Friday 18 February 2022

ஐரோப்பிய ஒன்றியம் பெருவல்லரசாகுமா (Superpower)?

  


ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரிய, குரோசியா, சைப்பிரஸ், செக் குட்யரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்ரா, நெதர்லாந்து, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவேக்கிய, சிலோவேனியா, ஸ்பெயின், சுவீடன் ஆகிய 27 நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இருகின்றது.  அது ஓர் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும். அதற்கு என ஒரு நாடாளுமன்றம், நீதித்துறை போன்றவை இருந்தாலும் அது ஒரு நாடு அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் ஒரு செழுமையையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு வல்லரசாக வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்றியம் உருவாக்கப்படவில்லை. செழுமைக்கும் அமைத்திக்கும் படைவலிமை அவசியமாகும். 

எது பெருவல்லரசு?

எது பெருவல்லரசு என்பது பற்றி பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் ஆகியவை உலகப் பெருவல்லரசாக கருதப்பட்டன. பனிப்போர்க் காலத்தின் போது அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகப் பெருவல்லரசாகக் கருதப்பட்டன. தற்போது அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக கருதப்படுகின்றது.  இரசியாவும் சீனாவும் உலகப் பெருவல்லரசு என்போரும் உண்டு. அவை இரண்டும் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன என்போரும் உண்டு. உலகப் பெருவல்லரசு என்பது உலகின் எப்பாகத்திலும் தனது ஆதிக்கத்தை தனது பொருளாதார மற்றும் படைவலிமையால் நிலைநாட்டக் கூடியதாகவும் உலக அமைப்புக்களில் தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாகவும் உலக வர்த்தக ஒழுங்கை உருவாக்கக் கூடியதாகவும்  உலக ஒழுங்கை நிலைநாட்டக் கூடியதாகவும் இருக்கும்.

வலிமை மிக்க நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்

பிரான்ஸ் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வல்லரசு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருக்கின்றது. அத்துடன் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் ஆகியவை வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட நாடுகள். G-7 நாடுகளிலும் G-20 நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை 447மில்லியன். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றது. அதன் மொத்த உற்பத்தி உலகின் உற்பத்தியில் 14% ஆக இருக்கின்றது. மற்ற வல்லரசு நாடுகளின் மொத்த உற்பத்தி உலக உற்பத்தியுடன் பார்க்கையில் அமெரிக்கா 15.83%, சீனா 15.82%, பிரித்தானியா 2.2%. பெயரளவு(Nominal) தனிநபர் வருமானம் எனப் பார்க்கும் போது ஐரோப்பிய ஒன்றியம்-$41,504, சீனா $16,642, இந்தியா $2191, அமெரிக்கா $65,100 என இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொண்டன. அவற்றின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பொருளாதாரம் மேம்படும் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிநபர் வருமானம் மேலும் அதிகரிக்கும். உலக வர்த்தகத்திலும் அதன் செயற்பாட்டை முடிவு செய்வதிலும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இணையாக நிற்கின்றது. 

மென்வல்லரசு

ஒரு நாடு வல்லரசா என்பதை அதன் படைவலிமையும் பொருளாதார வலிமையும் முடிவு செய்கின்றன. ஒரு நாடு மென்வல்லரசா என்பதை அதன் அரசியல் மதிப்பு, கலாச்சார விழுமியங்கள், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவை முடிவு செய்கின்றன. பன்னாட்டு அமைப்புக்களில் ஒரு நாட்டுக்கு இருக்கும் ஆதரவும் மென்வல்லரசுத் தனைமையை முடிவு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும். உலகின் முதல்தர மென்வல்லரசாக பிரான்ஸ் இருக்கின்றது. ஜெர்மனி மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமெரிக்காவையும் சீனாவையும் விஞ்சக் கூடிய நிலையில் இருக்கின்றது. வல்லரசு என்பது கண்டங்களைத் தாண்டி தனது படைகளையும் பொருளாதாரத்தையும் மென்வலு அழுத்தத்தையும் முன்னிறுத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தால் அப்படிச் செய்ய முடியும். 2021-ம் ஆண்டு தென் சீனக் கடலின் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் தம் கடற்படையை அங்கு அனுப்பின. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அங்கு படையனுப்பிய வேற்றுப் பிரதேச நாடுகளாக இருந்தன.

பொருளாதாரத்தை மேம்படுத்த படைத்துறை அவசியம்

Alexandar Stubb 2008-ம் ஆண்டு பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய அரசியல் ஒன்றியமாகவும் மிகப்பெரிய ஒற்றைச் சந்தையாகவும் மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருப்பதால் அதை ஒரு உலகப் பெருவல்லரசு (World Superpower) எனச் சொல்லலாம் ஆனால் படைத்துறையும் வெளியுறவுத் துறையும் அதற்கு ஏற்றாற் போல் இல்லை என்றார். 2018-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் ஐரோப்பா தொடர்பான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வைத்தது. பொருளாதார மேம்பாடும் படைத்துறையும் கைகோர்த்துச் செல்ல வேண்டியவை. பிரித்தானியாவின் பொருளாதாரமும் அதன் படைவலிமையும் இணையாக வளர்ந்த போதுதான் அது ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. தற்போது அமெரிக்காவும் அதையே செய்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறை வளர்ச்சிக்கு ஈடாக அதன் பொருளாதாரம் வளரவில்லை. சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தன் படைத்துறையைப் பெருக்குகின்றது.

2014இல் வெளிப்பட்ட வலிமையின்மை

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் தனது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்ட போலாந்து அமெரிக்காவிற்கு பணம் கொடுத்து தனது நாட்டில் அமெரிக்காவை படைத்தளம் அமைக்கும் படி வேண்டியது. இது ஐரோப்பிய நாடு ஒன்று தனது பாதுகாப்பிற்கு இன்னொரு கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைத் தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய சுதந்திரம் அவசியம் என்ற கருத்து உறுப்பு நாடுகளிடையே பரவத் தொடங்கியது. 2022இன் ஆரம்பத்தில் இரசியா உக்ரேனுக்கு எதிராக பெரும் படையைக் குவித்தமை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள இரசிய எல்லையில் இருக்கும் சிறிய நாடுகளை தமது பாதுகாப்பையிட்டு கரிசனை கொள்ள வைத்துள்ளது.  

தனித்துவத்தை விரும்பும் பிரான்ஸ்

பிரான்ஸ் அமெரிக்காவிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்ற விருப்பமுடையது. அது தனக்கு தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றில் பலவற்றை பிரான்ஸால் மலிவு விலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். பிரான்ஸ் தனது கேந்திரோபாய தன்னாளுமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அதே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என பிரான்ஸ் நினைக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு தனியான படையணி தற்போது இல்லை, ஆனால் அதன் உறுப்பு நாட்டுப் படைகளுக்கு என ஐரோப்பிய ஒன்றியம் தனியான படைத்துறை கட்டுப்பாடு-கட்டளையகத்தை வைத்திருக்கின்றது. பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த போது ஒன்றியத்திற்கு என ஒரு படையணி இருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு படையணி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நேட்டோ

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் படைவலிமை அதிகரிக்கும் போது அவை தமது பாதுகாப்பில் நேட்டோவின் முதன்மை நாடான அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைக்கப்படுவதுடன். நேட்டோவின் வலிமையும் அதிகரிக்கும். வலிமை அதிகரித்த நேட்டோவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதிக்கமும் அதிகரிக்கும். அமெரிக்க ஆதிக்கத்தை ஐதாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் அப்படி நடப்பதை விரும்புகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தனி அமைப்பாகப் பார்க்கும் போது அதன் அதிகாரம் அதிக அளவு உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வலிமை மிக்க அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இன்னும் அதிக அளவு அரசியல் ஒன்றிணைப்பு தேவைப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலேயான பிளவுகளால் உருவாகியுள்ள பிரச்சனை சீனாவிற்கு தைவானால் உள்ள பிரச்சனையிலும் மிகச் சிறியது. அதை தீர்ப்பதற்கு மோதல் தேவைப்படாது. ஒன்றிய உறுப்பு நாடுகள் பொருளாதாரம், படைத்துறை, வெளியுறவு தொடர்பாக தங்களது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து ஒன்றியத்திற்கு என பொதுவான ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அது நடக்கும் போது ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுக்கும்

Wednesday 16 February 2022

உக்ரேனில் புட்டீன்: பதுங்கலா பின்வாங்கலா?

  

2022 பெப்ரவரி 15-ம் திகதி இரசியப் பாதுகாப்புத்துறை உக்ரேன் எல்லையில் இருந்து பத்தாயிரம் படையினரை விலக்குவோம் என அறிவித்தவுடன் உலகப் பங்குச் சந்தைச் சுட்டிகள் அதிகரித்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருந்த அமெரிக்காவின் Dow Jones சுட்டி 400 புள்ளிகளால் அதிகரித்தது. 2022 பெப்ரவரி 14-ம் திகதி இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரேன் நெருக்கடி தணிக்க வாய்ப்புள்ளது எனச் சொன்னவுடன் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி அதிகரித்தது. இரசியப் பங்குச் சந்தையின் சரிவும் குறைந்தது. இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு வார்த்தைக்கு முக்கியமாக படைக்கலக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு இன்னும் இடமுள்ளது என்று அறிவித்தமை போரை தவிர்க்க இரசியா விரும்புகின்றது என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இரசியா படைகளை விலக்கவில்லை மேலும் படைகளை உக்ரேன் எல்லைக்கு அனுப்பியுள்ளது என்றும் தற்போது 150,000படையினர் உக்ரேன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரசியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்

உக்ரேன் நெருக்கடிக்குப் பின்னர் இரசியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வது ஐம்பது விழுக்காட்டால் குறைந்து போயிருந்தது. இந்தோனேசியா, அல்ஜீரியா, எகிப்த்து ஆகிய நாடுகள் இரசியாவிடமிருந்து வாங்கவிருந்த SU-35 போர் விமானங்களை வாங்குவதில்லை என முடிவெடுத்தன. இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை வந்தால் SU-35இன் முக்கிய பாகங்களை இரசியா மேற்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் போகும். அதனால் SU-35இன் செயற்படு திறன் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் எல்லையில் படை குவித்ததைத் தொடர்ந்து இரசியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். உக்ரேன் நெருக்கடியால் எரிபொருள் விலை அதிகரிக்கின்றது. அது இரசியாவின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும். ஆனால் உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடையால் ஏற்படவிருக்கும் பொருளாதாரப் நெருக்கடி எரிபொருள் வருமான அதிகரிப்பால் வரும் நன்மையை இல்லாமற் செய்யலாம். 

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2022/01/blog-post_31.html

போர் வேண்டாம் உக்ரேனைப் பிரிப்போம்

“எமக்கு போர் வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் வேண்டாம்” என்ற இரசிய அதிபர் புட்டீனின் வாசகம் உலகத்தை உலுப்பியுள்ளது. இரசியாவின் பத்தாயிரம் படையினர் விலக்கல் அறிவிப்பை உக்ரேனும் நேட்டோ நாடுகளும் கவனத்துடன் வரவேற்றன. உக்ரேன் நேரில் காணும் வரை அதை நம்ப மாட்டோம் என்றது. அமெரிக்கா தாம் அதை உறுதி செய்து கொள்வோம் என்றன. இரசிய அதிபர் சமாதான சமிக்ஞையை ஒரு புறம் வெளிப்படுத்த மறுபுறம் உக்ரேனின் இரண்டு வங்கிகள் இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதேவேளை இரசிய நாடாளுமன்றம் உக்ரேனின் கிழக்குப் புறமாக பிரிவினை வேண்டி நிற்கும் Donetsk, Luhansk ஆகியவற்றை குடியரசுகளாக அங்கீகரிக்க அதிபரைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இவை புட்டீனின் பின் வாங்கலுக்கான அறிகுறிகள் இல்லை.

இரண்டு கழுகுகள்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் 1990களில் அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினராகவும் வெளியுறவுத்துறைக் குழுவின் உறுப்பினராக இருந்த போது முன்னாள் சோவியத் ஒன்றிய செய்மதி நாடுகளாக இருந்த போலாந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகளை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைப்பதற்கு முன்னின்று உழைத்தார். நேட்டோ விரிவாக்கத்தில் விருப்பம் உள்ளவராக ஜோ பைடன் கருதப்படுகின்றார். ஜெர்மனியை கிழக்கு மேற்கு என இரு நாடுகளாகப் பிரித்து நின்ற பேர்லின் சுவர் 1989-ம் ஆண்டு தகர்க்கப்பட்டமை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. பேர்லின் சுவர் தகர்க்கப் பட்டபோது கிழக்கு ஜெர்மனியில் சோவியத்தின் உளவுத்துறையில் பணிபுரிந்தவர் தற்போது இரசிய அதிபராக இருக்கும் விளடிமீர் புட்டீன். சோவியத் ஒன்றியத்தை நிலை நிறுத்த உழைத்தவர். அவர் கண் முன்னே அது சரிவதை பார்த்துக் கொண்டிருந்தவர்.

உறுதிமொழி பற்றி உறுதி செய்ய முடியவில்லை

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் கிழக்கு ஜெர்மனியை மட்டும் நேட்டோவில் இணைக்கும் மற்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைக்க மாட்டாது என இரசியாவிற்கு ஜோர்ஜ் புஷ் ஒரு உறுதி மொழியை வழங்கியிருந்தார் என இரசியர்கள் நம்புகின்றனர். 12-09-1990இல் அப்படி ஓர் உறுதி மொழி ஜோர்ஜ் புஷ்ஷால் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கப்பட்டது என புட்டீன அடித்துச் சொல்கின்றார். அது பற்றி எந்த எழுத்து மூலமான ஆதாரமும் இல்லை. இப்போது அப்படி ஓர் உறுதி மொழி வழங்கப்படவில்லை என்கின்றன மேற்கு நாடுகள். ஆனால் தங்களுக்கு துரோகமிழைக்கப் பட்டு விட்டதாக பல இரசியர்கள் நம்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 20-ம் நூற்றாண்டில் நடந்த ஒரு புவிசார் அரசியல் விபத்து என விளடிமீர் புட்டீன் கருதுகின்றார். சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என அவர் கருதுகின்றார்.

இளகிய இரும்பென நினைக்கின்றாரா பைடன்

உக்ரேனில் இருந்து பத்தாயிரம் படையினர் விலக்கப்படுவார்கள் என இரசியா அறிவித்தவுடன் உலக மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் நாம் முழு வலிமையுடன் பாதுகாப்போம். உக்ரேனின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என முழங்கினார். இரசியாவின் பத்தாயிரம் படைவிலக்கலை இளகிய இரும்பென நினைத்து அவர் பாய்ந்து பாய்ந்து அடிப்பது போல் அவரது உரை அமைந்திருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் இரு கட்சிகளும் இணைந்து இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் இரசியாமீது முன்பு எப்போதும் இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அறிக்கை விட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் உலகெங்கும் உள்ள நாடுகளையும் திரட்டி பொருளாதாரத்தடை செய்ய வைப்போம் எனவும் பைடனின் உரையில் சூளுரைக்கப்பட்டிருந்தது.  

உக்ரேனின் ஏவ்கணை வலிமை பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2022/02/javelins-t-90-tanks-nlaw.html

புட்டீனின் பிரச்சனைகள்

1, நேட்டோ ஒற்றுமை: புட்டீன எதிர்பார்த்தது போல் உக்ரேனை எப்படி இரசியாவிடமிருந்து பாதுகாப்பது என்பது தொடர்பாக முறுகல் தோன்றவில்லை. அவர்களிடையே எப்படி அணுகுவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்தன. பிரான்ஸ் அதிபரும் ஜேர்மனிய அதிபரும் தமது பாணியில் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஆனால் உக்ரேன் நேட்டோவில் இணைவது தொடர்பாக நேட்டோ தலைவர்களிடம் ஒரே கருத்து இருந்தது. உக்ரேன எந்தப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது என்பது உக்ரேனின் இறைமையுடன் தொடர்புடையது என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். உக்ரேனை இரசியாவிற்கு விட்டுக் கொடுத்தால் இரசியா அத்துடன் நிற்காமல் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துள்ள லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என புட்டீன அடம் பிடிக்கலாம் என நேட்டோ தலைவர்கள் கருதலாம்.

2. பருவ நிலை: 2022 பெப்ரவரி நடுப்பகுதியில் இரசியா உக்ரேனுக்குள் படைகளை அனுப்பினால் அது இரண்டு வாரங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். இரசியாவின் உயர்ந்த எதிர்பார்ப்பு உக்ரேனில் தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்ந்த்துவது ஆகும். உக்ரேனியர்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னால் உறுதியாக திரண்டு நிற்பதுடன் பலர் படையில் சேர விருப்பமும் தெரித்துள்ளனர். மார்ச் மாத ஆரம்பத்தில் உக்ரேனை முடியுள்ள பனி பகுதியாக உருகத் தொடங்கி பனிச்சேறு உருவாகும். அது இரசியப் படையினருக்கான வழங்கல்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விமான மூலமாக உணவு, சுடுகலன்கள், எரிபொருள், படைக்கல உதிரிப்பாகங்களை விநியோகிக்க வேண்டி வரும். அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரேனுக்கு போல்ரிக் நாடுகளூடாக வழங்கியுள்ளது.

3. படைக்கலன்கள்: தரையூடான படை நகர்விற்கு முழு ஆதாரமாக போர்த்தாங்கிகள் செயற்படும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ள போர்த்தாங்கிகளிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையான தாங்கி அழிப்பு ஏவுகணைகள் தற்போது உக்ரேனிடம் உள்ளன. அதனால் இரசியப் படையினர் பெரும் ஆளணி இழப்புக்களை சந்திப்பர். 2014-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்கா உக்ரேனிற்கு படைக்கலன்களையும் பயிற்ச்சியையும் வழங்க $2.7பில்லியனச் செலவழித்துள்ளது. 

4. பொருளாதாரம்: மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற பல நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவரும் போது இரசியா பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்ளும்.

5. உக்ரேனின் உறுதிப்பாடு: உக்ரேனை இலகுவில் மிரட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் இரசியா உக்ரேன் எல்லையில் ஒரு இல்ட்சம் படையினரைக் குவித்தது. உக்ரேன் விட்டுக் கொடுக்காத நிலையில் மேலும் முப்பதினாயிரம் படையினரைக் குவித்தது. அதற்கும் உக்ரேன் மசியவில்லை. 2014 இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னர் 84% உக்ரேனியர்கள் இரசியாவை விரும்புபவர்களாக இருந்தனர். 2019இல் அது 32% ஆக குறைந்தது. உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி 2019 அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் போது ஒரு நடுநிலையாளராக இருந்தார். பின்னர் அவர் இரசியாவை வெறுப்பவராக மாறிவிட்டார். 

6. ஜெர்மனி கடுமையான நிலைப்பாடா? இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜெர்மனி மட்டுமே இளகிய நிலையில் இருந்தது. ஜெர்மனி அதிபரின் நிலைப்பாடு தொடர்பாக ஜெர்மனியிலும் மேற்கு நாடுகளிலும் எதிர்ப்பு உருவானது. ஜெர்மனிய அதிபர் புட்டீனைச் சந்திக்க முன்னரே அவர் தனது நிலைப்பாடு மாறும் என்ற செய்தியை இரசியாவிற்கு தெரியப்படுத்தி இருக்கலாம். உக்ரேன் மீது இரசியா போர் தொடுத்தால் ஜெர்மனூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை குழாயூடாக வழங்கும் Nordstream-2 திட்டத்திற்கு ஜெர்மன் முட்டுக்கட்டை போடும் முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. 

புட்டீன் புகழுக்கு பங்கம்

பெரியதாக வீராப்பு பேசும் புட்டீன் உக்ரேன் திரையரங்கில் அரங்கேற்ற முயன்ற காட்சி உப்புச் சப்பில்லாமல் முடிவது அவரது விம்பத்திற்கு பங்கம் ஏற்படும். அதனால் அவர் வீராப்பு பேசக் கூடிய வகையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நேட்டோவுடன் செய்ய வேண்டும் அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகள் மூலம் ஒரு தாக்குதலை உக்ரேன் மீது செய்ய வேண்டும். இது போன்ற Face saving நடவடிக்கைகள் எதையாவது செய்து தப்ப வேண்டும். அமெரிக்க பைடனும் பிரித்தானிய ஜோன்சனும் பெப்ரவரி 16-ம் திகதி புட்டீன் போர் தொடுப்பார் என அறிவித்த நிலையில் அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல புட்டீன் 15-ம் திகதி படை விலக்கலை அறிவித்தார். 

மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் புட்டீன் உறுதியாக நிற்பார். தனது எல்லை நாடுகளில் நேட்டோ எந்தப் படையையும் நிறுத்தக் கூடாது இரசியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தக் கூடிய வகையில் படைக்கலன்களைக் குவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த அவர் தொடர்ந்து முயற்ச்சி செய்வார்.

புட்டீனின் மீண்டும் சோவியத் உருவாக்கம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/12/blog-post_30.html

கிழக்கு ஐரோப்பாவில் முடியாததை அவர் நடுவண் ஆசியாவில் செய்ய முயலலாம். அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வர துருக்கி எண்ணுகின்றது. அவற்றைப் பொருளாதார அடிப்படையில் சுரண்ட சீனா தொடங்கி விட்டது.  

Monday 14 February 2022

உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW

  


உக்ரேன் எல்லையில் மேலும் முப்பதினாயிரம் படையினரை நிறுத்தி மொத்தப் படையினர் எண்ணிக்கையை 130,000 ஆக உயர்த்திய இரசியா சொல்கின்றது தான் உக்ரேனை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று. அமெரிக்கா சொல்கின்றது எந்த நேரமும் இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்று. உக்ரேன் அதிபர் சொகின்றார் பதட்டம் வேண்டாம், பதட்டம் எதிரிக்கு சாதகமாக அமையும் என்று. இரசியப் படையினர் விமானத் தாக்குதல்களுடனும் எறிகணை வீச்சுகளுடனும் தாங்கிகளும் கவச வண்டிகளும் முன்செல்ல உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் இரசியப் போர்த் தாங்கிகளும் உக்ரேனின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் கடுமையாக மோதிக் கொள்ளும். உக்ரேன் படையினர் நகரங்களில் மரபு வழிப் போர் முறைமையையும் கிராமங்களில் கரந்தடிப் போர் முறையையும் பின்பற்றலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

உக்ரேனிடம் குறைந்த தாங்கிகள்

இரசியா உக்ரேனுக்கு எதிராக 1200 போர்த்தாங்கிகளை நிறுத்தியுள்ளது. இது உக்ரேனின் மொத்த தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க முன்னூறு அதிகமானதாகும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பக் கூடிய தாங்கிகளிலும் பார்க்க அதிக அளவு தாங்கி அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனுக்கு வழங்கி அவற்றை இயக்கும் பயிற்ச்சியையும் அளித்துள்ளன. போர்க்களத்தில் தாங்கிகளும் தாங்கிகளும் மோதுவது குறைவு சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உருவாக்கிய T-64 தாங்கிகளை தற்போது உக்ரேன் மேம்படுத்தி உற்பத்தி செய்கின்றது. ஆனாலும் உக்ரேன் அரசின் அறிவிப்பின் படி 2014 முதல் 2016வரை உக்ரேனின் 440 போர்த்தாங்கிகளை உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள இரசிய ஆதரவு பிரிவினைவாதிகள் அழித்துள்ளனர். தாங்கிகளை ஏவுகணைகளும் சேணேவிகளும் ( artilleries) அழிக்க வல்லன. 

பிரித்தானிய ஏவுகணைகள்

பிரித்தானியா தனது New Generation Light Anti Tank Weapon (NGLAW) எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளில் இரண்டாயிரத்தை உக்ரேனுக்கு அவசரமாக 2022 ஜனவரியில் அனுப்பி வைத்துள்ளது. பிரித்தானியாவின் BAE, பிரான்ஸின்THALES, சுவீடனின் SaaB, அமெரிக்காவின் RAYTHEON ஆகிய படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து NGLAW எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளை 2002இல் இருந்து உருவாக்கியுள்ளன. பின்லாந்து, லக்சம்பேர்க், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவை விற்பனை செய்யப்பட்டும் உள்ளன. தோளில் காவிச் சென்று ஏவக் கூடிய NGLAW 27.5இறத்தல் எடையுள்ளது. எண்ணூறு மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அது துல்லியமாகத் தாக்கக் கூடிய வகையில் அது கணினிமயப்படுத்தப் பட்டுள்ளது. இதன் பாயும் வேகம் ஒரு செக்கண்டுக்கு 200மிட்டர் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு 440மைல் ஆகும்.

உக்ரேனில் உக்கிரமான பரீட்சைக் களம்

சிரியாவிற்கு முப்பது T-90 போர்த்தாங்கிகளை இரசியா வழங்கியிருந்தது. அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு தனது ஜவலின் ஏவுகணைகளை வழங்கியிருந்தது. சிரியாவில் குர்திஷ்களும் சிரியப் படையினரும் நேரடி மோதல்களை எப்போதும் தவிர்த்தே வந்தனர். ஆனாலும் சிரியாவின் ஐந்து T-90 போர்த்தாங்கிகளை போராளிகள் அழித்திருந்தனர். சிரியப் போரில் இரசியாவின் வலுவற்ற புள்ளி அதன் குழாய்கள் என அறியப்பட்டது. அதை அழித்துவிட்டால் தாங்கி இயங்கும் ஆனால் அதனால் சரியாக படைக்கலன்களை வீச முடியாது. அமெரிக்காவின்ன் Tube-launched optical tracked wire guided missiles (TOW) மூலமாகவே T-90 போர்த்தாங்கிகள் அழிக்கப்பட்டன. ஆனால் உக்ரேனிடமுள்ள ஜவலின் ஏவுகணைகள் TOW ஏவுகணைகளிலும் பார்க்க சிறந்தவை. ஜவலின் ஏவுகணைகளை Fire & Forget ஏவுகணைகள் என அழைப்பர். அவற்றை இலக்கை நோக்கி ஏவுவிட்டால் மிகுதி வேலையை அவையே பார்த்துக் கொள்ளும் இலக்கு அசைந்து சென்றாலும் ஜவலின் தன் திசையையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். T-90 போர்த்தாங்கிகள் தன்னைச் சுற்ற ஒரு புகைக் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியின் அகச்சிவப்பு உணரிகளைக் குழப்பிவிடும் செயற்பாடு கொண்டவை. சிரியாவில் அவை போதிய பாதுகாப்பை வழங்கவில்லை.  ஜவலின் ஏவுகணைகள் மூன்று மைல் தொலைவுவரை பாய்ந்து தாங்கிகளை அழிக்க வல்லவை. இரசியாவின் மிக்ச் சிறந்த தாங்கிகள் T-14 Armata ஆகும். இவற்றில் எதிரியின் ஏவுகணைகளை குழப்பி திசைமாற்றும் திறன் உண்டு. அதனால் அமெரிக்கா தனது ஏவுகணைகளில் கம்பி வழிகாட்டியைப் பயன் படுத்துகின்றது. ஏவுகணைகளில் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் அதன் மூலம் எதிரியின் இலக்கு தொடர்பான தகவல்களை ஏவுகணைக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் ஏவுகணைக்கு இலக்குத் தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும். இதனால் இரசிய தாங்கிகளை அமெரிக்க ஏவுகணைகள் அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனின் சொந்த உற்பத்தி தாங்கிகள்

உக்ரேனியர்கள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது மிகச் சிறந்த படைக்கல உற்பத்தியாளர்களாக இருந்தார்கள். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த பின்னர் தமது படைத்துறை உற்பத்தியை தீவிரப்படுத்தினர். அவர்கள் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளுக்கு ஈடான Stugna-P anti-tank missilesகளை 2018 ஆண்டில் உற்பத்தி செய்தார்கள். அந்த ஆண்டில் மொத்தம் 2500 ஏவுகணைகள் உற்பத்தி செய்தனர். அவை பல இரசிய கவச வண்டிகளையும் வழங்கல் வண்டிகளையும் இரசியா 2014இல் ஆக்கிரமித்த உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அழித்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஜவலின் ஏவுகணைகளை எஸ்தோனியா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

பதுங்கு குழிகள்

குறுந்தூர ஏவுகணைகள் மூலம் எதிரியின் தாங்கிகளை அழிப்பதற்கு சிறந்த மறைவிடங்கள் அவசியமாகும். இரசியப் படைகளை எதிர்பார்த்து மூன்று மாதங்களாக காத்திருக்கும் உக்ரேனியப் படையினர் அமைத்துள்ள மறைவிடங்களை இரசிய விமானங்கள் முன் கூட்டியே அழிக்காமல் இருப்பதில் உக்ரேனின் வெற்றி தங்கியுள்ளது. 1994இல் செஸ்னியப் போராளிகள் குறுந்தூர ஏவுகணைகள் மூலம் பல இரசிய தாங்கிகளை அழித்தார்கள். இரசியாவின் bunker-buster குண்டுகளின் திறனும் உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாகும்.

எண்ணிக்கையில் குறைந்த இரசிய தாங்கிகள்

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், பிரித்தானியா வழங்கிய ஏவுகணைகள், உக்ரேனின் சொந்த தயாரிப்பு ஏவுகணைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் வரும் எண்ணிக்கை இரசியா உக்ரேனுக்கு அனுப்பவிருக்கும் 1200 போர்த்தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பல மடங்காக வரலாம். அவற்றுடன் இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய  ஏவுகணைகளை வீசக் கூடிய Bayrktar TB2 ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி உக்ரேனுக்கு வழங்கியதுடன் உக்ரேனில் அவற்றை உற்பத்தியும் செய்ய அனுமதியும் வழங்கியுள்ளது. அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் ஆர்மினியாவிடமிருந்த இரசிய தாங்கிகளை துருக்கியின் ஆளிலிப் போர்விமானங்கள் துவம்சம் செய்து அஜர்பையானுக்கு வெற்றி கொள்ள வைத்தன.

உலகில் மிகச் சிறந்த தாங்கிகளை உருவாக்கும் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தால் பெரும் சவாலை அங்குள்ள ஏவுகணைகளால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உக்ரேன் அதற்கான தேர்வு நிலையமாகலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...