Wednesday 23 March 2022

உக்ரேன் போரும் இந்திய அமெரிக்க உறவும்

 


அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் இணைந்து நிற்கும் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் உக்ரேனை ஆக்கிரமித்த இரசியாவிற்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அதன் நான்காவது உறுப்பு நாடான இந்தியா நடுநிலை வகிக்கின்றது. இந்தியாவிற்கு பயணம் செய்த ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபியுமியோ கிஷிடா உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பு உலக ஒழுங்கின் அத்திவாரத்தை அதிர வைத்துள்ளமையால் அதற்கு எதிரான காத்திரமான கருத்து வெளிப்பாடு அவசியம் என்றார். இந்திய தலைமை அமைச்சருடன் இணையவெளியூடாக உரையாடிய ஒஸ்ரேலிய தலைமை அமைச்சர் ஸ்கொட் மொரிசனால் கூட இரசியா தொடர்பான இந்திய நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்க இந்திய உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது.

இந்திய அமெரிக்க உறவின் விரிசலின் ஆரம்பம் பாண்டூங்

1929-ச்ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி லாகூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தலைமை உரையாற்றிய ஜவகர்லால் நேரு இந்தியா ஒரு சமூகவுடமை (சோசலிச) நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். சுதந்திரமடைந்த இந்தியாவைச் நேரு ஒரு சமூகவுடமை நாடு போல ஆட்சி செய்தார். ஆனாலும் 1976-ம் ஆண்டு இந்தியாவின் அரசியலமைப்பிற்கான 46-வது திருத்தத்தில் முன்னுரையில்  மட்டும்தான் இந்தியா ஒரு மதசார்பற்ற சமூகவுடமைக் குடியரசு என்ற பதம் உட்புகுத்தப்பட்டது. இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா தலைமையிலான பொதுவுடமைவாத்ததிற்கு எதிரான அணியில் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. 1955 பாண்டூங் நகரில் நடந்த அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கும் மாநாட்டில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தில் பாக்கிஸ்த்தான் பங்கு பெறவில்லை. அமெரிக்க நிப்பந்தத்தையும் மீறி இந்தியா பங்கு பற்றியது. அதனால் அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு நெருக்க மடைந்தது. இந்திய அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது.

பாக்கிஸ்த்தானில் மையம் கொண்ட உறவுப் புயல்

கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்கா பல படைக்கலன்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருவது இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 1962-ம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா கேட்ட உதவியை அமெரிக்கா வழங்காமல் மட்டுப்படுத்தப் பட்ட உதவியை வழங்கியது. 1971ல் நடந்த பங்களாதேசப் போரில் இரசியா இந்தியாவிற்கு முழுமையான ஆதரவையும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு முழுமையான ஆதரவையும் வழங்கின. இந்தியா மீது தாக்குதல் தொடுக்க USS Enterprise என்ற விமானம் தாங்கிக் கப்பலுட்பட அமெரிக்காவின் ஏழாவது கடற்படை வங்காள விரிகுடா வந்த போது இந்தியவை அமெரிக்காவிடமிருந்து பாதுகாக்க இரசிய நீர்முழ்கிகள் அங்கு முன் கூட்டியே தயாராக இருந்தன. இந்தியா நோக்கி நகர்ந்த பிரித்தானிய கடற்படை அணியை இரசிய நீர்மூழ்கிகள் மத்திய தரைக் கடலில் வைத்தே தடுத்துவிட்டன. இதன் பின்னர் இரசிய இந்திய உறவு மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. இரசியாவின் உயர் தொழில்நுட்ப படைக்கலன்கள் முக்கியமாக அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதலில் இரசியா பெரும் பங்காற்றியது. இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பமும் இரசிய உதவியால் வளர்ந்தது. இரசிய மக்களிடயே இந்தியாமீதும் இந்திய மக்களிடையே இரசியாமீதும் பெரு விருப்பு உண்டு. 1971-ம் ஆண்டு இந்திய சோவியத் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது அமெரிக்க சீன பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு பதிலடியாகவே செய்யப்பட்டது.

காலம் கடந்து நிற்கும் இரசிய இந்திய உறவு

இந்தியாவிற்கு படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இரசியா வழங்குவதுடன் தேவை ஏற்படும் போதெல்லாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்காக நிபந்தனை இன்றி தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தை இந்தியா பாவிக்கின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது சீனாவை இரசியாவிடமிருந்து பாதுகாப்பதற்கும் அமெரிக்க சீன உறவை வளர்ப்பதற்கும் பாக்கிஸ்த்தான் முக்கியமானது எனக் கருதினார். இந்திய இரசிய படைத்துறை ஒத்துழைப்பின் மகுடமாக இருப்பது பிரம்மோஸ் ஏவுகணைகள் ஆகும். இரண்டும் இணைந்து உருவாக்க முயன்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி இடையில் நின்று போனது. 2000-ம் ஆண்டு பராக் ஒபாமா – ஹிலரி கிளிண்டன் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்பட்டது. இரு நாடுகளும் சீனாவின் வளர்ச்சியையிட்டு கொண்ட கரிசனைகள் அந்த உறவு மேம்பாட்டிற்கு வழி வகுத்தது.

அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம்

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய தொழில்நுட்பத்தின் பின்னடைவு உணரப்பட்டது. இரசிய தயாரிப்பு போர் விமானங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டின்மையும் உணரப்பட்டது. அங்கு நேரடியாக இந்தியாவிற்கு உதவ விரும்பாத அமெரிக்கா இஸ்ரேலுடாக இந்தியாவிற்கு உதவி வழங்கியது. GPS என்னும் இடம் அறி முறைமையை இந்தியா பயன்படுத்த இஸ்ரேலிய போர் நிபுணர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவி செய்தனர். இதன் பின்னர் இந்திய அமெரிக்க உறவு வளரத் தொடங்கியது. 2001-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியது. 2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் 2020இல் கையொப்பமிட்டன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும். விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து விமானங்களைப் பறக்க விடும் தொழில்நுட்பம், நீர்மூழ்கிகளை வேட்டையாடும் கப்பல்கள், உழங்கு வானூர்திகள் என பல படைக்கலன்களும் தொழில்நுட்பங்களும் 2000-ம் ஆண்டின் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. ஆண்டு தோறும் இந்தியாவிற்கு $6.2மில்லியன் பெறுமதியான படைக்கலன்களை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இது டொனால்ட் டிரம்பினுடைய ஆட்சியில் $3.4பில்லியன்களாக அதிகரித்தது.

அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டில் இல்லை.

இரசியாவின் எரிபொருள் இறக்குமதிக்கு ஒரு மாற்று வழி இருப்பது நல்லது. 2022 மார்ச் 16-ம் திகதி Indian Oil Corporation இரசியாவின் Rosenet Oil Coவிடமிருந்து மூன்று மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உலகச் சந்தை விலையிலும் 20% குறைவான விலைக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்தியாவி எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 4.5மில்லியன் பீப்பாய்களாகும். இந்திய ரூபாவிற்கும் இரசிய ரூபிளிற்கும் இடையிலான கொடுப்பனவு முறைமை உருவாக்கப்பட்டால் இந்தியா மேலும் அதிக எரிபொருளை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். உக்ரேனுக்கு எதிரான இரசியப் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தண்டனை விளைவிக்கக் கூடிய நடவடிக்கை எதையும் அமெரிக்கா எடுக்கவில்லை. எடுக்கவிருப்பதாக அறிவிக்கவும் இல்லை. உக்ரேன் போர் பற்றிய வரலாற்றுப் பதிவில் இந்தியாவைப் பற்றி என்ன எழுதப்படும் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது பற்ரி அமெரிக்கா ஏதும் கூறாமல் இருக்கின்றது.

இந்திய மக்கள் இரசியாவை விரும்பலாம்

வளர்முக நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மேற்கு நாடுகளில் ஏற்படும் பிரச்சனையையும் மேற்கு நாடுகள் வேறு விதமாக அணுகுகின்றன என வளர்முக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். மேலும் அவர்கள் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடையால் தாமது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நினைகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கு நாடுகள் நினைப்பது போல் புட்டீனைக் குற்றவாளியாக நினைக்கவில்லை. வளர்முக நாடுகள் கடன் அல்லது நிதி உதவி கேட்டால் பல நிபந்தனைகள் விதித்து காலத்தை இழுத்தடிக்கும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் உக்ரேனுக்கு $700மில்லியன் நிதியை வாரி வழங்கின. பன்னாட்டு நாணய நிதியம் வழமையான நியமங்களை ஒதுக்கி விட்டு $1.4 பில்லியன் அவசர நிதியை உக்ரேனுக்கு மேலும் வழங்கவுள்ளது. இப்படிப்பட்ட ஓரவஞ்சனையை வளர்முக நாடுகளில் வாழும் மக்களுக்கு மேற்கு நாடுகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இந்த நூற்றாண்டில் இந்தியா அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி வறுமைக் கோட்டின் கீழ் இருந்த பலரை நடுத்தர வர்க்கமாக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கப் பிரியர்களாகவும் அமெரிக்க ஆடம்பரத்தை விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்களில் அரசியல் சிந்தனை முற்போக்கானது. இந்துத்துவாவைப் பின்பற்றுபவர்கள் கிரிஸ்த்தவத்தின் மீது வெறுப்புடையவர்களாகவும் இருக்கின்றனர். SWIFT என்னும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவு தொடர்பாடல் முறைமையில் இருந்து இரசியாவை விலக்கிய படியால் இரசியா தனது உர ஏற்றுமதியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பல வளர்முக நாடுகளைப் பாதித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு நன்மையளிக்க இந்தியா இரசியாவிடமிருந்து உரம் வாங்குவது அவசியம். எரிபொருள் விலையேற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. அதைத் தவிர்க்க இந்தியா இரசியாவின் 20% கழிவு விலை எரிபொருள் வழங்கலைத் தட்டிக் கழிக்க முடியாது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று தேவை என்ற நிலை உள்ளது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு இல்லை என்றாலும் அதன் மிக வலிமை மிக்க படைத்துறை ஆசியப் பிராந்தியத்தின் படைத்துறை வலிமையை முடிவு செய்யும் ஒரு நாடாக வைத்திருக்கின்றது. அதனால் படைத்துறை நிபுணர்கள் இந்தியாவை ஒரு Balancing Power எனக் கருதுகின்றனர். இந்தியா இரசியாவுடனும் சீனாவுடனும் கூட்டுச் சேர்ந்தால் ஆசியப் பிராந்திய படைத்துறைச் சமநிலை அமெரிக்காவிற்கு எதிராக மாறும்.

இந்தியாவை ஒதுக்கி விட்டு அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் ஆதிக்க திட்டம் நிறைவேறாது. பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் சீனா வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க சீன ஒத்துழைப்பு இல்லாமல் போய் இரண்டும் பகை நாடுகளாகியுள்ளன. இந்தியாவும் பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க இந்திய உறவும் முறிந்து விடும். இந்தியா உக்ரேன் தொடர்பான நடு நிலையே இந்தியாவின் நீண்டகால நன்மைக்கு உகந்தது.

Monday 21 March 2022

ஆட்டம் இழப்பாரா இம்ரான் கான்?

 

ச்

பாக்கிஸ்த்தானின் நாடாளுமன்றமாகிய தேசிய சபையில் தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2022 மார்ச் 28-ம் திகதி விவாதிக்கப்ச்படவுள்ளது. பாக்கிஸ்த்தானின் ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் அதன் படைத்துறையும் உளவுத்துறையும் மிக்கிய பங்கு வகிக்கின்றன. பாக்கிஸ்த்தானின் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கும் அதன் ஆட்சியாளர்களின் இருப்பிற்கும் தொடர்புண்டு. இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்பிய சுல்ஃபிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்காவைக் கடுப்பேத்திய இம்ரான்

இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்த்தானில் களம் அமைத்து அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தாக்குதல்களை நடத்தி வந்தது. பாக்கிஸ்த்தானில் சிஐஏ வைத்திருந்த தளம் 2011இல் வெளியேற்றப்பட்டது. 2020இல் அமெரிக்கா சடுமென ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் அமைக்க சிஐஏ விரும்பியது. அங்கிருந்து அல் கெய்தாவினர் உட்பட பல தீவிர வாத அமைப்புக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முக்கியமாக ஆளிலிவிமானத் தாக்குதல் நடத்த சிஐஏ விரும்பியது. ஆனால் இம்ரான் கான் அதற்கு மறுத்து விட்டார். இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளால் ஒரு படையணியாக மாறிவிட்ட சிஐஏயிற்கு பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. 2021 ஏப்ரலில் சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பேர்ன் பாக்கிஸ்த்தான் சென்றிருந்த வேளையில் அவரைச் சந்திக்கக் இம்ரான் கான் மறுத்திருந்தார். 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனை ஆக்கிரமிக்க 25-ம் திகதி இம்ரான் கான் திட்டமிட்டபடி தனது இரசியப் பயணத்தை மேற் கொண்டு அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்து உரையாடினார்.

படைத்துறையுடன் பகைமை

பாக்கிஸ்த்தானின் படைத்துறையினரின் ஆதரவுடன் தான் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு படைத் துறையினருடன் நல்லுறவு இல்லை எனவும் சொல்லப்படுகின்றது. இம்ரான் கானின் தகவற் துறை அமைச்சர் ஃபவார்ட் சௌத்திரி நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அவர்களது PTI கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு மில்லியன் பேர் அங்கு திரண்டிருப்பார்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அவர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என மிரட்டியிருந்தார்.

களமிறங்கிய அமெரிக்க மனித உரிமை அமைப்பு

எங்காவது ஆட்சியில் இருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வேண்டப்படாதவர்களாக மாறும் போது அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் அங்கு களமிறங்குவது வழக்கம். இம்ரான் கானிற்கு எதிராகவும் அமெரிக்காவின் மனித உரிமைக் கண்காணிப்பகம் (HRW) செயற்படுகின்றடு. அது இம்ரான் கானின் கட்சியினர் மேல் மிரட்டல், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களாட்சி முறைமைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அது எந்தக்காலத்தில் அங்கு நடந்ததோ தெரியவில்லை!

யோக்கியவான் இம்ரான்

தன்னை பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்படி ஆலோசனைகள் வழங்கினார்கள் ஆனால் கையூட்டு கொடுத்து ஆட்சியை தக்கவைப்பது தன் கொள்கையல்ல என்றார் இம்ரான் கான். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தாம் நடுநிலை வகிப்பதாக பாக்கிஸ்த்தானியப் படையினர் தெரிவித்தமையை இம்ரான் கான் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர்கள் நல்லோர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதே அல்லாவின் ஆணை என்கின்றார் இம்ரான். அத்துடன் நிற்கவில்லை உணர்ச்சியற்ற மிருகங்கள் மட்டுமே நடுநிலை வகிக்கும் என்றார் இம்ரான். தனக்கு எதிராக திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக மீண்டும் தன்னிடம் வருவார்கள் என்றார் இம்ரான் கான்.

சிதறிக் கிடக்கும் உதிரிக் கட்சிகள்

இம்ரான் கானை எதிர்த்து நிற்பவர்கள் பாக்கிஸ்த்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷரிஃப், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜர்தாரி, ஜமியத் உலெமா ஐ இஸ்லாம் கட்சியின் தலைவர் ரஹ்மான் ஆகியோராகும். முஸ்லிம் லீக் கட்சியிடம் 64 உறுப்பினர்களும், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியிடம் 43 உறுப்பினர்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்ற தமது வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டுள்ளனர். இம்ரான் கானின் PTI இடம் 116 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருபது பேர் கட்சி மாறியுள்ளனர். ஏனைய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 120 உறுப்பினர்கள் உள்ளனர். இம்ரான் கான் பதவியில் தொடர்வதற்கு பல்வேறு மாநிலக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க வேண்டும். இம்ரான் கான் தமது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என அவரது கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இம்ரான் கானின் ஆளும் PTI கட்சியில் 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அறுதிப் பெரும்பான்மைக்கு 175 உறுப்பினர்கள் தேவை கூட்டணி  மேற்பட்ட ஆளும் கட்சியான இம்ரான் கானின் PTI என அழைக்கபடும் Tehriik-e-Insaf கட்சியின் நாடாளுமனற உறுப்பினரள் இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என முடிவு செய்தமை அவரது ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. ஆனாலும் அவரது கட்சி வேறு ஒருவரை தலைமை அமைச்சராக்கி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆட்சி மாற்றம் நம்பிக்கையில்லா பிரேரணைகள் மூலம் பாக்கிஸ்த்தானில் நடப்பதில்லை. படையினர் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் வழமை. பாக்கிஸ்த்தான் எதிர் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவில் அங்கு மக்களாட்சிக்கு விரோதமான செயல் நடப்பது நாட்டுக்கு உகந்தது அல்ல என படையினர் உணர்ந்துள்ளார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...