Saturday, 18 September 2021

AUKUS: ஆங்கில முக்கூட்டணிக்கு சீனா அஞ்சுமா?



 ஒஸ்ரேலியா(A), பிரித்தானியா(UK),  அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து இந்த மூன்று ஆங்கிலம் பேசும் நாடுகளின் கூட்டணியை AUKUS என அழைக்கின்றனர். மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2021 செப்டம்பர் 15-ம் திகதி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கலந்துரையாடி இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த மூன்று நாடுகளின் கூட்டணி இணையவெளிப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology), கடல் நீரடிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதாகவும் அந்தக் கலந்துரையாடலில் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த மூன்று நாடுகளுடன் கனடாவும் நியூசிலாந்தும் இணைந்து ஐந்து கண்கள் (Five Eyes) என்னும் உளவுக் கூட்டமைப்பை அமைத்துள்ளன. 


"ஜெய்ஹிந்த்" கும்பல்களின் உளறல்

AUKUS ஒத்துழைப்பு பற்றிய செய்தி வந்தவுடன் "ஜெய்ஹிந்த்" கும்பல்கள் தங்கள் youtube Channelsகளில் "சீனா அச்சம்", "கலக்கத்தில் சீனா" என்ற தலைப்பில் உளற ஆரம்பித்துவிட்டன. AUKUS சீனாவிற்கு எதிரான கூட்டணியா என்ற கேள்விக்கு அதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கவில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும் கடற்பரப்பில் மூன்று நாடுகளின் படைத்துறையை ஒருங்கிணைப்பதே தமது நோக்கம் என்றனர். ஒஸ்ரேலியாவை சீன அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது இந்த AUKUS ஒத்துழைப்பின் முக்கிய நோக்கம் என்று சொல்லலாம். ஒஸ்ரேலியாவிற்காக இந்த மூன்று நாடுகளும் உருவாக்கவிருக்கும் அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் தென் சீனக் கடல்வரையும் பயணிக்க வல்லன. டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலும் பார்க்க அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் வேகமாகப் பயணிக்க வல்லன, நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்க வல்லன, புலப்படுவதற்கு கடினமானவை. 

சீனாவின் எதிர்வினை

AUKUS உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் மூன்று நாடுகளையும் தங்கள் பனிப்போர்க்காலத்து கருத்தியல் தப்பெண்ணங்களை கைவிட வேண்டும் என்றார். மேலும் அவர் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவற்றிற்கிடையிலான நல்லெண்ணங்களை வளர்க்க வேண்டுமே தவிர மூன்றாம் நாடு ஒன்றை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றார். "கலக்கத்தில் சீனா" என்பதிலும் பார்க்க கரிசனை கொண்ட சீனா என்பதே பொருத்தமாக இருக்கும் என்பதை சீனத் தூதுவரின் கருத்தில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.

UNDERSEA FIBRE OPTIC CABLES கடலடி ஒளியிழை வடம்,

கடலடியில் வைக்கப்பட்டுள்ள ஒளியிழை வடம் மேற்கு நாடுகளின் குடிசார் மற்றும் படைத்துறைத் தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றை துண்டிக்காமலும், ஒற்றாடல் செய்யாமலும் இருக்க அவற்றுக்கான பாதுகாப்பு அவசியமாகும். அவற்றைப் பாதுகாப்பதற்கு சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுகின்றது. அதற்கான ஒத்துழைப்பு AUKUS இன் நோக்கங்களில் ஒன்றாகும் .  துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology) மூலம் ஒற்றாடல் தடுக்கப்படலாம். பல வழிகளில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் படைத்துறை ஒத்துழைப்பு செய்கின்றபோதிலும் நீர்மூழ்கித்துறையில் அவற்றிற்கிடையிலான ஒத்துழைப்பு மற்றவற்றிலும் மேம்பட்டதாக இருக்கின்றது. அமெரிக்கா ஒஸ்ரேலியாவிற்கு அதன் Hobart வகை நாசகாரிக் கப்பல்களில் பாவிக்கக் கூடிய Tomahawk தொலைதூர ஏவுகணைகளை விற்பனை செய்யவிருக்கின்றது.  

போட்டிக் களமாகும் ஆசிய-பசுபிக் பிராந்தியம்

தனது Queen Elizabeth விமானம் தாங்கிக் கப்பலை தென் சீனக் கடலூடாக ஜப்பானுக்கு அனுப்பி ஜப்பானுடன் ஒரு போர் ஒத்திகையை பிரித்தானியக் கடற்படை செய்தது. ஆசிய-பசுபிக் என்னும் பெரும் கடற்பரப்பில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் AUKUS கூட்டணி உருவாகியுள்ளது. அதன் முதற்பணியாக அணுவலுவில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதாகும். சீனாவில் இருந்து 7448கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒஸ்ரேலியாவில் 1.2மில்லியன் சீனர்கள் வாழ்கின்றார்கள். சீனா கடந்த சில ஆண்டுகளாக ஒஸ்ரேலியாவை தன் பிடிக்குள் கொண்டு வர பல வழிகளில் முயல்கின்றது. ஒஸ்ரேலியா சீனாவிற்கு 150மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியை சீனாவிற்கு 2020இல் செய்திருந்தது. ஒஸ்ரேலியா ஆகக் கூடிய ஏற்றுமதியை அதாவது மொத்த ஏற்றுமதியில் 39%ஐ சீனாவிற்கே செய்கின்றது.  சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும், சீன முதலீடும் ஒஸ்ரேலியாவில் கற்கும் சீன மாணவர்களும் ஒஸ்ரேலியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்தன. கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து உருவாகியதா என்பது தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா பகிரங்கமாக அறிவித்தமை சீன ஒஸ்ரேலிய உறவை மோசமாக்கியது. அதைத் தொடர்ந்து சீனா ஒஸ்ரேலியா மீது பல பொருளாதார மிரட்டல்களை ஒஸ்ரேலியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மீதான தடை என்னும் பெயரில் விடுத்தது. 

அவசரப்படும் ஒஸ்ரேலியா

தற்போது உள்ள அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கையைப் பார்ப்போமானால் அமெரிக்கா-68, இரசியா-29, சீனா-12, பிரித்தானியா-11, பிரான்ஸ்-8, இந்தியா-1. பிரேசில் தனக்கென அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் வழியில் துருக்கியும் செல்லலாம்.  சீனாவின் கடற்படை வலு கடந்த பத்தாண்டுகளாக மிகையான வளர்ச்சிப் பாதையில் செல்வதால் ஒஸ்ரேலியாவிற்கு அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. பிரான்ஸ் ஒஸ்ரேலியாவிற்கு உருவாக்க ஒத்துக் கொண்ட டீசல் வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் காலதாமதம் ஆவதுடன் காலாவதியும் ஆகிவிட்டது. 

நியூசிலாந்து ஏன் இல்லை?

ஆசிய பசுபிக் பிரந்திய ஒத்துழைப்பில் பசுபிக் பிராந்தியத்தின் இன்னொரு முக்கிய நாடாகிய நியூசிலாந்து ஏன் இல்லை என்ற கேள்வியும் எழுகின்றது. நியூசிலாந்து மக்கள் அணுக்குண்டுகளை எதிர்ப்பவர்கள். நியூசிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் அணுக்குண்டுகள் தாங்கிய அமெரிக்க கப்பல்களும் விமானங்களும் நியூசிலாந்திற்கு வரக்கூடாது என நியூசிலாந்து 1985இல் தடை விதித்தபின்ன முடிவிற்கு வந்தது. நியூசிலாந்து விலகியிருப்பதற்கு அல்லது தவிக்கப்பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம். இன்னும் ஓர் ஆங்கிலக் குடும்ப நாடாகிய கனடா அதன் பூகோள இருப்பிடம் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

அமெரிக்க அணுவலு பாதுகாப்பானதா?

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு 93-97% Highly Enriched Uranium மூலப்பொருள்களைப் பாவிக்கின்றன. ஆனால் சீனாவும் பிரான்ஸ்சும் 20% Low Enriched Uraniumஐப் பாவிக்கின்றன. Highly Enriched Uranium பாவனையின் போது பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகின்றது. ஒஸ்ரேலியா அணுக்குண்டுகளுக்கு எதிரான கொள்கையுடைய நாடு. ஒஸ்ரேலியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அதன் இயக்க வலுவை மட்டும் அணுவலுவில் இருந்து பெற்றுக்கொள்ளும் என நம்பலாம். 

இலாபம்தான் அமெரிக்காவின் இலக்கு

சீனாவை சமாளிக்க அமெரிக்கா தனது படைகளை ஒஸ்ரேலியாவில் குவிப்பதிலும் பார்க்க ஒஸ்ரேலியாவிற்கு தனது படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது அமெரிக்காவிற்கு இலாபகரமான ஒன்றாகும். சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது கடற்படை வலிமையை ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை விஞ்சும் வகையில் விரிவு படுத்தியும் புதுமைப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளால் சீனாவைத் தனித்து சமாளிக்க முடியாது என்ற நிலையில் சீனாவிற்கு எதிராக பல கூட்டணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

1. அமெரிக்க இந்தியக் கூட்டணி

சீனாவின் படைவலு பெருகி வருவதால் அச்சம் கொண்ட இந்தியா அமெரிக்காவுடன் LEMOA என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம்.  அதே போல் இந்தியாவும் அமெரிக்காவின் படைத்தளஙகளை தமக்கு தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். 

குவாட்(QUAD) ஒன்று கூடாத கூட்டணி

சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நாடுகளான ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதற்கான உரையாடல் ஒன்று முன்னாள் ஜப்பானிய அதிபர் சின்சே அபேயால் தொடக்கி வைக்கப்பட்டது.  முதலில் இந்தியா அதில் இணைந்தால் சீனாவை அது சினம் கொள்ளவைக்கும் என தயங்கியது. ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் செய்யும் வர்த்தகம் பாதிக்கப்படும் என கரிசனை கொண்டு தயங்கியது. சீனா இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து செய்யும் அத்து மீறல்களாலும் ஒஸ்ரேலியாவில் சீனாவின் மறைமுகத் தலையீடுகளாலும் இரு நாடுகளும் அந்த உரையாடலில் பங்கேற்றன. இதை ஒரு படைஅதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செய்யும் மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது. ஆனாலும் இது ஒரு பாதுகாப்பு உரையாடல் மட்டுமாக இருக்கின்றது. ஒரு படைத்துறைக் கூட்டணியாக உருவாகவில்லை. 

ஒன்று போனால் ஒன்று வரும்

ஒஸ்ரேலியாவிற்கு தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் உருவாக்குவதாக 2016இல் இரு நாடுகளும் 37 பில்லியன் டொலர் பெறுமடியான ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த வருமான வாய்ப்பு தமக்கு கிடைக்காததால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏமாற்றமடைந்திருந்தன. பிரான்ஸால் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை மட்டும் உருவாக்க முடியும். தற்போது அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை வைத்திருக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒஸ்ரேலியாவிற்கு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஒத்துக் கொண்டமையினால் ஒஸ்ரேலியாவிற்கு பிரான்ஸ் உருவாக்க இருந்த 12 டீசல் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டுளது. பிரான்ஸ் தனக்கு துரோகமிழைக்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி தன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்ஸின் முதுகில் குத்திவிட்டார்கள் என்றார். பிரான்ஸும் தென் சீனக் கடலுக்கு தன் கடற்படையை அனுப்பியிருந்தது. தனது ஆட்சேபனையாக அமெரிக்காவில் கடற்படையுடன் நடக்கவிருந்த ஒரு நிகழ்வையும் பிரான்ஸ் இரத்துச் செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஒஸ்ரேலியாவிற்குமான தனது தூதுவர்களை உரையாடலுக்காக அழைத்துள்ளது. இது இந்தளவில் முடியுமா அல்லது பிரான்ஸின் சினம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான நட்பைப் பாதிக்குமா, நேட்டோ ஒத்துழைப்பை பாதிக்குமா, ஐரோப்பிய ஒன்றியமும் பிரான்ஸைப் பின்பற்றுமா போன்ற கேள்விகளுகான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சீனா பிரான்ஸிற்கு தன் நட்புக்கரத்தை நீட்டலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒஸ்ரேலியாவிற்கு செல்லவிருந்த கொவிட்-19இற்கான தடுப்பூசிகளை இத்தாலியும் பிரான்சும் தடுத்திருந்தன. அது ஒஸ்ரேலியாவை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. 

  • பசுபிக் பிராந்தியத்தில் படைத்தளம் உள்ள பிரான்ஸை ஒதுக்கிவிட்டு அங்கு படைத்தளம் இல்லாத பிரித்தானியாவைக் கொண்டு வருவதால் சீனா கலக்கமடையாது. 

சீனாவை எதிர்க்க உருவாக்கப்படும் பல கூட்டணிகள் சீனாவின் வலிமை தொடர்பாக அதன் போட்டியாளர்கள் கரிசன கொண்டிருப்பதைக் கட்டியம் கூறுகின்றது. புதிய AUKUS கூட்டணியால் சீனாவை அடக்க முடியாது. அது  உலக ஆதிக்கத்திற்கான தனது பாதையில் அமைதியான எழுச்சி என்னும் போர்வையில் தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவிலும் பார்க்க மூன்று மடங்கு பாதுகாப்பிற்கு செலவு செய்யும் சீனாவால் தனது பாதுகாப்புச் செலவை மேலும் அதிகரிக்க முடியும். 



Friday, 17 September 2021

ஆளில்லா போர் விமானங்களின் தோற்றமும் பயன்பாடும்

  


முதலாவது ஆளில்லா விமானம் 1783இல் உருவாக்கப்பட்டது. 1898இல் முதலாவது வானலை மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டது. அதைப் பறக்கவிட்டபோது நம்பமுடியாத பார்வையாளர்களில் சிலர் அது பயிற்றுவிக்கப்பட்ட குரங்குகளால் இயக்கப்படுவதாக நம்பினர். முதலாம் உலகப் போரில் 1915-ம் ஆண்டளவில் பிரித்தானியர்கள் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் எதிரியின் படைநிலைகளைப் படம் பிடித்தனர். 1935இல் நவீன ஆளில்லா விமானம் DeHaviland DH82B Queen Bee என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1937இல் அமெரிக்க கடற்படையினர் தமது ஆளில்லா விமானத்தை உருவாக்கினர். 1973இல் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை உருவாக்கி அதை 1982இல் நடந்த போரில் சிரிய வான்படைக்கு எதிராக வெற்றீகரமாகப் பயன்படுத்தியது. அதனால் திருப்தியடந்த அமெரிக்கா தனது ஆளில்லா விமான உற்பத்தியை அதிகரித்தது. பின்னர் அமெரிக்கா 1996இல் முழுமையான படைக்கலன் தாங்கிய தாக்குதல் ஆளில்லா விமானத்தை உருவாக்கியது. 2010இல் திறன்பேசிகள் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டன. 2013இல் அமெரிக்காவில் பொதிகளை விநியோக்கிக்கும் நிறுவனங்கள் ஆளில்லா விமானங்களை பாவிக்கத் தொடங்கின.

புலப்படா ஆளில்லா விமானங்கள்

அமெரிக்கா ரடார்களுக்கு புலப்படாத (Stealth) ஆளில்லா விமானங்களை உருவாக்கியது. லொக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் அந்த விமானத்திற்கு RQ-170 Sentinel எனப் பெயரிடப்பட்டது. அவற்றில் ஒன்று ஈரானை வேவுபார்க்கச் சென்றபோது அங்கு பழுதடைந்து தரையிறங்கியது. அதை சீனர்கள் இணையவெளியூடாக ஊடுருவி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தரையிறக்கினர் எனச் சொல்லப்பட்டது. ரடார்களுக்கு புலப்படாத ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தை அறிய அப்படிச் செய்யப்பட்டது. என்பதை ஈரானும் சீனாவும் மறுத்திருந்தன.

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்

2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா ஆளில்லா போர்விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல்கள் பல நடத்தின. பராக் ஒபாமாவிற்கு இச்செயல் மிகவும் பிடித்திருந்தது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ உலகெங்கும் பல இரகசிய ஆளில்லா போர்விமானத் தளங்களை வைத்திருக்கின்றது. அவற்றில் இருந்து ஆபிரிக்காவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் பல தாக்குதல்கள் செய்தன. அவற்றால் பல அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அல் கெய்தா, ஐ எஸ் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பிரித்தானியாவின் படைத்தளங்களில் இருந்து சென்ற பல ஆளில்லாப் போர் விமானங்கள் 3500மைல்கள் பறந்து சென்று ஆப்கானிஸ்த்தானில் தாக்குதல் நடத்தின.

ஈரான்

2014இல் ஈரான் தற்கொலை ஆளில்லா விமானங்களை உருவாக்கியது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் கடல், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகள் மீது மோதி அவை வெடிக்கச் செய்யப்படும். இவற்றின் பறப்புத்தூரம் 200கிலோ மீட்டர்களாகும். அவை பறக்க வல்ல ஆகக் கூடிய உயரம் 4500 மீட்டர். Shaher-129 என்னும் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய ஆளில்லா விமானத்தை ஈரான் 2005-ம் ஆண்டு உருவாக்கியது. அமெரிக்காவின் MQ-1 Predator ஆளில்லா விமானங்களை ஒத்தவையான Shaher-129ஆல் கண்காணிப்பையும் தாக்குதலையும் செய்யலாம். 2021-ம் ஆண்டு ஈரான் உருவாக்கிய காசா என்னும் ஆளில்லாப் விமானம் 13குண்டுகளை ஒரேயடியாக தாங்கிச் செல்லக் கூடியது.

உலக கண்காணிப்பு

உலகக்கடற்பரப்பு முழுவற்றையும் கண்காணிக்கக்கூடிய வகையில் MQ4C Triton என்னும் ஆளில்லா விமானங்களை 2014இல் உருவாக்கியது. தொடர்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய MQ4C Triton விமானங்களில் உயர்தர உணரிகளும் ஒளிப்பதிவுக் கருவிகளும் பொருத்தப்பட்டன. மற்ற அமெரிக்கப் போர் மற்றும் வேவு விமானங்களுடன் தொடர்பாடல்களை இவை செய்ய வல்லன. இதனால் உலகெங்கும் உள்ள அமெரிக்க கடற்படைக்கலன்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறியக் கூடிய வல்லமையை அமெரிக்கப் படையினர் பெற்றனர்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பன்னாட்டு நிறுவனத்தின் மாநாட்டில் 2021 செப்டம்பர் 12-ம் திகது உரையாற்றிய இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெனி காண்ட்ஸ் ஈரானிய நிபுணர்கள் ஈராக், யேமன், லெபனான் ஆகிய நாடுகளில் செயற்படும் போராளிகளுக்கு ஆளில்லா விமானப் பயிற்ச்சி வழங்குவதாக குற்றம் சாட்டினர். ஈரானின் கஷான் படைத்தளத்தில் இந்தப் பயிற்ச்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

2021 மே மாதம் காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆளில்லா விமானத்தைப் பாவித்தனர். அதே வேளை சிரியாவில் இருந்தும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

2021 ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஓமானின் கடற்கரை ஓரத்தில் Mercer Street என்னும் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் செய்யப்பட்டது. கப்பலில் பணிபுரிந்த இருவர் கொல்லப்பட்ட அத் தாக்குதல் ஈரானின் வேலை என இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.

யேமனில் செயற்படும் ஹூதி போராளிகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் விமான நிலையங்கள் போன்றவற்றில் பல தாக்குதல்களை நடத்தினர்.  2005இல் இருந்து பல தீவிரவாத அமைப்புக்களும் ஆளில்லா விமானங்களைப் பாவிக்கத் தொடங்கின. அதில் முன்னோடியாக லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு திகழ்ந்தது. ஆனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பால் காத்திரமான இழப்புக்களைச் செய்ய முடியவில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                                         பல்-திரளப்போர் முறை (multi-domain warfare) 

தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.

தலிப்பன்களை தலையெடுக்க வைத்த ஆளில்லா விமானங்கள்

தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றுவதற்கு Piram Qul என்ற தஜிக் போர்ப்பிரபுவைக் கொன்றே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. அவரை தற்கொலைத் தாக்குதலாளிகள் மூலமாக கொல்லும் போது அவருடன் பல பொதுமக்களையும் கொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அவரை வேறுவிதமாக கொல்ல தலிபான்கள் முடிவு செய்தனர். தலிபான்கள் தங்கள் ஆளில்லாப் போர் விமானப் படையணியை 2019இல் பல இயந்திரவியல் படித்த இளையோரைக் கொண்டு உருவாக்கியிருந்தனர். அவர்கள் தமக்குத் தேவையான ஆளில்லா விமானங்களை சீனாவின் விவசாயப் பண்ணைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானங்களை வாங்கி அதை பாக்கிஸ்த்தானுடாக ஆப்கானிஸ்த்தானுக்கு கடத்தினர். கிருமி நாசினி தெளிக்கும் பகுதியை அவர்கள் குண்டு வீசும் பகுதியாக மாற்றினர். அவர்கள் தலிபான்களின் உளவுப் பிரிவின் மூலம் போர்ப்பிரபு Piram Qul இருக்கும் இடத்தை அறிந்து கொண்டிருந்தனர். அவர் 2021 மே மாதம் 2-ம் திகதி கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் வானத்தைப் போல நீல நிறம் பூசிய ஆளில்லா விமானத்தை அங்கு அனுப்பி அதிலிருந்து வீசப்பட்ட குண்டின் மூலம் அவரைக் கொன்றனர். அதைத் தொடர்ந்து ஆப்கான் அரச படையினரின் பல சோதனைச் சாவடிகளை தலிபான்கள் தமது ஆளில்லா விமானங்கள் மூலம் அழித்தனர். அதன் பின்னர் பல பிரதேசங்கள் தலிபான்கள் வசம் வீழ்ந்தன. யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்கப் படைகள் விலகிக் கொண்டிருக்கையில் ஆப்கானிஸ்த்தான் தலிபானகளின் வசமானது.

ஆர்மீனிய அஜர்பைஜான் போர்

Bayraktar TB2 என்ற துருக்கி உருவாக்கிய ஆளில்லாப்போர் விமானங்கள் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் 2020இல் நடந்த போரின் திசையை மாற்றியது. இரசியப் படையினரின் வழிக்காட்டலுடனும் உதவியுடனும் ஆர்மீனியர்கள் போரிட்டனர். உலகப் புகழ் பெற்ற இரசிய போர்த்தாங்கிகள், கவச வாகனங்கள் மட்டுமல்ல அவர்களின் வான் படைத்தளங்கள், வான் பாதுகாப்பு முறைமைகள், ஆட்டிலறி நிலைகள் போன்ற பலவற்றை துருக்கியின் Bayraktar TB2 ஆளில்லாப் போர்விமானங்கள் அழித்தன. அந்தப் போரில் அஜர்பையான் வானாதிக்கம் செய்ய Bayraktar TB2 உதவின.

இக்கட்டுரையின் தொடர்ச்சியாக சீனா, இரசியா, இந்தியா ஆகியவற்றின் ஆளில்லாப் போர்விமானங்கள் பற்றியும் ஆளில்லா விமானங்களில் செயற்கை விவேகம் போன்ற புதிய தொழில் நுட்பம் உள்ளடக்கப் பட்டவை பற்றியும் தகவல்கள் உள்ளடக்கப்படும்.

Saturday, 11 September 2021

இறந்தும் அமெரிக்காவைத் தோற்கடித்த பின் லாடன்


 9/11 நியூ யோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவையும் உலகையும் அதிர வைத்தது. பின் லாடனின் அல் கெய்தா அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்கா சென்று கடன் அட்டை மூலம் விமான ஓட்டுனர் பயிற்ச்சி பெற்று மூன்று விமானங்களைக் கடத்தி இரண்டால் இரட்டைக் கோபுர்த்தைதாக்கினர். அமெரிக்கப் பாதுகப்புத் துறை இருக்கும் பெண்டகனைத் தாக்கச் சென்ற மூன்றாவது விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு தீவிரவாதிகள் விமானங்களை கடத்துகின்றார்கள் என்ற சேதியை அவரது மனைவி அனுப்பினார். அவர் மற்றப் பயணிகளுடன் சேர்ந்து விமானியைத் தாக்க விமானம் இடையில் விழுந்து நொருங்கியது. 

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு வழி செய்த அல் கெய்தா தலைவர் பின் லாடனைப் பிடிக்க அமெரிக்கா மூன்று ரில்லியன் டொலர்களைச் செலவு செய்தது. 

பின்லாடனை எப்படிக் கண்டு பிடித்தனர் என்ற விபரம் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்(Click):

பின் லாடன் இருப்பிடம் அறிந்த விபரம்  : https://www.veltharma.com/2011/05/blog-post_04.html

அமெரிக்காவை அழித்த பின்னர்தான் இஸ்லாமிய அரசை நிறுவ முடியும் என்ற கொள்கையுடைய பின் லாடன் செய்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புக் கெடுபிடிகளால் அமெரிக்காவின் வருமானம் குறைந்தது. அமெரிக்காவின் கடன் பளு அதிகரித்தது. இரண்டு தடவை அமெரிக்கா கடன் நெருக்கடியில் சிக்கியது. 

அமெரிக்கா சந்தித்த நிதி நெருக்கடி பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்: http://www.veltharma.com/2013/01/blog-post_3.html

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்கா எட்டு ரில்லியன் டொலர்களுக்கு மேல் செலவழித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு அதுவே காரணமாக அமைந்தது.

பொருளாதாரத் தாக்குதல்

ஆப்கானிஸ்த்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து போராடிய பின்  லாடன் அறிந்து கொண்ட உண்மை எதிரியைத் தோற்கடிக்க அவன் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் என்பதே. ஆப்கானை ஆக்கிரமித்ததால் அதிகரித்த பாதுகாப்புச் செலவு சோவியத்தில் நிதி நெருக்கடியை உருவாக்கி சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க நிதிச் சந்தையின் இருதயமாக இருந்த இரட்டைக் கோபுரத்தை பின் லாடன் தெரிவு செய்தது ஒரு பொருளாதாரத் தாக்குதலுக்குத்தான். தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு 16% இழப்பு ஏற்பட்டதை பின் லாடன் தன் அமைப்பினருக்கு சுட்டிக்காட்டினார். அந்த இழப்பின் பெறுமதி 640பில்லியன் டொலர்கள் என்றும் அதைத் தொடர்ந்து வந்த இழ்ப்புக்களையும் கூட்டினால் அமெரிக்காவின் மொத்த இழப்பு ஒரு ரில்லியன் டொலர் என்றார் பின் லாடன். அல் கெய்தா செலவழிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என தன் அமைப்பினருக்கு பின் லாடன் போதித்தார். இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியின் எதிரொலியாக உலகெங்கும் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. அதனால் உலகெங்கும் ஏற்பட்ட இழப்பு அளவிடப்படவில்லை. தாக்குதலின் பின்னர் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்தன.

பலஸ்த்தீனியர்களின் விடுதலை

1998-ம் ஆண்டு அல் கெய்தா அமைப்பினர் கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தி 224பேரைக் கொன்று 4,000பேரைக் கொன்றனர். அமெரிக்காவை அழித்த பின்னர்தான் பல்ஸ்த்தீனியர்களின் விடுதலை பெற முடியும் என்பதிலிலும் பின் லாடன் உறுதியாக இருந்தார். இந்த இரண்டு தூதுவரகங்களிலும் தாக்குதல் நடத்திய பின்னர் பில் லாடன் விடுத்த அறிக்கையில் பலஸ்த்தீனியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நிலையை உறுதி செய்யும் வரை அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

Investopedia என்னும் அமெரிக்க ஊடகத்தில்:

When America was attacked by terrorists on September 11, 2001, the entire business community felt the blow. Stock markets immediately nosedived, and almost every sector of the economy was damaged economically. The U.S. economy was already suffering through a moderate recession following the dotcom bubble, and the terrorist attacks added further injury to the struggling business community.வ்

எரிபொருள் என்னும் நலிவுப் புள்ளி (weakest point)

எரிபொருள் விலயேற்றம் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என தன் அமைப்பினருக்கு போதித்த பின் லாடன் தனது தாய் நாடாகிய சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் உற்பத்தி நிலையங்களைத் தாக்கும் படி உத்தரவிட்டார். அதற்காக அரபிய குடாநாட்டிற்கான அல் கெய்தா என்னும் ஒரு கிளை அமைப்பையும் உருவாக்கி பல எண்ணிக்கையிலான சிறு தாக்குதல்களை செய்ய தன் ஆதரவாளர்களைப் பணித்தார். அவரது அந்த உபாயத்தை Strategy of Thousand Cuts என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் விபரித்தனர். 

ச்

அமெரிக்காவிற்கு அல் கெய்தாவால் ஏற்பட்ட அச்சுறுத்தலாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவாலும் அமெரிக்காவில் இனக்குரோதமும் வலது சாரிக் கொள்கையும் வளர்ச்சியடைந்தது. அல் கெய்தாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிக அளவு அமெரிக்கர்கள் வலதுசாரிகளால் கொல்லப்பட்டனர். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அது மேலும் அதிகரித்தது. அதன் விளைவாக மக்களாட்சியில் நம்பிக்கையற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களின் வன்முறை அமெரிக்க மக்களாட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. 

பின் லாடனைப் பின்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்த்தானுக்கு வெளியே தாக்குதல் செய்வதைத் தவிர்த்து வந்த தலிபான்கள் போரைத் தாம் இழுத்தடித்தால் அமெரிக்காவில் பொருளாதார்ப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நம்பி போராடினார்கள். ஹக்கானி போன்ற அமைப்புக்களை போரில் பங்கு பெறச் செய்து தமது ஆளணி இழப்புக்களைக் குறைத்தார்கள். தலிபான்களிடம் பிடிபட்ட அமெரிக்கர்களிடம் அவர்கள் சொல்வது "கடிகாரம் உங்கள் கையில் ஆனால் நேரம் எங்கள் கையில்" அதாவது உங்களிடம் தொழில்நுட்பம் இருக்கின்றது அதனால் நேரத்தை வாங்க முடியாது போர் அதிக காலம் இழுபடும் போது நீங்கள் விலகிக் கொள்வீர்கள். தலிபான்கள் நினைத்தது நடந்தது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்லா எம்பக்கம் இருக்கின்றார். அவர் மீது நம்பிக்கையற்றவர்களை எம்மால் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். 2066-ம் ஆண்டு உலகில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையான மக்களாக இருப்பார்கள். 

கடந்த ஓராண்டாக அமெரிக்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் அப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை107 பேர் மட்டுமே. பாதுகாப்புச் செலவையும் உளவுத்துறைச் செலவையும் அதிகரித்தே இப்படி உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 9/11 தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகளை ஆளில்லாவிமானங்கள் மூலக் கொல்லும் திறனை அமெரிக்கா பெருமளவு வளர்த்துள்ளது. தீவிரவாதிகளின் தொடர்பாடலை உலகெங்கும் ஒட்டுக் கேட்கும் திறனையும் பல நாடுகள் வளர்த்துள்ளன. 

அல் கெய்தா உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஆப்கானிஸ்த்தானில் அழிக்கப்பட்டாலும் அதில் இருந்து உருவாகிய ஐ எஸ், அல் ஷபாப், பொக்கோ ஹரம், அல் நஸ்ரா போன்ற பல அமைப்புக்கள் இன்னும் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடையவுமில்லை. அமெரிக்காவில் அமைதி வரவுமில்லை.

Thursday, 9 September 2021

தலிபான்களின் காபந்து அரசு தேறுமா?

 

அமெரிக்கா தலைமையிலான அந்நியப் படையினர் வெளியேறி மூன்று வாரங்களின் பின்னர் தலிபான் அமைப்பு 2021 செப்டம்பர் 7-ம் திகதி ஆப்கானிஸ்த்தானுக்கான காபந்து அரசை அறிவித்துள்ளது. மூன்று வார தாமதம் உள்ளக இழுபறியா அல்லது நன்கு சிந்திக்க வேண்டி இருந்ததாலா என்பது பற்றி அறிய முடியவில்லை. அமெரிக்க சஞ்சிகை ஒன்று அதை all-Male அரசு என விபரித்துள்ளது. ஒரு நாளேடு பழைய தலிபான் போன்ற புதிய தலிபான்களைப் பாருங்கள் என்றது. முன்னைய ஆப்கான் அரசின் மகளின் விவகார அமைச்சர் ஹ்பீபா சராபி தலிபான்கள் மாறிவிட்டார்கள் என மேற்கு நாடுகள் நம்பியமை தவறு தான் சுட்டிக் காட்டியது உண்மையாகி விட்டது என்றார். இந்திய ஊடகம் ஒன்று தலிபான்களின் காபந்து அரசில் பாக்கிஸ்த்தானின் முத்திரை நன்கு பதிந்துள்ளது என்கின்றது.

அரசின் முக்கிய உறுப்பினர்கள்

தலிபான்கள் அறிவித்த காபந்து அரசின் தலைமை அமைச்சர் பொறுப்பில் உள்ள முல்லா முகம்மத் ஹசன் அக்குண்ட் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட ஒருவராவார். அத்துடன் அமெரிக்க குற்றத் தடுப்பு பிரிவான எஃப்.பி.ஐயால் தேடப்படும் ஒருவருமாவார். தலிபானின் உயர் அவையான ரெக்பாரி சுராவின் தலைமைப் பதவியை அவர் நீண்டகாலமாக வகித்திருந்தார். 1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்த்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் துணைத் தலைமை அமைச்சராகவும் அக்குண்ட் பணியாற்றினார். அவரது துணைத் தலைமை அமைச்சராக தலிபான்கள் சார்பில் அமெரிக்காவுடன் கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சு வார்த்தை நடத்திய முல்லா பரதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் மற்ற துணை தலைமை அமைச்சர் அப்துல் சலாம் கனாஃபியும் ஐக்கிய நாடுகள் சபையால் தடைவிதிக்கப்பட்டவர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை: பெண்ணங்கு இல்லை

கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பதில் வல்லவரான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் நாடுகளை அங்கீகரிப்பது தமது சபையின் பணியல்ல, அது உறுப்பு நாடுகளின் வேலை என்றார். ஆனால ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் பிரமிளா பற்றன் பெண்களுக்கு காபந்து அரசில் இடம் கொடுக்காமயை சுட்டிக்காட்டி அது புதிய அரசு பெண்களையும் சிறுமிகளையும் எப்படிக் கையாளப் போகின்றது என்பதை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது என்றார்.

சீனாவின் அரைகுறை வரவேற்பு. பொன்னொன்று கண்டேன்

ஆப்கானிஸ்த்தானில் மூன்று வாரங்கள் சட்ட அடிப்படையிலான ஆட்சியின்மையை முடிவிற்கு கொண்டு வந்தமையை வரவேற்பதாக சீனா அறிவித்துள்ளது. அதன் வரவேற்பு புதிய அரசையும் உள்ளடக்கியதாக தெரியவில்லை. ஆனால் புதிய அரசு அமைந்தமைக்கு “China attaches great important” என்ற சீனாவின் சொற்தொடரில் வரவேற்பையோ பாராட்டுதலையோ காணவில்லை. ஆனால் காபந்து அரசு அமைய முன்னரே தலிபான்களுடன் தாம் சிறந்த உறவை விரும்புவதாக சீனா அறிவித்து விட்டது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்கள் மீது நீண்ட காலமாக கண்வைத்திருக்கும் சீனா அதில் முடங்கிப் போயிருக்கும் தமது முதலீடு முதலீட்டைப் பிணை எடுப்பதையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது.

காத்திருக்கும் இரசியா

புதிய காபந்து அரசு தொடர்பாக புது டில்லியில் உள்ள இரசிய அரசுறவியலாளரிடம் ஊடகர்கள் கேள்வி எழுப்பிய போது இரசியா காந்திருந்து செயற்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் இரசியா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மேற்கு நாடுகளின் எதிர்வினை

ஐரோப்பிய ஒன்றியம் தன் புதிய ஆப்கான் அரசு தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது. ஆப்கானிஸ்த்தானுக்கான அங்கீகாரத்தையும் மனிதநேய உதவிகள் பற்றியும் கருத்தில் கொள்வதற்கு உகந்த வகையில் ஆப்கான் அரசு அங்குள்ள பல்வேறு சமூகத்தினரையும் மதத்தினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பீட்டர் ஸ்டனோ கருத்து வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்த்தானுக்கு பலதரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் அவசியமான ஒன்றாகும் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரையும் பெண்களையும் உள்ளடக்கிய அரசியலின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்துகின்றது. அமெரிக்கா புதிய ஆப்கான் அரசின் உறுப்பினர் சிலரின் கடந்த காலச் செயற்பாடுகளும் அவர்களின் தொடர்புகளும் தம்மைக் கரிசனைக்கு உள்ளாக்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் கருத்தில் கண்டனம் கலந்திருக்கவில்லை. அமெரிக்கா தலிபான்களின் சொற்களிலும் பார்க்க செயல்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்யும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜேர்மனியில் கூட்டம்

2021 செப்டம்பர் 08-ம் திகதி அமெரிக்காவும் ஜேர்மனியும் இணைந்து ஆப்கானிஸ்த்தானை எப்படிக் கையாள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை ஜேர்மனியின் ரம்ஸ்ரின் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் நடத்தின. ஜேர்மன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளின்கென் ஆகியோர் சந்தித்து அது தொடர்பாக உரையாடினார்கள். ஆப்கானிஸ்த்தானுக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு படையினரை ஜேர்மனி கடந்த 20 ஆண்டுகளில் அனுப்பியிருந்தது. இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இக்கூட்டம் ஆப்கானிஸ்த்தான் எதிர்காலத்தை மாற்றியமைக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆப்கானிஸ்த்தானின் காபந்து அரசு அமைந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அனஸ் ஹக்கானி அமெரிக்காவின் குவாட்டனாமோ சித்திரவதைக் கூடம் உட்பட பல சிறைகளைக் கண்டவர். அவர் கஷ்மீர் பிரச்சனையில் தாம் தலையிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தலிபான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இந்திய ஊடகங்கள் உட்பட பன்னாட்டு ஊடகங்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக அனஸ் ஹக்கானி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் தமது எதிரிகளுக்கு இந்தியா உதவி செய்தமையை தாம் மறந்து இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கு நாடுகள் போல் ஆப்கானிஸ்த்தானுடனான உறவில் பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதால் தலிபான்கள் இந்தியாவுடனான உறவை விரும்புகின்றார்கள் என்பது மட்டுமல்ல இந்தியாமீது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிக விருப்புக் கொண்ட ஆப்கானிஸ்த்தானின் பஷ்ரூன் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தலிபான்களில் பெரும்பான்மையானவர். இந்தியா இதை எழுதும் வரை இந்தியா புதிய ஆப்கான் அரசைப்பற்றி கருத்து வெளியிடவில்லை. இந்தியாவின் தாமதத்தை “கேந்திரோபாய காத்திருப்பு” என இந்திய அரசு ஆதரவாளரகளும் “துணிச்சலான முடிவெடுக்க முடியாமை” என இந்திய அரசை கடுமையாக விமர்ச்சிப்பவர்களும் கூறுகின்றனர். தலிபான்களின் இஸ்லாமியக் கோட்பாடு இந்தியாவின் டில்லிக்கு வடக்கே உள்ள தியோபந்த் என்னும் சிறு நகரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உருவானது. தியோபந்தி இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடினவர்கள். பஷ்ரூன் இனத்தினர் பலர் இந்தி சினிமாத்துறையில் சிறந்து விளங்குவதால் இந்தி சினிமாப் படங்களை ஆப்கானிஸ்த்தானில் வாழும் பஷ்ரூன்கள் விரும்பிப்பார்ப்பதால் அவர்கள் இதயங்களில் இந்தியாவிற்கு ஓர் இடம் உண்டு.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையா?

தலிபான்கள் காபந்து அரசை அறிவித்தற்கு முதல் நாள் அதாவது செப்டம்பர் 6-ம் திகதி தலிபான்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தானிய ஆளில்லா விமானங்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியவுடன்ச் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் இந்தியாவின் வெளியுறவுத் துறைப் பிரச்சனை மட்டுமல்ல அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சனையுமாகும். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியவுடன் கஷ்மீர் மக்கள் அங்குள்ள இந்தியப் படையினரைப் பார்த்து ஒரு நாள் நீங்களும் இப்படி வெளியேறுவீர்கள் என்றனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் உலகெங்கும் உள்ள இஸ்லாமியப் போராளி அமைப்புக்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கஷ்மீர் போராளிகள் அதற்கு விதிவிலக்கல்ல. மோடியின் செப்டம்பர் – 6-ம் திகதிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டதாக தகவல் இல்லை ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்த்தானில் இந்தியா செய்த முன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டைப் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கலாம். 2021 செப்டம்பர் 10-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய இந்திய உறுப்பினர் டி. எஸ் திருமூர்த்தி ஆப்கானிஸ்த்தான் எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் செய்வதற்கான தளமாகப் பாவிக்கப்படக்க் கூடாது என்றார். 

சர்ச்சைக்குரிய சிராயுதீர்ன் ஹக்கானி

பல நாடுகளும் பார்த்து முகம் சுளிப்பது உள்துறை அமைச்சர் சிராயுதீர்ன் ஹக்கானியையே. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி அமைப்பின் தலைவரான சிராயுதீர்ன் ஹக்கானியும் அமெரிக்க சட்ட நிறைவேற்றுப் பிரிவால் தேடப்படும் ஒருவராவர். ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானின் உளவுத் துறையும் படைத்துறையும் வளர்த்தெடுத்தன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த அமைப்பின் தலைவர் சிராயுதீர்ன் ஆவர்.

பாக்கிஸ்த்தான் உண்மையைச் சொல்லாது என்பதால் அதன் கருத்தை கருத்தில் எடுக்கத் தேவையில்லை. மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்களைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்த்தான் இருப்பதாலும் அங்குள்ள உட்கட்டுமான உட்கட்டுமான முதலீட்டு வாய்ப்பாலும் பல நாடுகளின் முதலீட்டாளர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றார்கள் என்பது புதிய ஆப்கான் காபந்து அரசு தொடர்பாக யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்து தெரிய வருகின்றது. அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்த்தானின் 9.5பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் இடை நிறுத்தி வைத்திருக்கும் உதவித் தொகைகளையும் கருத்தில் கொண்டு தலிபான்கள் தமது காபந்து அரசை அமைக்கவில்லை என்பது அந்த அரசில் தீவிரப்போக்குடையோரை உள்ளடக்கியதில் இருந்து தெரிய வருகின்றது.

Tuesday, 7 September 2021

இஸ்ரேலின் சிறையில் இருந்து தப்பிய பலஸ்த்தீனியப் போராளிகள்

 



பலஸ்த்தீனிய இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள். அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின் பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர். ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.

தப்பி ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும் மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப் நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.



இஸ்ரேலின் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில் ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.

Monday, 6 September 2021

சீனா சமூகவுடமையை(சோசலிஸம்) வலியுறுத்துவது ஏன்?

  


சீனாவின் ஏற்றுமதி சார் பொருளாதார வளர்ச்சியால் அங்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் தொகை மொத்த மக்கள் தொகையின் 3.3விழுக்காடாக உள்ளது. இதை இந்தியாவின் 29.3 விழுக்காடு வறியோர் தொகையுடன் ஒப்பிடுகையில் ஆச்சரியமாக இருக்கின்றது. இருந்தும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் சமத்துவமின்மை ஒழிக்கப்படவேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கின்றார். பொதுவுடமை மற்றும் சமூகவுடமையை வலியுறுத்தி வந்த சீனா 1979இல் அவற்றில் இருந்து விலகி அரை முதலாளித்துவ நாடாக தன்னை மாற்றி பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தது. அதனால் (அரசால் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, திறனற்ற) சீனப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிடையேயும் பல்வேறு மக்களிடையேயும் சமமான வருமானப்பங்கீடு சமூகவுடமையின் முக்கிய அம்சங்களாக இருப்பதுதான் சீனப்பாணி நவீனமயமாக்குதலாகும் என்கின்றார்.

சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும்

சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ஏற்றுமதியும் உட்கட்டுமான அபிவிருத்தியும் இப்போது தடைகளைச் சந்தித்துள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இனி சீன மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீனமக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களின் சராசரி தனிநபர் வருமானம் சீனர்களின் தனிநபர் வருமானத்திலும் 5.78 மடங்கு அதிகமானதாக உள்ளது. அதனால் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவதாகவும் சீனா 57வதாகவும் உள்ளன. அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் அமெரிக்கர்களின் கொள்வனவின் பங்கு எழுபது விழுக்காடாகும். சீனாவில் அது 39 விழுக்காடாக உள்ளது. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் அது 55 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியிலும் பார்க்க ஐந்து விழுக்காடு குறைவாகும். அதனால் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் ஐந்து விழுக்காடு குறைக்கப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் உலக அரங்கில் உறுதியாக நிற்பதற்கு அது ஏற்றுமதியில் தங்கியிருப்பது குறைக்கப்பட்டு உள்நாட்டு மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும். சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்க்யாங் இதற்காக ஒரு புதிய திட்டத்தை முன் வைத்துள்ளார். சீனாவில் உற்பத்திக் காரணிகளை திறன்படச் செயற்படுத்தல், அதிக வருமானம் உள்ளவர்களிடம் வரி அறவிட்டு குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு உதவி செய்தல், செல்வந்தர்கள் தாமாகவே வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி செய்தல். சீனாவின் புதிய திட்டம் “பொதுச் செழுமை” என அழைக்கப்படுகின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சி தனது செயற்திட்டங்களில் பொதுச் செழுமை முதலிடம் வகிக்கின்றது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2021-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆற்றிய உரைகளில் 65 தடவை “பொதுச் செழுமை” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது

அரை முதலாளித்துவ சீனா?

1978-ம் ஆண்டு “திறந்த கதவு” கொள்கை என்னும் பெயரில் சீனா வெளிநாட்டு முதலீடுகளையும் வேற்று நாடுகளுடனான வர்த்தகத்திர்கும் வழிவகுத்த1979-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தை ஆரம்பித்த சீனா 1979இல் அமெரிக்காவுடன் உறவையும் உருவாக்கியது. அதே ஆண்டில் சீனாவில் பல சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது ஆரம்பித்த சீனப் பொருளாதார வளர்ச்சி இன்றுவரை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு நாடும் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணவில்லை. தற்போது சீன அதிபர் ஜின்பிங் முன்வைக்கும் சமூகவுடமைக் கொள்கை சீனாவை “அரை முதளாளித்துவ நாடு” என்ற நிலையில் இருந்து விலக்கி முழுமையான சமூகவுடமை நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தினாலும் சீனா தனது தனியார் துறை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். சீனா அமெரிக்காவை விஞ்சி பொருளாதாரத்தில் வளராது என்கின்றார் கலிபோனியப் பல்கலைக்கழகமொன்றில் அரசறிவுத்துறைக்கு பொறுப்பான சீனரான MINXIN PEI.

சீனச் செல்வந்தர்கள்

ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் அமெரிக்காவில் 724பேரும் சீனாவில் 626பேரும் இந்தியாவில் 140பேரும் உள்ளனர். அதிக செல்வந்தர்கள் இருப்பது ஒரு முதலாளித்துவ நாடாக இருக்கும் அமெரிக்காவிற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சோசலிஸ நாடாக இருக்க முயலும் சீனாவிற்கு அது உகந்ததல்ல என்பது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கருத்து. சீனா இரசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இரசியா பொதுவுடமையைக் கைவிட்டு மக்களாட்சி நாடாக மாற்றப்பட்டாலும் அங்கு சில பெரும் செல்வந்தர்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூட ஒரு பெரும் செல்வந்தரே. சில பெரும் செல்வந்தர்கள் கையில் ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியும் இருப்பதை சிலராண்மை (Oligarchy) என்பர். இது மக்களாட்சிக்கும் சமுக்வுடமை ஆட்சிக்கும் முரணானதாகும். அதனால் சீனாவில் பெரும் செல்வந்தர்கள் உருவாகுவதை சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐயத்துடன் நோக்குகின்றார். சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனம் தனது பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது ஜீ ஜின்பிங் அதைத் தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்ததால் அவரது செல்வம் பத்து பில்லியன் டொலர்களால் குறைந்து போனது.

நடுத்தர வருமானப் பொறியை சீனா தவிர்க்க வேண்டும்

வருமானம் குறைந்த மக்களைக் கொண்ட நாட்டில் ஊழியக் கொடுப்பனவு குறைந்த அளவில் இருப்பதால் அங்கு செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் வருமானம் கூடிய நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளிலும் பார்க்க அதிக இலாபத்தைத் தரும். தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டால் மக்களின் வருமானம் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து கொண்டு போகும். அதனால் அந்த நாடு நடுத்தர வருமான நாடாக வளரும். அப்போது அந்த நாட்டில் ஊழியக் கொடுப்பனவு அதிகமாகும். அதனால் அந்த நாட்டில் வெளிநாட்டு முதலீடு குறையத் தொடங்கும். மக்கள் தொடர்ச்சியாக நடுத்தர வருமானமுள்ளவர்களாக மட்டும் இருப்பார்கள். இதை நடுத்தர வருமானப் பொறி என்பர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும். சீன அரசு தமது நாடு நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்காமல் இருக்க பெரு முயற்ச்சி செய்கின்றது. சீனாவில் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் தொகை தற்போது 400 மில்லியன்களாகும். இதை 2025இல் இருமடங்காக உயர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீன அதிபரினதும் தலைமை அமைச்சரினதும் புதிய கொள்கைகளுக்கு இணங்க சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான மா ஹுவாரெங்கிற்கு சொந்தமான டென்செண்ட் (Tencent) நிறுவனம் பொதுச் செழுமைக்கு என 7.7பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறைந்த வருமானமுள்ள மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். இது போன்று மேலும் பல செல்வந்தர்கள் நன் கொடைகளை வழங்கியுள்ளனர்.

செல்வந்தர்களின் பிள்ளைகளின் கல்வியில் கைவைத்த சீனா

சீனாவில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் இயங்குகின்றன. இவற்றில் பல செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்தனர். அதனால் அவர்களின் கல்வித்தரம் மற்றப் பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்த்தாகவும் உலகத் தரமானவயாகவும் இருந்தன. சீன அரசு ஒரே நாளில் அந்த கல்வி நிறுவனங்களை மூடி விட்டது. இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தனர். கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைச் செய்ததாக சீன அரசு அறிவித்தது.

சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு என ஓர் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள ஜீ ஜின்பிங் மக்கள் மத்தியிலும் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெறுவதற்காக “பொதுச் செழுமை”, சமூகவுடமை போன்ற பதங்களை கையில் எடுத்துள்ளாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பெரும் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து சீனாவின் ஆட்சி முறைமையையே மாற்றியமைக்க முயல்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜீ ஜின்பிங் பல கலைஞர்கள் புகழின் உச்சிக்கு போவதற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். பெரும் புகழ் பெற்ற சீன நடிகை ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கலைஞர்களுக்கு இரசிகர் மன்றம் அமைப்பவை போன்றவற்றையும் அவர் தடை செய்துள்ளார். இவை செல்வ சம பங்கீட்டுகாக அல்ல.

 

Sunday, 29 August 2021

தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

  


தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

ஆப்கானிஸ்த்தானில் பல் வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறாயிரமும் ஐ.எஸ்-கே அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரமும் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருநூறும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலிபான் அமைப்பினர் அல் கெய்தாவுடன் நல்லுறவை வைத்திருக்கின்றனர். ஹக்கானி அமைப்பினர் தலிபான்களுடனும் ஐ.எஸ் கே அமைப்பினருடனும் நல்லுறவை வைத்திருக்கின்றனர். தலிபான்கள்லும் பார்க்க ஹக்கானை அமைப்பினர் காபூல் நகரை கையாள்வதில் வல்லவர்கள். இதனால் தலிபான்கள் தமது நட்பு அமைப்பான ஹக்கானி அமைப்பினரிடம் காபூல் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்திருந்தனர். இதனால்தான் ஹக்கானி அமைப்புடன் நட்புடைய ஐ.எஸ்-கே அமைப்பினரால் காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் செய்து 16 அமெரிக்கர்கள் உட்பட பலரைக் கொல்ல முடிந்தது.

அமெரிக்காவின் தெரிவிக்கப்படும் அச்சம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மக்கோல் “நாம் 9/11இற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம் – ஆப்கானிஸ்த்தான் மீண்டும் பயங்கரவாத உற்பத்தி நிலம்” என்றார். அமெரிக்கப் படைத்தளபதி அல் கெய்தாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் வலையமைப்புக்களை ஆப்கானிஸ்த்தானில் துரிதமாக மீளக் கட்டியெழுப்பலாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவும் தலிபான்களும் கட்டார் தலைநகர் டோஹாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் அல் கெய்தா போன்ற அமெரிக்கா விரும்பாத திவிரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கோ அல்லது செயற்பாட்டிற்கோ தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

பஞ்சீர் தலையிடி

காபூலில் இருந்து வட கிழக்காக 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரகத கல் நிறைய உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் வட கூட்டமைப்பு என்னும் போராளி அமைப்பு திரண்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் துணை அதிபர் அமருல்லா சாலெ  கூட அங்கு போயிருக்கின்றார். தலிபான் தாக்குதலின் போது தப்பி ஓடிய ஆயிரக் கணக்கன அரச படையினரும் அங்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் தஜிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தஜிக்கிஸ்த்தான் நாடு ஆதரவு வழங்கலாம். தலிபான்களால் கொல்லப்பட்ட முன்னாள் வட கூட்டமைப்பின் தளபதியின் மகனான அஹமது மசூத்தும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் இருக்கின்றார். இவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலிபான்களை எதிர்க்கும் குழுக்களுக்கு படைக்கலன்களை அனுப்பவில்லை என்கிறது தஜிக்ஸ்தான் நாடு. அது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கின்றது.

தலிபான்களைப் பாராட்டிய அல் கெய்தா ஆதரவு ஊடகம்

தலிபான்களின் வெற்றி உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா வைத்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் உள்ள திவிரவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது உங்களுக்கும் நடக்கும் என இந்தியாவைப் பார்த்து சொல்கின்றன. இந்தியா வசம் இருக்கும் கஷ்மீர் பிரதேசதைப் பிரித்து பாக்கிஸ்த்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு தமக்கு தலிபான்கள் உதவி வழங்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.  தலிபானின் வெற்றிக்கு அல் கெய்தா தனது ஊடகத்தில் பாராட்டு தெரிவித்தது. “ஆப்கான் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது, இது இஸ்லாமின் வெற்றி” என்றது அல் கெய்தா.

அல் கெய்தா – தலிபான் வேறுபாடு

அல் கெய்தா அமைப்பு அமெரிக்காவை அழித்த பின்னர்தான் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை அமைத்த பின்னர் அமெரிக்காவை அழிக்கலாம் எனக் கருதியது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்த்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்ற கருத்துடையது. அது வெளிநாடுகளில் தாக்குதல் செய்வதில்லை. தலிபான் அமைப்பு பஸ்ருன் இனத்துக்கு உரியது என்ற கருத்து நிலவுகின்றது. அல் கெய்தா இனங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கையுடையது. அல் கெய்தா சியா மற்றும் சுனி என்ற பிளவையே விரும்புவதில்லை. ஆப்கானிஸ்த்தானில் 14 ஏற்றுக் கொள்ளப்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு பஸ்ருன் இனத்தவர் வாழ்கின்றனர் என மதிப்பிடப்படுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் வட பகுதியிலும் தென் மேற்குப் பகுதியிலும் பஸ்ருன் இனக்குழுமத்தினர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு குறைந்த அளவில் வாழ்கின்றனர். தஜிக் இனக்குழும மக்கள் 25விழுக்காட்டினர் உள்ளனர். உஸ்பெக் இனக்குழுமத்தினர் 9 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்த்தான் நிலப்பரப்பின் நூறு விழுக்காடும் தலிபான்கள் தற்போது தலிபானக்ளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நிலப்பரப்புக்கள் உள்ளூர் போர்ப்பிரப்புக்கள் கட்டுப்பாடிலும் பல நிலப்பரப்புக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்பு இருந்ததிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பு ஆப்கானிஸ்த்தானில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் இருக்கின்றது. அல் கெய்த தேவை ஏற்படும் போதெல்லாம் புதிய பெயரில் புதிய அமைப்புக்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்த்தானில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் அல் கெய்தா வேறு புதிய பெயரில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். அது அமெரிக்காவிற்கு டோஹா நகரில் தலிபான்கள் வழங்கிய உறுதி மொழிக்கு முரணானதல்ல என தலிபான்கள் வாதிடலாம்.

தலிபான்களின் வலி தனி வலி

தலிபான் தனது பொருளாதாரத்திலும் உலக நாடுகள் தம் அரசை அங்கீகரிப்பதிலும் உடனடிக் கவனம் செலுத்தும். இவற்றை நிறைவேற்றுவது தலிபானகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அல் கெய்தாவிற்கு ஆதரவு வழங்குவது இந்த இரண்டு முயற்ச்சிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பஸ்ருன் அல்லாத இனக் குழுமங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையிலும் தலிபான் இருக்கின்றது. பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானிற்கு 1919இல் சுதந்திரம் வழங்கிய போது பஸ்ருன் இன மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆப்கானிஸ்த்தானுடன் இணைத்தது. மற்றப் பகுதியை அப்போது தான் ஆண்டு கொண்டிருந்த தற்போது பாக்கிஸ்த்தானாக இருக்கும் நிலப்பரப்புடன் சேர்த்து வைத்தது. இதே வகையில் தான் குர்திஷ் மக்கள் வாழும் பிரதேசத்தையும் துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளுடன் இணைத்தது. எதிர் காலத்தில் பல்வேறு இனக்குழுமங்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் தனது குடியேற்ற ஆட்சிப் பிரதேசங்களை பிரித்தானியா நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டது. தலிபான் போராளிகளில் பலர் பாக்கிஸ்த்தானில் பஸ்ருன் இன மக்கள் வாழும் பிரதேசம் ஆப்கானிஸ்த்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். தலிபான் தலைமைக்கு இப்போது பாக்கிஸ்த்தானின் உறவு அவசியம் என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தான் எல்லையை மாற்றியமைக்க விரும்பும் தலிபான்களை சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த நிலையில் இன்னொரு தீவிரவாத அமைப்பை மீள்கட்டி எழுப்புவதில் தலிபான் தலைமை கவனம் செலுத்த முடியாது. அவை மட்டுமல்ல தொழில்நெறிஞர்கள் (Professionals) பலர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தமது அரசை முகாமை செய்வதில் தலிபான்கள் நெருக்கடியை எதிர் நோக்கலாம்.

குறைந்த அளவிலான அல் கெய்தா

அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் இருபது ஆண்டு கால நெருங்கிய உறவு உண்டு. அல் கெய்தா அமைப்பினர் தலிபான் அமைப்புக்குள் ஊடுருவியும் உள்ளனர் என நம்பப்படுகின்றது. அமெரிக்க உளவுத் துறையும் வெளியுறவுத் துறையும் “ஆப்பாக்” கொள்கை என ஒன்றை வகுத்திருந்தன. அது ஆப்கானிஸ்த்தானையும் பாக்கிஸ்த்தானையும் ஒரு பிரதேசமாகக் கருதி வகுக்கப்பட்டவை. தலிபானின் வெற்றி மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு தூண்டுதலாக அமையும். அல் கெய்தாவின் தலைவர்கள் பலர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தா போராளிகள் இருநூறு பேர் இருக்கலாம என மதிப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவிற்கு என்று ஓர் உலகளாவிய தலைவர் என்று சொல்லும்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளுக்கு என்றே தலைவர்கள் இருக்கின்றார்கள். ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு அல் கெய்தாவின் எதிரியாகவே செயற்படுகின்றது. ஆபிரிக்காவின் சஹாராவடி நிலப்பரப்பில் செயற்படும் பொக்கோ ஹரம், அல் ஷஹாப் போன்ற அமைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா யேமனில் முடங்கிப் போயுள்ளது. மேற்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் அல் கெய்தாவை தொடர்ந்து கண்காணிதுக் கொண்டிருக்கும் நிலையில் அக் கெய்தாவால் தலையெடுக்க முடியாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...