Wednesday 29 September 2021

GSP+ வரிச்சலுகையும் இலங்கையும்

  


1971-ம் ஆண்டு நடந்த UNITED NATIONS CONFERENCE ON TRADE AND DEVELOPMENT (UNCTAD) இன் கூட்டதில் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உருவானதுதான் GSP எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Generalized System of Preferences அதாவது பொதுப்படுத்தப்பட்ட சலுகைகளின் முறைமை.

GSP என்பது ஒரு தரப்பான வரிச்சலுகையாகும். இரு தரப்பு வரிச்சலுகையில் இரண்டு நாடுகளும் வரிச்சலுகை வழங்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP என்னும் இறக்குமதி வரிச்சலுகையை வழங்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எந்தவிதமான வரிச்சலுகையையும் Generalized System of Preferences வழங்க வேண்டியதில்லை.

நாடுகளின் வருமான அடிப்படையில் GSP சலுகைகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு(வியட்நாம், இந்தோனேசியா) GSP சலுகையும் பாதிப்படையக்கூடிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்கு GSP+ சலுகையும் வழங்கப்படுகின்றன. இவை தவிர மிகக் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு (பாங்களா தேசம், ஆப்கானிஸ்த்தான்) EBA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Everything but Arms (படைக்கலன்களைத் தவிர எல்லாம்) என்னும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. அச்சலுகைகள் கிடைக்கும் நாடுகள் படைக்கலன்களைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் இறக்குமதி வரியின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். சிறந்த உட்கட்டுமானங்களையும் அரச உதவிகளையும் கொண்ட சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளைக் குறைத்து மற்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியை அதிகரிப்பதே இச் சலுகைகளின் உள் நோக்கம் எனவும் கருதப்படுகின்றது.

ஆர்மினியா, பொலிவியா, கேப் வேர்டா, கிரிகிஸ்த்தான், மங்கோலியா, பாக்கிஸ்த்தான், மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு GSP+ சலுகை வழங்கப்படுகின்றன. ஆப்கானிஸ்த்தான், பங்களாதேசம் உள்ளிட்ட 49 நாடுகளுக்கு EBA வரிச்சலுகை வழங்கப்படுகின்றன.

GSP என்னும் இறக்குமதி வரிச்சலுகையின் நோக்கங்கள்:

1. வளரும் நாடுகளின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்

2. வறுமையைக் குறைத்தல்

2. பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்

3. நல்லாட்சியை ஏற்படுத்தல்

இலங்கைக்கான GSP+ 2017 மே மாதம் வழங்கப்பட்டது. அது 2023வரை நடைமுறையில் இருக்கும். அதனால் இலங்கை $500மில்லியன் பெறுமதியான நன்மையைப் பெற்றுள்ளது.

 

GSP வரிச்சலுகையின் நிபந்தனைகள்

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் போன்றவற்றில் பன்னாட்டு மரபொழுங்குகளைப்(conventions) பேணவேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இதற்கென 27 பன்னாட்டு மரபொழுங்குகளைப் பட்டியலிட்டுள்ளது. இதன் உள் நோக்கம் விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கை (Rule Based International Order) பேணுவதாகும்.

ஐரோப்பிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு

2021 ஜூன் மாதம் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளை மீறுவதாகவும் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டும் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் முடிவு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றம் எடுத்தது. அதன் அடிப்படையில் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியம் ஐவர் கொண்ட ஒரு குழுவை இலங்கைக்கு 2021 செப்டம்பர் 27-ம் திகதி அனுப்பியுள்ளது. அவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து இலங்கை அரச அதிபர், உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோரைச் சந்திக்கின்றார்கள். பின்னர் அவரகள் தமது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றத்திற்கு சமர்பிப்பர்.  மனித உரிமைக் கண்காணிப்பகம் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுத்துள்ளது.

GSP+வரிச்சலுகை ஓர் அரசுறவியல் கருவியா?

GSP+வரிச்சலுகை பெறும் துறைகளில் நான்கு இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். அது இலங்கையின் வேலைவாய்ப்பில் 15% ஆகும். அதில் 90% பெண்களாகும். 2010-ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது இலங்கைக்கான GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. குடிசார் உரிமைகள், அரசியல் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சித்திரவதை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறீசேன அதிபராக இருந்த போது மீளவும் வழங்கப்பட்டது. GSP+வரிச்சலுகை ஒரு அரசுறவியல் கருவியாகப் பாவிக்கப்படுகின்றது என கருத இடமுண்டு.

Soft Equity Research என்ற நிறுவனம் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்படவிருக்கும் விளைவுகள் பற்றிச் செய்த ஆய்வின் முடிவுகள்:

1. GSP+ ஏற்றுமதிச் செயற்பாட்டை அதிகரித்தது

2. GSP+ஐ இழப்பது பரந்த அளவிலான வெற்றிடத்தை ஏற்படுத்தாது.

3. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வருங்கால மேலதிக ஏற்றுமதியைப் பாதிக்கலாம்.

4. சிறு உற்பத்தியாளர்களின் இலாப வரம்பைக் குறைக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஆகக் கூடிய GSP+வரிச்சலுகை 9.4% ஆகும். இலங்கையினுடைய ரூபாவின் பெறுமதி அண்மைக் காலங்களாக 9.4% இலும் அதிக மாக தேய்மானம் அடைந்த நிலையில் டொலரின் மதிப்பில் இலங்கையில் உற்பத்திச் செலவு குறைந்துள்ளமையால் GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்படும் இழப்பு ஏற்கனவே ஈடு செய்யப்பட்டு விட்டது எனச் சொல்லலாம்.

GSP+வரிச்சலுகை நிறுத்தப்படும் போது இலங்கையின் ஏற்றுமதி பாதிக்கப்படும். ஏற்றுமதி குறையும் போது இலங்கையின் ரூபாவின் பெறுமதி குறைவடையும். அந்த வகையில் GSP+வரிச்சலுகை நிறுத்தப்படும் போது ஏற்படும் இழப்பீடு ஈடு செய்யப்படும். வெளிநாட்டு கொள்வனவாளர்களின் கொள்வனவு விலையில் பெரும் பாதிப்பு ஏற்படாது. 01/01/2019 ஒரு அமெரிக்க டொலர் ரூபா 180.66 ஆக இருந்ட்தது. 31/08/2021இல் அது ரூபா 198.98 ஆக இருக்கின்றது. இக்காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9%இற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

GSP+வரிச்சலுகை பெறும் இலங்கை உற்பத்தியாளர்கள் GSP+வரிச்சலுகை நிறுத்தப்படுவதையிட்டு பெரிதும் கவலையடைந்துள்ளார்கள். Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யும் Boteju Industriesஇன் உரிமையாளர் Janaka Boteju GSP+வரிச்சலுகை நிறுத்தப்படுவது எமது நிறுவனத்திற்கு இறப்பு வீடு (It is like a funeral for us) போன்றது என்றார். தற்போது இலங்கை மக்கள் எதிர் கொள்ளும் நெருக்கடியை மனதில் கொண்டு உடனடியாக GSP+வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தாமல் கால அவகாசம் வழங்க வாய்ப்புண்டு. 2008-ம் ஆண்டு இலங்கைக்கான GSP+வரிச்சலுகையை நிறுத்தும் முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்தது. அது Marks & Spencerஇன் இரகசிய நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. 

GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டவுடன் இலங்கையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உடனடியாக தமது உற்பத்தியை தூக்கிக் கொண்டு போய் பங்களாதேசத்தில் வைத்துவிடும் என்பது போல் கருத்துத் தெரிவிப்பது சுத்த அபத்தமாகும். GSP+வரிச்சலுகை நிறுத்தினால் ஏற்படும் இழப்பை தமது உற்பத்தி செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் சமாளிக்கலாம். மூலப்பொருள்கள் வழங்குவோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களிடம் விலைக் குறைப்பைக் கேட்கலாம். ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கலாம். உற்பத்தி திறனை அபிவிருத்தி செய்யலாம். 2019 நவம்பரில் இலங்கை அரசு தனது வரி விதிப்பை குறைத்துள்ளது. 2010-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் GSP+வரிச்சலுகையை நிறுத்திய போது அதில் தொடர்புடைய எத்தனை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன?

Tuesday 28 September 2021

Evergrandeயின் வீழ்ச்சி சீனாவை வீழ்த்துமா?

  


ஒரு நாட்டில் உள்ள 300 பில்லியன் டொலர் கடன் பட்ட ஒரு தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் அது ஒரு பூகம்பமாக அமையும். ஆனால் சீனாவில் அது நிகழப்போவதில்லை. சீன அரசு தனது நாட்டு பொருளாதாரத்தையும் தனியார் நிறுவனங்களையும் தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. Evergrande Real Estate சீனாவில் இரண்டாவது பெரிய மெய்ப்பேட்டை(Real Estate) நிறுவனமாகும். உலகிலேயே அதிக கடன் பட்டுள்ள நிறுவனம் அதுவாகும். சீனாவில் 280இற்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300இற்கும் அதிகமான தொடர் மாடிகளை அது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் பிரபல காற்பந்தாட்டுக் கழகத்தையும் அது வாங்கி வைத்துள்ளது. Evergrande Real Estate இன் உரிமையாளர் சூ ஜியாயின் $10.6பில்லியன் உடமையுள்ள செல்வந்தர்.

இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சீனர்களுக்கு பாதிப்பு

1.6 மில்லியன் சீனர்கள் Evergrandeஇடமிருந்து வீடுகளை வாங்குவதற்காக முற்பணம் செலுத்தியுள்ளனர். 80,000 சீனர்கள் அதில் முதலீடு செய்துள்ளனர். சொந்த வீடு என்பது சீன நடுத்தர வர்க்க மக்களின் பெரும் கனவாகும். Evergrandeயின் நிதி நெருக்கடியில் சீன அரசு துரிதமாகச் செயற்படாமல் நிதானமாக நிற்கின்றது. Evergrandeஇன் உரிமையாளரகள், முதலீட்டாளரகள், கடன் கொடுத்தவர்கள் உரிய பாடம் கற்கட்டும் என சீன அரசு காத்திருக்கின்றது. அதேவேளை தமது சேமிப்புக்களை முதலீடு செய்த சேமிப்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சீன அரசு செயற்படுகின்றது. அவர்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டும் அல்லது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் செய்திகளை சீன அரசு தடை செய்து வருகின்றது.

Evergrande தேய்ந்த வரலாறு

2017இல் Evergrande தனது கடனில் பெருமளவை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதன் கடன் அதன் சொத்தின் பெறுமதியில் 240%ஆக இருந்தது. அதை 70%ஆகக் குறைப்பதாக Evergrande முடிவு செய்தது. 2018இல் ஐரோப்பிய நடுவண் வங்கி Evergrande கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நிறுவனம் என்றது.  2020 மார்ச்சில் தனது கடன் பளுவை ஆண்டு தோறும் $23.3 பில்லியனால் (150பில்லியன் யூவானால்) குறைப்பதாக அறிவித்தது. Evergrande தனது கட்டிட விலைகளில் 30%ஐக் குறைத்தது. 2020 ஒக்டோபரில் Evergrande ஹொங் கொங் பங்குச் சந்தையில் தனது இரண்டாம் நிலைப் பங்குகளை விற்று $555மில்லியன்களைத் திரட்டியது. 2020 நவம்பரில் மேலும் தனது பங்குகளை விற்று $1.8பில்லியனைத் திரட்டியது. 2021 ஜூன் மாதம் Fitch நிறுவனம் Evergrandeஐ B+இலிருந்து Bஆக தரம் தாழ்த்தியது. 2021 ஜூன் முதல் ஓகஸ்ட் வரை Evergrandeயின் மாதாந்த விற்பனை அரைவாசியாகக் குறைந்தது.

Evergrande பற்றிய உண்மைகளை வெளியட்டவர்க்கு தண்டனை

2012-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதிச் சந்தைப் பந்தயக்காரரான (Short Seller) Andrew Left என்பவர் Evergrande பட்டகடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாது என எச்சரித்ததுடன் அது ஆறுவிதமான கணக்குப் பதிவு முறைகேடுகளைச் செய்து தனது பாரிய கடன்களை மறைக்கின்றது என்றார். ஹொங் கொங்கின் நிதிச்சந்தையை நெறிப்படுத்தும் நிறுவனமான Securities and Futures Commission (SFC) Andrew Left பொய்ச் செய்திகளைப் பரப்புகின்றார் எனக் குற்றம்ம் சாட்டி அவரிடம் இருந்து HK$1.6மில்லியனைத் தண்டப்பணமாக அறவிட்டது. Moody என்கின்ற அமெரிக்காவின் கடன்படுதிறன் தரப்படுத்தும் நிறுவனம் Evergrandeயைப் பற்றி ஆறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது அதன் மீதும் ஹொங் கொங் Securities and Futures Commission  குற்றம்சுமத்தி HK$1.4மில்லியன் தண்டமாக அறவிட்டது.

கட்டிடக் குமிழி 

ஒரு நாட்டில் கட்டிடங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அவற்றின் விலை அதிகரிக்கும். அதன் மூலம் இலாமீட்ட பல முதலீட்டாளர்கள் கடன்பட்டு கட்டிடங்களைக் கட்டுவாரகள், அளவிற்கு அதிகமாகக் கடன்பட்டு தேவைக்கு அதிகமான கட்டிடங்களைக் கட்டும் போது கட்டிய கட்டிடங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் அவற்றைக் கட்டியவர்கள் தாங்கள் பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் கடன் கொடுத்த வங்கிகள் நிதிநெருக்கடிக்கு உள்ளாகும். 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்த போது சீனாவையும் அது பாதித்தது. அதனால் தனது பொருளாதார வளர்ச்சி குறையாமல் இருக்க சீன அரசு தனது வங்கிகளுக்கும் மாகாண அரசுகளுக்கும் கட்டிடத்துறைக்கும் உட்கட்டுமானத் துறைக்கும் அதிக கடன் வழங்கும் படி அறிவுறுத்தியது. பல தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கடன் பட்டு கட்டிடங்களைக் கட்டின. தேவைக்கு அதிகமாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதில் Evergrande மிக அதிகமான கட்டிடங்களைக் கட்டியது. சீனாவெங்கும் பல தொடர் மாடி வீடுகளைக் கொண்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருந்து நகரங்களின் அழகைக் கெடுக்கின்றன. அப்படிப்பட்ட பல கட்டிடங்கள் வெடிவைத்து தகர்கப்படுவதும் சீனாவில் நடந்தன. சீனாவின் கட்டுமானத் துறை பற்றிய பிரச்சனை பற்றி அறிய கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்

சீனாவின் கட்டுமானப் பிரச்சனை

சீனாப் பொருளாதரத்தை Evergrande பாதிக்குமா?

சீனர்கள் தமது நாட்டில் உள்ள நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன என்றவுடன் தமது முதலீடுகளை தமது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில் சீன அரசு மூலதன வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வைஹ்ட்திருக்கின்றது. அதனால் 1997-1998இல் ஆசிய நாடுகளில் நடந்த நிதி நெருக்கடி போல் சீனாவில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் Goldman Sach என்ற அமெரிக்க நிறுவனம் சீனாவின் மெய்ப்பேட்டை(Real Estate) துறையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வீழ்ச்சி சீனாவின் பொருளாதார வளர்ச்சியை 1.4% 4.5% வரை குறைக்கும் என எதிர்வு கூறியுள்ளது.



ஒஸ்ரேலியா பாதிக்கப்படுமா?

1980களில் இருந்து சீனா தொடர்ச்சியாக 40ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியைடையும் போது ஒஸ்ரேலியா 1992இல் இருந்து தொடர்ச்சியாக பொருளாதார வளச்சியை அடைந்து வருகின்றது. சீனாவின் கட்டுமானத்துறைக்கு தேவையான இரும்புத்தாது ஒஸ்ரேலியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இரும்புத் தாதின் விலை 2021 மேயில் உச்சத்தைத் (ஒரு தொன் $240) தொட்டு பின்னர் கடும் வீழ்ச்சியைக் கண்டது. 2021 செப்டம்பர் 27-ம் திகதி ஒரு தொன் இரும்புத்தாதின் விலை $109. சீனா தனது உட்கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தும் போது ஒஸ்ரேலியாவின் சீனாவிற்கான ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் அமெரிக்கா தனது உட்கட்டுமானங்களில் பெருமளவு செலவு செய்யவிருப்பதால் அமெரிக்காவிற்கான ஒஸ்ரேலியாவின் இரும்புத்தாது ஏற்றுமதி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதிகரிக்கும்.

  •  சீனாவின் கட்டிடத்துறை நெருக்கடி உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் பாதுகாக்க (Ring Fence) முடியும் என்ற கருத்து பொருளியலாளர்களால் பரவலாக முன் வைக்கப்படுகின்றது.

அயர்லாந்தும் ஸ்பெயிலும் 2008இன் பின்னர் நிதி நெருக்கடிக்கு உள்ளான போது அவற்றின் கட்டிடத்துறை உற்பத்தி மொத்த தேசிய உற்பத்தியில் 29விழுக்காடாக இருந்தது. தற்போது சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் 29விழுக்காடு கட்டிடத்துறையில் இருந்து வருகின்றது. ஆனால் சீனா தனித்துவமானது. சீனா Evergrande Real Estateஇன் முதலீட்டாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியைச் செய்யலாம். இரண்டு மில்லியனிலும் அதிகமான சீனர்களில் அதிருப்தியை சீனா சம்பாதிக்க விரும்பாது. ஆனால் சீனக் கட்டிடத்துறை பாதிப்படைவதை சீனா தவிர்க்க விரும்பாது. சீனாவில் வெற்றிடமாக இருக்கும் கட்டிடங்களை விரைவில் நிரப்பக் கூடியவகையில் சீனப் பொருளாதாரம் வளர்வதற்கான அறிகுறிகள் இல்லை. சீனா தற்போது பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க பொருளாதாரச் சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது.  சீன அரசின் தற்போதைய தலையாய நோக்கம் பொதுச் செழுமை எனப்படும் எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் என்பதே. சீனாவின் தற்போதைய பொருளாதார நோக்கங்கள் பற்றி அறிய கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:

https://www.veltharma.com/2021/09/blog-post.html


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...