Thursday 7 October 2021

Strategic Autonomy: ஐரோப்பிய நாடுகளின் கேந்திரோபாய தன்னாளுமை

  


மேற்கு ஐரோப்பா என்பது சிறிய நாடுகளின் கூட்டமாகும். அதில் பெரிய நாடாகிய ஜேர்மனியின் மக்கள் தொகை எட்டுக் கோடியாகும். அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை 19 கோடியாகும். அது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையின் குறைவானது. மேற்கு ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உள்ள நாடுகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாக கருதலாம். தங்களது சிறுமை என்னும் வலிமையற்ற நிலையைத் தவிர்க்க பல ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரம் மற்றும் அரசியல் கூட்டமைப்பிலும் இணைந்துள்ளன.

கேந்திரோபாய தன்னாளுமை

ஒரு நாடு தனது பாதுகாப்பிற்கும் உலக அரங்கில் அதனது செயற்பாட்டிற்கும் வேறு நாடுகளில் தங்கியிருக்காமல் இருப்பதை கேந்திரோபாய தன்னாளுமை (Strategic Autonomy) எனச் சொல்லலாம். ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை முன்பு பிரித்தானியா கடுமையாக எதிர்த்தது. பிரான்ஸ் அதை தீவிரமாக ஆதிரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என ஒரு படை வேண்டும் என பிரான்ஸ் செயற்படுகின்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த காலத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய தன்னாளுமை வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. டிரம்ப் அமெரிக்கா ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவு செய்யக் கூடாது என்ற கொள்கையுடையவர். சீனாவிலும் பார்க்க வலிமையான பொருளாதாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் படைத்துறைக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை.



ஒதுக்கப்பட்டதாக உணரும் ஐரோப்பா

மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியதும் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து AUKUS என்ற படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது கேந்திரோபாய தன்னாளுமை (strategic autonomy) பற்றி தீவிரமாக சிந்திக்க வைத்தன. ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுத்த போது அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளின் படைகளும் வெளியேறியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியது. அப்போது கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐரோப்பாவிற்கான பாதுகாப்பின் தேவை முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று அதிகரித்திருக்கின்றது என்றார். மேலும் அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒவ்வொன்றும் ஐயாயிரம் படையினரைக் கொண்ட துரித பதிலிறுப்பு படையணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார். ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் தனது டுவிட்டர் பதிவில் அதை ஆதரித்திருந்தார். நேட்டோ படையினர் ஒரு நிபந்தனையற்ற படை விலக்கலை ஆப்கானிஸ்த்தானில் இருந்து செய்வதை தான் விரும்பவில்லை என்றார் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென் ஸ்ரொலென்பேர்க்.

கேந்திரோபாய தன்னாளுமையும் ஐரோப்பிய ஒன்றியமும்

ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேந்திரோபாய தன்னாளுமை என்பது ஒரு கொள்கை நோக்கமாக (Policy Objective) 2016-ம் ஆண்டில் இருந்து இருக்கின்றது. கொள்கை நோக்கம் என்பது கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்ற விளைவுகளாகும். (A policy objective is a desired outcome that the policy makers wish to achieve). 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தனது உலகளாவிய கேந்திரோபாயத்தை வகுத்துக் கொண்டது (European Union Global Strategy). அதன் ஒரு பகுதிதான் கேந்திரோபாய தன்னாளுமையாகும்.

தனித்துவமான பிரான்ஸ்

பிரான்ஸ் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருப்பதை விரும்புவதில்லை. தனக்குத் தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்து கொள்கின்றது. பிரான்ஸ் உற்பத்தி செய்யும் போர்விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. 2011-ம் ஆண்டு இரசியாவே பிரான்ஸிடமிருந்து இரண்டு உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை வாங்கும் ஒப்பந்தம் செய்தது. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமைக்கு ஆட்சேபனையாக அந்தக் கப்பல்களை இரசியாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் நிறுத்தியது. பிரான்ஸும் கிரேக்கமும் ஒன்றை ஒன்று பாதுகாக்கும் ஒப்பந்தம் செய்ததுடன் பிரான்ஸிடமிருந்து மூன்று பில்லியன் யூரோக்களுக்கு மூன்று Frigate வகைப் போர்க்கப்பல்களை கிரேக்கம் வாங்கும் ஒப்பந்தமும் கைச்சாத்திட்டன. பல ஐரோப்பிய படைத்துறை ஆய்வாளரகள் இது ஐரோப்பாவின் கேந்திரோபாய தன்னாளுமையின் முதற்படி என்கின்றனர்.

இரசியாவின் அச்சுறுத்தல்

மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்னும் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவற்றின் தோழமை நாடுகளான நோர்வே, பிரித்தானியா, சுவிற்சலாந்து ஆகியவையும் அடங்கும். புவியியல் அடிப்படையில் பார்க்கும் போது போலாந்து, ஹங்கேரி, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகும். இரசியாவால் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கரிசனை கொண்ட ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்து செயற்படுகின்றன. இரசியாவைப் பொறுத்தவரை தனக்கு என ஒரு கவசப் பிராந்தியம் அவசியம் என நினைக்கின்றது. அந்த கவசப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளான ஜோர்ஜியா, உக்ரேன் போன்ற நாடுகள் நேட்டோ கூட்டமைப்பிலோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைவதை கடுமையாக எதிர்க்கின்றது. இரசியா தன் கவசப் பிராந்தியமான போல்ரிக் பிரதேச நாடுகள் மூன்றும் ஏற்கனவே இரண்டிலும் இணைந்தமை இரசியாவைப் பொறுத்தவரை மிகவும் கரிசனைக்கு உள்ள ஒன்றாகும்.

லிபிய மும்மர் கடாஃபியின் கருத்து

“ஐரோப்பாவில் ஐம்பது மில்லியன் இஸ்லாமியர்கள் வாழுகின்றார்கள். இன்னும் சில பத்து ஆண்டுகளின் கத்தியின்றி இரத்தமின்றி அவர்கள் அல்லாவின் கிருபையால் ஐரோப்பாவைக் கைப்பற்றுவார்கள்” என்றால் லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி. ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவாமல் இருக்க அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகளின் ஒத்துழைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. உளவுத்துறையிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கேந்திரோபாய தன்னாளுமை தேவைப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை உணர்ந்த போலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த பாதுகாப்புத்துறை உற்பத்தி $113 பில்லியன்களாகும். அமெரிக்காவின் வான்பாதுகாப்புத்துறையின் உற்பத்தி மட்டும் $697 பில்லியன்களாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பாதுகாப்பை உறுதிய் செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் போலாந்து தனது நாட்டில் அமெரிக்கா படைத்தளம் அமைக்க வேண்டும் என அமெரிக்காவை வேண்டிக் கொண்டதுடன் அதற்கான செலவின் பெரும் பகுதியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. ஜேர்மனியில் இருந்து தனது படையினரில் 12,000 பேரை விலக்க முடிவு செய்த அமெரிக்காவிற்கு இது நல்வாய்ப்பாகவும் அமைந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு இல்லாவிடில் இரசியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய மூன்று சிறிய போல்ரிக் நாடுகளையும் இரசியாவால் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கைப்பற்ற முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக உள்ளன. மேலும் நான்கு நாடுகள் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் உள்ள துருக்கி, அல்பேனியா, மொண்டிநீக்ரோ, வட மசடோனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இரு அமைப்புகளினதும் தலைமைச் செயலகம் பிரஸல்ஸில் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முழுமையான அரசியல் ஒன்றியமாவதை (Political Union) அமெரிக்கா பகிரங்கமாக எதிர்க்கின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸைத் தவிர மற்ற நாடுகள் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வல்லமை இல்லாமல் இருக்கின்றன. பிரான்ஸும் உலங்கு வானூர்திகளுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பக் கூடியது. தற்காலத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், லேசர் படைக்கலன்கள், விண்வெளிப் படையணிகள் போன்றவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இல்லை. பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வலிமையான படைகளைக் கொண்டவை. மற்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெயரளவில் சில படைகளை வைத்திருக்கின்றன. பெல்ஜியம், போர்த்துக்கல், ஒஸ்ரியா, பல்கேரியா, ஹங்கேரி, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பார்க்க இரசியாவின் வலயத்தில் உள்ள சிறிய நாடாகிய பெலரஸ் படைவலிமை மிக்கதாகக் கருதப்படுகின்றது. Nuclear Triad எனப்படும் தரை, வான் கடலடியில் இருந்து அணுப்படைகலன்களை வீசக்கூடிய நாடுகளாக இந்தியா, சீனா, இரசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன. முன்பு பிரான்ஸ் இந்த வல்லமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இல்லாத சுவீடன் சிறந்த படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றது.

கிரேக்கம்

நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்புரிமை உள்ள நாடாகும். ஆனால் துருக்கி கிரேக்கத்திற்கு சொந்தமான கடற்பரப்பை தனது கடற்பரப்பு என உரிமை கொண்டாடுவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் உள்ளது. கிரேக்கம் முதலில் தனது பாதுகாப்பிற்கு சைப்பிரஸுடனும் இஸ்ரேலுடனும் ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்தது. பின்னர் சைப்பிரஸுடனும் எகிப்த்துடனும் இன்னும் ஓரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் செய்தது. இந்த ஒப்பந்தங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கேந்திரோபாய தன்னாட்சி இல்லாமையை எடுத்துக் காட்டுகின்றது. பிரான்ஸுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்வதற்கு கிரேக்கம் பிரான்ஸிடமிருந்து 24 ரஃபேல் விமானங்களையும் மூன்று போர்க்கப்பல்களையும் வாங்க வேண்டியிருந்தது.

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின்றி நேட்டோ இருப்பது கடினமான ஒன்று என்றார் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென் ஸ்ரொலென்பேர்க்.


Wednesday 6 October 2021

Pandora: வருமானவரிப் புகலிடங்கள்

 

வெளிநாடுகளில் முறைகேடாகப் பணமுதலீடு செய்து சொத்துக் குவித்தவர்களின் பட்டியலை, சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists (ICIJ) `பண்டோரா பேப்பர்ஸ்' எனும் பெயரில் வெளியிட்டிருக்கிறது. உலகின் முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களான பிபிசி, தி கார்டியன், இந்தியாவின் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' முதலிய 150 ஊடகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் புலனாய்வில் பன்னிரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான திடுக்கிடும் ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

வருமானவரிப் புகலிடங்கள்.

ஒரு நாட்டிலோ அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலோ வருமானவரி குறைவானதாகவும் இரகசியம் பேணும் சட்டங்களும் இருந்தால் அது வருமானவரிப் புகலிடமாகும். அவை மட்டும் போதாது அந்த நாட்டில் ஒரு நீண்டகால அடிப்படையில் அரசியல் உறுதிப்பாடு இருப்பதும் நிதித் துறையில் அரச தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். பனாமாவில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies ) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரிவிற்பனை வரி போன்றவற்றை பனாமா அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. பனாமாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் அல்லது தனிப்பட்டவர்களின் பெயர்கள் கொடுக்கத் தேவையில்லைதங்கள் நடவடிக்கைகள் பற்றிப் பதிவுகள் வைத்திருக்க வெண்டும் என்ற அரச கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய பதிவுகளை வெளிநாட்டு வருமான வரித் துறையினருக்கு வெளிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. உலக வெளிப்படைத் தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாத படியால் அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்பவர்களின் நிதி நிலைமை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லை.

வருமானவரிப் புகலிடங்களின் செயற்பாடு

மிகவும் சட்ட பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் ஒரு நாடோ அல்லது ஒரு நாட்டின் ஒரு புகுதியோ வருமானவரிப் புகலிடமாக இருக்க முடியும். இருப்பதும் உண்டு. உதாரணத்திற்கு கிரேப்ஸ் என்னும் நிறுவனம் அமெரிக்காவில் கைப்பேசிகளை நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தையில் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் நூறு டொலர் இலாபத்திற்கு அமெரிக்காவில் வரி கட்ட வேண்டும். மாறாக அந்த கைப்பேசிகளை வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்துள்ள கிரேப்ஸ் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கு 101டொலர்களுக்கு விற்று இலாபமாகக் கிடைக்கும் ஒரு டொலருக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். பின்னர் வருமான வரிப் புகலிட நாட்டில் இருந்து உலகெங்கும் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்து கிடைக்கும் 99 டொலர் இலாபத்திற்கு வருமானவரி கட்டாமலோ அல்லது அமெரிக்காவிலும் பார்க்க மிகக் குறைந்த வருமான வரியையோ கட்டலாம். இவை சட்டபூர்வமான வர்த்தகமாகும். ஆனால் அமெரிக்கா இப்படி ஒரு வருமானவரிப் புகலிட நாடு இருப்பதை விரும்பாது. அது அமெரிக்காவின் வருமான வரி மூலம் திரட்டும் நிதியைக் குறைக்கின்றது. ஆனால் நடைமுறையில் ஊழல் செய்வோர்க்கும் சட்ட விரோதமாகப் பணம் சேர்ப்போர்க்கும் தஞ்சமடையும் இடமாகப் பல வருமானவரிப் புகலிடங்கள் செயற்படுகின்றன. வெளி நாட்டு நிறுவனம் ஒன்று ஒரு வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்யும் நிறுவனத்தை shell company என அழைப்பர். இது வர்த்தக நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாமல் நிதிப் பரிமாற்றங்கள் செய்வதற்கும் அல்லது எதிர்கால திருகுதாள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வைத்திருக்கப்படும். வருமானவரிப் புகலிடங்களிற்குப் போகும் நிதி பின்னர் உலகின் முன்னணி நிதிச் சந்தைகளான New York, London, Zurich, Geneva, Frankfurt, and,  Singapore, Hong Kong, and Dubai ஆகியவற்றைப் போய்ச் சேரும்.




பெரும் வங்கிகளின் குழந்தைகள்

பல வருமானவரிப் புகலிடங்களை உருவாக்கிய சிற்பிகள் HSBC, UBS, Credit Suisse, Citigroup, Bank of America, RBS, Barclays, Lloyds, Standard Chartered, JPMorgan Chase, Wells Fargo, Santander, Credit Agricole, ING, Deutsche Bank, BNP Paribas, Morgan Stanley, and Goldman Sachs ஆகிய முன்னணி வங்கிகள் ஆகும். 1970களில் இருந்து இந்த முன்னணி வங்கிகள் தமது பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களின் வருமானங்களிற்கான வரிகளில் இருந்து தப்ப உதவி செய்து பெரும் வருவாயை ஈட்டியுள்ளன. வெறும் நாணயங்களை மட்டுமல்ல தங்கம் போன்ற உலோகங்கள்ஓவியங்கள்பழைய வாகனங்கள்புகைப்படங்கள்உல்லாசப் படகுகள்எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றின் வர்த்தக மூலம் வருமானங்கள்  மறைக்கப்படுவதும் உண்டு.

பினாமிகள்

வருமானவரிப் புகலிடத்தில் அரசியல்வாதிகள் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்குரிய நண்பர் அல்லது உறவினர் தேவை. அதாவது பினாமி தேவை. ஒரு அரசியல்வாதி தன் நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை தனது பினாமியின் பெயரில் ஒரு இரகசியம் பேணும் வருமானவரிப் புகலிட நாட்டில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதனால் அந்தப் பினாமி நிறுவனம் பெரும் நிதியைத் திரட்டும். பின்னர் இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்னும் முகமூடியுடன் இந்தியாவிற்கு வரும். அந்த முதலீட்டுக்கு வரிவிலக்கும் வழங்கப்படும்.

பணச் சலவையும் வருமானவரிப் புகலிடமும்.

உலகில் அதிக அளவு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்த பிராந்தியமாக ஹொங் கொங் இருக்கின்றது. பிரித்தானியாவின் முடிக்குரிய பிராந்தியாமான வேர்ஜின் தீவுகள் இரண்டாம் இடத்திலும் பனாமா நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பனாமாவில் தற்போது 350,00இற்கும் அதிகமானா நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பனாமாவில் சட்ட விரோத நிதிகளை சட்டபூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். பனாமா புவியியல் ரீதியாக உலகின் பெருமளவு போதைப் பொருள் உற்பத்தி செய்யும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் உலகில் முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கின்றது. பனாமா ஊடகவியலாளர் ஒருவர் பணச் சலவை என்று வரும் போது எமது நாட்டில் நன்றாக நனைத்து துவைத்துக் காய வைத்துக் கொடுப்போம் என்றார். சிறந்த வருமானவரிப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். பனாமாவில் வருமான வரி தொடர்பாகவும் சட்டம் தொடர்பாகவும் வல்லுனர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் செய்து பிழைப்பு நடத்துகின்றன. பணச்சலவைக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டமைப்பான நிதி நடவடிக்கைப் பணிப் படை { Financial Action Task Force (FATF)} பனாமா நாட்டை தனது சாம்பல் நிறப்பட்டியலில் சேர்த்துள்ளது. இலகுவாக வர்த்தக நிறுவனங்களைப் பதிவு செய்தல்நடவடிக்கைப் பதிவேடுகள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் இன்மை போன்றவை பனாமாவை இந்தப் பட்டியலில் வைத்திருக்கின்றது. அனாமதேய சமூக அமைப்பு (anonymous society) என வகைப்படுத்தி பனாமாவில் பெயர்கள் வெளிவிடாமல் நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். அப்படிப் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள்சொத்துக்கள் பற்றிய விபரம் யாருக்கும் வெளிவிடப்படமாட்டாது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் (Corporations) தமது கணக்குகளை சட்டப்படி ஆய்வு செய்யத் தேவையில்லை. வாருமானவரித் துறைக்கு தமது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைக்களுக்கு பனாமாவில் வரி கட்டத் தேவையில்லை.

ரோனி பிளேயர்

பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ரோனி பிளேயரும் அவரது துணைவியாரும் இலண்டன் நகரின் நடுப்பகுதியில் உள்ள 6.5மில்லியன் பவுண்கள் பெறுமதியான ஒரு கட்டிடத்தை வாங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரித்தானியாவில் வாங்கி இருந்தால் அதற்கான முத்திரைக் கட்டணமாக மூன்று இலட்சத்து பன்னிரண்டாயிரம் பவுண்களுக்கு மேல் செலவழித்திருக்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளராக இருக்கும் நிறுவனத்தை வருமானவரிப் புகலிட நாடு ஒன்றில் வாங்கினார்கள். விற்பனையாளர்கள் பாஹ்ரேன் அரசுடன் தொடர்புள்ளவர்கள். அவர்கள் பிரித்தானியாவில் மூலதன ஆதாய வரியை தவிர்ப்பதற்காக அப்படி விற்பனை செய்ததாக செர்ரி பிளேயர் தெரிவித்துள்ளார். அக்கட்டிடத்தின் உரிமம் உள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர்களாக பிளேயார் தம்பதிகள் இப்போது இருக்கின்றார்கள். இந்த நடவடிக்கையில் எந்த ஒரு பிரித்தானியச் சட்டமும் மீறப்படவில்லை. ஆனால் அவர்கள் முத்திரைக் கட்டணத்தை தவிர்த்துள்ளார்கள்.

மூலதன ஆதாய வரி தவிர்ப்பு

பிளேயர் தம்பதிகள் செய்தது போல் பிரித்தானியாவில் உள்ள 1500 கட்டிடங்கள் விற்பனை செய்யப்பட்டு மூலதன ஆதாய வரி மற்றும் முத்திரைக் கட்டணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கட்டார்(கத்தார்) அரச குடும்பம் பிரித்தானியாவில் £18.5 மூலதன வரியை தவிர்த்துள்ளது. ஜோர்தான் நாட்டு அரசர் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களை புகலிட நாட்டு நிறுவனங்கள் மூலம் வாங்கியுள்ளார்.

இலஞ்சம் கொடுக்க சிறந்தவழி

ஒரு நாட்டின் அமைச்சருக்கு  இலஞ்சம் கொடுக்கும் போது அவரும் பிடிபடாமல் இலஞ்சம் கொடுப்பவரும் பிடிபடாமல் இருக்க வருமான வரிப்புகலிடம் சிறந்த வழி வகுக்கின்றது. பிரித்தானியாவில் அல்லது அமெரிக்காவில் ஆடம்பர வீட்டை வைத்திருக்கும் (பனாமா போன்ற நாடுகளில்) நிறுவனத்தை குறித்த அமைச்சர் பெயருக்கு மாற்றி விடுவார்கள்.  நைஜீரியாவின் எரிபொருள் துறை அமைச்சருக்கு இப்படி பெருமளவு இலஞ்சத்தை உலக எரிபொருள் நிறுவனங்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. உலகின் எல்லா முன்னணிச் செல்வந்தர்களுக்கும் வருமானவரிப் புகலிடம் கொடுக்கும் நாடுகளில்/பிராந்தியங்களில் பெருமளவு சொத்துக்கள் இருக்கின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் கொங்கோ நாட்டில் பல நூறு மில்லியன்களைத் திருடி வருமான வரிப்புகலிடங்களில் வைத்திருக்கின்றார். அவரை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை. 

பொருளாதார தடை தவிர்ப்பு

அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஏழுக்கும் மேற்பட்ட இரசிய பெருஞ்செல்வந்தர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் தமது சொத்துக்களைத் திரட்டி வைத்திருக்கின்றனர். பணச்சலவை செய்வதற்கு அதாவது சட்ட விரோத செல்வத்தை சட்டபூர்வமான செல்வமாக மாற்றுவதற்கு சிறந்த இடம் வருமான வரிப்புகலிட நாடுகளாகும். படைக்கலன் கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், மனிதர்களைக் நாடுகளுக்கு நாடு கடத்துபவர்கள் தமது சட்ட விரோத செல்வத்தை வருமான வரிப்புகலிட நாடுகளில் வைத்திருக்கின்றனர். 

இந்தியர்கள் மட்டும் சளைத்தவர்களா?

இந்தியாவின் துடுப்பாட்ட சாதனையாளர் சச்சின் டென்டுல்கர், தொழிலதிபர்கள் கிரண் மஜூம்தார் ஷா, அனில் அம்பானி எனப்பல இந்தியர்கள் பண்டோரா பத்திரங்களில் உள்ளனர். அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் வருமானவரிப் புகலிடங்களில் உள்ளன. ஆனால் அவர் ஒரு கடனாளியாக தன்னைக் காட்டி தனக்கு சொத்து ஏதும் இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளார். பாக்கிஸ்த்தான் மட்டும் சும்மாவா? இம்ரான் கான் உட்பட பல அரசியல்வாதிகள் தொடர்பான பண்டோரா பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.  

Sunday 3 October 2021

குவாட் அமைப்பின் கூட்டறிக்கை சொல்லும் செய்தி

  


வெள்ளை மாளிகையில் குவாட் உரையாடல் நாடுகளான ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா செப்டம்பர் 24-ம் திகதி கூடிக் கலந்தாலோசித்து ஒரு கூட்டறிகையை வெளிவிட்டமை வெறும் உரையாடல் மட்டும் கொண்ட ஒரு “மினக்கெட்டான் வேம்படி” தான் இந்த குவாட் என்ற நையாண்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “உரையாடலில்” இருந்து “ஒத்துழைப்பு” என்ற நிலைக்கு குவாட் மாறியுள்ளது. ஆனாலும் “சீனா”, “படைத்துறை ஒத்துழைப்பு”, “தைவான்” ஆகிய இரண்டு பதங்களும் கூட்டறிக்கையில் காணப்படவில்லை.

குவாட் அமைப்பின் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

QUAD Joint Statement

குவாட் கூட்டறிக்கை

குவாட் அமைப்பின் கூட்டறிக்கையில் கொவிட்-19 என்பது 12 தடவையும் ஒத்துழைப்பு என்பது 10 தடவையும் இந்தோ-பசுபிக் என்பது ஆறு தடவையும் ஆப்கானிஸ்த்தான் என்பது 3 தடவையும் வட கொரியா என்பது ஒரு தடவையும் பயங்கரவாதம் என்பது இரண்டு தடவையும் உள்ளன. 5G என்பதப் பற்றி ஒரு பந்தியே உள்ளது. முதற் பந்தியிலேயே திறந்ததும் சுதந்திரமானதுமான இந்தோ பசுபிக் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வைத்துக் கொண்டு எந்தத் துறைகளில் குவாட் ஒத்துழைக்க வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நன்கு அறிய முடியும்.

கலங்கிய மோடிக்கு கைகொடுக்குமா குவாட்?

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் பிரதேசத்தில் நடந்த மோதலின் போது இந்திய தலைமை அமைச்சர் மோடி மிகவும் கலங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் முறையிட்டார். சொல்லி அழுதாரோ தெரியவில்லை. இந்தியா குவாட் அமைப்பில் இணைவதால் சீனாவிடமிருந்து இந்தியாவை குவாட் பாதுகாக்கும் இன இந்திய மக்களை இந்தியாவின் “பொய் ஹிந்த்” யூடியூப் சனல் கும்பல்கள் தொடர்ச்சியாக நம்பவைத்துக் கொண்டிருக்கின்றன. அருணாச்சலப் பிரதேசம் போன்ற இந்தியப் பிரதேசங்களை சீனா ஆக்கிரமிப்பதற்கு போர் தொடுத்தால் இந்தியாவுடன் இணைந்து ஒஸ்ரேலியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக போர் செய்யுமா என்பதை குவாட் அமைப்பின் தற்போதைய நிலைப்பாடு உறுதி செய்யவில்லை.

Trump: “Modi was in a bad mood”


படைத்துறை ஒத்துழைப்பு பற்றி கூட்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பல் வேறு அரசுறவியலாளரகள், அரச தலைவர்கள் இனிவரும் காலங்களில் சந்தித்து உரையாடுவாரகள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சரகள், இந்தோ-பசுபிக் பிராந்திய படைத்தளபதிகள் மட்டத்தில் சந்திப்போ கலந்துரையாடலகளோ நடக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. படைத்துறை ஒத்துழைப்பு இல்லாமல் இந்தியாவை சீனாவிடமிருந்து எந்த வகையில் குவாட் பாதுகாக்கும் என்பது கேள்விக் குறியே! கூட்டறிக்கையின் நான்காம் பத்தியில் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்போம் என்ற வாசகம் காணப்படுகின்றது. இரண்டாம் பத்தி:

2. Together, wecommit to promotinga free, openrules-based order, rooted ininternational law to advancesecurity and prosperity and counter threats to bothin the Indo-Pacific and beyond.We support the rule of law, freedom of navigation and overflight, peaceful resolution of disputes, democratic values, and territorial integrity. We commit to work together and with a range of partners. We reaffirm our strong support for ASEAN’s unity and centrality as well as the ASEAN Outlook on the Indo-Pacific. Full of potential, the Quad looks forward to the future; it seeks to uphold peace and prosperity and strengthen democratic resilience, based on universal values.

மோடி மிரட்டப்பட்டாரா என்பது பற்றிய முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்:

சீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா?

2018 ஜூலை மாதம் 23-ம் திகதி Foreign Policy சஞ்சிகையில் India is the Weakest Link in Quad என்றதலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் எனவுக் கூறப்பட்டிருந்தது.

விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கிற்கு commit என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு support என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. குவாட் என்பது நேட்டோ போன்றது என்போர் இவற்றைக் கவனிக்க வேண்டும். குவாட் என்ற அமைப்பிற்கான அமைப்பு விதிகளோ அல்லது ஆய்வி வீச்சளவோ (Terms of references) இன்னும் உருவாக்கப்படவில்லை. எந்த ஒரு புரிந்துணர்வு பதிவுக்குறிப்பு (memorandum of understanding) கூடக் கைச்சாத்திடவில்லை. குவாட் என்பதை ஒரு முறைசாரா அமைப்பாகவே பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த வகையில் நேட்டோவும் குவாட்டும் மலையும் மடுவும் போன்றவை.




குவாட்டின் இலக்கு சீனாதான்

குவாட் முழுக்க முழுக்க சீனாவை எதிர்கொள்ளத்தான் என அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக அறிவிக்காத போதிலும் குவாட் அமைப்பு சீன ஆதிக்கத்தை சமாளிப்பதற்கு என உருவாகிக் கொண்டிருக்கின்றது. Centre for New American Security என்னும் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி Richard Fontaine “நான்கு நாடுகளுக்கும் இடையில் ஒரு தீவிரமான பங்காண்மை மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை பார்க்காமல் இருப்பதற்கு நீங்கள் உங்கள் கண்களை கடுமையாக முடிக் கொள்ள வேண்டும்” என்கின்றார். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்தோ பசுபிக் நாடுகள் பாதிப்படைந்த போது அதைச் சாட்டாக வைத்து அந்த நாடுகளுக்கு உதவி செய்யும் போர்வையில் சீனப் படைகள் செல்வதைத் தடுக்க ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒத்துழைத்து அந்த நாடுகள் மீண்டு எழுவதற்கு உதவி செய்தன. அதை அடிப்படையாக வைத்து நான்கு நாடுகளும் பல வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் ஜப்பான் தலைமை அமைச்சர் சின்சோ அபே முன்வைத்த திட்டமே குவாட் அமைப்பை உருவாக்கும் எண்ணக் கருவிற்கு வழிவகுத்தது. ஆனால் சீனாவின் பொருளாதாரத்தைச் சார்ந்து வளர்ந்து கொண்டிருந்த ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் பகைமையை வளர்ப்பதைத் தவிர்க்க விரும்பிய இந்தியாவும் குவாட்டில் முழுமையாக ஈடுபடத் தயக்கம் காட்டின. இதனால் கிடப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேல் அத்திட்டம் வைக்கப்பட்டிருந்தது. 2017இல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடந்த டொக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. டொனால் டிரம்ப் குவாட் அமைப்பை உருவாக்கும் முயற்ச்சியை மீள் ஆரம்பித்தார். சீனாவின் படைத்துறை, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எட்டிய துரித வளர்ச்சியும் சீனாவின் பிராந்திய ஆதிக்க நகர்வுகளும் குவாட்டை மீள உருவாக்க வழிவகுத்தது.

நாளைய இந்தியா இன்றைய சீனா ஆகலாம்?

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது போல் சீனாவும் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. அதைத் தடுப்பது குவாட் அமைப்பின் நோக்கம் என்பதும் தொழில்நுட்பம், கடல்சார் சட்டம், மருத்துவம் போன்ற துறைகளில் குவாட் நிச்சயமாக ஒத்துழைக்கும். அது நேட்டோபோல் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு நாடாக உருவாகுவது சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. நேட்டோ போன்ற ஒரு கூட்டமைப்பை இந்தியாவுடன் உருவாக்க அமெரிக்கா விரும்பவில்லை என்பதையே AUKUS என்ற ஒஸ்ரேலியா, பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டுகின்றது. நேட்டோ அமைப்பு தனது படைத்துறை தொழில்நுட்பங்களை ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும். இந்தியாவுடன் ஒரு முழுமையான படைத்துறைத் தொழில்நுட்ப பகிர்வைச் செய்ய அமெரிக்கா தயங்குகின்றது. இன்று சீனாவால் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு எழுந்துள்ள சவால் இன்னும் இருபது ஆண்டுகளிற்கு பின்னர் இந்தியாவால் எழுவதற்கு வாய்ய்பு உண்டு.

மலபார் போர்ப்பயிற்ச்சி

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரபிக் கடலில் இந்தியாவுடன், ஒஸ்ரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து நடத்திய போர்ப்பயிற்ச்சியை குவாட்டின் ஒரு பகுதியாகப் பார்க்க முடியும். ஆனால் குவாட் நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டணி நாம் என பகிரங்கமாக அறிவித்து சீனாவை உசுப்பேற்ற விரும்பவில்லை என்பதை நன்கு அறிய முடிகின்றது. அதேவேளை சீனாவை அழிக்க உருவான கூட்டணிதான் குவாட் என்பது அப்பட்டமான அபத்தம்.

குவாட் கூட்டல் (QUAD+)

குவாட் கூட்டமைப்பில் தற்போது உள்ள ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர மேலதிகமாக தென் கொரியா, நியூசிலாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதுவும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்புண்டு. புவிசார் சூழலை வைத்துப் பார்க்கும் போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய திருகுப்புள்ளியான மலபார் நீரிணையை ஒட்டியுள்ள மலேசியாவின் ஒத்துழைப்பு குவட்டின் நோக்கத்தை நிறைவேற்ற மிக அவசியம்.


 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...