Monday 27 July 2020

இந்தியா வாங்கிக் குவிக்கும் படைக்கலன்கள்

கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் சீனாவுடன் ஏற்பட்ட முறுகலுக்குப் பின்னர் இந்தியா புதிதாக ஐந்தரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கல கொள்வனவை செய்யவுள்ளதுடன் பிரான்சிடமிருந்து செய்யும் ரஃபேல் பற்பணி விமானக் கொள்வனவையும் துரிதப் படுத்தியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு கொள்வனவுச் சபையின் சிறப்புக் கூட்டம் 2020 ஜூலை 15-ம் திகதி நடைபெற்றது. இந்தியத் தரைப்படை தனது பீஷ்மா போர்த்தாங்கிகளில் (T-90 Bhishma Tanks) பொருத்துவதற்கென 1512 கண்ணிவெடிகளை அகழ்ந்து எடுக்கும் கருவிகளை வாங்குகின்றது. சீனாவுடனான எல்லையைக் கண்காணிப்பதற்கு இந்திய தனது உள்ளூர்த் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. Igla-S என்கின்ற வான் பாதுகாப்பு முறைமையையும் அவசரமாக வாங்குகின்றது. மேலும் இந்தியாவின் அவசரக் கொள்வனவில் இரசியாவிடமிருந்து புதிய 21 மிக்-29 ஜெட் விமானங்களும் ஏற்கனவே வாங்கிய 59 விமானங்களை மேம்படுத்துதலும் அடங்கும். லடாக் பிரதேச முறுகலின் பின்னர் அவசர தேவை அடிப்படையில் இந்தியா பல படைக்கலன்களைக் கொள்வனவு செய்வதால் வழமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு தவிர்க்கலாம். அமெரிக்காவிடமிருந்து வாங்கிய CH-47 Chinook heavy-lift helicopters என்னும் உலங்கு வானூர்திகளை லடாக் பிரதேசத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

ரஃபேல் கொள்வனவு
பாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்கும் இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I  ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா முன்பு கடைப்பிடித்தது. அதனால் பிரான்சிடமிருந்து தனக்குத் தேவையான பற்பணி விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதன் பின்னணியில் பல அரசியற் பிரச்சனைகள் இந்திய உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்தியா இரசியாவிடமிருந்து புதிய பன்னிரண்டு Su-30MKI போர்விமானங்களையும் 1.53பில்லியன் டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இரசியா தாமதப் படுத்திய எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா தற்போது துரிதப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலிடமிர்ந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Spike anti-tank guided missiles) இந்தியா வாங்குகின்றது. இந்தியாவின் கொள்வனவுப் பட்டியலில் ஜேர்மனியில் இருந்து வாங்குக் 72000 துமுக்கி துப்பாக்கிகளும் (sig 716 rifle) அடங்கும்.
இரண்டு ரஃபேல் படையணிகள்
ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலட்தில் உள்ள அம்பாலா ராணுவ விமான தளம் போய்ச் சேருகின்றன. ஆனால் அவை போருக்குத்தயார் நிலைக்கு வர 2 மாதங்கள் எடுக்கலாம். ஏற்கனவே இந்திய விமானிகளுக்கு பிரான்சில் வைத்து ரஃபேல் போர்விமானங்களை பறக்கும் பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் முப்பத்தியிரண்டு ரஃபேல் விமானங்களைக் கொண்ட இரண்டு விமானப்படையணியை இந்தியா உருவாக்கவுள்ளது. ஒரு படையணி ஹரியானாவில் அம்பாலாவிலும் மற்றது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானத் தளத்திலும் நிலைகொள்ளவுள்ளன. இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் வரும் அம்பாலா விமானத்தளம் சீன எல்லையில் இருந்தும் பாக்கிஸ்த்தான் எல்லையில் இருந்தும் சம தொலைவில் உள்ளது. ஹசிமாரா விமானத் தளம் இந்தியாவின் ஏழு வட கிழக்கு மாநிலங்களை இந்தியப் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கோழிக்கழுத்து என அழைக்கப்படும் சில்குரி பாதையை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். இது பங்களாதேசத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையில் உள்ள குறுகிய பாதையாகும். அத்துடன் இரு விமானத் தளங்களும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.
ரஃபேல் விமானத்தில் பொருத்தக் கூடிய ஏவுகணைகள்:
1. MBDA Scalp ஏவுகணைகள் (Air To Ground Cruise Missile). பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய இந்த MBDA Scalp ஏவுகணைகள் 5.1 மீட்டர் நீளமும் 450 கிலோகிராம் எடை 1000கிமீ/வினாடி தூரம் 560 கிலோ மீட்டர். 
2. Meteor ஏவுகணைகள் Air To Air Missile இவை தற்போது உள்ள வானில் இருந்து வானிற்கு தாக்குதல் செய்யக் கூடிய மிகச்சிறந்த ஏவுகணைகளாகும். Meteor ரக ஏவுகணைகள் : 3.7 மீட்டர்  190 கிலோக எடையும் கொண்டவை. இவை ஒலியிலும் பார்க்க நான்கு மடங்கு (Mach4) வேகத்தில் சென்று, 100 கிலோ மீட்டர் வரை உள்ள எதிரி போர் விமானங்களை தாக்கும் வலிமையுள்ளவை.
3. இரசியாவும் இந்தியாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள். பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.  ரஃபேல் விமானங்களும் அவற்றில் பொருத்தப்படவுள்ள ஏவுகணைகளும் இந்திய எல்லையில் பறந்து கொண்டே ரஃபேல் விமாங்களால் னபாகிஸ்தானில் உள்ள பல இலக்குகளை அழித்துவிட முடியும். அதே போலவே சீனாவின் பல பிரதேசங்கள் ரஃபேலின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.
இந்தியாவிற்கு என தனித்துவமான ரஃபேல்


பதின் மூன்று ரஃபேல் விமானக்கள் இந்தியாவிற்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் குளிரான கால நிலையில் விமானம் மேலெழும்பக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை India Specific Enhancements (ISE) என அழைக்கப்படுகின்றன. இமயமலைக்கு அண்மையாக உள்ள கஷ்மீர் பிரதேசத்தின் புவி அமைப்பைக் கருத்தில் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இமய மலைச் சாரலில் இருந்து விமானங்களை தரையில் இருந்து எழும்பச் செய்வதில் சீனா பெரும் பின்னடைவு நிலையில் உள்ளது.
சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
சீனா அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானங்களின் இரகசியங்களை இணையவெளி ஊடுருவல் மூலம் அபகரித்து தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இப்போது சீனா ஜே-20-பி என ஒரு மேம்படுத்தப்பட்ட போர்விமானங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றது. ரஃபேல் விமானங்கள் புலப்படாத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் சீனாவின் ஜே-20 போர்விமானங்களும் ஜே-31 போர் விமானங்களினதும் புலப்படாத் தனமை கேள்விக்குறியாகவே உள்ளது. சீன பாதுகாப்புத் துறை ஊடகங்கள் தமது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை இந்தியாவின் ரஃபேல் விமானங்களால் எதிர் கொள்ள முடியாது என மார்தட்டுகின்றன. ஒரு போர் நடக்கும் போது மட்டும் ரஃபேல் எந்த அளவுக்கு சீனாவிற்கு அச்சுறுத்தலானது என அறிய முடியும். விமானிகளின் போர் முனை அனுபவம் எனப்பார்க்கும் போது இந்திய விமானிகள் சிறப்பான நிலையில் இருக்கின்றனர்.
சீனாவை அச்சப்பட வைக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...