Wednesday 3 November 2021

சீனா-பாக் உறவிலும் பார்க்க துருக்கி-பாக் உறவு இந்தியாவிற்கு ஆபத்தானது.

  



இந்தியத் திரைப்படங்கள் துருக்கியில் எடுக்கப்படுவதுண்டு. மலிவான வெளிநாட்டு படப்பிடிப்பு செய்வதற்கு உகந்த இடங்கள் பல அங்குள்ளன. இந்திப் படப்பிடிப்பிற்கு துருக்கி சென்ற அமீர் கான் துருக்கிய அதிபரின் மனைவியான முதற் பெண்மணியை சந்தித்தமைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் அரசுறவியல் இழுபறி கஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை இந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் தீவிரமானது. 2020 பெப்ரவரியில் துருக்கிய அதிபர் ரிசெப் எர்துவான் இந்தியா இப்போது படுகொலைகள் பரவலாக நடக்கும் நாடாகிவிட்டது; என்ன படுகொலை; இந்துக்களால் செய்யப்படும் இஸ்லாமியப் படுகொலை என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையில் தொடரும் முறுகல்

2021 செப்டெம்பரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் துருக்கி இந்தியாவின் கஷ்மீரிலும் சீனாவின் உய்குரிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். கடந்த மூன்று ஆண்டுகளாக துருக்கி ஐநா சபையில் கஷ்மீர் பிரச்சனை ஐநா சபையினூடாக தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. இந்தியாவின் நிலைப்பாடு அது உள்நாட்டுப் பிரச்சனை. இந்திய பாக் பிரச்சனை என்பது ஓர் இருதரப்பு பிரச்சனை. அதில் மூன்றாம் நாட்டின் தலையீடு இருக்க கூடாது என்பதாகும். 5 வல்லரசுகள் உட்பட பெரும்பான்மையான நாடுகள் கஷ்மீர் தொடர்பாக தலையிடுவதில்லை. கஷ்மீரின் உரிமைகளை மோடி அரசு பறித்த போது சவுதி கருத்து தெரிவிக்கவில்லை. பாக்கிஸ்த்தான் சவுதியை இந்தியாவிற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் படி வலியுறுத்திக் கேட்டிருந்தது. துருக்கி ஐநாவில் கஷ்மீர் விவகாரங்களை எழுப்பும் போது இந்தியவின் தலைமை அமைச்சர் அல்லது பிரதிநிதி கிரேக்கம் ஆர்மினியா மற்றும் சைப்பிரஸ் அரசுறவியலாளரக்ளைச் ஐநாவில் சந்தித்து உரையாடுவார்கள். 2021-ம் ஆண்டு சைப்பிரசை 1974இல் துருக்கி ஆக்கிரமித்து இரண்டாகப் பிளந்து வைத்திருப்பதையும் அது ஐநா முடிவுகளுக்கு மாறானது எனவும் சுட்டிக் காட்டியது இந்தியா.

துருக்கி – பாக் சிறப்பு உறவு

நாடுகளிடையேயான “சிறப்பு உறவு” பல்வேறு காரணங்களுகாக உருவாக்கப்படுகின்றது. பொதுவான கொள்கைகளும் பொதுவான வெளியுறவும் முதன்மை முக்கிய காரணமாகும். இரண்டு நாடுகளும் படைத்துறையில் இணைந்து ஒன்றை ஒன்று பாதுகாப்பது இரண்டாவது கரணமாகும். பொருளாதார் ஒத்துழைப்பு மூன்றாவது காரணமாகும். துருக்கிக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் வளரும் சிறப்பு உறவு வித்தியாசமானதாகும் நடுவண் ஆசியாவில் உள்ள தேர்க்மெனிஸ்த்தான், அஜர்பைஜான், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் துருக்கிக்கு பாக்கிஸ்த்தான் தேவைப்படுவதுடன் போர் முனை அனுபவமுள்ள பாக்கிஸ்த்தான் படையினரின் உதவி துருக்கிக்கு தேவைப்படுகின்றது. அதற்கு பாக்கிஸ்த்தானின் எதிரியான இந்தியாவிற்கு எதிராக தனது நகர்வுகளைச் செய்து பாக்கிஸ்த்தானுடனான தனது உறவை சிறப்பாக்கிக் கொண்டிருக்கிறது துருக்கி.

உலக அரங்கில் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் துருக்கி

உலக அரங்கில் உறுதிப்பாட்டுடன் இருக்கும் துருக்கி நேட்டோ சகாக்களின் வேண்டுகோளை மீறி எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவேன் என அடம்பிடிக்கின்றது. அதனால் துருக்கிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அஜர்பைஜானுக்கு உதவி செய்து ஆர்மினியாவை தோற்கடித்த துருக்கி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். துருக்கியில் கைது செய்யப்படும் ஐ எஸ் அமைப்பினரை தண்டிக்காமலும் அவர்கள் பற்றிய விபரங்களை தனது நட்பு நாடுகளுக்கு வழங்காமலும் அவர்களை 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களது நாட்டுக்கு அனுப்பி விடுகின்றது என்ற குற்றச் சாட்டும் உண்டு. அல் கெய்தாவின் கிளை அமைப்பாகக் கருதப்படும் ஹயத் தஹீர் அல் ஷாம் என்னும் தீவிரவாத அமைப்புடனும் துருக்கி தொடர்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. சீனா நேரடியாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றது. சீனா இஸ்லாமியத் தீவிரவாதத்தை விரும்புவதில்லை. அது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் பரவலாக முன் வைக்கப்படுவதில்லை. இதனால் சீன-பாக் உறவிலும் பார்க்க துருக்கி-பாக் உறவு இந்தியாவிற்கு அதிக பாதகங்களை விளைவிக்கக்கூடியது

கஷ்மீருக்கு துருக்கியின் கூலிப்படை?

சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து படைக்கலன்களை உற்பத்தி செய்வது போல் பாக்-துருக்கி இணைந்த படைக்கல உற்பத்தி செய்கின்றன. ஆனால் துருக்கி ஐயாயிரம் தீவிரவாதிகளை சிரியாவில் இருந்து திரட்டி கஷ்மீருக்கு அனுப்ப திட்டமிடுவதாக கிரேக்கத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அவற்றின் படி அந்த தீவிரவாதிகளுக்கான ஊதியத்தை துருக்கி வழங்குகின்றதாம். கஷ்மீரில் செயற்படும் தீவிரவாதிகளுக்கு துருக்கி உற்பத்தி செய்யும் ஆளிலிவிமானங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. பாக்கிஸ்த்தானை இப்படிச் செய்து மகிழ்ச்சிப்படுத்தி கிரேக்கத்திற்கு எதிரான துருக்கியின் நகர்வுகளுக்கு பாக்கிஸ்த்தானியப் படைகளை பாவிக்க துருக்கி பெறுகின்றது.

இந்தியாவிற்கு மிகவும் ஆபத்தானது துருக்கி, பாக்கிஸ்த்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைவதுதான்.

Monday 1 November 2021

இரசிய சீன உறவும் அமெரிக்காவும்

 


பேராசிரியர் அலெக்சாண்டர் லுக்கின் என்பவர் சீனாவில் மதிக்கப்படுகின்ற ஒரு இரசியர். அவர் இரசிய சீனக் கூட்டில் உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். அந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். அவர் இப்போது இரசியா சீன உறவு உயர்ந்த நிலைக்குச் சென்று விட்டது என்றபடியால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இனிக் கீழ் முகமாகவே இருக்கும் என்கின்றார்.

மக்கள் சீனத்தை முதல் அங்கீகரித்த இரசியா

மக்கள் சீனக் குடியரசு 1949 ஒக்டோபர் 1-ம் திகது உருவக்கப்பட்ட மறு நாளே அதை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது. மேற்கு நாடுகள் அதை அங்கீகரிக்க மறுத்திருந்தன. ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு தைவானில் தஞ்சமடைந்த ஷியாங் கே ஷேக்கையே முழு சீனாவினதும் ஆட்சியாளராகவும் அவரது ஆட்சியையே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகவும் மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தன. மாவோ சே துங்கின் ஆதரவு தனக்கு அரசியல் செல்வாக்கை சோவியத் ஒன்றியத்தில் அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் அப்போதைய சோவியத் அதிபர் நிக்கித்தா குருஷேவ் சீனாவிற்கு பல படைத்துறை தொழில்நுட்ப உதவிகளை வழங்கினார். இரசியா வழங்கிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்தே சீனா அணுக்குண்டு உட்பட பல படைக்கலன்களை உருவாக்கியது.

நீண்ட தந்தி

அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் அரசுறவை உருவாக்குவதில் முன்னின்றி உழைத்தவர் ஜோர்ஜ் கென்னன் என்ற அமெரிக்கர். இரசியர்கள் மீது நல்ல மதிப்பை வைந்திருந்த அவரது முயற்ச்சியால் 1933-ம் ஆண்டு மொஸ்க்கோவில் அமெரிக்க தூதுவரகம் திறக்கப்பட்டது. சோவியத பொதுவுடமைவாதிகளின் கொள்கைகளை விரும்பாத ஜோர்ஜ் கென்னன் மொஸ்க்கோவில் இருந்து வாஷிங்டனுக்கு ஒரு 8,000 சொற்கள் கொண்ட ஒரு நீண்ட தந்தியை அனுப்பியிருந்தார். அத் தந்தி அமெரிக்க சோவியத் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் உலகெங்கும் பொதுவுடமைவாத மயமாக்க முயல்கின்றது. அது அடக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா உருவாக்கியது. அது அடக்கும் கொள்கை (Policy of Containment) எனப் பிரபல்யம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இரசியாவுடன் ஒத்துழைப்பதை ஜோர்ஜ் கென்னன் எதிர்த்திருந்தார். ஆனால் 1945இல் ஃபிராங்கிலின் ரூஸ்வெல்ட் இறந்த பின்னர் ஜோர்ஜ் கென்னனின் கொள்கை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் பெற்றது. அதுவே பனிப்போரை ஆரம்பித்து வைத்தது.

வறுமையில் இருந்த சீனா

1953-ம் ஆண்டில் ஜேசெப் ஸ்டாலினின் மறைவின் பின்பு சோவியத் ஒன்றிய ஆட்சியாளர்கள் உலக அரங்கில் ஓர் உடன் வாசம் செய்யும் வகையில் தமது கொள்கைகளை முன்னெடுக்க முயன்றனர். அதை மரபு வழி பொதுவுடமைவாதத்தில் இருந்து விலகிச் செல்லும் திரிபுவாதம் என சீனா ஆட்சியாளர் விபரித்தனர். அதன் பின்னர் சோவியத்திற்கும் சீனாவிற்கும் இடையில் பொதுவுடமைக் கோட்பாட்டு வேறுபாடு உருவாகியது. அப்போது வலிமை மிக்க சோவியத் ஒன்றியத்தால் சீனாவிற்கு ஆபத்து என்ற நிலை உருவான போது மேற்கு நாடுகளும் சீனாவும் ஒத்துழைக்க தொடங்கின. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கு நாடுகள் வசதிகள் செய்து கொடுத்தன. அப்போது சீனாவின் தனி நபர் வருமானம் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தின் 75இல் ஒரு பங்காக இருந்தது. அதனால் வறிய நாடாகிய சீனாவின் பொருளாதார வளர்ச்சி தமக்கு சவலாக அமையாது என்றும் சீனாவின் வளர்ச்சி சோவியத் ஒன்றியத்தை அடக்கும் கொள்கைக்கு உகந்ததாக அமையும் என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதினர்.

உக்ரேன் ஆக்கிரமிப்பு

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தமையும் சிரியாவில் இரசியா தலையிட்டு அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலைக் குழப்பியமையும் அமெரிக்க இரசிய உறவில் பெரும் விரிசனை ஏற்படுத்தின. அதனால் பராக் ஒபாமா தனது ஆசிய சுழற்ச்சி மையம் திட்டத்தில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது. அமெரிக்கா உக்ரேனிலும் சிரியாவிலும் சிக்கியிருக்கையில் சீனா தென் சீனக் கடலில் தனது செயற்கைத் தீவுகளை உருவாக்கியது. இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் செய்யும் நகர்வுகளும் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உறவை நெருக்கப்படுத்தியது எனப்படுகின்றது. 2015 ஜூன் 5-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கையொப்பமிட்டு வெளிவிட்ட அறிக்கை இரசிய சீன உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தது.

நடுவண் ஆசியா (Central Asia)

நடுவண் ஆசியாவில் முக்கிய நாடுகள் கஜகஸ்த்தான்கிர்கிஸ்த்தான்தஜிகிஸ்த்தான்தேர்க்மெனிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகியவையாகும்.  இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் இவை சுதந்திர நாடுகளாகினஇவை அபரிமிதமான இயற்கை வளங்களைக் கொண்டவை.  அதனால் சீனாஇரசியாஐரோப்பிய ஒன்றியம்ஐக்கிய அமெரிக்காஇந்தியா ஆகிய நாடுகள் நடுவண் ஆசிய நாடுகளுடனான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனசீனாவின் தரைவழிப் பட்டுப் பாதைக்கும் பொருளாதாரப் வளையத்திற்கும் இந்த நாடுகள் அவசியமானவையாக உள்ளனமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவின் ஆதிக்கத்திற்குள் மீண்டும் உட்பட்டு இருக்க வேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கொள்கையாகும்.

சீனாவின் தரைவழிப்பட்டுப்பாதையும் இரசியாவும்

நடுவண் ஆசிய நாடுகளை இரசியா ஐரோப்பிய ஆசிய பொருளாதார ஒன்றியம் (Euro Asian Economic Union) என்ற பொருளாதாரக் கூட்டமைப்பின் கொண்டு வர முயல்கின்றது. சீனா நடுவண் ஆசிய நாடுகளை தனது பொருளாதார விரிவாக்கத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பின் (Belt and Road Initiative) மூலம் சுரண்ட முயல்கின்றது. இங்கிருந்துதான் இரசிய சீன முரண்பாடு தோன்ற வாய்ப்புண்டு. மெல்ல மெல்ல மென்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா. அதே உபாயத்தை இந்திய எல்லையிலும் நடுவண் ஆசியாவிலும் நிறைவேற்ற முயற்ச்சிக்கின்றது. தஜிகிஸ்த்தானில் பெரும்பான்மையாக வாழும் தஜிக் மக்கள் ஈரானுடன் கலாச்சாரத் தொடர்புள்ளவர்கள். தஜிக்கிஸ்த்தான் உய்குர் மக்களை அடக்க சீனாவிற்கு உதவுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா தனது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (Belt and Road Initiative) திட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தை இணையவெளியூடாக நடத்திய போது அதில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் கலந்து கொள்ளவில்லை. இரசியா சார்பில் ஒரு அதிகாரி மட்டும் கலந்து கொண்டார். நடுவண் ஆசிய நாடுகளில் வேற்று நாட்டுப் படைகள் இருப்பதை இரசியா விரும்புவதில்லை. ஆனால் தஜிக்கிஸ்த்தானில் சீனப் படைகள் நிலை கொண்டுள்ளன. பல நடுவண் ஆசிய நாடுகளுக்கு சீன படைக்கலன்களை விற்பனை செய்வதுடன் பயிற்ச்சியும் வழங்குவது இரசியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இரசியா தலைமியிலான ஒருமித்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Organisation) என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இரசியா, கஜகஸ்த்தான், ஆர்மினியா, கிரிகிஸ்த்தான், பெலரஸ், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகள் உள்ளன. அதில் ஒரு நாடான தஜிகிஸ்த்தானில் சீனப்படைகள் நிலை கொள்வதை இரசியா வெறுக்கின்றது. சீனா ஆண்டு தோறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் 30,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி அவர்களுக்கு கொன்ஃபியூசியஸ் தத்துவங்களை போதிக்கின்றது. இது அந்த நாடுகளை ஒரு நீண்டகால அடிப்படையில் சீனமயமாக்கும் முயற்ச்சியாக பார்க்கலாம்.

குறுங்கால அடிப்படையில் சீன இரசிய உறவு உறுதியானது.

சீனாவும் இரசியாவும் இணைந்து ஜப்பானைச் சூழவுள்ள கடற்பகுதியில் 2021 ஒக்டோபர் நடுப்பகுதியில் பத்து கடற்படைக் கலன்களுடன் செய்த போர்ப்பயிற்ச்சியும் அதற்கு சீனா அனுப்பிய தன் முன்னணி நாசகாரிக் கப்பல்களும் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் தற்போது உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இரசிய சீன உறவு உறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் இரசியாவை சீனாவிற்கு நெருக்கமாக்கின்றது என்பதை உணர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை நிபுணர்கள் இரசியாவுடனான முறுகலை உறைநிலையில் வைத்து விட்டு சீனாமீது அதிகம் கவனம் செலுத்தலாம் எனக்கருதுகின்றனர். இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரே நேரத்தில் போர் தொடுத்தால் அமெரிக்கா நிச்சயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். குவாட்டை ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு என காட்டாமல் இருப்பதற்கு அமெரிக்கா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. ஆனால் தேவை ஏற்படின் குவாட் உறுப்பு நாடுகளான ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா, அமெரிக்கா இணைந்து சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை செய்யும்.



ஆர்க்டிக் பிராந்தியம்

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் தோன்றக் கூடிய இன்னொரு பிராந்தியம் ஆர்க்டிக் வளையம் ஆகும். இரசியா அதை தனது பிராந்தியம் என நினைக்கின்றது. ஆர்க்டிக் வளைய பிராந்தியத்தில் உரிமையுள்ள நாடுகளில் சீனா இல்லை. ஆனால் அங்கு சீனா அதிக அக்கறை காட்டுகின்றது. பனிப்பாறைகளை உடைத்துக் கொண்டு செல்லக் கூடிய அணுவலுவில் இயங்கும் முப்பதினாயிரம் எடை கொண்ட ஒரு கப்பலை சீனா உருவாக்குவது இரசியாவை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். அந்தக் கப்பல் ஒரு போர்க்கப்பலா அல்லது வர்த்தக கப்பலா என்பதைக் கூட சீனா இரகசியமாக வைத்திருக்கின்றது.

சீனாவின் நீண்ட கால கொள்கை உலக ஒழுங்கை தனக்கு ஏற்ப மாற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும். அது இரசியாவிற்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இரசியாவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட காலம் பேண முடியாது. தன்னையும் உள்ளடக்கிய ஒரு பல்துருவ ஆதிக்கத்தை இரசியா உருவாக்கும் முயற்ச்சியில் வெற்றி பெறும் வரை இரசிய சீன உறவு உறுதியாக இருக்கும்.  

Sunday 31 October 2021

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தால் கலங்கிப் போயுள்ளேன்!

  


Tamil Advocacy Group ஒழுங்கு செய்த முதலாவது கலந்துரையாடலில் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்ன ஒரு வாக்கியம்: ஈழத்தமிழர் தொடர்பாக India ஒரு role play பண்ணும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தனது role ஐ play பண்ணும்

இரண்டாம் கலந்துரையாடலில் சொன்ன இரு வாக்கியங்கள்:

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் இந்தியாவை Involve பண்ண வைக்க வேண்டும்.

இந்தியாவை மீறி வேறு யாரும் தமிழர்கள் பிரச்சனையைக் கையாள முடியாது

இந்த 3 வாசகங்களைக் கேட்டதில் இருந்து நான் கலங்கிப் போயிருக்கின்றேன்.

நேரு கொத்தலாவலை ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சௌமியமூர்த்தி தொண்டமான் – ஜீஜீ பொன்னம்பலத்தை ஒன்றுபடமல் பிளவு படுத்தியதில் India’s role எமக்குத் தெரியும்.

தமிழ் மீனவர்களுக்கு பல வசதிகள் உள்ள கச்சதீவு தாரைவார்ப்பில் India’s role எமக்குத் தெரியும்.

1980களில் வேண்டுமென்றே பல போராளி அமைப்புகளை உருவாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகளுக்கும் – ரெலோவிற்கும் இடையில் நடந்த மோதலில் India’s role எமக்குத் தெரியும்.

யாழ் மருத்துவமனைப் படுகொலை உட்பட்ட பல கொலைகளில் India’s role எமக்குத் தெரியும்.

படைக்கலன்களைக் கொடுங்கள் உங்களுக்கு நாம் பாதுகாப்பு என்ற தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் நடந்த இனக்கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2007-09 வரை நடந்த இனக்கொலைப் போரில் எத்தனை ஆயிரம் இந்தியப்படையினர் ரோல் பிளே பண்ணினார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.

அப்போரின் போது இந்தியக் கடற்படையினர் எமது கடற்பரப்பை சுற்றி நின்று பிளே பண்ணிய role எமக்குத் தெரியும்.

ரணில் தலைமை அமைச்சராகவும் சந்திரிக்கா அதிபராகவும் இருந்த வேளையில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வழங்க சிங்களம் முன்வந்த போது அதைக் குழப்ப ரணில் ஆட்சியைக் கலைத்து ஜேவிபியையும் இணைத்து மஹிந்தவை தலைமை அமைச்சர் ஆக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் அழிப்பில் India’s role எமக்குத் தெரியும்.

மூன்று இலட்சம் அப்பாவிகள் கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2009 போரின் பின்னர் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தின் வாசகங்களை மாற்றி இலங்கையை பாராட்டும் தீர்மானமாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக வரும் தீர்மானங்களில் India’s role எமக்குத் தெரியும்.

India’s role என்று எங்களுக்கு ரீல் விடுகின்றார்கள்.

சுரேஸ் பிரேமசத்திரன் இந்தியா role play பண்ணும், பண்ண வைக்க வேண்டும் என்கின்றார்.

இந்தியா இனியும் role play பண்ணி இன்னும் எத்தனை இலட்சம் தமிழர்களை இந்தியா பலியெடுக்கப் போகின்றதோ என்பதை எண்ணி நான் கலங்கிப் போயுள்ளேன்.

பிரம ஹத்தி பிடித்த இந்தியாவை role play வைக்க வேண்டும் என்பவர்களுக்கு சித்தப் பிரமை என்பது மட்டும் உண்மை.

இந்தியா role play பண்ணுவதென்றால் இன்னும் ஓர் அமைதிப்படை என்னும் பெயரில் கொலைவெறி நாய்களின் படையா? இன்னும் ஒரு மண்டையன் குழுவா? 

ஐயோ தமிழினம் தாங்காதய்யா!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...