Thursday 28 October 2021

சீன DF-41 மலை! இந்திய அக்னி-5 மடு!

 


சீனாவின் எப்பாகத்தையும் அணுக்குண்டுகளால் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணைகளை 2021 ஒக்டோபர் 27-ம் திகதி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ஒடிசாவி மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து வீசிப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்தியா தெரிவிக்கின்றது. அக்னி-5 ஆல் 1.1தொன் எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிச் செல்ல வல்லது. ஆனாலும் இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது. அக்னி-5 இந்தியாவிற்குத்தான் "அதிநவீனமனது" . சீனாவிற்கல்ல. அது சீனாவிற்கு அதிரடியாக அமையப்போவதுமில்லை. அணுக்குண்டுகளால் போர் செய்யும் போது நீயும் தொலைந்தாய், நானும் தொலைந்தாய் என்ற நிலைதான். அதில் யார் அதிக அணுக்குண்டுகளை அதிக வேகத்தில் வீசுவார்கள் என்பதுதான் முக்கியம். 

கண்டம் விட்டு கண்டம் பாயுமா? (ICBM?)

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை (Inter-continental Ballistic Missiles) என வகைப்படுத்தப்பட்டுள்ள அக்னி-5 ஏவுகணை சீனாவிற்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றது, சீனாவை கலங்க வைத்துள்ளது, சீனாவை கரிசனை கொள்ள வைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை குறைந்தது 5500கிலோ மீட்டர் வரை பாயவேண்டும். ஆனால் அக்னி-5 5000கிலோ மீட்டர் தான் பாயக்கூடியது எனவும் கருதப்படுகின்றது. இந்து இதிகாசங்களில் அக்னி படைக்கலன் தேவர்களில் ஒருவரான அக்னிபகவானிற்கு உரியது. மகாபாரதப் போரின் 12-ம் நாள் போரில் அர்ச்சுனன் மன்னன் பகதத்தனை அக்னி அம்பு எய்து கொன்றான் எனக் கூறப்படுகின்றது.

அக்னி-5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையா?

அக்னி-5 தனது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகத்தில் பாயும் எனச் சொல்லப்படுகின்றது. அக்னி-5 ஏவுகணை 17.5மீட்டர் உயரமும் 2மீட்டர் விட்டம் கொண்ட குறுக்கு வட்டமும் கொண்டது. ஏவப்படும் போது அதன் எடை 49,000 முதல் 55,000கிலோ கிராம் வரை இருக்கும். இதை பார ஊர்திகளில் எடுத்துச் சென்று தெருக்களில் இருந்து ஏவலாம். நிலையான ஒரு ஏவுதளம் தேவையில்லாத ஏவுகணை என்பதால் அதை இலக்கு வைத்து எதிர்கள் தாக்குவது கடினமாகும். அக்னி-5 ஏவுகணைகளை இந்தியா 2013-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் 2016-ம் ஆண்டிலும் பரிசோதித்தித்து பின்னர் 2018இல் இரண்டு தடவை பரிசோதித்தது. அக்னி-5இல் கணினி, வழிகாட்டல் முறைமை ஆகியவையும் உள்ளன. இந்தியாவின் முதலாவது அக்னி-1 ஏவுகணை 700கிமீ பாயக்கூடியது. அக்னி-2 2000கிமீ, அக்னி-3 ஏவுகணையும் அக்னி-4 2500முதல் 3000கிமீ வரை பாயக்கூடியவை. அக்னி-5இன் உண்மையான பாய்ச்சல் தூரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது. அது உண்மையில் 8000கிமீ பாயக்கூடியது எனவும் சொல்லப்படுகின்றது. அதை அறிந்தால் ஐரோப்பிய நாடுகள் குழப்பமடையலாம் என்பதால் குறைத்துச் சொல்லப்படுகின்றது என்கின்றார்கள். அக்னி-5 ஏவுகணையை  எதிரிகளின் அலைவரிசைகளில் மூலம் குழப்ப முடியாது எனவும் சொல்லப்படுகின்றது. 

பல இலக்குகளைத்தாகும் அக்னி-6 MIRTV

Multiple Independently Targetable Re-entry Vehicle (MITRV) என்பது பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளை தாமாகவே அழிக்கக் கூடியவை. இந்தியா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அக்னி-6 ஏவுகணையில் பத்து அணுக்குண்டுகளை தாங்கிச் சென்று பத்து இலக்குகளைத் தாக்கும் வல்லமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் National Interest ஊடகம் இந்தியா இதை உருவாக்கும் வல்லமையைப் பெறும் என்று 2018இல் எதிர்வு கூறி இருந்தது. அக்னி-5 மூன்று மட்டங்களைக் கொண்டது அக்னி-6இல் நான்கு மட்டங்கள் இருக்கும்.

ஹைப்பர்சோனி பிரம்மோஸ்-2

இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கும் பிரம்மோஸ்-2 ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஏழு மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளாகும். ஆனால் அவற்றின் பாய்ச்சல் தூரம் 1000கிமீ மட்டுமே. தரையில் இருந்து 14கிமீ செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து பின்னர் இலக்கை நோக்கி ஏறக்குறைய 90பாகை செங்குத்தாக விழும் (Deep-Dive) பிரம்மோஸ்-2 ஏவுகணை உலகில் உள்ள வழிகாட்டல் ஏவுகணைகளில் (Cruise Missiles) வேகம் கூடியது எனக்கருதப்படுகின்றது. மலைகளிற்குள்ளும் பாறைகளுக்கு உள்ளும் உள்ள இலக்குகளை பிரம்மோஸ்-2 நிர்மூலம் செய்யக் கூடியது. செங்குத்தாக விழக்கூடிய வகையில் அவற்றை உருவாக்கியது ஒரு சிறந்த உபாயமாக கருதப்படுகின்றது. அதனால் பிரம்மோஸ்-2 ஒரு செலவு குறைந்த ஏவுகணையாகும். இரசியாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய SU-31-MKI என்னும் பற்பணி-வானாதிக்க போர்விமானத்தில் பிரம்மோஸின் இன்னொரு வகை எவுகணைகள் பொருத்தக் கூடியதாக இருப்பது இந்தியாவிற்கு மேலதிக வலுவைக் கொடுக்கின்றது. ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை தாங்கிய SU-31-MKI விமானங்கள் 122ஐக் கொண்ட 222 Sqadron என்னும் பெயர் கொண்ட விமானப்படையணி சீனாவைத் தாக்குவதற்கென தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

சீனாவின் கிழக்குக் காற்று என்னும் பொருளுடைய DongFeng ஏவுகணைகள் நான்கு தலைமுறையாக உருவாக்கப்படுகின்றது அதன் நான்காம் தலைமுறை DongFeng-41 (DF-41) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாய்ச்சல் தூரத்தில் இது உலகின் இரண்டாவது வலிமை மிக்க ஏவுகணையாகும்.  அதன் பாய்ச்சல் தூரம் 12,000கிமீ முதல் 15,000கிமீ அக்னி-5இன் பாச்சல் துரத்திலும் இரண்டு மடங்கிலும் அதிகமானது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையான DF-41 இன் வேகம் ஒலியிலும் பார்க்க 25மடங்கு ஆகும். இது ஆறு முதல் பத்து வரையிலான அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளைத் தாக்க வல்லது. இதன் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கக் கூடிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை.  அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஒரு விண்வெளிப்படையை (Space Force) அமைத்தால் மட்டுமே சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் Centre for Strategy and Technologyயின் இயக்குனர் ராஜ்ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் இந்தியாவைக் காப்பாற்றுவாரா?

சீனா 2021 ஓகஸ்ட் மாதம் பரிசோதித்த உலகைச் சுற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் அமெரிக்கா என்னும் அம்மியே ஆடிப்போயுள்ள போது இந்தியக் கடுதாசி?

Monday 25 October 2021

ஏவூர்திகளில்(Rockets) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இணைக்கும் சீனா

  


சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படி எதிர்கொள்வது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் சீனா இன்னும் ஒரு படி மேல் போய் உலகத்தை பகுதியாகச் சுற்றிவந்து இலக்குகளைத் தாக்கும் ஹப்பர்சோனிக் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுர்தியை (Rocket) பரிசோதித்துள்ளது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. சீனா 2021 ஜூலை மாதம் செய்த பரிசோதனையை ஒக்டோபர் மதம்தான் பிரித்தானிய நாளிதளான Financial Times பகிரங்கப்படுத்தியது. அமெரிக்க இணையவெளி ஊடகம் ஒன்று சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படித் தவிர்ப்பது எனத் தெரியாமல் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இருப்பதாக பெண்டகனைச் சேர்ந்த Robert Wood என்பவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. அதேவேளை ஒக்டோபர் 21-ம் திகதி அமெரிக்காவின் கடற்படையும் தரைப்படையும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதித்ததாக அமெரிக்கப்பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்தது.  

Mach பெறுமானம்

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை ஹைப்பர்சோனிக் என அழைப்பர், பறக்கும் விமானம், பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது. சீனாவின் செய்கை படைக்கலப் போட்டியை உருவாக்கும் என சில அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட வேறு சில அதை மறுத்துள்ளன.


Fractional Orbital Bombardment System என்பது என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஊக்கி ஏவூர்தி (Booster Rocket), நழுவு வண்டி (Glide Vehicle) என இருபகுதிகளைக் கொண்டது. குண்டைக் கொண்ட Glide Vehicleஐத்தாங்கியபடி Booster Rocket நிலத்தில் இருந்து கிளம்பி மேல் நோக்கிய பாதையில் 62மைல்களுக்கு மேல் பயணித்து விண்வெளிவரை சென்று குண்டைக் கொண்ட Glide Vehicleஐ மேலும் மேல் நோக்கு உந்தித் தள்ளிவிடும் மிக உயரச் சென்ற Glide Vehicle புவியீர்ப்பினாலும் தன் உந்துவலுவாலும் கீழே விழும்போது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குக்கு மேற்பட்ட வேகத்தில் தரையில் தனது இலக்கை நோக்கி பாயும். குண்டு இல்லாமலே ஒரு நழுவு வண்டி (Glide Vehicle) பூமியில் மோதுகையில் அதன் மிதமிஞ்சிய வேகத்தால் பாரிய சேதம் ஏற்ப்படும். அதில் குண்டுகள் அல்லது அணுக்குண்டு இணைக்கப்பட்டால்…..? இப்போது ஏவூர்தி மேல் நோக்கியப் பயணித்து பூமியை பகுதியாகச் சுற்றிவரும் போது மிகத் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கலாம்.  பூமியை சுற்றி ஏவூர்திகள் (Rockets) ஒரு வட்டப்பாதையில் அல்லது நீள்வட்டப்பாதையில் வலம் வரும். பூமியை முழுமையாகச் சுற்றாமல் பூமியின் ஒரு பகுதிக்கு மேலால் மட்டும் ஏவூர்தி சுற்றுவதை பகுதிச் சுற்று (Fractional Orbit) என்பர். இந்தப் பகுதிச் சுற்றை குண்டு வீச்சுக்கு பாவிப்பதை 1960களில் சோவியத் ஒன்றியம் உருவாக்கியது. அதன் மூலம் குண்டுகளை தொலைவில் உள்ள இலக்கின் மீது வீசுவதை பகுதிச் சுழல்தடக் குண்டுவீசல் (Fractional Orbital Bombardment System என அழைப்பர். சீனா அதே போன்ற ஏவூர்தியை ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கச் செய்யும் பரிசோதனையை 2021 ஓகஸ்ட் மாதம் செய்தது. அதில் குண்டுகள் ஏதும் பொருத்தப்படவில்லை. சீனாவின் அடுத்து வரும் பரிசோதனைகள் அதில் குண்டுகளையும் அணுக்குண்டுகளையும் இணைத்துச் செய்யப்படலாம். நீண்ட பயணம் என்பது சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் முக்கிய பகுதியாகும். அப்பெயரையே சீனா தனது புதிய ஏவூர்ந்திக்கு இட்டுள்ளது. சீனா நீண்ட பயணம் (Long March) என்னும் பெயரில் ஒரு ஏவூர்தியை (Rocket) விண்வெளியில் 2021 ஜூலை 27-ம் திகதி ஏவியது. அது ஒலியிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயக்கூடியது. அது பூமியை பகுதியாகச் சுற்றிவந்து தனது இலக்கின் மீது அணுக்குண்டை வீசக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது.

Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள்

ஹைப்பர் சோனிக் வழிகாட்டல் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசனையும் தன்னிடமுள்ள எரிபொருளையும் பாவித்து தனது உந்து வலுவைப் பெற்றுக் கொள்ளும். இவற்றை காற்று சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பார்கள். ஏவூர்திகள் வளிமண்டலத்திற்கும் மேலே செல்வதால் அவை தமக்கு தேவையான ஒட்சிசனை திண்ம வடிவத்தில் காவிக்கொண்டு செல்ல வேண்டும். Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பல நாடுகள் உற்பத்தி செய்ய முயல்கின்றன. அதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன.  அவற்றில் இரசியாவும் சீனாவும் ஒரு படி முன்னேறி அணுக்குண்டுகளை காவிச் செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒதுக்கிய நிதியை அதிகரித்துள்ளது. 2021இல் ஒதுக்கிய நிதி $3.2பில்லியன் 2020இல் $3.8பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு முகவரகம் மேலதிகமாக $247.9மில்லியன் நிதியைக் கோரியுள்ளது.  சீனா உருவாக்கியுள்ள பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment – FBO) முறைமை மூலம் செலுத்தப்படும் ஏவூர்ந்து(Rocket) சீனாவில் இருந்து புறப்பட்டு தென்துருவத்தின் மேலாகப் பாய்ந்து அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் இடைமறிப்பு ஏவுகணைகளைத் தவிர்த்து தனது இலக்கின் மீது குண்டு வீசலாம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை வடதுருவத்தில் உள்ள அலாஸ்கா பனிப்பரப்பில் உள்ளது. சீனா பரிசோதித்த பகுதியான சுழல்தட குண்டுவீச்சு எதிர்பார்த்த இலக்கை துல்லியமாக தாக்காமல் 24மைல் தொலைவில் விழுந்ததாக Financial Times தெரிவித்திருந்தது. அதன் படி அதனால் அசைந்து கொண்டிருக்கும் ஓர் அமெரிக்க விமானம் தாங்கியை துல்லியமாக தாக்க முடியாமல் போகலாம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தமது இலக்கில் இருந்து 520அடிகள் மட்டும் தவறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது


.அமெரிக்காவின் Aegis Combat System

Massachusetts Institute of Technologyஐச் சேர்ந்த அணுப்படைக்கலன்கள் நிபுணரான டேவிட் ரைட் சீனா ஏற்கனவே அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை முறியடிக்கும் திறனைப் பெற்றுள்ளது என்றார். சீனா அமெரிக்காவை மிஞ்சுவது மட்டும் போதாது மிதமிஞ்சிய நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பூமியைச் சுற்றிப் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குகின்றது எனக் கருதப்படுகின்றது. அமெரிக்கா தனது Aegis Combat System என்னும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் முறைமைகளை தனது நாசகாரிக் கப்பல்களில் பொருத்தி உலகக் கடற்பரப்பெங்கும் மிதக்க விட்டுள்ளது. இவற்றையும் மிஞ்சும் வகையில் சீனா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சிதான் அதன் பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment முறைமையாகும்.

அமெரிக்காவின் விண்வெளிப்படை

அமெரிக்கா 2020-ம் ஆண்டு தனக்கு என ஒரு விண்வெளிப்படையை உருவாக்கியது. அதற்கு என பல சிறிய குறைந்த உயரத்தில் செயற்படும் Black Jacket எனப்படும் பல செய்மதிகளை உருவாக்கியது. அவற்றை ஒன்றிணைக்க Pitboss என்னும் மென்பொருளையும் உருவாக்கியுள்ளது. Black Jacket இன் முக்கிய பணி உலகெங்கும் அமெரிக்காவிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளைக் கண்காணிப்பதாகும். அமெரிக்காவின் விண்வெளிப்படைக்கும் சீனாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கும் இடையிலான போட்டிச் செய்திகளை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள்

அமெரிக்காவின் படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை ஊடகங்களிற் சிலவற்றையும் படைத்துறை ஆய்வாளரகள் சிலரையும் தமது கைக்குள் வைத்திருப்பது வெளிப்படையான ஒன்று. அவர்கள் அமெரிக்காவின் எதிரிகளின் படை வலிமையையும் அவர்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தையும் மிகைப்படுத்தி எழுது அமெரிக்காவை பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒருக்கத் தூண்டுவார்கள். அமெரிக்காவின் படைக்கல உற்பத்தியில் பெரும்பகுதி தனியார் துறையினரிடம் உள்ளன. அதேவேளை பாதுகப்புச் செலவு அதிகரித்தால் அமெரிக்கா தம்மீது அதிக வரியை சுமத்தும் என அஞ்சும் செல்வந்தர்கள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்ற செய்தியை விரும்புவதால் அவர்களுக்கு சார்பான ஊடகங்களும் ஆய்வாளர்களும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவூர்தி பரிசோதனையால் ஆபத்து எல்லை என எழுதுகின்றனர்.

பிரித்தானிய நாளிதழான Financial Times வெளியிட்ட செய்தியை மறுத்த சீனா தான் பர்சோதித்தது மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடம் என்கின்றது. சீனாவைச் சுற்றவர அமெரிக்கா பல படைத்தளங்களை வைத்துள்ளது. அவற்றில் இருந்து பல அணுக்குண்டுகளை அமெரிக்காவால் சீனா மீது வீச முடியும். சீனாவில் இருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் குறைந்த தொலைவில் கூட அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ளன. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவிற்கு இன்னும் நெருக்கமாகச் சென்று புலப்படா விமானங்கள் மூலம் அணுக்குண்டுகளை சீனா மீது வீசலாம். இவற்றை மிஞ்சக் கூடிய வகையில் சீனா செயற்படுகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...