Saturday 13 April 2013

விரைவாக அசைவனவற்றை படம் பிடிக்கும் போது கவனிக்க வேண்டியவை

கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் போது, கிரிக்கெட்டில் விக்கெட் விழும்போது, பிரபலமானவர் வாகனத்தில் செல்லும் போது, விலங்குகள் ஓடும் போது, பறக்கும் விமானம் இவற்றை படமெடுக்கும் போது சிறப்புக் கவனங்கள் தேவை.

1. Shutter Speed - ‘the length of time that the shutter is open’
Shutter speed என்பது நீங்கள் படமெடுக்கும் போது உங்களது கமெராவின் லென்ஸ் எவ்வளவு நேரம் திறந்திருக்கிறது என்பதைக் குறிக்கும். விரைவாக அசைபவனற்றைப் படமெடுக்கும் போது Shutter Speed அதிகமாக இருக்க வேண்டும். எந்த Shutter Speed ஐ தெரிவு செய்வது என்பது அசையும் பொருளின் வேகத்தையும் உங்கள் கமெராவையும் பொறுத்தது. புதிய ரக டிஜிட்டல் கமெராக்கள் தானியங்கியாக படமெடுக்கும் போது அவை இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு Shutter Speed ஐ தாமாக நிர்ணயிக்கும். ஆனால் விரைந்து அசைவனவற்றைப் படமெடுக்கும் போது தானியங்கியை நிறுத்தி விட்டு Shutter Speed ஐ நாமே தெரிவு செய்ய வேண்டும். வேறு வேறு ஒளிச் செறிவு நிலைகளில் வேறு வேறு வேகங்களில் அசைவனவற்றை நாம் ஒளிப்பதிவு செய்து பயிற்ச்சி எடுப்பதன் மூலம் எமது கமெராவிற்கு உரிய Shutter Speedஐ நாம் அறிந்து கொள்ளலாம். Shutter Speed என்பது ஒளிப்பதிவு செய்யும் நேரமாகும். இதன் மிகக் குறைந்த அளவு ஒரு நொடியை 8000ஆல் பிரிக்க வரும் நேரமாகும் (1/8000 of a second). மிககக் கூடிய அளவு 30 நொடிகள் (30 seconds). இது மிக அகன்ற நேரம் என்பதால் சரியான Shutter Speedஐ தெரிவு செய்வதற்கு சிறந்த பயிற்ச்சி தேவை.
பொதுவாக 1/60th of a secondஇற்கு கூடிய நேரத்தை குறைந்த Shutter Speed என்றும் 1/60th of a secondஇற்கு குறைந்த நேரத்தை கூடிய Shutter Speed என்றும்சொல்லலாம். குறைந்த Shutter Speedஇல் படமெடுக்கும் போது கமெராவை ஆட்டக்கூடாது. கமெராவை ஒரு முக்காலியில்(tripod) கமெராவைப் பொருத்தி எடுப்பது உகந்தது. முக்காலி இல்லாதவிடத்து கமெராவை ஒரு நிலையான பொருள் மீது வைத்து எடுக்க வேண்டும். கமெரா பட்டனைக் கமெராவை ஆட்டாமல் அழுத்த வேண்டும். அதிகரித்த Shutter Speedஇல் படமெடுக்கும் போது போதிய ஒளி இருக்க வேண்டும்.


2. முன் கூட்டியே focus செய்து வைத்திருக்க வேண்டும்
உதாரணத்திற்கு ஒரு விக்கெட் விழுவதைப் படமெடுக்க வேண்டுமென்றால் பந்து வீசப்படுமுன்னரே விக்கெட்டின் மீது கமெராவைப் focus செய்து வைத்திருக்க வேண்டும். விரைவு பந்து வீச்சானரானால் பந்து வந்து நிலத்தில் விழும்போது பட்டனை அழுத்த அது விக்கெட் விழுவதைப் படமெடுக்கும். ஆம் இதற்கும் சிறந்த பயிற்ச்சி தேவை. என்னதால் புகைப்படக் கருவிகள் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறினாலும் புகைப்படம் எடுப்பது ஒரு கலை. எந்தக் கலைக்கும் நிறைய்ப பயிற்ச்சி தேவை. டிஜிட்டல் கமெராவில் உள்ள ஒரு வசதி நாம் செல்வின்றி எத்தனை படங்களையும் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு படமும் எடுக்கமுன்னர் அவை எந்தச் சூழலில் எந்த Shutter Speedஇல் எடுக்கப்படன என்பவறைக் குறித்து வைத்துக் கொண்டால் பின்னர் Shutter Speed தெரிவு செய்வதற்கு உதவியாக இருக்கும்.

3. ஒளிக்கு ஏற்ப உங்கள் நிலையைத் தெரிவு செய்யுங்கள்
சூரியனின் நிலை, செயற்கையாக இருக்கும் ஒளி போன்றவற்றை நன்கு கவனித்து ஒளிப்பாய்ச்சல் உங்களுக்குப் பின்னால் இருந்து வரும்படியாக உங்கள் நிலையைத் தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் அநேகமாக மப்பும் மந்தாரமாகவே இருக்கும். அப்போது செயற்கை ஒளி இல்லாத இடத்தில் உங்கள் உள்ளங்கையில் ஒரு பேனாவையோ அல்லது உங்கள் விரலையோ நிறுத்திப் பார்த்தால் எந்தப்பக்கம் பேனாவினது அல்லது விரலது நிழல் இருக்கிறது என்பதைப் பார்த்து ஒளி பாயும் திசையை அறிந்து கொள்ளலாம்.

4. Focal Length and Shutter Speed
Focal length பற்றிய அறிவு சரியான shutter speed ஐத் தெரிவு செய்ய உதவும். Focal length என்பது லென்சிற்கும் ஒளி பதியப்படும் இடத்திற்கும் இடையிலான தூரமாகும். இந்தத் தூரம் நீண்டிருக்கும் போது கமெராவை அசைக்காமல் இருப்பதில் கவனம் தேவை. பொதுவாக Focal length நீளமானால் shutter speed அதிகரிக்க வேண்டும். இல்லாவிடில் கலங்கலான படம் பதியப்படும்.

5. F-Stop
F-Stop என்பது focal length ஐ diameter of the lens ஆல் வகுக்க வரும் அளவாகும். உதாரணத்திற்கு 200mm f/4 லென்ஸ் என்பது 50mm அகல லென்ஸ் ஆகும். f/4 லென்ஸ் என்பது "focal-length over 4" ஆகும்.
 
பலர் focal length, shutter speed போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் தமது பயிற்ச்சிகளின் மூலம் சிறந்த புகைப்படங்களை எடுப்பர். கமெரா பற்றிய அறிவும் பயிற்ச்சியும் இணைந்தால் புகைப்படங்கள் மிகவும் தரமானதாக அமையும்.

Friday 12 April 2013

ஒபாமாவிற்குத் தலையிடியாகும் ஆளில்லாப் போர் விமானங்கள்






 

 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்லப்பிள்ளையான ஆளில்லாப் போர்விமானத்திட்டம் தொடர்ந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அண்மைக்காலங்களா அமெரிக்க அதிபராக இருப்பவரின் இரண்டாம் பதவிக் காலம் முடிய முன்னர் அவர் விட்ட தவறுகளை அம்பலப்படுத்தி அவரின் பதவிக்காலம் முடியும் போது அவரை ஒரு செல்லாக்காசு ஆக்கி விடுவார்கள் அமெரிக்க ஊடகர்கள்.

அமெரிக்காவின் பொது மக்களின் அபிப்பிராயத்தின் தனிப்பட்ட ஒருவரின்செல்வாக்கு இருக்கக் கூடாது என்பதும் அவர்களின் அபிப்பிராயங்களை பெரு முதலாளிகளின் ஊடகங்களால் மட்டும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபாராக இருப்பவர் பதவிக்காலம் முடியுமுன்னர் மக்கள் மத்தியில் அவரின் விம்பத்தை சிதைத்து விடுவார்கள்.

பராக் ஒபாமா பதவி ஏற்றபோது அவருக்குப் பெரும் தலையிடியாக இருந்தது இசுலாமியப் போராளிகளே. அவர்களை அழிக்க அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ வரைந்த ஆளில்லாப் போர் விமானங்களால் தாக்கும் திட்டம் பராக் ஒபாமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இத்திட்டம் சிஐஏ ஐ ஒரு படையாணியாக மாற்றிவிட்டது.

படைப்பிரிவான உளவுத் துறை
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் படைப்பிரிவு ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது.
சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர். ஆளில்லாப் போர்விமானங்கள் பற்றி மேலும் வாசிக்க:
 1. இங்கு சொடுக்கவும் 2. இங்கு சொடுக்கவும்.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை.

அமெரிக்க நீதித் துறையும் ஆளில்லாப் போர்விமானங்களும்
அமெரிக்க நீதித் துறையின் வெள்ளை அறிக்கையின்படி: the United States can target a "senior operational leader of al-Qa'ida or an associated force" who "poses an imminent threat of violent attack against the United States." ஐக்கிய அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக்அக் கூடிய அல் கெய்தாவினதோ அல்லது அதன் இணை இயக்கங்களின்  மூத்த இயங்கு தலைவர்களை இலக்கு வைக்க முடியும். ஆனால் உண்மையில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவிப் பொதுமக்கள் பாக்கிஸ்த்தான் படை வீரர்கள் எனப் பலரைக் கொன்றுள்ளது. ஜோனாத்தன் லிண்டே என்னும் அமெரிக்க ஊடகர் அமெரிக்க அரசின் மிக இரகசியமான உள்ளகத் தகவல்களைப் பெற்று அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகள் பற்றி ஒரு காத்திரமான அறிக்கையைத் தயார் செய்துள்ளார். அதன் படி அமெரிக்க அதிகாரிகள் தாம் ஐக்கிய அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக்அக் கூடிய அல் கெய்தாவினதோ அல்லது அதன் இணை இயக்கங்களின்  மூத்த இயங்கு தலைவர்களை இலக்கு வைக்கின்றோம் எனச் சொல்வது தவறானது எனத் தெரிய வந்துள்ளது. இதனால் அமெரிக்க சட்டமா அதிபர் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் போன்ற பல முக்கியமானவர்கள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக விட்ட அறிக்கைகள் கேள்விக்க்குறியாக்கப்பட்டுள்ளது.

ஒபாமா பொய் சொன்னாரா?
2012 செப்டம்பரில் ஐக்கிய அமெரிகாவின் ஆளில்லாப் போர் விமானங்களில் நடவடிக்கைக்கள் விமர்சனத்திற்கு உள்ளான போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  "Our goal has been to focus on Al Qaeda and to focus narrowly on those who would pose an imminent threat to the United States of America." எமது இலக்குகள் அல் கெய்தாவை மையப்படுத்தியதானதும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடியவர்களை நோக்கிய ஒடுங்கியதானவையுமாகும் என்றார். மைக்கேல் ஜெங்கோ என்னும் இன்னும் ஒரு ஊடகர் ஏற்கனவே குற்றமிழைத்த அல் கெய்தா மற்றும் தலிபான் போரளிகளுக்கு எதிரான நடவடிக்கையாகத் தொடங்கிய அமெரிக்க ஆளில்லாப் போர் விமானத் தாக்குதல் திட்டம் இப்போது பாக்கிஸ்தான் அரசின் பயங்கரவாத ஒழிப்புத் திட்டமாக மாறியுள்ளது என்கிறார். அமெரிக்க உளவுத்துறை தனக்கு சந்தேகமானவர்களையும் கொன்று குவித்துள்ளது. இது அமெரிக்க நீதிக்கும் சட்டத்திற்கும் முரணானது என்கிறார் மைக்கேல் ஜெங்கோ. ஹக்கானி இயக்கம் அமெரிக்காவிற்கு எதிரானது அல்ல அதன் உறுப்பினர்களும் அமெரிக்க உளவுத் துறையால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒபாமாவின் தவறா?
மக்கள் முகவரகமான (civil agency) ஆன சிஐஏ ஒரு படைப்பிரிவாக மாறியது ஒபாமா நிர்வாகத்தின் மாபெரும் தவறாகும். அமெரிக்க நீதித் துறைக்கு அப்பால் நின்று செயற்படுகிறது என்ற குற்றச் சாட்டு அமெரிக்கக் குடிமக்கள் இருவரை சிஐஏ ஜேமனில் வைத்து கொன்றமையை தொடர்ந்து கடுமையாக எழுந்தது. இதில் முக்கியமானவர் அன்வர் அல் அவ்லாக்க ஆகும். இவரின் கொலை பற்றிய பதிவைக் இங்கு காணலாம்: அன்வர் அல் அவ்லாக்கி.  
ஒரு அமெரிக்கக் குடிமகனை அமெரிக்க அரசு விசாரணையின்றிக் கொல்லுதல் அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்திற்கும் அது பேணுவதாகக் கருதப்படும் தனிமனித உரிமைகளுக்கும் பெரிதும் முரணானது என அமெரிக்க சட்ட வல்லுனர்களும் மனித உரிமைவாதிகளும் கருதுகின்றனர்.

அமெரிக்காவிற்கு எதிரான பரப்புரை
அமெரிக்காவிற்கு எதிராக பரப்புரசி செய்வோர் இப்படிக் கூறுகின்றனர்:
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதக் கரமான சிஐஏ ஒரு படை அணிதான். அது சித்திரவதை, கொலை, ஆட்கடத்தல். சட்டவிரோதமாக சிறைபிடித்துத் தடுத்து வைத்திருத்தல், ஆட்களைக் காணமல் போகச்செய்தல், சொத்தழிவு ஏற்படுத்துதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை பரவலாக எந்தவித பொறுப்புக் கூறலுமின்றிச் செய்து வருகிறது. அமெரிக்காவின் அதிகாரபூர்வ படைப்பிரிவுக்ள்
1) The US Navy
2) The US Army
3) The US Marines
4) The US Air force
5) The US Coast Guard. மட்டுமே
இவற்றுக்குள் அடங்காத சிஐஏ எப்படி போர் விமானங்களை வைத்திருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்?

Thursday 11 April 2013

இந்தியக் குரங்குப் பிடியும் சிங்களத்தின் அழுங்குப் பிடியும்

குரங்கைப் பிடிப்பதற்கு ஒரு தேங்காயின் பின்புறத்தில் குரங்கின் கை போகக்கூடிய அளவு துளையை செய்து அந்தத் தேங்காயை ஒரு மரத்தில் கட்டி விடுவார்கள். குரங்கு வந்து அந்த துளைக்குள் கையை விட்டு உள்ளுக்குள் உள்ளதை சுரண்டி எடுத்து கையைப் பொத்திப் பிடித்துக் கொள்ளும். பின்னர் கையை வெளியில் எடுக்க முயலும். ஆனால் கையைப் பொத்திப் பிடித்திருப்பதால் கை வெளியே வராது. குரங்கு கையை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்ச்சி செய்யும் ஆனால் தனது கைப்பிடியை மட்டும் விடாது. இந்தியாவும் அதன் 13வது திருத்தமும் இது போலே.

வட இந்திய முதலைகள்
தமிழ்நாட்டு மாணவர் எழுச்சி, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்து வெளியேறியமை, தமிழீழம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவை இலங்கையில் முதலீடு செய்த வட இந்தியர்களை ஒரு உலுப்பு உலுப்பி விட்டது. அவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைக்குச் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் படி நடந்து கொள்ளாவிட்டால் தாம் இலங்கையில் செய்த முதலீடுகளுக்கு ஆபத்து நேரும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் வட இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும், இந்திய அரசு இலங்கையுடனான நட்பைப் பேண வேண்டும் எனக் கூச்சலிடுகின்றன.டாடா, பஜாஜ், கோத்ரேஜ், பார்த்தி உட்படப் பல இந்திய வர்த்தகர்கள் பல கோடிக்கணக்கில் இலங்கையில் முதலிட்டுள்ளனர்.  இவர்கள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கழகத்தில் இந்தியா வாக்களித்தமை ஒரு தவறான செயல் என்ற பரப்புரையை கிளப்பி விட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சீனப் பூச்சாண்டியைக் காட்டுவதுடன் நிற்காமல் காஷ்மீர்  பூச்சாண்டியையும் புதிதாக எழுப்பியுள்ளனர். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் இந்தியா கையில் எடுத்தால் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை  மீறல்களைப் பாக்கிஸ்த்தான் கையில் எடுக்கும் என்கின்ற புரளியையும் வட இந்திய ஊடகங்கள்கள் இப்போது கிளப்பி விட்டுள்ளன.

பாவம் காங்கிரசுக் கட்சி
ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ பல முனைப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். எந்த நேரமும் வரவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலை எதிர் கொள்ள இந்திய ஆட்சியாளர்களான காங்கிரசுக் கட்சியினருக்கு. டாடா, பஜாஜ், கோத்ரேஜ், பார்த்தி போன்றவர்களின் உதவி நிறையத் தேவைப்படும். இவர்களைத் திருப்திபடுத்த வேண்ட்டிய தேவை காங்கிரசுக் கட்சிக்கு உண்டு,  ஆனால் வரும் பாராளமன்றத் தேர்தலில் தமக்குப் படுதோல்வி உறுதி என்று காங்கிரசுக் கட்சிக்கு 2011இல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளைப்பார்த்தவுடன் தெரிந்து விட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் மற்றக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் ஏற்படும் தோல்வியைச் சமாளிக்கலாம் எனக் காங்கிரசு நினைத்திருந்தது. ஆனால் மணவர்களின் எழுச்சியும் அவர்கள் செய்யும் பரப்புரைகளும் இந்திய ஒருமைப்பாட்டிற்கே சவாலாக வரலாம் என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது.

இலங்கையின் அழுங்குப் பிடி
இந்தியா தனது தாளத்திற்கு ஆடவேண்டும் அல்லது அதை ஆட்டிப் படைப்போம் என்பதில் ராஜபக்ச சகோதரர்கள் உறுதியாக இருக்கிறார்கள். தேவை ஏற்பட்டால் இந்தியா இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்குப் பயிற்ச்சி அளித்ததில் இருந்து இலங்கைப் போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சூளுரைத்துள்ளார். அதுமட்டுமல்ல ஐநா மனித உரிமைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளாது என இலங்கையின் வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார். தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் எனவும் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து செய்யப்படும் இறக்குமதியை நிறுத்தும் மிரட்டலைச் சில சிங்களத் தீவிரவாதிகள் விடுத்துள்ளனர். அத்துடன் தமிழ்ப்படங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி கேரளத்தில் இருந்து மலையாளப்படங்களை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மிரட்டுகின்றனர்.

இந்தியாவிற்குச் சங்கடம் ஏற்படுத்தும் அமெரிக்கா
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் ஐக்கிய அமெரிக்கா இந்துமாக்கடலில் இந்தியாவை தனது தந்திரோபாய பங்காளியான இந்தியாவும் தன்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறது. அமெரிக்காவின் முக்கிய நோக்கம் இலங்கையில் தனக்குச் சாதகமான ஆட்சியாளர்களை உருவாக்குவதே. தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றத்தைக் கையில் எடுத்தால் அது சிங்களவர்களுக்கு அமெரிக்காமீதான ஆத்திரத்தை அதிகரிப்பது மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சேகளின் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்யும். ஐநா மனித உரிமைக்கழகத்தில் அமெரிக்கா இலங்கை தொடர்பாகப் தீர்மானம் நிறைவேற்றியதுடன் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் தான் அமெரிக்காவிற்கு எதிராகத் துணிந்து நிற்கும் ராஜபக்சவை ஆதரிப்பதில் பெருமையடைவதாகக் குறிப்பிட்டார். இதனால் அமெரிக்க இப்போது ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளது. அதன்படி ஜேவிபி எனப்படும் சிங்களவர்களின் தீவிரவாத இயக்கமான மக்கள் விடுதலை முன்னணியின் படைக்கலன் ஏந்திய கிளர்ச்சியின் சிங்களப் போராளி இளைஞர்களை இலங்கைப் படையினர் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அமெரிக்க இப்போது ஒரு போர்க்குற்றமாக்க திரைமறைவில் முயற்ச்சி செய்கிறது. 1989-ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச இலங்கைப்படையில் லெப்டினண்ட் கேர்ணலாக இருந்த மாத்தளைப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி இப்போது ராஜ்பக்சேக்களுக்கு குழிபறித்துள்ளது. மாத்தளைப் மனிதப் புதைகுழி கண்டு பிடிக்க்கப்பட்டது ஒரு தற்செயலான செயல் அல்ல. அது நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை. இனிவரும்  ஐநா மனித உரிமைக் கழகத் கூட்டத் தொடர்களில் மாத்தளை மனிதப் படுகுழி இசுலாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்  பெரும் பங்கு வகிப்பதுடன் இதுவரை இலங்ககைக்கு ஆதரவாக இருந்த நாடுகளை இலங்கைக்கு எதிராகத் திருப்பும்.

இந்தியாவின் தன்னிலை விளக்கம்.
இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு இந்தியாவை இரண்ட்டகப் பிரித்துள்ளது. வட இந்தியாவில் இலங்கையுடன் நட்புப் பேணப்படவேண்டும் என்ற கூச்சலும் தென் இந்தியாவில் இலங்கையைப் பகை நாடாக அறிவிக்க வேண்டும் என்ற எழுச்சியும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பிழையானது என்ற கருத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய உளவுத் துறை இந்த நிலையை மாற்ற கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றது. இதன் ஒரு அம்சமாக Why India is right on Sri Lanka என்னும் கட்டுரையை Hardeep S. Puri என்னும் ஐநாவிற்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதி நிதி எழுதியுள்ளார். அவர்  இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு சரி என்கிறார். அவர் இந்தியா தமிழர்களுக்குப் பிழைவிட்டதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அவரது தீர்வு 13வது திருத்தத்திற்குள் மட்டும் முடங்குகிறது. மஹிந்த இந்தியா சென்றால் 13வது திருத்தம் என்பார். புது டில்லியில் இருந்து யாராவது வந்தால் 13வது திருத்தம் என்பார். பின்னர் தான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்பார். இருபத்து ஆறு ஆண்டுகள் கழிந்தும் இந்தியா இப்போதும் 13வது திருத்தத்தை குரங்குப் பிடியாக பிடித்து வைத்துள்ளது அதை வைத்து இந்தியா இலங்கைத் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. இந்தியா அவ்வப்போது இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்ளிருந்து வரவேண்டும் என்றும், அது எல்லா இனங்களும் ஏற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை அவ்வப்போது விளக்கிக் கொள்ளும். சில சமயம் 13இற்கு மேல் சென்று தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சொல்லும். ஆனால் சில உண்மைகளை இந்தியா உணாராதது போல் பாசாங்கு செய்கிறது:
  1. 1987-ம் ஆண்டு ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தப்படி செய்யப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13வது திருத்தம் இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒர் தீர்வு அல்ல
  2. 13வது திருத்தத்தை தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்களவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இருதரப்பும் தம்மீது இந்தியா இதைத் திணித்தது என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
  3. 1987இற்குப் பின்னர் இலங்கையில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் 13வது திருத்தத்தை செல்லாக் காசாக்கி விட்டான. 
  4. இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிருந்து ஒரு போதும் வர மாட்டாது.
  5. இலங்கை வாழ் ச்கல இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவது சாத்தியமல்ல.
இந்த உண்மைகளை இந்தியா உணராமல் பாசாங்கு செய்வது  இலங்கை இனப்பிரச்சனையை இன்னும் சிறிது காலம் இழுத்தடித்தால் சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கில்  செய்து தமிழர்களை இலங்கையில் ஒரு மீளா அடிமைகளாக்கிவிடலாம் என்பதற்காகவே. இந்தியாவின் சதியைத் தடுக்க ஒரே வழி உலகெங்கும் வாழ் தமிழர்கல் திரண்டு எந்தியாவிற்கு எதிராகப் போராட வேண்டும்.  தமிழர்களுக்கு ஒரு இடைக்கால தன்னாட்ச சபையை விரைவில் உருவாக்க பன்னாட்டு அரங்குகளில் கடும் முயற்ச்சி எடுக்க வேண்டும்.

Wednesday 10 April 2013

காதலின் முள்ளிவாய்க்கால்

கொடியில் மலரை
யார் விட்டு வைப்பார்
மனதில் உறவை
ஏன் விட்டு வைக்கவில்லை
உன் நாணத்தின் இறையாண்மைக்கு
இரை என் ஆண்மை

காதலின் முள்ளிவாய்க்காலைக்
கண்டதனால்
கவலை முள்வேலியின் பின்
கட்டுண்ட இதயங்கள்

உன் இதயத்தில் ஒளிந்திருப்பவற்றை
புரிந்து கொள்ளத் தேவையடி
இங்கு ஒரு ஹார்ட்டி லீக்
உன் கண்கள் செய்யும் சித்திரவதைக்கு
தேவையடி ஜெனிவாவில் ஒரு தீர்மானம்

Tuesday 9 April 2013

சர்ச்சையைக் கிளப்பிய மார்கரெட் தட்சரின் இறப்புத் தொடர்பான விமர்சனங்கள்

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தட்சர் பதவியில் இருக்கும் போது சர்சையைக் கிளப்பிக் கொண்டே இருந்தார். அதே போல் இறந்த பின்னரும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். தட்சர் இறந்தவுடன் சூனியக்காரி போய்த் தொலைந்தாள் என்ற முகவேட்டு வாசகம், மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம், பலர் தெருவில் இறங்கி குத்தாட்டம் என்பவை ஒரு புறமும் மறுபுறம் பல தலைவர்கள் புகழஞ்சலி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

நகம் இழந்த கிழப்புலி என விமர்சிக்கப்பட்ட உலகப் பெருவல்லரசான பிரித்தானியாவின் தலையை உலக அரங்கில் மீண்டும் நிமிர வைத்தவர் தட்சர் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆர்ஜெண்டீனாவுடன் போரில் வெற்றி, அரச கடன்கள் பெருமளவு மீளளீப்பு, அமெரிக்காவுடன் சிறப்பு உறவு என அசத்தியவர் தட்சர் எனப் புகழ்கின்றனர் சிலர். அரசுக்கு சொந்தமான வியாபாரங்களைத் தனியார் மயமாக்குதல் மூலம் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரலாம் என்பதை நிரூபித்தவராக தட்சர்  கருதப்படுகிறார். இந்தப் பொருளாதார முன்மாதிரியைப் பல நாடுகள் பின் பற்றின. அரசு வறியவர்களுக்குச் செய்யும் சமூகநலன் திட்ட உதவிகளைக் குறைத்தமையும் உள்ளூராட்சி வரிகளை வீடுகளின் மதிப்பு ஏற்ப இல்லாமல் செய்தார். தனிநபர்களுக்கு அவர்களின் வருமானத்தைக் கருத்தில் கொள்ளாது எல்லோருக்கும் ஒரே மாதிரியான உள்ளூராட்சி வரிகளை விதித்தது அவரின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

நாட்டின் ஒரு பகுதியை அழித்த இருதயமற்றவர் என பல இடதுசாரிகள் அவரை விமர்சிக்கின்றனர். தட்சர் இறந்துவிட்டார் என்ற செய்திக்கு முகவேட்டில் மணித்தியாலம் ஒன்றிற்கு 2500 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டன. பிபிசியின் செய்தி வாசிப்பாளர் தட்சரின் இறப்புச் செய்தியை வாசிக்கும் போது கறுப்புக் கழுத்துப் பட்டி அணியவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானியப் பாராளமான்ற உறுப்பினர் ஜோர்ஜ் கலவே  “Tramp the dirt down”  என தனது டுவிட்டரில் மார்கரெட் தட்சரின் இறப்பை விமர்சித்தது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நெல்சன் மண்டேலாவை மார்கரெட் தட்சர் பயங்கரவாதி என அழைத்ததைப் பலர் நினைவு கூர்ந்தனர். ஆபிரிக்க தேசியக் காங்கிரசு ஒருநாளும் ஆட்சிக்கு வராது எனச் சூழுரைத்த தட்சர் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வர மறுத்தார். அவர் மேல் உலகம் செல்லும் போது அங்குள்ள ஆபிரிக்க தேசியக் காங்கிரசு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்கின்றனர் சிலர். வட அயர்லாந்து விடுதலைப் போராளிகளும் தட்சரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

மார்கரெட் தட்சர் இறந்த செய்தி கேட்டு பிரித்தானியாவின் பல நகரங்களில் தெருவில் இறங்கி மக்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இலண்டனின் முன்னாள் நகரபிதா கென் லெவிங்ஸ்டன் அவர்கள் தட்சரின் அரசியல் அடிப்படியில்பிழையானது என்றார். தட்சரின் இறப்புச் செய்தி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மிகச் சிறந்த செய்தி என்றார் அவர்களது தொழிற்சங்கத் தலைவர். டிங் டொங் சூனியக்காரி செத்துத் தொலைந்தாள் என்று பாடி மகிழ்கின்றனர் சிலர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வலைத்தளம் மார்கரெட் தட்சர் இறந்துவிட்டாரா என்ற கேள்வியைப் பதிவு செய்து வைத்திருந்தது. இன்று வரை இருக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஆம் எனப்பதிவிடப்பட்டது. இந்த வலைப்பதிவை முகவேட்டில் பகிர அதற்கு ஒரு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் படி விருப்பம் தெரிவித்தனர். லிவர்ப்பூல் நகரசபை உறுப்பினர் தட்சர் இறந்ததைப்பற்றி ஒன்றுமில்லை அவர் பிறந்திருக்கக் கூடாது என நினைக்கும் பல இலட்சம் மக்களின் கவலையை தானும் பகிர்ந்து கொள்கின்றேன் என்றார்.



Monday 8 April 2013

ஈழத் தமிழர்களுக்கு இன்னும் ஒரு எதிரிக் கும்பல்

ஈழத் தமிழர்களுக்கு சிங்களவர்களிலும் மோசமான எதிரிகள் இந்தியாவில் இருக்கின்றனர். முதலில் காந்தி நேரு குடும்பம் தமிழர்களுக்கு எதிரிகளாக 1987இல் மாறினார்கள். அப்போது இருந்த இந்திய அதிகாரிகள் முதலில் விடுதலைப்புலிகளின் எதிரிகளாக மாறினார்கள். இவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தன தன் பக்கம் பல வழிகள் மூலம் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். அங்கு "தட்சணை" முக்கிய பங்கு வகித்தது.

முதலாம் எதிரி பூனூல் கும்பல்கள்
ஜே ஆர் தன் பக்கம் இந்திய அதிகாரிகளை இழுத்துக் கொண்டது தமிழர்களுக்கு பேரிழப்பின் ஆரம்பக்கட்டமாக அமைந்தது. அதன் பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது. இந்த அதிகாரிகள் தந்திரமாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் கொல்ல முயன்றனர். அதன் பின்னரும் இவர்கள் பல வழிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையை அழிக்க பல வழிகளில் முயன்றனர். இந்த அதிகாரிகளின் பின்னால் பலம் மிக்க ஒரு பார்ப்பனக் கும்பல் இருக்கின்றனர். இந்தக் கும்பல்களும் சில மலையாளிகளும் நெருங்கிச் செயற்படுகின்றனர். மலையாளிகள் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவாகுவதை விரும்பவில்லை. இந்தக் கும்பல்கள் தங்கள் சாதிய நலன்களுக்காக இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பலியிட்டன.

இரண்டாம் எதிரியாக காந்தி நேரு குடும்பம்
இந்திய அதிகாரப் போட்டியின் அம்சமாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற பழி ஈழத்தமிழர்களின் தலையில் போடப்பட்டது. ராஜீவ் காந்தியின் கொலையில் ஈழத்தமிழர்கள் பாவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சோனியா காந்தி குடும்பம் ஈழத் தமிழர்களின் எதிரிகளாக மாறியது. வெளிநாட்டினரான சோனியா குடும்பத்தினர் தமது குடும்ப நலனுக்காக இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பலியிடுகின்றனர்.

புதிய எதிரிக் கும்பல்
ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மானங்கள் தொடர்பாக இந்தியாவின் ராசதந்திரிகள் நடந்து கொண்ட விதம் நரித்தனத்தின் உச்சக்கட்டம். ஆனாலும் இலங்கை இந்தியா தனது பக்கம் முழுமையாக இருக்கவில்லை என்ற ஆத்திரமடைந்தது. தமிழ்நாட்டில் 2013 மார்ச் மாதம் உருவான மாணவர்களின் எழுச்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கூட்டணியில் இருந்து வாக்கு வேட்டைக் காரணங்களுக்காக வெளியேறி காங்கிரசு ஆட்சியை ஆட்டம் காணவைத்தது. இத்துடன் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு பெறாமல் தமிழ்நாடு அரசு தீர்மானம் எடுத்தது சிங்களவர்களையும் பல இந்தியர்களையும் கடுமையாக ஆத்திரப்படுத்தியது. வட இந்திய ஊடகங்களில் பல ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகள், போன்ற பலர் மாணவர் எழுச்சி, திமுகாவின் புது நிலைப்பாடு, ஐபிஎல் தடை ஆகியவற்றால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இவர்களின் ஆத்திரத்திற்கான காரணம் தேடுகையில் ஈழத் தமிழர்களுக்கு ஒரு புதிய எதிரிகள் உருவாகி இருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது. அவர்கள்தான் 2009இன் பின்னர் இலங்கையில் முதலீடுகளைச் செய்த இந்திய முதலாளிகள். இவர்களின் முதலீட்டின் பாதுகாப்பிற்கும் இலாபத்திற்கும் இலங்கை இந்திய நல்லுறவு முக்கியம்.  இவர்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சமாவது சாதகமாக இந்தியா நடந்து கொள்ளக் கூடாது. இலங்கை சீனாவின் பக்கம் சாயக் கூடாது என்ற விவாதத்தை வெற்றீகரமாக முன்வைத்த இந்த முதலீட்டாளர்கள்களின் கைக்கூலிகள் இப்போது புதிதாக ஒரு விவாதத்தையும் முன் வைக்கின்றார்கள். இலங்கையின் மனித உரிமை மீறல்களை இந்தியா தூக்கிப் பிடித்தால் காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை பாக்கிஸ்த்தான் தூக்கிப் பிடிக்கும் என்பதே அவ்விவாதம். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு Same side goal அல்லது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றதாகும். ஈழத் தமிழர்களின் எதிரிகளாக மாறியுள்ள இந்த இலங்கையில் முதலிட்டுள்ள இந்தியர்களின் கும்பல் தமது முதலீட்டை பாதுகாக்க இந்தியாவின் பிராந்திய நலன்களையும் பலிகொடுக்கின்றனர். இவர்களில் அநேகருக்கு இந்தியாவில் இரண்டாவது வதிவிடம் மட்டுமே இருக்கிறது. இவர்களின் முதலாவது வதிவிடம் இலண்டன் அல்லது நியூயோர்க்கில் இருக்கிறது. இவர்களது அடுத்த தலைமுறை இந்தியாவைப் பற்றிக் கவலைப்படாத ஒரு கும்பலாகவே இருக்கும். இந்திய வர்த்தக மற்றும் தொழிற் சபைகளின் கூட்டமைப்பு இந்தியப் பாராளமன்றக் குழுவினரை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது இந்த மூன்றாம் எதிரிகளின் ஒரு செயற்பாடே. இந்தப் பாராளமன்றக் குழுவில் ஆளும் கட்சியான காங்கிரசுக் கட்சியின் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்கள் கூட இடம் பெற மாட்டர்கள். இந்தப் பாராளமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி இலங்கை இந்திய உறவை இலங்கை அரசின் "கவனிப்பின்" மூலம் வளர்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நடவடிக்கை தேர்தல் வாக்கு வேட்டையைப்பாதிக்கும் என்பதால் பின்னர் கைவிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடு 2008இல் இருந்து பெரும் அதிகரிப்பைக் கண்டது. தமிழர்களுக்கு எதிரான இந்தியர்களின் நிலைபபாட்டுக்கும் இந்த முதலீட்டு அதிகரிப்புக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.


பிராந்திய நலன்கள் பலியிடப்பட்டதா?
பாக்கிஸ்த்தானைப் பிரித்து பங்களாதேசத்தை உருவாக்கியது, சீக்கிமை இந்தியாவுடன் இணைத்தது, பூட்டானை இந்தியாவின் ஒரு செய்மதி நாடாக்கியது நேப்பாளத்திலும் மாலைதீவிலும் தனக்கு சாதகமான ஆட்சியாளர்களை வைத்திருந்தது, அமெரிக்கக் காலூன்றலை தமிழ் போராளிகளுக்கு படைக்கலன்கள் பயிற்ச்சி போன்றவை வழங்கித் தடுத்தது  என இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை 1987வரை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. 1987இன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்தியாவை ஆளும் குடும்பம், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், இந்தியப் பெரு முதலாளிகள் ஆகியோர்  ஈழ விடுதலைக்கு மட்டும் எதிரிகள் அல்லர் இவர்கள் இந்திய நலன்களுக்கும் எதிரானவர்கள் என்பதை பாக்கு நீரிணையின் இரு புறத்திலும் இருக்கும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் தமது புதிய எதிரிகளான இலங்கையில் முதலீடு செய்துள்ள இந்தியக் கும்பல்களுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

Sunday 7 April 2013

எச்சரிக்கை: இலங்கையில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு

இலங்கையில் சேமிப்புக் கணக்குக்களில் பணத்தை முதலீடு செய்து வைத்திருப்பவர்கள் பண இழப்பைச் சந்திக்க நேரிடலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.சைப்பிரஸ் நாட்டில் நடந்தது போல் இலங்கையிலும் வங்கிகள் நெருக்கடியை எதிர் கொள்கின்றன. சைப்பிரஸை ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாத்தது போல் இலங்கையைப் பாதுகாக்க யாரும் இல்லை.

இலங்கை வங்கிகளில் முதலீடு செய்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் வங்கிகள் முறிவடையும் நிலையை அடையலாம் என்ற அச்சமே இதற்குக்காரணம் என Lanka News இணையத் தளம் அறிவித்துள்ளது.  உமர் குமார் சர்மா என்னும் பிரபல இந்திய முதலீட்டாளர் Nations Trust bank வங்கியில் தனது பங்குகள் அனைத்தையும் 04-04-2013-ம் திகதி விற்பனை செய்தது கொழும்பு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Alex Lowell என்னும் இன்னொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கை வங்கிகளில் தனது சகல முதலீடுகளையும் விற்கவுள்ளார் எனச் சொல்லப்படுகிறது.

ஹட்டன் நஷனல் வங்கியினரின் தகவல்களின்படி வங்கியில் பணம் வைப்பிலிட்டவர்கள் தங்கள் வைப்புப் பணத்தை மீளப்பெறுவது வேகமாக அதிகரித்து வருகிறது. அதே வேளை வங்கியில் தற்காலிகக் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை அறவாக்குதல் பெருமளவில் குறைவடைந்துள்ளது. ஒரு வங்கியில் இருப்புக் குறைதலும் அது வழங்கிய கடன்களை அறவிடமுடியாமல் போவதும் அதன் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். சொத்துக்களை ஈடாக வைத்து கடன் கொடுத்த வங்கிகள் கடன் அறவிட முடியாத நிலையில் சொத்துக்களை பொறுப்பேற்று விற்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றன. மோசமான பொருளாதாரச் சூழலில் சொத்துக்களை விற்பது கடினமாக இருக்கிறது.

NRFC கணக்குகள் அம்போ ஆகலாம்.
ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை அரசு வாங்கிய கடன்கள் இதற்கு முன்னர் இருந்த எல்லா ஆட்சியாளர்கள் வாங்கிய கடனிலும் பார்க்க மூன்று மடங்கு என்கிறது Lanka News இணையத்தளம். இந்த நிலையை சைப்பிரஸ் நாட்டின் நிலைக்கு ஒப்பிடுகிறது Lanka News இணையத் தளம். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் பலர் NRFC கணக்குகளில் பெரும் தொகைப்பணத்தை அதிக வட்டி பெறும் நோக்குடன் முதலிட்டுள்ளார்கள். இலங்கையில் வங்கிகள் முறிவடைந்தால் இவர்களில் முதலீடு ஆப்பத்திற்கு உள்ளாகலாம்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...