Tuesday 9 November 2021

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியை இஸ்ரேல் அழிக்குமா?

 



அமெரிக்கா உருவாக்கிய GBU-72/B என்னும் 5000இறாத்தல் எடையுள்ள காப்பரண் தகர்ப்பு குண்டுகளை வாங்கும் தன் விருப்பத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை தகர்ப்பதற்கே தாம் அவற்றைப் பெறவிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. GBU-72/B குண்டுகள் கடினமான பாறைகளைத் துளைத்துச் சென்று வெடித்து உள்ளிருக்கும் படைக்கலன்களை அழிக்க வல்லது. வட கொரியா கடினமான கிறனைட் பாறைகளுக்குள் தனது ஏவுகணைச் செலுத்திகளையும் எறிகணைச் செலுத்திகளையும் மறைத்து வைத்துள்ளது அவற்றை அழிப்பதற்கு காப்பரண் அழிக்கும் குண்டுகள் பயன்படுத்தப்படலாம்.


எதிரிகளின் அணுக்குண்டு உற்பத்தியை அழிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய வான் படையினர் 1981இல் ஈராக்கின் ஒசிராக்கில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை தாக்கி அழித்தது. பின்னர் சிரியாவில் உள்ள அணுக்குண்டு ஆராய்ச்சி நிலையத்தை 2007இல் தாக்கி அழித்தது. இந்த இரண்டு நாடுகளும் ஈரானுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அண்மையாக இருக்கின்றன. அத்துடன் அந்த அணு ஆராய்ச்சி நிலையங்கள் ஓரிடத்தில் மட்டும் இருந்தன. ஆனால் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை பல இடங்களிலும் பாறைகளுக்கு கீழ் அறுபது அடி ஆழத்தில் அமைத்துள்ளன. அதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி முயற்ச்சியை இஸ்ரேல் அதில் சம்பத்தப் பட்டுள்ள விஞ்ஞானிகளைக் கொலை செய்வதாலும் அந்த நிலையங்கள் மீது இணையவெளித் தாக்குதல் செய்வதாலும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தியைத் தாமதப் படுத்துகின்றது.


அமெரிக்காவும் ஈரானும்

ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் இப்போது நேரடியான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தனது பலவிதமான படைக்கலன்களை இஸ்ரேலுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதுண்டு. தனது தொழில்நுட்ப இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலுக்கு பல படைக்கலன்களை விற்பனை செய்யாதிருப்பதும் உண்டு. குறிப்பாக அமெரிக்காவின் F-22 Raptor என்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்வதில்லை. F-22 Raptor விமானங்களை வாங்க ஜப்பான் கடும் முயற்ச்சி செய்தும் அது கைகூடவில்லை. அமெரிக்காவின் படைக்கலன்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு இஸ்ரேல் சிறந்த களமாகும். இஸ்ரேல் அவற்றைப் போர்க்களத்தில் பாவிப்பதில் உள்ள அனுபவங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்கும். அதற்கு ஏற்ப அமெரிக்கா தனது அடுத்த உற்பத்தியை மேம்படுத்திக் கொள்ளும். அமெரிக்காவின் GBU-32 என்னும் காப்பரண் தகர்ப்பு குண்டுகளை இஸ்ரேல் காசா நிலப்பரப்பில் பாவித்து அதன் அனுபவங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது. அவற்றை அடிப்படையாக வைத்து அமெரிக்கா GBU-72/B குண்டுகளை உருவாக்கியுள்ளது. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கான யூரேனிய பதப்படுத்தலைத் தடுக்க இஸ்ரேலுக்கு தேவைப்படுவன தொலைதூர குண்டு வீச்சு விமானங்களும் நிலத்திற்கு கீழ் அறுபது அடிவரை துளைத்து அழிக்கக் கூடிய குண்டுகளுமே.


இஸ்ரேலின் வான் வலிமை

இதுவரை காலமும் இஸ்ரேலுக்கு தேவைப்படும் விமானங்கள் வானதிக்கம் செலுத்தக் கூடிய சிறந்த குண்டு வீச்சு விமானங்களாக இருந்தன. அவற்றால் அது தனது அயல் நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களை வென்றது. தற்போது இஸ்ரேலுக்கு ஈரானிடமிருந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அரபு நாடுகளைப் போல் ஈரான் இஸ்ரேலுக்கு அண்மையில் இல்லை. இஸ்ரேலில் இருந்து ஈரான்1789கிமீ தொலைவில் உள்ளது. இஸ்ரேலின் வான்படையின் முதுகெலும்பாக இருப்பவை அதனிடமிருக்கும் 362 அமெரிக்கத் தயாரிப்பு F-16 போர்விமானங்களாகும். அவற்றின் பறப்புத் தூரம் 212கிமீ. அவற்றை வானில் வைத்தே இஸ்ரேலால் எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய முடியும். எதிரியின் வான் பரப்பில் வைத்து மீள் நிரப்பல் மிகவும் ஆபத்தானதாகும். இரசியா ஈரான்க்கு வழங்கிய எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகள் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் நிலைகளைப் பாதுகாக்கின்றன. 2015-ம் ஆண்டு கிரேக்கமும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய INIOXOS-2015 போர் ஒத்திகையின் போது இஸ்ரேலிய வான் படையினர் தமது F-16 போர்விமானங்களை கிரேக்கத்திடமிருந்த இரசியத் தயாரிப்பு எஸ்-300 ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு முறைமைகளுக்கு எதிராக பயன்படுத்தி உரிய பயிற்ச்சிகளைப் பெற்றுக் கொண்டனர். இருந்தும் இஸ்ரேல் F-16 போர்விமானங்களை இதுவரை களமிறக்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதால் அதில் சிக்கல்கள் உள்ளன என ஊகிக்கலாம். இஸ்ரேலிடம் இருக்கும் F-35 இற்கு மேலதிக எரிபொருள் தாங்கி இணைக்கப்பாட்டு அவற்றின் பறப்புத் தூரம் 2200கிமீ ஆக அதிகரிக்கப்பட்டாலும். அது இஸ்ரேலில் இருந்து பறந்து சென்று ஈரானில் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப முடியுமா என்பது கேள்விக் குறி. ஆனால் ஜூலை 2018இல் ஒரு குவைத் செய்திதாள் இஸ்ரேல் தனது மூன்று F-35 விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி சோதனை செய்தது என்று செய்தி வெளியிட்டது.

வலிமையடையும் ஈரான்

ஈரான் தனது ஏவுகணைகளின் வீச்செல்லையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களை அழிக்க முன்னர் ஈரானின் ஏவுகணைகளையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். அந்தப் பணியை இஸ்ரேல் நிறைவேற்றுவதில் உள்ள கடினம் நாளடவைவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. தற்போது இஸ்ரேலால் ஈரான் வரை நேரடியாகச் சென்று தாக்குதல் செய்யக்கூடிய விமானங்கள் உள்ளன. என்று சில செய்திகள் தெரிவித்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே. ஈரான் வட கொரியா, இரசியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து தனக்கு தேவையான படைத்துறைத் தொழில்நுட்பங்களை வாங்கி தனக்கு தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை காசாவில் செயற்படும் கமாஸ் அமைப்பின் மூலமாக பரீட்சிக்கின்றது.

ஒரு சாத்தியமான வழி

அமெரிக்காவின் B-21 போர்விமானங்கள் 2022-ம் ஆண்டு பாவனைக்கு வரவிருக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் B-21 விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய எதிர்ப்பு முறைமையை உருவாக்க முடியாத அளவிற்கு B-21இன் புலப்படாத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அதன் இன்னும் ஓரு சிறப்பு அம்சம் அது அமெரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் எந்தப் பாகத்திலும் தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப வரவல்லது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு B-21 தேவையில்லை ஈரானச் சுற்றிவர உள்ள படைத்தளங்களில் இருந்தோ அல்லது விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்தோ நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தோ அமெரிக்கா ஈரான் குண்டுகளை வீச முடியும். அதன் பின்னர் ஈரானியர்கள் பல தீவிரவாதிகளாக மாறும் போது அது அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு B-21 போர் விமான ங்களை விற்பனை செய்தால் இஸ்ரேலுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இலகுவாக அமையும்.

அமெரிக்கா B-21 ஐ ஈரானுக்கு வழங்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...