடகங்கள் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மை என்கின்றது. சீனாவிற்கு முன்னர் தைவான் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொரொனா நச்சுக் கிருமிகள் மனிதர்களில் இருந்து மனிதருக்கு பரவக் கூடியது என அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் உலக சுகாதார நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினர். அவர் பதவி விலக வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. 


நாட்டுக்கு நாடு வித்தியாசமாக கையாளப்பட்ட கொவிட்-19
சிறியா நாடென்பதாலும் சிறப்பாக முகாமைப் படுத்தப்படுவதாலும் சிறந்த மருத்துவத் துறையைக் கொண்டிருந்த படியாலும் சிங்கப்பூர் கொவிட்-19நச்சுக்கிருமிப் பரவலை சிறப்பாகக் கையாண்டது. சிறப்பான ஒற்றையாட்சியைக் கொண்ட தென் கொரியாவாலும் சிறந்த முகாமையைக் கொண்ட ஜப்பானாலும் கோவிட்-19இன் பரவலை தடுக்க முடிந்தது. தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான இத்தாலி பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மற்ற ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. துருக்கிய ஆட்சியாளர்கள் முதலில் தமது நாட்டில் கொவிட்19 நச்சுக்கிருமி பரவவில்லை என்றது. இஸ்ரேல் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை கொவிட்-19இற்கு எதிராக எடுத்தது. இலங்கை அரசு கொவிட்-19இல் அதிக கவனம் எடுத்தது. விரைவில் பாராளமன்றத் தேர்தலி நடத்தி அதன் அரசமைப்பு யாப்பின் 19வது திருத்தத்தை ஒழிப்பதில் அதிபர் அக்கறையாக உள்ளார்.
பண்டங்கள் அல்ல மனிதப் போக்கு வரத்தே பிரச்சனைக்குரியது.
சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் இந்தியாவிலும் பாக்கிஸ்த்தானிலும் கோவிட்-19இன் பாதிப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க குறைந்த அளவில் இருக்கின்றது. கொவிட்-19 நச்சுக்கிருமியின் ஆரம்ப இடமான உஃகான் நகரில் இருந்து நேரடி விமானச் சேவையைக் கொண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று நோய்ப்பரவல் துரிதமாகவும் அதிக அளைவிலும் இருந்தது. கொவிட்-19 நச்சுக் கிருமி மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதே அதிகம். அது உணவுப் பொருட்களிலோ மற்ற வர்த்தகப் பொருட்களிலோ அதிக மணித்தியாலங்கள் உயிருடன் இருக்காது.

பல விதமான சதிக் கோட்பாடுகள்
ஒவ்வொரு தடவையும் புது வகையான தொற்று நோய்க்கிருமிகள் உலகெங்கும் பரவும் போது மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்காக அக்கிருமிகளை உருவாக்கின என்பது முதலில் வைக்கப்படும் குற்றச் சாட்டாகும். இரண்டாவது குற்றச் சாட்டு உயிரியல் படைக்கலன்களுக்கு உற்பத்தி செய்த கிருமிகள் தப்பி விட்டன என்பது. மூன்றாவது ஒரு நாட்டில் அழிவை விளைவிக்க மற்ற நாடு பரவ விட்டது. ஐந்தாவது இது இலுமினாட்டிகள் உலகை அழிக்க செய்யும் வேலை. இவை மட்டுமல்ல இன்னும் பல நம்பமுடியாத ஆதாரமற்ற சதிக்கோட்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

காசா முதல் டில்லிவரை
காசா நிலப்பரப்பில் ஓர் இஸ்லாமிய போதகர் கொரோனாவை அல்லா இஸ்லாமியர்களின் எதிரிகளை அழிக்க உருவாக்கினார் என்றார். மேற்குக் கரையில் உள்ள சிலர் இஸ்ரேல் இஸ்லாமியர்களை அழிக்க கொரோனா வைரஸை உருவாக்கிப் பரவவிட்டனர் என்கின்றனர். இந்தியாவில் சில மதவாதிகள் கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புகின்றார்கள் எனக் குற்றம் சாட்டி அதற்கு “ஜிகாடிஸ்ற் வைரஸ்” எனப் பெயரிட்டனர். சீனாவில் உஃகான் நகரில் இருந்து சீனத் தலைநகர் பீஃயிங்கிற்கும் பொருளாதாரத் தலைநகர் ஃசங்காயிற்கும் பரவியதிலும் பார்க்க அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அதிகம் பரவியது ஏன் என சிலர் கேள்வி எழுப்பியதுடன் ஒரு வீட்டின் சமையலறையில் பிடித்த தீ அதன் இருப்பறைக்குப் பரவாமல் அடுத்த வீட்டுக்கு பரவியது எப்படி எனவும் கேள்வி எழுப்புகின்றனர். முதலாவது உண்மை கொரொனா மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் சமையல் அறையில் இருந்த பக்கத்து வீட்டுக்கார் தன் மீது பிடித்த தீயுடன் பக்கத்து வீட்டு இருப்பறைக்கு ஓடினால் பக்கத்து வீட்டில் தீப்பிடிக்கும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்தவர் திடீரென எழுந்து வந்து துரிதமாகச் செயற்பட்டால் சமையலறைக்குள்ளேயே தீ அடக்கப்பட்டுவிடும். உஃகான் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு நேரடி விமானச் சேவை உண்டு. உஃகான் நகரில் அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் துணைத்தூதுவரகங்கள் இருக்கின்றன. மாதம் 900பேர் உஃகான் நகரில் இருந்து நியூயோர்க்கிற்கு பறப்புக்களை மேற்கொள்கின்றனர். மேற்கு நாடுகள் முதலில் கொவிட்-19 நோயை பரவவிட்டு மக்களின் நோய் எதிர்ப்பு வலுவால் அடக்கி மக்களின் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும் திட்டத்துடன் இருந்தன. சுவாசக் கவசத்தை முகத்தில் அணிவது பயனில்லை என மேற்கு நாட்டு நிபுணர்களும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்தனர். ஆனால் சுவாசக் கவசம் அனிந்த ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவாது என்பது முற்றிலும் உண்மை. சீனாவின் பெரு நகரவாசிகள் எல்லோரும் கொவிட்-19 தொற்று நோய் பரவ முன்னரே சீனாவின் வளிமண்டலம் மாசு பட்டிருப்பதால் சுவாசக் கவசத்தை அணிந்த படியேதான் அவர்கள் வெளியே செல்வார்கள். அதனால் யாராவது கொவிட்-19 நோயால் பிடிக்கப்பட்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது பெருமளவில் குறைக்கப்பட்டது. சீனா மக்களை வெளியில் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டால் அந்த உத்தரவிற்கு மக்கள் பணிந்தே ஆக வேண்டும். சீனாவெங்கும் 200மில்லியன் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் முகங்களை வைத்து ஆட்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் சீனா உலகில் முதன்மையாகத் திகழ்கின்றது. அதனால் வீட்டுக்குள் இருக்கும் உத்தரவிற்கு மக்கள் பணிந்தனர். சீனாவில் நோயாளிகளுக்கான சுவாசப் பெட்டிகளுக்கு தட்டுப்பாடு இத்தாலியில் இருந்தது போல் இருக்கவில்லை. இவற்றால் சீனாவால் நோய் பரம்பலையும் இறப்பையும் மட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உரிய நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொவிட்-19 நோய் பற்றி எச்சரிக்க சீனா தவறியது மாநிடத்திற்கு எதிரான குற்றமாகும்.

அமெரிக்கப்படையினர் பரப்பினர் என்கின்றது சீனா
சீனாவின் உஃகான் நகரில் நடந்த பல நாடுகளின் படையினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற வந்த அமெரிக்க படையினர் அங்கு கொவிட்-19 நச்சுக் கிருமியைப் பரப்பினர் என சீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளரான Zhao Lijian திட்டமிட்டு இப்படி ஒரு கதையைப் புனைந்து சீன சமுகவலைத்தளங்களில் பரவ விட்டார் என அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலங்களில் சீனா எடுத்த பிழையான நடவடிக்கைகளை மறைக்கவே இப்படி ஒரு கதையை சீனா கட்டிவிட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்கர்கள். அமெரிக்க அதிபர் கொரொனாவிற்கு சீனநச்சுக்கிருமி எனப் பெயரும் சூட்டினார்.

போர் அனுபவமில்லா சீனாவின் போர்க்கால நடவடிக்கை
சீனாவின் படைத்துறையைப் பற்றி விமர்சிக்கும் மேற்கு நாட்டவர்கள் சீனர்களுக்கு போர் அனுபவம் இல்லை என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார்கள். ஆனல் கொவிட்-19நச்சுக் கிருமியை ஒழிப்பதில் எடுத்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஒரு போர் நடந்தால் அதை சீனா எப்படிக் கையாளும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதிலும் சிகிச்சை அழிப்பதிலும் சீனா மனித இயந்திரங்களைப் பயன்படுத்தியது. நோயால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு மருந்துகளையும் உணவையும் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. செயற்கை நுண்ணறிவில் சீனா எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதையும் சீனாவின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.

ஈரான் வழி தனி வழி
ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவால் தமது நாட்டில் கொரொனா நச்சுக் கிருமி பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்கா ஈரானுக்கு வழங்க முன்வந்த மருந்துப் பொருட்களையும் ஈரான் வாங்க மறுத்தது. அந்த மருந்திலும் ஈரானியர்களைக் கொல்லும் நச்சுக் கிருமிகளை உள்ளடக்கி அமெரிக்கா அனுபும் என்றன ஈரானிய ஆட்சியாளர்கள்.

டிரம்பின் ஆதரவாளர்கள் வேறு வழி
டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் டிரம்பின் தேர்தல வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ய அவரின் எதிரிகள் கொவிட்-19 நோயின் தாக்கம் பற்றி வேண்டுமென்றே மிகைப்படுத்திக் கூறுகின்றார்கள் என்கின்றனர். நியூயோர்க் மாநில மருத்துவ மனைகளில் இருந்து திட்டமிட்டு அவலங்கள் பற்றிய செய்திகள் பரப்பப்படுகின்றன என டிரம்ப் ஆதரவாளர்கள் ஆத்திரப்படுகின்றனர். 5ஜீ தொழில்நுட்பத்தை

பில் கேட்ஸ் முன்கூட்டி திட்டமிட்டாரா?
2015-ம் ஆண்டு ஆற்றிய ஓர் உரையில் வரும் காலத்தில் 10மில்லியன் மக்கள் இறக்கலாம் என எதிர்வு கூறியிருந்தார். மென்பொருள் உற்பத்தி வர்த்தகரான அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப மென் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அவரது நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, கணனிகள் தாமாகவே கற்றுக் கொள்ளல் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத் தரவுகளை மிகப்பெருமளவில் திரட்டி அவற்றில் இருந்தும் தற்போது நடக்கும் மாற்றங்களில் இருந்தும் எதிர்காலத்தை அவர்கள் கணிக்கின்றார்கள். அதில் அவர் கண்டதைப் பகிர்ந்து கொண்டார். இந்த கொவிட்-19 நோய்ப்பரமலால் அவருக்கு ஏதாவது நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது கிடைத்தால் அவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமானது. டீன் கூன்ஸ் என்ன்னும் நாவலாசிரியர் 1981-ம் ஆண்டு எழுதிய The Eyes of Darkness நாவலில் 2020 ஆண்டளவில் நிமோனியா போன்ற ஒரு கடுமையான நோய் உலகெங்கும் பரவும். அது சுவாசப்பை சுவாசக் குழாய் போன்றவற்றைத் தாக்கும். எந்த ஒரு மருந்தாலும் அதை தடுக்க முடியாது என எழுதினார். அந்த நோய்க்கு அவர் ஃஉகான்-400 எனப்பெயரிட்டிருந்தார். பில் கேட்ஸிலும் பார்க்க அவரது எழுத்து மிகவும் துல்லியமாக இருக்கின்றது.

எகிப்த்தியரின் எகத்தாளம்
எகிப்திய நடிகர் ஒருவர் எகிப்தியரை கொரோனா ஒன்றும் செய்ய முடியாது என்றார். உப்புப் போட்ட மீனும் வெங்காயமும் உண்ணும் எம்மிடம் கொரோனா கிருமி வந்தால் அதுதான் அழியும் என்றார். எம்மை ஒன்று கூட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் கூடுவோம்; எம்மை முத்தமிட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் முத்தமிடுவோம் என்றார் அந்த நகைச்சுவை நடிகர். ஆனால் இப்போது எகிப்து நோயாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றது. பல எகிப்தியப் பத்திரிகைகள் Egypt is "untouchable" and that Egyptians "are immune" to coronavirus எனச் செய்திகளையும் வெளியிட்டிருந்தன. எகிப்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் எகிப்தியர்கள் கடவுளால் பாதுகாக்கப்படுபவர்கள் என்றனர். எகிப்திய மத போதகர்கள் இஸ்லாமியர்களை எந்தக் கிருமியும் தாக்காது என்றனர்.

வித்தியாசமாகக் கையாள முயன்ற பிரித்தானியா
இரண்டு உலகப் போரிலும் பிரித்தானியா தனது மக்களின் உயிர்களின் பாதுகாப்பிலும் பார்க்க எதிரியை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தனது மக்களின் அதிக உயிரிழப்புக்கள் அவர்களை தீவிரமாகப் போரில் ஈடுபடத் தூண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அது போலவே கொவிட்-19கிருமிகளைப் பரவ விட்டு அதை அழிக்க முயன்றனர் என்ற குற்றச் சாட்டு சீனாவில் இருந்து வைக்கப்பட்டது. பிரித்தானியா ஆரம்பத்தில் பாடசாலைகளைக் கூட மூடாமல் இருந்தது ஆனால் பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்று அதனால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என எச்சரித்தைத் தொடர்ந்து அந்த முயற்ச்சி கைவிடப்பட்டது. பின்னர் புதிய சட்டத்தின் மூலம் கோவிட்-19ஐ எதிர்வு கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா
இணைப்பாட்சி ஆட்சி முறைமையைக் கொண்ட அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான வகையில் கையாளும் நிலையைத் தவிர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அவர் எடுக்கும் முயற்ச்சிக்கு கொவிட்-19கிருமிகளையும் பாவிக்க முயன்றார். அதனால் முதலாவதாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகள் வருவதைத் தடை செய்தார். அதே போல் ஐரோப்பிய நாடுகள் செய்யாத படியால் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதைத் தடை செய்தார்.

மோசமான நிலையில் மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை
கொரோனா நச்சுக் கிருமி பல நாடுகளின் மருத்துவத் துறையின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ரொனால்ட் ரீகன் -மார்கரெட் தட்சர் காலத்தில் இருந்தே முதலாளித்துவ நாடுகள் முதலாளிகளுக்கு விதிக்கப்படும் வருமான வரியைக் குறைப்பதற்கு அரச செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். அவரகள் முதலில் கை வைத்தது மருத்துச்வத் துறை. அன்றிலிருந்து மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை வலுவற்றதாக இருக்கின்றது. சமூகவுடமைக் கொள்கையைக் கொண்ட ஸ்கண்டினேவிய நாடுகள் மட்டும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன.

நோயிலும் இலாப நட்டக் கணக்கு
கொரோனா நோய் பரவலைத் தடுக்க மக்கள் நடமாட்டைத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்தினால் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் தான் மேற்கு நாட்டு ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் நோயால் வரும் இழப்பிலும் பார்க்க அதிக இழப்பை பொருளாதார அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டி வரும் என பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அச்சம்தான் அவரை துரித நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது. தமது மருத்துவத் துறையின் பலவீனத்தையும் தமது பொருளாதாரக் கரிசனையையும் மறைக்கவே பல சதிக் கோட்பாடுகளை அவர்கள் பரப்புகின்றார்கள்.

ஆய்வு கூடத்தில் உருவாக்கப் பட்டதா?
மரபணு மாற்றத்தின் மூலம் கொரோனா நச்சுக்கிருமி உருவாக்கப் படவில்லை என சில பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதன் தோன்றியதில் இருந்தே பல புதிய நச்சுக்கிருமிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டு வௌவால்களில் கொரொனா நச்சுக் கிருமிகள் இருந்து வருகின்றன. 2002-ம் ஆண்டு வௌவால்களில் உள்ள கொரோனா நச்சுக்கிருமிகள் காட்டுப்பூனை போன்ற ஒரு மிருகதிற்குப் பரவி அங்கு உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி சார்ஃச் என்னும் நோயைப் பரப்பியது, 2012இல் வௌவால்களில் இருந்த கொரோனா கிருமி பூனை போன்ற ஒரு காட்டு விலங்கிற்கு பரவி அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவி மெர்ஃச் என்ற நோயைப் பரப்பியது. 2019இல் வௌவால்களில் இருந்து எறும்பு தின்னி விலங்கிற்குப் பரவி அதில் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி கொவிட்-19 நோயை உலகெங்கும் பரப்பியுள்ளது. சார்ஃச் நோயும் கொவிட்-19 நோயும் உலகெங்கும் சீனாவில் இருந்தே பரவியது. சீனர்களின் உணவுப் பழக்கம் இந்த நோய்களின் பரம்பலுக்கு காரணமாய் இருந்தன என்ற குற்றச் சாட்டுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். முதன் முதலில் ஓர் இனம் தெரியாத நச்சுக்கிருமி பரவ தொடங்கியுள்ளது என்ற இளம் சீன மருத்துவரை சீன அரசு கண்டித்தது மிகப்பெரிய குற்றம்.

1960இல் இருந்து கொரோனா உள்ளது.
கொரோனா நச்சுக்கிருமியை 1960களில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது இருந்த நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது அரசரின் முடி போல இருந்ததால் அதற்கு கொரோனா (Corona in Greek. In English: Crown) என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போதுள்ள நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது ஒரு கடற்கண்ணி வெடி போல தோற்றமளிக்கின்றது. கொரோனா நச்சுக் கிருமிக் குடும்பத்தில் 40இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதாவது 40 வகையான கிருமிகள் உள்ளன. இவை வௌவால், பூனை, காகம் ஆகியவற்றில் கொரோனா உள்ளன. 

உயிரியல் படைக்கலனா?
New Scientist சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை இந்த நச்சுக்கிருமி உயிரியல் படைக்கலன் அல்ல (No, this virus isn’t a bioweapon) என ஆரம்பிக்கின்றது. அக்கட்டுரையின் சில பகுதி:
New diseases have emerged throughout human history, and we have seen two major coronavirus outbreaks in the last two decades: SARS and MERS. So we shouldn’t be surprised by the arrival of the covid-19 virus.
However, rumours on social media suggest that the outbreak was human-made. Some say the virus leaked from a Chinese lab studying coronaviruses. Others suggest the virus was engineered to spread among humans.
Even the most secure laboratories do sometimes have accidents, and a human-engineered pandemic has been identified as a possible risk to our civilisation, but there is no good evidence that either has happened.
Many similar viruses are found in wild bats, and it seems likely that is the origin of this one, probably via an intermediate host. Similarly, we know that both SARS and MERS came from bats, so there is no reason to invoke a laboratory accident.

உண்மைகளை உரிய முறையில் அறிந்து பதிவுகளை இடுவோம். 

Monday 30 March 2020

உலகமயமாதலும் இணைபிரித்தலும் (Decoupling)



மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது.


உலகமயாக்கல்
உலகமயமாக்கல் என்பது நாடுகளின் பொருளாதாரங்களையும் கலாச்சாரங்களையும் அதிகம் ஒன்றிணைத்து உலக வர்த்தகத்தையும் மூலதனப் பரம்பலையும் தொழில்நுட்பப்பகிர்வையும் அதிகரிப்பதாகும். உலகமயமாக்கல் உலகச்சந்தையை திறந்து விட்டது; உலக விநியோக வலையமைப்பை உருவாக்கியது; அடம் சிமித் என்னும் பழம் பெரும் பொருளியலாளரின் உழைப்புப்பகிர்வு, தனித்திறனுருவாக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. உலக நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி 1960-ம் ஆண்டு 12விழுக்காடாக இருந்தது. உலகமயமாக்கலின் பின்னர் அது 30விழுக்காடாக உயர்ந்தது. ஒரு உற்பத்திப் பொருளின் பாகங்கள் பல நாடுகளில் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் ஒரு பொருளின் உற்பத்தி பல நாடுகளில் தங்கியிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை உற்பத்தியைப் பாதிக்கச் செய்கின்றது. கோவிட்-19 தொற்று நோயால் ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது பல நாடுகளின் உற்பத்திகள் பாதிப்புக்கு உள்ளாகின. பல நாடுகள் மூச்சுக்கவசங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தமை உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவையாக குற்றம் சாட்டப்பட்டன. ஜேர்மனி உருவாக்கவிருக்கும் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு மருந்து முழுவதையும் அமெரிக்கா வாங்க முற்பட்ட போது ஜேர்மன் அரசு தலையிட்டு அதைத் தடுத்ததும் உலமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே.

சீனாவும் உலகமயமாதலும்
சீனா தனது பொருளாதாரத்தைச் சூழும் ஆபத்தை 1979இல் உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கினாலும் கணிசமான பொருளாதாரச் சீர்திருத்தத்தை 1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னரே செய்யத் தொடங்கியது. சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது. உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்கிற்கு மேல் வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். சீனாவிற்கான உலக வர்த்தகத்தை மேற்கு நாடுகள் இலகுவாக்கின. அதனால் சீனாவை உலக உற்பத்தி நிறுவனங்கள் தமது பொருத்து நிலையமாக (assembly plant of the world) மாற்றின. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதைப் பாவித்து சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், படைத்துறை ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்தன. 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகத்தின் தொழிற்சாலை என அழைக்கப்பட்டது போல் தற்போது சீனா அழைக்கப்படுகின்றது. சீனாவின் உவாவே நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உணரவைத்தது.


தொழில்நுட்ப ஆபத்து நாடுகளைத் துண்டிக்கின்றது.


2019 டிசம்பரில் அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலர் வில்பர் ரொஸ் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார். இது சீனாவின் உவாவே கைப்பேசி நிறுவனத்தை மட்டும் இலக்காக வைத்துச் சொல்லப்பட்டதல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ள ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகளின் மென்பொருள்வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தரவு செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணையவெளியில் அதிகம் தங்கியிருப்பதும் அவற்றின் மென்பொருட்களிலோ அல்லது வன் பொருட்களிலோ உளவறியும் நச்சுநிரல்கள் (computer virus) இணைக்கப்பட்டிருக்கலாம் எனற அச்சமும் அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளுடனான தொழில்நுட்ப உறவுகள் இணையவெளித் தொடர்புகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. சுருங்கச் சொல்வதாயின் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதையும் அமெரிக்கப் படைத்துறையை சீனா உளவு பார்ப்பதையும் தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களூடான உலகத் தொடர்பை அமெரிக்கா துண்டிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. உலகத்தை ஒரு சந்தையாக்கும் உலகமயமாக்குதலின் நோக்கம் இங்கு பெருமளவு பாதிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் ஒரு அம்சமாக தொழில்நுட்பப் பரம்பல் இருக்கின்றது. நாடுகள் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளல் மூலம் சீனாவும் இரசியாவும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கின்றது. 


உயர்ந்த சீனாவை விழுத்தும் முயற்ச்சி
2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

தன்னிறைவு, உலகமயமாதல், அந்நிய முதலீடு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போர் இரு நாடுகளையும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதை எப்படித் தவிர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டதே. உலகமயமாதல் முதலீட்டாளர்களையும் அவர்களுக்காக பணி புரிவோரையும் உலகெங்கும் பயணிப்பதை அதிகரிக்கச் செய்தது. அதனாலேயே கொரோனாநச்சுக்கிருமி மிக வேகமாக உலகெங்கும் பரவியது. 1970களில் அப்போது மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட வளர்முக நாடுகளில் பொருளாதாரத் தன்னிறைவு என்ற பதம் அதிகம் விரும்பப்பட்டதாக இருந்தது. உலகமயமாக்குதல் அதை இல்லாமல் செய்து “அந்நிய நேரடி முதலீடு” என்ற சொற்றொடர் பலராலும் விரும்பப்பட்டதாக உருவெடுத்தது.

சீன அமெரிக்க இணைப்புச் சங்கிலி
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக ஏற்றுமதியைச் செய்வதால் சீனாவிடம் அதிக வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு உள்ளது. அதை கையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எங்காவது முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கர்கள் சீன உற்பத்தியை மிக மலிவான விலையில் வாங்குகின்றார்கள். உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் அமெரிக்க அரசின் வரிச் சேகரிப்பு குறைந்தது அமெரிக்க அரசின் வருமானம் குறைகின்றது. அதனால் அமெரிக்க அரசு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்காவிற்கு சீனா தன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பை கடனாகக் கொடுக்கத் தொடங்கியது. அப்படி சீனா கொடுக்காவிட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும். குறைந்தால் சீன ஏற்றுமதி குறையும். அமெரிக்காவிற்கு சீனாவின் ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் கடனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலி. இது போலப் பலவகைகளில் உலகமயமாதல் பிரிப்பதற்கு கடினமான சங்கிலிகளால் நாடுகளைப் பிணைத்துள்ளது. இந்த பிணைப்பைப் பற்றியோ அதை துண்டிப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியோ உணரக் கூடிய அறிவுடையவர்களாக எந்த ஒரு முன்னணி நாட்டினதும் ஆட்சியாளர்கள் இல்லை.

உலகமயமாதலை தீவிரமாக முன்னெடுத்த தாராண்மைவாதக் கட்சிகள் பல உலகெங்கும் தோற்கடிக்கப்பட்டு தேசியவாதத் தலைவர்கள் பல முன்னணி நாடுகளில் ஆட்சியில் அமர்ந்துள்ளமையும் உலகமயமாக்குதலைப் பின்தள்ளியுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து “உலகமயமாதலை இணைபிரித்தல்” (Decoupling Globalization) என்ற சொற்றொடர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் அதிகம் பாவிக்கப்படுகின்றது. உலகமயமாக்குதல் உருவாக்கியுள்ள நாடுகளிடையேயான சங்கிலிப் பிணைப்பை துண்டிக்க மகாநதி திரைப்படத்தின் கதாநாயகன் போல தன் கையையே தான் துண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தேசியவாத அரசுத் தலைவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைத் தாங்கக் கூடிய நிலையிலும் இல்லை. உலகத் தலைவர்களிடையே சரியான புரிதலும் தேவையான சகிப்புத் தன்மையும் இல்லை.



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...