Friday 25 October 2013

பொதுநலவாய மாநாடு, ஜெயலலிதாவின் தீர்மானம், சிபா ஒப்பந்தம்

இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் காரணம். அதன் விளைவாக மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா தான் உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு தமிழர்களைக் கொல்ல உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.

கூலி கிடைக்காத சில்லறைக் கைக்கூலி.
 போரின்போதும் போருக்குப் பின்னரும் இந்தியா இலங்கையின் ஒரு ரசதந்திரக் கைக்கூலி போலவே செயற்பட்டு வருகின்றது. கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் பணத்தையும் இலங்கைக்கு வாரி வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. சீனா தமிழர்களுக்கு எதிராக நேரடியாக ஒரு நாளும் செயற்பட்டதுமில்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுமல்ல. ஆனால் இவ்வளவும் செய்த சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் கிடைக்க வில்லை.

இலங்கை இந்திய சீபா ஒப்பந்தம்
சீபா ஒப்பந்தம் எனப்படும் Comprehensive Economic Partnership Agreement (CEPA) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்யப்பட வேண்டும் என கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா இலங்கையை வேண்டி வருகின்றது. 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீபா பேச்சுவார்த்தை 2008-ம் ஆண்டு கடினமான பதின் மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் ஒப்பந்தம் வரையப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ஒழித்துக் கட்டிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் படலாம் என இழுத்தடித்து வந்த இலங்கை 2012இல் அப்படி ஒரு ஒப்பந்தம் செய்யத் தங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டது. இலங்கையின் சில தொழிற்துறையினர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீபா எனப்படும் பரந்த பொருளாதார பங்காண்மை ஒப்பந்தம் தமக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியா தமக்குத் திறந்து விடப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கையை சீபாவிற்கு சம்மதிக்க வைக்க தனது சலுகைகளை முக்கியமாக ஆடை உற்பத்தித் தொழிலில் அதிகரித்தது. ஏற்கனவே சுங்கவரியின்றி மூன்று மில்லியன் துண்டுகளை இலங்கை ஏற்றுமதி செய்யலாம் என்றிருந்தது. இதை இந்தியா இரட்டிப்பாக்கியதுடன் மேலும் பல மில்லியன் துண்டுகளை குறைந்த சுங்கவரியுடன் இலங்கை ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் வெறுப்பை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச சிபாவில் இலங்கை ஒப்பமிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா தனது நாட்டு வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்த ஒப்பத்தத்தை நிர்ப்பந்தித்தது என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் என்கிறார். இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கை தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு சமம் என்று சிங்களத் தீவிரவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது.

 தமிழர்கள் முதுகில் இந்தியாவின் சவாரி
1987இல் இலங்கையில் அமெரிக்கா தனது பிடியை இறுக்கிய போது தமிழர்களின் முதுகில் சவாரி செய்து இந்தியா அதைத் தடுத்து நிறுத்தியது. இப்போதும் இலங்கையில் இந்தியா தனது பொருளாதார நலன்களை விருத்தி செய்ய தமிழர்களின் பிரச்சனையை வைத்தே இலங்கையை தன் எண்ணப்படி நடக்க வைக்க முயல்கிறது.சிபா ஒப்பந்தம் கைச்சாத்திடும்படி இலங்கையை வற்புறுத்தும் ஒரு வாய்ப்பாக இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இந்தியா திரைமறைவில் செயடுகின்றதா என்ற ஐயம் நியாயமானதே. இதற்காக இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு உத்தியே தமிழ்நாட்டுச் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்க்க முடியும். இதற்கான தூண்டுதல் ஜெயலலிதாவிற்குத் தெரியாமலே இந்திய உளவுத்துறையிடமிருந்து வந்திருக்கலாம். சீபா ஒப்பந்தத்தை இலங்கையை ஒப்பமிடச் செய்ய இந்தியாவிற்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம் பொதுநலவாய மாநாடுதான். ஏற்கனவே இதைச் சாட்டாக வைத்து சம்பூரில் தமிழர் வாழ்ந்த இடங்களை இந்தியா அபகரித்துக் கொண்டது. இந்திய தலைமை அமைச்சர் இலங்கையில் நடக்கும் மாநாட்டுக்கு போகமாட்டார் என்ற ஒரு செய்தி திட்டமிட்டு 14-10-2013-ம் திகதி திட்டமிட்டு வெளிவிடப்பட்டது. இச் செய்திய சென்னை விகடன் முதல் பிரித்தானியக் கார்டியன் வரை வெளிவிட்டது. ஆனால் இலங்கை சீபாவைப் பொறுத்தவரை எதற்கும் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

 மானம் கெட்ட இந்தியாவி இலங்கை மீண்டும் மிரட்டுகிறது.
இந்தியத் தலைமை அமைச்சர் இதுவரை இலங்கை மாநாட்டுக்குச் செல்வதாக எந்த முடிவும் எடுக்காத நிலையில் புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசகம் மன் மோஹன் சிங் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு வராவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்றார். இது அப்பட்டமான மிரட்டல். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை இதை எழுதும் வரை எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. சில தமிழ் அரசியல்வாதிகள் மட்ட்டும் கருத்துத் தெரிவித்துள்ளனர். வட இந்திய அரசியல்வாதிகள் இதுபற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 இலங்கைக்கு போவதா இல்லையா என்பது தொடர்பாக இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் இருப்பது பொதுநலவாய நாடுகளில் சிலவற்றை விசனப் படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தயக்கம் இலங்கைக்கு இந்தியா தேவையில்லாமல் அச்சப் படுகிறது என்பதை உறுதி செய்கிறது.

சீனாவுடன் இலங்கையின் FTA ஒப்பந்தம்.
இந்தியாவுடன் சீபா ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை என பசில் ராஜபக்ச 2013 ஜூலை மாதம் அடித்துச் சொல்லிவிட்டார். ஆனால் இலங்கை சீனாவுடன் சீபாவை ஒத்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை சீனாவுடன் செய்து கொண்டது. 

Thursday 24 October 2013

சாதனை படைத்த அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானம்

மேம்படுத்தப்பட்ட சாம்பல் நிறக் கழுகு (Improved Gray Eagle) என்னும் பெயருடைய ஆளில்லாப் போர் விமானம் தொடர்ந்து 45.3 மணித்தியாலங்கள் பறந்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிறுவனமான General Atomics Aeronautical Systems இந்த சாம்பல் நிறக் கழுகை உருவாக்கியுள்ளது.

சாம்பல் நிறக் கழுகு நடு உயரப் பறப்பும் நீண்ட தூரம் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானமாகும். A Medium-Altitude Long-Endurance (MALE) . 1.7கனமுடைய டீசல் பிஸ்டன் பொறியில் இது இயங்குகிறது. 25ஆயிரம் அடிகள்(7600மீ) உயரத்தில் பறக்கக் கூடியது.

நிலத்தில் நகரும் பொருட்களை துல்லியமாக இனம் காணும் கதுவி (Synthetic Aperture Radar) பொருத்தக் கூடிய வகையில் சாம்பல் நிறக் கழுகு ஆளில்லாப் போர் விமானத்தின் மூக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. இது எண்ணூறு இறாத்தல்(360கிலோ) எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியது.

சாம்பல் நிறக் கழுகு ஆளில்லாப் போர் விமானம் AGM-114 Hellfire missiles என்னும் ஏவுகணைகளையும் GBU-44/B Viper Strike guided bombs என்னும் வழிகாட்டப்பட்டுச் செல்லும் குண்டுகளையும் தாங்கிச் சென்று தாக்கக் கூடியவை.


The AGM-114 Hellfire ஏவுகணைகள் தரையிலிருந்து தரைக்கும் விமானங்களில் இருந்து தரைக்கும் ஏவக் கூடியவை (ASM). பலதரப்பட்ட இலக்குகளையும் இவை தாக்கி அழிக்கக் கூடியவை.

GBU-44/B Viper Strike guided bombs என்னும் குண்டுகளை GPSமூலமாகவும் laser-guidance மூலமாகவும் வழிகாட்டி இலக்குகளைத் தாக்கலாம்.

ஆளில்லாப் போர்விமானங்களின் நடவடிக்கை
அமெரிக்கா தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையான இசுலாமியப் போராளிகளைக் கொல்லும் நடவடிக்கைகளுக்கு ஆளில்லாப் போர் விமானங்களில் பெரிதும் தங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல அது தனது எதிர்காலப் போர் நடவடிக்கைகளுக்கும் போர் முனை உளவு பார்த்தல் நடவடிக்கைகளுக்கும் ஆளில்லாப் போர் விமானங்களை நம்பியிருக்கிறது. 

Wednesday 23 October 2013

மேற்கு நாடுகளின் பரப்புரைக் கருவியாக மலாலா

அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானியப் 16 வயது பெண்ணான மலாலாவை அவதானித்து வருபவர்கள் அவர் ஒரு திறமை மிக்கவர் என்பதையும் அவருக்கு அளவுக்கு அதிகமாக மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது என்பதையும் அவர் கொடுக்கும் பேட்டிகளில் அவரது வாதத் திறமை நம்ப முடியானதாக இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது.

திட்டமிட்டு உருவாக்கப்படுகிறாரா?
நாளுக்கு நாள் மலாலாவின் பேட்டி கொடுக்கும் திறமை வளர்ந்து கொண்டு செல்லவதைப் பார்க்கும் போது அவர் நன்கு திட்டமிட்டுப் பயிற்றுவிக்கப்படுகின்றார் என்பது தெளிவாகின்றது. அரை நன்கு பயிற்றுவிப்பதும் அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் அவர் ஒரு பரப்புரைக்காகப் பயன்படுத்தப் படுகின்றாரா என்ற ஐயத்தை எழுப்புகிறது. மலாலா அடிக்கடி வலியுறுத்துவது பெண்களின் கல்வியையே. தலிபான், அல் கெய்தா போன்ற இசுலாமியப் போராளிக் குழுக்களுக்கும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு மிதவாத அமைப்புக்களுக்கும் பலவீனமான மையமாக அவற்றின் பெண்களின் கல்வி தொடர்பான கொள்கை இருக்கிறது. அந்தப் பலவீனமான மையத்தில் தாக்க மலாலா பாவிக்கப்படுகின்றாரா என்ற ஐயம் நியாயமானதே. பாக்கிஸ்தானின் ஆப்கானிஸ்த்தானுடனான எல்லைப் பிரதேசத்தில் சுவட் பள்ளத்தாக்கில் பிறந்தவர் மலாலா யூசுப்சாஜ்.

நபிகள் பெண்களின் கல்விக்கு எதிரானவர் அல்லர்.
இறை தூதுவர் முஹம்மது கல்விக்கோ அல்லது பெண்களின் கல்விக்கோ எதிரானவர் அல்லர் என்றும் அவரது குர் ஆன் வாசி என்ற கட்டளையுடன் ஆரம்பமாகிறது என்றும் அந்தக் கட்டளை ஆண்களுக்கு மட்டுமல்ல என்றும் சொல்லப்படுகின்றது. அவரின் முதல் மனைவி தனியாக ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படி இருக்கையில் அவர் பெண் உரிமைக்கு எதிராகப் போதித்து இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.

மலாலாவிற்கு மட்டும் மனிதாபிபானமா?
பாக்கிஸ்த்தானின் வாரிஸ்த்தான் பகுதியில் இரு இனக் குழுமங்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு நிலப் பிணக்கைத் தீர்த்து வைக்க ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அது இசுலாமியத் தீவிரவாதிகளின் கூட்டம் எனக் கருதி அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அவர்கள் மீது குண்டுகளை வீசின. அப்போது பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். காயப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்க எந்த ஒரு மேற்கு நாடும் முயலவில்லை. ஆனால் மலாலாவிற்கு மட்டும் சிறந்த சேவை செய்தது பிரித்தானியா

பிபிசியில் ஆரம்பித்த மலாலா
மலாலாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்தும் அவர்மீது சூடு விழுந்த பின்னர் ஆரம்பித்தது அல்ல. அவர் 11வயதாக இருக்கும் போதே 2009-ம் ஆண்டு பிபிசியின் உருது மொழிப் பிரிவின் பதிவுப் பகுதியில் (Blog) தலிபான்களின் கீழ் வாழ்க்கை என்பது பற்றி எழுதி வந்தார். இதனால் பிரபலமடைந்த மலாலா பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரித்தது. இதனால் பிபிசியில் எழுதியவரை இனம் கண்டு கொண்ட தலிபான்கள் மலாலாவையும் அவரது இடதுசாரிக் கொள்கையுடைய தந்தையையும் தமது எதிரிகள் பட்டியிலில் இணைத்துக் கொண்டனர். பின்னர் 2012-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மலாலா பேருந்தில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் தலையில் சுடப்பட்டார். பின்னர் அவர் பிரித்தானிய பெர்மின்ஹம் நகரில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிழைக்கச் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் கல்விக்கான சிறப்புத் தூதுவரான முன்னாள் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் உலகில் எல்லோருக்கும் கல்வி என்ற பரப்புரையை ஆரம்பித்தார்.

பிரபல புள்ளியானார் மலாலா.
மலாலா அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகையின் உலகில் செல்வாககுச் செலுத்தக் கூடிய 100 புள்ளிகளுள் ஒருவராக இணைக்கபட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். பல அமைப்புக்கள் அவருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கின. மேற்கு நாடுகளின் எல்ல முன்னணி ஊடகங்களும் அவரைப் பேட்டி கண்டன. மலாலாவின் ஓவியங்கள் பிரபல ஓவியர்களால் வரையப்பட்டன. நோபல் பரிசுக்கு மலாலா பரிந்துரை செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். உலக வங்கியில் உரையாற்றினார். பிரித்தானிய அரசியின் அரண்மனைக்குச் சென்று அரசியைச் சந்தித்தார். வெள்ளை மாளிகை சென்று பராக் ஒபாமாவைச் சந்தித்தார். அவர் பல மில்லியன் பிரித்தானியப் பவுண்களைப் பெற்றுக் கொண்டு நான்தான் மலாலா என்ற  புத்தகமும் எழுதினார். இவ்வளவும் ஒரு 16வயதுப்பெண்ணால் ஓர் ஆண்டுகளுக்குள் சாதிக்க முடிந்தது.

பாக்கிஸ்த்தானில் நாளுக்கு நாள் மலாலா பிரபலமடைந்து வருகின்றார். இந்திய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த மலாலா தான் பாக்கிஸ்த்தானின் தலைமை அமைச்சராக வர விரும்புவதாகவும் தான் இந்திய பாக்கிஸ்த்தானிய உறவை மேம்படுத்துவார் எனவும் சொன்னார். தலைமை அமைச்சராக தனது முக்கிய பணி பெண்களுக்கான கல்வியாகவே இருக்கும் என்கிறார். ஆனாலும் மலாலாவிற்கு மேற்கு நாடுகளின் அரசுகளும் ஊடகங்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பல பாக்கிஸ்த்தானியர்களும் மற்றும் உலகெங்கும் வாழும் இசுலாமியர்களும் ஐயத்துடன் பார்க்கின்றனர். மலாலாவை இசுலாமிய மதத்திற்கு எதிரான பரப்புரைக் கருவியாக்கி விட்டனரா என்ற கேள்வி எழுந்து விட்டது. ஆனால் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு பரப்புரைக் கருவியாக அவர் பார்க்கப்படுகின்றார். தான் சுடப்பட்டவுடன் பல பெண்கள் நான்தான் மலாலா என்ற பதாகையுடன் பாக்கிஸ்த்தான் தெருவில் நின்றார்கள் ஆனால் நான்தான் தலிபான் என்ற பதாகையுடன் யாரும் தெருவில் இறங்கவில்லை என்கின்றார் மலாலா. ஒரு பாக்கிஸ்த்தானிய ஊடகர் மலாலா உலகிலேயே மிகப்பெரிய மக்கள் தொடர்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றார் என்றார். இன்னொரு இந்திய ஊடகர் மலாலாவை தகாத வார்த்தைகளால் விமர்சித்து பாக்கிஸ்த்தான் போன்ற ஒரு ஊழல் நிறைந்த நாட்டுக்கு ஊழலில் உருவான மலாலா தலைமை அமைச்சராக வருவதற்கு எல்லாத் தகுதிகளும் உடையவர் என்றார். பாக்கிஸ்த்தான், பங்களாதேசம், இந்தியா போன்ற பல நாடுகளில் உள்ள படித்த இடதுசாரிக் கொள்கையுடையவர்களும் மலாலாவை வெறுக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் மலாலாவை ஏகாதிபத்தியவாதிகளின் பகடைக்காயாகப் பார்க்கின்றனர்.

மலாலா பற்றிக் கட்டிய கதையும் முட்டிக் கொண்ட்ட பிரெஸ் டிவியும்
மலாலாவை சிஐஏ பாவிக்கின்றது என்ற செய்தி பாக்கிஸ்த்தானில் தீவிரமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் போது பாக்கிஸ்த்தானின் பிரபல ஆங்கிலப்பத்திரிகையான் டௌன் ஒரு மலாலா பற்றிய ஒரு கதையை வெளிவிட்டது. அக்கதையின் படி : மலாலா ஒரு ஹங்கேரியில் ஒரு கிருத்தவ மடத்தில் பிறந்த கிருத்தவர். அவரை அவரது தந்தை தத்து எடுத்தார். மலாலா சிறு வயதாக இருக்கும் போது காதுக் குத்துக்காக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மலாலாவின் காதுக் குடுமியை(Ear wax) ஒரு குப்பியில் எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவரது பொழுது போக்கு தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களின் காதுக் குடுமியைச் சேகரிப்ப்து. மலாலாவின் காதுக் குடுமியில் செய்த டி.என்.ஏ பரிசோதனையின் படி அவர் ஒரு கிழக்கு ஐரோப்பியர் என்பது உறுதியாகி விட்டது. அவரைச் சுட்டது தலிபான் அல்ல சிஐஏயே. இப்படிப் போனது அந்தக் கதை. இதை உண்மை என நம்பிய ஈரானின் பிரெஸ் டிவி அதைப் பெரிய செய்தியாக்கியத். பின்னர் டௌன் பத்திரிகை தனது கதையை "யாவும் கற்பனை" எனச் சொன்னது. ஆனால் மலாலாவிற்கு எதிரான பரப்புரையைத் திசைதிருப்பவே டௌன் பத்திரிகை இப்படிச் செய்தது எனவும் விவாதிக்கலாம்.

அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியவற்றிற்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பரப்புரை போதியதாக இல்லை. மலாலா அடுத்த பெனாஷிர் பூட்டோ எனவும் விமர்சிக்கப்படுகிறார். பெனாஷிரைப் போலவே மலாலாவின் வாழ்க்கைப் பயணம் ஆபத்து மிக்கதாகவும்  சாதனை நிறைந்ததாகவும் அமையப்போகிறது. 

Tuesday 22 October 2013

அமெரிக்காவின் பிரச்சனை: ஆப்கானிஸ்த்தானில் இருந்து மீசை மண்படாத மாதிரி விலகுவது!

2014-ம் ஆண்டு நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறுவதா அல்லது ஒரு குறித்த தொகைப் படைகளை தொடர்ந்து அங்கு இருக்க விட்டு எஞ்சிவர்கள் வெளியேறுவதா என்ற இழுபடும் பிரச்சனை இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது நேட்டோ நாடுகளின் படையினர் 52,000 ஆப்கானில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு பெரும் விரக்தியைக் கொடுக்கும் போராக 12 ஆண்டுகள் இழுபடும் ஆப்கான் போர் இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்தும் கந்தகார் நகரில் இருந்தும் தலிபான்களையும் அல் கெய்தாவையும் விரட்டிய நேட்டோப் படைகள் இன்னும் அவற்றை ஒழித்துக் கட்டவில்லை. ஆப்கான் அரசின் மொத்தச் செல்வில் 80% மேற்கு நாடுகளால் வழங்கப்படும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது.

2014-ம் ஆண்டு நேட்டோப் படையினர் வெளியேறிய பின்னர் ஆண்டு தோறும் ஆப்கான் படைத்துறையையும் காவற்துறையையும் மேம்படுத்த நான்கு பில்லியன் டொலர்களையும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் நான்கு பில்லியன் டொலர்களையும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளன.

2014-ம் ஆண்டு இறுதியில் நேட்டோப்படைகள் வெளியேறிய பின்னர் எஞ்சியிருக்கும் படையினர் ஆப்கானிஸ்த்தானிய சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என ஆப்கானிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். அப்படியில்லாமல் அவர்கள் அவர்களது தாய் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என நேட்டோப் படையினர் அடம் பிடிக்கிறார்கள். இந்தப் பிரச்சனையை ஆப்கானிஸ்த்தானின் பாராளமன்றம் தீர்மானிக்கட்டும் என்றார் ஆப்கானிஸ்த்தானின் அதிபர் ஹமீத் ஹர்ஜாய். ஆனால் பாராளமன்றம் இது தொடர்பாக முடிவெடுக்காமல் இழுத்தடிக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு இந்த 2013 ஒக்டோபர் மாதம் 31-ம் திகதிக்குள் தீர்வு காணவேண்டும் அல்லது அமெரிக்கப் படைகள் முற்றாக ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிவிடும் என்றும் ஆப்கானிஸ்த்தானிற்கு எந்தவித நிதி உதவிகள் வழங்கப்படாது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தப் பிரச்சனை உடன்பாடின்றித் தொடர்ந்து இழுபடுகின்றது. இதே பிரச்சனை ஈராக்கிலும் நேட்டோப் படைகளுக்கும் ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருந்து தீர்க்க முடியாமல் போனதால் நேட்டோப் படைகள் தமது படைவிலக்கலை துரிதப் படுத்தினர். ஈராக்கில் அல் கெய்தா இயக்கத்தினர் பெருமளவில் தலையெடுத்தனர். அங்கு இப்போது அடிக்கடி குண்டு வெடிப்புக்கள் நடக்கின்றன.

ஆப்கான் அதிபர் ஹமீத் ஹார்ஜாய்யும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியும் 2013 ஒக்டோபர் 12-ம் திகதி சந்தித்திப் பேசி  2014இன் பின்னர் செய்ய வேண்டியவை தொடர்பாக ஒரு உடன்பாடு கண்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் எஞ்சி இருக்கும் படைகள் எந்த நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்பது தொடர்பாக என்ன உடன்பாடு காணப்பட்டது என்பது பற்றி தகவல்கள் ஏதும் வெளிவிடவில்லை. எத்தனை படையினர் தொடர்ந்தும் ஆப்கானில் தங்கியிருப்பார்கள் என்பது தொடர்பாகவும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் ஆறாயிரம் முதல் இருபதினாயிரம் வரையிலான படையினர் 2024-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்த்தானில் இருக்க வேண்டும் என மதிப்பிட்டுள்ளது.

நேட்டோப் படைகள் முற்றாக வெளியேறினால் ஆப்கானிஸ்த்தானில் மீண்டும் பெரும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் எனவும் பல கிராமப் புறங்களை தலிபான் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் ஆப்கானில் போதைப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் எதிரபார்க்கப் படுகிறது.

ஆப்கான் அதிபர் ஹமீத் ஹார்ஜாய்யிற்கு மேற்கு நாடுகள் பெருமளவில் நிதி உதவி செய்தன. அதை வைத்து அவர் நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தி மக்களுக்கு அவர் மீதான் நம்பிக்கையையும் பற்றையும் வளர்க்க வேண்டும் என மேற்கு நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் அவர் மோசடி மிக்க ஆட்சியை நடாத்தி மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். இதனால் தலிபானின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டின் பின்னரும் நேட்டோப் படைகள் இருப்பதை அதிபர் ஹர்ஜாய் விரும்புகிறார். தனது நாட்டின் படைத்துறையையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மேற்கு நாடுகள் கொடுப்பதாக உறுதியளித்த எட்டு பில்லியன்களுக்காக அவர் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்.

அமெரிக்காவிற்கும் ஆப்கான் அதிபர் ஹமீத் ஹர்ஜாய்யிற்கும் இடையில் பகைமை வளர்வதற்கு வேறு காராணங்களும் உண்டு. ஆப்கான் ஆட்சியாளர்களின் உளவுத் துறையினர் தலிபான்களுடன் பேச்சு வார்த்தையை நடத்த முற்படும் போதெல்லாம் அமெரிக்கப் படையின் வலுக்கட்டாயமாகத் தலையிட்டு தலிபான்களை கைது செய்து விடுவார்கள். 

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ஈராக்கும் ஆப்கானும் குடியரசுக் கட்சியினர் ஜோர்ஜ் புஷ் தலைமையில் உருவாக்கிய குப்பைகள் அதை மக்களாட்சிக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமா துப்பரவாக்குகிறார் எனக் கருதுகிறார்கள்.

அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது பெரும் தலையிடியான ஒரு செயலாகும். பெருமளவு தளபாடங்களை அது வெளியேற்ற வேண்டும். அதை உள்ளூரில் கால் விலை அரை விலைக்குக் கூட விற்க முடியாது. ஒரு ஒளிப்படப் பதிவுக் கருவியைக் கூட அது விட்டுச் செல்ல முடியாது. அவை தீவிரவாதிகள் கைகளுக்குச் செல்வது கூட ஆபத்தானது. அதிலுள்ள நேரத்துக்கு இயங்கும் பகுதி தீவிரவாதிகள் கைகளுக்குப் போனல் அதைவைத்து அவர்கள் குண்டுகளுக்குப் பொருத்தி நேரத்துக்கு வெடிக்கச் செய்யலாம். அமெரிக்கா பல தளபாடங்களை அழித்துவிட்டுச் செல்ல வேண்டும். சோவியத் படைகள் விட்டுச் சென்ற குப்பைகள் இப்போதும் ஆப்கானில் இருக்கின்றன. அமெரிக்கா ருமேனியாவூடாக  தனது தளபாடங்களை எடுத்துச் செல்லஅந்த நாட்டுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையாக அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஆப்கானில் தொடரவிருக்கும் நிகழ்வுகள் முக்கியமாக ஈரானின் காய் நகர்வுகள் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசுவதாகவே அமையும்.

Monday 21 October 2013

சீன விரிவாக்கத்தின் முதல் இலக்கு

சீனாவின் பிரந்திய ஆதிக்கக் கனவினதும் விரிவாக்க இலட்சியத்தின் முதல் இலக்காக தாய்வானே இருக்கிறது. 1979-ம் ஆண்டு சீனா ஐக்கிய அமெரிக்காவிடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் சிறந்த உறவை உருவாக்கியது. சீனா தனது பிரதான எதிரி முதலாளித்துவ நாடுகளல்ல பொதுவுடமை நாடான சோவியத் ஒன்றியமே எனக் கருதியது. சோவியத் ஒன்றியம் சீனாவைத் தாக்கலாம் என்ற ஒரு நிலைமை அப்போது நிலவியதால் அமெரிக்காவும் செஞ் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன. அப்போது சீனாவுடன் அமெரிக்க தனது உறவுக்கான பரிசாக தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒத்துக் கொள்ளவிருந்தது.

தாய்வான் உறவுச் சட்டம்

தாய்வான் அரசு அமெரிக்கப் பாராளமன்றமான கொங்கிரசின் இரு அவைகளான மக்களவையிலும் மூதவையிலும் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தாய்வான் தனித்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. சீனாவிடமிருந்து தாய்வானை ஐக்கிய அமெரிக்கா பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கப் பாராளமன்றம் 1979இல் தாய்வான் உறவுச் சட்டம் என்று ஒரு சட்டத்தை உருவாக்கியது. தாய்வான் உறவுச் சட்டத்தில் சீனக் குடியரசு என்ற பதம் பாவிக்காமல் தாய்வானை ஆளும் அதிகாரம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. ஆனால் அச்சட்டத்தின் படி தாய்வான் ஒரு நாடாக கருதப்பட்டு ஒரு நாட்டுடன் வைத்துக் கொள்ளக் கூடிய இராசதந்திர உறவுகள் யாவும் மேற்கொள்ளலாம். தாய்வானை வெளி அச்சுறுத்தல்களில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்கிறது அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம். அதன் பிரகாரம் இன்று வரை அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் 1984-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. அமெரிக்கா தாய்வான் மீதான சீனாவின் இறைமையை ஏற்க மறுத்து வருகிறது. அமெரிக்கப் பாராளமன்றம் 2007-ம் ஆண்டு வெளிவிட்ட ஆய்வறிக்கை தாய்வான் மீதான சீனாவின் இறைமையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீள் உறுதி செய்தது. அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம் சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எனச் சீனா கருதுகிறது.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பல்
அமெரிக்காவைப் பொறுத்தவரை தாய்வான் அதனது மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல். அமெரிக்காவிடமிருந்து தாய்வான் பல போர் விமானங்களை வாங்கிக் குவித்துள்ளது. தாய்வான் 2013-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேலும் பல நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய விமானங்களை வாங்கவுள்ளது.

சீன அமெரிக்க முறுகல்கள்

சீனப் பெருநாட்டிற்கு எதிராக தாய்வானின் இருப்பிற்கு அமெரிக்கா பேருதவி செய்து வருகிறது. அமெரிக்கா தாய்வானுக்குச் செய்து வரும் படைக்கல விற்பனைகளை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனாலும் அறுபது ஆண்டுகளாக சீனா தாய்வானைத் தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா தடுத்து வருகிறது. 1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 2006இல் அமெரிக்கா ஆறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தாய்வானிற்கு விற்றதால் ஆத்திரமடைந்த சீனா அமெரிக்காவுடனா தனது படைத்துறைத் தொடர்புகளைத் துண்டித்தது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தாய்வானின் முக்கியத்துவம்.
சீனாவின் மூன்று புறம் அதன் எல்லைகள் பல நாடுகளுடனான தரைப் பகுதியே. அதன் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆழமில்லாத கடலால் ஆனது. சீனா தனது நீர் முழ்கி கப்பல் படைகளை விருத்தி செய்ய ஆழ்கடல்களைச் சூழக் கொண்ட தாய்வான் அவசியம் தேவை. ஜப்பானின் கடல் வழிப்பாதைகள் தங்கு தடையின்றி நடப்பதற்கு சுதந்திரமான தாய்வான் உதவியாக இருக்கிறது. தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் சீனாவால் ஜப்பானின் இலகுவான கடற்பாதைக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும். இலங்கையிலும் ஆழ்கடல் கரையைக் கொண்ட அம்பாந்தோட்டையை தனது தளமாகச் சீனா தெரிந்து எடுத்தது தன் எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கருத்தில் கொண்டே. அண்மையில் சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள கடற்பகுதியின் ஆழ பரிமாணங்களை மதிப்பீடு செய்தமை அப்பகுதிக்கு ஏற்ப தனது நீர் மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்காக இருக்கலாம். ஆபிரிக்க நாடுகளின் கனிம வளங்களும் மத்திய கிழக்கின் எரிபொருள்களும் சீனாவிற்கு தங்கு தடையின்றி கிடைக்க சீனாவிற்கு ஒரு பலமிக்க கடற்படை அவசியம். தாய்வானில் சீனா ஒரு கடற்படைத் தளம் இருந்தால் அது பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் ஆதிக்கத்தை உறுதி செய்யும்.

தாய்வானின் சரித்திரம்

தாய்வானை 1623-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சிய் செய்தனர். பின்னர் 1662-ம் ஆண்டு சீனா டச்சுக்காரர்களை விரட்டி தனது ஆட்சியின் கீழ் தாய்வானைக் கொண்டு வந்தது. 1894-ம் 1895-ம் ஆண்டு நடந்த போரில் ஜப்பான் தாய்வானையும் கொரியாவையும் சீனாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பானிடம் இருந்து 1952இல் செய்த சான் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி தாய்வானை ஜப்பானிடம் இருந்து விடுவித்தன. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. 1971இல் தாய்வான் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து விலக்கப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. 1949/50இல் சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சி சீனாவை மக்கள் சீனக் குடியரசு என்றும்(செஞ்சீனா) சீனக் குடியரசு(தாய்வான்) என்றும் இரண்டாகப் பிரித்தது. செஞ்சீனா பொதுவாகச் சீனா என்று அழைக்கப்படுகிறது. அது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஒரு வல்லரசு. அத்துடன் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. பொருளாதார உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. சீனா எப்போதும் தாய்வானைத் தனது ஒரு மாகாணம் என்றே கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

உறவை வளர்த்த இரு சீனாக்கள்

தாய்வான் தன்னை சீனக் குடியரசு என்றும் தாய்வானை சீனா தனது நாட்டின் ஒரு மாகாணம் என்றும் சொல்லி வந்தன. 1992இல் இரு நாடுகளும் உறவுகளை உருவாக்கி வளர்க்க முயன்றன. இதற்காக தாய்வானும் சீனாவும் ஒரு நாடுகள் ஆனால் இரு அரசுகள் என்ற நிலைப்பாட்டை தாய்வான் எடுத்தது. ஆனாலும் இன்று வரை ஒன்றை ஒன்று சந்தேகக் கண்களுடனேயே பார்க்கின்றன.காலப் போக்கில் தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம் என சீனா உறுதியாக நம்புகிறது. வளம் குறைந்த தாய்வானிய மக்களிக்கு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனா இணைய வேண்டிய ஒரு நாடாக மாறலாம் என சீனா நம்புகின்றது.

தாய்வானை நோக்கிய சீனாவின் வியூகம்

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சீன ஏவுகணைகள் தாய்வானைக் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீனா புதிதாக உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய DF-21D ஏவுகணைகள் முக்கியமானவை. இவற்றை Anti-Ship Ballistic Missile (ASBM) என அழைப்பர். 35 அடி உயரமும் 15 தொன் எடையும் கொண்ட DF-21D ஏவுகணைகள் 1200மைல்கள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குகள் வேகத்தில் பாயக் கூடியவை. இவை அமெரிக்கக் கடற்படைக்குப் பெரும் சவாலாகும். இந்த ஏவுகணைகளை எப்படிச் சமாளிப்பது என்று 2012-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஆனால் சீனாவின் DF-21D எந்த ஓர் இடத்திலும் பரீட்ச்சித்துப் பார்க்கப்படவில்லை என்பதால் அதன் நம்பகத் தன்மை பற்றி சில படைத்துறைஆய்வாளர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகளை பறப்பின் போது வைத்து அழிப்பது திசை மாற்றுவது போன்ற உத்திகள் ஆலோசிக்கப்பட்டன. அமெரிக்காவின் புதிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R. Ford இந்த ஏவுகணைகளை சமாளிக்கக் கூடியன என நம்பப்படுகிறது. அமெரிக்கா 2013 மே மாதம் உருவாக்கிய  RIM-162 ESSM "Evolved Sea Sparrow," ஏவுகணைகள் சீனாவின் DF-21D ஏவுகணைகளை அவற்றின் பறப்பின் போது இடை மறித்து அழிக்கக் கூடியவை.  அமெரிக்கா தனது படைத்துறையின் செயற்பாட்டிற்கு செய்மதிகளிலும் இணையவெளித் தொடர்பாடல்களிலும் பெரிதும் தங்கியிருக்கின்றது. செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா உருவாக்கியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இணைய வெளியில் களவாக ஊடுருவி அவற்றைச் செயற்படாமற் செய்யும் திறன் மிக்க இணைய வெளிப்படையணியையும் சீனா உருவாக்கியுள்ளது.




சீனாவின் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சி
2013-ம் ஆண்டு சீனா 2013A, 2013B, 2013C என்னும் பெயரில் தனத் பெருமளவு படையினரைக் கொண்ட தாய்வான் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சிகளைச் செய்துள்ளது. சீனாவின் முப்படைகளும் இதில் ஈடுபடுத்தப் பட்டு உண்மையான சூடுகளுடன் பயிற்ச்சிகள் செய்யப்பட்டன. பெருமளவு படைக்கலன்கள் நகர்வும் இதன் போது பரீட்சிக்கப்பட்டன.

எத்தைனை காலம் அமெரிக்காவால் தாய்வானைக் காப்பாற்ற முடியும்.
நலிவடையும் அமெரிக்கப் பொருளாதாரமும் வலிவடையும் சீனப் பொருளாதாரமும் சீனாவின் கடன் இன்றி அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமலும் அமெரிக்காவிற்கு கடன் கொடுக்காமலும் சீனாவால் தனது பொருளாதாரப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாது. சீனா ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருக்கும் பொருளாதாரத்தை மாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்கு ஒரு வலிமை மிக்க உள்ளூர் சந்தை அதற்கு அவசியம். அதற்கு தாய்வானை தன் நாட்டுடன் இணைத்துக் கொள்வது உதவியாக இருக்கும். அண்மைக் காலமாக தாய்வானில் படைத்துறைச் சமநிலை சீனாவிற்குச் சாதகமாகி வருகின்றது. இதை ஈடு செய்ய தாய்வான் அமெரிக்காவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்க முற்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமெரிக்கா புதிய போர் விமாங்களை விற்காமல் ஏற்கனவே தாய்வானிடம் இருக்கும் அமெரிக்கத் தயாரிப்புப் போர் விமானங்களை தரமுயர்த்த ஒப்புக் கொண்டது. அதுவும் சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆனால் இந்த விமானப் படைத் தரமுயர்த்தல் சீனாவிற்கு சாதகமாகச் சரிந்து கொண்டிருக்கும் படைத்துறைச் சமநிலை சீர் செய்யப் போதாது என்று படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீனா தனது படைத்துறை வலிமையை உள்ளுர்ப் பார்வையாளர்களுக்கும் உலக அரங்கிற்கும் காட்ட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் உள்ளது. சீனா தொடர்ந்து தாய்வானை தன்னுடன் இணைப்பதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சீனாவிற்கு அமெரிக்க சீனாவிற்கு விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. 2020இற்கும் 2025இற்கும் இடையில் சீனா தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...