Tuesday 17 May 2022

சுவீடன் +பின்லாந்து: நேட்டோ விரிவாக்கத்தை துருக்கி தடுக்குமா?

 

“ஐரோப்பிய பாதுகாவலர்” மற்றும் “உடனடி பதிலடி” என்னும் இரு 2022 மே மாதம் 13-ம் திகதி போலாந்து உட்பட 14 நாடுகளிலும் “Exercise Hedgehog” என்னும் போர்ப்பயிற்ச்சியை இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ உறுப்பு நாடாகிய எஸ்தோனியாவிலும் இன்னும் ஓர் எல்லை நாடாகிய லித்துவேனியாவில் “இரும்பு ஓநாய்” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் ஜெர்மனியில் “Wettiner Heide” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் இருபது நாடுகள் இணைந்து செய்துள்ளன. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த மிக பெரிய அளவிலும் மிகப் பரந்த நிலப்பரப்பிலும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்துள்ளது. இது உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கு முன்ன்ரே திட்டமிடப்பட்டிருந்தது. இப்போர்ப்பயிற்ச்சிகளில் பின்லாந்தும் சுவீடனும் கலந்து கொண்டுள்ளன.

நேட்டோவிலும் வீட்டோ உண்டு

நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு நாடு புதிதாக இணைவதை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஒரு நாடு எதிர்த்தாலும் இணைய முடியாது. இதுவும் ஒரு வகை இரத்து (வீட்டோ) அதிகாரம் போன்றது. நேட்டோவில் யூக்கோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து உருவாகிய நாடாகிய மசிடோனியா இணைய முற்பட்ட போது கிரேக்கம் அதை தடுத்திருந்தது. கிரேக்கத்தில் மசிடோனியா என்ற பெயரில் ஒரு மாகாணம் உள்ளது அதே பெயருடன் இன்னும் ஒரு நாடு இருப்பதை கிரேக்கம் விரும்பவில்லை. அதனால் அந்த நாட்டின் வட மசிடோனியா என மாற்ற வேண்டும் என கிரேக்கம் வற்புறுத்தியது ஆனால் மசிடோனியா அதற்கு இணங்கவில்லை. மசிடோனியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது கிரேக்கம் தடுத்த படியால் வேறு வழியின்றி மசிடோனியா 2018இல் தன் பெயரை வட மசிடோனியா என மாற்றி நேட்டோவில் இணைந்து கொண்டது. வட மசிடோனியா முதற்தடவையாக 2022 மே 13-ம் திகதி ஆரம்பித்த நேட்டோ போர்ப்பயிற்ச்சியில் இணைந்து கொண்டது.

துள்ளும் துருக்கி

பெரிய போர்ப்பயிற்ச்சியை நேட்டோப் படைகள் ஒரு புறம் நடத்திக் கொண்டிருக்க மறு புறம் பல ஆண்டுகளாக இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான முறுகலில் நடு நிலை வகித்துக் கொண்டிருந்த சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்துள்ளன. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் முறைசாரா மாநாடு (informal meeting) 2022 மே 15-ம் திகதி நடைபெற்றது. அங்கு உரையாற்றிய நேட்டோவின் ஒரே ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியின் வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு பின்லாந்தும் சுவீடனும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் துருக்கியின் ஏற்றுமதிக்கு அவர்கள் விடுத்துள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தான் எந்த நெம்பு கோலையும் பாவிக்கவில்லை எனவும் யாரையும் பயமுறுத்தவில்லை எனவும் கூறியதுடன் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கு பின்லாந்தும் சுவீடனும் வழங்கும் ஆதரவை பகிரங்கப் படுத்துவதாகவும் வெளிப்படுத்தினார். சுவீடனில் பெருமளவு குர்திஷ் மக்கள் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். இந்தியா தமிழர்கள் எங்கு விடுதலை பற்றி பேசும்போது அவர்களுக்கு எதிராக இரகசியமாகச் செயற்படுவது போல் அல்லாமல் துருக்கி உலகின் எப்பகுதியிலும் குர்திஷ் மக்கள் தமது விடுதலைச் செயற்பாட்டை முன்னெடுத்தால் துருக்கி அங்கு பகிரங்கமாகத் தலையிடுவது வழக்கம். ஈராக்கில் உள்ள அரபுக்கள் அங்குள்ள குர்திஷ் மக்களின் விடுதலைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையிலும் பார்க்க அதிக நடவடிக்கையை துருக்கி எடுப்பதுண்டு. சிரியாவிலும் இதே நிலைமை தான். உக்ரேனுக்கு இரசியாவிற்கு எதிரான போரில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை துருக்கி வழங்கி வருகின்றது. உக்ரேனின் கடற்பகுதிகளை இரசியா கைப்பற்றினால் கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கம் ஓங்குவது துருக்கிக்கும் அச்சுறுத்தல் என்பதை துருக்கி நன்கு உணரும். ஆனால் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதை துருக்கி கடுமையாக எதிர்க்கின்றது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவதைத் தடுத்து தனது வேண்டுகோளை கிரேக்கம் நிறைவேற்றியது போல் துருக்கியும் தனது காய்களை நகர்த்த முயல்கின்றது. ஆனால் துருக்கியி தனது கோரிக்கையில் உறுதியாக நிற்க மாட்டாது என நம்பப்படுகின்றது.

 

கங்கணம் கட்டுமா ஹங்கேரி?

1999-ம் ஆண்டு போலாந்து செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் ஹங்கேரியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. ஹங்கேரி இரசியாவில் இருந்து மலிவு விலையில் எரிவாயு வாங்க விரும்புகின்றது. அதற்கான விதிவிலக்கு தனக்கு வழங்கப் பட்டால் மட்டுமே சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் இணைய அனுமதிப்பேன் என ஹங்கேரி தன் காய்களை நகர்த்துகின்றது. நேட்டோ நாடுகளில் இரசியாவுடன் நல்ல உறவை ஹங்கேரி பேணி வந்தது. ஆனாலும் உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பது ஹங்கேரிக்கும் ஆபத்தானது.

உக்ரேன் போரின் பின்னர் மேற்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன என மேற்கு ஊடகங்கள் மார் தட்டிக் கொண்டிருக்கையில் துருக்கியும் ஹங்கேரியும் அந்த ஒருமைப் பாட்டை கலைக்குமா என 2022 மே மாதம் 21-ம் திகதிக்கு முன்னர் தெரிய வரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...