Monday, 25 January 2021

தணியாத இந்திய சீன முறுகல்

 


சீனா தென் சீனக் கடலை ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் ஆக்கிரமித்து அங்கு பல செயற்கை தீவுகளை உருவாக்கியது. அவற்றில் தனது பாரிய படை நிலைகளையும் உருவாக்கியுள்ளது. சீனா தனது சிறிது சிறிதான அணுகுமுறை (Piecemeal approach) நகர்வுகளாலேயே இதைச் சாதித்தது. சீனாவின் நகர்வுகள் சிறியனவாகவும் மிகமிகத் துரிதமாகவும் இருக்கும். இதே நகர்வுகளை இந்திய எல்லையிலும் சீனா செய்து கொண்டிருக்கின்றது.

சிவராத்திரியா வைகுண்ட ஏகாதசியா

இந்திய சீனப் படையினர் 2021 ஜனவர் 24 ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய தமது பேச்சு வார்த்தையை இரவு துயிலாமால் திங்கள் காலை இரண்டு மணி வரை தொடர்ந்த 16 மணித்தியால மரதன் பேச்சு வார்த்தையை நடத்தினர். சீனா இந்திய எல்லையைத் தாண்டி வருவது; இரு படையினருக்கும் இடையில் முறுகல்கள் கைகலப்புக்கள் கல்லெறிகள் ஏற்படுவது; பின்னர் பேச்சு வார்த்தை, தொடர்ந்து படை விலக்கல்; மீண்டும் சீனப் படைகள் அத்துமீறல். இந்தச் சங்கிலிஹ்ட் தொடர் அடிக்கடி நடக்கும்.

இந்தியாவை சீனா மென்று தின்னும்

2018 பெப்ரவரி மாதம் இந்திய சீன உறவைப் பற்றிய கருத்தறி அவையம் நடத்தி உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன்: 1. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கும். 2. டொக்லம் முறுகல் போல் பல முறுகல்கள் தொடரும் 3. முறுகல் நிலை அதிகரித்தாலும் போர் நடக்கும் அபாயம் இல்லை. 4. சீன தொடர்ந்து இந்தியாவை சீண்டிக் கொண்டே இருக்கு. 5. இந்திய நிலப்பரப்புகளை சீனா நன்னுதல் தொடரும் ஆகிய கருத்துக்களை முன்வைத்தார். இந்திய நிலப்பரப்புகளை சீனா நன்னும் என்பதை சீனா தொடர்ந்து உண்மையாக்கிக் கொண்டிருக்கின்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பெரிய மென்னுதல்

அருணாச்சல பிரதேசத்தின் நாடாளமன்ற உறுப்பினரும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்தவருமான தபீர் கௌ சீனா அருணாச்சலப் பிரதேசத்தில் ஐம்பது கிலோ மீட்டர் நீளமான இரட்டை வழிச் சாலையை அமைத்துள்ளது என்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீனா ஊடுருவி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை அமைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்தது. அந்த கிராமத்திற்கு வேண்டிய நீர் வழங்கல், மின் வழங்கல் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் இந்த நிர்மாணம் மிகத்துரிதமாக நடந்த படியால் அதை இந்தியாவால் அவதானிக்க முடியவில்லை. ஒரு வாரத்தில் 25,000 சது மீட்டர் மருத்துவமனையை ஒரு வாரத்தில் கட்டி முடித்த சீனாவால் இந்தக் கிராமத்தை ஓரிரு நாட்களில் கட்டி முடிக்க முடியும். 2020 நவம்பரில் பூட்டானிலும் சீனா எல்லையை தாண்டிச் சென்று ஒரு கிராமத்தை நிர்மாணம் செய்திருப்பது செய்மதி மூலம அறியப்பட்டது. சீனா தனது நாட்டு எல்லைக்குள் தனது வறுமை ஒழிப்புத் திட்டத் தின் கிழ் கட்டப்பட்ட வீடுகள் என்கின்றது.



59 ஆண்டுகளாக தொடரும் முறுகல்களும் மோதல்களும்

1962இல் இந்தியாவும் சீனாவும் போர் புரிந்தன. பெரிய நிலப்பரப்பை சீனா கைப்பற்றினாலும் இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் வட மேற்கில் உள்ள 38,850 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட அக்சாய் சின் பகுதியை சீனா தனதாக்கிக் கொண்டது. சீனா கைப்பற்றி வைத்திருக்கும் திபெத் பீட பூமிக்கும் சீனாவின் சர்ச்சைக்குரிய மாகாணமான உய்குருக்கும் இடையில் அக்சாய் சின் இருக்கின்றது. இரண்டு மாகாண மக்களும் சீன அரசுக்கு எதிராக இணைந்து கிளர்ச்சி செய்யாமல் இருக்க அக்சாய் சின் சீனாவிற்கு அவசியமானதாகும். 1962இல் இந்தியப் படையினரை சீனா கலங்கடித்த போதும் 1967-ம் ஆண்டு நடந்த மோதலில் சீனா பின்னடைவைச் சந்தித்தது, அப்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிமின் நாது லா என்னும் இடத்திலும் சோ லா என்னும் இடத்திலும் இந்திய சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதல்களில் சீனா நானூறுக்கு மேர்பட்ட படையினரைப் பலிகொடுத்துப் பின்வாங்கியது. இந்தியாவின் மேஜர் ஹர்பஜான் சிங் இந்த முறியடிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்து வீரச்சாவடைந்தார். 1987-ம் ஆண்டு சீனா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்துடனான எல்லையில் சும்தோரோங் சூ பள்ளத்தாக்கில் ஒரு படை நகர்வைச் செய்தது. அப்போதைய இந்தியப் படைத்தளபதி அந்த இடத்தை ஒரு பாரிய படை நகர்வை மிகத் துரிதமாக மேற்கொண்டார். வல்லூறு என்ற குறியீட்டுப் பெயருடைய அந்த நடவடிக்கை சீனா அதிர்ச்சியைக் கொடுத்தது. சும்தோரோங் சூ பள்ளத்தாக்கின் பல உயரமான இடங்களில் இந்தியப் படைகளும் போர்த்தளபாடங்களும் இறக்கப்பட்டு அவை போருக்கு சாதகமான நிலையை எடுத்துக் கொண்டன. இதனால் சீனாவின் முன்னேற்ற முயற்ச்சி கைவிடப்பட்டது. 2013-ம் ஆண்டு கஷ்மீரின் லடாக் பிராந்தியத்தின் டெப்சாங் என்னும் இடத்தில் சீனா படை முகாம் அமைத்த போது ஒரு முறுகல் இரு நாடுகளுக்கும் இடையில் தோன்றி மோதல் தவிர்க்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் பூட்டானின் டொக்லம் பகுதியில் போரின் விளிம்பு வரை சென்றன. இரு நாட்டுப் படையினரும் கற்களால் எறிந்து கொண்டனர். 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் பிரதேசத்தில் இரு நாடுகளும் படைக்கலன்களின்றி மோதிக் கொண்டன. சீனப் படையினர் முட்கம்பி சுற்றிய பொல்லுகளால் இந்தியப் படையினரத் தாக்கினர். இந்தியப் படையினர் சீனப் படையினரை பள்ளத்தாக்குகளில் தள்ளி விழுத்தினர். இதில் இருபது இந்தியப் படையினரும் எண்ணிக்கை அறியப்படாத சீனப் படையினரும் கொல்லப்பட்ட்னர். பின்னர் இந்தியாவில் இருக்கும் திபெத்தியப் போராளிகள் சீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 2021-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா நூற்றுக்கு மேற்பட்ட விடுகளைக் கொண்ட கிராமம் ஒன்றை அமைத்த செய்தியுடன் ஆரம்பமானது.

படைவிலக்கலும் தாங்கிச் சீண்டலும்.                                      12-01-2021 சீனா பத்தாயிரம் படையினரை எல்லையில் இருந்து விலக்கி முகாம்களில் தங்க வைத்ததாக செய்திகள் வெளிவந்தன. 15-01-2021 வெள்ளிக் கிழமை நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சீனப் போர்த் தாங்கிகள் இந்தியாவுடனான லடாக் எல்லையை நோக்கி நகர்த்தப் பட்டுள்ளன. இந்தியாவும் தனது தாங்கிப்படையை எல்லையை நோக்கி நகர்த்தியது. இந்தனால் இரு நாட்டு போர்த் தாங்கிகளும் நூறு மீட்டர் இடைவெளியில் நிலை கொண்டது ஓர் ஆபத்தான சூழலை உருவாக்கியது. இரு நாடுகளும் ஐம்பதினாயிரம் படையினரை எல்லையில் வைத்திருப்பது வழக்கம். சீனப் படைவிலக்கல் குளிர்கால நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்திருக்கலாம். சீனா நிறுத்திய படையினரில் பெரும் பகுதியினர் அந்த சூழலுக்கு புதிதானவர்கள். குளிரான உயர் மலைப்பகுதி. பல சீனப் படையினருக்கு மலை நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. நிலத்தில் இருந்து 4200 மீட்டர் (13780 அடி) உயரத்தில் இந்திய சீன எல்லையில் ஒரு பகுதி உள்ளது. மலைநோயால் திசை தெரியாமல் நகர்ந்த சீனப் படை வீரர் ஒருவர் இந்திய எல்லைக்குள் சென்றபோது அவரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மலை நோய் (Mountain sickness) கடல் மட்டத் தில் இருந்து 2400மீட்டரிலும் உயரமான இடங்களில் ஏற்பட வாய்ப்புண்டு. தலைசுற்றல், தலையிடி, காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தியாவின் ஓய்வு பெற்ற படைத்தளபது தீபக் சிங்ஹா: சீனப் படைகள் டெம்ஷாங் போன்ற சீன எல்லைப் பகுதிகளில் போதிய அளவு நிலைகொண்டுள்ளன என்கின்றார். இந்தியப் படையினர் நீண்ட கால போட்டி நிலையெடுப்பிற்கு (standoff) தயாராக உள்ளனர் என்றார் இந்தியப் படைத்தளபதி. 2020 டிசம்பரில் சீனா லடாக் எல்லையில் 100 போர் விமானங்களை நிறுத்த அதற்குப் பதிலடியாக இந்தியா 250 விமானங்களை நிறுத்தியது.

தொல்லைகள் எல்லையில் மட்டுமல்ல

கடந்த சில ஆண்டுகளாக சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு இந்தியாவைக் கலவரமடையச் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியா சீனாவுடன் சர்ச்சைக்குரிய கடல் மற்றும் தரை எல்லைகளைக் கொண்ட வியட்னாமுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கின்றது. டிசம்பர் 2020இல் இந்திய வியட்னாமியப் படைகளுடன் இணைந்து இந்தியக் கடற்படை தென் சீனக் கடலில் PASSAGE EXERCISE என்னும் குறியீட்டுப் பெயருடன் போர் ஒத்திகை செய்தது. சீனா இந்தியாவை குழம்பிய குட்டையின் மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரித்தது. இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு கோர்வெட் கப்பல் ஐ.என்.எஸ் கில்டான் இந்த பயிற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்ட சீனாவிற்கு எதிராக தனது படை வலிமையை அதிகரிக்கும் நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து நடத்திய போர்ப்பயிற்ச்சியில் இந்தியாவிடமுள்ள ரஃபேல், எஸ்யூ-30 போன்ற போர்விமானங்களைப் போல் தோற்றமுள்ள போர் விமானங்கள் பாவிக்கப்பட்டன. பாக்கிஸ்த்தானிற்கு பல சீனா போர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளதுடன் 2020 டிசம்பரில் சீனா முப்பது தாக்குதல் ஆளில்லாவிமானங்களை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்தது.



ஏவுகணைப் போட்டி

இதற்கிடையில் இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கினால் துருக்கிக்கு செய்வது போல் பொருளாதாரத் தடை செய்யப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 5.5 பில்லியன் விற்பனை. ஆனால் இந்தியப் படையினர் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இயக்குவதில் பயிற்ச்சி பெற இரசியா சென்றுள்ளனர். சீனாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை சமாளிக்க இந்தியாவிற்கு எஸ்-400 அவசியம். எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை பாக்கிஸ்த்தானுக்கு எதிராக சிறப்பாகப் பாவிக்கலாம். ஆனால் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிடமிருந்து இந்தியாவை எஸ்-400 பாதுகாக்க மாட்டாது. இந்தியாவும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை விரைவில் பாவனைக்கு கொண்டு வரும்.

இந்தியாவின் கேந்திரோபாய நோக்கங்கள் தெளிவில்லை

இந்தியாவின் காவற் துறை அதிகாரியான என் சி அஸ்த்தானா என்பவர் அணமையில் வெளியிட்ட நூல் ஒன்றில் இந்தியாவிடம் சீனாவையோ பாக்கிஸ்த்தானையோ போரில் வெற்றி கொள்ளக் கூடிய வகையில் தெளிவான கேந்திரோபாய நோக்கங்கள் இல்லை என்றார். நாற்பத்தியெட்டு நூலகளை எழுதிய அஸ்த்தானா சிறந்த படைத்துறை அவதானிப்பாளராகக் கருதப்படுபவர். அவர் இந்திய ஊடகங்கள் பறைசாற்றும் இந்தியப் படைவலிமைக்கும் உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு என்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும் தேச வெறி இந்தியாவின் போட்டி நாடுகள் மீதான வன்மத்தை மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவால் பாக்கிஸ்த்தானையும் சீனாவையும் ஒரேயடியாக சமாளிப்பதற்கு வேற்று நாடுகளின் படை உதவி மிக அவசியம்.

Monday, 18 January 2021

அமெரிக்க அசிங்கம் உலகெங்கும் பரவுமா?

 


அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையும்ம் மூதவையும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் கூட்டத்தை தடுக்கும் முகமாக அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் செய்தது உலகைச் சூழவிருக்கும் ஆபத்தின் ஆரம்பக் கட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொவிட்-19 தொற்று நோயை மோசமாக கையாண்ட நாடுகளின் பட்டியலில் மக்களாட்சி நாடான அமெரிக்கா முதலாம் இடத்திலும் சிறப்பாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலில் பொதுவுடமையாட்சி நாடான வியட்னாம் முதலாம் இடத்திலும் இருக்கின்றன. உலகெங்கும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடிய படைத்தளங்களையும் படைக்கலன்களையும் வைத்திருக்கும் ஒரு நாடு ஒரு மனநோயாளியால் ஆட்சி செய்யும் வாய்ப்பு உள்ளதா என்ற அச்சத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகெங்கும் அமெரிக்க இரசிகர்கள்

“மக்களாட்சி என்பது ஓர் அரசல்ல அது எல்லா மக்களும் தங்கள் பாத்திரத்தை உரிய முறையில் மேடையேற்ற வேண்டிய ஒரு நாடகம்” என்ற அடிப்படியில் அமெரிக்க அரசு கட்டியெழுப்பப்பட்டது. உலகின் எந்த ஒரு நாட்டிலும் தேர்தல் ஊழல் இல்லாமல் நடப்பதில்லை. அமெரிக்கத் தேர்தல்களில் இரண்டு கட்சியினரும் ஊழல் செய்வதுண்டு. எதிர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத அளவிற்கு அமெரிக்காவில் ஊழல் நடப்பதில்லை. மற்றத்தரப்பு பெரும் ஊழலில் ஈடுபட்டது ஒரு தரப்பு பெரும் பொய்யை அவிழ்த்து விடுவதில்லை. ஆனால் அது 2020 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் நடந்துள்ளது. அந்தப் பொய்யைச் சொன்னவர் ஒரு தனிப்பட்ட டிரம்ப் என்பவர் மட்டுமல்ல. அவரின் பொய்யை பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர் பதவியில் உள்ளவர்களும் சொல்வதுடன் அமெரிக்க நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கின்றனர். பலர் அத்தாக்குதலை நியாயப்படுத்து கின்றனர். 2020இல் கொரோனா நச்சுக்கிருமி உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போல் 2021 அமெரிக்க குடியரசுக் கட்சியினரின் பயங்கரவாதம் உலகெங்கும் பரவக் கூடிய ஆபத்து உள்ளது. மேற்கு ஐரோப்பாவில் பலர் அமெரிக்காவை எப்போதும் ஒரு முன்னுதாரணமாக எடுப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் உள்ள பல நகரவாசிகளில் பலர் அமெரிக்காவை முன்னுதாரணமாக கொள்ளக் கூடியவர்கள். அமெரிக்கத் திரைப்படங்கள், பாடகர்கள், ஊடகங்கள் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை.

உலகப் பயங்கரவாத வடிவம் பெற்ற வெள்ளைத் தேசியவாதம்

அமெரிக்காவில் ஒரு பகுதியினர் கடும் சினம் கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கறுப்பின மக்கள், பெண்கள், தன்னினச் சேர்க்கையாளர்கள் போன்ற பல ஒடுக்கப்பட்ட பிரிவினர் தங்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுள்ளனர் என சில அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  அவர்கள் சொல்கின்ற ஒரு பகுதியினர் வலதுசாரி வெள்ளைத் தேசியவாதிகளையே. 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் அப்பாவி இஸ்லாமியர்களை ஒரு வெள்ளைத் தேசியவாதி சுட்டுக் கொண்ட போதே அமெரிக்காவில் உருவான வெள்ளைத் தேசியவாதம் உலகெங்கும் ஒரு பயங்கரவாதமாகப் பரவத் தொடங்கி விட்டது என சில சமூகவியலாளர்கள் எச்சரித்திருந்தனர். சமூகச் சிந்தனை மிக்க ஸ்கண்டினேவிய நாடுகளில் கூட வெள்ளைத் தேசியவாதம் 2019இலேயே பரவிவிட்டது. வெள்ளையர் அல்லாதோர் வாழ்கின்ற நாட்டிலும் வெள்ளைத் தேசியவாதம் வேறு வடிவங்களைப் பெறும் ஆபத்தும் உள்ளது. வெள்ளைத் தேசியவாதம் மக்களாட்சியில் வெள்ளையர் அல்லாதவர் அரசுத் தெரிவில் பங்களிப்புச் செய்வதை விரும்பாததால் அவர்கள் மக்களட்சி முறைமை மீது வெறுப்படைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள பெரும்பான்மைவாதிகளும் மதவாதிகளும் இந்த வெறுப்பை தங்கள் மத்தியில் இனி வளர்த்துக் கொள்ளப் போகின்றார்கள்.

அமெரிக்கா மேன்மையானது.

கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடல் சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்ட அமூலாக்கம், சுதந்திரமான நீதித்துறை, துடிவினை மிக்க குடிசார் அமைப்புக்கள், வெளிப்படைத்தன்மை, ஏற்புத்தன்மைமிக்கதும் பொறுப்பு கூறத்தயங்காததுமான பொதுநிறுவனங்கள் ஆகியவை அமெரிக்காவில் சிறப்பாக அமைந்திருப்பதாலும் எந்த ஒரு எதிரியாலும் தோற்கடிக்கப் படாத நிலையில் இருப்பதாலும் அமெரிக்கா உலகில் மேன்மையானது என அமெரிக்கர்கள் மார் தட்டி நிற்கின்றனர். அவர்கள் முகங்களில் 2021 ஜனவரி 6-ம் திகதி கரி பூசப்பட்டுள்ளது.

முழு உலகிற்கும் பேராபத்து!

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த ரிமதி ஸ்னைடர் “தமது நாடுகளில் ஃபாஸிசத்தையும் நாஜியிஸத்தையும் பொதுவுடமைவாதத்தையும் வளரவிட்ட ஐரோப்பியர்களிலும் பார்க்க அமெரிக்கர்கள் புத்திசாலிகள் அல்லர் ஆனால் ஐரோபியர்களின் அனுபவம் அமெரிக்கர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது” என்றார். 1995இல் பதினாறு அமெரிக்கர்களில் ஒருவர் படைத்துறை ஆட்சியை விரும்பினர். 2014இல் அது ஆறுபேரில் ஒருவராக மோசமடைந்தது. 2011-ம் ஆண்டு அரைப்பங்கு அமெரிக்கர்கள் தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம் இல்லாமல் ஒரு தலைவரால் நாடு ஆளப்படுவதை விரும்பினர். அமெரிக்க இளையோரில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மக்களாட்சி அவசியம் எனக் கருதுகின்றனர். பேரழிவு விளைவிக்க படைக்கலன்களைக் கொண்ட ஒரு நாட்டில் பொறுப்புக்கூறலற்ற ஒரு சர்வாதிகாரி ஆட்சியில் அமர்வது பேராபத்தானது.

யார் இந்த டிரம்பின் ஆதரவாளர்கள்?

அமெரிக்க உளவுத்துறை, அமெரிக்க காவல்துறை ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்க நாடளமன்றத்தின் மீது தாக்குதல் செய்ய முடியாது. உலகின் எந்தப் பகுதியிலும் எட்டு மணித்தியாலங்களுக்குள் பெரும் படையணியைக் கொண்டு போய் இறக்கக் கூடிய அமெரிக்காவால் ஒரு சில நிமிடங்களுக்குள் அமெரிக்க நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலை முறியடித்திருக்க முடியும். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பயங்கரவாதத்தை 2021 ஜனவரி ஆறாம் திகதி அரங்கேற்றியவர்களில் இரு பிரிவினர் கவனிக்கப் பட வேண்டியவர்கள். நாடாளமன்றத்தைத் தாக்கிய பயங்கரவாதிகள் தம்மை பெருமிதமான இளையோர் (Proud Boys) என அழைத்துக் கொண்டனர். தாக்குதலுக்குப் போகும் வழியில் அவர்கள் முழந்தாளிட்டு ஏசு நாதரைத் தொழுதனர். இவர்கள் பெண்களின் உரிமைகளுக்கும், குடிவரவிற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் நற்செய்தி சார்ந்த கிருத்தவர்கள் (Evengelical Christians). இவர்கள் தங்களது தாக்குதலை புனிதப் போர் எனவும் அழைத்தனர். இவர்களில் ஒரு பெண்மணி (தேர்தல்) திருட்டை நிறுத்தவும் என தேவாலய குரு போதனை செய்த பின்னர் தனக்கு கடவுளிடமிருந்து எரிகின்ற புதர் என்ற சமிக்ஞை கிடைத்த படியால் தான் தாக்குதல் செய்ய விமான மூலம் வாஷிங்டன் போனதாக பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார். மேலும் அவர் தான் பைபிளிள் உள்ள எஸ்த்தர் ராணி போல் செயற்படுவதாகவும் சொன்னார். நாடாளமன்றத்தைத் தாக்கிய குடியரசுக் கட்சியின் பயங்கரவாதிகளில் இன்னொரு பிரிவினர் கியூஅனான் (QAnon) என்னும் இணையவெளி மதக்குழுவினர். இவர்கள் ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சியினர் சாத்தானை தொழுபவர்கள் என நம்புகின்றனர். இவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது தமது கடமை என இவர்கள் கருதுகின்றனர்.

எய்தவர்கள் வேறு அம்பு வேறு

மேற்படி இரண்டு மதக் குழுவினர்களுக்கும் பின்னால் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பலர் இருக்கின்றனர். கொவிட்-19 தொற்று நோயால் அமெரிக்க அரசின் செலவு மிகவும் அதிகரிதும் வரவு மிகவும் குறைந்தும் இருக்கின்றது. இதனால் அரசு செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. பொதுவாக ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சியினர் ஆட்சியில் அமர்ந்தாலே அதிக வரிகளை விதிப்பார்கள். டிரம்ப் ஆட்சிக்கு வந்தச்தும் பெரும் செல்வந்தர்களின் கூட்டாண்மை நிறுவனங்கள் மீதான வரியைக் குறைத்தார். அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஜோ பைடனின் ஆட்சியை பெரிதும் எதிர்க்கின்றார்கள். அதிலும் இம்முறை வெள்ளை மாளிகை, மக்களவை ஆகிய இரண்டும் மக்களாட்சிக் கட்சியினரின் கையில். மூதவையில் இரு கட்சிகளும் ஐம்பதிற்கு ஐம்பது என்ற நிலையில் இருக்கின்றன. மூதவைக் கூட்டங்களுக்கு துணை அதிபர் தலைமை தாங்குவார். அதனால் தீர்மானிக்கும் வாக்கு மக்களாட்சியின் கையில் உள்ளது. இதனால் மக்களாட்சிக் கொள்கையை குடியரசுக் கட்சியினர் குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கின்றனர்.

அமெரிக்க சட்ட அமூலாக்கத்திற்கு பொறுப்பான Federal Bureau of Investigation (FBI) இன் அறிக்கையின் படி ஜனவரி ஆறம் திகதி நடந்தது போல் இனியும் நடக்க வாய்ப்புண்டு.

Saturday, 9 January 2021

டிரம்ப் பதவி நீக்கம் செய்யப் படுவாரா?

 


அமெரிக்க அரசியல் சட்டதின் ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடியவர் அதிபர் டொனால்ட் டிரம்ப். உலகின் வலிமை மிக்க பதவியான அமெரிக்க அதிபருக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் போன்ற அதிகாரங்களும் உண்டு. டிரம்ப் 2017 ஜனவரியில் பதவிக்கு வந்தவுடன் அவர் தனது சட்டத்துறையினரிடம் அதிகம் உரையாடியது தன்னை தானே மன்னிக்க முடியுமா என்பதுதான். டிரம்ப் தனது பதவிக்காலம் இன்னும் 27 நாட்கள் இருக்கின்றன என்ற வேளையில் தனக்கு வேண்டிய 29 சிறையிலுள்ள குற்றவாளிகளுக்கு மன்னிப்பும் தண்டனைக் காலக் குறைப்பும் வழங்கினார். அதில் வரி ஏய்ப்பிற்காக சிறையிலிடப்பட்ட ட்ரம்பினது சம்பந்தி சார்ல்ச் குஷ்ணரும் ஒருவர்.

தீயாரைச் சேர்வதை விரும்பிய டிரம்ப்

டிரம்பிற்கு சர்வாதிகாரிகளை பிடிக்கும். வட கொரிய அதிபரையும் சீன அதிபரையும் புகழ்ந்தவர். அஞ்செலா மேர்க்கலுடன் மோசமாக நடந்து கொண்டவர். சர்வாதிகாரிகள் எவ்வளவு கடுமையானவராகவும் தரம் தாழ்ந்தவராகவும் இருக்கின்றார்களோ அந்தளவு அவர்களுடன் நான் சுமூகமாக பழகுகிறேன் என்றவர் டிரம்ப். ஆமாம் சாமிகளைத்தான் அமைச்சரவையிலும் உயர் பதவிகளிலும் வைத்திருந்தார். முரண்படுபவர்களை சடுதியாக மாற்றினார். மற்ற எந்த அரசியல்வாதிகளும் செய்யாத அளவிற்கு டிரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ஆட்சியை நான்கு ஆண்டுகள் நடத்தினார். கடையில் ஃபேஸ்புக், டுவிட்டர், யூரியூப் போன்றவை ட்ரம்பின் கணைக்கை மூடி அவரைச் செயற்பட முடியாமல் தடுத்து விட்டன.

வரியா? வரியில்லயா?

பொதுவாக டிரம்பின் குடியரசுக் கட்சியினர் வரிவிதிப்பைக் குறைப்பை விரும்புபவர்கள். டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் ஆட்சியில் இருக்கும் போது அதிக வரி விதிக்கப்படும். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் செல்வந்தர்கள் மீதான வரிகளைக் குறைத்தார். கொவிட்-19 தொற்று நோயால் பல அமெரிக்க நடுத்தர குடும்பத்தினர் பாதிப்படைதுள்ள நிலையில் அவர்களுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளுக்கும் அதிக வரிவிதிப்பு அவசியம். அதனால் புதிய அதிபர் ஜோ பைடன் அதிக வரிகளை விதிப்பேன் என தேர்தல் பரப்புரையின் போது கூறியுள்ளார். இதனால் பல செல்வந்தர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை

வாஷிங்டன் டிசியின் பாதுகாப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் ஒரு மாநிலமாகும். ஆனால் மற்ற மாநிலங்களைப் போல் இந்த மாநிலத்திற்கு என ஓர் அரசு இல்லை. மற்ற மாநிலங்களுக்கென தனித்தனி காவற் துறையும் பாதுகாப்புப் படையும் உள்ளன. வாஷிங்டனுக்கு தனியாக பாதுகாப்புப் படை இல்லை. அதன் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனும் பொறுப்பாகும். நாடாளமன்றத்தின் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறை பொறுப்பாகும். 2021 ஜனவரி ஆறாம் திகதி பயங்கரவாதிகள் அமெரிக்க நாடாளமன்றத்தை தாக்கிய போது மாநகர காவல் துறையினரால் அதை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டனர் எனவுக் குற்றம் சாட்டப்படுகின்றது. பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாத நிலையில் மாநகர முதல்வர் பெண்டகனைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு படையினரை அனுப்பச் சொல்லி கேட்ட போது பெண்டகன் படையினரை அனுப்ப மறுத்து விட்டது. செய்தி கேட்ட அயல் மாநிலங்களின் ஆளுநர்கள் சிலர் தமது காவல் படையினரை அனுப்பட்டுமா என பெண்டகனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது பெண்டகன் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டது. உலகில் எங்கு பயங்கரவாதிகள் தாக்கினாலும் உடனே செல்லும் அமெரிக்கப் படையினர் தம் நாட்டில் எதையும் செய்யவில்லை.

டிரம்ப் கூட்டிய கூட்டம்

2021 ஜனவர் ஆறாம் திகதி வெள்ளை மாளிகைக்கு அண்மையாக டிரம்ப் தனது ஆதரவாளர்களைத் திரட்டி ஒரு கூட்டம் நடத்தினார். அதில் அவர் தனது தேர்தல் வெற்றி திருடப்பட்டு விட்டது. தனது துணை அதிபர் மைக் பென்ஸ் தன்னுடன் ஒத்துழைக்காமல் கோழைத்தனமாக நடக்கின்றார் என முழங்கினார். அங்குள்ள மக்களை கப்பிட்டல் ஹில் நோக்கிச் சென்று நாடாளமன்றம் தேர்தல் முடிவை உறுதி செய்வதை தடுக்க வேண்டும் என்றார். அதன் பின்னர் நடந்தவை அமெரிக்க மக்களாட்சியின் கோர முகத்தை அம்பலப் படுத்தியது.


டிரம்ப் பயங்கரவாத்தை தூண்டினாரா?

2016-ம் ஆண்டிற்கு முன்னர் தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கிலரி கிளிண்டனை சிறையிலடையுங்கள் என்ற வாசகத்தை அடிக்கடி சொல்லி தேர்தல் பரப்புரை செய்தவர் டிரம்ப் ஆனால் அவரது பதவிக்கால முடிவில் டிரம்பை சிறையில் அடையுங்கள் என்ற வாசகம் பரவலாக அடிபடுகின்றது. அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போது அவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடுக்க முடியாது. ஆனால் அவரின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்க முடியும். ஆனால் டிரம்ப் பதவியில் இருக்கும் போது தனக்கு வேண்டிய பழமைவாதக் கொள்கையுடையவர்களை நீதித்துறையில் நியமித்துள்ளார். 2021 ஜனவரி 6-ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டம் நடத்த முடியாமல் ஒரு பயங்கரவாதக் கூட்டம் பல பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த பயங்கரவாத நடவடிக்கையின் பின்னணியில் டிரம்ப் இருந்தார் என நிரூபிக்க முடியுமானால் அவர் 2020 ஜனவரி 20-ம் திகதி மதியம் அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்கலாம்.

டிரம்பிற்கு எதிராக வலதுசாரி நாளிதழ்

டிரம்ப் தானாகவே பதவி விலக வேண்டும், டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் டிரம்ப் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இப்போது முன் வைக்கப்படுகின்றன. அவற்றிற்கு அவரது எதிர்க்கட்சியினரிடையே வலிமையாகவும் ஆளும் கட்சியினரிடையே சிறிதளவும் ஆதரவு உண்டு. தீவிர வலது சாரியான ரூபேர்ட் மெர்டொக்கின் நாளிதளான வால் ஸ்றீட் ஜேர்ணலின் ஆசிரிய குழாம் டிரம்ப் தானாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஃபொக்ஸ் நியூஸ் ஊடகம் டிரம்ப்பிற்கு ஆதரவாக தொடர்ந்து செயற்படுகின்றது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறையில் பணி புரியும் எண்பதிற்கு மேற்பட்டோர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அமெரிக்கப் நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலுகான தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் பதவியில் இருக்கக் கூடாது என்னும் அமெரிக்கர்

அமெரிக்கர்க்ளில் 57%மானோர் டிரம்ப் உடனடியாக பதவியில் இருந்து அகற்றப் படவேண்டும் எனக் கருதுகின்றனர். அதில் 14% குற்றம் சுமத்துதல் மூலம் பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் எனக் கருதுகின்றனர். முப்பது விழுக்காட்டினர் இருபத்தி ஐந்தாம் திருத்தம் மூலம் துரிதமாகப் பதவி நீக்கப்படவேண்டும் என நினைக்கின்றனர். பதின்மூன்று விழுக்காட்டினர் டிரம்ப் தானாக பதவி விலக வேண்டும் என நினைக்கின்றனர். ஐம்பத்தி ஐந்து விழுக்காட்டினர் தவறு செய்துவிட்டதாக கருதுகின்றனர். டிரம்பின் குடியரசுக் கட்சியின் எழுபத்தி ஏழு விழுக்காட்டினர் தன் பதவிக்காலம் முடியும்வரை பதவியில் இருக்கலாம் எனக் கருதுகின்றனர். 

டிரம்பை பதவி நீக்க இரு வழிகள்

அமெரிக்க அதிபரை இரண்டு வழிகளில் பதவி நீக்கம் செய்யலாம். ஒன்று குற்றம் சாட்டுதல் மூலம் பதவி நீக்குதல், இரண்டு தரமற்றவர் எனப் பதவி நீக்குதல். அமெரிக்க அதிபர் மீது ஒரு குற்றப்பத்திரிகையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்குதல் செய்து அவர் குற்றம் புரிந்தார் என மக்களவை உறுப்பினர்களின் பெரும்பானையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் குற்றப்பத்திரிகையும் மக்களவைத் தீர்மானமும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவைக்கு சமர்பிக்க வேண்டும். மூதவை நீதித்துறையினரின் உதவியுடன் விசாரணை செய்யும். பின்பு மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் குற்றம் செய்ததை ஏற்றுக் கொண்டால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு துணை அதிபர் அதிபராகப் பதவி ஏற்றுக் கொள்வார். டிர்ம்பின் பதவிக்காலம் 2021 ஜனவரி 20-ம் திகதி மதியம் வரை இருக்கும் என்பதால் முதவையின் நீதி விசாரணை அதிலும் நீண்ட காலம் எடுக்கும். நூறு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் ஐம்பது பேரும் அவரின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் ஐம்பது பேரும் உள்ளனர். குடியரசுக் கட்சியினரில் ஆகக் குறைந்தது 17பேர் டிரம்ப் குற்றவாளி என வாக்களிக்க வேண்டும். ஆனால் இதுவரை மூவர் மட்டுமே டிரம்ப் பதவி விலக்கப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளனர். டிரம்பை பதவி நீக்க இரண்டாவது வழி இலகுவான வழியாகத் தோன்றும். ஆனால் நிறைவேற்றும் சாத்தியம் குறைவு.  இது அமெரிக்க அரசியலமைப்பின் இருபத்தி ஐந்தாவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. டிரம்ப் பதவியில் இருக்கத் தகுதி அற்றவர் என அமெரிக்காவின் துணை அதிபரும் அவரது அமைச்சர்களில் பெரும்பான்மையினரும் முடிவு செய்தால் அவரைப் பதவியில் இருந்து நீக்கலாம். நாடாளமன்றத்தின் மீதான தாக்குதலை ஆட்சேபித்து டிரம்பின் அமைச்சரவையில் இருந்து இருவர் பதவி விலகி விட்டனர். திறைசேரிக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த வழியில் பதவி நீக்குவது பற்றி கலந்துரையாடியதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அவர் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக இல்லை என்றும் கருதப்படுகின்றது.

அமெரிக்க நாடாளமன்ற மக்களவைத் தலைவர்

அமெரிக்க நாடாளமன்றத்தின் மக்களவையின் தலைவர் நான்சி பெலொசி துணை அதிபர் உடனடியாக டிரம்பை அமெரிக்காவின் அரசியலமைப்பின் இருபத்தி ஐந்தாம் திருத்தத்தின் படி பதவி நீக்க வேண்டும் அல்லது 2021 ஜனவரி 13-ம் திகதி அமெரிக்க நாடளமன்றம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்து பதவி நீக்கம் செய்யும் என சூளுரைத்துள்ளார். நாடாளமன்றத் தாக்குதலின் பின்னர் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளார். அமெரிக்க நாடாளமன்றத்தின் மூதவையின் தலைமைப் பொறுப்பு துணை அதிபருக்கு உரியது. அதைப் பயன்படுத்தி மைக் பென்ஸ் தேர்தல் செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்க வேண்டும் என டிரம்ப் அவரை நிர்ப்பந்தித்திருந்தார். ஆனாலும் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு பென்ஸ் ஆதரவாக இல்லை.

தடாலடியாக காலில் விழுந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதே டிரம்ப் தான் வெற்றி பெற்றுவிட்டதாக முழங்கினார். பின்னர் தனது வெற்றியை திருடி விட்டதாக புலம்பினார். தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்தார். கடையில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடி தேர்தல் முடிவை உறுதி செய்வதை தடுக்க முயன்றார். அவருக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு நகரம் தமிழ்த்திரைப்படத்தில் வடிவேலுவின் சண்டித்தனத்தை நினைவு படுத்துகின்றார்.

 

Tuesday, 5 January 2021

2021 எப்படி இருக்கப் போகின்றது?

  


தொழில்நுட்பம் என்றுமில்லாத அளவு துரித வளர்ச்சி

மசகு எண்ணெய் விலை மந்தமடையும்

படைத்துறை மேலும் தீவிர வளர்ச்சியடையும்

குறைந்த வட்டியும் பங்குச் சந்தை வளர்ச்சியும்

இலங்கை உதவி கேட்டு கையேந்தும்

இந்தியப் பொருளாதாரம் தடுமாறும்

இந்தியா மீதான சீனத் சீண்டல் தொடரும்

அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும்

தொழில்நுட்பம் என்றுமில்லாத அளவு துரித வளர்ச்சி

கொவிட்-19ஐ கையாளும் தொழில்நுட்பம். முகமூடிக்குள்ளே microphone, Bluetooth ஆகியை இருக்கும். புற-ஊதாக் கதிர்கள் மூலம் கைப்பேசிகளில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்படும்.

தகவல் இருப்பிடல், தகவல் பரிமாற்ற வேகம் பாரிய வளர்ச்சியைக் காணும். 

தொடர்பாடல் மேலும் இலகுவாகவும் மேலும் அதிகமாகவும் நடக்கும்

இணையவெளியில் நாடுகளிடையேயான ஊடுருவல், திருட்டு, தாக்குதல் போன்றவை தீவிரமடையும்.

செயற்கை நுண்ணறிவு பெரும் வளர்ச்சியைக் காணும்.

கணினிகள் தாமாகவே தமது அறிவை வளர்த்துக் கொள்வது (Machine Learning) மிகத்துரிதமாக வளரும்.

போக்குவரத்தில் தானியங்கிகள் மயமாகும்: Self-driving vehicles, self-navigating ships.

மனித எந்திரங்களின் பாவனை அதிகரிக்கும். தபால் மற்றும் பொதிகளை இயந்திர மனிதர்கள் விநியோகம் செய்வார்கள்.

முகில் (Cloud) தரவு இருப்பிடல் Data storage அதிகரிக்கும்.

ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா பாவனைக்கு விடும்

5ஜீ பாவனை அதிகரிக்கும் ஆனால் பரவலான பாவனைக்கு வரமாட்டாது.

நீட்டித்த மெய்மம் Extended Reality (ER): தொலைவிடங்களை பக்கத்தில் கொண்டுவரும். மணமகனும் மணமகனும் வேறு நாடுகளில் இருந்து கொண்டு திருமணம் செய்வர். (சாந்தி முகூர்த்தம்……. இப்போதைக்கு வாய்ப்பில்லை) இணையவெளிக் காதல், மேலும் இலகுவாகும். ஆடைகளை Online shopping செய்யும் போது ஆடைகளை விற்பனை செய்பவர் உங்கள் மெய்நிகர் உருவத்திற்கு ஆடையை அணிவித்து அளவு சரி பார்த்துக் கொள்வார்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதிகள் தொழில்நுட்பங்கள் வளரும்.

நுண்மிய நாணயங்கள் மூலமான கொடுப்பனவுகள் அதிகரிக்கும். பிட்கொயின் போன்ற நுண்மிய நாணயங்களின் பெறுமதி வளர்ச்சி 2021இல் முடிவுக்கு வரும். பல அரசுகள் நுண்மிய நாணயங்களை அறிமுகம் செய்யும்.வ் 

தகவற் செல்வம்

தகவல் என்பது பெரும் செல்வமாகும். உலகெங்கும் பெரு நிறுவனங்கள் தகவல் திரட்டலில் அதிக அக்கறை காட்டும். இதில் பெரு முதலீடு செய்யப்படும். பேஸ்புக், கூகிள் போன்ற பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அமெரிக்க அரசும் மேற்கு ஐரோப்பிய அரசும் தணிக்க முயற்ச்சி செய்யும். சீனாவும் தனது நாட்டில் தனியார் துறை நிறுவனங்களின் பெரு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

பொருளாதாரம்

பொருளாதார வளர்ச்சி தடுப்பூசியின் வெற்றியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்கனவே உள்ள நச்சுக்கிருமி புதிய வடிவம் பெறலாம். புதிய நச்சுக்கிருமிகள் வராமல் இருக்க வேண்டும். இன்னும் மனிதர்களை தாக்கக் கூடிய 827,000 வகையான நச்சுக்கிருமிகள் விலங்குகளில் இருக்கின்றன. அவற்றை எந்த நாட்டிலாவது உணவாக உட் கொண்டால் மீண்டும் ஒரு பெருந்தொற்று உருவாகலாம். பலநாடுகளிலும் வட்டி விழுக்காடு குறைவாகவே இருக்கும். பங்குச் சந்தை சுட்டிகள் அதிகரிக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிக விலை அதிகரிப்பை எட்டும். இலங்கை வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதில் உள்ள சிக்கல் அதிகரிக்க. அது பல நாடுகளிடமும் நிதி உதவி கேட்டு கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் சிறிய அளவில் நிதி உதவியை வழங்கலாம்.  

பெரும்பாலான நடுவண் வங்கிகள் பணத்தை அச்சிடும். அதை அளவுசார் தளர்ச்சி (Quantitative Easing) என்னும் கௌரவப் பெயரால் அழைப்பர்.

எரிபொருள் விலை இரண்டு முதல் மூன்று விழுக்காடு அதிகரிக்கும். 2021 ஜனவரி முதல் வாரத்தில் நடந்த ஒபெக்+ நாடுகளின் கூட்டத்தில் சவுதி அரேபியாவும் இரசியாவும் முரண் பட்டுக் கொண்டன. கொவிட்-19இற்கான தடுப்பூசி பாவனைக்கு வந்தவுடன் மசகு எண்ணெய் விலை $50இற்கு மேல் அதிகரித்தது.

உல்லாசப் பயணத்துறை, வான் பயணத்துறை போன்றவை 2021இன் பிற்பகுதியில் வளர்ச்சியடையும்.

இந்தியாவின் வங்கிகளின் வாராக்கடன் (அறவிட முடியாத கடன்) பிரச்சனை அதிகரிக்கும். இதனால் மேலும் சில வங்கிகள் மூடப் படுதல் அல்லது நடுவண் வங்கியால் பொறுப்பேற்க்கப்படும். புதிதாக வேலை தேடிவரும் இளையோரைச் சமாளிக்க இந்தியா எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் 2021இல் 2விழுக்காட்டிலும் குறைவாகவே பொருளாதாரம் வளரும். இது உள்நாட்டு குழப்பங்களைத் தோற்றுவிக்கும். இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்ட முயல்வதில் தோல்வியடையும்.

படைத்துறை

பெரிய ஏவுகணைகளில் தற்போது உள்ள துல்லியத் தாக்குதல் தொழில்நுட்பங்கள் கைத்துப்பாக்கிகளில் அறிமுகப்படுத்தப்படும். அமெரிக்கா சந்திரனில் அணுவலு உற்பத்திநிலையத்தை அமைக்கவிருக்கின்றது. சீனா படைவலுவைப் பெருக்கும். சீனா படைத்துறைக்கு தேவையான தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் பெறுவதில் மேலும் சிக்கல்கள் ஏற்படும். இந்தியா சீனாவின் நெருக்குவாரங்களால் அமெரிக்காவுடன் அதிக படைத்துறை ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்.

குவாட்

ஒஸ்ரேலியா இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிடையேயான குவாட் எனப்படும் நான்கு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில்  (முக்கியமாக சுதந்திர கடற்போக்குவரத்து) தென் கொரியா, வியட்னாம் ஆகியவற்றுடன் மேலுல் ஒரு சில நாடுகள் இணைண்டு கொள்ளும். ஆனால் நேட்டோ போன்ற ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட மாட்டாது. அந்த ஒப்பந்தம் செய்யப் பட்டால் ஆசியப் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் பொறுப்பும் செலவும் அதிகரிக்கும். ஆனால் சீனாவை மனதில் கொண்டு பல போர் ஒத்திகைகள் நடக்கும்.

மேற்காசியா

வளைகுடா நாட்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆனால் அவற்றிற்கு துருக்கியுடன் விரோதம் வளரும். இஸ்ரேலுடம் அரபு நாடுகள் அரசுறவை மேலும் வளர்க்கும். அதனால் பலஸ்த்தீன விடுதலை என்பது தொலை தூரக் கனவாகும். ஈரான் மீது நெருக்குதல் அதிகரிக்கும். ஈரானில் தீவிரப் போக்குடையவர்களினதும் அல்லது படைத்துறையைச் சேர்ந்தவர்களினதும் ஆதிக்கம் அதிகரிக்கும். யேமனில் பிரச்சனைகள் தீராது. எதியோப்பியாவில் பிராந்திய மோதல் மோசமாகும். ஈரான் – அமெரிக்க சமரச முயற்ச்சி தோல்வியில் முடிவடையும். லிபியாவில் அமைதி தோன்றி மறையும்.

ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களின் கை ஓங்கும். தலிபான் ஐ எஸ் மோதல் அதிகரிக்கும். வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா முயற்ச்சிக்கலாம்.

 

தைவான் தனது படை வலுவைப் பெருக்குவதுடன் அமெரிக்கப் படைகளை தன் மண்ணில் நிலை கொள்ளும் படி வேண்டும்.

இரசியா

அமெரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வளர முடியாத நிலை ஏற்படும். டொனால்ட் டிரம்ப் மூட்டிய தீயை எளிதில் அணைக்க முடியாது. அதானால் இரசியாவின் உலக ஆதிக்கம் மேலும் வளரும். இரசியா தனக்கு என ஓர் இடத்தை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொள்ளும். இரசிய சார்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சீனா தனது பொருளாதார வலிமையைப் பாவிக்கும்

சீனா தனது பொருளாதார வலிமையை அரசுறவியலுக்கு அதிகம் பாவிக்கும். நலிவடைந்திருக்கும் பொருளாதாரஙக்ளைக் கொண்ட பல நாடுகள் சீனாவிற்கான ஏற்றுமதி, சீனாவின் முதலீடு, சீனாவின் கடன் போன்றவற்றை எதிர் பார்த்து நிற்கின்றன. ஏற்கனவே சீனா தனது பொருளாதாரத்தடையை கனடா, ஒஸ்ரேலியா, நோர்வே போன்ற நாடுகள் மீது வெவ்வேறுவகைகளில் விதித்துள்ளது. சீனாவிடம் கடன் வாங்கிய கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவிற்கு சாதகமாக நடந்து கொள்கின்றது.

தனிமைப்படும் அமெரிக்கா

ஆசிய நாடுகளின் ரிசெப் என்னும் பொருளாதார ஒப்பந்தமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தமும் ஏற்கனவே அமெரிக்காவை தனிமைப் படுத்திவிட்டன. மீண்டும் 2024இல் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அல்லது அவரைப் போன்ற ஒருவர் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை பல நாடுகளும் கருத்தில் கொள்ளும். அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்ய பல நாடுகளும் தயக்கம் காட்ட முனையும் என்பதால் அமெரிக்கா உலக அரங்கில் தனிமைப்படுத்தப் படும் செய்முறை 2021இல் ஆரம்பமாகும்.

2021இல் பல நாடுகள் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும். அதற்கு அலையும் நாடாக பிரித்தானியா இருக்கும்.

Thursday, 31 December 2020

2020 ஒரு மீள் பார்வை


சீனா மீது சினம் கொள்ள வைத்த ஆண்டு

சோதிடர்களை சோதித்த ஆண்டு

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

ZOOM ஆண்டு

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு


சீனா மீது சினம் ஏற்படுத்திய ஆண்டு

2020-ம் ஆண்டை திரும்பிப் பார்க்கையில் தெரிவதெல்லாம் கொரொனா நச்சுக்கிருமியும் அதனால் பரப்பப்பட்ட கொவிட்-19 தொற்று நோயும்தான். சீனாவில் இருந்து அந்த தொற்று நோய்க் கிருமிகள் பரவியதாக பலரும் நம்பியதால் சீனா மீது உலகெங்கும் வாழ் மக்களில் பலர் சினம் கொண்டுள்ளனர். நோய் உருவாகியதாகக் கருதப்படும் வுஹான் நகரில் இருந்து மற்ற சீனப் பிரதேசஙக்ளுக்கு பயணிப்பதை கடுமையான தடுத்த சீனா வுஹானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானங்கள் செல்வதைத் தடுக்கவில்லை. அதனால் சீனா அதிக முதலீடு செய்துள்ல இத்தாலிக்கும் வுஹானில் இருந்து அதிக விமானப் பறப்புக்கள் செய்யப்படும் நியூயோர்க் நகருக்கும் தொற்று நோய் பெருமளவில் பரவியது. புதிய வகைக் கிருமி ஒன்று பரவுகின்றது என எச்சரித்த சீன மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொவிட்-19 ஆல் கொல்லப்பட்டார். இதெல்லாம் சீனாவில் சாதாரணமப்பா என்பது போல் சீனா நடந்து கொண்டது.

சோதிடர்களை சோதித்த ஆண்டு

2020-ம் ஆண்டு அமோகமாக இருக்கப் போகின்றதுபிரம்மாண்டமாக இருக்கப் போகின்றதுசுபீட்சமாக இருக்கப் போகின்றதுஇது ஒரு ஒளிமயமான ஆண்டுமன்னர்களும் மக்களும் நேர்மையாக இருக்கப் போகின்ற ஆண்டுபஞ்சம் என்பதே இருக்காதுஐந்து கிரகங்கள் சாதகமாகவும் குரு ஆட்சி பெற்றும் இருக்கையில் பிறங்கும் அற்புதமான ஆண்டு என சோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் 2020 உலகையே கலங்கடித்த ஆண்டு. மக்களின் செயற்பாடுகளை மாற்றியமைத்த ஆண்டு.

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

கொவிட்-19 நோய் பரவத் தொடங்கியவுடன் பல நாடுகளின் மருத்துவத் துறையும் சுகாதாரத்துறையும் சரிவர செயற்படவில்லை. தைவான் அரசு ஒரு கொடிய தொற்று நோய் வந்தால் எப்படிச் எதிர் கொள்வது என்ற தயாரிப்பு வேலைகளை முன் கூட்டியே செய்து வைத்து வருமுன் தன் மக்களைக் காப்பாற்றியது. வியட்னாம் நோய் வந்தவுடன் துரிதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஒருவர் கூட நோயால் இறக்காமல் பார்த்துக் கொண்டது. இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் நோயை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்கவும் இல்லை வந்தவுடன் துரித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது ஒரு சாதாரண நச்சுக் கிருமிக் காய்ச்சல் என்றார். மக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் படி மருத்துவ நிபுணர்கள் சொன்ன போது பிரித்தானிய தலைமை அமைச்சர் பப்பிற்கு போய் தண்ணியடிக்காமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்றார். பொதுவாக பல நாடுகளின் ஆட்சி முறைமை மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை கொவிட்-19 நோய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

இந்தியாவில் மலேரியாக் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்ற பிழையான தகவல் வெளிவிடப்பட்டது. அதை பல நாடுகளும் வாங்க முயற்ச்சித்த போது இந்தியா அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் இந்தியா தமக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப் படும் என மிரட்டினார். பின்னர் அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டது ஆனால் அது கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த மாட்டாது என்ற உணமை அறியப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. தொற்று நோயைப்பரவ விட்டமைக்காக சீனா மீது உலக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஒஸ்ரேலியா தெரிவித்த படியால் அதற்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தியாவும் சீனாவும் தமது எல்லையில் நடந்த மோதல்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளிவிட்டனர். உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கா ஆய்வு செய்யும் உள்ள பல்கலைக்கழங்களிலும் ஆய்வு கூடகங்களிலும் உள்ள கணினிகளில் இருந்து தகவல்களை திருட பல நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்ச்சிகள் நடந்தன. யார் முதலில் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடிப்பது என்பதில் கடும் போட்டி நடந்தது ஆனால் ஒத்துழைப்புகள் நடக்கவில்லை. போதிய முன்னறிவித்தல் இன்றியும் உரிய வசதிகள் அமைத்துக் கொடுக்காமலும் ஊரடங்கு சட்டம் அறிவித்தமையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டனர். பல நூறு மைல்களை பல இலட்சம் பேர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் அதின்போது இறக்க நேரிட்டச்ச்து. தன் நாட்டு மக்களை சிறப்பாக காப்பாற்றிய சிங்கப்பூர் அரசு வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்வோரை உதாசீனம் செய்தது.

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

போக்கு வரத்துக் கட்டுப்பாடு ஒன்று கூடல் தடை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், உல்லாச விடுதிகள் போக்குவரத்துத் துறையில் பணி புரிவோர் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து பணிபுரியும் முறைமை பெருமளவில் அறிமுகப் படுத்தப் பட்டது. மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணைய வெளி மூலம் கல்வி கற்கும் ஏற்பாடு பரவலாக அறிமுகமானது. ஏழை மாணவர்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது

 

ZOOM ஆண்டு

அமெரிக்காவில் வாழும் சீனர் ஒருவர் உருவாக்கிய ZOOM என்ற செயலி உலகெங்கும் பாவிக்கப் பட்டது. காணொலி மூலமான தொடர்பாடல் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் கலவி கற்பவர்களுக்கும் பெரிதும் உதவி செய்தது. உலக முடக்கத்தின் போது ZOOM மூலமான தொடர்பாடல் உலக இயக்கத்திற்கு உதவியது.

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

பல தேசங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்ட இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளை சிதைப்பதில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பகிரங்கமாக செயற்படுகின்ற ஆண்டாக 2020 அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரினாமுல் காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் அமித் ஷா பனர்ஜீயைப் பார்த்து நீ தனித்து நிற்கப் போகின்றாய் என்றார். மக்களாட்சிக்கு பல கட்சிகள் வலிமையாக இருப்பது அவசியம் ஆனால் காங்கிரசுக் கட்சி தலைமையின்றி தடுமாறுகின்றது. ராகுல் காந்தியைத் தவிர மற்ற எல்லோரும் ராகுல் தான் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்கின்றனர். காங்கிரசு கட்சியினர் ராகுல் திறன்படச் செயற்பட வேன்டும் என்கின்றனர். ஆனால் கட்சிக்கு ஒரு திறமை மிக்க தலைவரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் காங்கிரசுக்கு தலைமை தாங்க கூடாது என்பது எழுதாத சட்டமாக உள்ளது.

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு

கடந்த பல பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வரவிலும் பார்க்க அதிக செலவு செய்து வந்த இலங்கை அரசுக்கு கொவிட்-19 கடைசி வைக்கோலாக அமைந்துள்ளது. இலங்கையின் கடன்படு திறனை மூன்று நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தாழ்த்தியுள்ளன. அத்துடன் இலங்கையில் வங்கிகள் ஆபத்தான சூழலில் செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் நிதி உதவு தேவைப்படுகின்றது. 2020இல் இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரை வெறும் கையுடன் திரும்பி அனுப்பியது இலங்கை அரசு. அவர் மிலேனியம் சவால் ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கு 480மில்லியன் டொலர் உதவியை வழங்க தயாராக இருந்தார். அதற்கு பதிலாக இலங்கையை அமெரிக்கப் படைத்துறையினர் கட்டுப்பாடின்றி பாவிக்கும் உரிமையைக் கோரியிருந்தார். சீனாவை அதிருப்திப் படுத்தும் நடவடிக்கையை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

மேற்காசிய அரசுறவியலை மாற்றிய ஆண்டு

இஸ்ரேலுடன் சில அரபு நாடுகள் அரசுறவியல் தொடர்புகளை 2020இல் ஏற்படுத்திக் கொண்டன. ஆனாலும் இஸ்ரேலில் உறுதியான ஆட்சி இல்லை. இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களை இஸ்ரேல் சந்திக்க வேண்டிய சூழல். சவுதி அரேபியா அனுபவமற்ற இளவரசரின் ஆட்சியில் ஆட்டம் காண்கின்றது. ஈரான் படைத்தளபதியினையும் அணு விஞ்ஞானியையும் பாதுகாக்க முடியாமலும் அந்த இழப்பீட்டிற்கு பதிலடி கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. துடுக்குடன் செயற்படும் துருக்கியை அடக்க யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இரசியா

வரலாற்றில் மிகப்பெரிய இணைய வெளி ஊடுருவலை இரசியா அமெரிக்கா மீது செய்து மிகப்பெரிய தகவல் அபகரிப்பைச் செய்தது என்ற குற்றச் சாட்டு இரசியாமீது 2020இல் வைக்கப்பட்டது. அதற்கான அறுவடையை இரசியா 2021இல் செய்யலாம். லிபியாவில் துருக்கியும் இரசியாவும் குட்டையைக் குழப்பின. இரசியா அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதலில் இரசியா அப்பம் பகிரும் வேலையை வெற்றிகரமாக செய்தது. அங்கு துருக்கியையும் பிரான்ஸையும் இரசியா ஓரம் கட்டியது.

அமெரிக்கா

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரையும் தொழில்நுட்பப் போரையும் 2020இல் அமெரிக்கா தீவிரப்படுத்தியது. சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். அது போல் போர் என்றால் பொருளாதாரம் கிழியும். அடி வாங்கிய சீனாவிலும் பார்க்க அடித்த அமெரிக்காவிற்கு அதிக காயம். 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை வெற்றிகரமாகவும் துரிதமாகவும் உருவாக்கிய அமெரிக்கா அடுத்த தலைமுறை பெரு-விமானம் தாங்கிக்கப்பல்களையும் ஆழக்கடல்களில் பாவிக்கத் தொடங்கியது. 2020இல் சீனா தைவானைக் கைப்பற்றாமல் தடுப்பதில் அமெரிக்கா பார்த்துக் கொண்டது.

சீனா

பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா அதே பாணியை இமய மலைச்சாரலிலும் 2020இல் செய்தது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் 2020இல் இரகசியமாக இமையமலைச் சாரலில் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். மேற்காசியாவில் குர்திஷ் மக்களைப் பலி கொடுத்தது போல இமய மலைச்சாரலில் தீபெத்திய இளையோர் பலியிடப்படுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பல ஆசிய நாடுகளுடனும் சீனா செய்துள்ள வர்த்தக் ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பாதிப்பை ஈடு செய்யலாம். சீனாவில் பெருமுதலாளிகள் உருவெடுப்பதை இட்டு 2020இல் சீனப் பொதுவுடமைக் கட்சி கரிச்னை கொள்ளத் தொடங்கியுள்ளது.

FANG நிறுவனங்க்களின் ஆண்டு

FANG என சுருக்கமாக அழைக்கப்படும் Facebook, Amazon, Netfliz, Google ஆகிய நாற்பெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது வருமாந்த்தை பெருமளவில் 2020இல் பெருக்கிக் கொண்டன. இந்த நிறுவனங்களின் தனியாதிக்கத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் தணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். எண்மியக் கொடுப்பனவுகள் 2020இல் மிகவும் அதிகரிதிருந்தன. நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பாவனையும் 2020இல் அதிகரித்திருந்தன. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்துள்ளது.

உலகமயமாதல் நிறுத்தப்பட்டு தேசியவாதம் தலை தூக்கியது. சில்லறை வர்த்தகத் துறை பாதிக்கப்பட்டு இணையவெளி வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சோதனைக்கு உள்ளாகிய வேளையில் குவாட் என்னும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான எண்ணக் கரு 2020இல் உருவானது.

சோதனைகள் நிறைந்த ஆண்டான 2020இல் ஆட்சியாளர்கள் படிப்பினை பெறவில்லை. 

Monday, 28 December 2020

அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்?

 

பன்னாட்டு நியமங்களுக்கு உட்படாமலும் பன்னாட்டு அமைப்புக்களில் விவாதிக்க முடியாமலும் ஒரு நாட்டுக்கு பாதகம் விளைவிக்க் கூடிய வகையில் இன்னொரு நாடு செயற்படுதல் சாம்பல் வெளித் (Gray Area) தாக்குதல் எனப்படும். சாம்பல் வெளி நடவடிக்கைகளை போர்ச் செயல் (Act of War) எனக் கருதப்பட முடியாது. சாம்பல் வெளித் தாக்குதல் செய்யும் போது அதற்கு உடனடியான பதிலடி கொடுக்க முடியாத வகையில் செய்யப்படும். தென்சீனக் கடற்பிரதேசத்தில் கணிசமான பகுதியை சீனா தன் வசமாக்கியதும் உக்ரேனின் கிறிமியாவை இரசியா தனதாக்கிக் கொண்டதும் ஈரான் நாடானது ஈராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியதும் சாம்பல் வெளி தாக்குதல் மூலமாகவே. அமெரிக்காவில் பிரபல்யவாதத்தை இரசியா சாம்பல் வெளி நடவடிக்கைகள் மூலம் வளர்த்தது. ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இணையவெளி ஊடுருவல் மற்றும் தாக்குதல் போன்றவை சாம்பல் வெளித் தாக்குதல் ஆகும்.

அமெரிக்க கணினித் தொகுதிகள் மீது பரவலான தாக்குதல்

அமெரிக்க திறைசேரி, அமெரிக்க வர்த்தக அமைச்சு, அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சு ஆகிய முக்கிய அரசத்துறை, அமெரிக்காவின் முன்னணி உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு முகவரகம் (National Security Agency), அமெரிக்க அணு முகவரகம் போன்ற முன்னணி அரச அமைப்புக்கள்முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் உட்பட பத்தாயிரக் கணக்கான அமைப்புக்களின் கணினித் தொகுதிகள் மீது 2020 டிசம்பர் மாதம் 8-ம் திகதி இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரசிய ஆதரவுடன் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்ட போதிலும் அமெரிக்காமீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் செய்யப்படும் இணைய வெளித் தாக்குதலை நிறுத்த முடியாமல் இருக்கின்றது. இரசியாவில் இருந்துதான் இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் உறுதிபட செய்திகள் வெளியிட்டன. அரச நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் தனியார் நிறுவங்கள் ஒவ்வொன்றினதும் கணினித் தொகுதிகளை தனித்தனி ஊடுருவுவதிலும் பார்க்க அவற்றிற்கெல்லாம் சேவை வழங்கும் நிறுவனத்தின் கணினித் தொகுதிகளை ஊடுருவி பின்னர் எல்லாக் கணினித் தொகுதிகளையும் ஊடுருவும் முறை பாவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. எட்டு மாதங்களாக செய்யப்பட்ட ஊடுருவலை தடுக்க முடியாமல் போனது அதிலும் அதிக ஆச்சரியம் கொடுத்துள்ளது.

டிரம்ப் இரசிய நண்பரா?

2020 டிசம்பரில் செய்யப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது இணையவெளி ஊடுருவலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை புதிய அதிபர் பார்த்துக் கொள்ளட்டும் என்றார். ஈரான் தொடர்பான விவகாரங்களில் உடனுக்குடன் பதிலடி நடவடிக்கை எடுக்கும் டிரம்ப் இதில் தயக்கம் காட்டுகின்றார். புதிதாகப் பதவியேற்கவிருக்கும் அதிபர் ஜோன் பைடன் டிரம்ப் ஊடுருவிகள் யார் என இனம் காணவேண்டும் என்றதுடன் வழமையான முறைப்படி ஊடுருவல் தொடர்பான தகவல்களை டிரம்ப் தன்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தார். டிரம்பினுடைய சட்டமா அதிபர் வில்லியம் பார் இரசியாதான் சாத்தியமான ஊடுருவல் குற்றவாளி என்றார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் (அமைச்சர்) மைக் பொம்பியோ இத்தகைய பொறுப்பற்ற, பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை இரசியாவால் மட்டுமே செய்ய முடியும் என்றார். டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் எல்லாவற்றிற்கும் இரசியா, இரசியா, இரசியா எனக் குற்றம் சாட்ட முடியாது சீனாவும் செய்திருக்கலாம் என்றார்.

தாக்குதல் நடந்த விதம்

அமெரிக்காவின் Solar Winds என்ற கணினிச் சேவை நிறுவனம் பல அமெரிக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினிகளுக்கான மென்பொருள் மற்றும் பராமரிப்பு சேவைகளைச் செய்கின்றது. அதன் கணினிகளை ஊடுருவி அது சேவை வழங்கும் நிறுவனங்களின் கணினிகள் ஊடுருவப்பட்டுள்ளன. Solar Winds கணினிச் சேவை நிறுவனம் தனது மென்பொருள்களை புதுப்பிக்கும் (updating) பணியைச் செய்த போது அதன் மென்பொருளில் ஊடுருவிகள் தங்களது தீங்குநிரலியை (Malware) இணைத்து விட்டனர். அதனால் Solar Winds கணினிச் சேவை நிறுவனத்தின் மென்பொருட்களைப் பாவிக்கும் எல்லா கணினிகளையும் அந்த தீங்குநிரலி சென்றடைந்து தனது ஊடுருவல் பணியைச் செய்யத் தொடங்கியது. இதனால் Solar Windsஇன் முதன்மை நிறைவேற்று அதிகாரி பதவி விலகியுள்ளார். Solar Windsஇன் கணினிகள் ஊடுருவப்பட்ட செய்தி வெளிவர முன்னரே அதனது சில பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டதும் அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Solar Winds மீதான ஊடுருவல் நீண்ட காலம் நடந்த தாக்குதல் மட்டுமல்ல அமெரிக்காவின் தகவல்களின் தங்கச் சுரங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல், மின்னஞ்சல்கள் மிக அதிக அளவினதாகும். இந்த ஊடுருவலின் போது தகவல் திருடப் பட்டது மட்டுமே நடந்துள்ளது. மென்பொருள்களைச் சிதைத்தல் கணினித் தொகுதிகளை செயற்பட முடியாமல் செய்தல் போன்ற அழிப்பு நடவடிக்கைகள் செய்யப் படவில்லை.

ஒரு வலிமை மிக்க நாடுதான் செய்திருக்க வேண்டும்

Solar Winds கணினிச் சேவை நிறுவனத்தின் அதிகாரிகளின் கருத்துப்படி தங்களது கணினித் தொகுதிகளில் இணைக்கப்பட்டுள்ல மென்பொருளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து ஊடுருவுவதற்கு உயர் தொழில்நுட்பம், அதிக அளவிலான நிபுணர்கள், சிறந்த அனுபவம் தேவை என்பதால் அதை ஒரு வெளிநாடு ஒன்றுதான் செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் இத்தகைய ஊடுருவலை இரசியா அல்லது சீனாவால் மட்டுமே செய்ய முடியும் என்கின்றனர். தாக்குதலுக்கு பாவிக்கப் பட்ட மென்பொருள் FireEye எனவும் அறியப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஓர் இடத்தில் உள்ள கணினிகளை இயக்குவதன் மூலம் ஊடுருவல் நடந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இரசிய உளவுத்துறையின் நூற்றாண்டுக் கொண்டாட்டம்

இரசியாவில் FSB என்ற உள்நாட்டு உளவுத்துறையும் SVR என்ற வெளிநாடு உளவுத்துறையும் உள்ளன. இரசிய SVR உளவுத்துறையின் 100வது ஆண்டு விழா 2020 டிசம்பர் 20-ம் திகதி கொண்டாடப் பட்டது. இரசிய உளவுத்துறையின் தலைமையகத்தில் உரையாற்றிய முன்னாள் உளவாளியும் தற்போதைய இரசிய அதிபருமான விளடிமீர் புட்டீன் இரசியாவையும் அதன் மக்களையும் பாதுகாப்பதில் இரசிய உளவுத்துறையின் பங்களிப்பை மிகவும் பாராட்டினார். 100வது ஆண்டு நிறைவு நாளில் இரசிய உளவுத்துறைக்கு ஓர் ஊக்கம் கொடுக்கும் வகையில் இரசியா அமெரிக்காவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஓர் இணையவெளி ஊடுருவலைச் செய்ததா எனக் கருத இடமுண்டு. இரசிய SVR உளவுத்துறை சில மாதங்கள் உறங்கு நிலையில் இருந்து விட்டு பின் திடீரென அமெரிக்க இணையவெளியில் ஊடுருவலைச் செய்துள்ளது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பதிலடி

இரசியாவில் இருந்து செய்ததாக கருதப் படும் ஊடுருவல் பல தடவைகள் நடந்துள்ளன. இதற்கு எப்போது, எங்கே, எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கப் போகின்றதுச் என்ற கேள்விக்கான பதிலை சரியாக அறிவது கடினம். பதில் ஊடுருவல் அமெரிக்கா மீதான ஊடுருவல்களை இன்னும் தீவிரமடையச் செய்யும். அதனால் இரசிய அதிபர் புட்டீனின் உத்தரவின் பேரில் இந்த ஊடுருவல் நடந்தது என்பதற்கான ஆதாரங்களுக்கு அமெரிக்கா காத்திருக்கலாம். பின்னர் புட்டீனின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நிதித்துறை தாக்குதல்களை அமெரிக்கா செய்து அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பீடுகளை ஏற்படுத்த்லாம்.

கணினித்துறை நிபுணர்கள் இரசியாதான் செய்திருக்க வேண்டும் எனச் சொன்னாலும் தங்களால் அதை உறுதி செய்ய முடியாது என்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் இணையவெளிப்பாதுகாப்பு (Cyber Security) பாதுகாப்பற்றது என்பதை தம்மால் உறுதியாகக் கூற முடியும் என்கின்றனர்.

Monday, 21 December 2020

சீனாவிற்கு தன்னம்பிக்கை இல்லையா?

 


சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19வது நடுவண் குழு 2020 ஒக்டோபர் 26 – 29 திகதிகளில் கூடி 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைபை உருவாக்கியது. அதன் முழு விபரமும் 2021 மார்ச் மாதத்தில் நடக்கும் தேசிய மக்கள் பேராயம் (National People’s Congress) என்னும் 2980 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள சீன நாடளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும். 1953-ம் ஆண்டில் இருந்து சீனா ஐந்தாண்டு திட்டங்களை வரைந்து அவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனா அடைந்துள்ள தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். சீனா தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கின்றது என அதன் புள்ளி விபரங்கள் சொன்னாலும் அதன் ஆட்சியாளர்களோ பொருளாதார திட்டமிடுபவர்களோ சீனா தொடர் பெருதார வளர்ச்சியடைவது போல் செயற்படுவதில்லை. சீனப் பொருளாதாரத்தையிட்டு அவர்கள் தொடர்ச்சியாக கரிசனை கொண்டவர்களாகவே செயற்படுகின்றனர்.

பெருமையடைந்த சீனர்கள்

சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 1) 2035இல் சீனாவின் சமூகவுடமையை நவீனமயமாக்கல். 2) உயர் கதி உயர் தரப் பொருளாதார வளர்ச்சி, 3) விநியோகப் பக்க சீர்திருத்தம், 4) தொழில்நுட்ப மேம்பாடு, 5) தேச வலிமை, 6) முலதன நகர்வுகளை அனுமதித்தல், 7) உற்பத்தித் துறையை பசுமயாக்குதல்,. சீனா கொவிட்-19 தொற்று நோயைக் கையாண்ட விதத்தையிட்டு சீனாவின் எல்லாத் தரப்பினரும் பெருமையடைந்துள்ளனர். உலகின் முன்னணி நாடுகளில் சீனா மட்டுமே 2020இல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் கிடைத்த நம்பிக்கை சீனாவின் புதிய ஐந்தாண்டு திட்டத்தில் பிரதிபலிக்கின்றது.



நிதிச் சந்தையை திறந்தவிட்ட சீனா

சீனா தனது 15ரில்லியன் டொலர் பெறுமதியான நிதிச் சந்தையில் வெளிநாட்டவர்களும் பங்கு பற்றலாம் என 2020 நவம்பரில் அறிவித்தது. அதனால் சீர அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டவர்களிடம் கடன் வாங்கலாம். அதாவது சீனக் கடன்முறிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய சீன அரசு அனுமதித்துள்ளது. இது சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டம்-2021-25இன் ஓர் அம்சமாகும். அத்திட்டத்தின் படி சீனர்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம். அதாவது இதுவரை ஐ-போன்களை வாங்கி வந்த சீனர்கள் இனி அப்பிள் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கலாம். சீனாவின் பல உள்ளூராட்சி அமைப்புக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் முதலீட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறியப் படுகின்றது. இதனால் சீனா வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சீனாவில் ஏன் முதலீட்டு தட்டுப்பாடு?

சீனப் பொருளாதாரத்தின் வலுவற்ற புள்ளி

பொருளாதாரத்தில் விநியோகப் பக்கம், கேள்விப்பக்கம் என இரு பக்கங்கள் உள்ளன. கேள்விப் பக்கத்தில் பொருளாதாரத்தில் செய்யப்படும் முதலீடு, நாட்டு மக்களின் மொத்தக் கொள்வனவு, நாட்டில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. விநியோகப் பக்கத்தில் நாட்டின் மக்களின் உழைப்பு, நாட்டில் செயற்படும் மூலதனம், தொழில்நுட்பம், அரசின் செயற்பாடுகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனாவின் கேள்விப் பக்கத்திலும் பார்க்க விநியோகப் பக்கம் அதிகமாக உள்ளது. அதனால் சீனப் பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியுள்ளது. தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் சீன மக்களின் கைகளில் அதிக நிதி இருக்க வேண்டும். அதனால் அவர்கள் அதிக கொள்வனவைச் செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் அதன் மொத்த தேசிய உற்பத்தி அதன் மக்களின் கொள்வனவிலேயே பெரிதும் தங்கி இருக்கின்றது. சீன மக்கள் ஏன் இன்னும் பொருளாதாரத்திற்கு தேவையான கொள்வனவைச் செய்யவில்லை?

ஆன்மீக அமைப்பிற்கே அஞ்சுகின்றதா சீனா?

சீனாவின் ஃபலுங் கொங் (Falun Gong) என்ற ஆன்மிக அமைப்பின் வலைத்தளங்களை சீன அரசு தடை செய்தது. அதன் வலைத்தளங்கள் மீது சீன அரசும் பொதுவுடமைக் கட்சியினரும் பல இணையவெளித் தாக்குதல்களை மேற்கொண்டனர். பிரித்தானியாவின் உள்ள வொடாஃபோன் நிறுவனத்தின் கைப்பேசிகளிலும் அவை தடை செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் தியானம் செய்வதை முக்கிய செயற்பாடாக் கொண்ட இந்த அமைப்பை சீனா ஏன் தடை செய்ய வேண்டும் என்பது முதற் கேள்வி. இரண்டாவது கேள்வி சீன அரசு ஹுவாவே நிறுவனம் மூலம் ஹுவாவேயின் கருவிகளைப் பாவிக்கும் வெடாஃபோன் நிறுவனத்தின் கணினிகளை ஊடுருவி ஃபலுங் கொங் நிறுவனத்தின் இணையவெளித் தளத்தை தடை செய்ததா? இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க வொடாஃபோன் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது தொடர்பான உண்மைகள் வெளிவந்தால் வொடாஃபோன் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என அது அஞ்சுகின்றதா என்பதும் ஒரு கேள்வியாக உருவெடுக்கின்றது. தொடர்ச்சியாக பொருளாதார வெற்றியைக் கண்டு வரும் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் ஏன் ஒரு தியான அமைப்பிற்கு அஞ்சுகின்றார்கள்?

ஏன் இந்த இறக்குமதிக் கட்டுப்பாடு?

தொடர்ச்சியாகப் பொருளாதார வெற்றியை அடைந்த நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வரும் பொருட்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளையோ இறக்குமதி வரிகளையோ விதிக்க வேண்டியதில்லை. தமது நாட்டு மக்கள் தரமான பொருட்களை வாங்கி அனுபவிக்கட்டும் என அரசு அனுமதியளிக்கும். ஆனால் சீனா அப்படிச் செய்வதில்லை. பல சந்தர்ப்பங்களில் வேண்டு மென்று சில குற்றச் சாட்டுகளை முன் வைத்து வெளிநாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு பொருட்கள் வருவதை சீனா தடை செய்கின்றது. 2020 டிசம்பர் முதல் வாரத்தில் ஒஸ்ரேலியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதியாகும் ஆட்டு இறைச்சியை சீனா தடை செய்துள்ளது. ஒஸ்ரேலியாவில் இருந்து வரும் ஆட்டு இறைச்சி மூலம் சீனாவில் கோவிட்-19 தொற்று நோய் பரவும் என சீன அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் சீனா ஒஸ்ரேலியாவிற்கு பல மிரட்டல்களையும் விடுத்துள்ளது. சீனாவைப் பகைத்தால் சீனா ஒஸ்ரேலியாவிற்கு மோசமான எதிரியாகும் என சீனா தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு மற்ற நாடுகளுடன் எப்படி பொருளாதார ஒத்துழைப்புக்களை மேற்கொள்வது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தும். மற்ற நாடுகளை மிரட்டுவது ஒரு பொருளாதார வளர்ச்சியடைந்த நாட்டுக்கு உரியதல்ல.

வெளிப்படைத் தன்மைக்கு ஏன் அஞ்ச வேண்டும்?

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீன ஊடகங்கள் எப்போதும் அரசுக்கும் பொதுவுடமைக் கட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கின்றார். சீன ஊடகர்களின் மனதில் ஜீ ஜின்பிங்கின் சிந்தனைகள்தான் படைக்கலன்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கையாக இருக்கின்றது. தொடர் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாட்டு மக்களுக்கு ஊடக சுதந்திரம் சிறந்த தகவல் வழங்கலாம். ஆனால் சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதில்லை. வெளிநாட்டு ஊடகர்கள் மீதும் சீனாவில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சீனா தன் உண்மை முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...