Thursday, 3 October 2013

இந்தியப் பேரினவாத அரசியலும் ஊழல்களும்

இந்தியாவின் கட்சிகளிடையான கூட்டணியை கட்சித் தலைவர்களின் ஊழல் தொடர்பான இந்திய உளவுத்துறையிடம் இருக்கும் கோப்புக்கள் தீர்மானிக்கின்றன. கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் குடும்பம் மற்றும் சாதிப் பின்னணிகள் தீர்மானிக்கின்றன. வாக்காளர்கள் எந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதை புரியாணிப் பொட்டலங்களும் மதுப் புட்டிகளும் தீர்மானிக்கின்றன.

கேலிக்குரிய மக்களாட்சி

ஒரு நாட்டில் மக்களாட்சி சிறப்பாக நடைபெற வேண்டுமாயின் அரசமைப்பு மக்களாட்சி முறைமைப்படியானதாக இருந்தால் மட்டும் போதாது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய பதவிகளுக்கான தேர்வும் மக்களாட்சி முறைமைப் படி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பல முன்னணி அரசியல் கட்சிகளில் குடும்ப ஆதிக்கமே நிலவுகிறது. இது இந்திய மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கி விட்டது.

பேரினவாதம்
1960களின் பிற்பகுதி வரை இந்தியாவை காங்கிரசுக் கட்சி ஆண்டு வந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்கள், கனவான்கள், ஊழலற்றவர்கள் என்ற ஒரு போர்வையில் காங்கிரசுக் கட்சியினர் இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஜவகர்லால் நேரு ஒரு செல்வந்தர். அவருக்கு ஊழல் செய்ய வேண்டிய அவசியமில்லை என மக்கள் நம்பியிருந்தனர். அவரின் வழித்தோன்றல்களையும் மக்கள் அப்படியே நம்பினர். பின்னர் ஜவகர்லால் நேரு உண்மையிலேயே ஒரு இந்துப் பிரமணரா அல்லது ஒரு இசுலாமியர் இந்து வேடமிட்டாரா என்ற கேள்வி 1960களின் பிற்பகுதியில் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கி விட்டது. ஆரியப் பேரினவாதத்தில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். நேரு குடும்பத்தினர் மாநிலங்களில் நல்ல தலைவர்கள் உருவானால் அது தமது செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாகும் என்பதால் மாநிலங்களில் தமது கைப்பொம்மைகளைத் தலைவர்களாக முன்னிறுத்தினர்.

மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் சரணடைவும்
நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்திலும் பேரினவாதத்திலும் மாநில மக்கள் நம்பிக்கை இழக்க மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறத் தொடங்கின. 1967இல் சி என் அண்ணாத்துரை அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் பெரு வெற்றியீட்டி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் எந்தக் காங்கிரசுக் கட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனரோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தினால் அது கட்சி நிதி, குடும்ப நிதி போன்றவற்றை மேம்படுத்த உதவும் என்பதுடன் மாநிலத்திலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உதவும். பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் எல்லாம் மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதையையும் மத்திய அரசின் அமைச்சரவையில் பதவிகள் பெறுவதையும் தவறாமல் செய்து வந்தன. இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும். காங்கிரசில் இருந்து வெளியேறி காங்கிரசுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மம்தா பனர்ஜீ பின்னர் மத்திய அரசில் காங்கிரசுடன் இணைந்து கொண்டார். இப்போது வெளியேறி வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மயாவதியின் கதையும் மம்தாவின் கதை போன்றதே. மத்தியில் தொடர்ந்து முக்கிய அமைச்சர்களை வைத்திருக்கும் மாநிலங்கள் பொருளாதாரத்திலும் முன்னேறிய மாநிலங்களாக இருக்கின்றன. காங்கிரசுக் கட்சியின் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் பார்க்க மாநிலக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.


மூன்றாம் அணி
இந்தியாவில் காங்கிசையும் பாரதிய ஜனதாக் கட்சியையும் புறம் தள்ளிவிட்டு முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஒரு மூன்றாம் அணி உருவாக்கும் முயற்ச்சி பெரும் வெற்றி அளிக்கவில்லை. ஆனால் தேசியக் கட்சிகள் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஈடுபடுவதாலும் பெரும் பண முதலைகளின் பின்னால் போவதாலும் மூன்றாம் அணி உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று தூய்மையான முற்போக்காளர்கள் இன்றும் நம்புகின்றனர். ஆனால் மூன்றாம் அணி இயற்கை இறப்பை எய்தி விட்டது என்கின்றனர் சிலர். மேற்கு வங்கத்து மம்தா பனர்ஜீ, உத்தரப் பிரதேசத்து மாயாவதி, பிஹாரின் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசத்து அகிலேஷ் யாதவ் தமக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைப் போட்டு உடைத்து விட்டனர்.  கம்யூனிசக் கட்சிகள் யாருடன் கூட்டுச் சேரவது என்பது பற்றி பல சித்தாந்த முரண்பாடுகளைக் கொண்டுள்ளனர். அவை மம்தா பனர்ஜீ போன்றவர்களுடன் கூட்டுச் சேர மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் தலைமை அமைச்சர் கனவு
ஜெயலலிதாவிற்கு சில சோதிடர்கள் இந்தியாவின்  தலைமை அமைச்சராக வரும் பாக்கியம் உண்டு என்று சொல்லி விட்டார்கள். கடந்த தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற பெரும் வெற்றி அவருக்கு அந்தச் சோதிடர்களின் கூற்றில் நம்பிக்கை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டில் எல்லாப் பாராளமன்றத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். தான் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு கூட்டணி அரசில் சுழற்ச்சி முறையிலாவது இந்தியாவின் தலைமை அமைச்சராக ஆகலாமா என்ற நப்பாசையும் அவருக்கு இருக்கிறது. அத்துடன் ஒரு வெளிநாட்டமைச்சர் பதவியாவது பரவாயில்லை என்ற ஆசையும் இருக்கிறது.

பேரினவாதத்திற்கு அச்சுறுத்தல்
மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி இந்தியாவின் பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என பேரினவாதிகள் அச்சமடையத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் 2014இல் நடக்கவிருக்கும் தேர்தலில் எந்த ஒரு தேசியக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையான ஆசனங்களுடன் வெற்றி பெற மாட்டாது என்ற எதிர்பார்ப்பு 2010இல் இருந்தே உருவாகத் தொடங்கி விட்டது. அடுத்த இந்தியப் பாராளமன்றம் ஒரு மாநிலக் கட்சிகளின் கூட்டணியாலே ஆளப்படும் என்ற எதிர்பார்ப்பு பேரினவாதிகளை மட்டுமல்ல பேரினவாதக் கொள்கை கொண்ட மதவாதிகளையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. காங்கிரசுக் கட்சியைத் தோற்கடிக்கவும் தேசிய ரீதியில் காத்திரமான வெற்றியையும் ஈட்டக் கூடிய ஒரு தலைவர் அவசியம் என எண்ணி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அந்த வேடத்தை வழங்குவதற்கான ஒப்பனையை தொடங்கி விட்டது. நன்கு திட்டமிடப்பட்டு மோடி படிப்படியாக ஒரு தேசியத் தலைவராக உருவாக்கப்பட்டு விட்டார். அவரது மதவாததை மூடி மறைக்கப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவருக்கு பல மொழிகள் போதிக்கப்படுகின்றன. இப்போது நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஊழல்கள் இந்தியாவின் கரிகாலம்
2010-ம் ஆண்டு 2G அலைக்கற்றை ஊழல், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆகியன உலகின் மிகப்பெரிய ஊழல்களாக அறிவிக்கப்பட்டன. 2011இல் உத்தரப் பிரதேச NRHM ஊழல் பத்தாயிரம் கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. , இஸ்ரோ ஊழல் இரண்டு இலட்சம் கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. , NTRO ஊழல் எண்ணூறு கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. . ஆந்திரப் பிரதேச நில ஊழல் ஒரு இலட்சம்  கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. குஜாராத் பிஎஸ்யூ ஊழல் பதினேழாயிரம் கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. பல முத்திரைத் தாள் ஊழல்களும் செய்யப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியதில் ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய்(Rs1,860,000,000,000) இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரச கணக்காய்வாளரும் கட்டுப்பாடாளாரும் சமர்ப்பித்த அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஊழலில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அவர் அது தொடர்பான கோப்புக்கள் காணாமல் போய் விட்டதாகக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பார்ப்பன ஊடகங்கள் நரேந்திர மோடியை தூக்கிப் பிடித்துப் பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டன. நாட்டு மக்கள் பெரிதும் வெறுக்கும் பெரும் ஊழல்களில் இருந்து மோடி நாட்டைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு வெற்றீகரமாக ஊட்டபப்ட்டு விட்டது. சில பார்ப்பனக் கும்பலகள் அடுத்த ஆட்சிக்கு யார் வருவார் என்பதை முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப தமது காய்களை நகர்த்தும் திறனுடையவை.

இந்தியாவின் ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருமா என்ற எதிர்பார்ப்பை சுப்பிரமணிய சுவாமி பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தமை தவிடு பொடியாக்கி விட்டது. அவர் வெளிநாட்டமைச்சரானால் தமிழர்களின் கதி அதோ கதிதான்!!!!!

Wednesday, 2 October 2013

மஹிந்தரின் வேட்டியை உருவிய அல் ஜசீரா

அரசியல்வாதிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதாலும் பெரும் தொகைப் பணத்தைச் சம்பாதிப்பதுண்டு. சில அரசியல்வாதிகள் பேட்டியளிக்க முன்னர் பல நிபந்தனைகளை விதிப்பதுண்டு. பல பிரபல ஊடகங்கள் தாம் கண்ட பேட்டியில் சிலவற்றைத் தணிக்கை செய்து தாம் விரும்பியபடி திரித்து வெளியிடுவதுமுண்டு. பிரச்சனைக்குரிய கேள்விகள் கேட்பதால் பல பேட்டிகள் இடையில் முறிவதும் உண்டு. மஹிந்த ராஜபக்ச அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பார்க்கையில் மனதில் படுவது:
1. பேட்டி கண்ட ஜேம்ஸ் பே தனது வீட்டு வேலையை மிகத் திறமையாகச் செய்திருந்தார். தற்போதைய இலங்கை நிலவரம் தொடர்பான முக்கிய விபரங்களைக் கவனமாகத் திரட்டி அவற்றை ஒட்டி தனது கேள்விகளை முன்வைத்தார். தான் இலங்கை மஹிந்தருடன் ஒரு மோதலை விரும்பவில்லை என்பதை  மஹிந்தருக்கு உணர்த்துவதாக அவரது கேள்விகள் அமைந்திருந்தன.
2. பேட்டி கண்ட ஜேம்ஸ் பே தனது பேட்டி இடையில் முறியாதிருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளர் தனக்குக் கொடுத்த நேரத்தை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தினார்.

தங்கத் தாயத்து.
பேட்டி தொடங்கியதில் இருந்து முடியும் வரை பளபள என மின்னும் தங்கத்தால் அல்லது தங்க முலாம் பூசிய ஒரு அழகிய பௌத்த சின்னம் கையில் வைத்திருந்தார். அது அவர் நேபாளத்தில் இருந்து பெற்ற ஒரு வகைத் தாயத்து எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அவரது பேட்டிக்கு அந்தத் தங்க நிறத் தாயத்து எந்த உதவியையும் செய்யவில்லை. பேட்டியின் பல இடங்களில் மஹிந்தருக்கு வார்த்தைகள் தடுமாறின. ஜப்பானின் பெயருக்குப் பதிலாக ருஷ்யா எனக் குறிப்பிடத் தொடங்கிப் பின்னர் சுதாகரித்துக் கொண்டார்.
பேட்டி ஒளிபரப்ப முன்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் அசிங்கங்களைப் பற்றி சுருக்கமாக கூறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் நவி பிள்ளை இலங்கையைப் பற்றிக் கூறியவை ஒலிபரப்பப்பட்டது:
  • இலங்கைப் படைத்துறையினர் இலங்கையரின் வாழ்வில் பலவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள், மௌனிக்கப்படுகிறார்கள், கொல்லவும் படுகின்றார்கள். சிறுபான்மை கிருத்தவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்கள் கூட தாக்கப்படுகின்றார்கள். இவையாவும் மஹிந்த ராஜபக்சவின் கண்காணிப்பின்கீழ் நடக்கின்றன. நவி பிள்ளையின் அறிக்கை அரசாலும் அதன் ஆதரவாளர்களாலும் கடுமையாக மறுதலிக்கப்படுவதும் அவர் மீது வார்த்தைப் போர் தொடுக்கப்படுவதும் அவர் மீது தமிழ்ப் புலி எனப் பட்டம் சூட்டப்படுவதும் நடக்கின்றன.

இப்படி ஒரு "அறுமுகத்துடன்" தனது பேட்டி ஒலிபரப்பாகும் என ராஜபக்ச எதிர்பார்த்திருந்த்திருக்க மாட்டார்.

நவி பிள்ளையை மஹிந்தரும் விட்டு வைக்கவில்லை. நவி பிள்ளை இலங்கைக்கு வர முன்னரே தனது அறிக்கையைத் தயார் செய்துவிட்டார் என்றார் மஹிந்தர். நவி பிள்ளை தன்னிடம் எந்த ஒரு குற்றச் சாட்டையும் முன்வைக்கவில்லை என்றார் மஹிந்தர். நவி பிள்ளையை இலங்கை சென்று நிலைமையை அவதானித்து மனித உரிமைக்கழகத்திற்கு அறிக்கை சமர்பிக்கும்படியே பணிக்கப்பட்டார். மஹிந்தரிடம் புகார் கொடுப்பது அவரது பணி அல்ல என்பதை மஹிந்தர் உணர மறுத்து விட்டார்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த இலங்கை அரசியல்வாதிகள்
  • வட மாகாண சபைத் தேர்தலின் போது நடந்தவை பற்றிக் கதை எடுத்தவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வடக்கில் தேர்தல் நியாயமாகவும் சுததிரமாகவும் நடந்ததாகக் கூறினார்கள் என்றார் மஹிந்தர். ஐரோப்பிய ஒன்றியம் தான் வட மாகாணசபைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டது. மஹிந்தவின் பதில் உண்மைக்கு மாறானது. ஜேம்ஸ் பே பொதுநலவாய நாடுகளின் அறிக்கையில் இருந்து முக்கிய பகுதியை வாசித்துக் காட்டினார். தேர்தல் முடிவுகள் தனக்கு பாதகமாக இருந்ததை மஹிந்த தனக்கு ஆதாரமாக முன் வைத்தார். 
  • ஆள் கடத்தல் பற்றிக் கேள்வி கேட்டால் இதுவரை அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டார்கள் எனக் கூறி வந்த மஹிந்தர் இப்போது ஒரு புதுக் கவிதையை அவிழ்த்து விடுகிறார். காணாமல் போனவர்கள் ஒட்டல்களில் காதலர்களுடன் களவாகத் தங்கி இருக்கிறார்களாம்.  
  • தமிழர் பிரதேசங்களில் அளவிற்கு அதிகமாகப் படையினர் இருக்கின்றனர் என்பது பற்றிக் கேட்ட போது மஹிந்த ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டார். தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு எட்டாயிரம் அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டாயிரம் படையினர் மட்டுமே இருக்கின்றனர் என்றார். ஆனால் தமிழர் பிரதேசத்தில் எழுபத்தையாயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட படையினர் இருக்கின்றனர்.
  • சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தப்படுவதாக ஜேம்ஸ் பே கேட்டதற்கு மஹிந்தவின் பதில் ஆறுவயதுச் சிறுமியைக் கற்பழித்ததால் மக்கள் ஆத்திரப்பட்டு ஒன்று கூடித் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்றார். 
  • கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியாவில் குடிதண்ணீர் மாசுபட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது இலங்கைப் படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதைப் பற்றி கேட்டபொது அது பற்றி விசாரணை நடக்கிறது அறிக்கைக்கு  தான் காத்திருப்பதாக மஹிந்த கூறினார் ஆனால் இலங்கைப் படைத்துறை விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்துப் பல நாட்களாகிவிட்டன.  
  • வட மாகாண சபைத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடையும் எனத் தனக்குத் தெரியும் என்றார் மஹிந்தர். ஆனால் அவர் தேர்தல் பிரச்சார மேடையில் கூறியவை வேறு விதமாக இருந்தது.

பொய்யை அனுமதித்த ஜேம்ஸ் பே
மஹிந்தர் தனது மோசமான ஆங்கிலத்தில் Al Jazeera was in front of the battle field என்றார். ஜேம்ஸ் பே அல் ஜசீரா போர் முனைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தான் நினைக்கவில்லை எனக் கூறினார். மஹிந்தர் இல்லை அல் ஜசீராவை நாம் அனுமதித்தோம் என்றார். அதை தன் உடல் மொழி மூலம் உதாசீனம் செய்த ஜேம்ஸ் பே கேள்வியை போர்க் குற்றத்திற்கு மாற்றினார். ஆனால் மஹிந்த முன்பு கூறியது போல் தனது படையினர் ஒரு கையில் மனித உரிமை பற்றிய கையேட்டையும் மறு கையில் துப்பாக்கியையும் வைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள் என்று சொல்லவில்லை.

அமெரிக்கா மீது கடும் தாக்குதல்
பேட்டியில் அமெரிக்காவை மறை முகமாகவும் கடுமையாகவும் மஹிந்தர் தாக்கினார்.  சில நாடுகள் தம்மை காவற்துறையினராகக் கருதிக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்றும் சின்ன நாடுகளை மிரட்டுகிறார்கள் என்றும் மஹிந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கூறியதை பேட்டியில் மீண்டும் கூறினார். எந்த நாடுகள் என ஜேம்ஸ் பே கேட்ட போது  சிலர், சில நாடுகள் என்றார் மஹிந்தர். இந்தியா இலங்கை பற்றிக் கூறும் குற்றச் சாட்டுகளைப் பற்றி கேட்ட போது. இந்தியா எமது நெருங்கிய நண்பன் அது (உள்ளூர்) அரசியல் காரணங்களுக்காக சிலவற்றைச் சொல்கிறது என்றார்.

களம் பல கண்ட வீரரின் மோசமான மொழி வளம்
மஹிந்த ராஜபக்சவின் தந்தையார் எஸ் ஆர் டபிளியூ பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் தொடர்ந்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசுகளிலும் முக்கிய அமைச்சராக இருந்தவர். மஹிந்த ராஜபக்ச நீண்டகாலம் அரசியலில் இருப்பவர். நீண்டகாலம் பாராளமன்ற உறுப்பினராக இருந்தவர் பிரேமதாசாவின் ஆட்சியில் நடந்த மனித உரிமை மீறல்களை ஜெனிவாவரை சென்று எடுத்துச் சொன்னவர். எல்லாவற்றிற்கும் மேலாக சட்டம் படித்துத் தேறியவர். ஆனால் அவரது ஆங்கில உச்சரிப்புக்களும் வார்த்தைப் பிரயோகங்களும் மோசமானவையாக இருந்தன. உதாரணமாக நவி பிள்ளையை He என்றார்.  Isolated incidents என்று பாவிக்கப்பட வேண்டிய இடங்களில்  individual incidents என்று பாவித்தார்.  ஒரு நண்பரிடம் மஹிந்தரின் பேட்டி சட்டம் படித்தவன் கதைக்கும் ஆங்கிலம் போல் இல்லை என்றேன். அதற்கு அவர் கொடுத்த பதில்: மச்சான் உவன் குதிரை ஓடித்தான் பாஸ்பண்ணினவன். கொழும்பு ஊடகமொன்றில் பின்னூட்டமிட்ட ஒரு வாசகர் மஹிந்தர் இரசியத் தலைவர்கள் போல தாய் மொழியில் பேட்டி கொடுத்திருந்திருக்கலாம்; ஆங்கிலத்தில் உபதலைப்பிட்டு பேட்டியை ஒளிபரப்பி இருந்திருக்கலாம் எனப் பதிவிட்டார்.

பேட்டியின் இறுதியில் உங்களது நாடு பற்றிய உங்களது நோக்கு என்ன எனக் கேட்டபோது செழுமை எனப் பதில் கூறிப் பேட்டியை முடித்தார். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் காணாமல் போனோர் பட்டியலில்!

Tuesday, 1 October 2013

"இழுத்து முடப்பட்டது" அமெரிக்க "அரசு"

அமெரிக்க நிர்வாகத்திற்கும் மக்களவைக்கும் மூதவைக்கும் இடையிலான இழுபறியால் அமெரிக்க அரச பணிமனைகள் பல மூடப்பட்டன. அமெரிக்க அரசியல் யாப்பின்படி அமெரிக்க அரச செலவீனங்களை அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசு அங்கீகரிக்க வேண்டும். காங்கிரசில் மக்களவை மூதவை என இரு சபைகள் இருக்கின்றன. இவை இரண்டும் அரச செலவீனங்களை அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். மக்களவையில் குடியரசுக் கட்சியினர் பெரும் பான்மையாகவும் மூதவையில் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கின்றனர்.

Obamacare என்னும் பெயரில் பிரபலமான The Patient Protection and Affordable Care Act (PPACA) என்னும் சட்டம் அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசில் பெரும் முறுகலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு மருத்துவக் காப்புறுதிச் சட்டமாகும்.  ஆரம்பத்தில் குடியரசுக் கட்சியினர்  அதிபர் பரக் ஒபாமாவையும் அவரது மருத்துவக் காப்புறுதிச் சட்டத்தையும் கிண்டலாக Obamacare என அழைத்தனர். அது பின்னர் பிரபலமாகி ஒரு நற்பெயராகிவிட்டது.  2010இல் Obamacareஇற்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது.  2012இல் அமெரிக்க உச்ச நீதிமனறம் Obamacare செல்லுபடியான சட்டம் என தீர்ப்புக் கூறியது.

Obamacare அரச செலவீனங்களை அதிகரிக்கும் அதனால் அதிக வரிச் சுமை செல்வந்தர்கள் மீது சுமத்தப்படும் என்பதால் குடியரசுக் கட்சியினர் அதை எதிர்த்தனர். 20-09-2013 குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை Obamacareஇற்கான நிதி ஒதுக்கீட்டை இரத்துச் செய்தது. Obamacareஇல் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து குருவின் காலைப் பிடித்து விடுவதில் சீஷ்யர்களுக்கு இடையில் போட்டி வந்து இரு கால்களையும் சீஷ்யர்ள் மாறிமாறித் தாக்கியது போல் மக்களவையும் மூதவையும் மாறி மாறி ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட சட்டங்களை இயற்றின. இதனால் அமெரிக்க அரசை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டது. அமெரிக்க அரசின் பல பணிமனைகள் மூடப்பட்டன. 800,000இற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் ஊதியமில்லா விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.

Monday, 30 September 2013

ஈரான் மீதான் பொருளாதாரத் தடையும் அமெரிக்ககவின் பொருளாதாரத் தேவையும்

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது.

ஈரான் அணுக் குண்டைத் தயாரிப்பதற்காக யூரேனியத்தைப் பதப் படுத்துவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் சொல்லிக் கொண்டிருக்கிறன. ஈரான் சமமாதான நோக்கத்திற்காகவே தான் யூரேனியத்தைப் பதப்படுத்துவதாக அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை தொடர்ந்து மேற்கொள்வேன் என அடம்பிடித்தது. ஈரான் அணு குண்டு தாயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் உறுதியாக அறிவித்தன. ஈரான் அசையவில்லை. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்கள் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தும் தனித்தனியாகவும் நடாத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஈரானின் அணு விஞ்ஞானிகள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலைக் கைவிடவில்லை. ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது விமானங்கள் மூம் தாக்குதல் நடாத்த வேண்டும் என இஸ்ரேல் அமெரிக்காவை வலியுறுத்தியது. பராக் ஒபாமா நிர்வாகம் பொறுமையக் கடைப்பிடித்து தந்திரமாகக் காய்களை நகர்த்தி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் அமூல் படுத்தியது. பன்னாட்டு வங்கி கொடுப்பனவு முறைமையான SWIFT இல் இருந்து தந்திரமாக ஈரானை வெளியேற்றியது.

தவிக்கும் ஈரானியர்கள்
ஈரான் பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்வது உண்மை. 2011இல் நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த  எரிபொருள் ஏற்றுமதி  2013இல் பாதியாக்குறைந்து விட்டது.  ஈரானில் இப்போது பணவீக்கம் 35 விழுக்காடாக உள்ளது. ஈரானிய நாணயமான ரியாலின் பெற்மதி 80 விழுக்காடு தேய்மானம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு ஈரானியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பூச்சியமாகவே இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. சரியான மருந்துகள் இன்றிப் பல ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் தன்மீதான் பொருளாதாரத் தடையை தனது நட்பு நாடுகளான ஈராக், துருக்கி ஆகியவற்றினூடாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. துருக்கியில் இருந்து ஏராளமான தங்கம் ஈரானுக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது. இவை பொருளாதாரரத் தடையை மீறி ஈரான் செய்யும் ஏற்றுமதிகளின் வருமானமாகும்.

2013ஜூன் மாதம் ஈரானில் நடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையே முக்கியமாக அடிபட்டது. தீவிரப் போக்குடையவரும் மேற்கு நாடுகளுக்கு எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்ற கருத்துடையவரும் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னிக்கு மிகவும் வேண்டப்பட்டவருமான சயீத் ஜலிலீதான் வெற்றி பெறுவார் என் எதிர் பார்க்கப்பட்டது.  மிதவாதப் போக்கும் சீர்திருத்தக் கொள்கையும் உடையவரான ஹசன் ரொஹானி (Hassan Rohani) என்ற வேட்பாளரை வெற்றி பெற ஈரானிய மதவாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் என பல அமெரிக்கா ஆய்வாளர்கள் எதிர்வு கூறி இருந்தனர். இவற்றுக்கெல்லாம் மாறாக பன்னாட்டு இராசதந்திரத்தில் அனுபவம் கொண்டவரான ஹசன் ரொஹானி (Hassan Rohani)  அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். ஹசன் ரொஹானிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராகப் பல வன்முறைகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்டன. ஹசன் ரொஹானியின் வெற்றி ஈரானிய மக்கள் அணுக்கூண்டிலும் பார்க்க பொருளாதாரப் பிரச்சனனயில் இருந்து ஒரு மீட்சியையே விரும்புகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டியது.

ரொஹெய்னிக்கு அதிகாரம் வழங்கிய உச்சத்  தலைவர்

ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி குடியரசுத் தலைவர் ஹசன் ரொஹானிக்கு உலக அரங்கில் யூரேனியம் பதனிடுதல் மற்றும் பொருளாதாரத் தடை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கான முழு அதிகாரத்தையும் வழங்கி உள்ளார்.  இது முன் எப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாகும்.

நாக்கைத் தொங்கவிடும் அமெரிக்க வர்த்தகர்கள்.

ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்பட்டால் அது தமக்கு ஈரானுக்கு ஏற்றுமதியை பெருமளவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் என பல அமெரிக்க வர்த்தகர்கள் காத்திருக்கின்றனர். ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கம் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் உலகச் சந்தையில் எரி பொருள் விலையையும் குறைக்கும் வாய்ப்பு உண்டு. அமெரிக்காவினது ஈரானினதும் குடியரசுத் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் செப்டம்பர் மாதம்  ஆற்றிய உரைகள் இரு நாடுகளும் பொருளாதாரத் தடை நீக்கத்தால் நன்மை பெறக் காத்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் ஐநா பொதுச் சபையில் உரையாற்றி விட்டு நாடு திரும்பிய ரொஹெய்னிக்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அதே வேளை இசுலாமிய தீவிரவாதிகளால் முட்டைகளும் பாதணிகளும் அவர் சென்ற வாகனத் தொடரணி மீது வீசப்பட்டன. அவர்கள் சாத்தான் என்று வர்ணிக்கும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவருடன் ரொஹெய்னி தொலை பேசியில் உரையாடியது அவர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் எதிர்ப்பு
அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதரத் தடையை நீக்கக் கூடாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரரன் தனது யூரேனியம் பதனிடும் செயற்பாட்டை முற்றாகக் கைவிட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஆனால் இஸ்ரேல் இரகசியமாக அணுக் குண்டுகளைத் தயாரித்து வருகிறது. அணுக் குண்டுகளைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணணகளை உற்பத்தி செய்வதற்கான உதிரிப்பாகங்களை இஸ்ரேல் ஜேர்மனியில் இருந்து அண்மையில் இறக்குமதி செய்தது இஸ்ரேலிடம் அணுக்குண்டுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் நெருங்கி வந்தால் அது மத்திய கிழக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் வாஷிங்டனில் செயற்படும் வலிமை மிக்க இஸ்ரேலிய அரசியல் தரகர்கள்(lobbyist)  இதை நடக்க விடுவார்களா?

Friday, 27 September 2013

வட மாகாணசபையில் தொடரப்போகும் இழுபறிகளும் வெளிவரப் போகும் உண்மைகளும்.

இலங்கையின் மாகாண சபைகள் இலங்கை அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டம், மாகாணசபைச் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டது. 13வது திருத்தத்திற்கு திருத்தம் கொண்டுவர இலங்கைப் பாராளமன்றில் மூன்றி இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாகாண சபைச் சட்டத்தை சாதாரண பெரும்பான்மையினரின் ஆதரவுடன் மாற்றி அமைக்கலாம்.

அதிகாரமில்லா அதிகாரப் பரவலாக்கம்.
இலங்கையின் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி அன்று நடேசன் சத்தியேந்திராவும் இன்று குமாரவடிவேல் குருபரனும் போதிய அளவு சொல்லிவிட்டார்கள். இது பற்றிக் காண கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்:
1. சந்தியேந்திரா
2. குருபரன்
இந்த இணைப்பில் இருப்பவை சட்டம் பற்றியவை என்றாலும் அவற்றை ஒவ்வொரு தமிழ் மகனும் திருப்பி திருப்பி வாசித்தும் திருப்பித் திருப்பிக் கேட்டும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் அது பெரிதும் உதவியாக இருக்கும்.

ஒரு சட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன: 1. சட்டவாக்கம், 2. சட்ட அமூலாக்கம், 3. சட்ட வியாக்கியானம்.
இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் இலங்கைப் பாராளமன்றத்திடமும், சட்ட அமூலாக்கம் குடியரசுத் தலைவரிடமும், சட்ட வியாக்கியானம் நீதித் துறையிடமும் இருக்கின்றன.

மாகாணசபைச் சட்டவாக்கம் எப்படி நடந்தது?
1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார்.  இதனால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடும் ஆத்திரம் அடைந்தார். அவர் தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான  படைக்கலப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இலங்கை அரசின் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகித்தார். எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டமும் மாகாணசபைச் சட்டமும் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது. இதற்குச் சிங்களமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போது இலங்கை அரசு உழங்கு வானூர்தியில் இருந்து சிங்களவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் திகதி இடப்படாத பதவி விலகல் கடிதம் அப்போது அதிபர் ஜே ஆர் ஜெயவர்தனேயின் கையில் இருந்தது. சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த இரு சட்டங்களும் இயற்றப்பட்டன. இந்த இரு சட்டங்களையும் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களை இந்தியா கடுமையாக மிரட்டி சம்மதிக்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்லப் போவதாகவும் இந்தியா மிரட்டியது.

சட்ட அமூலாக்கம்
13வது திருத்தத்தையும் மாகாண சபைச் சட்டத்தையும் 26 ஆண்டுகள் நிறைவேற்றாமல் இழுத்தடித்தது. மாகாண சபை என்பது ஒரு மாடு என்றால் அதன் மூக்கணாங்கயிறாக மாகாண ஆளுனரும் அந்த மூக்கணாங் கயிற்றைப் பிடிப்பவராக இலங்கைக் குடியரசுத் தலைவர் இருப்பார். மாடு எவ்வளவு தூரம் மேயலாம் என்பதையும் எதை மேயலாம் என்பதையும் குடியரசுத் தலைவர் தீர்மானிப்பார். தேவை ஏற்படின் மாட்டை கட்டியும் போடலாம். அது மட்டுமல்ல தேவை ஏற்படின் மாட்டை இறைச்சிக்கு விற்று விடவும் முடியும். அதாவது 13வது திருத்தம், மாகாண சபைச் சட்டத்தையும் இலங்கை பாராளமன்றம் இரத்துச் செய்யலாம். 

சட்ட வியாக்கியானம்
உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா 13வது திருத்தத்தின் படி வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்தது பிழையானது என்ற வியாக்கியானத்தை வழங்கினார். இது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு விழுந்த முதலாவது அடி. 2013-09-26-ம் திகதியான தியாகி திலீபனின் நினைவு நாளில் மகாண சபைக்கு அரச காணிகளுக்கான அதிகாரம் இல்லை என்ற வியாக்கியானத்தை இலங்கை உச்ச நீதி மன்ற நீதியரசர் வழங்கினார். இலங்கை அரசமைப்பின் 18வது திருத்தத்தின் பின்னர் நீதித் துறை இலங்கை குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வந்து விட்டது எனப்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 18வது திருத்தத்தின் படி:

  •     The President can seek re-election any number of times;
  •     The ten-member Constitutional Council has been replaced with a five-member Parliamentary Council;
  •     Independent commissions are brought under the authority of the President; and,
  •     It enables the President to attend Parliament once in three months and entitles him to all the privileges, immunities and powers of a Member of Parliament other than the entitlement to vote. In short, it is all about arming the President with absolute power.
இழுபறியில் உண்மைகள் வெளிவரும்
இப்போது வட மாகாண சபைக்கு என்று ஒரு பணிமனை கூடக் கிடையாது. அது இனி எங்கே கூடப் போகிறது? அது நிறை வேற்றப் போகும் நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி இனி நாங்கள் பார்க்கலாம். இனி நிறைய முரண்பாடுகள் இழுபறிகள் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் வரப் போகிறது.  அதில் யாருக்கு வெற்றி கிடைக்கப்ப் போகிறது என்பதை நாம் பார்க்கலாம். இந்த முரண்பாடுகள் தொடர்பாக நீதித் துறையிடம் முதலமைச்சர் செல்லும் போது நீதித் துறை எப்படியான வியாக்கியானங்களைச் செய்யும் என்பதையும் இனி நாம் பார்க்கலாம். சத்தியேந்திராவும் குருபரனும் சொன்னவற்றின் உண்மைத் தன்மையை இனி நாம் நடை முறையில் காண நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.

Thursday, 26 September 2013

பிளவுபட்ட சிரியப் போராளிகளும் அதன் விளைவுகளும்

அல் கெய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ரா முன்னணியின் தலைமையில் 11 போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இவை சிரியா இசுலாமியச் சட்டமான ஷரியாச் சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்ற பொதுக் கொள்கையில் இணைந்துள்ளன. இந்த இணைவு சிரிய போராளிக் குழுக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிளவு பட வைத்துள்ளது.

1. தௌஹீட் படை என்னும் சுதந்திர சிரியப் படையின் அலெப்போ படையணி, 2. லிவா அல் இஸ்லாம் எனப்படும் டமஸ்கசில் செயற்படும் பெரும் படையணி,
3. அஹார் அல் ஷம் எனப்படும் தேசம் முழுவதும் செயற்படும் மதவாதப் போராளிக் குழு
இவை ஒன்றாக இணைந்த 11 குழுக்களில் முக்கியமானவை.

2012 டிசம்பரில் வேறுபட்ட பல போராளிக்குழுக்களைச் சேர்ந்த 500பிரதிநிதிகள் துருக்கியில் ஒன்று கூடி 30 பேர் கொண்ட ஓர் உச்ச படைத்துறைச் சபையினை (Supreme Military Council) உருவாக்கினர். அதற்கு பொறுப்பாக ஒரு Chief of Staffஐயும் தெரிவு செய்தனர். இந்த கூட்டத்திற்கு இரு இசுலாமிய தீவிரவாத அமைப்புக்கள் அழைக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தினதும் ஒருங்கிணைப்பினதும் நோக்கம் மேற்கு நாடுகளில் இருந்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியைப் பெறுவதே. ஆனால் அவர்களுக்கு தேவையான உதவியோ அல்லது ஓர் ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானமோ இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என பலதடவைகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.தமக்குப் போதிய உதவிகள் மேற்கு நாடுகளில் இருந்து கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்த போராளிக் குழுக்கள் பல ஜபத் அல் நஸ்ரா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. இது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எஞ்சியுள்ள குழுக்கள் போதிய தாக்கும் திறன் கொண்ட அமைப்புக்கள் அல்ல.

சிரிய உச்சப் படைத்துறைச் சபையின் தலைவரான ஜெனரல் சலிம் இத்திரிஸ் பிரான்ஸில் மேற் கொண்டிருந்த பயணத்தை இடை நிறுத்தி சிரியாவிற்கு அவசரமாகத் திரும்புகிறார். இவர் ஜபத் அல் நஸ்ரா தலைமையில் இணைந்த சில குழுக்களை முக்கியமாக தௌஹீட் படையினரை தமது முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கோருவார்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி முக்கிய சிரியக் கிளர்ச்சிக் குழுக்களின் உறுப்பினர்கள் விபரம்:

Syria Free Syrian Army:                   50,000 முதல் 80,000 வரை
Ahfad al-Rasul Brigade:                   10,000 முதல் 15,000 வரை
Syrian Islamic Liberation Front:    37,000
Syrian Islamic Front:                         13,000
Al-Nusra Front:                                     6,000

இவர்கள் 178,000 பேரைக் கொண்ட சிரிய அரச படையினருக்கு எதிராக போராடுகிறார்கள்.

மேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஒன்றுபடுத்தி ஓர் இடைக்கால அரசை அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அதை மறுதலிக்கும் முகமாகவே ஜபத் அல் நஸ்ரா அமைப்பு ஒரு மதவாத கூட்டணியை அமைத்துள்ளது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்குப் பின்னர் அரசு அல்லாத எந்த ஒரு அமைப்பும் படைக்கலன்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவற்றிற்கு படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்றும் அமெரிக்கா சொல்லி வந்தது. இந்தக் கொள்கையாலும் இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் கைகளில் தனது படைக்கலன்கள் போகக் கூடாது என்ற நோக்கத்தாலும் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்குவதைத் தடுத்து வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் தாம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் அவர்களுக்கு எந்த விதமான படைக்கலன்களையும் வழங்காமலேயே இருந்து வந்தன. ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில படைகலன்கள் இரகசியமாக சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
Jarba said the "National Free Army" would be under the supervision of the FSA chief of staff General Salim Idriss and under the umbrella of the SNC.
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுள் சிரிய சுதந்திரப்படை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகும். அதன் தலைமையில் இயங்கும் தேசிய விடுதலைப் படை ஒரு சிறந்த போராளிக்குழு அல்ல.தாக்கும் திறன் கொண்ட பல போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அல் கெய்தாவுடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ராவின் தலைமையில் இணைந்தமை அமெரிக்காவிற்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.  இப்போது அமெரிக்க சார்புக் குழுக்கள் சிறிய படையணிகளாகக் குறைந்து விட்டன. இது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைந்த பெரும் தோல்வியாகும். 

Wednesday, 25 September 2013

கென்யா கடைத் தொகுதித் தாக்குதலின் பின்னணி


கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள Westgate Mall என்னும் ஆடம்பர மூன்று மாடிக் கடைத் தொகுதிக்குள் செப்டம்பர் 21ம் திகதி ஒரு திவிரவாதக் குழு ஒன்று நுழைந்தது. அது அங்கு நின்றவர்களை கண்டபடி சுட்டுக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தும் வைத்தது. தமது தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே டுவிட்டர் மூலம் வெளி உலகிற்கு தெரியப் படுத்திக் கொண்டே இருந்தது.

டுவிட்டரில் வெளிவந்த தகவல்களின்படி சோமாலியாவைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப்பைச் சேர்ந்த 15பேர் Westgate Mall கடைத் தொகுதிக்குள் தாக்குதல் நடாத்தியதாக அறிந்து  கொள்ளக்கூடியதாக இருந்தது. பலத்த எதிர்ப்புக்களால் அவர்களது கணக்கை டுவிட்டர் மூட மூடஅவர்கள் வேறு பெயர்களில் கணக்குக்களைத் தொடங்கி தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.


Westgate Mall கடைத் தொகுதிக்குள் நுழைந்த அல்-ஷபாப் அமைப்பினர் அங்குள்ளவர்களிடம் நபிகள் நாயகத்தின் தாயாரின் பெயரைக் கூறும் படி வற்புறுத்தினர். சரியாக ஆயிஷா என்று சொன்னவர்கள் இசுலாயர்கள் எனக் கருதப்பட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கென்யாவின் படையினர் அல்-ஷபாப் போராளிகளுடன் நான்கு நாட்காள் போராடி நிலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 62பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடரும் சுத்தீகரிப்பு வேலையில் மேலும் இறந்த உடல்கள் அகப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கென்யா தெரிவித்தது. ஆனால் அல்-ஷபாப் அமைப்பினர் தம்மிடம் போதிய ஆண் போராளிகள் இருக்கிறார்கள் நாம் எமது சகோதரிகளைப் போரில் ஈடுபடுத்தத் தேவையில்லை என டுவிட்டரில் தெரிவித்தனர்.

யார் இந்த அல்-ஷபாப் அமைப்பினர்?
ஹரகட் அல்-ஷபாப் அல்-முஜாகிதீன் (Harakat al-Shabaab al-Mujahideen) என்னும் பெயருடைய அமைப்பை சுருக்கமாக அல்-ஷபாப் என அழைப்பர். அல்-ஷபாப் என்றால் இளையோர் எனப் பொருள்படும். மத ரீதியாக அல்-ஷபாப் அமைப்பு சவுதி அரேயாவின் வஹாப் வகை இசுலாமை தமது இறை நம்பிக்கையாகக் கொண்டவர்கள். இதை அல் கெய்தா அமைப்பின் சோமாலியக் கிளை எனவும் சொல்லப்படுகிறது. 2006-ம் ஆண்டில் இருந்து சோமாலியாவின் பெரும்பகுதியை அல்-ஷஹாப்  தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. 2011-ம் ஆண்டு கென்யா நாட்டுப் படைகளின் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் நிதி உதவியுடன் ஆபிரிக்க ஒன்றியப் படைகள் சோமாலியாவிற்கு நுழைந்தன. அப்போது சோமாலியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அல்-ஷஹாப் அமைப்பினரை பல இடங்களில் இருந்து கென்யப் படைகள் விரட்டினர். அல்-ஷஹாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகங்கள் கென்யப் படையினரால் கைப்பற்றப்பட்டன. முக்கியமாக கிஸ்மயோ துறைமுகத்தை இழந்தமையால் அல்-ஷஹாப் அமைப்பின் வருமானம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பல கிராமப் பகுதிகள் அல்-ஷஹாப்  அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கென்யப் படையினர் சோமாலியாவிற்கு நுழைந்ததில் இருந்து அல்-ஷஹாப் அமைப்பினர் தாம் கென்யத் தலைநகர் நைரோபியில் இருக்கும் வானாளாவிய கட்டடங்களைத் தாக்குவோம் என எச்சரித்துக் கொண்டே இருந்தனர். சோமாலியாவின் முக்கிய நகரங்களில் இருந்து விரட்டப்பட்ட அல்-ஷஹாப்  வலுவிழந்து விட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நைரோபியில் இருக்கும் Westgate Mall கடைத் தொகுதியில் அல்-ஷஹாப் அமைப்பினர் தாக்குதலை நடாத்தினர்.

எதியோப்பியாவின் சிலுவைப் போர்
கென்யப் படையினருடன் கிருத்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட எதியோப்பிய படையினரும் அல்-ஷஹாப்பிற்கு எதிராகப் போராடுவது இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களை பெரிதும் ஆத்திரப்படுத்தியிருந்தது. எதியோப்பியப் படையினரின் தாக்குதலை ஒரு சிலுவைப் போர் என அவர்கள் விமர்சிக்கின்றனர்.

அமெரிக்காவின் அச்சம்
நைரோபிய நகரின் Westgate Mall ஆடம்பரக் கடைத் தொகுதியில் நடந்த தாக்குதல் அமெரிக்காவை இருவகையில் அச்சமடைய வைத்துள்ளது. ஒன்று ஆப்கானிஸ்தானிலும் யேமனிலும் இருந்து இசுலாமியத் தீவிரவாதீகள் தப்பி ஓடி சோமாலிய அல்-ஷஹாப் அமைப்பில் இணைகிறார்களா என்ற அச்சம். இரண்டாவது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் சோமாலியர்கள் சோமாலியா சென்று அல்-ஷஹாப் அமைப்பின் இணைகிறார்கள் என்ற அச்சம். ஆரம்ப நிலைத் தகவல்களின் படி ஒர் பிரித்தானியா வாழ் சோமாலியப் பெண் ஒரு சுவீடன் வாழ் சோமாலியர் இரு அமெரிக்க வாழ் சோமாலியர்கள் நைரோபிய நகர் Westgate Mall ஆடம்பரக் கடைத் தொகுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...