Monday 16 December 2019

அமெரிக்காவின் விண்வெளிப்படை

2020-ம் ஆண்டிற்கான அமெரிக்கப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு $738பில்லியன் டொலர்கள். ஆகும். இது 2019இற்கான செலவிலும் பார்க்க 22மில்லியன் டொலர்கள் அதிகமானது.  அமெரிக்க மக்கள் இந்தச் செலவு மிக அதிகம் எனக் கருதுகின்றார்கள். அமெரிக்கா எதிர் கொள்ளும் அரச நிதிப் பற்றக்குறைக்கு மத்தியில் இந்த அதிகரித்த நிதி ஒதுக்கீடு அமெரிக்காவின் உலக ஆதிக்கம் எந்த அளவிற்கு சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் ஈரானிடமிருந்தும் சவால்களை எதிர் கொள்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து  போட்டியிட முயலும் பேணி சண்டேர்ஸ் அமெரிக்காவின் படைத்துறைச் செலவு அதிகரிப்பு கோழைத்தனமானது என்றார். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை படையினருக்கு 3.1% ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. வெள்ளை மாளிகை கேட்டதிலும் பார்க்க மேலதிகமாக பன்னிரண்டு F-35 போர் விமானங்கள் வாங்கப்பட வேண்டும் என அமெரிக்கப் பாராளமன்றம் தீர்மானித்துள்ளது. ஒன்பது புதிய வெர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு 22பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

விண்வெளிப்படை
1947-ம் ஆண்டின் பின்னர் புதிதாக ஒரு படைத்துறை விண்வெளிப்படை என்னும் பெயரில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிடமிருக்கும் தரைப்படை, வான்படை, கடற்படை. கடல்சார் படை கரையோரப் பாதுகாப்புப்படை ஆகியவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விண்வெளிப்படைக்கு 2பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் விண்வெளிப்படை:
  1. விண்வெளியில் அமெரிக்கா சுதந்திரமாகச் செயற்படவும்
  2. விண்வெளியில் அமெரிக்கா துரிதமாகச் செயற்படவும்
தேவையான ஒழுங்கமைப்புக்கள், பயிற்ச்சிகள், உபகரணங்கள் வழங்கப்படவேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு சீனா தனது செய்மதி ஒன்றை தரையில் இருந்து ஏவுகணை ஒன்றை வீசி அழித்து ஒரு பரிசோதனையைச் செய்தது. பின்னர் விண்வெளியில் உள்ள உடைந்த செய்மதிகளை வாரி அள்ளக் கூடிய செய்மதிகளைப் பரிசோதித்தது. அதனால் சீனா விண்வெளியில் போர் நடவடிக்கைகளை விரிவு படுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுவதாக அமெரிக்கப் படைத்துறையின் அச்சம் வெளியிட்டனர். அதே துறையில் தாமும் இறங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தனர். இதனால் அமெரிக்கா விண்வெளிப்படையை உருவாக்குகின்றது. இதுவரை வான்வெளியில் (Sky) ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா விண்வெளியிலும் (space) ஆதிக்கம் செலுத்த முனைகின்றது.



அமெரிக்காவின் மேற்சட்டை செய்மதிகள்-2021 (JACKET -2021)
அமெரிக்காவின் பெரும்பாலான வேவுபார்க்கும் செய்மதிகள் தரையில் இருந்து 35,800கிலோ மீட்டர் உயரத்தில் செயற்படுபவை. அவற்றை உருவாக்க ஒரு பில்லியன் டொலர்கள் செலவாகும். அமெரிக்கா உருவாக்கவிருக்கும் SKY JACKET -2021 என்னும் செய்மதிகள் ஆறு மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்படுகின்றன. இவை மரபுவழி செய்மதிகளிலும் பார்க்க குறைந்த உயரத்தில் செயற்படும். அதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து துல்லியமாக தகவல்களைத் திரட்டக் கூடியன. அதனால் அமெரிக்காவின் விண்வெளிப் பாதுகாப்பில் SKY JACKET -2021 செய்மதிகள் இனி முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றன. இவற்றை ஒழுங்கு படுத்த Pit Boss என்னும் மென்பொருள் உருவாக்கப்படுகின்றன. Pit Boss திட்டம் என்பது விண்ணில் குறைந்த உயரத்தில் செயற்படும் செய்மதிகளில் இருந்து தகவல்களைத் திரட்டி அவற்றை நிரைப்படுத்துவதாகும். இது ஒரு பாரிய கணினி மென்பொருள் உருவாக்கும் திட்டமாகும். இதன் செயற்பாடுகள்  முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் கணினிகளால் செய்யப்படும். செயற்பாடுகள் யாவும் துரிதமாக நடைபெறும். இத்திட்டத்தில் முதன்மை நிறுவனங்களாக பிரித்தானியாவின் BAE Systems உடன் அமெரிக்காவின் SEAKR Engineering, Inc and Scientific Systems Company ஆகியவையும் இணைந்து செயற்படும்.. இவற்றுடன் Microsoft, Applied Technology Associates, Advanced Solutions Inc, Kythera Space Solutions and NKrypt போன்ற கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து கொள்கின்றன.

எதிரியின் நடவடிக்கைகளை உடன் இனம் காணுதல்
பல நாடுகளும் ஜீ.பி.எஸ் எனப்படும் Global Positioning Sytem என்னும் முறைமையை வழிகாட்டலுக்கும் படைத்துறை நிலையறிதலுக்கும் பாவித்து வருகின்றன. 2018 நவம்பரில் நேட்டோப் படைகள் பின்னாந்துடன் இணைந்து போர்ப்பயிற்ச்சி செய்து கொண்டிருக்கும் போது பின்லாந்தினதும் நோர்வேயினதும் ஜீ.பி.எஸ் முறைமைகளை இரசியா குழப்பியது. அதனால் இரு நாடுகளினதும் வான் போக்குவரத்து ஆபத்திற்கு உள்ளானது. சிரியாவிலும் இரசியா இஸ்ரேலிய விமானங்களை அதே மாதிரிக் குழப்பியது. இரசியாவின் அலைவரிசைக் குழப்பல் ஜீபிஎஸ் முறைமையை செல்லாக்காசு ஆக்கிவிட்டது.  ஜீபிஎஸ்ஸிற்கு மாற்றீடாக Positioning, Navigation, and Timing (PNT) முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. . Pit Boss ஆல் மேற்சட்டை செய்மதிகள் இயக்கப்படும் போது பரிமாறப்படும் தகவல்களால் Positioning, Navigation, and Timing (PNT) எனப்படும் இடமறித்தல், வழிகாட்டல், நேரக்கணிப்பிடல் செயற்பாடு அதிக திறனுள்ளதாகின்றது. கிடைக்கும். விண்ணில் உள்ள பல செய்மதிகள் செயற்கை நுண்ணறிவின் மூலம் செயற்படும்போது பூமியில் எதிரியின் படை நடவடிக்கைகளை துல்லியமாகவும் துரிதமாகவும் இனம்காண முடியும். இதனால் சீனாவும் இரசியாவும் உருவாக்கும் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர் சோனி ஏவுகணைகளை அமெரிக்காவால் இடைமறித்து அழிக்க முடியும். மிகப் பரந்த அளவில் Pit Boss முறைமை செயற்படுவதால உலகெங்கும் உள்ள அமெரிக்கப் படை நிலைகளை எதிரியின் ஹைப்பர் சோனிக் ஏவுகணகளில் இருந்து பாதுகாக்கலாம்.

மின்காந்த அதிர்வுத் தாக்குதல்
மின்காந்த அதிர்வுகளை மிகப் பாரிய அளவில் ஒரு எதிரி நாட்டின் மேல் பரவச் செய்வதால் அங்கு பெரிய ஒரு பிரதேசத்தில் கணினிகள், தொலைத்தொடர்புகள், இணையவெளித் தொடர்புகள் போன்றவற்றையும் மின்வழங்கலையும் முற்றாக செயலிழக்கச் செய்ய முடியும். ஆனால் எந்த ஒரு கட்டுமானமும் அழிக்கப்பட மாட்டாது. ஒரு எறிகணை மூலமாகவோ அல்லது ஆளில்லவிமானம் மூலமாகவோ மின்காந்த அதிர்வு பிறப்பாக்கியை எதிரி நாட்டின் மேல் ஏவலாம். சென்ற நூற்றாண்டில் அமெரிக்கா பரிசோதித்த நியூட்டோன் குண்டும் இத்தகையதே. அது கதிர் வீச்சு மூலம் எதிரியின் படையினரை அழிக்கும். மின்காந்த அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகளே செய்யவல்லனவாக இருந்தன.  ஆனால் இப்போது ஈரானும் வட கொரியாவும் அத் தாக்குதலைச் செய்யும் வலிமையை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா மேல் அவை தாக்குதல் செய்தால் 18 ஆண்டுகளுக்கு ஓர் அமெரிக்க நகரத்தில் மின்விநியோகம் இல்லாமல் செய்யலாம். அதனால் பாரிய பொருளாதார இழப்பு ஏற்படும் அச்சம் உள்ளது. 2019 மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மின்காந்த அதிர்வுத் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு என ஒரு அவசர நிறைவேற்றதிகாரக் கட்டளையைப் பிறப்பித்தார். அமெரிக்காவின் புதிய விண்வெளிப்படையும் குறைந்த உயரத்தில் செயற்படும் மேற்சட்டைச் செய்மதிகளும் அமெரிக்காவை மின்காந்த அதிர்வுத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்யும்.

உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திய பிரித்தானியா இப்போது ஒதுங்கியிருந்து செயற்படுபவது போல் அமெரிக்காவும் செயற்படவேண்டும் என்ற கருத்து அமெரிக்கர்களிடையே வலுவடைந்து வந்தாலும் அமெரிக்க ஆட்சியாளர்களும் படைத்துறையினரும் இப்போதைக்கு அமெரிக்காவை உலக ஆதிக்கத்தை கைவிடச் செய்யும் நோக்கத்துடன் இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...