Tuesday, 23 November 2021

சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai கணாமற் போனது ஏன்?

 


ZHANG GAOLI என்னும் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் 2018-ம் ஆண்டு தன்னை மிரட்டி உடலுறவு கொண்டதாக Peng Shuai நவம்பர் இரண்டாம் திகதி சீன சமூக வலைத்தளமான Weiboவில் குற்றம் சாட்டினார். அவரது பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டது.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜியாங் ஜெமின் தற்போதைய பொதுச் செயலாளரும் அதிபருமான ஜீ ஜின்பிங் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். ஜீ ஜின்பிங்கை அவர் பதவியில் இருந்து அகற்ற முயற்ச்சி செய்யலாம் என ஜீ அஞ்சுகின்றார். அதனால் அவரது ஆதரவாளரகளை பொதுவுடமைக் கட்சியில் இருந்து அகற்ற ஜீ முயற்ச்சி செய்கின்றார். ஜீ ஜின்பிங் இலக்கு வைத்தவர்களில் முக்கியமானவர் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் ZHANG GAOLI ஆகும். அவர் மீதுதான் சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை சுமத்தினார். சீனாவில் இது போன்று பொதுவுடமைக் கட்சியின் உயர் அதிகாரிகள் மீது விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டுவதில்லை. Peng Shuai குற்றம் சாட்டு வைத்தமையை ஜீ ஜின்பிங் தன் எதிரிகளை பழிவாங்க செய்யும் நகர்வுகள் என முதலில் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

இரண்டு தடவை விம்பிள்டனிலும் பிரெஞ் திறந்த போட்டியிலும் வெற்றி பெற்ற டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை வைத்த சில நாட்களில் காணாமல் போய்விட்டார். அவர் பற்றிய செய்திகள் யாவும் தணிக்கை செய்யப்பட்டன. ZHANG GAOLI மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு போல் மேலும் பல பொதுவுடமைப் புள்ளிகள் மீதும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai குற்றம் சுமத்தலாம் என்பதால் அவரது வாயை மூடுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு பல சீனப் பெண் விளையாட்டு வீரர்களும் இதே போன்ற குற்றச் சாட்டை வைக்கத் தொடங்கினால் பல சீன தலைகளில் தலைகளுக்கு இடர் ஏற்படலாம் என்ற அச்சத்திலும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

சீனாவில் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை பல்கலைக்கழக மாணவிகள், ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் சீன அதிகாரிகளுக்கு எதிராக சுமத்திய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, குற்றம் சாட்டுபவர்களே தண்டிக்கப்படுகின்றார்கள் என அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Peng Shuai தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை #MeToo பரப்புரையாளர்களிடம் முறையிட்டார். சீனா பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களை விரும்புவதில்லை. #MeToo பரப்புரையாளர்களை சீனா கடுமையாக வெறுக்கின்றது. எட்டு வயதில் டெனிஸ் ஆடத் தொடங்கிய 12 வயதில் இருதய சிகிச்சை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் டெனிஸ் விளையாட முடியாது எனச் சொன்ன போதும் அவர் தன் விடா முயற்ச்சியால் சீனாவின் சிறந்த விளையாட்டு வீரர்ராக உருவெடுத்தார். சீனாவின் விளையாட்டுத் துறையின் விதிகளின் படி விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் விளையாடுவதால் கிடைக்கும் வருவாயின் அரைப்பங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். இதை எதிர்த்து முதல் போர்க்கொடி உயர்த்தையவர் Peng Shuai. நாட்டுக்காக விளையாட மாட்டேன் என அவர் சூளுரைத்தபோது அவரைத் தேசத் துரோகியாக சீன ஊடகங்கள் சித்தரித்தன.

2021-11-21 ஞாயிற்றுக் கிழமை 35 வயதான Peng Shuai ஒலிம்பிக் அதிகாரி தோமS பச்சுடன் காணொளியில் உரையாடியதாக செய்தி வெளிவந்தது. இருந்தும் அவரது பாதுகாப்பு பற்றி அந்த அதிகாரி திருப்தியடையவில்லை. அவருடன் உரையாடலில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் Peng Shuai நலமுடன் இருப்பது நிம்மதியளிக்கின்றது என்றார்.

உலக டெனிஸ் அமைப்பின் அதிகாரி 2021 நவம்பர் 22 திங்கட் கிழமை Peng Shuai உடன் இன்னும் ஒரு காணொளி உரையாடலை மேற்கொண்டார். WTA எனப்படும் உலக டெனிஸ் அமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் Peng Shuaiஇன் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவிடத்து தங்கள் அமைப்பில் இருந்து சீனாவை வெளியேற்றுவோம் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். இரு பெரும் டெனிஸ் ஆட்டக்காரர்களான Roger Federer, Rafael Nadal ஆகியோர் Peng Shuaiஇற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். 2022 பெப்ரவரியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கின்றது. மேற்கு நாடுகள் அதைப் புறக்கணிப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கையில் Peng Shuai காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். பன்னாட்டு விளையாட்டு அமைப்புக்கள் அவர் மீது காட்டிய அக்கறைக்கு சீன அரசு பணிந்து விட்டதா?

Monday, 22 November 2021

ஜெர்மனியின் தெரிவு ஜப்பானின் பாதையா சுவிஸின் பாதையா?

  


ஜெர்மனியின் புதிய அரசு தனது பொருளாதாரப் பாதையையும் தேசியப் பாதுகாப்பையும் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் வகையில் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஜெர்மனி தனது பாதுகாப்பிற்கு ஒதுக்கும் நிதி போதாது என அதன் நேட்டோ நட்பு நாடான அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. ஜெர்மனி பாதுகாப்பிற்கு அதிக நிதியை செலவிட்டால் அதிக வரி சேகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஜெர்மனி எடுத்தால் அந்த இரண்டு நாடுகளுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம். ஜெர்மனியின் இந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவிற்கு உடன்பாடில்லை.

இரசிய – பெலரஸ் படை ஒத்திகை

இரசியா பெலரஸுடன் இணைந்து ஆண்டு தோறும் செய்யும் “மேற்கு” என்னும் பெயர் கொண்ட படைத்துறை ஒத்திகை போல்ரிக் நாடுகளையும் சுவிஸ், பின்லாந்து போன்ற நடுகளையும் ஜெர்மனியையும் கைப்பற்றும் இலக்குடன் செய்யப்படுவதாக இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு 2017-ம் ஆண்டில் இருந்தே முன் வைக்கப்படுகின்றன. நேட்டோ நாடுகள் செய்யும் ஒத்திகை எப்படி இரசிய ஆக்கிரமிப்பை முறியடிப்பது என்பதை இலக்காகக் கொண்டுள்ளன. மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை கைப்பற்றி ஆளக் கூடிய படை வலிமை உலகின் எந்த ஒரு நாட்டிடமும் இல்லை. ஆனால் மேற்கு நாடுகள் இரசியா பிளவு படுவதை விரும்புகின்றன.

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும்

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும் தமது மண்ணில் அணுக்குண்டுகள் இருக்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனியில் வைத்துள்ள படைத்தளங்களில் அணுக் குண்டுகளும் உள்ளன. உலக அமைதிக்கும் மனித குலத்தின் இருப்புக்கும் அணுக்குண்டுகள் மிக ஆபத்தானவை. ஆனால் ஜெர்மனியின் போட்டி நாடான இரசியாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணுக்குண்டுகள் உள்ளன. அத்துடன் சீனாவின் DF-41 போன்ற மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் ஜெர்மனி வரை பாய்ந்து அணுக்குண்டுகளை வீச வல்லன. அணுக்குண்டு ஒழிப்பு என்பது உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய ஒன்றாகும். ஜெர்மனி போன்ற உலக வர்த்தகத்தில் தங்கியிருக்கும் பெரிய நாடு ஒன்று தன் பாதுகாப்பிலும் ஒழுங்கான உலக வர்த்தகத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜெர்மனிய மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையோ அல்லது பாதுகாப்பையோ பெரிது படுத்துவதில்லை. ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்ட்ப்ப் படைகளின் வெளியேற்றம் தொடர்பாக கணிசமான அளவு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஜெர்மனியின் சமூக மக்களாட்சிக் கட்சியும், பசுமைக் கட்சியும் பழமைவாத மக்களாட்சிக் கட்சியும்(FDP) இணைந்து அமைத்துள்ள புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான நிலைப்பாடும் செயற்பாடுகளும் முந்தைய அரசினது கொள்கைகளில் இருந்து எவ்வளவு தூரம் வேறுபடும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பனிப்போரில் பயனடைந்த ஜெர்மனி

ஜப்பானும் ஜெர்மனியும் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட நாடுகள். பின்னர் அவ்விரண்டு நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகின. இரண்டிலும் அமெரிக்கா படைத்தளம் அமைத்து வைத்துள்ளது. இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து தமது பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளன. இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியுள்ளன. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரில் ஜெர்மனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. சோவியத் ஒன்றியத்தை சார்ந்து இருந்த கிழக்கு ஜெர்மனி பனிப்போரின் முடிவில் மேற்கு ஜெர்மனியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளின் படைவலிமைப் பட்டியலில் ஜப்பான் 5-ம் இடத்திலும் ஜெர்மனி 15-ம் இடத்திலும் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் ஜப்பான்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஜப்பான் தனது படைவலிமையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சின்சே அபே ஜப்பானிய தலைமை அமைச்சராக இருந்த போது 2013-ம் ஆண்டு ஜப்பான் தனது வெளியுறவுத் துறையையும் படைத்துறையையும் மறுசீரமைப்புச் செய்தது. ஜப்பானின் தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு கேந்திரோபாயம் வகுக்கப்பட்டது. அவசர பாதுகாப்பு தேவை ஏற்படும்போது செயற்படுவதற்கென அமைச்சரக்ளைக் கொண்ட ஒரு சபையும் அமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அமைச்சு ஒன்றை உருவாக்கினார். ஜப்பானின் ஏற்றுமதியில் 20% சீனாவிற்கு செல்கின்றது ஆனால் அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் போகும் ஏற்றுமதி 8% மட்டுமே. இருந்தும் புவிச்சார் அரசியல் நிலைமைகளை ஜப்பான் கருத்தில் கொண்டு சீனாவிற்கு எதிரான தன் நகர்வுகளை ஜப்பான் மேற்கொள்கின்றது. தைவானை சீனா ஆக்கிரமித்தால் ஜப்பானுக்கு ஏற்படப் போகும் இடர்களுக்கு ஈடாக அல்லது அதிலும் அதிகமான இடர்களை இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதால் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படும்.

சுவிஸ்லாந்தின் பாதுகாப்பு

சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது. ஜெர்மனியும் சுவிற்சலாந்தைப் போல் நடு நிலை பேணிக் கொண்டு படைத்துறைச் செலவை குறைக்க வேண்டும் என்ற கருத்து ஜெர்மனியில் முன்வைக்கப்படுகின்றது. பூகோள அமைப்பும் புவிசார் அரசியல் சூழ்நிலையும் ஜெர்மனிக்கு ஓர் உறுதியான பாதுகாப்புத் தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

தைவானை சீனா கைப்பற்றுவதை தடுக்கும் வகையில் தைவானை நோக்கி ஜப்பான் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கு சவால் விடக் கூடிய அளவில் தனது படை வலிமையையும் பெருக்குகின்றது. இரசியா  உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு எதிராக என்ன நகர்வுகளை ஜெர்மனி செய்கின்றது? தம்மை ஆக்கிரமித்து பல கொடுமைகள் செய்த ஜப்பான் மீது சீனர்களுக்கு ஜப்பான் மீது கடுமையான வெறுப்பு உள்ளது. தம்மை ஆக்கிரமித்த ஜெர்மனியை தோற்கடித்த இரசியர்களுக்கு ஜெர்மனி மீது அந்த அளவு வெறுப்பு இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Sunday, 21 November 2021

ஏன் அழுதார் ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு?

 

 
மட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. தற்போது தெலுங்கானா என அழைக்கப்படும் பிரதேசம் நிஜாம் என்னும் ஒரு இஸ்லாமிய மன்னரின் கீழ் ஹைதராபாத் நிஜாம் என்னும் பெயரில் தெலுங்கு மொழி பேசும் பிரதேசமாக வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்தது. மொழிவாரியாகப் பிரிக்கும் போது மட்ராஸின் தெலுங்கு மக்கள் வாழும் பிரதேசத்தை பிரித்து தெலுங்கானாவுடன் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்னும் மாநிலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் Andhra Pradeshஐ ஆந்திரம், தெலங்கானா என இரண்டாகப் பிரித்தார்கள்.

 மறைந்த நடிகர் என் டி ராமராவ் ஆரம்பித்த தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய தலைவராக அவரின் மகளின் கணவர் சந்திரபாபு நாயுடு இருக்கின்றார். அவர் இப்போது எதிர்க்கட்சித் தலைவர். (வாரிசுகள் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை) ஆந்திரப் பிரதேசத்தின் பிரபலமான இன்னோர் அரசியல்வாதி YSR ராஜசேகர ரெட்டி. இவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர். இவர் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். காங்கிரசுக் கட்சி மாநிலத் தலைவர்களை மதிப்பதில்லை என்பதற்கு இவரும் ஓர் உதாரணம். இவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து வந்து YSR congress என்னும் கட்சியை ஆரம்பித்து மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர். தற்போது அவரது மகன் ஜகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருக்கின்றார். (வாரிசுகள் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை) YSR காங்கிரசின் சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவையும் அவரது மனைவியையும் பற்றி இழிவாகப் பேசினார்கள். இதனால் சினமடைந்த சந்திரபாபு சட்ட மன்றத்தில் காரசாரமாகப் பேசினார். ஆந்திர சட்ட சபையை கௌரவர்களின் சபைக்கு ஒப்பிட்டார். 2024-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு முதல்வராகத்தான் சபைக்கு வருவேன் எனச் சொல்லி சட்ட சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி தேம்பி அழுதார். YSR காங்கிரசின் உறுப்பிர்கள் அவர் நாடகமாடுகின்றார் என்றனர். தனது மனைவியும் முன்னாள் முதல்வர் என் டி ராம ராவின் மகளுமான புவனேஸ்வரி எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடவில்லை என்றார். அவரை அவமானப் படுத்திவிட்டார்கள் என்றார். தான் கௌரவத்திற்காக கௌரவத்துடன் வாழ்பவர் என்றார். தனது மனைவியின் கௌரவத்தை பாதுகாக்க தான் பேச முற்பட்ட போது அவைத்தலைவர் (சபாநாயகர்) தன் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டார் என்றார் நாயுடு. 

 YSR காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா செல்வராகவன் சந்திரபாபு நாயுடுவின் கட்சியினர் சபைக்கு ஒரு காணொளியைக் கொண்டு வந்து காட்டி அது நான் நடித்த நீலப்படம் என்று சொன்னீர்கள். அப்போது உங்களுக்கு நீதி என்றால் என்னவென்று தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். YSR காங்கிரசுக் கட்சித் தலைவரும் முதல்வருமான ஜகன்மோகன் ரெட்டி உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வியடைந்த சந்திரபாபு நாயுடு நாடகம் என்கின்றார்.

Friday, 19 November 2021

இரசியாவின் S-500 வான் பாதுகாப்பு முறைமை அமெரிக்காவிற்கு சவாலாகுமா?

  


நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இரசியாவின் S-500 வான் பாதுகாப்பு முறைமையின் முதலாவது அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது புலப்படாத்தன்மை கொண்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் இனம் கண்டு தாக்கி அழிக்கக் கூடியது என நம்பப்படுகின்றது. இது மரபுவழிக் குண்டுகளையும் அல்லது அணுக் குண்டுகளையும் தாங்கி வரும் பத்து எறியியல் ஏவுகணைகளை (Ballistic Missiles) ஒரேயடியாக இடைமறித்து அழிக்கக் கூடியது. S-500இல் இருந்து வீசப்படும் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள் ஒலியின் வேகத்திலும் பார்க்க 14 மடங்கு (Mach-14) வேகத்தில் பாயக் கூடிய மீயுர்-ஒலிவேக (Hypersonic) ஏவுகணைகளாகும். இவற்றினுடைய செயற்படு நேர்ம் 3 செக்கண்ட்களாகும். முந்தைய S-400இன் செயற்படு நேரம் 10செக்கண்ட்களாகும். எதிரியின் மீயுர்-ஒலிவேக (Hypersonic) ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்கக் கூடியது. S-500 இன் முதலாவதாக 2018இல் பரீட்சிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இரசியப் படைகள் இவற்றை முழுமையாக பாவிக்க முடியும்.

ஒரு வான்பாதுகாப்பு/ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று பாகங்களைக் கொண்டது:

1. இனம் காண் நிலையம் (Radar Unit)

இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

2. கட்டுப்பாட்டகம் (Control Centre )

இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம்இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

3. ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)

ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும். வீசப்படும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும். இந்த ஏவுகணைகளின் வேகம் எதிரியின் ஏவுகணைகளிலும் பார்க்க அதிக வேகத்தில் பாயக்கூடியவையாக இருத்தல் அவசியம்.

சீன DF-41 ஏவுகணைகளை அழிக்க முடியாது

இரசியாவின் S-500இல் உள்ள ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 14 மடங்கு வேகத்தில் (Mach-14) பாயக்கூடியவை என்பதால் ஒலியிலும் 25மடங்கு  வேகத்தில் (Mach-25)  பாயும் சீனாவின் DF-41 ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் போகலாம். S-500 இன் ஏவுகணைகளான 77N6-N, 77N6-N1 200கிமீ/124மைல்கள் உயரம்வரை பாய்ந்து எதிரியின் ஏவுகணைகளை அழிக்கவல்லன. S-500இன் அடுத்த கட்ட முறைமைக்கு S-550 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களை இரசியா வெளிவிடவில்லை.

அமெரிக்கப் பெருமைக்கு பேரிடி என்னும் இரசியா

இரசியர்கள் தங்களது S-500 வான் பாதுகாப்பு முறைமை ஒரு மந்திர குண்டு (Silver Bullet) எனப் பெருமைப்பட்டுக் கொண்டதுடன் அது அமெரிக்காவின் பெருமைக்கு பேரிடியாக அமையும் எனக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-22 Raptor, F-35 Lighting ஆகிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையால் இனம் காணமுடியாது எனக் கருதப்பட்டது. சிரியாவில் இரசியாவின் S-400 நிறுத்தப் பட்டிருந்த பிரதேசங்களில் இஸ்ரேல் அங்கு தன்னிடமுள்ள F-35 புலப்படா விமானங்களை பறக்க விட்டு பரிசோதித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. F-35 முதலில் போர் முனையில் பாவித்தது இஸ்ரேல் என இஸ்ரேலியப் படைத்துறையினர் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் அது எங்கு எப்போது என இஸ்ரேலியர்கள் சொல்லவில்லை. அது சிரியாவாக இருக்க வேண்டும் என ஊகம் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின்  THAAD & S-400



அமெரிக்காவின்  Terminal High Altitude Area Defence என்னும் வான்பாதுகப்பு முறைமை தாட் (THAADஎனச் சுருக்கமாக அழைக்கப்படும். அதிலும் பார்க்க இரசியாவின் S-400 வான்பாதுகாப்பு முறைமை சிறந்ததாக விளங்கியது. அமெரிகாவின் தாட் உயர் மட்டத்தில் வரும் ஏவுகணைகளையும் விமானங்களையும் மட்டும் இடைமறித்து அழிக்க வல்லது. ஆனால் இரசியாவின் S-400 அதி உயர்மட்டம்உயர் மட்டம்தாழ் மட்டம் ஆகிய மூன்று வகையான ஏவுகணைகளையும் விமானங்களையும் இடை மறித்து அழிக்க வல்லன. அத்துடன் தாட் ஒரு செக்கண்டிற்கு முன்னூறு கிமீ வேகத்திலும் குறைவான வேகத்தில் வரும் ஏவுகணைகளை மட்டும் இடைமாறிக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தன. ஆனால் இவற்றுடன் செய்மதிகளில் இருந்து செயற்படும் Space Based Infrared System (SBIS) மற்றும் விமானங்களில் இருந்து செயற்படும் Airborne Lace ஆகியவை இணக்கப்பட்ட பின்னர் அவற்றின் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. S-400 ஒரு செக்கண்டிற்கு 480கிமீ வேகம் வரை பாயும் ஏவுகணைகளை இடைமறிக்க வல்லன. ஒரு S-400இன் விலை $500மில்லியன் ஆனால் ஒரு தாட் முறைமையில்ன் விலை அதிலும் பார்க்க ஆறு மடங்காகும். வான் பாதுகாப்பு முறைமையில் இரசியா அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி முன்னேறியுள்ளது என்பதை S-400 நிலை நாட்டியது. S-500 இன்னும் ஒரு படி முன்னேற்றத்தை சுட்டிக் காட்டுகின்றது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் S-500

S-500 வான் பாதுகாப்பு முறைமையை S-400இல் இருந்து மேம்படுத்தாமல் அதன் ரடார்கள்கணினி முறைமைகள்ஏவுகணை வீசும் முறைமைகள்ஏவுகணைகள் ஆகியவற்றை முற்றிலும் புதியனவாக இரசியர்கள் உருவாக்கியுள்ளன. இரசியா சீனாவிற்கும் இந்தியாவிற்கும் S-500 வான்பாதுகாப்பு முறைமையை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதனால் பாதிப்படையப் போவது

கரிசனை கொள்ள வேண்டிய ஜேர்மனி

2021 ஏப்ரலில் ஜேர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேர்மனிக்கு இரசியாவால் ஏற்படப்போகின்ற இடர் நேரடியானதும் திட்டவட்டமானதுமாகும் என்றார். ஜேர்மனியிடம் இருக்கும் பழைய Tornado போர் விமானங்கள் இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை எதிர்கொள்ள முடியாதவை. இரசியாவின் S-500 செயற்படத் தொடங்கியதும் ஜேர்மன் போர் விமானங்கள் இரசியாப் பக்கம் தலைகாட்டவே முடியாது.

அமெரிக்காவின் B-21 Raider இரசியாவின் S-500ஐ அழிக்குமா?

அமெரிக்காவின் B-21 Raider போர்விமானங்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் எதிரி நாடுகள் உருவாக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தகர்க்க வல்லது என அதன் உற்பத்தியாளர்கள் Northrop Grumman Corporation தெரிவித்துள்ளது. அமெரிக்கா 2022-ம் ஆண்டு களமிறக்கும் B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி எதிரியின் எந்த ரடார்களுக்கும் புலப்படாமல் உலகின் எந்தப் பாகத்திலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. திடீர்த்தாக்குதலாளி என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த வகை விமானங்கள் ஆறாம் தலைமுறையை சார்ந்தவை. Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மைசிறந்தswept-wing fighter பொறிமுறைபல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. B-21 Raider இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளை தகர்க்கக் கூடியவை என அதன் உற்பத்தியாளர்களான Northrop Grumman Corporation சொல்கின்றனர்.

இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான S-400, S-500 போன்றவற்றிற்கு ஈடான வான்பாதுகாப்பு முறைமைகள் அமெரிக்காவிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் இரசிய வான்பாதுகாப்பு முறைமைகளை தகர்கக் கூடியவையா என்பதை ஒரு போர்க்களத்தில் தான் பார்க்க முடியும்.

Wednesday, 17 November 2021

பைடன் – ஜின்பிங் சந்திப்பும் தைவானின் பாதுகாப்பும்

  


2021 நவம்பர் 15-ம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மெய்நிகர் வெளியில் உரையாடுகையில் தைவானிய அரசு தைவானின் தற்காப்பு தொடர்பான கேந்திரோபாயக் கொள்கை பற்றிய பத்திரமும் பகிரங்கப் படுத்தப்பட்டுளது. தைவானை சீனா கைப்பற்றி விடுமா என்ற கரிசனையில் அமெரிக்காவும் தைவானை அமெரிக்கா அங்கிகரித்து விடுமா என்ற ஐயத்தில் சீனாவும் இருக்கும் நிலையில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துள்ளனர்.

மோசமான ஐந்து ஆண்டுகள்

2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை விசனப்படுத்தியது. 2018-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் (ஒரு நாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு மற்ற நாடு அதிக வரி விதித்தல் அல்லது இறக்குமதிகளைத் தடை செய்தல்) ஆரம்பமானதில் இருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. 2019-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து ஆரம்பித்தது என்ற குற்றச் சாட்டை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போதும் அமெரிக்க சீனாவிடையிலான உறவு பாதிப்பிற்கு உள்ளானது. பின்னர் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை சீனாவின் ஹுவாவே நிறுவனம் மீறியது எனக் குற்றம் சாட்டிய அமெரிக்கா அதன் உரிமையாளரின் மகளை கனடாவில் தடுத்து வைக்கும் வேண்டுகோளை கனடிய அரசிடம் விடுத்திருந்தது. ஹுவாவே நிறுவனத்தின் Meng Wanzhou கனடா தடுத்து வைக்கப்பட்டமைக்கு பதிலடியாக கனடிய ஊடகவியலாளர்க இருவரை சீனா தடுத்து வைத்தது. இதனாலும் அமெரிக்க சீன உறவு பாதிக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது. 2021-10-28இலன்று தைவானின் அதிபர் சாய் இங் வென் தைவானின் அமெரிக்கப் படையினர் தங்கியிருந்து தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குகின்றார்கள் என்பதைப் பகிரங்கப்படுத்திய போது சீனாவின் பதில் சினம் மிருந்ததாக இருந்தது. அப்படிப் பயிற்ச்சி வழங்குவது சீனா படை நடவடிக்கை மூலம் தைவானைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தீவிரப்படுத்துகின்றது என சீனா பதில் வழங்கியது. அந்நியப் படைகளுடனான ஒத்துழைப்பை தைவான் அதிகரிக்கும் போது சீனப் படைகள் தைவானை நோக்கி வரும் வேகமும் அதிகரிக்கும் என சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஊடகமான குளோபல் ரைம்ஸ் கருத்து வெளியிட்டது.

தணிக்க முயலும் பைடன்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் சீன அமெரிக்க முறுகலை தணிக்கும் நகர்வுகளைச் செய்து வருகின்றார். சீன அதிபரும் இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல்கள் சீனப் பொருளாதாரத்தை பாதிக்கும் என உணரிந்து செயற்படுகின்றார். சீனா தொடர்ந்து 7%இற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை பேணாவிடில் சீனாவில் பல சமூக குழப்பங்கள் ஏற்படலாம். இந்த நிலையிலேயே ஜோ பைடன் – ஜீ ஜின்பிங் சந்திப்பு 15/11/2021 நடை பெற்றது. பைடன் – ஜின்பிங் சந்திப்பின் போது தைவானின் தற்போதைய நிலையை சீனா ஒரு-தரப்பாக மாற்ற முயல்வது தைவானில் அமைதியை பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பைடன். அதற்கு ஜின்பிங்கின் பதில் காரம் நிறைந்ததாக இருந்தது. தைவானின் சுதந்திரத்திற்கு உதவி செய்வது நெருப்புடன் விளையாடுவது போலாகும்அப்படி விளையாடுபவர்கள் எரிபடுவார்கள்.” என்றார். ஜீ ஜின்பிங். இச் சந்திப்பிற்கு முன்னரே அமெரிக்க அதிபர் தைவானைப் பாதுகாக்க தேவையான எல்லாவற்றையும் அமெரிக்கா செய்யும் என்றார். தைவானை ஒரு தனிநாடாக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சீனா என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அமெரிக்கா சொல்கின்றது. ஆனால் 1979இல் அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தைவான் பாதுகாப்புச் சட்டம் அமெரிக்கா தைவானைப் பாதுகாக்க உதவி செய்யும் எனச் சொல்கின்றது. தைவானுடன் அமெரிக்காவிற்கு அரசுறவு இல்லைதைவானை ஒரு நாடாக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கா தைவானுக்கு தொடர்ச்சியாக படைக்கலன்களை விற்பனை செய்கின்றது. இவற்றால் தைவான் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை “கேந்திரோபாய குழப்ப நிலை” என விபரிக்கப்படுகின்றது.

தெளிவாக்கப்படுமா கேந்திரோபாய குழப்ப நிலை?

அண்மைக் காலங்களாக தைவான் தொடர்பாக அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அமெரிக்க தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க சீன உறவு பாதிக்கப்படாமல் இருக்க “கேந்திரோபாய குழப்பநிலை” தவிர்க்க முடியாதது. அதை அப்படியே வைத்துக் கொண்டு தைவானை இப்படியே (தனிநாடாக அங்கீகரிக்காமல்) வைத்திருப்பது ஆபத்து அற்றது. அதனால் தான் அதற்கு கேந்திரோபாயக் குழப்ப நிலை என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனா தைவானைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தை தீவிரமாக முன்வைக்கும் போது அதைப் பாதுகாப்போம் என அமெரிக்கா அழுத்திச் சொல்கின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும்.

தைவானின் பாதுகாப்பை முள்ளம் பன்றிக்கு ஒப்பிடுகின்றனர். தன்னை இரையாக்க வரும் மிருகங்களில் தன் முள்ளால் குத்தும் சிறு மிருகமான முள்ளம் பன்றியைப் போல் தைவானாலும் தன் எதிரிக்கு இழப்பை ஏற்படுத்த முடியும். தைவானின் தேசிய பாதுகாப்புச் சபை எப்படி சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது என்பது பற்றிய திட்டங்கள் அடங்கிய பத்திரதை பகிரங்கப்படுத்த முன்னரே அதை ஜப்பானிய ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி தைவான் சீனப்படைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது:

1. போரையும் வெளி படைத்துறை அச்சுறுத்தலையும் தடுத்தல்.

2. தைவான் நீரிணையைக் கடக்கும் போது எதிரிக்கு பாரிய இடர்களை ஏற்படுத்துதல்.

2. தைவான் நீரிணையைக் கடக்கும் எதிரிக்கு அதிக ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தல்,

3. தைவான் நீரிணையை கடப்பதில் எதிரிக்கு உள்ள வலிமையற்ற புள்ளிகளை இனம் காணுதல்,

4. கடல் மூலம் தைவானைக் கைப்பற்ற முடியாது என்ற நிலையை உருவாக்குதல்.

ஆகியவை தைவானின் உபாயங்களாக இருக்கின்றன. ஆனால் தைவான் சீனாவின் மேற்குக் கரையில் உள்ள பொருளாதார நிலைகளை, குறிப்பாக ஷாங்காய், ஹொங் கொங் ஆகிய நகரங்களை நிர்மூலம் செய்யக் கூடிய ஏவுகணைகளை தானே உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. சீன ஆக்கிரமிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது தைவான் தனது ஏவுகணைகளை வீசலாம்.

இடர் மிகுந்த ஈருடகத் தாக்குதல்

உலகப் போர் வரலாற்றில் ஈரூடகத் தாக்குதல் (நீர் ஊடாக சென்று தரையில் தாக்குதல் செய்தல்) எதிரி எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் எதிரிக்கு தெரியாமல் செய்யப்படும் போதே வெற்றியளிக்கும் என்பது விதியாகும். தற்போதைய செய்மதி அவதானிப்புகள் வேவுவிமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி ஈரூடகத் தாக்குதலை இடர் மிக்கதாக மாற்றியுள்ளது. சீனாவிடம் தைவானை தரைமட்டமாக்கக் கூடிய ஏவுகணைகள் தேவைக்கு அதிகமாக உள்ளன. ஆனால் படையினரை பெரும்ளவில் கொண்டு போய் தைவானில் இறக்குவது ஆபத்தானதாகும். அதுவும் எந்த ஒரு போர் முனை அனுபவமும் இல்லாத சீனப் படையினரை ஒரு எதிரி மண்ணில் வான் மூலமோ தரை மூலமோ இறக்குவதில் உள்ள ஆபத்தை சீனப் படைத்துறையினர் நன்கு அறிவர். போரில் அனுபவம் இல்லாதவர்களால் பயிற்ச்சி வழங்கப்பட்ட சீனப் படையினரை போர் அனுபவம் மிக்க படையினரால் பயிற்ச்சி வழங்கப்பட்ட தைவானியப் படையினர் ஒச்ரு மரபு வழிப் போரில் சமாளிக்க முடியும். தைவானியர்கள் கரந்தடிப் போர் முறைமையையும் பாவிக்கலாம்.

2021 நவம்பர் 3-ம் திகதி அமெரிக்கப் படைத்தளபதி ஜெனரல் மார்க் மில்லியின் கருத்துப் படி அடுத்த 24 மாதங்களுக்குள் சீனா தைவான் மீது போர் தொடுக்காது ஆனால் தைவானைக் கைப்பற்றக் கூடிய வலிமையை சீனா பெருக்கிக் கொண்டே இருக்கும்.

Tuesday, 9 November 2021

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியை இஸ்ரேல் அழிக்குமா?

 



அமெரிக்கா உருவாக்கிய GBU-72/B என்னும் 5000இறாத்தல் எடையுள்ள காப்பரண் தகர்ப்பு குண்டுகளை வாங்கும் தன் விருப்பத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை தகர்ப்பதற்கே தாம் அவற்றைப் பெறவிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. GBU-72/B குண்டுகள் கடினமான பாறைகளைத் துளைத்துச் சென்று வெடித்து உள்ளிருக்கும் படைக்கலன்களை அழிக்க வல்லது. வட கொரியா கடினமான கிறனைட் பாறைகளுக்குள் தனது ஏவுகணைச் செலுத்திகளையும் எறிகணைச் செலுத்திகளையும் மறைத்து வைத்துள்ளது அவற்றை அழிப்பதற்கு காப்பரண் அழிக்கும் குண்டுகள் பயன்படுத்தப்படலாம்.


எதிரிகளின் அணுக்குண்டு உற்பத்தியை அழிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய வான் படையினர் 1981இல் ஈராக்கின் ஒசிராக்கில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை தாக்கி அழித்தது. பின்னர் சிரியாவில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை 2007இல் தாக்கி அழித்தது. இந்த இரண்டு நாடுகளும் ஈரானுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அண்மையாக இருக்கின்றன. அத்துடன் அந்த அணு ஆராய்ச்சி நிலையங்கள் ஓரிடத்தில் மட்டும் இருந்தன. ஆனால் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை பல இடங்களிலும் பாறைகளுக்கு கீழ் அறுபது அடி ஆழத்தில் அமைத்துள்ளன. அதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி முயற்ச்சியை இஸ்ரேல் அதில் சம்பத்தப் பட்டுள்ள விஞ்ஞானிகளைக் கொலை செய்வதாலும் அந்த நிலையங்கள் மீது இணையவெளித் தாக்குதல் செய்வதாலும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தியைத் தாமதப் படுத்துகின்றது.


அமெரிக்காவும் ஈரானும்

ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் இப்போது நேரடியான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தனது பலவிதமான படைக்கலன்களை இஸ்ரேலுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதுண்டு. தனது தொழில்நுட்ப இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலுக்கு பல படைக்கலன்களை விற்பனை செய்யாதிருப்பதும் உண்டு. குறிப்பாக அமெரிக்காவின் F-22 Raptor என்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்வதில்லை. F-22 Raptor விமானங்களை வாங்க ஜப்பான் கடும் முயற்ச்சி செய்தும் அது கைகூடவில்லை. அமெரிக்காவின் படைக்கலன்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு இஸ்ரேல் சிறந்த களமாகும். இஸ்ரேல் அவற்றைப் போர்க்களத்தில் பாவிப்பதில் உள்ள அனுபவங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்கும். அதற்கு ஏற்ப அமெரிக்கா தனது அடுத்த உற்பத்தியை மேம்படுத்திக் கொள்ளும். அமெரிக்காவின் GBU-32 என்னும் காப்பரண் தகர்ப்பு குண்டுகளை இஸ்ரேல் காசா நிலப்பரப்பில் பாவித்து அதன் அனுபவங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது. அவற்றை அடிப்படையாக வைத்து அமெரிக்கா GBU-72/B குண்டுகளை உருவாக்கியுள்ளது. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கான யூரேனிய பதப்படுத்தலைத் தடுக்க இஸ்ரேலுக்கு தேவைப்படுவன தொலைதூர குண்டு வீச்சு விமானங்களும் நிலத்திற்கு கீழ் அறுபது அடிவரை துளைத்து அழிக்கக் கூடிய குண்டுகளுமே.


இஸ்ரேலின் வான் வலிமை

இதுவரை காலமும் இஸ்ரேலுக்கு தேவைப்படும் விமானங்கள் வானதிக்கம் செலுத்தக் கூடிய சிறந்த குண்டு வீச்சு விமானங்களாக இருந்தன. அவற்றால் அது தனது அயல் நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களை வென்றது. தற்போது இஸ்ரேலுக்கு ஈரானிடமிருந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அரபு நாடுகளைப் போல் ஈரான் இஸ்ரேலுக்கு அண்மையில் இல்லை. இஸ்ரேலில் இருந்து ஈரான்1789கிமீ தொலைவில் உள்ளது. இஸ்ரேலின் வான்படையின் முதுகெலும்பாக இருப்பவை அதனிடமிருக்கும் 362 அமெரிக்கத் தயாரிப்பு F-16 போர்விமானங்களாகும். அவற்றின் பறப்புத் தூரம் 212கிமீ. அவற்றை வானில் வைத்தே இஸ்ரேலால் எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய முடியும். எதிரியின் வான் பரப்பில் வைத்து மீள் நிரப்பல் மிகவும் ஆபத்தானதாகும். இரசியா ஈரான்க்கு வழங்கிய எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகள் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் நிலைகளைப் பாதுகாக்கின்றன. 2015-ம் ஆண்டு கிரேக்கமும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய INIOXOS-2015 போர் ஒத்திகையின் போது இஸ்ரேலிய வான் படையினர் தமது F-16 போர்விமானங்களை கிரேக்கத்திடமிருந்த இரசியத் தயாரிப்பு எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகளுக்கு எதிராக பயன்படுத்தி உரிய பயிற்ச்சிகளைப் பெற்றுக் கொண்டனர். இருந்தும் இஸ்ரேல் F-16 போர்விமானங்களை இதுவரை களமிறக்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதால் அதில் சிக்கல்கள் உள்ளன என ஊகிக்கலாம். இஸ்ரேலிடம் இருக்கும் F-35 இற்கு மேலதிக எரிபொருள் தாங்கி இணைக்கப்பாட்டு அவற்றின் பறப்புத் தூரம் 2200கிமீ ஆக அதிகரிக்கப்பட்டாலும். அது இஸ்ரேலில் இருந்து பறந்து சென்று ஈரானில் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப முடியுமா என்பது கேள்விக் குறி. ஆனால் ஜூலை 2018இல் ஒரு குவைத் செய்திதாள் இஸ்ரேல் தனது மூன்று F-35 விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி சோதனை செய்தது என்று செய்தி வெளியிட்டது.

வலிமையடையும் ஈரான்

ஈரான் தனது ஏவுகணைகளின் வீச்செல்லையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களை அழிக்க முன்னர் ஈரானின் ஏவுகணைகளையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். அந்தப் பணியை இஸ்ரேல் நிறைவேற்றுவதில் உள்ள கடினம் நாளடவைவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. தற்போது இஸ்ரேலால் ஈரான் வரை நேரடியாகச் சென்று தாக்குதல் செய்யக்கூடிய விமானங்கள் உள்ளன. என்று சில செய்திகள் தெரிவித்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே. ஈரான் வட கொரியா, இரசியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து தனக்கு தேவையான படைத்துறைத் தொழில்நுட்பங்களை வாங்கி தனக்கு தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை காசாவில் செயற்படும் கமாஸ் அமைப்பின் மூலமாக பரீட்சிக்கின்றது.

ஒரு சாத்தியமான வழி

அமெரிக்காவின் B-21 போர்விமானங்கள் 2022-ம் ஆண்டு பாவனைக்கு வரவிருக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் B-21 விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய எதிர்ப்பு முறைமையை உருவாக்க முடியாத அளவிற்கு B-21இன் புலப்படாத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அதன் இன்னும் ஓரு சிறப்பு அம்சம் அது அமெரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் எந்தப் பாகத்திலும் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப வரவல்லது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு B-21 தேவையில்லை ஈரானச் சுற்றிவர உள்ள படைத்தளங்களில் இருந்தோ அல்லது விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்தோ நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தோ அமெரிக்கா ஈரான் குண்டுகளை வீச முடியும். அதன் பின்னர் ஈரானியர்கள் பல தீவிரவாதிகளாக மாறும் போது அது அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு B-21 போர் விமான ங்களை விற்பனை செய்தால் இஸ்ரேலுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இலகுவாக அமையும்.

அமெரிக்கா B-21 ஐ ஈரானுக்கு வழங்குமா?

Sunday, 7 November 2021

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்குமா?

  


இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்க முயல்கின்றது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமெரிக்கப் நாடாளுமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் காதில் இந்தச் செய்தி தேனாகப் பாய்ந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தமிழ் சட்டவாளர்களான மதியாபரணம் சுமந்திரன், கனக ஈஸ்வரன், திருமதி சந்திரகாசன் ஆகியோரை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்ததால் தமிழர்களுக்கு தனிநாடே கிடைத்து விட்டது என்பது போல் துள்ளிக் குதிக்கின்றனர். ஓர் ஊடகம் பீதியில் தென்னிலங்கை எனச் செய்தியும் வெளிவிட்டுள்ளது.

அமெரிக்கா சொல்வதெல்லாம் உண்மையல்ல. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்வதுமுண்டு. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதன் அதிபரின் கீழ் உள்ள ஓர் அமைச்சு. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அது நாடாளமன்றத்தில் இருந்தே பெறவேண்டும். அமெரிக்க நாடாளுமன்றதின் மக்களவைக்கு நிதி தொடர்பாக அதிக அதிகாரமும் மூதவைக்கு வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கணிசமான அதிகாரமும் உள்ளன. வளரும் சீனாவை இலகுவாக எதிர் கொள்வதற்கு அதிக நிதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள படைக்கல உற்பத்தி முதலாளிகளும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி பெற உண்மைக்கு மாறான தகவல்களை பாதுகாப்புத்துறையை வழங்கும் படி தூண்டுவதுண்டு. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தெரியும். அவர்களுக்கும் படைக்கல உற்பத்தியாளர்கள் “கவனித்துக்” கொள்வாரகள்.

பெண்டகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் உள்ள ஒரு பந்தியில்:

The PRC has likely considered a number of countries, including Cambodia, Myanmar, Thailand, Singapore, Indonesia, Pakistan, Sri Lanka, United Arab Emirates, Kenya, Seychelles,

Tanzania, Angola, and Tajikistan, as locations for PLA facilities. எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதில் உள்ள likely considered என்ற சொற்றொடரை வைத்துப் பார்க்கும் போது சீனா நிச்சயம் தனக்கான படைத்துறை வசதிகளை இலங்கையில் அமைக்கும் என்ற கருத்து அதில் இல்லை. அப்படிக் “கருத்திற் கொண்டிருக்க வாய்ப்புள்ளது” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பெண்டகனின் கருத்தை மறுத்த கொழும்பில் உள்ள சீனத் தூதுவரகம் “ஒரு கள்வன் மற்ற எல்லோரையும் கள்வன் என்பான். உலகெங்கும் 750இற்கு மேற்பட்ட படைத்தளங்களை வைத்துள்ளது அமெரிக்கா” என்றது.

இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதற்கான வழங்கற் பாதை மிகவுக் கடினமானதாகவே அமையும். இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதை ஒரு போர் ஆகவே இந்தியா கருதி அதன் மீது இந்தியா கடலில் இருந்து வானில் இருந்து தரையில் இருந்து என பல முனைத் தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் இலங்கையில் உள்ள சீனப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தலாம். இலங்கையில் இருந்து மிகத் தொலைவில் உள்ள இந்தியாவின அருணாசலப் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கான தூரம் 4450கிமீ, கஷ்மீரில் இருந்து 4000கிமீ. இந்தியா அண்மையில் பரிசோதித்த அக்னி-5 ஏவுகணைகள் 5500 முதல் 8000கிமீ வரை பாயக் கூடியது. தமிழ்நாட்டுக் கரையோரத்தில் இருந்து குறுந்தூர ஏவுகணைகள் மூலம் இலங்கையின் எப்பகுதியிலும் தாக்குதல் செய்யலாம். இந்தியா Nuclear Triad நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா, இந்தியா, இரசியா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரையில் இருந்தும், வானில் இருந்தும் கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் அணுக்குண்டுகளை வீசக்கூடியவை என்பதால் அவை Nuclear Triad என அழைக்கபடுகின்றன. அதனால் இந்தியாவால் அம்மூன்று முனைகளில் இருந்தும் இலங்கையில் உள்ள நிலைகள் மீது அணுக்குண்டுகளையும் வீசலாம். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய SU-31 MKI போர்விமானங்கள 122 பிரம்மோஸ்-2 ஏவுகணைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதிமீயொலி (ஹைப்பர்சோனிக்) வேகத்தில் பாயக் கூடிய பிரம்மோஸ்-2 ஏவுகணைகளால் இலங்கையில் உள்ள எந்தப் பெரிய படைத்தளத்தையும் அழிக்க முடியும். இந்தியாவின் காளி ஏவுகணைகள் திட்டம் முழு வெற்றியளித்தால் அவற்றால் எதிரிகளின் அதிமீயொலி வேக ஏவுகணைகளையும் அழிக்க முடியும்.

 

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்காது ஆனால் இந்தியாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இலங்கையை சீனா பாவிக்கும் என்பது உண்மையா எனப்பார்ப்போமானால்:

1. மலாக்கா நீரிணை வழியான நீண்ட கடல் பாதை 3108கடல் மைல்கள் அதனூடாக இலங்கைக்கு வரும் சீனாவின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா அந்தமான் தீவில் வைத்து தாக்கும்.

2. மியன்மார் ஊடாகவும் வங்கக் கடலூடாகவும் சீனா தன் படைகளைக் கொண்டு வரலாம். உலகின் மிக பெரிய விரி குடா. தரைவழியாக படகுகளை மட்டும் நகர்த்தலாம். அப்படி இலங்கை வரும் சீனப் படைகளை அந்தமான் நிக்கோபார் விசாகப்பட்டினம், சென்னை ஆகிய துறைமுகங்களி இருந்து இந்தியா தாக்குதல் நடத்தும்.

3. பாக்கிஸ்த்தான் ஊடாக குவாடர் துறைமுகம். அங்கிருந்து அம்பான்தோட்டை.க்கு சீனா தனது படைகளைக் கொண்டு வரலாம். தற்போது எந்த ஒரு கடற்கலன்களும் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தில் இல்லை. பாக்கிஸ்த்தானின் கடற்படைக் கலன்களை சீனா பாவிக்கலாம். ஆனால் இந்தியாவின் மேற்கு கரையில் உள்ள ஆறுக்கு மேற்பட்ட துறைமுகங்களில் இருந்து இந்தியாவால் தாக்குதல் செய்ய முடியும்.

சீனாவால் பகிரங்கமாக ஒரு படைத்தளத்தை இலங்கையில் வைத்திருக்க முடியாது. கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களில் பெரிய கொள்கலன்களில் இந்தியாவைத் தாக்கக் கூடிய அசையும் ஏவுகணைச் செலுத்திகளை மறைத்து வைத்திருந்து தேவை ஏற்படும் போது இந்தியா மீதோ அல்லது இலங்கையை ஒட்டிய கடற்பரப்பில் பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் மீதோ சீனாவால் தாக்குதல் செய்ய முடியும்.

ஜிபுக்தியில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான படையினரைக் கொண்ட ஒரு படைத்தளத்தை சீனா வைத்துள்ளது. அங்கிருந்து சீனாவின் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியாது. கடற் கொள்ளையரிடமிருந்து தனது சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கவே சீனா அங்கு ஒரு படைத்தளத்தை வைத்துள்ளது. அங்கு சீனா மட்டுமல்ல அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் படைத்தளம் அமைத்துள்ளன.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் சீனா இலங்கையில் படைத்தளம் அமைத்தால் தமது நாடு போர்க்களமாகும் என்பது தெரியும்.

2019 ஒக்டோபரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பல நகர்வுகளைச் செய்கின்றது. அவற்றில் ஒன்றாக பெண்டகனின் அறிக்கையைப் பார்க்க வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...