Friday 24 December 2021

தமிழர்களுக்கு தேவை ஒரு ஜே ஆர் ஜயவர்த்தன

  


2009இல் பின்னடைவைச் சந்தித்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது ஒரு சிக்கலான புவிசார் அரசியல் போட்டியில் மாட்டுப்பட்டுள்ளது. அதைக் கவனமாக வெளியே எடுத்து வெற்றியடையச் செய்யக் கூடிய அரசில் அறிவு, அரசியல் அனுபவம், அரசியல் வஞ்சனை, சம்பந்தப்பட்டவர்களை அணைத்து கெடுக்கும் நரித்தனம், எதிரியை ஏமாற்றும் மதிநுட்பம் எதுவும் தற்போது உள்ள எந்த ஓரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் இல்லவே இல்லை.

மாறும் உலக ஒழுங்கில் தமிழ் ஈழம்

மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகியவற்றிடையேயான ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தொடர்பான இந்த நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் நிலைப்பாட்டை தாண்டி செல்ல முடியாத ஒரு நிலை உருவாகி வருகின்றது. தம்மை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் தமிழ் நாடாளுமன்ற அரசியல்வாதிகளும் அரசியல் ஆய்வாளர்கள் என தம்மை நினைத்துக் கொள்பவர்களும் ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்துதான் நாம் தப்பிப் பிழைக்க முடியும் என்கின்றனர். 2019-ம் ஆண்டு டிரம்பின் ஆட்சியில் சிங்களவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இந்தியா மூலமாகத்தான் அமெரிக்காவை அணுக வேண்டும் என அமெரிக்கா விடுத்த நிர்ப்பந்தத்தை சிங்களவர்கள் தமது இறைமைக்கு அது பேரிடர் எனச் சொல்லி கடுமையாக எதிர்த்தபடியால் அமெரிக்கா அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டது. மேற்கு நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் தமிழர்கள் அந்த மாதிரியான எதிர்ப்பை காட்டவில்லை. காட்டும் துணிவு அவர்களிடம் இல்லை. 13இற்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற வஞ்சனையுடன் அதை ஜெனீவா மனித உரிமைக்கழகம் வரை இந்தியா கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்றும் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கும் என்றும் உலக அரங்கில் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் துணிவு யாருக்கும் இல்லை. இதை ஈழத் தமித்தரப்பினர் சரியாகச் செய்யாத வரை இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்லும்படி ஈழத்தமிழர் தரப்பினர் மேற்கு நாடுகளுக்கும் ஜப்பான், ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் உறுதியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் அடி வாங்கிய பின் அழுது கொண்டு போய் ஆசிரியரிடம் முறைப்பாடு செய்யும் அப்பாவி மாணவர்களின் நிலையிலேயே இருக்கின்றனர்.

இலங்கையில் அமெரிக்கா செய்த மூன்று நகர்வுகள்

1980களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியில் சிக்குப்பட்டது. பிலிப்பைன்ஸ்ஸில் அப்போது ஏற்பட்ட உறுதிப்பாடற்ற நிலை அங்கு பெரும் படைத்தளத்தை வைத்திருந்த அமெரிக்காவிற்கு சவாலாக அமைந்த படியால் அதற்கு மாற்றீடாக அது இலங்கையைத் தேர்ந்தெடுத்தது. இந்திரா காந்தியின் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடும் இந்தியாவின் படைத்துறை வளர்ச்சியும் 1971இல் வங்காளதேச விடுதலையில் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்தமையும் இந்தியாவை கையாள்வதற்கு இலங்கை அமெரிக்காவிற்கு தேவை என்ற நிலையை ஏற்படுத்தியது. அப்போதைய தொழில்நுட்ப நிலையில் அமெரிக்க கடற்படைக் கலன்களுக்கு தேவை ஏற்படும் போது எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய ஒரு துறைமுகம் அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதற்கு அது திருக்கோணாமலை துறை முகத்தை தெரிவு செய்தது. அமெரிக்கர்களுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திடம் திருகோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையம் ஒன்றை அங்குள்ள பிரித்தானியா உருவாக்கி பாவிக்கப்படாமல் இருந்த எண்ணெய் குதங்களை பாவித்து கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. பிரித்தானியா தனது குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தெற்காசியாவில் முதல் முதலாக இலங்கையிலேயே தனது வானொலி ஒலிபரப்பு நிலையத்தை ஆரம்ப்த்தது. இலங்கையின் பூகோள அமைப்பு வானலைத் தொடர்பாடலுக்கு உகந்ததாக இருக்கின்றது. அதனால் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கிடையிலேயான அதி-தாழ் அலைவரிசை (ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தை அமெரிக்காவ்ன் குரல் (Voice of America) அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் சிலாபத்தில் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டது. இந்தியாவைப் போல் அதிக இறக்குமதிக் கட்டுப்பாடு உள்ள இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாக மாற்றி அதைச் சிங்கப்பூரைப் போல் பொருளாதார வளர்ச்சியடையச் செய்து இந்தியர்களை அவர்களின் அரசின் பொருளாதரக் கொள்கையில் வெறுப்படையச் செய்வதும் அமெரிக்காவின் மூன்றாவது உபாயமாக இருந்தது.

இலங்கையை விழிப்புடன் கண்காணித்த இந்திரா

இலங்கையில் அமெரிக்கா மிக இரகசியமாகச் செய்யும் நகர்வுகளை இலகுவாக அறியும் திறன் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவிற்குச் அப்போது இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனை 1971-ம் ஆண்டு போரை ஆரம்பித்த போது அதை முன் கூட்டியே அறியாத சிறிமா திரையரங்கைல் ஆங்கிலப் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அது தொடங்க முன்னரே பழுதடைந்த படியால் அவசர தரையிறக்க அனுமதி வேண்டி கூர்க்கா படையினர் நிறைந்த இரு துருப்புக் காவி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் இந்திரா காந்தி தங்க வைத்திருந்தார். திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சிறிமா படம் பார்ப்பதையும் இடையில் நிறுத்தி விட்டு இந்திரா காந்திக்கு தொலை பேசி அழைப்பு விடுத்து அவசர உதவி கோரினார்.  அதற்கு பதிலளித்த இந்திரா எங்கள் படையினர் ஏற்கனவே கொழும்பில் நிற்கின்றார்கள் என்றார். பின்பு முப்பதிற்கும் மேற்பட்ட உலங்கு வானூர்திகள் இலங்கை வந்து காட்டுக்குள் இருந்த கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது குண்டு வீசி அழித்தன. இலங்கையில் அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளை உரிய நேரத்தில் அறிந்திருந்தார்.

தேடாமலே கிடைத்த பொல்லு

தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றம், அம்பாறை அபகரிப்பு, 1974 இலங்கை அரசு செய்த தமிழாராய்ச்சிப் படுகொலை, 1981இல் யாழ் நூல் நிலைய எரிப்பு போன்றவை இலங்கை தமிழர்களை பிரிவினைப் போராட்டத்தை தூண்டியிருந்தது. அமெரிக்கா பக்கம் சாயும் இலங்கையை மிரட்டுவதற்கான காரணிகளை இந்திரா காந்தி தேடி அலைய வேண்டிய நிலை இருக்க வில்லை. பங்களாதேசத்திற்கு உதவி செய்தது போல் ஈழத் தமிழர்களுக்கும் இந்திரா காந்தி உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருந்தனர். தமிழர்களுக்காக போராடியவர்களில் சிலருக்கு தமிழ் ஈழத்தையோ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையோ இந்திரா ஆதரிக்க மாட்டர் என்று தெரிந்தும் அவருடன் இணைந்து சிங்களத்திற்கு எதிராக செயற்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் அரசு கட்டவிழ்த்து விட்டது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களம் அட்டூழியம் செய்தது. அதை இந்திரா காந்தி இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் சபையும் (Indian Bar Council) அதை இனக்கொலை என்றது. இலங்கையில் இருந்து பலர் இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்தனர். அவற்றை எல்லாம் வைத்து இலங்கைக்கு எதிராக உலக அரங்கில் இந்திரா காந்தி பெரிய பரப்புரைகளைச் செய்தார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது இலங்கைப் பிரச்சனையை முன்வைக்க தவறுவதில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள் என்பதையும் தெரிவிக்க தவறுவதில்லை. தனது நாட்டின் உறுதிப் பாட்டிற்கு பங்கம் எனவும் எடுத்துரைப்பார். இலங்கையில் வான் மார்க்கமாக தரையிறக்குவதற்கு என முப்பதினாயிரம் படையினரையும் இந்திரா காந்தி தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்திராவின் பலவிதமான நகர்வுகளுக்கு மத்தியிலும் ஜே ஆர் ஜெயவர்த்தனே தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களை கூட்டிக் கொண்டே போனார். தனது தயவில் அமைச்சராக இருந்த சௌ. தொண்டமானை புது டில்லிக்கு ஜே ஆர் அனுப்பி இந்தியப் படைகள் வருவது மலையத் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது எனச் சொல்ல வைத்தார். இந்த நிலையில் இந்திரா காந்தி கொல்லப்பட ராஜீவ் காந்தி இந்திய தலைமை அமைச்சரானார். இருவருக்குமிடையில் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. ஆசியாவின் கிழக் குள்ள நரி என விபரிக்கப்பட்ட ஜே ஆர் ஜயவர்த்தனே ராஜீவ் காந்தியையும் அவரது அரசுறவியலாளர்களையும் கையாளும் தந்திரத்தை சிறப்பாக மேற் கொள்ளத் தொடங்கினார். அவரது முதலாவது வெற்றி அவரது வேண்டுகோளின் பேரில் ராஜீவ் காந்தி இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜீ பார்த்தசாரதியை பதவி நீக்கம் செய்ததே. வங்களாதேச விடுதலைப் போரில் ஹென்றி கிஸ்ஸிங்கரை திணறடித்த அரசுறவியலாளர் ஜீ பார்த்தசாரதி. அதன் பிறகு வந்த வெளியுறவுத் துறைச் செயலர் ரொமேஸ் பண்டாரியின் மகளின் திருமணத்திற்கு தாராளமான பங்களிப்பு செய்து அவரைத் தனது கைக்கூலியாக்கினார் ஜே ஆர். அப்போது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசுறவியலாளர்கள் JR cornered Rajiv – ஜே ஆர் ராஜீவை முடக்கிவிட்டார் என்ற வாசகம் பரவலாக அடிபட்டது. இலங்கையில் ஒரு தனிநாடு அமைக்கும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என்பதை புரிந்து கொண்டு தனது காய்களை ஜே ஆர் நகர்த்தினார். யாழ் குடா நாட்டை மட்டும் பிரித்துக் கொடுக்க தான் தயார் என ஒரு போலியான முன்மொழிவை தமிழ்ப்போராளிகள் முன் வைத்தார். அதை ராஜீவும் இந்திய அரச வளாகத்தின் தென் மண்டலத்தில் உள்ளவர்களும் விரும்ப மாட்டார்கள் என்பதை அறிந்தே அப்படி ஒரு நகர்வைச் செய்தார். இந்தியாவிற்கு ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தால் அது தமிழ்ப்போராளிகளை அழிக்கும் என்பதை உணர்ந்த ஜே ஆர் ராஜீவுடன் ஓர் ஒப்பந்தத்தையும் செய்து இலங்கை அரசியல் யாப்பிற்கு 13வது திருத்தத்தைச் செய்தார். அதனால் இந்திய படையினர் ஜே ஆரின் கூலி வாங்காத கூலிப் படையாக வந்து தமிழ்ப் போராளிகளின் படைக்கலன்களை பறித்தது கொடுக்க மறுத்தவர்களிற்கு எதிராகவும் அப்பாவிகளுக்கு இலங்கையில் சிங்களவர்கள் கூடச் செய்யாத வன்முறைகளைச் செய்தது. IPKF என்பது Indian Peace Keeping Force அல்ல Innocent People Killing Force என சிங்கள ஊடகங்கள் கிண்டலடித்தன. பின்னர் 13-ம் திருத்தத்தை நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடிப்பதிலும் ஜே ஆர் வெற்றி கண்டார்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பன்னாட்டு மட்டத்தில் செயற்படும் அனுபவமோ அறிவோ துளியளவும் கிடையாது. சிங்கள அரசியவாதிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய் வருவார்கள். வெளிநாடு அரசியல்வாதிகளையும் சந்திப்பார்கள். அவர்களது அதிகாரிகள் வெளியுறவுத் துறையில் வெளிநாடுகளில் பயிற்ச்சி பெற்றதுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். ஓரு இறைமையை வேண்டி நிற்கின்ற இனத்தின் அரசுறவியலாளர்களாக செயற்படக்கூடிய எவரும் தமிழர்களிடையே இல்லை. தமிழர்களின் அந்த வலிமையற்ற நிலையை அறியாமல் சிலர் தமிழர்களுக்கு என ஒரு வெளிநாட்டு கொள்கை தேவை ஒரு சிந்தனைக் கலம் (Think Tank) தேவை என்கின்றனர்.

தமிழர்களுக்கு தேவை ஜே ஆர் ஜயவர்த்தன போன்ற வஞ்சகம், கபடம், துணிவு, அர்ப்பணிப்பு மிக்க ஒரு தலைவர்.

Tuesday 21 December 2021

இலங்கையில் அமெரிக்கத்தலையீட்டின் வரலாறும் ராஜபக்சேக்களின் முடிவும்

  


இலங்கையில் அமெரிக்கத் தலையீடு பிரித்தானியக் குடியேற்ற ஆட்சி நடக்கும் போது 1813-ம் ஆண்டு சென்ற அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் கப்பலுடன் ஆரம்பமானது. அப்போது இலங்கை தலைநகராக இருந்த காலியில் அது தரையிறங்க பிரித்தானிய அரசு அனுமதிக்காமல் தமிழர் பிரதேசத்திற்கு போகும்படி பணித்தது. இலங்கையின் தென்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பிரித்தானிய ஆங்கிலத் திருச்சபையுடன் பிணக்கு ஏற்படாமல் இருக்கவே இப்படிச் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையினர் தெல்லிப்பளையின் தமது முதலாவது பாடசாலையை ஆரம்பித்தனர். தொடர்ந்து பல பாடசாலைகளை அமைத்து மத மாற்றங்களுடன் ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு கல்வி புகட்டினர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் பாடசாலை, உடுவில் ஆடவர் பாடசாலை ஆகியவை அப்போது அவர்கள் உருவாக்கிய பிரபல பாடசாலைகளாகும். உடுவில் மகளிர் பாடசாலை தெற்காசியாவில் உருவாக்கிய வதிவிட வசதிகளுடன் உருவான முதல் பாடசாலையாகும். மானிப்பாயில் அமெரிக்கர்கள் உருவாக்கிய போதனா வைத்தியசாலையும் தெற்கு ஆசியாவில் உருவான முதல் போதனா வைத்தியசாலையாகும்.

அமெரிக்காவின் ஜே ஆரும் திருச்செல்வமும்

அமெரிக்கர்களின் அரசியல் தலையீடு S. W. R. D பண்டாரநாயக்க 1956-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது தீவிரமடைந்தது. பெரிய நிலக்கிழாரான பண்டாரநாயக்க இலங்கையின் ஆட்சியைப் பிடிக்க ஒரு குறுக்கு வழியை பின்பற்றினார். ஒரு பக்கம் தீவிர சிங்கள-பௌத்த பேரினவாதியாகவும் மறுபுறம் ஒரு சமூகவுடமைவாதியாகவும் தன்னை முன்னிறுத்தி சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற உறுதி மொழியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் பல தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். இது அமெரிக்காவை மிகவும் விசனத்திற்கு உள்ளாக்கியது. அவரது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ களமிறங்கியதாக நம்பப்படுகின்றது. அதன் இலங்கை முகவர்களாக ஜே ஆர் ஜெயவர்த்தனேயும் எம் திருச்செல்வமும் செயற்பட்டதாக ஐயம் பரவலாக உண்டு. எம் திருச்செல்வம் எஸ் ஜே வி செல்வநாயகத்தை பண்டாரநாயக்காவின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டினார். அப்போது இலங்கை அரசின் சட்டமா அதிபராக இருந்த எம் திருச்செல்வத்தின் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட பண்டாரநாயக்க அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பினார். செல்வநாயகத்தின் கிளர்ச்சியை வைத்து இலங்கையில் ஓர் இனக்கலவரம் ஐக்கிய தேசியக் கட்சியால் திரைமறைவில் தூண்டப்பட்டது. நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் இலங்கையில் இணைப்பாட்சி (சமஷ்டி) ஆட்சி முறைமையை ஏற்படுத்தி சிங்களத்துடன் தமிழுக்கும் ஆட்சி மொழியில் ஈடான நிலை ஏற்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். உடனே ஜே ஆர் ஜயவர்த்தனே தனது இனவாதத்தை கக்க தொடங்கினார். இலங்கையை இரண்டாக பிளப்பதாக சித்தரிக்கும் பதாகைகளுடன் கொழும்பில் இருந்து கண்டிக்கு ஒரு நடைப்பயணத்தை மேற்கொண்டார். பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றார். இவற்றின் பின்னணியில் சிஐஏ செயற்பட்டதாக நம்பப்படுகின்றது.

மீண்டும் திருச்செல்வத்தின் பின்னால் அமெரிக்காவா?

1965-ம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போதிய அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாதபடியால் மீண்டும் எம் திருச்செல்வம் களத்தில் இறங்கி எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியை டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கினார். அந்த ஆட்சியில் தமிழ்மொழி சிறப்பு விதிகள் சட்டம் இடதுசாரிகளினதும் பௌத்த பிக்குகளினதும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டது. அக்காலகட்டத்தில் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அதனால் 1970இல் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் தனியார் சொத்துக்களை அரசுடமையாக்கியதுடன் சீனாவுடன் நெருங்கிய நட்பை பேணியது.

அமெரிக்கா (பின்னால்) போன பீலிக்ஸ்

1970இல் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியில் அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருந்தது. முக்கியமாக மேற்குலக ஆதரவான ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தை சிறிமா அரசுடமையாக்கியது அமெரிக்காவைச் சினப்படுத்தியது. அவரது ஆட்சியில் இடதுசாரிகளான என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியதுடன் அந்நியச் செலவாணிக் கையிருப்பும் மோசமான நிலையில் இருந்தது. இலங்கைக்கு அமெரிக்கா கோதுமை மாவை இலங்கை ரூபாவில் விற்பனை செய்து அந்த ரூபாக்களை அமெரிக்க தூதுவரகத்தின் பெயரில் இலங்கை நடுவண் வங்கியில் பி. எல்-480 என்னும் பெயரில் வைப்பிலிடப்பட்டது. அந்தக் கணக்கில் இருந்து பெருமளவு தொகையை அமெரிக்க தூதுவரகம் மீளப் பெற முயன்ற போது நிதியமைச்சராக இருந்த என் எம் பெரேரா அதற்கு அனுமதி வழங்க மறுத்தார். பின்னர் சிறிமாவோவின் மருமகனானவரும் சுதந்திரக் கட்சியில் செல்வாக்கு செலுத்தியவருமான பீலீக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். என் எம் பெரேரா அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். முதல் முறையாக இலங்கை அமைச்சர் ஒருவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தில் பதவி ஏற்பு செய்து கொண்டார். ஆம் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அமெரிக்காவிலேயே நிதி அமைச்சராக இலங்கைத் தூதுவர் முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, பொதுவுடமைக் கட்சி ஆகிய இடது சாரிக் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு தனித்தனியே இயங்கத் தொடங்கின. சிறிமாவும் அவர் மகனும் பிரிந்தனர். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததுடன் மீண்டும் அது ஆட்சியைக் கைப்பற்ற பதினேழு ஆண்டுகள் எடுத்தன. அதுவும் இடது சாரிக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க ஆதரவு தாராண்மைவாதக் கட்சியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் மாறிய பின்னரே அது நடக்கக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் தளம் அமைக்க முயன்ற அமெரிக்கா

ஜே ஆர் ஜயவர்த்தனேயின் ஆட்சிக்காலத்தில் இலங்கையை அமெரிக்காவின் செய்மதி நாடாக மாற்றும் முயற்ச்சி தீவிரமாக நடைபெற்றது. இலங்கையில் அமெரிக்காவின் படைத்துறைக்கு தேவையான வசதிகளை திருமலையிலும் சிலாபத்திலும் அமைக்க முயற்ச்சி செய்யப்பட்டது. தமிழர்களை பாவித்து அதை இந்தியா குழப்பலாம் என உணைர்ந்த அமெரிக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் தனக்கு பின்னால் இணைக்க எஸ் ஜே வி செல்வநாயகத்தின் மருமகனான ஏ ஜே வில்சனையும் எம் திருச்செல்வத்தின் மகனான நீலன் திருச்செல்வத்தையும் களத்தில் இறக்கியது. அவர்கள் இணைந்து பல இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் தமிழர் பிரச்சனைக்கு அதிகாரமில்லாத மாவட்ட அபிவிருத்தி சபைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி அதை நிராகரித்த போது அமெரிக்க தூதுவர் அப்போதைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரைச் சந்தித்து அதை ஏற்கும்படி வற்புறுத்தியது. அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தன்னும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற பணிப்புரையுடன் ஜே ஆர் ஜெயவர்த்தன தனது அமைச்சர்களான சிறில் மைத்தியூவையும் காமினி திசாநாயக்கவையும் பெரும் காடையர் கூட்டத்துடன் யாழ்ப்பாணம் அனுப்பினார். அவர்கள் யாழ் பொது நூல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். தமிழர்களிடையே ஒரு தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது. அமெரிக்க திட்டத்தை தவிடு பொடியாக்க இந்தியாவிற்கு தேவையான கடப்பாரையை நூலக எரிப்பாலும் 1983 கலவரத்தாலும் கொடுத்தார். இந்தியா தமிழர்களுக்கு நல்லவன் போல் நடித்து அமெரிக்காவின் திருமலை மற்றும் சிலாபம் திட்டங்களை முறியடித்து தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்திற்கு 1987இல் இருந்து 2009வரை பேருதவி செய்தது.

சுக்கு நூறாக உடைந்த அமெரிக்காவின் ஜெய சிக்குறு

விடுதலைப் புலிகளின் தீரமிகு போராட்டத்தால் 1990களின் பிற்பகுதிகளில் இலங்கை திணறியது. கடல் மூலமாக வடக்கில் உள்ள படை முகாம்களுக்கு விநியோகம் செய்வதற்கு இந்தியாவின் தயவு தேவைப்பட்டது. இதை விரும்பாத அமெரிக்கா இலங்கைப் படையினர்க்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் கொடுத்து தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையை கைப்பற்றும் போரை வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) என்னும் பெயரில் ஒரு பெரும் படைநடவடிக்கையை 1997இல்ச் ஆரம்பித்தது. சிறிது சிறிதாக சிங்களப் படையினர் முன்னேறி வருகையில் விடுதலைப் புலிகள்1999இல் கொண்டு வந்த படைக்கலன்கள் அடங்கிய கப்பல் ஒன்றை இந்தியா கடல் கடக்க விட்டுக் கொடுத்தது. விடுதலைப்புலிகள் கொண்டு வந்த பல்குழல் ஏவுகணைச் செலுத்தி சிங்களப் படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஆசியா நோக்கிய சுழற்ச்சி மையத் திட்டத்தில் இந்தியாவின் ஆதரவு அவசியம் என்பதை அமெரிக்காவிற்கு ஜெய சிக்குறு படைநடவடிக்கையில் தோல்வி உணர்த்தியது. அதன் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது செய்த பொருளாதார தடைகளை 2000இல் இருந்து நீக்கி இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆரம்பித்தன.

போருக்கு உதவியவரக்ளுக்கு உரிய கூலி இல்லை

மஹிந்த ராஜபக்சவும் அவரது உடன் பிறப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செய்த போரில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உதவிகள் செய்தன. போரில் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் Status of Forces Agreementஐயும் இந்தியாவுடன் Comprehensive Economic Partnership Agreementஐயும் மஹிந்தவின் அரசு செய்யும் என எதிர்பார்த்து தோல்வியடைந்தன. மஹிந்தவின் அரசு சீனா இலங்கையில் பல முதலீடுகளைச் செய்தது. அமெரிக்கா பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் பல தலையீடுகளை இலங்கையில் செய்தது. ராஜபக்சேகளின் கட்சியில் மைத்திரிபால சிரிசேன என்பவரை தூங்குநிலைத் தாக்குதலாளி (Sleeper Cell) ஆக மாற்றியது. வெளிநாட்டு உளவுத்துறையினரின் தூண்டுதலால் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை சிங்களப் பேரினவாதிகள் செய்தனர். அதனால் அவர்களின் ஆதரவு தேர்தலில் கிடைக்காமல் இருக்க சதி செய்யப்பட்டது. தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவோம் என அமெரிக்கா சந்திரிக்கா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் மூலம் உறுதி வழங்கப்பட்டது. மஹிந்தவின் சோதிடர் கிரக நிலை சாதகமாக இருப்பதால் முன் கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் தாமதித்தால் தோல்வி ஏற்படும் என பொய்யான ஆலோசனை வழங்கினார். அவருக்கும் வெளிநாட்டு தூண்டுதல் இருந்தது. அது எந்த நாடு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் போட்டுடைத்த ஐக்கிய தேசியக் கட்சி

அமெரிக்கா தனது சதிகளால் ஆட்சி பீடமேற்றிய மைத்திரியும்-ரணிலும் மோசமாக ஆட்சியை நடத்தி திறனற்ற ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் எல்லாவற்றையும் போட்டுடைத்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்ட தென்றார். ராஜபக்சே குடும்பத்தினர் மைத்திரி-ரணில் ஆட்சியில் நடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு எனவும் சிங்களவர்களை தம்மால் மட்டும் பாதுகாக்க முடியும் என தேர்தல் பரப்புரை செய்து 2019 நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2020இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இலகுவாக வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது.

நிதி நெருக்கடி

மைத்திரி-ரணில் அரசுக்கு பன்னாட்டு நாணய நிதியம் வழங்கியிருந்த $1.5பில்லியன் பெறும் வசதி ராஜ்பக்சேக்களின் ஆட்சிக்கு வந்தவுடன் இடை நிறுத்தப்பட்டது. அதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பதை இலகுவாக ஊகிக்கலாம். 2020 ஒக்டோபர் மைக் பொம்பியோ கொழும்பு சென்றார். அப்போது இலங்கையின் வெளிநாட்டுக்கடன் $15பில்லியன் அதற்கான வட்டியைக் கூட கட்ட முடியாத நிலையில் இருந்தது. அமெரிக்காவுடன் இலங்கை Status of Forces Agreement செய்தால் மிலேனியம் சவால் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 500 மில்லிய டொலர் நிதியுதவி அமெரிக்கா வழங்கும் என்ற மைக் பொம்பியோவின் முன்மொழிவை ராஜபக்சேக்கள் நிராகரித்தனர். இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கொடுக்கவும் இலங்கை மறுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து செயற்படும் Fitch, S & P, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கையின் கடன்படு திறனை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றன. இவை தொழில்சார் நிறுவனங்கள் என்றாலும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட மாட்டாது எனச் சொல்ல முடியாது. தரம் தாழ்த்தப்பட்டமையால் பன்னாட்டு முதலீட்டு சந்தையில் இலங்கையால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவின் சிறிமா கால Action Replay

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1970-77 ஆட்சியில் செய்தமை போன்ற நகர்வுகளை அமெரிக்கா 2021இல் இலங்கையில் செய்கின்றது. பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்று வந்து நாடாளுமன்ற உறுப்பினராகி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அமெரிக்கா சென்று நிதியமைச்சரானது போல் இது இருக்கின்றது. பசிலுக்கு நிதித்துறையில் எந்த அனுபவமோ ஆற்றலோ இல்லை. அமெரிக்காவில் இருந்தோ இந்தியாவில் இருந்தோ இலங்கைக்கு நிதி உதவி, கடன் வசதி ஏதும் கிடைக்கவில்லை. சீனாவிடம் இருந்து அவற்றைப் பெற்றால் இரு நாடுகளின் சினத்திற்கு உள்ளாக வேண்டி வரும். பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றால் மக்களுக்கு அரசு வழங்கும் நன்மைகள் பல நிறுத்த வேண்டியிருக்கும். அது மக்களிடையே ராஜபக்சேக்களுக்கு இருக்கும் வெறுப்பை அதிகரிக்கும். ஏற்கனவே விலைவாசி அதிகரிப்பு பண்டங்களுக்கன பற்றாக் குறை போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறிமாவின் சுதந்திரக் கட்சியை 17 ஆண்டுகள் ஆட்சிக்கு வராமல் செய்தது போல் ராஜபக்சேக்களை இன்னும் பல ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாமல் செய்யப் போகின்றதா அமெரிக்கா.

Monday 20 December 2021

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்கள் அழிக்குமா?

  


2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா கடலில் இருந்தும் இஸ்ரேல் தரையில் இருந்தும் வீசப்படும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்துள்ளன. இரு நாடுகளும் தீவிரவாதிகளின் சிறிய ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் கூட்டமாக வந்து தாக்கும் ஆபத்தை எதிர் நோக்க லேசர் கதிர்களை பாவிக்க முயல்கின்றன. அமெரிக்கா தனது பெரிய கடற்கலன்களை எதிரி பல சிறிய படகுகளில் வந்து தாக்குதவதை தடுக்க லேசர் கதிர்களைப் பாவிக்கப் போகின்றது. அத்துடன் இரசியா மற்றும் சீனா போன்ற படைத்துறைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் பெருமளவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்கக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்கள்

லேசர் கதிர்களை ஒரு இலக்கின் மீது வீசும் போது அது உடனடியாக அந்த இலைக்கை கருகச் செய்துவிடும். ஒலியின் வேகம் ஒரு செக்கனுக்கு ஆயிரத்து நூறு அடி பயைப்பது. மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக்) என்பது ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்திற்கு மேல் இயங்குவது. தற்போது உள்ள மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளின் ஆகக் கூடிய வேகம் ஒலியின் வேகத்திலும் 24 மடங்காகும். ஆனால் லேசர் கதிர்களின் வேகம் ஒலியின் வேகத்திலும் ஒரு மில்லியன் மடங்காகும். ஒளியின் வேகத்தில் இயங்கும் லேசர் கதிர்கள் ஒரு செக்கனுக்கு 186,000மைல்கள் பயணிக்கும். சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வர 4 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

லேசர் படைக்கலன்களின் நன்மை:

துல்லியத் தாக்குதல். அசையும் இலக்குகளை (கடற்கலகள், தாங்கிகள், விமானங்கள், ஏவுகணிகள்) துல்லியமாக தாக்குவது கடினமானதாகும். லேசர் கதிர்கள் பிரபஞ்சத்திலேயே அதிக வேகத்தில் பணிப்பதால் அவை இலக்குகளை உடனடியாகவும் துல்லியமாகவும் தாக்கும். படைத்துறையில் Sensor-to-shooter time என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதவது எதிரி இலக்கை காணுதலுக்கும் அதன் மீது தாக்குதல் நவத்துவதற்கும் இடையில் உள்ள நேர இடைவெளி. சிறந்த கதுவிகளும் (ரடார்கள்) லேசர் கதிர் வீச்சும் அந்த நேர இடைவெளியை வெகுவாக குறைக்கும்.

2. மலிவானது. முன்னூறு டொலர்கள் செலவழித்து ஹமாஸ் அமைப்பு உருவாக்கும் ஆளில்லா போர் விமானத்தை தாக்கி அழிக்க இஸ்ரேலுக்கு $80,000 செலவில் உருவாக்கிய ஏவுகணை தேவைப்படுகின்றது. லேசர் கதிர் வீச்சுக்களை நூறு டொலர்களுக்கும் குறைவான செலவில் உருவாக்கலாம்.

3. மீள் நிரப்பல் தேவையில்லை. ஏவுகணைச் செலுத்தி ஒன்றில் இருபது ஏவுகணைகள் இருக்கும். அவற்றால் எதிரியின் இலக்குகளை தாக்கிய பின்னர் அவற்றில் ஏவுகணைகளை மீளவும் நிரப்ப பல நிமிடங்கள் எடுக்கும். லேசர் செலுத்திகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தால் அது தொடர்ச்சியாக லேசர் கதிர்களை எதிரியின் இலக்குகளை நோக்கி வீசிக் கொண்டே இருக்கும்.

லேசர் படைக்கலனிகளின் வகைகளும் வலிமையும்

1996இல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஆளில்லாவிமானங்களை அழிக்கும் லேசர் கதிர் வீசிகளை உருவாக்க தொடங்கின. இஸ்ரேல் தனியே உருவாக்கிய லேசர் படைக்கலன்கள் 100கிலோ வாட் வலிமையானவை. அமெரிக்கா உருவாக்கியவை 300 கிலோ வாட் வலிமையானவை. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.


அமெரிக்க கடல்-சார் பரிசோதனை

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக கப்பலான USS Portlandஇல் இருந்து High-energy lacer system மூலம் செலுத்தப்பட்ட லேசர் கதிர்கள் ஏடன் வளைகுடாவில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு இலக்கை அழித்துள்ளது. 2021 டிசம்பர் மாதம் 14-ம் திகதி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை கடற்போரில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்கர்கள் மார்தட்டுகின்றார்கள். USS Portlandஇன் கட்டளைத் தளபதி Laser weapon is redefining the war at sea என்றார். 2020 மே மாதம் அமெரிக்க கடற்கலன் ஒன்றில் இருந்து ஆளில்லா விமானத்தை லேசர் கதிர்கள் மூலம் அழிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த லேசர் கதிர்கள் 150 kilo watt வலுவுடையவை.

அமெரிக்கா பரிசோதிக்க தேர்வு செய்த இடம்

எரித்திரியா, யேமன், ஜிபுக்த்தி, சோமாலியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் நடுவே உள்ள ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா தனது புதிய கடல்-சார் லேசர் படைக்கலன்களை பரிசோதனை செய்துள்ளது. தீவிரவாதிகள் அமெரிக்காவின் பாரிய கடற்கலன்களை பல கூட்டங்களாக வரும் சிறு படகுகள் மூலம் செய்யும் தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தனது புதிய லேசர் படைக்கலனை உருவாக்கியுள்ளது. பரிசோதித்த இடமும் திவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்து மிக்க இடமாகும்.

பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கி பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 300கிலோ வாட் வலிமையான லேசர் படைக்கலன்கள் வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise missiles) மட்டுமே அழிக்க வல்லன. மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்க மேலும் வலிமை மிக்க லேசர் கதிர்கள் உருவாக்க வேண்டும்.

சீனா வின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

2018-ம் ஆண்டு சீனா செய்த மொத்த மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைப் பரிசோதனைகள் பத்து ஆண்டுகளாக அமெரிக்கா செய்த பரிசோதைனைகளிலும் பார்க்க அதிகமானதாகும். அமெரிக்கா சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் படைத்தளங்களை வைத்திருப்பதைப் போல் சீனாவால் அமெரிக்காவைச் சுற்றிவர படைத்தளங்களை வைத்திருக்க முடியவில்லை. இதைச்  சமாளிக்க சீனா கண்ட ஒரே வழி மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளாகும். இத்துறையில் சீனாவின் மிகையான வளர்ச்சி அமெரிக்காவிற்கு படைத்துறைச் சமநிலையில் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதைச் சமாளிக்க அமெரிக்கா லேசர் கதிர் வீச்சை நம்பியுள்ளது. அதற்கான ஆய்வு வேலைகள் இரகசியமாகவும் துரிதமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய தனியான விண்வெளிப்படையணியில் லேசர் கதிர்வீசிகள் இணைக்கப்படும் போது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பெரும் சவால்களை எதிர் நோக்கும்.

முதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கையில் அவற்றில் லேசர் கதிர் மூலம் ஒரு துளை ஏற்படுத்தி அவற்றை செயலிழக்கச் செய்வது அமெரிக்காவின் நோக்கம் போல் இருக்கின்றது. லேசர் கதிர் வீசிகள் செய்மதிகளில், விமானங்களில், கடற்கலன்களைன் இணைக்கப்படவிருக்கின்றன. இறுதியில் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை கருக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா களமிறக்கும். அதன் மூலம் சீனாவிற்கான படைத்துறைச் சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக்கலாம். பின்னர் சீனா வேறு வழி தேடும்.

லேசர் கதிர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/03/blog-post.html

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...