Thursday, 17 March 2022

உக்ரேன் போரில் சீனா இரசியாவிற்கு உதவுமா?

  


உக்ரேனில் நடக்கும் போரில் சீனாவிடம் இரசியா படைத்துறை உதவியைக் கோரியுள்ளதாக முதலில் அமெரிக்க நாளிதழான Washington Post அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன் சீனாவின் வெளியுறவுத் துறை ஆணையகத்தின் இயக்குனர் ஜாங் ஜீச்சியுடன் ரோம் நகரில் 2022-03-14-ம் திகதி உக்ரேன் போர் தொடர்பாகப் ஏழு மணித்தியாலம் பேச்சு வார்த்தை நடத்தினார். சீனாவின் South China Morning Post ஜேக் சலைவன் சீனா இரசியாவிற்கு படைத்துறை உதவிகளையோ மற்ற உதவிகளையோ செய்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரசியா தம்மிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என சீன அதிகாரிகள் சொல்லி வருகின்றனர்.

ஒன்றும் தெரியாத பாப்பாவாம் சீனா

சீனாவிற்கு முன் கூட்டியே உக்ரேன் மீது இரசியா படையெடுக்கும் என்பது தெரியும் என்றும் சீனாவின் வேண்டுதலின் பேரில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடியும் வரை இரசியா தனது படையெடுப்பை பின் போட்டிருந்தது என்றும் Washington Post செய்திகள் வெளியிட்டிருந்தது. இதை அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கடுமையாக மறுத்ததுடன் சீனாவிற்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போரைத் தவிர்க்க சீனா முயற்ச்சித்திருக்கும் என்றார். 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியா உக்ரேன் எல்லையில் தனது படையினரைக் குவிக்கத் தொடங்கியது உலகறிந்தது. இரசியா சீனாவிடம் உதவி கேட்கவில்லை என்றால் புட்டீனும் ஜின்பிங்கும் 2022 மார்ச் 15-ம் திகதி ஒரு அவசர இணையவெளி உரையாடலில் என்ன பேசியிருப்பார்கள்?

ரோம் நகரில் மரதன் பேச்சு வார்த்தை

2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரசியா படையெடுத்ததில் இருந்து தான் நடுநிலை வகிப்பதாக சீனா அறிவித்துக் கொண்டிருக்கின்றது. 2022 மார்ச் 14-ம் திகதி அமெரிக்க சீன அதிகாரிகளிடையே உக்ரேன் போர் தொடர்பாக ஏழு மணித்தியாலப் பேச்சு வார்த்தை ரோம் நகரில் நடை பெற்றது. இரசியா சீனாவிடம் உதவி கேட்டது உண்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ரோம் நகரப் பேச்சு வார்த்தை சீனா இரசியாவிற்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காகவே நடை பெற்றது என்பது உண்மை. உக்ரேனில் இருந்து வரும் செய்திகள் இரசியப் படையினர் உண்ண உணவின்றி உக்ரேனியர்களிடம் உணவு கேட்டதாக சொல்கின்றன. இரசியர்கள் இரண்டு நாட்களில் போரை முடிக்கும் திட்டத்துடன் மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் மட்டும் எடுத்துச் சென்றனர். இரசியாவிற்கு தயாரித்த உடன் உணவுகளை (Ready-to-eat meals) அவசரமாக அனுப்பும் படி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது உண்மையாக இருக்கலாம்.

எப்போதும் இல்லாத பதட்டம் இரசியாவில்

இரசியாவில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் 2022 பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடங்கிய பின்னர் வெளியேறியபடி உள்ளனர். அவர்களின் கருத்துப் படி இரசியாவில் எப்போதும் இல்லாத பதட்டம் நிலவுகின்றது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கண்காணிக்கப்படுகின்றனர். அரச ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். ஒரு தொலைக்காட்டி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் அச்சேவையின் ஆசிரியர் ஒருவர் போர் வேண்டாம் என்ற பதாகையைப் பிடித்தபடி நின்றார். இரசிய உளவுத்துறையைச் சேர்ந்த இரண்டு முன்னணி அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வருகின்றன. விளடிமீர் புட்டீன் குழம்பிப் போகாமல் இருக்கச் செய்ய சீன அதிபர் ஜீ ஜின்பிங்கினால் மட்டுமே முடியும்.

இரசியாவின் பிரச்சனைகள்

இரசியா பல உயர் தொழில்நுட்ப படைக்கலன்களை உருவாக்கினாலும் நிதித்தட்டுப்பாட்டால் அவற்றை போதிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில்லை. அமெரிக்காவிடம் எழுநூறுக்கு மேற்பட்ட F-35 போர் விமானங்கள் உள்ளன. அதற்க்கு ஈடான Su-35 போர் விமானங்கள் இரசியாவிடம் 103 மட்டுமே உள்ளன. இரசியாவின் Su-57 பதின்நான்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இரசியாவின் உலகிற் சிறந்த போர்த்தாங்கியான T-14 Armata போர்த்தாங்கிகள் 2300 உற்பத்தி செய்வதாக திட்டமிடப் பட்டிருந்தும் நூறிலும் குறைவான தாங்கிகளே தற்போது இரசியாவிடம் உள்ளன. இதனால் உக்ரேன் போர்க்களத்தில் இரசியா பல பற்றாக்குறைகளை எதிர் கொள்கின்றது:

1. போதிய அளவு புதிய வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை

2. விமானங்கள் இலக்கைத் தெரிவு செய்யும் Targeting Pods தட்டுப்பாடு

3. போதிய அளவு ஆளிலிப் போர் விமானங்கள் இல்லை

இவற்றை சீனாவிடமிருந்து இரசியா பெற முயற்ச்சிக்கலாம். சீனாவின் படைக்கல இறக்குமதியில் 80% இரசியாவில் இருந்தே பெறப்படுகின்றது. இரசியாவில் தங்கியிருக்கும் சீனா இரசியாவின் வேண்டு கோளை அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொடுக்க மறுக்குமா? சீனா ஆளிலிப் போர் விமானங்களையும் தயாரித்த உடன் உணவுகளையும் (Ready-to-eat meals) வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரத் தடையில் இருந்து இரசியாவை சீனா மீட்குமா?

இரசியாவிற்கு சீனாவிடமிருந்து தேவைப்படும் பேருதவி நேட்டோ நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இரசியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பை தணிப்பதே. சீனாவைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையுச்ம் வர்த்தகக் கொள்கையும் உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என்பது போன்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு சீனாவிற்கு மிகவும் பாதகமானதாகும். அதனால் சீனா இரசியாவிடமிருந்து உலகச் சந்தை விலையிலும் குறைவான விலைக்கு எரிபொருளை வாங்கும். அதுவே இரசியாவிற்கு காத்திரமான உதவியாக அமையும். அடுத்த படியாக இரசியாவிற்கு நிதி தேவைப்படும் போது சீனாவிடமிருந்து கடன் வாங்க வேண்டும். இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணியை சீனாவில் வைப்பிலிட வேண்டும். இரசியாவின் வெளிநாட்டு செலவாணியை சினாவில் வைப்பிலிடும் போது சீன நாணயத்தின் பெறுமதி குறையும். அதனால் சீனாவில் விலைவாசி அதிகரிக்கும். உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு வருவது சீனாவின் பெரும் விருப்பம் என்பது மறுக்கப்பட முடியாது. உக்ரேனில் புட்டீன வெற்றியடையாமல் போரை முடிக்க மாட்டார். ஒரு துரித வெற்றியை புட்டீன் பெறுவதற்கு சீனா உதவி செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு நல்லது. அது சீனாவிற்கும் நல்லது. 2022 பெப்ரவரியில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொள்ளச் சென்ற விளடிமீர் புட்டீன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையில் வரையறையற்ற பங்காண்மை நிலவும் என தெரிவித்தனர்.

சீனாமீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடை விதிக்குமா?

இரசியாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தோல்வியில் முடிய வேண்டும் என்பது சீனாவின் பேரவாவாக இருக்கும். இரசியா தோற்கடிக்கப்படுவதும் சீனாவிற்கு உகந்ததல்ல. புட்டீனும் ஜின்பிங்கும் அமெரிக்காவின் வலிமை இறங்குமுகமாக இருக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றனர். உக்ரேன் போரில் இரசியாவிற்கு நேட்டோ நாடுகள் கொடுக்கும் பிரச்சனையில் இரசியாவை மீட்க சீனா உதவி செய்தால் சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதாரத் தடையாக இருக்கலாம். ஏற்கனவே இரசியாமீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அமெரிக்கப் பொருளாதாரம் உட்பட உலகப் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரப் போர் என்பது அடி வாங்கினவனிலும் பார்க்க அடித்தவனுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளன.

உக்ரேன் போர் தொடங்க முன்னரே உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் உலக ஒழுங்கைப் பொறுத்தவரை China will be in the driving seat என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். சீனாவின் காட்டில் மழை என்பது உண்மை.

Monday, 14 March 2022

புட்டீனின் 22 ஆண்டுத் தயாரிப்பு வீண் போகுமா?

  


2022 பெப்ரவரி 24-ம் திகதி புட்டீன் உக்ரேனுக்கு படைகளை அனுப்பியது கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக செய்த தயாரிப்பின் முதற் கட்ட நடவடிக்கையாகும். அதன் காரணத்தை 2021 டிசம்பர் மாதம் 23-ம் திகதி ஊடக மாநாட்டில் விளக்கியிருந்தார்.

·         அவர் கூறியதன் முக்கிய பகுதி: “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என 90களில் எமக்குச் சொன்னார்கள். ஆனால் என்ன? எம்மை எமாற்றினார்கள். வெளிப்படையாக எம்மை வஞ்சித்தார்கள். ஐந்து அலைகளாக நேட்டோ விரிவாக்கம் நடந்தது. அவர்கள் (நேட்டோ) இப்போது உருமேனியாவிலும் போலாந்திலும் இருக்கின்றார்கள், எங்கள் வாசற்படியில் அமெரிக்கா அணுக்குண்டுகளுடன் நிற்கின்றது”

வரலாற்று நிகழ்விற்கு பிழையான பொருள்விளக்கம்

புட்டீன் உக்ரேன் எல்லையில் இலட்சக்கணக்கான படையினரைக் குவித்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்த பின்னர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் அண்டனி பிலின்கன் சொன்னது: “வரலாறு தொடர்பாக நாம் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.” மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் சொல்லும் கருத்துக்கள்:

1. நேட்டோ எந்த அளவு விர்வாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக் எந்த ஓர் உடன்படிக்கையும் செய்யப்படவில்லை.

2. நேட்டோவில் புதிதாக இணைந்து கொள்ளும் நாடுகளை இணைந்து கொள்ளும் படி நிர்ப்பந்திக்கப்படுவதில்லை.

3. நேட்டோ விரிவாக்கம் எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது.

2014 ஆக்கிரமிப்பு போல் 2022இல் இல்லை

அரை-மக்களாட்சி பரப்பியவாதியாக (semi-democratic populist) புட்டீன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு எதிரானவர்கள் இருப்பதை விரும்பாத புட்டீன் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்காக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அவருக்கு எதிரானவர்கள் ஐயத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டனர். ஊடகங்கள் அவரை எதிர்த்து எழுத தயங்குகின்றன. உக்ரேன் போர் பற்றிய உண்மையான நிலையை இரசியர்கள் அறிய முடியாத நிலையில் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு புட்டீன் உக்ரேனின் ஒரு பகுதியா இருந்த கிறிமியாவைக் கைப்பற்றிய போது இரசியர்கள் அதை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். புட்டீனின் செல்வாக்கும் இரசியர்கள் இடையே பெரிதும் அதிகரித்தது. ஆனால் 2022இல் நிலை அப்படியல்ல.

முதற்கனவு

1999 மார்ச் மாதம் 3-ம் திகதி விள்டிமீர் புட்டீன் உக்ரேன் தலைமை அமைச்சராக பதவியேற்ற போதே இரசியா இழந்த கௌரவத்தை மீளக் கட்டி எழுப்புவதாக உறுதி பூண்டார். 1998-ம் ஆண்டு இரசிய பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பட்ட கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு உலக வங்கியிடமும் பன்னாட்டு நாணய நிதியத்திடமும் கடன் வாங்கி நெருக்கடியைச் சமாளித்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியாவை ஒரு பொருட்டாக மதிக்காத நிலை ஏற்பட்டது. அதுவும் புட்டீனை பெரிதும் பாதித்திருந்தது. பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து இரசியாவை மீட்ட பின்னர் புட்டீனின் மதிப்பு இரசியர்களிடையே உயர்ந்தது. அவர் தேர்தல்களில் இலகுவாக வெற்றியீட்டினார். ஆனால் மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தலில் ஊழல், எதிர்க்கட்சிகளை அடக்கினார் என செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருந்தன. 2020-ம் ஆண்டு இரசியாவை உலகின் படைத்துறையின் முதல் தர நாடாக்க வேண்டும் என்ற 20 ஆண்டுத் திட்டத்தை 2020- ஆண்டு தீட்டினார். மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவது அவரது திட்டத்தின் மணிமகுடமாக அமைந்தது. விமானப்படை, செய்மதிகளை படைத்துறைக்கு பாவித்தல், நீமூழ்கிகளை புதுமைப் படுத்துதல், உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குதல் ஆகியவையும் அடங்கும்.

2018இல் பெருமைப்ப்ட்ட புட்டீன்

புட்டீனின் இருபதாண்டுத் திட்டம் வெற்றியுடன் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது என்பதை உலகத்திற்கும் இரசியரகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் 2018 மார்ச் முதலாம் திகதி புட்டீன் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை ஆற்றினார். இரசியாவின் பொருளாதார வெற்றி படைத்துறை முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி காணொலியுடன் அவர் விளக்கினார். புட்டீனின் உரையும் காணொலியும் புதிய ஐ-போனை அப்பிள் முதலில் அறிமுகம் செய்வது போல இருந்தது எனச் சொல்லப்பட்டது. அவர் அதில் முன்வைத்தவைகளில் முக்கியமானவை:

1. உலகின் எப்பாகத்திலும் அணுக்குண்டை வீசக் கூடிய அணுவலுவில் இயங்கும் ரடார்களுக்குப் புலப்படாத, எதிரிகளால் இடைமறிக்க முடியாத வழிகாட்டல் ஏவுகணை.

2. அமெரிக்கப் பாதுகாப்பை முறியடிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் நீரடி ஏவுகணைகள் (nuclear torpedo that could outsmart all American defences)Status-Nuclear Torpedo என்னும் பெயருடைய இந்த நீரடி ஏவுகணைகளைப்போல் அமெரிக்காவிடம் இல்லை என்றார் புட்டீன்.

3. ஹைப்பர்சோனிக் வழுக்கி வாகனங்கள் (Avengard Hypersonic Glide Vehicles). இவை வழமையான விண்வெளிக்குச் செல்லும் ஏவுகணைகளில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிர்ந்து ஏவப்படும் ஏவுகணையாகும். புவியீர்ப்பு விசையாலும் தன் உந்து சக்தியாலும் அது ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் தன் இலக்கை நோக்கிப் பறந்து செல்லும். அது செல்லும் பாதையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமை இருந்தால் அவற்றைத் தவிர்த்துக் கொண்டு செல்ல வல்லது.

புட்டீனின் நம்பிக்கை வீணாகவில்லை

இவை மட்டுமல்ல இரசியாவின் S-400, S-500 போன்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் அமெரிகாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் சிறந்தவை, புட்டீன் இறுதியாக புட்டீன் 2021 நவம்பரில் இரசியாவின் எதிரிகளின் செய்மதிகளை அழிக்கும் ஏவுகணையைப் பரிசோதித்தார். எதிரிகளின் செய்மதிகளை அழிப்பதன் மூலம் தன்னால் எதிரிகளின் பல படைக்கலன்களை குருடாக்க முடியும் என முழங்கினார் புட்டீன். உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கும் போது உக்ரேனுக்கு ஆதரவாக இரசியாவின் படைவலிமைக்கு அஞ்சி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் நாடுகள் களமிறங்க மாட்டாது என புட்டீன் உறுதியாக நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகாத வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவாக தாம் இரசியாவிற்கு எதிராகப் போர் புரியப் போவதில்லை என உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நேட்டோ போட்ட கணக்கு வேறு

2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் வகையில் அரசியலமைப்பை மாற்றியதில் இருந்து புட்டீன் உக்ரேனுக்கு பாடம்புகட்ட முடிவு செய்தார். கொவிட் பெருந்தொற்று நோயால் அது தாமதமாகியது. 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியப் படைகள் உக்ரேன் எல்லையில் குவிக்கப்பட்டன. அப்போது வலிமை மிக்க படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்காமல் ஒரு கேந்திரோபாயக் காத்திருப்பைச் செய்தன. புட்டீனின் வேண்டுகோள்கள் நிபந்தனைகள் போன்றவற்றிற்கு நேட்டோ நாடுகளும் உக்ரேனும் இணங்காமல் இருந்தன. புட்டீன் 2021 இறுதியில் மேலும் படைகளை உக்ரேன் – இரசிய எல்லைக்கு அனுப்பியதுடன். பெலரஸ் மற்றும் மோல்டோவாவிலும் இரசியப் படைகளைக் குவித்தார். அதற்கும் உக்ரேன் மசியாத நிலையில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகள் உக்ரேனை ஆக்கிரமித்தன. அதன் பின்பு உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் தமது படைக்கலன்களை பெருமளவில் அனுப்பின. இரசியாவை உக்ரேனுக்குள் செல்ல விட்டு உக்ரேனியர்கள் மூலமாக அவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொள்வது நேட்டோவின் கேந்திரோபாய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு இரசியாவால் கிறிமியாவைக் கைப்பற்றியது போல் 48 மணித்தியாலங்களுக்குள் உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி உக்ரேன அரசை வழிக்கு கொண்டு வருவது அல்லது அங்கு ஆட்சி மாற்றத்திற்கு வழிசெய்வது என்ற இரசியாவின் உத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இரசியாவிற்கும் கிறிமியாவிற்கும் இடையில் ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவதைல் இரசியப் படையினர் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளனர். Mariupol நகரில் 2022 மார்ச் 14-ம் திகதி கடும் சண்டை நடைபெறுகின்றது. அந்த நகரைச் சுற்றி வளைத்த இரசியப் படையினர் அங்கிருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கும் ஒரு பாதையைத் திறந்துள்ளனர். அந்த நகர் கைப்பற்றியவுடன் கிறிமியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஒரு தரைவழிப்பாதை உருவாக்கப்படும். அத்துடன் உக்ரேனின் கிழக்குப் பகுதி அஜோவ் கடல், கருங்கடல் ஆகியவற்றுடனான தொடர்பு துண்டிக்கப்படும்.

இரசிய வெற்றி பத்து விழுக்காட்டிலும் குறைவு

உக்ரேனியர்கள் வீரமாகப் போராடுகின்றார்கள் என மேற்கு நாட்டு ஊடகங்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தாலும் இரசியப் படையினர் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். அவரகள் கைப்பற்றிய நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்களால் மீளக் கைப்பற்ற முடியவிலை என்பது தான உண்மை. முழு உக்ரேனையும் கைப்பற்ற இன்னும் ஓராண்டிற்கு மேல் எடுக்கலாம். அதுவும் புட்டீன பேரழிவு விளைவிக்க கூடிய படைக்கலன்களைப் பாவித்தே செய்ய முடியும். போர் நீண்ட காலம் இழுபட்டு இரசியப் பொருளாதாரம் சிதைவடைவதை நேட்டோ நாடுகள் விரும்பலாம். போலாந்தினூடாக உக்ரேனியப் படையினருக்கு தொடர்ந்து நேட்டோ நாடுகள் படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கலாம்.

போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் இரசியாவிற்கு தோல்வி என்றே சொல்ல வேண்டும். புட்டீன் 22 ஆண்டுகளாக திட்டமிட்ட சோவியத் ஒன்றியம்-2.0 நிறைவேறாமல் போகுமா?

இரசிய – உக்ரேனிய இணையவெளிப் போர்

  


இணையவெளிப் போர் வல்லரசுகளாக இஸ்ரேல், அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. வட கொரியா மற்றும் ஈரானிடம் வலிமை மிக்க இணையவெளிப் படைப்பிரிவுகள் உள்ளன. கணினிகளுக்குள் தீங்குநிரல்(Malware) புகுத்துதல். கணினிச்சேவை நிறுத்தம், தரவு அழித்தல், தரவு திருடுதல், தரவுகளைப் பணயக் கைதிகள் போலாக்கி பணம் பறித்தல், இரு கணினிகள் அல்லது கணினித் தொகுதிகளிடையே இருந்து அவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாடலைத் துண்டித்தல், திசைமாற்றல் அல்லது திரிபுபடுத்தல் எனப் பலவகையான இணைய வெளித் தாக்குதல்கள் உள்ளன. பிரித்தானியாவின் Lloyds Insurance நிறுவனம் சராசரியாக ஓர் இணையவெளித் தாக்குதலால $54 மில்லியன் இழப்பீடு ஏற்படுகின்றது என மதிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிக்க முன்னரும் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னரும் இரு நாடுகள் மீதும் கடுமையான இணைய்வெளித் தாக்குதல்கள் நடந்தன. ஜோர்ஜியாவில் பல கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் நாடாளுமன்றம், வெளியுறவுத்துறை அமைச்சு, பல ஊடகங்கள், தனியார் நிறுவனங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டு இரசியப் படைகள் உக்ரேனிய அரச மற்றும் மின்சார வழங்கல் கணினிகள் மீது இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டன. 2022 ஜனவரி 10,13, 14-ம் திகதிகளில் உக்ரேனிய அரசுக்கு சொந்தமான கணினித் தொகுதிகளில் இணையவெளியூடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2022 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இரசியாவில் பல் வேறுபட்ட கணினித் தொகுதிகளில் தாக்குதல்கள் நடக்கின்றன. உக்ரேனில் இணையச் சேவை வழங்குனர் (Internet Service Producer) Triolan மீது இரு தடவை தாக்குதல் நடத்தப்பட்டது. SpaceXஇன் நிறுவனர் Elon Musk தனது செய்மதி மூலமான Starlink என்னும் இணையச் சேவையை உக்ரேன் மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றார்.

உக்ரேனின் தொடருந்து சேவை மீது தாக்குதல்

புட்டீனின் ஆக்கிரமிப்புப் போரால் அயல் நாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களைத் தடுப்பதற்காக உக்ரேனின் தொடருந்து சேவையின் கணினித் தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு போரில் பல இணையவெளித் தாக்குதல் குழுக்களுக்கும் இரசிய ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்டுத்தப்பட்டுள்ளது என்கின்றது. அது இரசியாவை Cyber Gangland என விபரித்துள்ளது. உக்ரேன் மீது செய்யப்படும் தாக்குதலால் இரசியாவின் இணையவெளித் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா அறிந்து கொண்டிருக்கின்றது.

இரசிய தொலைக்காட்சிச் சேவைகள் மீது தாக்குதல்

இரசிய கணினித் தொகுதிகள் மீது Distributed Denial of Service (DDoS) பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல கணினித் தொகுதிகள் மூலம் எதிரியின் கணினிக்கு அளவிற்கு அதிகமான தரவுகளைச் செலுத்துவது Distri.uted Denial of Service எனப்படும். அவை மட்டுமல்ல பல ஊடுருவல்களும் செய்யப்பட்டன. 2022 மார்ச் இரண்டாம் வாரம் Russia 24, Channel One, Moscow24 ஆகிய தொலைக்காட்சி சேவைகளை ஊடுருவியவர்கள் உக்ரேனில் நடக்கும் கொடுமைகளை இரசிய மக்களுக்கு ஒளிபரப்பினர். உக்ரேனில் நடக்குப் போர் தொடர்பாக இரசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை இரசிய அரசு விதித்துள்ளது. அவற்றில் இரசிய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோள்களும் விடுக்கப்பட்டன. இரசியாவின் விண்வெளி முகவரகம் மூடப்படும் அளவிற்கு அதன் மீது இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டன. இதனால் இரசியா செய்மதி மூலம் உளவு திரட்டுதல் பாதிக்கப் பட்டுள்ளது. இரசியாவின் வலைத்தளம் ஒன்றில் தாக்குதல் செய்து அதில் உள்ளவற்றை அகற்றி விட்டு அங்கு போரில் கொல்லப்பட்டவரகளின் கல்லறைகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இரசியா மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணையவெளித் தாக்குதலைச் சமாளிக்க சீனாவின் Huawei நிறுவனத்தின் சேவையை இரசியா அவசரமாகப் பெற்றுள்ளது. இரசியாவின் செய்தி தணிக்கைப் பணிமனை மீது தாக்குதல் செய்யப்பட்டு அங்குள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்திகளைக் கொண்ட 340,000 கோப்புக்களை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கள் இரசியானின் Bashkortostan மாநிலத்துடன் தொடர்புபட்டன.

அமெரிக்காவும் பங்கு பெறுகின்றதா?

இரசியாவிற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்ற ஐயம் உண்டு. அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை 2018இல் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திருடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சிஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுகளை செயற்பட வைக்க முடியும்.

எங்காவது போர் நடந்தால் அங்கு தனது படையினரை இஸ்ரேஸ் அனுப்ப முயற்ச்சிக்கும். உதவி என்னும் போர்வையில் நேரடி களமுனை அனுபவத்தை தனது படையினருக்கு வழங்குவதே இஸ்ரேலின் நோக்கம். உக்ரேன் – இரசிய இணைய வெளிப்போரிலும் அது நடக்கலாம்.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்கும் அணி இணைவெளிப் படைப்பிரிவாகத்தான் இருக்கும்.

Friday, 11 March 2022

உக்ரேனில் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளனவா?

 

Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது. தனியார் படை என்பது கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட “கௌரவப் பெயராகும்”. சிரியா, லிபியா, ஆப்கான் போர்க்களங்களில் பெருமளவு தனியார் படையினர் அமெரிக்காவாலும் இரசியாவாலும் பாவிக்கப்பட்டனர். ஈழப்போரிலும் வெளிநாடுகளின் கூலிப்படைகள் செயற்பட்டன.  

கூலிப்படை வரலாறு

ஆரம்பத்தில் படையினருக்கான பின்புல வழங்கல் செய்தல், படையினருக்கான ஆபத்து பகுப்பாய்வு செய்தல், உளவு, வேவு போன்றவற்றில் தனியார் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உலகெங்கும் தற்போது உள்ள தனியார் படை அமைப்புக்களில் 70% அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூலிப்படைத்துறையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவின் சீல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற Erik Prince என்பவர். இவரது தனியார் படை Blackwater என்னும் பெயரில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அது ஆப்கானிஸ்த்தானில் செயற்பட்டது. இவரது படைப்பிரிவு பத்து பில்லியன் டொலர் கூலிக்காக உக்ரேனில் உள்ள வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பயிற்ச்சியளிக்கின்றது என அமெரிக்காவின் Time சஞ்சிகை 2021 ஜூலை 7-ம் திகதி செய்தி வெளியிட்டது. 2020 பெப்ரவரி 23-ம் திகதி Erik Prince உக்ரேன் தலைநகருக்கு சென்று உக்ரேனிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரேனிய படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கி ஒரு தனியார் படைப்பிரிவை அவர் உருவாக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 2022 மார்ச் 24-ம் திகதி உக்ரேனில் ஆரம்பித்த போரில் Erik Princeஇன் படையினரின் செயற்பாடுகள் மர்மமாக உள்ளன. இரசியாவின் மிகப்பிரபலமான விமான ங்களில் ஒன்றான Su-24 தாக்குதல் போர்விமானத்தை உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரேனியர்களிடமிருக்கும் Stinger போன்ற MANPAD ஏவுகணையால் Su-24ஐ சுட்டு வீழ்த்துவதற்கு போதிய பயிற்ச்சி தேவை. அவ் ஏவுகணைகள் தாழப்பறக்கும் விமானங்களை மட்டும் சுட்டு வீழ்த்த வல்லன. ஒலியிலும் வேகமாக பயணிக்கக்  கூடிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நீண்ட பயிற்ச்சியும் அனுபவமும் தேவை.

Erik Prince முன் வைத்த கோரிக்கையை பைடன் நிராகரித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் எச்சந்தர்ப்பத்திலும் தமது படையை உக்ரேனுக்கு அனுப்பமாட்டேன் என அடிக்கடி சொல்கின்றார். Erik Prince அமெரிக்கா 2022இல் சேவையில் இருந்து நீக்கவிருக்கும் நாற்பத்தேழு F-16 போர்விமானங்களை வைத்து ஒரு தனியார் படையணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டார் எனவும் 2022 மார்ச் 4-ம் திகதி பிரித்தானிய நாளிதழான Daily Mailஇற்கு தெரிவித்திருந்தார். F-16ஐ உக்ரேனில் களமிறக்குவது புட்டீனை பெரும் சினப்படுத்தும் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சுட்டு விழுத்தப்படாத விமானம் என்னும் பெருமையைக் கொண்டிருந்த F-16 விமானம் 2019 இந்திய பாக் மோதலில் இந்தியாவிடமிருந்த MiG-21 Bison விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது. அதை உக்ரேனில் உறுதி செய்யப்படுவதை F-16 உற்பத்தியாளர்கள் விரும்ப மாட்டர்கள். தான் 2021இன் இறுதியில் முன்வைத்த திட்டத்தை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டிருந்தால் உக்ரேனில் இன்று இத்தகைய இழப்பு நடந்திருக்காது என்கின்றார் Erik Prince. புட்டீன் உக்ரேனில் உள்ள நாஜிகளை இல்லாமற் செய்யப் படை அனுப்புகின்றேன் எனச் சொன்னது Erik Prince பயிற்றுவித்துக் கொண்டிருந்த திவிர வலதுசாரிப் படைப்பிரிவைத்தான். இவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதாகும்.

உக்ரேனிய கூலிப்படை

உக்ரேனுக்குள் இரசியப் படையினர் புகுந்தவுடனே உக்ரேனிய அதிபர் வெளிநாட்டில் வாழும் உக்ரேனியர்களும் உக்ரேனை விரும்புபவர்களும் உக்ரேனுக்காக போராட விரும்புகின்றார்கள் என அறிவித்தார். அவர்களை வைத்து “International Legion of Territorial Defence of Ukraine” என்னும் பெயர் கொண்ட படையணியை தான் உருவாக்கப் போவதாகவும் சொன்னார். இது அவர் ஒரு தனியார் படையை (கூலிப்படையை) உருவாக்கப் போகின்றார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. உலகெங்கும் உள்ள வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளும் நாஜிவாதிகளும் உக்ரேனைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் அங்கு களமிறங்கி உள்ளனர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தமது நாட்டுக்கு திரும்பி ஆபத்தான வகையில் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஒரு சதிக் கோட்பாடும் உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஆபத்து என்பதால் அந்த நாடுகள் அவர்களை உக்ரேன் போர்முனைக்கு அனுப்பி கொல்ல முயற்ச்சிக்கின்றார்கள் என்பதே அச்சதிக் கோட்பாடு.

இரசியா சிரியாவில் கூலிப்படை திரட்டியது

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் பாரிய கட்டிடங்களுக்குள் நின்று போர் செய்யும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அவர்களை இரசியா தனியார் படையாக சேவைக்கு அமர்த்தி உக்ரேனில் களமிறக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை சிரியாவின் deiresso24.net என்ற இணையத்தளம் வெளியிட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனும் வெளியிட்டது. 2022 மார்ச் 6-ம் திகதி அமெரிக்க Wall Street Journal இரசியா நகர்சார் போரில் அனுபவமுள்ள சிரியப் படையினரை நாள் ஒன்றிற்கு $200முதல் $300 வரையிலான கூலிக்கு ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் உக்ரேன் போரில் ஈடுபடுத்த ஆள் சேர்ப்பதாக செய்தி வெளியிட்டது.  சிரியாவில் இருந்து 16,000 படையினர் இரசியப்படையுனருடன் இணைந்து ச் உக்ரேனியர்களுக்கு "உதவி" செய்ய தயாராக உள்ளதாக இரசிய பாதுகாப்பு அமைச்சர்  2022 மார்ச் 11-ம் திகதி புட்டீனுக்கு தெரிவித்ததாக இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times தெரிவித்துள்ளது

புட்டீனின் கூலிப்படை

இரசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் இரசிய அதிபரின் நெருங்கிய நண்பருமான Yevgeniy Prigozhin  என்பவர் Wagner Group என்ற தனியார் படைப்பிரிவை வைத்திருக்கின்றார். இரசிய தனியார் படையினரின் வருமானம் அரச படையினரின் வருமானத்திலும் பார்க்க 7 மடங்கு அதிகமாகும். Yevgeny Prigozhin இற்குச் சொந்தமான Evro Polis நண்பரின் சிரியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் 25விழுக்காடு உரிமம் பெற்றுள்ளதுசிரியாவில் தனியார் படையினரைப் பயன்படுத்தியமைக்கு இவருக்கு வழங்கப்பட்ட கூலியா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. உக்ரேனிய அதிபர் விலோடிமீர் ஜெலென்ஸ்கியை கொல்லும் பணியில் Yevgeniy Prigozhin யின் Wagner Group களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் GB News தெரிவித்துள்ளது.

இரசியாவின் கை உக்ரேனில் மேலும் ஓங்கும் போது நேட்டோ நாடுகள் அதிக நிதியை உக்ரேனுக்கு வழங்கும். அந்த நிதியைப் பாவித்து உக்ரேன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் படையினரை போரில் ஈடுபடுத்தும். 

Thursday, 10 March 2022

தாக்குப் பிடிக்குமா இரசியப் பொருளாதாரம்?

 


உக்ரேன் போரில் ஒரு நாளைக்கு எழு மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழிக்கும் இரசியாவிற்கு எதிராக சிறிய நாடாகிய சிங்கப்பூர் கூட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரசிய அரசுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் சிங்கப்பூரில் இனி எந்த நிறுவனமும் நிதி திரட்ட முடியாது. சில இரசிய வங்கிகளுக்கு எதிராக சிங்கப்பூர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட்ட பல மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளும் இரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடனும், கனடாவுடனும் பெரும்பாலும் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற நாடாகிய சுவிஸ்றலாந்தும் இணைந்து உக்ரேனின் கிழக்குப் பகுதி மாகாணங்களான Dontsk, Luthansk ஆகியவற்றை தனிநாடுகளாக அங்கீகரிக்கும் முன்மொழிவை ஆதரித்த 351 இரசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

ஒன்று திரண்ட புட்டீனின் எதிரிகள்

இரசியப்படைகளை உக்ரேனுக்கு அனுப்பியமைக்காகவும் உக்ரேனின் Dontsk, Luthansk மாகாணங்களை தனிநாடுகளாக அங்கீகரித்தமைக்காகவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ்றலாந்து, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் முடக்கியுள்ளன. அது போலவே இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இரசியப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. புட்டீனுக்கு நெருக்கமான பல இரசியச் செல்வந்தர்களுக்கு எதிராகவும் சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இரசிய ஊடகத்துறையை சேர்ந்த சிலருக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இரசிய நடுவண் வங்கியையும் விட்டு வைக்கவில்லை

இரசியாவின் நடுவண் வங்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் பல தடைகளை விதித்துள்ளன. பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவிற்கான தொடர்பாடல்களைச் செய்யும் SWIFT அமைப்பில் இருந்து பல இரசிய வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இரசிய அரசின் வெளிநாட்டு வருவாயைக் கையாளும் நிதி நிறுவனமான VEB.RFஇற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இரசிய விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகியவற்றின் வான் பரப்பில் பறப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies)

இரசிய வங்கிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இரசியா நுண்மியநாணயங்களை பாவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போது Coinbase என்னும் நுண்மியநாணயங்களைக்  கையாளும் நிறுவனமும் இரசியாவிற்கு எதிராக செயற்படுகின்றது. அதில் உள்ள இரசியர்களுக்கு சொந்தமான 25,000இற்கு மேற்பட்ட கணக்குகளை அது தடை செய்துள்ளது. நுண்மியநாணயங்களைக் கையாளும் வேறு சில நிறுவனங்கள் இரசியர்களுக்கு எதிராக தடை விதிக்க மறுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் தனது தடைப்பட்டியலில் நுண்மியநாணயங்களையும் இணைத்துள்ளது. 

புட்டீனின் பொருளாதாரக் காப்பரண்

1991இல் இரசியா பட்ட கடனை அடைக்க முடியாத default நிலைய அடைந்திருந்தது. அதன் பின்னர் இரசியப் பொருளாதாரத்தை புட்டீன் சிறப்பாகக் கட்டி எழுப்பியமையால் புட்டீன் இரசியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக இன்றும் இருக்கின்றார். ஆனாலும் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முன்னரே இரசியப் பொருளாதாரம் பல வலுவின்மைப் புள்ளிகளைக் கொண்டிருந்தது. 1. எரிபொருள் ஏற்றுமதியில் அதிக தங்கியிருப்பு. 2. வேலை செய்யக்கூடிய இளையோர் தொகை வீழ்ச்சியடைவது. 3. உட்-கட்டுமானக் குறைபாடு. 4. அயல் நாடுகளைத் தவிர வேறு நாடுகளுடன் வர்த்தக் உடன்படிக்கை இல்லாமை. 5. ஊழல். உக்ரேன் ஆக்கிரமிப்பிற்கு பின்னரான பிரச்சனைகளை இரசியா எப்படி சமாளிக்கப் போகின்றது?

இரசியப் பொருளாதாரத்தின் வலிமை

1. பெருமளவு எரிபொருள் இருப்பு: உலகிலேயே அதிக அளவு எரிவாயு இருப்பாக 1,668ரில்லியன் கன அடி இரசியாவில் உள்ளது. சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகிய இரசியா நாளொன்றிற்கு 9.7மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கின்றது.

2. எண்மியப் படுத்தப்படுத்தலில் மேம்பட்ட நிலை: இரசியா தகவல் தொழில்நுட்பத்திலும் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அது தன் பொருளாதார முகாமையில் எண்மியத் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதனால் அது உலக வர்த்தகத்தில் Faustian Bargain செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

3. அதிக தானிய உற்பத்தி: இரசியா ஆண்டுக்கு 116 மில்லியன் மெட்ரிக் தொன் தானியத்தை உற்பத்தி செய்கின்றது. இது உலக மொத்த உற்பத்தியில் 11% ஆகும்;

4. குறைந்த வெளிநாட்டுக் கடன்: இரசியாவின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி 2021 செப்டம்பர் நிலவரப்படி $1.62 ரில்லியன். அதன் வெளிநாட்டுக் கடன் $1.18 ரில்லியன். அமெரிக்கவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 130%, ஆனால் இரசியாவின் கடன் 20%. 2014-ம் ஆண்டு இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுக் கடனை $200 பில்லியனால் குறைத்தது.

5. வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு: 2022 ஜனவரியில் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு $640 பில்லியன்கள். உலகின் நான்காவடு பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கொண்ட நாடு இரசியா.

6. படைக்கல ஏற்றுமதி: அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடு இரசியா. அதன் மூலம் இரசியா ஆண்டுக்கு $14பில்லியன் சம்பாதிக்கின்றது.

இரசியர்கள் வெளியேற்றம்

2022 இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட இரசியர்கள் ஜோர்ஜியா மூலமாக பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஜோர்ஜியா அறிவித்துள்ளது. அதே போல் நாள் தோறும் ஆறாயிரத்திற்கு அதிகமான இரசியரக்ளும் உக்ரேனியர்களும் தமது நாட்டினூடாக வெளிநாடுகளுக்கு செல்வதாக ஆர்மினியா தெரிவித்துள்ளது. இரசியாவில் இருந்து பின்லாந்துக்குச் செல்பவர்களின் தொகையும் 44,000ஆக உள்ளது. ஏற்கனவே இரசியாவில் இருந்து ஆண்டு தோறும் நான்கு மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயந்து சென்று கொண்டிருந்தனர். அவரகளில் பெரும்பான்மையானவர்கள் படித்த இளையவர்கள். இரசியாவில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர் தொகை குறைவாகவும் உள்ளதால் படித்த இளையோர் வெளியேறுவது இரசியாவின் உற்பத்தியைப் பாதிக்கும்.

போரை இரசியாவால் நடத்த முடியும்

இரசியாவின் நடுவண் வங்கிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடை அதன் $640பில்லியன் டொலர் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை பாதித்துள்ளது. $640பில்லியனில் $127 பில்லியனை இரசியா தங்கமாகவும், $70பில்லியனை சீன நாணயமான ரென்மின்பியிலும் உள்ளன. இது போன்று வேறுபல நாடுகளின் இரகசியமாக வைத்திருக்கும் தொகைகளும் சேர்ந்து மொத்தம் $300பில்லியன் இரசியா பாவிக்க கூடிய நிலையில் உள்ளது. உக்ரேன் போருக்கு ஆண்டுக்கு மூன்று பில்லியன் செலவாகலாம். ஆகையால் இரசியாவால் உக்ரேன் போரை தொடர்ந்து நடத்த முடியும்.

பன்னாட்டு நிறுவனங்கள்

Apple, Spotify, Oracle, H&M, Netflix, Honda, Google, Dell, Boeing, Nike, Ford, BMW, Walt Disney, Mc Donald, Coca Cola போன்ற நிறுவனங்கள் இரசியாவில் இருந்து வெளியேறிமை அந்த நிறுவனங்களுக்குத்தான் இழப்பீட்டைக் கொடுக்கும். அதில் பணிபுரிந்த இரசியர்கள் வேலை வாய்ப்பை இழக்கலாம். ஆனால் இந்த நிறுவனங்களின் உருவாக்கிய வெற்றிடத்தை காலப் போக்கில் இரசிய நிறுவனங்கள் நிரப்பி இலாபம் ஈட்டலாம்.

பெரும் பொருளாதார பின்னடைவு நிச்சயம்

கடன்படு திறனைத் தரப்படுத்தும் நிறுவனமான Fitch இரசியா தனது கடனைக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இரசியாவின் சொத்தை அதற்கு கடன் கொடுத்தோரே முடக்கி வைத்துவிட்டு கடன் கேட்டால் இரசியா கடன் கொடுக்க மறுக்கும். இரசியாவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 19%. அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 134%. உக்ரேன் போராலும் பொருளாதாரத் தடையாலும் இரசியாவின் மொத்த தேசிய உற்பத்தி 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை 35%ஆல் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 2022இல் மொ.தே.உ 5% சுருங்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. 2022இல் இரசியாவின் ஏற்றுமதி 13%ஆல் குறையும் எனவும் உள்நாட்டு கொளவனவு 10% வீழ்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023-ம் ஆண்டு இரசியப் பொருளாதார வளர்ச்சி சுழியமாக இருக்கும் அதைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஒரு விழுக்காடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசிய மக்கள் தொகை வீழ்ச்சியடைவதால் பொருளாதாரப் பின்னடைவு பெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுதாது. இரசியா தனது சமூக நலக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் மக்களை சமாளிக்க முடியும். அதற்கு தேவையான வருமானத்தை இரசியா எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும். ஈரானிடமிருந்து பொருளாதார தடைகளையும் தாண்டி சீனாவும் இந்தியாவும் எரிபொருள் வாங்குவது போல் இரசியாவிடமிருந்தும் அவை எரிபொருள் வாங்கும். மலிந்த விலையில் கொடுக்க வேண்டிவரும். அஜர்பையானைத் தவிர்ந்த ஏனை மத்திய ஆசிய நாடுகளும் மொங்கோலியாவும் இரசியாவில் இருந்து எர்பொருள் மட்டுமல்ல மற்ற பொருட்களையும இறக்குமதி செய்யும். இந்த நாடுகள் இரசியா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் கறுப்புச் சந்தையாக மாறலாம்.  பொருளாதாரத் தடையால் மக்கள் விரக்தியுற்று அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என மேற்கு நாடுகள் நினைப்பது நடக்காது.

Tuesday, 8 March 2022

உக்ரேனில் இஸ்ரேலின் அமைதி முயற்ச்சி

  


யூதர்கள் வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததில் இருந்துத இருந்து பின்னர் சனிக்கிழமை சூரியன் மறையும் வரை கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது அவரகளின் மத மரபு. அதில் முக்கியமாக இயந்திரங்கள் மூலமான பயணம் மேற்கொள்ளக் கூடாது. மரபு ஒழுக்கத்தை வலியுறுத்தும் கட்சியின் தலைவரும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சருமான நஃப்த்தாலி பென்னட் 2022 மார்ச் ஐந்தாம் திகதி சனிக்கிழமை மரபையும் மீறி விமானம் ஏறி இரசியத்தலைநகருக்கு பயணம் செய்து அதிபர் விளாடிமீர் புட்டீனுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். 1976-ம் ஆண்டு இப்படி மரபு மீறி ஒரு வெள்ளிக்கிழமை இரவு சில அமைச்சர்கள் செயற்பட்டதால் இஸ்ரேலில் ஆட்சி கவிழ்ந்தது. விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னரே உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இஸ்ரேல் இரு தரப்புக்குமிடையே பேச்சு வார்த்தை நடக்க உதவி செய்ய வேண்டும் என பகிரங்கமான வேண்டு கோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இருமுனைப் பிரச்சனை

இஸ்ரேல் முதலில் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பியதை கண்டிக்காமல் வருத்தம் தெரிவித்திருந்தது. பின்னர் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பைக் கண்டித்திருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தது. இஸ்ரேல் நூறு தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களையும் உக்ரேனுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் படைக்கலன்களை அனுப்பும்படி உக்ரேன் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேனில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்ற இஸ்ரேலியர்களின் விருப்பம் ஒரு புறம் புட்டீனைச் சினத்திற்கு உள்ளாக்க கூடாது என்பது மறுபுறமாக இஸ்ரேல் செயற்படுகின்றது. ஈரானைக் கையாள்வதற்கு இஸ்ரேலுக்கு இரசிய உறவு தேவைப்படுகின்றது. ஈரானும் இரசியாவும் தம் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றுபடும் போது இஸ்ரேலிய நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இஸ்ரேல் கவனமாக இருக்கின்றது. ஈரானுக்கு இரசியா எஸ்-400 போன்ற வான் பாதுகாப்பு முறைமைகளை வழங்கினால் அது இஸ்ரேலுக்கு பாதகமாகும்.

குருவி தலையில் பனங்காய்

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நஃப்த்தாலி பென்னட் கிரெம்ளினின் புட்டீனுடன் மூன்று மணித்தியாலங்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஜெர்மனி சென்று அதிபர் Olaf Scholzஉடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். கடந்த சில வாரங்களாக நஃப்த்தாலி பென்னட் பிரெஞ்சு அதிபர் மக்ரோன், உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கிச்(இவர் ஒரு யூதர்), அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 2022 மார்ச் 2-ம் திகதி புதன் கிழமை இரசிய அதிபருடன் தொலைபேசியல் செய்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே இஸ்ரேல் தலைமை அமைச்சர் இரசியா சென்றார். அமெரிக்காவின் விருப்பத்தின் பேரில் இஸ்ரேல் செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இரசியாவில் உள்ள மரபுவழி கிருத்தவர்கள் ஜெருசேலம், பெத்தேலேகம் ஆகியவற்றை இஸ்ரேல் தன் முழுமையான ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புவர்கள். புட்டீனும் அதை ஆதரிக்கின்றார். அதனால் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல்-இரசிய உறவு சீராக இருக்கின்றது. 2022-03-05 திகதி பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மறுநாள் தன அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி தனது முயற்ச்சி வெற்றி தருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதைச் சுட்டிக்காட்டி உக்ரேனில் நிலைமை மோசமாக இருக்கின்றது நாளடைவில் அது மேலும் மோசமாகலாம் என்பதால் சிறு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டியது எமது அறம்சார் கடமை என்றார். இரசியா மீது இஸ்ரேலுக்கென ஒரு அரசுறவியல் நெம்புகோல் இல்லாத போது இஸ்ரேலின் முயற்ச்சி புட்டீனின் மனதை மாற்றுவது கடினம். 

சிரியாவில் ஒத்துழைப்பு

வளைகுடா நாடுகளில் இருந்து சிரியாவூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கினால் ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம் என்ற முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்ட போது இரசியாவின் வேண்டுதலின் பேரில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத அதை எதிர்த்தார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற அரபு வசந்தம் என்னும் பெயரில் அமெரிக்கா சதி செய்தது. அவருக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க 2015இல் சிரியாவிற்கு புட்டீன் தன் படையை அனுப்பினார். அப்போது இரசிய போர்விமானங்கள் அவ்வப்போது எல்லை தாண்டிச் சென்று அயல் நாட்டு வான் பரப்புக்களிற்குள் செல்வதுண்டு. அப்படிச் சென்ற ஒரு இரசியப் போர் விமானத்தை துருக்கு சுட்டு வீழ்த்தியது. இஸ்ரேல் இரசியப் போர்விமானங்கள் தன் நாட்டுக்குள் அறிவித்து விட்டு பறப்பதை அனுமதித்திருந்தது. அதற்குப் பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரான் சிரியாவில் வைத்து வழங்கும் படைக்கலன்களை லெபனானுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம அவற்றை இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதை இரசியா தடுக்கவில்லை. இஸ்ரேலின் முன்னாள் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ விளடிமீர் புட்டீனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

இஸ்ரேல் தலைமை அமைச்சரின் இரசியப் பயண நோக்கங்கள்:

1. உக்ரேனில் உள்ள யூதர்களின் பாதுகாப்பு: 44 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உக்ரேனில் 0.2% விழுக்காடு யூதர்கள் மட்டும் வாழ்கின்றார்கள். இஸ்ரேல் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது. தற்போது உக்ரேனிய அதிபராக இருப்பவரும் ஒரு யூதர்.  தலைமை அமைச்சராகவும் இருந்தார்.

2. ஈரான் பேச்சு வார்த்தை: அமெரிக்காவும் ஈரானும் நடத்திக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையை இரசியா குழப்பலாம என இஸ்ரேல் கருதுகின்றது. அமெரிக்க ஈரானிய பேச்சு வார்த்தை முடிவிற்கு வரும் நிலையில் உள்ள வேளையில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் இரசியா சுதந்திரமாம ஈரானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

3. இஸ்ரேலியர்களின் மீள் வருகை: உலகெங்கும் வாழும் யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்து குடியேறி பலஸ்த்தீனியர்களிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துள்ள நிலங்களில் குடியேறி அங்கு யூதர்களின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் திட்டம். உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேல் சென்றுள்ளனர்.

உக்ரேனியப் போர் என்பது வெறும் நேட்டோ விரிவாக்கம் சம்பத்தப்பட்டது மட்டுமல்ல, இரசியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது உலகின் எதிர்காலத்தை முடிவு செய்யும் போர் ஆக உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போராகவும் இருக்கின்றது. பல நாட்டு தலைவர்கள் அப்போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்ச்சியில் ஈடு பட வேண்டும்.

Sunday, 6 March 2022

இரசிய வான்படையும் உக்ரேனிய வான்படையும்

  


இரசியாவின் வான் வலிமைக்கு 26.9 புள்ளிகளைக் கொடுத்த ஒரு வான் வலு தரப்படுத்தும் நிறுவனம் உக்ரேனின் வான் வலிமைக்கு 2.4 புள்ளிகளை மட்டும் கொடுத்திருந்தது. இரசியாவிடம் 3863 போர் விமானங்களும் உக்கிரேனிடம் 210ம் இருக்கின்றன. இருந்தும் உக்ரேன் மீது இரசியா வான்-ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. உக்ரேனுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் களமிறங்கினால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் போர்த்துக்கலைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக MiG-31K ஒலியிலும் 2.8 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய போர்விமானங்களை Kinzhal என்னும் அணுக்குண்டு தாங்கக் கூடிய மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்-சோனிக்)ஏவுகணைகளை இரசியாவிற்கு சொந்தமான போலந்தை அடுத்துள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா எண்ணிக்கை நிறுத்தியுள்ளது.

பறக்காத விமாங்கள் 300

உக்ரேனுக்கு குறைந்த நேரத்தில் பறந்து செல்லக் கூடிய வகையில் முன்னூறு Su-35 மற்றும் Su-30 போர்விமானங்கள் இரசியா நிறுத்தி வைத்துள்ளது. அவை இதுவரை உக்ரேனுக்கு பறப்புக்களை மேற்கொள்ளவில்லை. Su-34 விமானங்கள் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக் கூடியவை. இரசியாவிடம் வான் மேலாண்மையை சிறப்பாகச் செய்யக் கூடிய எண்பது 4.5 தலைமுறை Su-35S விமானங்கள் உள்ளன. Su-30-SM (2) என்னும் பற்பணிப் போர்விமானங்கள் எண்பது உள்ளன. இவ்விரண்டு வகையான விமானங்களாலும் தாக்குதற்கான வான் எதிர்ப்பு (Offensive Counter-Air) மற்றும் பாதுகாப்பிற்கான வான் எதிர்ப்பு (Defensive Counter-Air) ஆகிய பணிகளைச் செய்து உக்ரேன் வான்பரப்பில் இரசியாவால் மீயுர்-வான் – வான் மேலாதிக்கத்தை (Air-supremacy) செய்ய முடியும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. உக்ரேன் மீது இரசிய வான்படை நடத்திய பறப்புக்களில் பெரும் பான்மையானவை இரவு நேரத்திலேயே நடந்தன. இரசியத் தரைப்படைக்கு போதிய நெருங்கிய பறப்பு ஆதரவு வழங்க முடியாமல் இரசியப் படைகள் இருக்கின்றன.

ஆயிரம் இருந்தும்

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியா பல பில்லியன் டொலர்களை புதிய விமானங்களை உருவாக்குவதற்கு செலவழித்து வருகின்றது. 2009இற்கும் 2020இற்கும் இடையில் இரசிய விமானப் படைக்கு 440 புதிய விமானங்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆளிலிவிமானங்களும் (Drones) இணைக்கப்பட்டன. இரசியா போர் ஆரம்பித்த போது உக்ரேனின் விமானங்களையும் ரடார்களையும் அழிக்க பல ஏவுகணைகளை வீசியது. அவற்றால் உக்ரேனிய போர் விமானங்களையோ ரடார்களையோ அழிக்க முடியாத வகையில் உக்ரேனியர்கள் அவற்றை பல இடங்களில் பரப்பி வைத்திருந்தார்கள். இரசிய ஆளிலிவிமானங்கள் தாக்குதலுக்கு வேவுபார்த்தலுக்கோ உக்ரேனில் பாவிக்கவில்லை எனச் செய்திகள் வருகின்றன. பல படைத்துறைச் சஞ்சிகைகள் இரசியாவின் ஆளிலிகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. மாறாக உக்ரேன் பெருமளவு ஆளிலிகளைப் பயன்படுத்துகின்றது. 

உக்ரேனின் ஆளிலிவிமானம்

சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்த படைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன் இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில் தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக் கூடியவை. 

சண்டை ஆனால் சட்டை கிழியவில்லை

இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்து பத்து நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான உக்ரேனிய விமானங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. போர் ஆரம்பித்தவுடன் உக்ரேனின் வான்கலன்களையும் வான் பாதுகாப்பு முறைமைகளையும் இரசியா முற்றாக அழித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிடமிருந்த சோவியத் ஒன்றிய கால எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒன்றை இரசியா அழித்திருந்தது. அது போதிய உதிரிப்பாகங்கள் இல்லாமல் இடம் விட்டு இடம் நகர முடியாமல் இருந்தது. 2022 மார்ச் 6-ம் திகதி மட்டும் இரசியாவின் ஒரு Su-25, இரண்டு Su-30 SM, ஒரு ஆளிலிவிமானம், இரண்டு உலங்கு வானூர்தி ஆகியவற்றிச் சுட்டு விழுத்தியதாகவும் போர் தொடங்கியதிலிருந்து மொத்தம் 44 விமானங்களையும் 44 உலங்கு வானூர்திகளையும் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேனியப் படையினர் தெரிவித்தனர்.

யானையின் சோளப்பொரி

புட்டீனின் படைகள் உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதனிடம் 98 தாக்குதல் விமானங்கள் உட்பட 210 போர் விமானங்கள் இருந்தன. ஐரோப்பாவில் நான்காவது பெரிய விமானப்படை உக்ரேனிடம் இருந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனில் பல விமான உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் உக்ரேனின் விமானப்படை இரசியாவின் விமானப்படையுடன் ஒப்பிடுகையில் சோளப்பொரியும் யானையும்.

இரசிய வான்படையின் பிரச்சனைகள்:

1. குறைவான ஏவுகணைகள்: சிரியப் போரின் போது இரசியா பெருமளவு வழிகாட்டல்-துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளைப் பாவித்து விட்ட படியால் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து விட்டது. உக்கிரமமான போர் வரும் போது பாவிப்பதற்கு என இரசிய வான் படை தனது வானிலிருந்து தரைக்கு வீசும் ஏவுகணைகளை பாதுகாத்து வைத்திருக்கின்றது.

2. S-400 ஆப்பு வைக்கலாம்: உக்ரேன் வான் வெளியை இலக்கு வைத்து இரசியா தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுத்தி வைத்திருக்கின்றது. அது 400கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் விமானங்களை உணர்ந்து தானாகவே அவற்றை சுட்டு வீழ்த்த வல்லது. உக்ரேனுக்கு மேல் பறக்கும் இரசிய விமானங்களை இரசியாவின் S-400 சுட்டு வீழ்த்தலாம் என இரசிய வான்படையினர் கரிசனை கொண்டுள்ளனர். இதுவரை ஒரு உக்கிரமான போரில் S-400 பயன்படுத்தப்படவில்லை. சிரியாவில் பாவிக்கப்பட்டது. போதிய அனுபவமில்லாமல் விமானங்களைப் பலியிட இரசிய வான்படை விரும்பவில்லை.

3. அனுபவமற்ற இரசிய விமானிகள்: இரசியப் போர்விமானிகள் ஆண்டு ஒன்றிற்கு நூறு மணித்தியாலங்கள் மட்டுமே விமானம் ஓட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமது விமானிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு 180 முதல் 240 மணித்தியாலம் விமானம் ஓட்டும் வாய்ப்பை கொடுக்கின்றனர். பெறுமதி மிக்க விமானங்களை அனுபவம் குறைந்த விமானைகளிடம் கொடுத்து பறக்க விட்டு அவை சுட்டு வீழ்த்தப்பட்டால் அல்லது விபத்திற்கு உள்ளானால் அது இரசியாவின் விமான விற்பனையைப் பாதிக்கும்.

4. Targeting Pod தட்டுப்பாடு: போர்விமானங்கள் தாக்குதலுக்கு செல்லும் போது Targeting Pod என்னும் கருவியை அதில் பொருத்தி விடுவர். அவை எதிரியின் தாக்கப்பட வேண்டிய இலக்குகளை இனம் காணும். இரசியாவிடம் போதிய அளவும் Targeting Pod இல்லை எனப்படுகின்றது.

5. அப்பாவிகளைக் கொல்லாமல் இருக்க: இரசிய வான்படையினரின் தாக்குதலில் அப்பாவி உக்ரேனியர்கள் அதிகம் கொல்லப்படுவதை இரசியரகள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருக்க இரசிய வான் படையினர் பற்ப்புக்களைக் குறைத்துள்ளனர்.

6. உக்ரேனின் குழப்பிகள்: உக்ரேன் பல்வேறு இலத்திரனியல் குழப்பிகளை  பாவித்து இரசியாவின் விமானங்கள் மற்றும் வழிகாட்டல் ஏவுகணைகளை குழப்பிவிடுகின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை வேடமா உபாயமா?

உக்ரேன் அதிபர் விளாடிமீர் ஜெலன்க்ஸி தமக்கு போர்விமானங்களை தாருங்கள் என வலியுறுத்தி வேண்டினார். ஐரோப்பிய நாடுகளின் Eurofighter Typhoon, Rafael, Gripen ஆகிய சிறந்த விமானங்கள் இருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த Meteor ஏவுகணைகள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்தால் உக்ரேனின் வான்பரப்புக்குள் இரசிய விமானங்களை வராமல் தடுக்கலாம். அவற்றைக் கொடுத்தால் புட்டீன் கடும் சினம் கொள்வார் என்பதால் அவற்றை ஐரோப்பிய நாடுகள் கொடுக்கவில்லை. மாறாக நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய மற்றும் வார்சோ ஒப்பந்த நாடுகளிடமுள்ள பழைய சோவியத் தயாரிப்பு விமானங்களை உக்ரேனுக்கு  வழங்க ஏற்பாடு நடக்கின்றது. பல்கேரியாவிடம் பதினாறு Mig-29 பதினான்கு Su-25 போர்விமானங்கள் உள்ளன. போலாந்திடம் இருபத்தி மூன்று Mig-29 பதினெட்டு Su-22 விமானங்கள் உள்ளன. சுலோவாக்கியாவிடம் பதினொரு Mig-29 விமானங்கள் உள்ளன. இவற்றை உக்ரேனுக்கு வழங்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. சில ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இந்த விமானங்கள் உக்ரேனிய விமானிகளுக்கு பழக்கப்பட்டவை அவற்றை உடனடியாக அவர்களால் செலுத்திக் கொண்டு பறக்க முடியும். ஆனால் Eurofighter Typhoon, Rafael, Gripen போன்றவற்றிற்கு நீண்ட காலப் பயிற்ச்சி தேவைப்படும் என ஐரோப்பிய நாடுகள் சொல்கின்றன. பல்கேரியா, போலாந்து, சுலோவாக்கிய நாடுகள் தம்மிடமுள்ள பழைய விமானங்களை உக்ரேனுக்கு கொடுத்து விட்டு அவற்றிற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் போர் விமானங்களை வாங்கும். எல்லாமே வியாபாரம்தான். சோவியத் தயாரிப்பு விமானங்களை இரசியாவிற்கு எதிரான போரில் உக்ரேன் பாவிக்கும் போது அதே போன்ற விமானங்களை இரசியாவும் பாவிக்கும் போது இரசியப் படையினரையும் அவர்களின் வான் பாதுகாப்பு முறைமையும் குழப்பத்திற்கு உள்ளாகி நட்புச் சூடு (Friendly Fire) அதிக அளவில் இரசியத் தரப்பில் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் நேட்டோ நாடுகளின் உபாயமாக இருக்கலாம்.

நாள் செல்ல செல்ல உக்ரேனில் கடுமையான வான் சண்டை நடக்கும். பெலரஸில் உள்ள S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தேர்வுக்கு உட்படுத்தப்பட அமெரிக்க நிபுணர்கள் இரகசியமாக களமிறங்குவார்கள். இஸ்ரேல் தனது வான்படைக்கு அனுபவம் தேடி அலைகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...