Saturday 23 October 2021

சீனா ஒரு வளர்முக நாடா?

 


சென்ற நூற்றாண்டின் இறுதிவரை சீனா தனது படை வலிமையை இரகசியமாகவே வைத்திருந்தது. அமெரிக்காவும் இரசியாவும் தங்கள் படைவலிமையை பகிரங்கப்படுத்தி “எங்கிட்டே மோதாதே” என்ற செய்தியை ஒன்றிற்கு ஒன்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சீனா தனது படைவலிமையை இரகசியமாக வைத்திருந்து “என் வலிமை உனக்குத் தெரியாது, எங்கிட்டே வச்சுக்காதே” என்ற அமைதியான செய்தியை வெளிவிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் சீனா தனது “பொதுவுடமை” ஆட்சி எனப்படும் ஆளுமையில் தன்னாட்டு இளையோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது வலிமையை பகிரங்கப்படுத்த தொடங்கியது. சீனாவின் பாரிய நீர்மூழ்கிகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பரிசோதனைகள், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானங்கள் இரகசியமாக மேற்கொள்ள முடியாதவை ஆகும்.

வளர்முக நாடாக இருக்க சீனா விரும்புகின்றது

தொழில்நுட்பம் வர்த்தகம். உள் நாட்டுப் போக்குவரத்து, நகர கட்டுமானம் போன்றவற்றில் பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க சீனா முன்னேறியிருந்தாலும் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகவே முன்னிலைப்படுத்துகின்றது. உலக வங்கியினதும் ஐக்கிய நாடுகளினதும் கட்டளைவிதிகளின் படி சீனா ஒரு வளர்முக நாடாக கருதப்படுகின்றது. சீன அரசும் தன்னை ஒரு வளர்முக நாடாக கருதப்படுவதையும் அடையாளப்படுத்தப்படுவதையும் விரும்புகின்றது. ஆனால் எது வளர்முக நாடு எது வளர்ச்சி அடைந்த நாடு என பகுத்து அறிவதில் ஒரு ஒருமித்த உடன்பாடு இல்லை. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடா என முடிவு செய்வதில் அதன் பொருளாதார உற்பத்தி, தனிநபர் வருமானம், குடிமக்கள் சராசரி வாழும் காலம், கல்வி நிலைமை போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.

உலக வங்கியின் நிலை

உலக வங்கி வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற பாகுபாட்டைப் பயன்படுத்தாமல் 1. உயர் வருமானம். 2. உயர்-நடுத்தர வருமானம். 3. குறை-நடுத்தர வருமானம். 4. குறைந்த வருமானம் என நாடுகளைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது ஜீஎஸ்பி வரிச் சலுகை வழங்குவதில் இதையே பாவிக்கின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை அதன் மக்கள் தொகையால் பிரிக்க வருவதை தனிநபர் வருமானமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உலக வங்கி நாடுகளைத் தரம் பிரிக்கின்றது. அந்த வகையில் சீனாவின் தனிநபர் வருமானம் $10,410 ஆகும். அதனால் சீனா உயர்-நடுத்தர வருமான நாடாக உலக வங்கியால் பார்க்கப்படுகின்றது.

ஐநாவின் மனித மேம்பாட்டு சுட்டி (Human Development Index – HDI)



மனித மேம்பாட்டுச் சுட்டி மக்களின் வருமானம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, பாதுகாப்பு, சூழல் மாசு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. ஐநாவின் கணிப்பின்படி இச்சுட்டிப்பட்டியலில் நோர்வே உச்சத்தில் இருக்கின்றது அமெரிக்கா 17-ம் இடத்தில் இருக்க இலங்கை-72. சீனா-85, இந்தியா-131, பங்களாதேசம்-133, பாக்கிஸ்த்தான்-154 ஆகிய நிலைகளில் இருக்கின்றன.

சமமற்ற வருமானப் பங்கீடு

சீனாவின் பல்வேறு பிரதேசங்களைப் பார்க்கும் போது அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு மோசமாக இருக்கின்றது. சீனாவின் கரையோரமாக அமைந்த கிழக்குப் பிராந்தியம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் உள்ளகப் பிரதேசங்கள் வளர்ச்சி குன்றுதலாக இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தொகையில் 80விழுக்காட்டினர் நகரப்புறங்களில் வாழுகின்றனர். ஆனால் சீனாவி அது 60% மட்டுமே. சீனா தொழில்துறையில் பெரு வளர்ச்சி கண்டாலும் அதன் உற்பத்தித் துறையில் பெரும்பகு கீழ்-முனை உற்பத்தியாக (low-end manufacturing) இருக்கின்றது.

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் பல வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவை ஒரு வளர்முக நாடாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்புரிமை உள்ள நாடுகளை அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகள் என வகைப்படுத்தவில்லை. உறுப்பு நாடுகள் தாமே தமது நிலையை முடிவு செய்து கொள்ளலாம். அதனால் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு நாடு தன்னை வளர்முக நாடாகப் பிரகடனப் படுத்தியமையை மற்ற நாடுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். உலக வர்த்தக் நிறுவனத்தின் விதிகளைப் பின்பற்றுவதில் வளர்முக நாடுகளுக்கு இருக்கும் சலுகைகளை பாவிப்பதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்தியது. 2019 ஜூலையின் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் சீனாவின் வளர்முக நாடு நிலையை இல்லாமற் செய்யும்படி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சீனா தனது நிலையை மாற்ற மறுத்தது. 2020இல் அமெரிக்கா உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற குரலும் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அமெரிக்கா டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சீனாமீது தொடுத்த வர்த்தகப் போர் தனது வர்த்தக விதிமுறைகளுக்கு மாறானது என உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்தது,

2021 செப்டம்பரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியக்கதிரிலிருந்து மின் பிறப்பாக்கும் தகடுகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் முடிவிற்கு எதிராக சீனா கொடுத்த ஆட்சேபனை தொடர்பாக உலக வர்த்தக நிறுவனம் தனது முடிவை வெளியிட்டது. அது சீனாவின் ஆட்சேபனையை நிராகரித்தது.

சீனாவிற்கு எதிரான உ.வ.நி இன் முடிவு

2021 ஒக்டோபர் 20 முதல் 22-ம் திகதி வரை நடந்த உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டத்தில் சீனாவின் கைத்தொழில் கொள்கை சமமான போட்டியை பாதிக்கின்றது என அமெரிக்கா தெரிவித்தது. மற்ற மேற்கு நாடுகள் சீனா தனது சந்தையை மேலும் தாராளமயப்படுதல் செய்ய வேண்டும் என்றன. இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தில் சமநிலை இல்லை என்றது. சமமான போட்டியை உருவாக்குதல், தாராளமான சந்தையை(திறந்த சந்தை) ஏற்படுத்தல், உற்பத்தித் துறைக்கு தேவையற்ற அரச உதவிகளைத் தடுத்தல் போன்றவை உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும். ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தில் உரையாற்றிய சீனப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உ.வ.நி இன் முடிவை கடுமையாக ஆட்சேபித்த சீனா தன்னை தவறாக கையாள்வதாக தெரிவித்தது.

பொய்யர் கூட்டம்

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பன்னாட்டரங்கில் எந்த அளவு பொய்களை சொல்லும் என்பதை ஒவ்வொரு ஈழக் குடிமகனும் நன்கறிவான். சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை மிகைப்படுத்தி பொய் சொல்கின்றது. சினா பொதுவுடமை ஆட்சி என்னும் பெயரில் நடத்தும் அரச முதலாளித்துவ ஆட்சி சிறப்பாக நடக்கின்றது என்பதைக் காட்ட சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை உயர்த்திக் காட்டுகின்றது. அதேவேளைகளில் மற்றநாடுகளின் உழைப்பை சுரண்டுவதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

Wednesday 20 October 2021

சீனா இரகசியமாக நிர்மாணிக்கும் ஆளில்லா போர்க்கப்பல்

 


சீனாவின் வடகிழக்குப்பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உள்ள தலியன் துறைமுகத்தில் பல கடற்படைக்கலன்களை இரகசியாமகா உற்பத்தி செய்கின்றது. சீனா தன்னுடைய  விமானம் தாங்கிக் கப்பலுக்கும் லயோனிங் எனப் பெயரிட்டுள்ளது. தலியன் துறைமுகத்தில் 2017-ம் ஆண்டு ஒரு பெரிய இறங்குதுறையை சீனா கட்டி முடித்தது. அதிலிந்து அங்கு பல நீமூழ்கிகளையும் போர்க்கப்பல்களையும் செய்மதிகள் மூலம் அவதானிக்கப்படுகின்றன. அங்கு இரண்டு ஆளில்லாத தாக்குதல் போர்க்கப்பல்களை சீனா உருவாக்கி பரிசோதிப்பதாக அமெரிக்காவின் US Navy Institute தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் Xiaopingadao துறைமுகதில் பெருமளவு கடற்படைக் கட்டுமானங்கள் செய்யப்படுகின்றன. அங்கு இடம் போதாமையால் தலியன் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. தலியன் நகரம் சிறந்த நிதித்துறை நிலையமாகவும் அதன் கடற்கரை உல்லாசப்பயணிகளை கவர்வதாகவும் உள்ளன. தலியன் கடற்கரையை உல்லாசப் பயணிகள் பாவிப்பதை தடை செய்துவிட்டு அதை கடற்படைக்கலன் கட்டும் நிலையமாக சீனா மாற்றியுள்ளது. 


சீனா தனது 5Gஅலைக்கற்றை தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளையும் முந்திக் கொண்டு உருவாக்கி 6Gதொழில்நுட்ப உருவாக்கத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. ஆளில்லாமல் இயக்கப்படும் மகிழூர்ந்துகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றில் 5G மற்றும் 6G அலைக்கற்றை தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவையும் இணைத்து பாவிக்கும் போது அவற்றின் செயற்பாடுகள் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் பெரும் சவால்களாக அமையும். ஆளில்லா கப்பல்களை Uncrewed Surface Vessels (USV) என அழைப்பர். அவற்றைப் பரீட்சித்து பார்பதற்கு ஒரு பரந்த கடற்பரப்பு தேவை என்பதால் தலியன் துறைமுகம் உருவாக்கப்பட்டது. 

JARI USV

சீனா உருவாக்கும் ஒரு ஆளிலிக் கப்பலுக்கு JARI எனப் பெயரிடப்பட்டுள்ளது. US Navy Institute இன் கருத்துப்படி JARIஇல் அளவிற்கு அதிகமான படைக்கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. JARIஇன் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டே இரண்டாவது ஆளில்லாக் கப்பல் உருவாக்கப்படுகின்றது. JARI USV 15மீட்டர் நீளமும் 20தொன் எடையும் கொண்டது. படைக்கலன்களாக 30மிமி பீராங்கி, லேசர் வழிகாட்டல் ஏவுகணை வீசிகள், நான்கு கலன்கள் கொண்ட மேல் நோக்கிய வீசும் வசதிகள், தரையில் இருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள், நீருக்கடியில் வீசும் Torpedoes ஆகியவை உள்ளன. அந்த வகையில் JARI USV வான் பாதுகாப்பு, போர்க்கப்பல் அழிப்பு, நீமூழ்கி வேட்டை போன்றவற்றை செய்யக் கூடியவை. 

JARI USVயின் வெற்றீகரமான உற்பத்தியைத் தொடர்ந்து சீனா மேலும் ஒரு ஆளிலிக்கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பத அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளன. ஆனால் அதன் சிறப்புத்தன்மை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் பெரிய நாசகாரிக் கப்பல்களை இலக்கு வைத்து அது உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். தென் கொரியாவின் Sejong the Great அமெரிக்காவின் Arleigh Burk ஆகிய நாசகாரிக் கப்பல்கள் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. 

அமெரிக்க தனது Sea Hunter என்னும் ஆளிலிக் கப்பல்களைப் பிரதி பண்ணியே சீனா தனது ஆளிலிக் கப்பல்களை உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. 


Sunday 17 October 2021

Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவில் முன்னேறியசீனா

  


செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா பின் தங்கியதால் சீனா முன்னேறிவிட்டது என்ற செய்தி பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் மென்பொருள் பிரிவின் முதன்மைப் பதவியில் இருந்த நிக் சைலன் அமெரிக்கா போதிய நிதியை மென்பொருள் துறைக்கு ஒதுக்கவில்லை என்பதை ஆட்சேபித்து தன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்க மென்பொருள்துறைக்கு போதிய நிதி ஒதுக்காத நிலையில் சீனா அதற்கென பெருமளவு நிதியை ஒதுக்கியபடியால் அமெரிக்காவை விட சீனா செயற்கை நுண்ணறிவில் முன்னணியில் இருக்கின்றது என்பது நிக் சைலனின் குற்றச் சாட்டாகும்.

சீனாவிற்கு வாய்ப்பான அதன் மக்கள் தொகை

அமெரிக்காவின் மக்கள் தொகை 339மில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1,433 மில்லியனாகவும் உள்ளன. சீனா தனது நாட்டு மக்கள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் திரட்டி கையாள்கின்றது. ஓர் அமெரிக்கக் குடிமகனின் எல்லாத் தகவல்களையும் அரசு திரட்டி வைத்திருப்பதை அமெரிக்க மக்கள் தமது சுதந்திரத்தையும் அடிப்படை உரிமையையும் பாதிப்பதாக கருதுகின்றார்கள். சீனாவின் அதிக மக்கள் தொகை இருப்பதால் அரசு திரட்டும் தகவல்களும் அதிகமாக உள்ளன. அவற்றை கணினி மயப்படுத்தி தரவு நிரல்படுத்துவதற்கு உயர்தர மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சீனா சென்ற Microsoft

சீனா செயற்கை நுண்ணறிவு வளர்வதற்கு சிறந்த களமாக உள்ளபடியால் 2018-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான மென்பொருள்களை உருவாக்க தாம் விரும்புவதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது. 2019இல் Microsoft நிறுவனம் சீன படைத்துறையின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்வறிவு மேம்படுத்தலில் செயற்பட்டது. அவற்றில் சீனாவின் சிறுபான்மையினரைக் கண்காணிப்பது முதன்மையானதாக இருந்தது. அதனால் அமெரிக்க முதவை உறுப்பினர்(செனட்டர்) Ted Cruz அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைக்கு உதவக் கூடாது என தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். ஆனால் தாம் வெட்டு விளிம்பு (Cutting-Edge) தொழில்நுட்ப விரிவாக்கத்தில் உலகெங்கும் ஒத்துழைப்பதாக Microsoft தெரிவித்தது. Microsoft நிறுவனம் உருவாக்கிய Environmental Mapping தொழில்நுட்பம் சீனாவின் செயற்கை நுண்ணறிவின் மூலமான பொதுமக்கள் கண்காணிப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. சீனாவெங்கும் பொருத்தப்பட்டுள்ள 200மில்லியன்களுக்கும் அதிகமான கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் முகங்கள் மூலம் மனிதர்களை இனம் காணும் (Facial Recognition) மென்பொருள்கள் இணைக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஒருவர் தலைமறைவானால் அவரை ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் கண்டு பிடித்துவிடும்.

Microsoft ஐப் போல பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து பல தொழில்நுட்பங்களில் செயற்படுகின்றன. சீன அரசு தனது நாட்டில் இருந்து பல மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கின்றது. சில அமெரிக்கப் பலகலைக்கழங்கள் சீன அரசுடன் இணைந்து ஆய்வுகள் செய்கின்றன. அப்பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கு தேவையான நிதி அமெரிக்காவில் இருந்து கிடைக்காமையினால் அவை சீனாவை நாடுகின்றன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இவற்றிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சீனாவின் 5G & 6G அலைக்கற்றை தொழில்நுட்பம்

சீனாவின் OPPO நிறுவனம் “6G AI-Cube Intelligent Networking” என்னும் தலைப்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் எப்படி செயற்கை நுண்ணறிவைப் பாவித்து 6G அலைக்கற்றை உருவாக்குவது என்பது பற்றி விளக்கியுள்ளது. 4G இலும் பார்க்க 5G ஆயிரம் மடங்கு விரைவாகச் செயற்படும். 5Gஇலும் பார்க்க 6G ஆயிரம் மடங்கு வேளையில் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 6G தொழில்நுட்பத்தை கைப்பேசிகளில் செயற்படுத்துவதற்கு அவை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட படிமுறைகளை(Algorithms) உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும்.

ஹுவாவேயின் தானியங்கி மகிழூர்ந்துகள் (Autonomous Cars)

ஹுவாவே நிறுவனம் மற்ற நாடுகளை விட 5G தொழில்நுட்பத்தில் முந்தியமை அமெரிக்கர்களை பொறாமைக்கும் சினத்திற்கும் உள்ளாக்கியது. அதனால் அமெரிக்கா சீனா மீது ஒரு தொழில்நுட்பப் போரைத் தொடுத்து சீனாவிற்கு குறைகடத்திகளை (Semiconductors) ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. உலகிலேயே அதிக குறைகடத்திகளை உற்பத்தி செய்யும் தைவானையும் சீனாவிற்கான ஏற்றுமதியைத் தடைசெய்யும்படி வலியுறுத்தியது. ஹுவாவே வர்த்தக அடிப்படையில் 6G தொழில்நுட்பத்தை 2030அளவில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. அது செயற்கை நுண்ணறிவையும் 5G தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தானியங்கி வண்டிகளை உருவாக்கவிருக்கின்றது. ஹுவாவேயின் Intelligent World 2030 என்னும் அறிக்கையில் 2030-ம் ஆண்டு சீனாவின் மகிழூர்ந்துகளில் 20% தானியங்கிகளாக இருக்கும் என எதிர்வு கூறுகின்றது. ஹுவாவே நிறுவனம் சீனாவின் மகிழூர்ந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தானியங்கி மகிழூர்ந்துகளை உற்பத்தி செய்யவிருக்கின்றது. தற்போது சீனா மகிழூந்துகளை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளது. 2030இல் நிலைமை மாறலாம்.

செயற்கை நுண்ணறிவால் சிஐஏ முகவர்களை அழித்த சீனா

அமெரிக்காவின் மருத்துவத்துறையில் சீனா ஊடுருவி தகவல் திருட்டு செய்வதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. பின்னர் சீனாவில் செயற்படுக் கொண்டிருந்த சிஐஏ முகவர்களுடன் எந்த தொடர்பையும் சிஐஏயால் மேற்கொள்ள முடியாதிருந்தது. பின்னர் அவர்கள் கொல்லப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கலாம் என்ற செய்தி வெளிவந்தது. இவற்றை வைத்துப் பாருக்கும் போது ஒரு செயல்முறை நடந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது: 1. மருத்துவத் தகவலை செயற்கை நுண்ணற்வின் மூலம் வடிகட்டி சீனாவில் பணிபுரியும் அமெரிக்கர்களின் படங்களை சீனா பெற்றுக் கொண்டிருக்கலாம். 2. சீனா தனது செயற்கை நுண்ணறிவு மூலம் முகம் மூலம் இனங்காணும் முறைமை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தையும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். 3. அவர்களை கைது செய்து விசாரித்து அவர்களை தண்டித்திருக்கலாம்.

ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலை

கணினிகளின் செயற்கை நுண்ணறிவு கணினிகள் தாமாக கற்றறிந்து (Machine Learning) தம் அறிவை வளர்க்கின்றன. இது தொடர்ச்சியாக வளரும் போது முடிவில்லா அறிவை கணினிகள் பெற்றால் அது ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலையை எட்டலாம். ஒரு செயற்பாடு முடிவிலி பெறுமானத்தை ஏட்டும் நிலையை ஓரிமை (Singularity: A point at which a function takes an infinitive value) எனப்படும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...