Thursday 9 December 2021

இடியப்பச்சிக்கலைத் தெளிவாக்கிய மோடி புட்டீன் சந்திப்பு

  


2021 டிசம்பர் 6-ம் திகதி இரசிய அதிபர் புட்டீன் இந்தியா சென்று தலைமை அமைச்சர் மோடியுடன் ஒரு குறுகிய நேர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளார். புட்டீன் 2021இல் செய்த இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கானதாக அமைந்துள்ளது. முதலாவது பயணமாக அமெரிக்க அதிபரைச் சந்திக்க ஜூன் மாதம் ஜெனீவாவிற்கு சென்றிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களிடையே நடந்த 21வது இந்திய இரசிய உச்சி சந்திப்பு இதுவாகும். இரசியாவின் சென் அண்டுரூ கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்ட நான்கு வெளிநாட்டவரகளுள் நரேந்திர மோடியும் ஒருவராவர். தனிப்பட்ட ரீதியில் இருவருக்கும் இடையில் சிறப்பான நட்பு நிலவுகின்றது. அதாவது chemistry நல்லா workout ஆகுது.

படைக்கலன் கொள்வனவால் வலிமையடைந்த உறவு

இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவது 1962-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து மிக்-21 போர் விமான ங்களை கொள்வனவு செய்ததில் இருந்து ஆரம்பித்தது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் படைக்கலன்களை கொள்வனவு செய்வது முக்கிய பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளும் இணைந்து பல படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றன. அதில் முக்கியமானது பிரம்மோஸ் ஏவுகணைகளாகும். இரு நாட்டு கூட்டு உற்பத்தியில் ஆரம்பிக்கப் பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் சரிவரவில்லை. செலவு அதிகம் எனச் சொல்லி இந்தியா அதிலிருந்து விலகி விட்டது. அதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படவில்லை. 2011இல் இருந்து 2015 வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் படைக்கலன் இறக்குமதில் 70% இரசியாவில் இருந்து செய்யப்பட்டது. அதன் அடுத்த ஐந்தாண்டுக் காலப்பகுதியான 2016-2020இல் அது 49% ஆகக் குறைந்து விட்டது. அதே காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவை பெரிய பாதுகாப்பு பங்களி நாடாக (Major Defence Partner) அறிவித்தது. அதன் மூலம் பல புதிய படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டது. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய மறுக்கும் நீர்மூழ்கிகளை அணுவலுவில் இயக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா இரசியாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது.

சிக்கலான உறவு

2014-ம் ஆண்டில் இருந்து வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்படுகின்றது. அதே ஆண்டு இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்க இரசிய உறவில் முறுகல் தீவிரமடைந்துள்ளது. அதே ஆண்டு தென் சீனக் கடலில் சீனா செயற்கை தீவுகளை உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அமெரிக்க சீன உறவில் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சீனா தைவானை தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவும் சீனாவும் தமக்கிடையிலேயான உறவை மேம்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை உறுதி செய்ய குவாட் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றது. அமெரிக்காவிடமிருந்து எல்லா படைக்கலன்களையும் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும் இந்தியாவால் கொள்வனவு செய்ய முடியாது. அமெரிக்கா எல்லாவற்றையும் மற்ற நாடுகளுக்கு வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல சில விற்பனைகள் மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்தப்படுவதுடன் சிலவற்றிற்கு இறுக்கமான அறிவுசார் காப்புரிமையை அமெரிகா கடைப்பிடிக்கின்றது. இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்தால் இரசியா பாக்கிஸ்த்தானிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யலாம் என்ற செய்தியை இரசியா மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் அத்துமீறல்களைச் செய்வதை தடுக்க இந்தியாவிற்கு அமெரிக்காவின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சாதகமாக இரசியா தனது இரத்து அதிகாரத்தை பாவிப்பது வழமை. அதற்காக இரசியாவின் உறவு இந்தியாவிற்கு அவசியமாகின்றது. இந்தியாவின் இந்த நிலையை சமாளிக்க பிரான்ஸ் முன்வந்தது. பிரான்ஸ் தேவையான படைக்கலன்கள் தேவையானபோது ஐநா இரத்துப் பாவனை என்ற அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பிரான்ஸ் தயாராகியது. இந்தவிதமான இடியப்பச் சிக்கலின் நடுவில் மோடி – புட்டீன் சந்திப்பு நடந்தது.

எஸ்-400 வான் பாதுகாப்பு முறைமை

இந்தியாவிற்கான இரசியத் தயாரிப்பு வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400இன் விநியோகத்தை துரிதப் படுத்துமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே புட்டீன் தன் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். எஸ்-400 பாக்கிஸ்த்தான் – இந்தியப் படைத்துறைச் சமநிலையை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும். சீனாவிற்கும் பிரச்சனையாக அமையும். இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிற்கு எதிராக படைக்கலன் விற்பனை தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று மூதவை உறுப்பினர்கள் ஒரு சட்ட மூலத்தை அமெரிக்க நாடளுமன்றத்தில் சமர்பித்ததுடன் குவாட் அமைப்பின் உறவை பாதிக்கும் எந்த ஒரு தடை உத்தரவிற்கும் அமெரிக்க அதிபர் உடன்படக் கூடாது என்ற கோரிக்கையையும் அவரிடம் விடுத்தனர்.

எஸ்-400 பற்றிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2021/08/400-f-35.html

2+2 உரையாடல்

அமெரிக்காவும் இந்தியாவும் 2+2 உரையாடல் என்னும் பேச்சு வார்த்தையை ஆண்டு தோறும் இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து நடத்திவருகின்றனர். இவை இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் உலக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதை உறுதி செய்கின்றன. அதே போன்ற உரையாடலை இனி இந்தியாவும் இரசியாவும் செய்ய மோடி – புட்டீன் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா அமெரிக்காவிற்கு கொடுக்கும் முக்கியத்துவ போல இரசியாவிற்கும் கொடுக்க விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது.

இரசியாவின் சமரச முயற்ச்சி

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடயே சமரசம் செய்ய புட்டீன முன்வந்தார். பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இரசியா தலைமை வகித்த காலத்தில் இந்திய சீன முறுகல் நடந்தது. இந்த இரு அமைப்புக்களிலும் சீனா, இரசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. 2020 செப்டம்பரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இரசியா இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேரடியாக சந்திக்க வைத்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளினதும் படையினரும் எல்லையில் தமக்கிடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்த ஒத்துக் கொண்டனர். இரசியா சீனாவுடனும் இந்தியாவுடனும் ஏற்படுத்தியுள்ள கேந்திரோபாய உறவு இப்படி ஒரு பிரச்ச்னையை தீர்க்கும் தன்மையை இரசியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்ச்சியை இரு நாடுகளும் கவனத்தில் எடுக்கவில்லை. சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆக்கிரமிப்பு என அடையாளமிட்டிருந்தது. இந்தியா இன்றுவரை இந்தியாவிற்கு படைக்கலன்களை விநியோகம் செய்வதில் காத்திரமான பங்கை வகிக்கின்றது. சீனாவும் பல படைத்துறைத் தொழில் நுட்பங்களை இரசியாவில் இருந்தே பெறுகின்றது.

மோடி – புட்டீன் ஒப்பந்தங்கள்

இருபத்தெட்டு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்பேடுகளும் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், எரிபொருள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விண்வெளி, கனிமவள ஆய்வு, கலாச்சார பரிவர்த்தனை, கல்வி என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஒப்பந்தங்கள், புரித்துணர்வு குறிப்பேடுகள் கைச்சாத்திடப்பட்டன. இரசியாவின் AK-203 Assault Rifleகளை இந்தியாவில் இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யும் ஒப்பந்தம். மொத்தமாக 500,000 ரைபிள்கள் உற்பத்தி செய்யப்படும். இப்படிப்பட்ட படைத்துறை ஒத்துழைப்பு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தத்தம் நடுவண் வங்கிகளை இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவும் இந்தியாவும் செய்யும் வர்த்தகத்திலும் பார்க்க பத்து மடங்கு வர்த்தகம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்றது. அத்துடன் இந்திய-சீன வர்த்தகம் இந்தியாவிற்கு பாதகமான முறையில் நடக்கின்றது. சீனா போதிய அளவு இறக்குமதியை இந்தியாவில் இருந்து செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.

சீன வேலப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம் என்னும் 2013-ம் ஆண்டு எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2013/05/blog-post_21.html

அமெரிக்க இந்திய உறவின் வளர்ச்சி இந்திய இரசிய உறவை பாதிக்காது.

Monday 6 December 2021

இந்தியாவிற்கு 114 பற்பணிப் போர்விமானங்களை விற்கும் போட்டி

  


2019 ஏப்ரலில் இந்திய வான்படைக்கு 114 பற்பணிப் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக இந்திய அரசு அறிவித்து அதற்கான வழங்கல் அறிவிப்புக்களையும் உலகெங்கிலும் இருந்து கோரியிருந்தது. 114 விமானங்களுக்குமான மொத்த விலை 18 பில்லியன் டொலர்கள் அண்மைக்கால வரலாற்றின் மிகப் பெரிய படைக்கலன் கொள்வனவாக அமைந்துள்ளது. 2021 ஒக்டோபர் இந்தியாவின் வான்படைத்தளபதி வீ ஆர் சௌதாரி 114 பற்பணிப் போர் விமானங்களை வழங்குவதற்கு பல பன்னாட்டு விமான உற்பத்தியாளர்கள் முன்வந்து பத்திரங்கள் கையளித்துள்ளதாகவும் கொள்வனவின் அடுத்த கட்டத்தை நோக்கி தாம் நகர்வதாகவும் தெரிவித்திருந்தார். போயிங், லொக்கீட் மார்ட்டின், யூரோஃபைட்டர், இரசிய யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசன், சாப் ஆகிய முன்னணி விமான உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு 114 பற்பணி போர்விமானங்களை வழங்க முன் வந்துள்ளன.

வானில் ஆதிக்கம் செலுத்துதல், வானில் இருந்து வானுக்கு தாக்குதல், வானில் இருந்து தரைக்கு குண்டு வீசுதல், வேவு பார்த்தல், கண்காணிப்பு, முற்சென்று வானைக் கட்டுப்படுத்துதல், இலத்திரனியல் போர் முறை, எதிரிவிமானங்களை இடைமறித்தல் போன்ற பல பணிகளைச் செய்யக் கூடிய விமானங்களை பற்பணிப் போர் விமானம் என அழைப்பர். முன்பு ஒவ்வொருவிதமான பணிகளுக்கும் என்றும் ஒவ்வொரு வகையான விமானங்கள் தயாரிக்கப்பட்டன. பின்பு பல பணிகளையும் செய்யக் கூடிய ஒரே விமானம் உருவாக்கப்படுகின்றன. இருந்தும் இப்போதும் வேவு பார்த்தலுக்கு தனியான விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.



இந்தியாவிடம் தற்போது உள்ள சோவியத் ஒன்றிய காலத் தயாரிப்பு விமானங்களான மிக்-21 மற்றும் மிக்-27 போர்விமானங்களை சேவையில் இருந்து அகற்றி விட்டு புதிய பற்பணி விமானங்களை வாங்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக வாங்கிய ரஃபேல் போர் விமான ங்களை வாங்கி முடிக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. இந்த முறை 114 போர்விமான ங்களை துரிதமாக வாங்கி முடிக்க இந்தியா முயல்கின்றது. 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது பாதுகாப்புச் செலவிற்கு அதிக நிதி செலவு செய்வதால் ஆளும் கட்சியின் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு.



இந்தியாவின் தேஜஸ்

இந்தியாவின் மிராஜ்-2000மிக்-29 ஆகிய போர்விமானங்கள் 30ஆண்டுகள் பழமையானவை. ஜகுவார் போர்விமானங்கள் 40ஆண்டுகள் பழமையானவை. 2014 பெப்ரவரி பாக்கிஸ்த்தானால் கைப்பற்றப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் ஓட்டிச் சென்ற மிக்-21 விமானம் 44 ஆண்டுகள் பழமையானவை. இந்தியா அவசியமாகவும் அவசரமாகவும் தனது விமானங்களைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. மிக்-21 போர் விமானங்கள் பழமையடைந்ததால் உள்நாட்டிலேயே அவற்றிற்கு ஈடான பாரம் குறைந்த தாக்குதல் போர்விமானமாக தேஜஸ் விமான உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தேஜஸ் விமானங்களில் பாரம் குறைந்த பற்பணிப் போர்விமானங்களும்தாக்குதல் போர்விமானங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டில் அவை உற்பத்தி செய்யப்பட்டு விமானப் படையில் இணைக்கப்பட்டன. முன்னூறுக்கு மேற்பட்ட தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப் படையில் உள்ளன. 2016-ம் ஆண்டு இந்தியக் கடற்படையினர் தேஜஸ் விமானங்களை வாங்க மறுத்தமைக்கு இரு காரணங்களைக் கூறினர். ஒன்று அவை பாரம் அதிகமானவை. இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலில் குறைந்த தூரம் ஓடி எழும்புபவதற்கான போதிய உந்து வலு அவற்றிடம் இல்லை. அதனால் F414 என்னும் இயந்திரங்களால் இயக்கப்படும் தேஜஸ் மார்க் – 2 என்ற விமானங்கள் உருவாக்கப்பட்டன. 201 தேஜஸ் மார்க் - 2 விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. தேஜஸ் மார்க்-1 விமானங்களில் இஸ்ரேலின் AESA ரடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேஜஸ் மார்க்-2 விமானங்கள் தற்போது உருவாக்கும் நிலையில் உள்ளன. முன்னோடி உருவாக்கல்களுக்கு என அமெரிக்காவின் ஜெனரஸ் எலெக்ரிக் நிறுவனம் தனது இரண்டு F414-INS6 இயந்திரங்களை வழங்கியுள்ளது.  திட்டம் வெற்றியளித்தால் அறுநூறு மில்லியன் டொலர்களுக்கு தொண்ணூற்றி ஒன்பது F414-INS6 இயந்திரங்களை ஜெனரல் எலெக்ரிக் விற்பனை செய்யும். அத்துடன் F414-INS6 இயந்திரங்களின் 60விழுக்காடு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வழங்கப்படும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா காவேரி கே-9கே-10 என்னும் விமான இயந்திரங்களை உள்நாட்டில் உருவாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. ஜெனரல் எலெக்ரிக்கின் இயந்திரத் தொழில்நுட்பம் காவேரி இயந்திரங்களை உருவாக்குவதைத் துரிதப்படுத்தும். தேஜஸ் மார்க் – 2 விமானங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் Uttam AESA ரடார்கள் இணைக்கப்படவுள்ளன. Uttam AESA வானில் இருந்து வானிற்கு மட்டுமே செயற்படக் கூடியவை வானில் இருந்து தரைக்கு அவை போதிய பயனைத் தராது. இந்திய வான்படையினர் 46 முதல் 56 வரையிலான தேஜஸ் மார்க்-2 இன் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கான வகைகளை வாங்கவுள்ளனர்.

எதை இந்தியா வாங்கும்?

சுவீடனின் Gripen விமானங்களிலும் தேஜஸ் விமானத்தைப் போலவே அமெரிக்காவின் General Electric நிறுவனத்தின் இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. ஆனால் Gripen இல் பாவிக்கப்படுவை F414-GE-39. Gripen – E விமானங்களில் 33% பாகங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகின்றன. ரஃபேல் விமானம் ஒன்றை வாங்க 1820 கோடி ரூபா செலவாகும் Gripen – E விமானம் ஒன்றை வாங்க 1050கோடி ரூபா போதும். ரஃபேலின் பறப்புத்தூரம் Gripen இலும் பார்க்க 500கிமீ அதிகமானதாகும். இரசிய விமானங்கள் சுவீடன் வான்பரப்பில் அத்து மீறுவதை தடுக்க சுவீடனின் விமானங்களில் சிறந்த இலத்திரனியல் செயற்பாடுகள் உள்ளன. Gripen விமானங்களின் உற்பத்தியாளர்களான சுவீடனின் SAAB நிறுவனம் இந்தியாவின் TATA நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை இந்தியா வாங்கினால் அது பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். நிபந்தனைகள் காப்புரிமையில் இருந்து மனித உரிமைவரைக்கும் இருக்கும். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் F-15EX பற்பணிப் போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. Apach Guradian மற்றும் Chihook ஆகிய உலங்கு வானூர்திகளையும் C-17 என்னும் படையினர் போக்குவரத்து விமானங்களையும் P8I ரோந்து விமான ங்களையும் இந்தியாவிற்கு விற்பனை செய்த போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தால் இந்தியாவிற்கு FA-18 Super Hornet விமானங்க்ளை விற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் FA-16 போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. இரசியா தனது மிக்-35 விமான ங்களை விற்பனை செய்ய முயல்கின்றது.

இரசியாவின் மிக்-35 பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2017/02/35.html

இந்தியாவிற்கு 114 போர்விமானங்களை யார் விற்பனை செய்வது என்ற போட்டியில் பிரான்ஸின் ரஃபேலும் சுவீடனின் Gripen உம் முன்னணியில் நிற்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...