Saturday 2 April 2022

புட்டீன் இரும்பு வேலி அமைக்கின்றாரா? பொறியில் சிக்கினாரா?

  


உக்ரேனில் நடப்பது அயோக்கிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி என்பதை மனதில் கொண்டு அங்கு நடப்பதைப் பார்ப்போமாக. London School Economics என்னும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் உக்ரேனை புட்டீனை மாட்ட வைக்கும் பொறியாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில நேட்டோ நாடுகள் பாவிக்கின்றன என ஒரு கட்டுரையை உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade எழுதியுள்ளார். அவரின் கருத்துப் படி உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கத் தூண்டும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அவரை அங்கு சிக்க வைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அவருக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்வது புட்டீனின் எதிரிகளின் நோக்கம் என்கின்றார் Robert H Wade.

வல்லரசுகளுக்கு கவசம் அவசியம்.

ஒரு வல்லரசு நாட்டைச் சுற்றிவர ஒரு கவசப் பிரதேசம் இருத்தல் அவசியம். அப்பிரதேசத்தில் இருக்கும் அரசுகள் நட்பாக அல்லது நடுநிலையாக இருக்க வேண்டும். வலிமை மிக்க இரண்டு போட்டி நாடுகளிடையே இருக்கின்ற நாடுகள் எந்த நாட்டுக்கு கவச நாடாக இருப்பது என்ற போட்டி இடையில் இருக்கும் நாட்டிற்கு மிகவும் பாதகமாக அமையும். இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் இருக்கும் நேப்பாளம் உருப்பட முடியாமல் இரண்டு நாடுகளும் சதி செய்கின்றன. நேப்பாளத்தின் நிலை இரண்டு யானைகள் சண்டை பிடித்தாலும் காதல் செய்தாலும் காலடியில் இருக்கின்ற புற்களுக்குத்தான் அழிவு என்பது போன்றது. சோவியத் ஒன்றியத்தின் இரும்பு வேலி நாடுகளாக போலாந்து, கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, அல்பேனியா ஆகிய நாடுகள் இருந்தன. இவை சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளல்ல ஆனால் இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகள் என ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவிற்கு சவால் விடும் நாடுகளாக இருந்தன. அந்த இரும்பு வேலி 1991இல் வார்சோ கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் தகர்ந்து போனது. “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள்” என்னும் படைத்துறைக் கூட்டமைப்பை 1994-ம் ஆண்டு இரசியா ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான், ஆர்மீனியா, பெலரஸ், கஜக்கஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து உருவாக்கியது. ஆனால் அதில் இருந்து ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான் பின்னர் விலகி விட்டன. அந்த பாதுகாப்பு கூட்டமைப்பில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் இருத்தல் அவசியம். உக்ரேனியர்களை நேட்டோ கூட்டமப்பு தனது பரப்புரைகள் மூலம் தம் பக்கம் கவர்ந்து விட்டது. நேட்டோவில் இணையக் கூடிய தகமை உக்ரேனுக்கோ அல்லது ஜோர்ஜியாவிற்கோ இல்லை. இருந்தும் அவை இரண்டையும் தாம் வரவேற்பதாக நேட்டோ நாடுகள் அறிவித்தன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனை போன்ற இரசியாவுடன் முறுகலை விரும்பாத நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதில் அக்கறை காட்டவில்லை.

நட்பற்றவர்களால் சூழப்பட்ட இரசியா

உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைச் சூழ பதினைந்திற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. வட துருவத்தில் அமெரிக்காவின் அலாஸ்க்கா மாகாணம் எல்லையாக இருக்கின்றது கிழக்கில் நேட்டோ நாடுகளான லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, நோர்வே, போலாந்து ஆகிய நேட்டோ நாடுகள் உள்ளன. தூர கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. தற்போது இரசியாவுடன் பல ஒத்துழைப்பைச் செய்யும் வல்லரசான சீனா இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அணுகுண்டு வைத்திருக்கும் வட கொரியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. உக்ரேனும் ஜோர்ஜியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்ட நாடுகள். 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து அதன் நிலப்பரப்பில் இரு பகுதிகளை தனி நாடாக்கியது இரசியா. 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களையும் பிரித்து இரசியா தனி நாடாக்கியது. கஜகஸ்த்தானும் மொங்கோலியாவும் பிரச்சனை இல்லாத இரசியாவின் அயல் நாடுகள் எனக் கருதலாம். இரசியாவின் ஒரே நட்பு நாடு பெலாருஸ் மட்டுமே. இந்த சூழலில் இரசிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கொள்கை வகுப்பாளர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றார்கள்.

புட்டீனின் சோவியத்-2.0 கனவு

தற்போதைய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் 1991-ம் ஆண்டில் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியம் உடைந்ததை 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார்-அரசியல் விபத்து எனக் கருதுகின்றார். மீண்டும் இரசியா தலைமையில் சோவியத் ஒன்றியம்-2ஐக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவுடன் 1999-ல் ஆட்சிக்கு வந்த புட்டீன் 2020-ம் ஆண்டு இரசியா உலகின் முதற்தர வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டவர். சோவியத் ஒன்றியம் போல் பொருளாதாரம் மீது அதிக கவனம் செலுத்தாமல் படைத்துறையை மட்டும் கட்டி எழுப்பினால் போதாது என்பதை நன்கு உணர்ந்தவர். படைத்துறையை சிக்கனத்துடன் கட்டி எழுப்ப வேண்டும் என நினைப்பவர். இரசியாவை முன்பு ஆண்ட பொதுவுடமைக் கட்சியினர் படைக்கல உற்பத்தியில் சிக்கனத்தையோ பொருளாதாரத் திறனையோ கடைப்பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை கட்டி எழுப்ப இரசியாவிற்கு மிகவும் அவசியமான நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஆகும். இரண்டு நாடுகளையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைப்பது போல அமெரிக்கா நடிக்கின்றது. இரண்டு நாடுகளும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைய விரும்புகின்றன. அப்படி இணைய முற்பட்டால் இரசியா அதைக் கடுமையாக எதிர்க்கும் என நேட்டோ நாடுகள் அறியும். இன்னொரு நாட்டுடன் போர் புரியக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. உறுதியான அரசு, அமைதி, மனித உரிமைகளைப் பேணுதல், காத்திரமான பொருளாதாரம் போன்றவை உள்ள நாடுகள் மட்டுமே நேட்டோவில் இணையலாம். ச் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முயன்றமை விளடிமீர் புட்டீனைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2022 பெப்ரவரி மாதம் 24-ம் திகதி இரசியாவை சுற்றி ஒரு இரும்பு வேலி போடும் நோக்கத்துடன் இரசியப் படைகளை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார்.

பொருளாதாரத்தால் இரசியாவை விழுத்தினார்களாம்

பொருளாதாரப் பிரச்சனையால் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தமைக்கு அது ஆப்கானிஸ்த்தானில் படையெடுத்தமை முக்கிய காரணமாகும். சோவியத்-2.0ஐக் கட்டி எழுப்பும் முயற்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய அமெரிக்கா திட்டம் போட்டிருக்கலாம். அமெரிக்கா உக்ரேனுடன் ஒரு தொடர்ச்சியான போரை நடத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் காத்திருந்த வேளையில் 2014-ம் ஆண்டு புட்டீன் ஒரு சில நாட்கள் செய்த படை நடவடிக்கையின் மூலம் இரசியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவைக் கைப்பற்றினார். அப்போரில் இரசியாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படாமல் புட்டீன் பார்த்துக் கொண்டார். அதை சாட்டாக வைத்து உக்ரேனியர்களை நேட்டோவில் இணையத் தூண்டும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உக்ரேனியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களும் போதிய பயிற்ச்சியும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளால் வழங்கப்பட்டது. 2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவில் உக்ரேன் இணையவேண்டும் என அதன் அரசியலமைப்பு யாப்பை திருத்தியது. இது புட்டீனுக்கு போடப்பட்ட தூண்டிலாக இருக்கலாம். 2020இல் சோவியத்-2.0 கட்டி எழுப்பும் திட்டத்துடன் இருந்த புட்டீனுக்கு இது பெரும் சினத்தை மூட்டியது. அப்போது பரவிய கொவிட்-19 பெருந்தொற்று அவருக்கு தடையாக இருந்தது. அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களும். லேசர் படைக்கலன்களும் தொலைதூர தாக்குதல் விமானமான B-21 போன்றவை போர்க்களத்தில் முழுமையான பாவனைக்கு தயாராக முன்னர் 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்கு தன் படைகளை அனுப்பினார்.

உண்மையை உளறிக் கொட்டினாரா ஜோ பைடன்?

அமெரிக்க அதிபர் 2022 மார்ச் 26-ம் திகதி போலந்து தலைநகர் வார்சோவில் தயாரிக்காத உரை ஒன்றை ஆற்றும் போது “கடவுளிற்காக அந்தாள் (புட்டீன்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது” என்றார். இது அவர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லவில்லை என்பதை உலகை நம்ப வைக்க அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் உட்பட பலர் சிரமப் பட்டார்கள். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிலிங்கன் தங்களிடம் இரசியாவில் ஆட்சி மாற்றம் செய்யும் உபாயம் இல்லை என்றார். ஆனால் புட்டீன் உக்ரேனுக்கு படையனுப்பிய 2022 பெப்ரவரி 24-ம் திகதி தனது வெள்ளை மாளிகையில் உரையாற்றைய ஜோ பைடன் இரசியாமீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையல்ல மாறாக இரசியாவைத் தண்டிக்கச் செய்யப்பட்டவை. அதனால் இரசியர்களுக்கு புட்டீன் எதைக் கொண்டு வந்தார் என்பதை உணரவைக்க முடியும் என்றார். அதன் பின்னர் மூன்று நாள்கள் கழித்து பிரித்தானியப் படைத்துறை அமைச்சர் எழுதிய கட்டுரை ஒன்றில் புட்டீனின் தோல்வி முழுமையானதாக இருக்க வேண்டும். உக்ரேனிய இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இரசியர்கள் புட்டீன் தங்களைப்பற்றி என்ன எண்ணுகின்றார் என்பது உணர்த்தப் படவேண்டும். அதன் மூலம் புட்டீனின் நாட்கள் எண்ணப் படவேண்டும். புட்டீனுக்குப் பின்னர் இரசியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்ய முடியாத அளவிற்கு அவர் அதிகாரத்தை இழக்க வேண்டும் என்றார். 2022 மார்ச் முதலாம் திகதி பிரித்தானிய தலைமை அமைச்சரின் பேச்சாளர் இரசியா மீது கொண்டு வரப்பட்டுள்ள தடை புட்டீனின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வரும் என்றார். இந்த அறிக்கைகள் உக்ரேனை நடுவணாக வைத்து மாஸ்க்கோவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அமெரிக்க உபாயத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார் உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade. இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு உக்ரேனை புதைகுழியாக்கக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனியரகளுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தில் இரசியப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரத் தடைகளை இரசியாமிது விதிக்கின்றன நேட்டோ நாடுகள். அதே வேளை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் புட்டீனை ஒரு கொடூரமானவராகவும் மன நிலை சரியில்லாதவராகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

Consortium News என்னும் இணையத் தளத்தில் Joe Lauria எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கு நாடுகளின் இறுதி நோக்கம் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றி தமக்கு இணக்கமாக நடக்கக் கூடிய ஒருவரை இரசியாவின் ஆட்சி பீடத்தில் என்றார். ஆனால் இரசிய மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள்.

Tuesday 29 March 2022

உக்ரேன் போரால் உலகம் படும்பாடு

 

 


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது அரிது. கொரியப் போர், வியட்னாம் போர், ஈராக் போர் போன்றவை உலகின் மறுபகுதிகளில் செய்திகளாக மட்டுமே அடிபட்டன. ஆனால் உக்ரேன் மீது இரசியா தொடுத்த போருக்கு எதிராக நேட்டோ நாடுகள் தொடர்ச்சியாக எடுத்து வரும் பொருளாதார தடைகள் உலகெங்கும் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொவிட்-19 பெரும் தொற்றால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உக்ரேன் போரும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகை ஆட்டிப்படைக்கின்றது. எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் தவிக்கின்றன. சிதறிப்போயிருந்த உலக சரக்கு விநியோகச் சங்கிலி மேலும் சிதைவடைகின்றது. எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க டொலரில் வைத்திருந்த வைப்பீடுகளின் பெறுமதி தேயுமா என கரிசனை கொண்டுள்ளன.

மானம் இழக்கும் இரசியா

போரில் வெற்றி பெறுவதற்கு வான்படையின் வலிமை அவசியம் என்று புவிசார் அரசியல் கோட்டாளர்களின் ஒருவரான அலெக்சாண்டர் பி டி செவேர்ஸ்கி வான் வலிமையே போரை வெல்லும் என்றார். உக்ரேனிலும் பார்க்க பதினைந்து மடங்கு பெரிய இரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க, ஒன்பது ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான படையினரை ஒரு மாதத்தில் இரசியா உக்ரேனில் இழந்து விட்டது. சிறந்த ஒருங்கிணைப்பின்மை, வழங்கல் குறைபாடு, படையினரிடம் மன உறுதியின்மை, உகந்த உளவுத் தகவல் பெறமுடியாமை. எதிரியின் வலுவை மதிப்பிடத் தவறியமை என பல குற்றச் சாட்டுகள் இரசியப்படையினர் மீது சுமத்தப்படுகின்றது. உக்ரேன் போரில் இரசியா உலக அரங்கில் மானம் கெட்டு நிற்கின்றது. தன் எதிரிகளிடையே ஓர் உறுதியான ஒற்றுமையையும் அது உருவாக்கியுள்ளது.

கையாலாகாத நேட்டோவும் செல்லாக் காசான ஐநாவும்

உக்ரேனில் நடக்கும் போரின் நடுப்புள்ளி நேட்டோவாகும். உக்ரேன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த போது அது சுவீடன் போல் ஒரு நடுநிலை நாடாக இருப்பதே உகந்தது அல்லாவிடில் பேரழிவு ஏற்படும் என உக்ரேனுக்கு உண்மை நிலையை உணர வைக்காமல் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கான கதவு திறந்திருக்கின்றது என அதை ஊக்குவித்தது நேட்டோ. இப்போது உக்ரேனில் பெரும் சொத்தழிவும் உயிரிழப்புக்களும் நடக்கும் போது அதைத் தடுக்க முடியாமல் நிற்கின்றது நேட்டோ. ஐநா பாதுகாப்புச் சபையில் புட்டீனின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முடியவில்லை. பொதுச்சபையில் உக்ரேன் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் வெறும் காகிதம் மட்டுமே.

தூங்கிய ஜெர்மனியை இடறி எழுப்பிய புட்டீன்

தனது பொருளாதார வலிமையையும் புவிசார் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் குறைந்த அளவு நிதியை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிக் கொண்டு இரசியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து இரசியாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்து கொண்டு சிவனே என இருந்த ஜெர்மனி உக்ரேன் போரால் தனது பாதுகாப்பு செலவை அதிகரித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35A வாங்கவுள்ளது. மேலும் தன்னிடமுள்ள Eurofighter போர்விமானங்களை இலத்திரனியல் போர் புரியக் கூடிய வகையில் மேம்படுத்தவுள்ளது. இரசிய ஆக்கிரமிப்பிற்கு ஒரே பதில் நேட்டோ ஒற்றுமையும் படைவலிமையும் என்றது ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை. இரசியாவிற்கு அண்மையாக ஒரு வலிமை மிக்க அரசாக ஜெர்மனி உருவாகின்றது.

பாடம் கற்ற பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேண வேண்டும் இரசியாவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனப் போதித்து வந்தது. புட்டீனை 2022 பெப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்த பின்னர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உக்ரேன் நெருக்கடியை தான் மோசமாக்க மாட்டேன் என புட்டீன் தனக்கு உறுதிமொழி வழங்கியதென்றார். புட்டீன் ஒரு புரியாத புதிர் என அவர் பாடம் கற்றிருப்பார் என நம்பலாம். பிரான்ஸிடம் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி படைக்கலன்கள் உதவி முக்கியமாக போர்த்தாங்கிள் வழங்கும் படி கேட்ட போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுத்துவிட்டார். அவர் இரசியாவிற்கு அஞ்சுகின்றார் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியதுடன் பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்ஸனின் துணிச்சலைப் பாராட்டினார்.

ஒற்றைக் கம்பியில் நடக்கும் இந்தியா

காலத்தால் மாற்றமடையாத எச்சூழலிலும் நட்பும் உதவியும் செய்த இரசியா இந்தியாவின் சிறந்த நட்பு நாடு. படைக்கலன் கொள்வனவு, படைத்துறைத் தொழில்நுட்ப வழங்கல், எரிபொருள் வழங்கல், தேவையான போதெல்லாம் நிபந்தனையின்றி ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சார்பாக தன் இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவிப்பது போன்றவற்றை இரசியா செய்து வந்தது. அந்த இரசியாவைப் பகைக்க கூடாது. பகைத்தால் இரசியா, பாக்கிஸ்த்தான், சீனா ஆகியவற்றின் கூட்டு இந்தியாவிற்கு மோசமான ஆப்பு என்பதையும் இந்தியா அறியும். சீனாவை சமாளிக்கவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் முன்னேற்றமான நிலையை அடையவும், புதிய தொழில்நுட்பங்களைப் பெறவும் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசு இந்தியாவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்த்தி தெரிவித்துள்ளனர். இரசியா இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளது..

அணுக்குண்டைக் கொண்டுவா என்ற ஜப்பான்

அணுக்குண்டால் தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடாகிய ஜப்பான் உக்ரேனை புட்டீன் ஆக்கிரமித்தவுடன் தனது நாட்டில் அமெரிக்காவின் அணுக்குண்டுகளைக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றார் ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் சின்சோ அபே. இது சீனாவை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. ஜப்பானும் பிரித்தானியாவைப் போல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிழல் போல் தொடர்கின்ற ஒரு நாடு. இரசியாவை போரில் தோற்கடித்த ஒரே ஒரு ஆசிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் எல்லை முரண்பாட்டைக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜப்பான் தனது தெருவிளக்குகள், விளப்பரங்கள் ஆகியவற்றின் ஒளி அளவைக் குறைத்துள்ளது.

சீனாவின் காட்டில் மழை

இதுவரை காலமும் இரசியா தன்னை Batmanஆகவும் சீனாவை Robinஆகவும் பார்த்து வந்தது. உக்ரேனுக்குள் அனுப்பிய தனது படையினருக்கு போதிய உணவை வழங்க முடியாமல் சிரமப்படும் இரசியா சீனாவிடம் தயாரித்த உணவுகளை கொடுக்கும் படியும் ஆளிலிவிமானங்களையும் வழிகாட்டல் ஏவுகணைகளையும் அவசரமாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டது. இரசியாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை சீனா வாங்கப் போகின்றது. இரசிய நாணயம் வீழ்ச்சியடைவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிக்கும் சீனா இனி இரசியாவில் தவித்த முயல் அடிப்பது போல் பல சொத்துக்களை வாங்கக் காத்திருக்கின்றது. அமெரிக்க எதிர்பாளர்களின் வண்டியில் ஓட்டுனர் இருக்கையில் இப்போது சீனா.

கல்லாக் கட்டும் அமெரிக்கா

எங்கு நாடுகளிடையே போர் மற்றும் முறுகல்கள் நடக்கும் அங்கு தனது படைக்கலன்களை விற்கவும் படைத்தளங்களை அலைகின்ற அமெரிக்காவிற்கு உக்ரேன் போர் சிறந்த வாய்ப்பாகும். தன்னிடமுள்ள காலம் கடந்த படைக்கலன்களை உக்ரேனுக்கு உதவியாக பாதி பாதி என வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலன்களை வாங்குகின்றன. இரசியத் தாங்கிகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஏவுகணைகள் சிறப்பாக செயற்படுவது அமெரிக்காவிற்கு சிறந்த விளம்பரம்.

செல்வாக்கிழந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் எரிபொருள் விலையேற்றமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பும் அமெரிக்கர் மத்தியில் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. 2022இன் இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் எல்லா மக்களவை தொகுதிகளிலும் மூன்றில் ஒரு மூதவை தொகுதிகளிலும் அவரது மக்களாட்சிக் கட்சி பின்னடைவைச் சந்திக்கலாம். அதனால் குடியரசுக் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலிமை பெற்றால் நினைத்தபடி ஆட்சி நடத்த முடியாத ஜோ பைடன் LAME DUCK President ஆவார்.

இலங்கையின் நிலையை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எனச் சொல்வதிலும் பார்க்க மாடேறி மிதித் தவன் மேல் பனை மரம் விழுந்தது போல் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை மீண்டும் எரியலாம்.


Monday 28 March 2022

வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கையில் முதலிடலாமா?

  


நெசவு செய்யும் திறமைமிக்க தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் ஒரு நெசவுத்தறி போட கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் முன்வரலாம். இன்னொரு நெசவுத் தொழிலாளி தனது வருமானத்தில் தினமும் மது அருந்தி கைநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவரால் போதிய அளவு நெய்ய முடியாத நிலையில் அவரது வருமானம் குறைந்து உணவிற்கு திண்டாடும் போது அவர் தனக்கு கடன் தரச் சொல்லி கேட்டால் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இலங்கையும் இனக்கொலைப் போருக்கு அளவிற்கு மிஞ்சி கடன் பட்டு பின் பட்ட கடனுக்கு வட்டி கொடுக்க புதிய கடன் பட்டு விட்டு மேலும் கடன் பட முடியாத நிலையில் அங்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்று இனக்கொலைக்கு உள்ளான இனத்தைச் சேர்ந்தவர்களை கேட்க முடியுமா? சொல்லுவார் சொல்ல கேட்ப்பார்க்கு மதியென்ன?

யோக்கியன் வாறான் செம்பை எடுத்து வை

எனக்கு தெரிந்த ஒருவர் இலங்கை நாணயம் பெறுமதி இழந்துள்ளமையால் அங்கு இப்போது முதலீடு செய்வது உகந்தது என எண்ணி முதலீடு செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தான் பாலமாக இருக்கத் தயார் என அறிவித்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். பாலமே இந்தளவு கேவலமானதாக இருக்கையில் அதை நம்பி பயணித்தால் என்ன நடக்குமோ என அவர் அஞ்சுகின்றார். 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டு அதற்கும் அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றாராம் சுமந்திரன். 2009 நடந்த போரின் போது மருத்துவமனைகளும் சட்ட பூர்வமான குண்டு வீச்சு இலக்கு எனச் சொல்லிய கோத்தபாய ராஜபக்ச கூட்டிய கூட்டத்தில் தான் சுமந்திரன் இந்தக் கருத்தை முன்வைத்தார். பாலம் மட்டும் கேவலமானதல்ல பாலம் சொல்லும் படகான 13 ஓட்டை மிகுந்தது அதை நம்பி யாரையா இறங்குவார்? புலிகள் இனச்சுத்தீகரிப்பு செய்தனர் ஆனால் சிங்களவர் இனக்கொலை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற யோக்கியரின் கூற்றை நம்பி யார் இலங்கையில் முதலீடு செய்வார்.

விடுதலை வேட்கைக்கு எதிராக சுமந்திரனின் சதியா?

இலங்கையில் தமிழரகளுக்கு சுதந்திரம் வழங்காமல் சிங்களத்தால் இழுத்தடிக்க முடியாது. சிங்களத்தின் அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் நிச்சயம் பொங்கி எழுவார்கள். தந்தை செல்வாவின் போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாமல் செய்தார்கள். பின்ன அதிலும் பார்க்க வலிமை மிக்க போராட்டம் வந்தது. அது போல சிங்களத்தை சிதறடிக்கக் கூடிய ஒரு போராட்டம் இனி எந்த நேரத்திலும் ஆரம்பமாகலாம். அடுத்த தீபாவளி, அடுத்த பொங்கல், அடுத்த ஆடி அமாவாசை எனப் பலவற்றைக் கேட்டு விரக்தியடைந்திருக்கும் மக்கள் செய்யும் கிளர்ச்சி அபாயகரமானதாக இருக்கும். புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்தால் அம் முதலீடு மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான அடக்கு முறையால் அழிக்கப்படும். அதனால் மக்கள் கிளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என சிங்களமும் சுமந்திரனும் கணக்குப் போடுகின்றார்கள். அடுத்த விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்கள் உதவி செய்யாமல் தடுப்பதற்காக சுமந்திரன் செய்யும் சதிதான் வெளிநாடு வாழ் தமிழர்களை முதலீட்டுக்கு அழைக்கின்ற செயலா?வ்

ஒரு நாளில் ஒரு இலட்சம் டொலர் இழப்பீடா?

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு ஒருவர் ஒரு மில்லியன் டொலரை முதலீடு செய்யும் போது முதலில் டொலரை ரூபாவாக மாற்றும் போது ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி மேலும் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தால் முதலிட்டவருக்கு ஒரு இலட்சம் டொலருக்கு மேல் இழப்பீடு ஏற்படும். தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இனி வீழ்ச்சியடைய இடமில்லை. இலங்கையில் செய்த முதலீட்டை இலகுவில் மீண்டும் வெளிநாட்டுக்கு கொண்டு வர முடியாது. இலங்கைப் பொருளாதாரம் இனி மீழவும் எழும் (Rebound) என யாரும் சொல்லாத நிலையில் நிதித்துறையில் அறிவில்லாத சுமந்திரன் எந்த ஒரு நிதி ஆலோசனையும் பெறாமல் எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்யும் முதலீட்டிற்கான பாலமாக தன்னை முன்னிறுத்த முடியும்?

தரம் தாழ்த்திய நிறுவனங்கள்

இலங்கையில் ஏற்கனவே முதலீடு செய்த பன்னாட்டு தனியார் முதலீட்டாளரகள் இலங்கைக்கு கொடுத்த கடனை எப்படி மீளப் பெறுவது என்பது தொடர்பாக பன்னாட்டு சட்ட நிறுவனமான White & Case LLP என்னும் பன்னாட்டு சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார சூழலை அடிப்படையாக வைத்து. S&P, Fitch, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கைய தரம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் இலங்கையின் தரத்தை மீளவும் உயர்த்த முன்னர் சுமந்திரன் ஏன் அங்கு முதலீடு செய்வது பற்றி சிந்திக்கின்றார்?  உலக நாடுகளுக்கான ஊழல் பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடத்தில் இருக்கின்றது என சுமந்திரனுக்கு தெரியுமா? பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுமந்திரனைச் சந்திக்கும் போது இலங்கைக்கு ஜீஎஸ்பி+ வரிச்சலுகையை நிறுத்தும் படி மேற்கு நாட்டு அரசுகளிடம் பரப்புரை செய்வது பற்றி பேசிய போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தான் செய்ய மாட்டேன் எனச் சொல்லிய சுமந்திரன், மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க போராடிய சுமந்திரன் இப்போது இலங்கைக்கான முதலீட்டு தரகராக செயற்படுகின்றாரா?

அரசியல் உறுதிப்பாடில்லாத இலங்கை

ஒரு நாட்டில் முதலீடு செய்வதாயின் அங்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இலங்கையில் பொருட்கள் விலை ஏற ஏற மக்கள் அரசுக்கு எதிராக போராடுவது அதிகரிக்கும். அத்துடன் 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அதற்கு எதிராக பௌத்த அமைப்புக்களும் பிக்குகளும் ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர். வலிமையற்று தலையெடுக்க முடியாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இனவாத தீயை மூட்டுவார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது ஆட்சியாளர்களை சுட்டுக் கொல்லவும் சிங்களவர்கள் தயங்க மாட்டார்கள். அதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இத்தகைய இடர்(Risk) மிகு சூழலில் எந்த முட்டாள் இலங்கையில் முதலீடு செய்ய பாலமாக இருப்பான்?

பணச்சலவைக்கு வழியா?

2009 ஆண்டில் நடந்த போரின் பின்னரும் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கையில் பெருந்தொகை பணத்தைக் கொள்ளை அடித்து வைத்திருந்தவர்கள் அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு வழியாக அது இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அதன் படி வெளிநாடு வாழும் இலங்கையர் ஒரு மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கி ஒன்றில் இலங்கையில் கொள்ளை அடித்தவர்களின் பெயரில் வைப்பிலிட்டால் அதற்கு உரிய இலங்கை ரூபாக்களை கொள்ளையர்கள் அந்த வெளிநாட்டுப் பேர்வழியின் பெயரில் இலங்கையில் வைப்பிலிடுவார்கள். ராஜபக்சேக்களின் வெளிநாட்டு சொத்து பற்றி இந்த இணைப்பில் காணலாம்:

https://www.theguardian.com/world/2015/mar/20/sri-lanka-says-mahinda-rajapaksa-officials-hid-more-than-2bn-in-dubai

விளடிமீர் புட்டீனினதும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக பொருளாதார தடை என்னும் பெயரில் அவர்களின் சொத்துக்களை முடக்குவது போல் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இப்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் அவர்களது பணத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இப்போது இன்னொரு முதலீட்டு அழைப்பு விடப்படுகின்றதா? அதற்கான தரகர் வேலையை பார்ப்பவர் யார்?

இலங்கை நடுவண் வங்கியும் மூலதனக் கணக்கும்

இலங்கை நடுவண் வங்கி இலங்கையில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையில் முதலிடுபவர்கள் தேவை ஏற்படும் போது அந்த முதலீட்டை வெளியே எடுத்து வர முடியாது. திரவத்தன்மை (liquidity) குறைந்த முதலீட்டை சுமந்திரனின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்ட்டு யாரும் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் அவர் முதலீட்டுக்கு?

இனக்கலவரம் என்று அவ்வப்போது தோற்றுவித்து தமிழர்கள் சொத்தை கொள்ளை அடிப்பதையும் அழிப்பதையும் சிங்களவர்கள் தங்கள் பொழுது போக்காக கொண்டுள்ளனர். தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க அறிவுகெட்ட சுமந்திரனால் முடியுமா? இலங்கை அரசு தமிழர்களின் முதலீட்டை அரசுடமையாக்க மாட்டாது என சிங்களத்தின் வால் பிடியான சுமந்திரனால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 

பழைய சத்தியஜித் ராயின் திரைப்படமொன்றில் ஒரு செல்வந்த வயோதிபர் கடும் நோய் வாய்ப்பட்டுவிட்டார். மருத்துவர் இனி ஆள் தப்பாது என்று சொல்லி விடுவார். அந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சோதிடரை அணுகுவார்கள் அவர் பார்த்துவிட்டு இவருக்கு ஆயுள் முடிந்து விட்டது ஆனால் ஒரு வழி இருக்கிறது என்றார். குடும்பத்தவர்கள் ஆவலுடன் என்ன எனக் கேட்கும் போது சோதிடர் சாதகத்தில் நல்ல மாங்கல்ய வலிமையுள்ள ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணின் பலனால் இவர் தப்புவார் என்பார்கள். அது போலத்தான் எந்த நேரமும் மண்டையைப் போடலாம் என்ற நிலையில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுமந்திரன் சொல்லும் அறிவுரை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் வாழ வழியற்று இருக்கும் ஏழைப் பெண்களல்ல.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...