Friday 29 June 2012

முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த காளான்கள்

மூடப்பட்ட வரலாற்றுப் புத்தகத்தின்
பக்கங்களல்ல எம் போராட்டம்
வரலாறு படைக்கும் போராட்டம்
எம் போராட்டம்
ஓயாத கொலைகளுக்கும்
அஞ்சி ஓயாத அலை
எம்போராட்டம்

முள்ளி வாய்க்காலின் பின்
முளைத்திருக்கின்றன
பல காளான்கள்
எம்மை மீண்டும்
பழமைக்குள் கொண்டு செல்ல

இந்தியா பிராந்திய வல்லரசு
அதை அனுசரித்துப் போக வேண்டும்
என எம்மை மீண்டும்
87இல் புளித்துப் போன்
பழைய வட்டத்திற்குள்
எம்மை இழுக்கின்றன
சில காளான்கள்
படைக்கலனை நீ ஒப்படை
உன் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம்
என்னும் கனவான் ஒப்பந்தத்தை
காற்றிலே பறக்க விட்ட
அயோக்கிய இந்தியா
நல்லரசும் ஆகாது
வல்லரசும் ஆகாது
இந்திய  வட்டத்தை விட்டுப்
புது திட்டத்தில்  இணைவோம்



முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த
இன்னும் சில காளான்கள்
புதிய  திசை காட்டுகிறோம் எனக் கூறி
சிங்களத் தொழிலாளரோடு
இணைந்து  போராடுங்கள் என்கின்றன
இதுவும் பழைய வட்டம்தான்
தோழர்கள் வி பொன்னம்பலமும்
எஸ் சண்முகதாசனும்
சுற்றிச்  சென்று சறுக்கி விழுந்த வட்டம்
தோழர் விக்கிரமபாகு பின்னால்
எத்தனை  சிங்களவர்கள்
அறப் போர் செய்தவர் மேல்
கழிவுத் திரவம் பாய்ச்சியதை
எதிர்த்தது எத்தனை
சிங்களத் தொழிலாளர்கள்
பழைய வட்டம் புதிய திசைகள்
என்னும் பெயரில் வேண்டாம்
உருப்படியான திட்டத்தில்
இறங்கிடுவோம்

ஜெனிவாத் தீர்மானமும்
இலண்டனில் மஹிந்தரை விரட்டலும்
பட்டினியில் கதறும் குழந்தை முன்
ஆட்டிடும் கிலுகிலுப்பைகள்
சுதந்திரப் பட்டினியை தீர்க்க
பழைய வட்டங்களை விட்டு
புதுத் திட்டங்களில் இணைந்திடுவோம்

Wednesday 27 June 2012

போட்டிகளுக்குள் சிக்கிய சிரியக் கிளர்ச்சி

சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.

1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார்.  சிரியா நீண்ட காலமாக அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஃபீஸ் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சி திறமையற்றதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் இருக்கிறது

சிரிய மக்களின் எழுச்சி
அரபு நாடுகளில் 2011இன் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. 2011 மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சி பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.

2011 ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைக்கின்றன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். 2011 செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர்.  மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. 2011 ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன.  2011 ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2011 ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லீக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டி
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன.  சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கான படைக்கலன்களும் பயிற்ச்சியும் துருக்கியூடாக வழங்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு நேரடியாக உதவி இன்னும் வழ்ங்கவில்லை. மறைமுகமாக வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே வழங்கப்படுகின்றன. கிளர்ச்சிக்காரர்களுக்குத் தேவையான படைக்கலன்களோ, நவீன படைக்கலன்களோ மேற்குலக நாடுகளால் வழங்கப்படவில்லை. அவை தமக்கு வேண்டப்படாதவர்களின் கைகளிற்குப் போய்ச் சேர்ந்து விடுமோ என்று மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன. சிரியாவிற்குத் தேவையான படைக்கலன்களை இரசியா விற்பனை செய்கிறது. இந்த வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அப்பாவிச் சிரியர்கள் கொல்லப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் பலத்த சொத்து அழிவு ஏற்படுகிறது. 2012 பெப்ரவரி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மொரக்கோ கொண்டு வந்த சிரியாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் இணைந்து இரத்துச்(veto) செய்தன


சிரியக் கிளர்ச்சியாளர்களிடையே போட்டி
சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை.  உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ். பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம் ஒரு அமைப்பை உருவாக்கி காயப்படும் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுகின்றனர்.

அரச படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மத்தியிலும் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தீவிரமாகப் போராடுகின்றனர். 26-06-2012இல் தலைநகர் டமஸ்கஸில் பெரும் மோதல் வெடித்துள்ளது. அத்துடன் துருக்கிக்கு தப்பிச் செல்லும் சிரிய அரச படையினரின் தொகைகளும் அதிகரித்து வருகிறது.


அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படை!
சுதந்திர சிரியப் படையினர் சிரிய ஆதரவுக் குழு ஒன்றை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைத்து அங்கு தமக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகச் செயற்படவேண்டும் என்று வேண்டி வருகின்றனர். அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அண்மைக்காலங்களாக சுதந்திர சிரியப் படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சிரிய அரச படையில் இருந்து தப்பி ஓடும் வீரர்களில் பலர் இந்த சுதந்திர சிரியப் படையினருடன் இணைந்து வருகின்றனர். இந்த சுதந்திர சிரியப் படையினருடன் அமெரிக்க அரச அதிகாரிகள் அதிக கவனத்துடனும் சந்தேகத்துடனுமே தொடர்புகளை வைத்திருக்கின்றனர். இவர்கள் மத்தியில் அல் கெய்தா போன்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் ஊடுருவிகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

திரு சக்காவின் சமரச முயற்ச்சி
சுதந்திர சிரியப் படையைச் சேர்ந்த திரு சக்கா (Mr. Sakka) முன்னாள் சிரியப்படை அதிகாரிகளையும் வெளிநாடுகளில் வாழும் சிரியப் பிரமுகர்களையும் இணைத்து சுதந்திர சிரியப்படையை ஒரு ஒழுங்கான கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளார். திரு சக்கா பல மேற்கு நாடுகளின் உளவாளிகளையும் சந்தித்துள்ளார். அத்துடன் தனது படையில் உள்ள அல் கெய்தா மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்களை விலத்துவதிலும் ஈடுபட்டுள்ளார். திரு சக்காவிற்கும் முன்னாள் நேட்டோ அதிகாரி Brian Sayersருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திரு சக்கா பல அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துமுள்ளார். இதனால் இவரை ஒரு மேற்குலகக் கைக்கூலி என இலகுவில் இனம் கண்டுகொள்ளலாம். இதனால் ஒரு சுதந்திர தேசியப் படையினர் தலைமையில் சிரியப் புரட்சி வெற்றி பெறுவதை இரசியாவோ சீனாவோ விரும்பாது எனக் கூறலாம். அவை மற்ற இயக்கங்களை தமது கைக்கூலிகளாக்க முனையலாம். இது சிரிய மக்களுக்குப் பாதகமாகவே அமையும்.


சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுக என்கிறார் கொண்டலினா ரைஸ்
அமெரிக்க முன்னாள் அரசுத் துறைச் செயலர் கொண்டலினா ரைஸ் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் கொடுத்து உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதாலும் அவர்களிடை அல்கெய்தா மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி உள்ளனர் என்பதாலும் அவர்களுக்கு பராக் ஒபாமா நிர்வாகம் படைக்கலன் கொடுக்கத் தயங்குவது தவறானது என்கிறார் கொண்டலினா. கொண்டலினாவின் அறிக்கை திட்டமிட்டு அமெரிக்க மக்களையும் மற்றும் சீனா இரசியா போன்ற பஷார் அல் அசாத் ஆதரவு நாடுகளினதும் நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் ஒரு முயற்ச்சியாக இருக்கலாம்.

இனிவரும் மாதங்களில் மேற்கு நாடுகள் சிரியாவில் தமது தலையீட்டை அதிகரிக்கும் என்பதை கொண்டலினா ரைஸின் அறிக்கையும் துருக்கி தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துள்ளுவதும் எடுத்துக் காட்டுகின்றன.

Tuesday 26 June 2012

துருக்கிய விமானத்தை காரணமாக வைத்து நேட்டோ சிரியாவைத் தாக்குமா?

துருக்கி (Turkey) தனது F-4-Phantom விமானத்தை சிரியப் படையினர்22-06-2012இலன்று சுட்டு வீழ்த்தியதை ஒரு ஆக்கிரமிக்கும் செயலாக எடுத்துக் கொண்டு நேட்டோப் படைக் கூட்டமைப்பின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளது. நேட்டோவின் கூட்டம் 26/06/202இலன்று நடக்கவிருக்கிறது.  துருக்கிய வெளிநாட்டமைச்சர்  Ahmet Davutoglu ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர், பிரித்தானிய வெளிநாட்டமைச்சர், பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஆகியோருடன் தனது விமானம் சுட்டு வீழ்தியதைப் பற்றி உரையாடியதுடன் நிற்கவில்லை, இரசிய, ஈரானிய வெளி நாட்டமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளார்.

ஹிலரி கிளிண்டன், பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் வில்லியக் ஹேக் ஆகியோர் துருக்கிய விமானம் சுட்டு வீழ்த்தியமையைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளனர்.

அமெரிக்கப் படைத்துறையின் உச்ச அதிகாரி மார்டின் டிம்ஸி துருக்கியின் படைத்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு துருக்கிய விமானம் சுட்டு வீழ்த்தியமை பற்றி கலந்துரையாடியுள்ளார்.

நேட்டோ ஒப்பந்தத்தின் நாலாம் பிரிவின் படி நேட்டோவின் கூட்டதைக் கூட்டிய துருக்கி ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின்படி நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து சிரியாவின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நேட்டோ நாடுகளைக் கேட்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. துருக்கியப் பிரதமர் சிரியாவிற்கு ஒரு காத்திரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கருதுவதாகச் செய்திகள் வந்தன.

சிரியா மீது தாக்குதல் நடாத்துவதற்கான முன்னோடியாக சிரியா தனது மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று மொரொக்கோ நாடு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில்2012 பெப்ரவரி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தை   இரசியாவும் சீனாவும் தமது இரத்து (Veto) அதிகாரத்தைப் பாவித்துத் தடுத்தன. சிரியாவின் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் ஒரு வாரத்தில் மட்டும் நாற்பதினாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்ட போது இந்திய எதிர்ப்பின் நிமிர்த்தம் யாரும் ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு செல்லவில்லை.  வில்லன் விஜய் நம்பியாரின் அறிக்கையும் நிலத்துக்கீழ் அறையில் இரகசியமாக ஆராயப்பட்டது.

தமக்குப் பிடிக்காத சர்வாதிகாரிகளைப் பதவியில் இருந்து அகற்றுவதை மேற்குலக நாடுகள் தம் தலையாய கடமையாகக் கொண்டுள்ளன. சிரியாவின் அதிபர் அல் அசாத் மேற்குலகால் வெறுக்கப்படும் ஒருவர். இவரைப் பதவியில் இருந்து அகற்ற  மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. ஆனால் சிரியாவின் அதிபர் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு மேற்குலகிற்கு சார்பான ஒருவர் அங்கு ஆட்சிக்கு வந்தால் அது அரபு நாடுகளில் கேந்திரோபாய சமநிலையை தமக்குச் சாதகமாக்கி விடும் என்று சீனாவும் இரசியாவும் கருதுகின்றன. இந்த பிராந்திய ஆதிக்க முரண்பாட்டின் விளைவாக அப்பாவி சிரிய மக்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சிரியாவில் கிளர்ச்சிக்காரகளுக்கான பயிற்ச்சி மற்றும் படைக்கலன்கள் துருக்கியில் இருந்தே நடப்பதாக ஏற்கனவே சிரியா பலமுறை குற்றம் சுமத்தியுள்ளது. சிரிய எல்லையில் துருக்கி பல அத்து மீறல்களை நிகழ்த்தி வருவதாக சிரியா பல தடவை குற்றம் சாட்டியுள்ளது.

சிரியா தனது இன்னும் ஒரு விமானத்தில் தாக்குதல் நடாதியது என்று 25/6/2012இலன்று துருக்கி மீண்டும் அறிவித்தது

அண்மைக்காலமாக சிரியாவிற்கு எதிராக மேற்குலக நாடுகளின் இரகசியக் காய் நகர்த்தல்கள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன என்பதை சிரிய விமானப் படை விமானிகள் ஒருவர் பின் ஒருவராக விமானங்களுடன் அமெரிக்க நேச நாடான ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வது எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்ல பல சிரியப் படை உயர் அதிகாரிகள் சிரியாவில் இருந்து தப்பி துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர். துருக்கி விமானச் சுட்டு வீழ்த்தலால் விமானிகள் உயிரிழக்க வில்லை. ஆனாலும் அது தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது.  சிரியா துருக்கிய விமானம் தனது கடற்பரப்பில் வந்தமையால்தான் சுட்டுவீழ்த்தப்பட்டது என்று சொல்கிறது. துருக்கிய விமானத்தைச் சாக்காக வைத்து நேட்டோப் படையினர் சிரியாவின் விமானங்களை முற்றாக அழித்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்த முயலலாம். சிரிய நோக்கிச் சென்ற இரசிய கப்பலை படைக் கலன்கள் ஏற்றிச் சென்றதாகக் கூறி பிரித்தானியா இடை மறித்துத் திருப்பி அனுப்பி விட்டது.

துருக்கிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியமை நேட்டோவின் ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின் படி நேட்டோ நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிரியாமேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் போதுமான காரணம் அல்ல என்று சிலர் வாதாடுகின்றனர். துருக்கிய விமானச் சுட்டு வீழ்த்தலை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோ தாக்குதல் நடத்தாமல் போனாலும் சிரியாவிற்கு எதிரான ஒரு படை நடவடிக்கையை  முன்னெடுக்க நேட்டோ தயாராகி வருகிறது என்பதையே இந்த விமானச் சுட்டு வீழ்த்தலைப் ஊதிப் பெரிதாக்குவது காட்டுகிறது. ஆனால் சீனாவும் இரசியாவும் லிபியாவில் விட்டுக் கொடுத்தது போல் சிரியாவிலும் விட்டுக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிரியாவில் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டால் மேற்குலக நாடுகளின் அடுத்த இலக்கு ஈரான் என்பதை சீனாவும் இரசியாவும் உணர்ந்து கொண்டுள்ளன.

Sunday 24 June 2012

எகிப்தின் தேர்தலும் எதிர்காலமும்

கைக்குண்டுகள் கண்ணி வெடிகள் அரச வங்கிக் கொள்ளைகள் அரசியல்வாதிகள் கொலைகள் போன்றவை எதுவுமின்றி படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபாரக்கை சமூகவலைத்தளங்கள், கைபேசித் தகவல்கள், செய்மதித் தொலைக்காட்சிகள் போன்றவற்றால் பதவியில் இருந்து விரட்டினர் எகிப்திய மக்கள். பல இழுபறிகள் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் எகிப்தில் அரசத் தலைவருக்கான தேர்தல் முடிவடைந்து இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP)ஐச் சேர்ந்த முகம்மது முர்சி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கும் படைத்துறையினருக்கும் இடையிலான பதவிப் போட்டிகளுக்கும் அதிகார இழுபறிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்குமா?

அமைதிப் புரட்சி
எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர். அஸ்மா மஹ்பூஸ் தனது தற்கொலை முயற்ச்சியுடன் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் முகப்புத்தக மூலம். ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது. எழுச்சிக்காரர்களை அடக்க முபாரக் தங்கிகள் கவச வாகங்னகள் சகிதம் தனது படையினரை அனுப்பினார். படையினரைக் கண்டு மக்கள் அஞ்சவில்லை. மக்களின் உறுதிப்பாட்டைக் கண்ட படையினர் அவர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கத் தயங்கியது. படையினர் எம்மவர் என்ற அணுகு முறையை எழுச்சிக்காரர் கையாண்டனர். விரைவில் படையினருக்கும் எழுச்சிக் காரர்களுக்கும் இடையில் நல்ல உறவு மலர்ந்தது. எகிப்தியப் படைத்துறை முபராக்கின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று மேற்கத்திய ஊடகங்கள் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டின.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 84 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வருகிறது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பன்முகத்தன்மையாளர்கள்-Pluralists
எகிப்தியப் புரட்சியை முன்னின்று நடாத்திய இளைஞர்கள் எகிப்தில் ஒரு மதசார்பற்ற பெண்களை மதிக்கும் ஆட்சி அமைவதையே விரும்பினர். ஆனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு மதவாத பெண்களின் உரிமைகளை மதிக்காத அமைப்பாகக் கருதப்படுகிறது. அணமைக் காலங்களாக தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP) பெண்களின் உரிமைகளை மதிப்பது போல் காட்டி வந்தது. தேர்தலில் வெற்ற பின்னர் அது எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எகிப்தியப் புரட்சிக்கு வித்திட்ட ஏப்ரல் - 6 இயக்கம் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP)வேட்பளர் முகமட் முர்சிக்கு ஆதரவு வழங்கியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எகிப்த்தில் உள்ள இசுலாமியர் அல்லாதவர்கள் இசுலாமிய சகோதரத்து அமைப்பை விரும்பவில்லை. பல மத்திய தர மக்களும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை விரும்பவில்லை. மற்ற மதங்களையும் பெண்களையும் மதிப்பது தொடர்பாக துருக்கியை கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டு வரும் இசுலாமிய மதவாதக் கட்சியின் சில ஆலோசனைகளை எகிப்திய இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு இசுலாமிய ஷரியா சட்டங்களை அமூல் படுத்தி ஏப்ரல் - 6 இயக்கம் உட்படப் பலரிற்குத் துரோகம் செய்யுமா?

படைத்துறையினர்
பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஆட்சியாளர் ஹஸ்னி முபாரக்கின் படைத்துறையினர் இப்போதும் அதிகாரங்களைத் தம் கையில் வைத்திருக்கின்றனர். தேர்தல் படைத்துறை வேட்பாளருக்கும் முகமது முர்சிக்கும் இடையில் கடும் போட்டி இருந்ததை உறுதி செய்கிறது. முர்சி 51.3% வாக்குகளும் படைத்துறை வேட்பாளர் 48.7% வாக்குகளையும் பெற்றிருந்தனர். இப்போதும் படைத்துறையினர் வசம் நிறைய அரசமைப்பு ரீதியான அதிகாரங்கள் இருக்கின்றன. படைத்துறையின் உச்ச சபை (Supreme Council of Armed Forces). பாராளமன்றத்திற்கா அல்லது படைத்துறையின் உச்ச சபைக்க அதிக அதிகாரங்கள் உள்ளது என்ற கேள்வி தொடர்பாக ஒரு குழப்ப நிலையே நிலவுகிறது. எகிப்திய அரச செலவில் 30% மேலானவை படைத்துறை சார்ந்தவை. எகிப்திய ஆட்சியில் தமது பிடியை இலகுவில் படைத்துறையினர் விட்டுக் கொடுப்பார்களா என்பது பெரும் கேள்வியாக இன்று இருக்கிறது.  தேர்தலுக்கு முன்னரே படைத்துறையின் உச்ச சபை (Supreme Council of Armed Forces) தனது அதிகாரங்களைத் தானே கூட்டிக் கொண்டது.  மார்ச் 2011 இல் பிரகடனப் படுத்தப்பட்ட அரசியலமைப்பின் யாப்பிற்கு எட்டுத் திருந்தங்களைச் செய்தது. அதன் படி படைத்துறை சம்பந்தமாக சகல முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை உச்ச சபை (Supreme Council of Armed Forces) தன்வசமாக்கியதுடன் புதிய யாப்பு அமைக்கும் போது தனக்கு இரத்து அதிகாரமுடையதாகவும் செய்து கொண்டது. எகிப்தியப் பாராளமன்றமும் அதிபர் தேர்தலுக்கு முன்னர் படைத்துறையினரால் கலைக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்ற எகிப்தின் படைத்துறையின் உயர் அதிகாரிகள் எகிப்தை ஒரு இசுலாமிய நாடாக மாற்றப் படுவதை விரும்பவில்லை என்பதை இது உணர்த்துகிறது.இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஈரானுடன் நெருங்கிச் சென்றால் அமெரிக்க ஆதரவு படையினர் சும்மா இருப்பார்களா?

இஸ்ரேல்
இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP)வேட்பளர் முகமட் முர்சியின் வெற்றியால் இஸ்ரேல் அதிக கலவரம் அடையலாம்.  ஜெருசலத்தை மீட்பதே எம் முதல் இலக்கு என சில இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளதை இஸ்ரேல் தனது கரிசனைக்கு எடுத்துக் கொண்ட்டுள்ளது. இஸ்ரேல் மீது சில தாக்குதல்களுக்கு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உத்தரவிட்டதாகவும்  வந்தந்திகள் பரவியுள்ளன. 25/06/2012 புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் முகமட் முர்சி இஸ்ரேலுடனான எகிப்தின் 1979 செய்யப்பட்டCamp David உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் ஈரானுடன் நல்லுறவு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கவில் படித்த பொறியியல் பேராசிரியரான முகமட் முர்சியின் இந்த அதிரடி இருபடிக் கொள்கை அறிவிப்பு புதிதாக தான் ஒரு அமெரிக்க கைக்கூலி அல்ல என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம்.


எகிப்தியப் பொருளாதாரம்
அரபு நாட்டில் அதிக மக்கள் தொகையும் உன்னதமான உல்லாசப் பயணத்துறையையும் கொண்ட எகிப்தில் புரட்சிக்குப் பின்னர் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஏற்கனவே 30% மான இளைஞர்கள் வேலையின்றி இருந்த எகிப்தில் உல்ல்லாசப் பயணத்துறையும் வெளிநாட்டு முதலீடுகளும் புரட்சிக்குப் பின்னர் வீழ்ச்சியைக் கண்டன. தேர்தல் முடிவு ஒரு அரசியல் திடத் தன்மையை உறுதி செய்யும் என்பதால் பொருளாதாரம் சீரடையலாம். ஏற்கனவே அதிகரிக்கும்  மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைபு வசதிகள் அபிவிருத்தியடையாத குறை எகிப்தில் இருக்கிறது. புதிய அரசு தனது செலவீனங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பொது சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு போன்றவற்றிக்கு பெரும் செலவு செய்யப்பட வேண்டி இருக்கிறது. எகிப்திற்கு சவுதி அரேபியா நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அளிப்பதாக வாக்குறுதியளித்து அதில் ஒரு பில்லியனை ஏற்கனவே வழங்கிவிட்டது. மிகுதி மூன்று பில்லியன்களும் எப்போது வழங்கப்படும் என்பதற்கான கால அட்டவணை ஒன்றை சவுதி அரேபியா தெரிவிக்கவில்லை. எகிப்தில் ஏற்படும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு அமைய ஐக்கிய அமெரிக்கா கொடுக்கும் சமிக்ஞைகளுக்காக சவுதி அரேபியா காத்திருக்கிறதா?

இரைச்சல் மிக்க தெருக்களால் இதயத்திற்கு ஆபத்து

Danish Cancer Society ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் Dr Mette Sorenson ஐம்பதினாயிரம் மக்களிடைச் செய்த ஆய்வில் இரைச்சல் மிக்க தெருக்களுக்கு அண்மையில் வாழ்பவர்களிடை மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் 12% அதிகம் என்று அறியப்பட்டுள்ளத்து.

வாகனங்களின் இரைச்சல் மன அழுத்தத்தை அதிகரிப்பதாலும் நித்திரயை குளப்புவதாலும் இருதயம் பாதிக்கப்படுகிறது. பகல் இரைச்சலிலும் பார்க்க இரவு இரைச்சல் அதிக பாதிப்பை இதயத்திற்கு ஏற்படுத்துகிறது. இரைச்சலால வயது போனவர்களின் நித்திரை அதிகம் பாதிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. பெருந்தெருக்களுக்கு அண்மையில் காற்று மாசுபட்டிருக்கும்.

Out of a sample group of more than 50,000 people 50 and older living in Denmark, the researchers identified 1,600 first-time heart attacks between 1993 and 2006. Based on these peoples' residential histories, the researchers developed an estimation of their exposure to both residential traffic noise and air pollution. Confirming previous work, the researchers found a strong association between the incidence of cardiac arrest and people living in areas with road traffic noise above the 50-decibel range, which is noticeable but not roaring. This study is the first to show that the risk of heart attack increases as road traffic gets louder.

The researchers don't speculate why this correlation exists, but do note that higher noise levels may cause higher stress levels and greater disturbances in sleep patterns. It's also likely that the lifestyles associated with louder (and presumably more active) places play a role in heart health. So while you can't blame your bum ticker completely on your noisy street, you've now got at least one more reason to be mad about traffic.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...