Friday, 19 February 2016

பகடைக் காய்களாக இருக்கும் குர்திஷ் மக்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்




சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் போரில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக காத்திரமான தாக்குதல் செய்யக் கூடியவர்களாகவும் கணிசமான வெற்றியை ஈட்டியவர்களாகவும் குர்திஷ் போராளி அமைபினரே இருக்கின்றனர். ஐ எஸ் அமைப்பினர் இரண்டு வகைகளில் குர்திஷ் போராளிகளுக்கு அஞ்சுகின்றனர். ஒன்று அவர்கள் தீரமிக்க போராளிகள். மற்றது அவர்களின் பெண் போராளிகள் ஆண்களிலும் பார்க்க வீரமாகப் போராடுகின்றார்கள். ஒரு பெண்ணால் கொல்லப்படும் புனிதப் போராளி நரகத்திற்குப் போவன் என ஐ எஸ் அமைப்பினர் உறுதியாக நம்புகின்றார்கள்.

நிலம் பிடிக்கும் குர்துகள்
இரசியப் படைகளின் உதவியுடன் அலெப்பே பிராந்தியத்தில் சிரியப் படைகள் பெரும் தக்குதல்கள் செய்யும் போது குர்திஷ் போராளிகள் தமக்கென சில நிலப்பரப்புக்களைக் கைப்பற்றினர். இரசியப் படைகளினதும் சிரியப் படைகளினதும் நோக்கம் துருக்கிய எல்லையில் இருந்து அமெரிக்க சார்பு போராளிக் குழுக்களைத் துண்டிப்பதாகும். இதனால் அவர்களுக்குத் துருக்கியில் இருந்தும் துருக்கியூடாகவும் கிடைக்கும் விநியோகங்களைத் தடுக்க முடியும். இரசியப் படைகள் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக எந்தத் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மற்றக் கிளர்ச்சிக்காரரிகளிடமிருந்து நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதை இரசியா விரும்புகின்றது அல்லது ஆட்சேபனை இன்றி இருக்கின்றது எனச் சொல்லலாம். 

ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழ்கின்றார்கள். அவர்கள்து போராட்டம் பல இனக்கொலைகளுக்கு மத்தியில் ஒரு நூற்றாண்டாகத் தொடர்கின்றது. சிரியாவில் அவர்களுக்கு என்று குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. சிரியாவில் அவர்கள் வாழும் பிரதேசத்தில் 2.5பில்லியன் பீப்பாய் எரிபொருள் உண்டு ஆனால் அதனால் கிடைக்கும் வருமானத்தில் எதுவும் அவர்களுக்குப் பயன் தருவதில்லை. துருக்கியில் இரண்டு கோடி குர்திஷ் மக்கள் வாழ்கின்றனர். முதலில் அவர்கள் தனிநாடு கோரியும் பின்னர் சுயாட்சி வேண்டியும் போராட்டம் செய்கின்றனர்.

குர்திஷ் மக்களைப் பாதுகாப்பதாக இரசியா உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சிரிய எல்லையைத் தாண்டிச் சென்று துருக்கி தாக்குதல்கள் நடத்தினால் இரசியாவுடன் ஒரு பெரும் போரைத் துருக்கி எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சிரியாவில் உள்ள குர்திஷ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அப்படி ஒரு உத்தரவாதம் குர்திஷ் மக்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறு. ஆனால் குர்திஷ் மக்களை மோசமான எதிரிகளாகப் பார்க்கும் சிரிய ஆட்சியாளர்களுக்கும் அலவைற் இனக்குழுமத்தினருக்கும் தற்போது இரசியா மிக நெருங்க்கிய நட்பைப் பேணுகின்றது. எதிரியின் நண்பனின் உத்தரவாதத்தை எந்த அளவிற்கு நம்பலாம்? இரசியாவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களிலும் பார்க்க அரபு மொழி பேசும் அலவைற் இனத்தினர் அதைக கேந்திரோபாய முக்கியத்துவ பெற்றவர்கள். 

குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவையான போதெல்லாம் குர்திஸ் மக்களின் போராட்டத்திற்கு உதவுபோல் பாசாங்கு காட்டிக் கொண்டு அவர்களைத் தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வைப்பதும் பின்னர் அவர்களைக் கைவிடுவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. குர்திஸ் மக்களும் தமிழர்களைப் போலவே சரித்திரத்தில் இருந்து கற்றுக் கொள்வதில்லை.

ஓர் இனத்திற்கு அந்நியர்கள் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொடுத்து வலுமிக்க அல்லது எண்ணிக்கை அடிப்படையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட எதிரிக்கு எதிராகப் போராட வைப்பது ஆபத்து மிக்கது. அது இனக்கொலையிலேயே போய் முடியும்.

1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது.

1967-ம் ஆண்டு ஈராக்கில் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தகத்தை விரிவாக்க முயன்ற போது அவருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியது. அப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஈரானுடாக இது நடந்தது. 1972-ம் ஆண்டு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட ரிச்சட் நிக்சனும் ஹென்றி கிஸ்ஸிங்கரும் குர்திஷ் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வோம் என்ற உறுதி மொழியையும் வழங்கினர். ஈரானில் மதவாதப் புரட்சி ஏற்பட்டு ஈரானின் அமெரிக்காவின் ஒரு மோசமான எதிரியாக மாறிய பின்னர் ஈரானால் ஈராக்கிற்கு ஆபத்து என்ற எண்ணம் ஈராக்கில் திட்டமிட்டு விதைக்கபட்டது. இதனால் ஈராக் ஐக்கிய அமெரிக்காவுடன் உறவை வளர்த்துக் கொண்டது. ஈரான் ஈராக் போர் மூண்டது. 1975-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குர்திஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட போது அமெரிக்கா தமக்கு உதவும் என குர்திஷ் மக்கள் நம்பி ஏமாந்தனர். ஈராக்கிய குர்திஷ் மக்களின் தலைவர் Mullah Mustapha Brazani  ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோள் அவரது செவியில் ஏறவில்லை.

1991-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குவைத்தை ஆக்கிரமித்த போது சிஐஏ சவுதி அரேபியாவில் இருந்து செய்யப் பட்ட ஒரு வானொலி மூலம் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. அவர்களுக்கு எதிராக சதாம் தாக்குதல் செய்த போது அவர்களுக்கு என ஒரு பாதுகாப்பு வலயம் உருவாக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. பின்னர் அப்பாதுகாப்பு வலயத்தில் வைத்தே அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

2003-ம் ஆண்டு அமெரிக்கா சதாம் ஹுசேய்ன் பேரழிவு விளைவிக்கும் படைக்கலனகளை வைத்திருக்கின்றார் என்ற போர்வையில் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த போதும் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ குர்திஷ் மக்களையும் சதாமிற்கு எதிராகப் போர் செய்ய வேண்டியது. மீண்டும் குர்திஷ் மக்கள் அமெரிக்காவுடன் இணைந்து போராடினார்கள். மீண்டும் பெரிய அளவில் இனக்கொலைக்கு உள்ளானார்கள். 2008-ம் ஆண்டு துருக்கியப் படைகள் ஈராக்கின் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களை வேட்டையாடிய போது குர்திஷ் போராளிகள் தொடர்பாகவும் அவர்களது நிலைகள் தொடர்பாகவும் தேவையான தகவல்களை சிஐஏ துருக்கிக்கு வழங்கியது. .

குர்திஷ் அமைப்புக்கள்
1. பிகேகே (PKK) - இது துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளி அமைப்பு. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் கொள்கையைக் தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுக்கு எதிராக கரந்தடிப் போரைச் செய்து கொண்டிருக்கின்றது.
2. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் எல்லாக் குர்திஷ் போராளி அமைப்புகளில்லும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவின் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது.
3.பெஷ்மேர்கா - இது 1920களில் இருந்து ஈராக்கில் உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ் மக்களின் அமைப்பாகும். 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த போது அவற்றுடன் பெஷ்மேர்கா இணைந்து போராடியது. தற்போது இது ஈராக்கில் பெரு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து ஒரு நிழல் அரசை நடாத்தி வருகின்றது.

மீண்டும் குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியப் பத்திரிகையான தி இண்டிப்பெண்டென்றில் ஒவ்வொரு பிராந்திய அரசுகளும் குர்திஷ் மக்களுக்குத் துரோகமிழைத்தன என்னும் தலைப்பில் ரொபேர்ட் பிஸ்க் எழுதிய கட்டுரையின் முதல் வரி "குர்திஷ் மக்கள் துரோகம் இழைக்கப்படுவதற்குப் பிறந்தவர்கள்" என அமைந்தது.

Syrian Kurdish Democratic Union Party (PYD)இன் படைப்பிரிவான YPG அலேப்பே நகரில் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுகின்றார்கள் என்பதால் துருக்கி 2016-ம் பெப்ரவரி 16-ம் திகதி அவர்களின் நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. மறுதினம் துருக்கியில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன அது குர்திஷ் "பயங்கரவாதிகளின்" செயல் என்றார் துருக்கியத் தலைமை அமைச்சர். ஈழ மக்களின் போராட்டத்தைப் பற்றி அறிந்தவர்கள் குண்டு வெடிப்பை யார் செய்திருப்பார்கள் என்பதை இலகுவாக ஊகித்து அறிந்து கொள்வார்கள். ஓர் இனம் இன்னொரு நாட்டினுள் தனக்கு என ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கும் போது இன்னும் ஒரு நாடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றது என்பதற்கான விடையையும் ஈழப் போராட்டத்தையும் அமைதிப் படையின் செயற்பாட்டையும் அறிந்தவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள்.

துருக்கியின் Indecent proposals)
சிரியக் குர்திஷ் போராளிகளுடன் சமாதானமாகப் போக துருக்கி இரண்டு அசிங்கமான முன்மொழிவுகளைச்  (Indecent proposals) செய்துள்ளது: 1 குர்திஷ் போராளிகள் சிரிய அதிபர் அல் அசாத்தைப் பதவியில் இருந்து விரட்ட போர் செய்ய வேண்டும். 2 தங்களுக்கு சுயாட்சி கோருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.  தற்போது குர்திஷ் மக்கள் சிரியாவில் கொபானி, ஜஜீரா ஆகிய நகரங்களில் நிழல் அரசுகளை நடத்தி வருகின்றார்கள். இரண்டையும் இணைக்கும் பிரதேசம் ஐ எஸ் போராளிகளிடமுள்ளது. அதைக் கைப்பற்றுவதே அவர்களின் தற்போதைய முக்கிய நோக்கமாகு. ஆனால் இந்தப் பிரதேசம் துருக்கியுடன் எல்லையைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பொறுப்பாகும்
தற்போது உள்ள சூழ்நிலையில் துருக்கிக்கும் குர்திஷ் மக்களுக்கும் இடையில் ஒரு சமரசத்தைச் செய்து வைக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும். அமெரிக்காவுடன் குர்திஷ் மக்கள் இணைந்து போராடுவத்தால் அது அமெரிக்காவின் பொறுப்பாகும். ஆனால் அமெரிக்கா யாரையும் நண்பனாகக் கருதுவதில்லை 1970இல் அமெரிக்கா ஈராக்கில் குர்திஷ் மக்களின் கால்களை வாரியபோது அதன் நியாயத் தன்மையைப் பற்றி கேள்வி கேட்ட போது ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன பதில்: இரகசிய நிலக்கீழ் படை நடவடிக்கை வேறு மதப்பரப்பு (missionary) நடவடிக்கைகள் வேறு என்றார். தற்போது இரசியா குர்திஷ் போராளிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கா அவ்வப் போது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.  இறுதியில் அவர்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்.

Monday, 15 February 2016

சன்னதம் கொள்ளும் வட கொரியாவும் சங்கடப்படும் சீனாவும்

2016ஆங்கிலப் புத்தாண்டு சீனாவிற்கு மோசமாக ஆரம்பித்தது. வீழ்ச்சியடையும் பங்கு விலைகள், வேகம் இழக்கும் பொருளாதாரம், விழும் நாணயப் பெறுமதி, என்பன ஒரு புறம் சீனாவை ஆட்டிப் படைக்க மறு புறம் சீனா தனது என அடம் பிடிக்கும் தென் சீனக் கடற் பிரதேசத்தில் ஐக்கிய அமெரிக்கா மூன்றாவது  முறை "அத்துமீறியது".  போதாக் குறைக்கு தாய்வானில் சீனவிற்கு எதிரான கொள்கை கொண்டோர் ஆட்சியைக் கைப்பற்றினர்.  அவை போகட்டும் சீனாவின் தேசியப் புத்தாண்டான குரங்கு ஆண்டுப் பிறப்பாவது ஒழுங்காக நடக்குமா என சீனா எதிர்பார்த்துக் கொண்டு சீனா வாண வேடிக்கை செய்து கொண்டிருக்கையில் சீனாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் பாரிய வாணம் ஒன்றை வட கொரியா வெடிக்க வைத்தது. வட கொரியா வெடிக்க வைத்தது நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் சென்றதுடன் ஒரு செய்மதியையும் மிதக்க விட்டுள்ளது.  இந்த ஏவுகணைகளின் மூலம் வட கொரியாவால் முழு ஐரோப்பியக் கண்டம், கனடா, ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பகுதி, ஒஸ்ரேலியா, வட ஆபிரிக்கா ஆகிய பிரதேசங்களில் அணுக்குண்டுகளை வீச முடியும்.

வாடும் கொரியாவை வாழவைக்க ஏவுகணை!
வட கொரியா பரிசோதித்த ஏவுகணை 440 இறாத்தல் எடையுள்ளது. அது 2012-ம் ஆண்டு பரிசோதித்த ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு பாரமானது. இந்த ஏவுகணைப் பரிசோதனை பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங்கின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2016 மே மாதம் மக்கள் கட்சியின் மாநாட்டில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகின்றது. அத்திட்டம் அணுக்குண்டு பரிசோதனைகளுடன் கூடிய பொருளாதார முன்னேற்றம் ஆகும். கிம் உல் ஜொங்கின் பேரனது ஆட்சிக்காலத்தில் இருந்த செழிப்பை நாட்டில் மீண்டும் கொண்டுவரும் திட்டம் அப்பொருளாதாரத் திட்டமாகும்.  வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு உள்நாட்டில் இருக்கும்  பேராதரவைத் தகர்க்கக் கூடிய வகையில் வெளிநாட்டு அழுத்தங்கள் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு வெளி அழுத்தத்தை சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும்.  வட கொரியா இன்னும் ஒரு அணுக்குண்டுப் பரிசோதனையைச் செய்யவிருக்கின்றது என தென் கொரிய உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அப்படி ஒரு பரிசோதனை 2016 மே மாதத்திற்கு முன்னர் நடக்கலாம் என்கின்றது.  வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பான் வட கொரியாவிற்குப் பணம் அனுப்புவதை கட்டுப்படுத்தியது. தென் கொரியா வட கொரியாவில் நிறுவிய கைத்தொழிற் பேட்டையை மூடியது. தென் கொரியா வடகொரியாவுடன் இணைந்து நடத்திய கைத்தொழிற்பேட்டையில் உள்ள 120இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 54,000இற்கும் மேற்பட்ட வட கொரியர்கள் பணிபுரிந்தார்கள். 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கைத்தொழிற்பேட்டையில் தென் கொரியா 840மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் வட கொரியா 110மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றது. இக் கைத்தொழிற்பேட்டை மூடப்பட்டதுடன் தென் கொரியாவில் இருந்து செய்து வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

குருவிற்கு அடங்கா மாணவன்
சீனா வட கொரியாவின் புரவலர் (patron) நாடு  என்னும் அளவிற்கு அதற்குப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. வட கொரியா அணுக்குண்டுப் பரிசோதனை செய்வதை நிறுத்தும் படி சீனா விடுக்கும் வேண்டு கோள்களிற்கு வட கொரியா செவிமடுப்பதில்லை. வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் முன்னணி அரசுறவியலாளரான வு டவே(Wu Dawei) வடகொரியத் தலைநகர் பியோங்யாங் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். வட கொரியா 2016-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஹைட்ரஜின் அணுக்குண்டு ஒன்றை வட கொரியா வெடித்துப் பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி சீனத் தலைநகர் பீஜீங் சென்று வட கொரியாவிற்கு எதிராக சீனா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்தே சீன அரசுறவியலாளர் வு டவே(Wu Dawei) பியோங்யாங் சென்றார் ஆனால் அங்கு அவரது வேண்டுகோள் எவற்றிற்கும் வட கொரிய அதிபர் கிம் உல் ஜொங் இணங்கவில்லை. அவரை வட கொரியா வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதாக அமெரிக்க முன்னணி நாளிதளான நியூயோர்க் ரைம்ஸ் எள்ளி நகையாடியது.  கிம் உல் ஜொங் பதவிக்கு வந்ததில் இருந்து சீன வட கொரிய உறவு மோசமடைந்து வருகின்றது. கிம் உல் ஜொங் ஆட்சிய்க்கு வந்ததில் இருந்து இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசவில்லை. கிம் உல் ஜொங் ஆட்சியை இரும்புப் பிடியாகப் பிடித்துள்ளார். அவரை ஆட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள் காணாமற் போய்விருவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. அப்படி அண்மையில் காணாமற் போனவர் படைத்தளபதி ரி யிங் ஜொல். அவர் கொல்லப்பட்டதாக்வும் செய்திகள் வெளிவந்தன.

காத்திருந்த அமெரிக்கக் கொக்கு

சிறு அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய தொலைதூரம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா உருவாக்குவது ஐக்கிய அமெரிக்காவை இரண்டு வகையில் கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஒன்று வட கொரியாவால் ஐக்கிய அமெரிக்காமீது அணுக்குண்டுத் தாக்குதல் செய்யக் கூடிய நிலை உருவாகும். இரண்டாவது இத் தொழில் நுட்பத்தை வட கொரியா ஈரானுக்கு வழங்கினால் அது இஸ்ரேலின் இருப்பிற்குப் பேராபத்தாகும். இதைத் தவிர்க்க அமெரிக்கா தனது காய்களை நகர்த்த வேண்டும். அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defence ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன.  இவற்றை தென் கொரியாவில் நிறுவ ஐக்கிய  அமெரிக்கா நீண்ட காலமாக விரும்பி இருந்தது. அதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தது. தாட் ஏவுகணைகள் தென் கொரியாவில் நிறுவினால் அது தனது ஏவுகணைகளைவலுவிழக்கச் செய்து தனக்கு சாதகமான படைத்துறைச் சமநிலையை உருவாக்கும் என்றது சீனா. சீனாபெருமளவு வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதால் சீனாவை அதிருப்திப் படுத்த தென் கொரியாவும் விரும்பவில்லை. ஆனால் 2016-ம் ஆண்டு வட கொரியா செய்த அணுக்குண்டுப் பரிசோதனையின் பின்னர்   தென் கொரியா அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தனது நாட்டில் நிறுவுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.

என்ன இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை?

ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இது முழுக்க முழுக்க ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும்.  . அமெரிக்காவின் புதிய தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது.  அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும்.  அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.

பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம்

வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பானும் தென்  கொரியாவும் அமெரிக்கப் பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூட்டின. அதில் வட கொரியாவிற்கு எதிரான ஒரு கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது.  சீனப் படைத்துறையினர் வட கொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பாதுகாப்பு அரணாக வட கொரியா உள்ளதாகக் கருதுகின்றனர். தென் கொரியா போல் அதுவும் ஒரு அமெரிக்க சார்பு நாடாக மாறுவதையோ அல்லது இரு கொரியாக்களும் இணைந்து முழுக் கொரியாவும் அமெரிக்க சார்பாக மாற்வதோ சீனாவிற்கு ஆபத்தாகும். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை தற்போதைய ஆட்சியாளர்ளிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்து அங்கு அமெரிக்கா சார்பு நிலை தோன்றுவதற்கு வழி வகுக்கும் என சீனா  கருதுகின்றது. இதனால் கடந்த காலங்களில் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் கடுமையை சீனா தடுத்து வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவிருக்கும் வட கொரியாவிற்கு எதிரான தீர்மானத்தில் சீனா என்ன நிலைப்பாட்டை எடுக்க விருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும். வட கொரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டுவரக் கூடிய தீர்மானத்திற்கு ஆதரவா அல்லது தென் கொரியாவில் அமெரிக்கா புதுத் தர ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுவச் செய்வதா என்ற இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற சங்கடமான நிலைக்கு சீனாவை அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கின்றது.

Monday, 8 February 2016

அசைக்க முடியாத புட்டீனும் ஆட்டம் காணாத இரசியாவும்

ஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக 2016-ம் ஆண்டு ஒதுக்கிய 760மில்லியன் டொலர்கள் 2017-ம் ஆண்டு 3.4பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப் படவுள்ளது. இதே வேளை அட்லாண்டிக் மாகடலில் இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகள் பனிப்போர்க் காலத்தில் இருந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என நேட்டோவின் கடற்படைத் தளபதி Vice Admiral Clive Johnstone தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றின் படைவலு அதிகரிப்பிற்கு ஏற்ப மற்றது தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான செலவை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தி இருப்பது புட்டீனின் இரசியாவை இட்டு அமெரிக்கப்பாதுகாப்புத் துறை அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் கட்டுகின்றது.

உடையும் என்பார் உடையாது

ஐக்கிய அமெரிக்கா இரசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியத்தை உடையச் செய்தது போல் இரசிய கூட்டகத்தை(Russian Federation) சிதைக்க முயற்ச்சி செய்கின்றது என இரசிய வெளியுறவுத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரசியாவைத் தமதாக்கி இரசியவின் வளங்களைத் தமதாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா முயல்கின்றது எனவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இரசியாவை சிதைக்க அமெரிக்கா முயற்ச்சி செய்யத் தேவையில்லை. விளடிமீர் புட்டீன் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.

புட்டீனின் இரசியாவில் சவால்கள்

புட்டீன் தலைமையில் உலக அரங்கில் மீள எழுச்சியுற முயலும் இரசியாவிற்கு உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போதிய படைகள், படைத்துறைத் தொழில் நுட்பம், மக்கள் ஆதரவு போன்றவை இருக்கின்றது. இரசியாவின் மீள் எழுச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது அதன் பொருளாதாரமாகும். இரசியப் பொருளாதாரம் பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ளது. இரசியாவின் 2015-ம் ஆண்டிற்கான பாதீடு மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வகுக்கப் பட்டது. ஆனால் 2015இல் அது ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கும் கீழாகக் குறைந்தது. 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு த்திட்டம் மசகு எண்ணெயின் விலை உலகச் சந்தையில் 50 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரையப் பட்டது. ஆனால் எரிபொருள் விலை முப்பது டொலர்களாகக் குறைந்துள்ளது. உலக வங்கி 2016இல் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 37 டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் விலை இருபது டொலர்களிலும் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். கடந்த 18 மாதங்களில் 70 விழுக்காடு வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான பாதீட்டை மீள் பரிசீலனை செய்யப்படலாம் என இரசியத் தலைமை அமைச்சர் Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.

பட்டினியால் வாடாத இரசியார்கள்
2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 4 விழுக்காட்டால் சுருங்கியது. பணவீக்கம் 13 விழுக்காடாக இருந்தது. இரசிய நாணயமான ரூபிளின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக அரைப்பங்கு வீழ்ச்சியடைந்தது. இரசியர்களின் சராசரி வருமானம் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் உணவு விலைகள் 14 வீழுக்காடு அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் மக்களின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக 2015-ம் ஆண்டு உயர்ந்துள்ளது. Sergey Shelin என்னும் சுதந்திர பொருளாதார ஆய்வு நிறுவனம் இரசிய மக்கள் பட்டினியால் வாடவில்லை ஆனால் சாப்பாட்டிற்கு சிரமப் படுவோர் தொகை அதிகரித்துள்ளது, மக்கள் தரம் குறைந்த உணவை உண்கின்றார்கள் என்கின்றது. 2015-ம் ஆண்டு மகிழுந்துகளின் விற்பனை 35விழுக்காட்டால் குறைந்துள்ளது. இந்த நிலைமைகளால் இரசியாவின் அமைச்சர்கள் அதிக கலவரமடைந்துள்ளனர். 20018-ம் ஆண்டுவரை இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடரும் என இரசியத் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட சமகால அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

களம் பல கண்ட இரசியா
1998-ம் ஆண்டு இரசியா பெரும் கடன் நெருக்கடியைச் சந்தித்து தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2008-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியின் போதும் இரசியா நிதிநெருக்கடியைச் சந்தித்தது.  2012-ம் ஆண்டில் இருந்தே இரசியப் பொருளாதாரம் பிழையான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிட்டது. இரசிய அரபு சார்பு ஊடகங்கள் இரசியாவில் பிரச்சனை உண்டு ஆனால் நாம் கலவரமடையவில்லை எனப்பரப்புரை செய்கின்றன. இரசிய அரசு சார்பு ஊடகங்கள் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எரிப்பொருள் வீழ்ச்சி மட்டும் காரணம் பொருளாதாரத் தடைகள் அல்ல எனவும் பரப்புரை செய்கின்றன.

ஒரு மூலம் போதாது
எரிபொருள் விலை வீழ்ச்சி மட்டுமல்ல உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல இரசியாவின் பொருளாதாரத்திற்கு எனச் சில அடிப்படை வலுமின்மைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இரசியாவைத் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் விளடிமீர் புட்டீன் இரசியப் பொருளாதாரம் எரிபொருள் ஏற்றுமதில் பெரிதும் தங்கி இருக்கும் நிலையை மாற்ற ஏதும் செய்யவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


படைக்கு முந்து
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் ஆதரவுத்தளமான படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய தர வர்க்கத்தினரிடமிருந்து அதிக வரி அறவிடப்படுவதான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகின்றது. இரசியப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய விளடிமீர் புட்டீன் இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒன்று இரசியாவின் அரச உடமை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தல். விளடிமீர் புட்டீன் பதவிக்கு வரமுன்னர் இரசிய அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவ மயப் படுத்துவதை விரும்பாத புட்டீன் இதை நிறுத்தி இருந்தார். இப்போது அவரே அந்தச் செய்கையைத் தொடங்கப் போகின்றார். இரண்டாவதாக வெளிநாட்டு மூலதனங்களை இரசியாவிற்கு அழைத்துள்ளார். பொருளாதாரத் தடை உள்ள நிலையில் சீனாவால் மட்டுமே இதில் ஈடுபடமுடியும். சீனா தவிச்ச முயல் அடிப்பதில் முன்னிற்கு நிற்கும் ஒரு நாடு. புட்டீனின் நண்பர்களான இரசியப் பெருமுதலாளிகள் தமது வெளிநாட்டு முதலீடுகளை இரசியாவிற்கு கொண்டு வரலாம். அவர்களைத் திருப்திப் படுத்தக் கூடிய மலிவான விலைகளின் புட்டீன் அரச நிறுவனங்களை விற்க வேண்டியிருக்கும். புட்டீனின் தனியார் மயப் படுத்தலில் எரிபொருள் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. தற்போது எரிபொருள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

உலக அரங்கில் தனிமைப் படுத்த முடியாத இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வி இரசியா உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியாத ஒரு வல்லரசு என்பதை எடுத்துக் காட்டியது. ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்கெல் 2016 பெப்ரவரி 2-ம் திகதி புட்டீனுடன் உக்ரேன் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அசைக்க முடியாத புட்டீனின் செல்வாக்கு
இரசியா பல பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் மக்கள் மத்தியில் அதிபர் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு உறுதியாகவே இருக்கின்றது. புட்டீனுக்கு 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் புட்டீனால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் திரட்டப்பட்டவை அவற்றி நம்ப முடியாது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புட்டீன் கொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்ற ஒருவர். அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அண்மைக்காலங்களில் இரசியாவில் பார ஊர்திகள் ஓட்டுபவர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார். எரிபொருள் விலை 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்த போது இரசியாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதியையும் வீழ்ச்சியடைய விட்டு ரூபிளைப் பொறுத்தவரை எரி பொருள் விலை 27 விழுக்காடு மட்டுமே வீச்சியடையச் செய்தார். இரசியாவால் தனது பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது என்பதைச் சரித்திரத்தில் பலதடவைகள் அது நிரூபித்துள்ளது. இரசியா ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற பலரின் எதிர்பார்ப்புக்களை பிழையாக்கும் வல்லமை இரசியர்களிடம் இருக்கின்றது.
.

Tuesday, 2 February 2016

மேற்காசியப் புவிசார் அரசியலில் சீன ஈரானிய உறவின் தாக்கம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் பெரும்பாலானவை நீக்கப்பட்டவுடன் ஈரானிற்கு முதலில் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகும். சீனாவிற்கு ஒரு நெருங்கிய நட்பு நாடு அவசியம் தேவை. அதன் நட்பு நாடாக வரக்கூடிய தன்மைகள் ஈரானிற்கு இருக்கின்றது. நாடுகளிடையே நட்பு என்பது மனிதர்களிடையே உள்ள நட்பைப் போல் அல்ல. ஒன்றிற்கு ஒன்று நலன் தரக்கூடிய வகையில் நாடுகளிடையே உள்ள தொடர்புகளையே நாடுகளிடையேயான நட்பு எனப்படும். ஈரானும் சீனாவும் ஒன்றின் நலன்களை ஒன்று மேம்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றன. மேற்காசியாவிற்கும் வட ஆபிரிக்காவிற்கும் சீனாவின் நுழைவாயிலாக ஈரானைக் கருத முடியும். ஈரானும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமாக இருந்த நிலையில்சீன அதிபர் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்த சூழ்நிலை சீனாவிற்கு சாதகமாக அமைந்தது.

புவிசார் அரசியல்
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளவை தொடர்பான பல் வேறு நாடுகளின் கொள்கைகளை புவிசார் அரசியல் எனலாம். இங்கு உள்ளவை எனக் குறிப்பிட்டது மிகவும் பரந்த பொருளுடைய ஒரு சொல்லாகும். மக்கள், மதம், கலாச்சாரம், வளம், பொருளாதாரம், படைவலு எனப் பலவற்றை இந்த உள்ளவை என்னும் சொல் தாங்கி நிற்கின்றது. ஈரானின் உள்ள இயற்கை வளங்களும் ஈரானின் பூகோள இருப்பும் சீனாவின் நலன்களிற்குத் தேவையானவை. சீனாவின் உட்கட்டுமான அனுபவமும் சீனாவிடமிருக்கும் அபரிமிதமான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பும் ஈரானின் நலன்களுக்குத் தேவையானவை. இரு நாடுக்ளும் கை கோர்த்துக் கொண்டால் வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரான் எதிரியாகக் கருதுவதும் சீனா போட்டியாளராகக் கருதுவதுமான ஐக்கிய அமெரிக்காவைச் சமாளிக்க முடியும். ஈரானிய சீன உறவில் முக்கிய பங்கு வகிப்பவை சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டமும் ஈரானின் மலிவான எரிபொருளுமாகும். மேற்காசியாவில் அமெரிக்க ஆதிக்கமில்லாத ஒரே நாடு ஈரானாகும். ஈராக்குடனான போரின் போது ஈரானுக்கு சீனா தனது பட்டுப்புழு(silkworm) ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்களை விற்பனை செய்தது.  ஈரானிற்கு யூரேனியப் பதப்படுத்தலுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் சீனா விற்பனைச் செய்திருந்தது.

உனக்கு நான் எனக்கு நீ
கடற்போக்குவரத்தைப் பொறுத்தவரை உலகின் ஐந்து திருகுப் புள்ளிகளில் ஒன்றான ஹோமஸ் நீரிணை ஈரானை ஒட்டி உள்ளது. பாஹ்ரேயில் இருக்கும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு அந்தத் திருகுப் புள்ளியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஈரான் அதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சீனாவின் கடல்சார் பட்டுப் பாதைத் திட்டத்தில் ஹோமஸ் நீரிணை முக்கியத்துவம் பெறுகின்றது. பாக்கிஸ்த்தானில் இருக்கும் குவாடர் துறை முகம் சீனா வசமுள்ளது. அது தான் சீனாவின் முத்து மாலையில் அந்திப்புள்ளி. அதை மேலும் நீட்சி செய்ய ஈரானின் நட்பு சீனாவிற்கு அவசியம். குவாடர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சீனா 2015-ம் ஆண்டு 46பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியை ஒதுக்கியிருந்தது.  குவாடர் துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச் சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம், வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபாஹர் துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் - ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபாஹர் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்தது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில் இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஆனால் சபாஹர் துறைமுகம் ஈரானின் பெரிய மாகாணமான சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் இருக்கிறது.  ஈரானுடனும் துருக்கியுடனும் சீனா உகந்த உறவைப் பேணாமல் சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டம் உரிய வெற்றியைத் தரமாட்டாது.

நண்பனின் எதிரியும் நண்பனே
சவுதி அரேபிய அரச் குடும்பம் பொதுவுடமை வாதத்தை முழுமையாக எதிர்க்கும் ஒரு நாடு. சமூகவுடமையையும்(சோசலிஸம்) இஸ்லாமையும் இணைத்த பாத்திஸம் அரபுநாடுகளில் பரவுவதைக் கடுமையாக எதிர்த்த சவுதி அரேபிய அரச குடும்பம் 1990-ம் ஆண்டு சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சவுதி அரேபியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணும் போது அந்த இரண்டு நாடுகளினதும் போட்டி நாடுகளான ஈரானும் சீனாவும் இணைவது இயல்பானதே. ஆனால் சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதை சீனா பெரிதும் விரும்புகின்றது. அதிக அளவு எரிபொருள் இருப்பு உறுதியான ஆட்சி ஆகியவற்றைக் கொண்ட சவுதியில் இருந்து எரிபொருள் விநியோகம் உறுதியாகவும் சீராகவும் நடக்கும் என நம்பும் பல நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆனால் சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணத்தில் வாழும் இஸ்லாமியர்களால் சீனாவிற்குப் பிரச்சனை உண்டு. அவர்கள் சுனி இஸ்லாமியர்களாகும். அவர்களுக்கு உதவி செய்ய சவுதி அரேபியா தயங்காது என்பதும் சீனாவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும். சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணம் சீனாவின் தரைவழியான பட்டுப்பாதையும் பொருளாதார வளையமும் (The Silk Road Economic Belt) திட்டத்தின் ஆரம்பப் புள்ளியாகும். சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஈரானுக்கு மட்டுமால்ல சவுதி அரேபியாவிற்கும் பயணத்தை மேற் கொண்டார். ஈரானில் 17 உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்ட அவர் சவுதி அரேபியாவில் 2016 ஜனவரி  19-ம் திகதி 14 உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார். அதில் முக்கியமானது சவுதி அரேபியானின் அரம்கோ என்னும் அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிறுவனம் சீனாவில் மசகு எண்ணை பதப்படுத்தும் முதலீட்டைச் செய்வதாகும். இதன் பெறுமதி ஒன்று முதல் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.

தடைகள் தாண்டிய நட்பு
ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் இருந்த போதே சீனாவில் இருந்து பெருமளவு முதலீடுகள் ஈரானில் செய்யப்பட்டன. ஒரு சீனாத் தொழிலதிபர் மட்டும் பொருளாதாரத் தடையின் போது ஈரானில் 200மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டை ஈரானில் செய்திருந்தார். நாம் ஈரானில் இருந்து விலகி இருந்த போது சீனர்கள் அந்த இடைவெளியை நன்கு நிரப்பி விட்டார்கள். ஈரானுடனான வர்த்தகத்தைப் பொறுத்த வரை நாம் பின் தங்கி விட்டோம் என்றார் ஒரு மேற்கு ஐரோப்பிய அரசுறவியலாளர். பொருளாதாரத் தடையின்போது ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் ஈரானில் மிக அதிக அளவு முதலீடு செய்யும் நாடாகவும் சீனா மாறிவிட்டது. அமெரிக்காவின் தண்டனைகளில் இருந்து தப்ப இதற்கென தனியாக புது வங்கிகள் சீனாவால் உருவாக்கப் பட்டன. இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொடருந்துப் பாதை சீனாவால் ஈரானில் நிர்மாணிக்கப்பட்டது. ஈரானிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது அதை தனது அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்துச் செய்யாததால் ஈரான் சற்று அதிருப்தி அடைந்திருந்தது. அத்துடன் ஈரானுடன் நடந்த யூரேனியம் பதப்படுத்துவதை நிறுத்தக் கோரும் பேச்சு வார்த்தையில் சீனா அமெரிக்காவுடன் ஓத்துழைத்திருந்தது. ஆனாலும் பொருளாதாரத் தடையால் வந்த இடைவெளியை சீனா தந்திரோபாயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஈரானியத் தலைநகர் ரெஹ்ரானில் நிலத்தில் இருந்து உயர்த்தப் பட்ட பெருந்தெரு (elevated highway), நிலத்திற்குக் கீழான  தொடருந்துச் சேவை போன்றவற்றை சீனா நிர்ம்ணித்தது. போக்குவரத்திற்குத் தேவையான தொடருந்து வண்டிகளும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்டன.  சீனாவிடமிருந்து J-10 போfர் விமானங்களை வாங்க ஈரான் விரும்புகின்றது. இதற்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை அதிருப்திப் படுத்த விரும்பாததால் சீனா ஈரனிற்குப் J-10 போர் விமனங்களை விற்பனை செய்வ்தை ஒத்தி வைத்துள்ளது. சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் சீனாவின் J-10இலும் பார்க்கச் சிறப்பான போர்விமானங்களை வாங்கி வைத்துள்ளன.

ஈரானிற்குப் பயணம் செய்த சீன அதிபருடன் ஈரான் அடுத்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான  வர்த்தகத்தை 600பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதாக ஒத்துக் கொண்டுள்ளது.  சீனா ஈரானில் ஆறு இலட்சம் தொன் உருக்கை உற்பத்தி செய்தவதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரான் கைத்தொழில் மயமாக்கலில் ஒரு திருப்பு முனையில் உள்ள நாடாகும். திறன் மிக்க ஊழியர்கள் அங்குள்ளனர். சீனாவின் முதலீடு, தொழில் நுட்பம், உட்கட்டுமான அனுபவம் ஆகியவற்றை ஈரானில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.


Tuesday, 26 January 2016

கொலையுதிர் காலமான அரபு வசந்தம்

ஜனவரி-25-ம் திகதி எகிப்தில் அரபு வசந்தந்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி-25ம் திகதி அதிக சுதந்திரம் கோரும் பெரும் ஆர்ப்பாட்டங்களுடன் நினைவு கூரப்படும். இந்த ஆண்டு எதுவும் நடக்கவில்லை. நடக்காமல் விட்டதற்கான காரணம் போதிய சுதந்திரம் கிடைத்தமையால் அல்ல உள்ள சுதந்திரமும் பறிக்கப் பட்டுவிட்டது. மக்கள் கைது செய்யப் படலாம் என்ற அச்சத்தில் எகிப்திய அரபு வசந்தத்தம் உருவான தஹ்ரீர் சதுக்கப் பக்கம் போகவில்லை. ஜனவரி - 25இற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யக் கூடியவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டனர். அவர்கள் கூடக் கூடிய இடங்கள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டன.

அரபு வசந்தத்தின் பிறப்பிடமான துனிசியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. அங்கு எழு இலட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றார்கள். இது மக்கள் தொகையின் 15 விழுக்காடாகும். 62 விழுக்காடான பட்டதாரிகள் வேலையின்றியும், இளையோரில் 38 விழுக்காட்டினர் வேலையின்றியும் இருக்கின்றனர். இது ஒரு மக்கள் எழுச்சியின் பிறப்பிடமாக மீண்டும் உருவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவின் மொஹமட் பௌஜிஜி (Mohamed Bouazizi) மறக்கப்பட்டுவிட்டார். எகிப்த்தின் அஸ்மா மஹ்பூஸ் என்றால் யாருக்கும் தெரியாது. இஸ்லாமியர்களின் வேலை இறை நம்பிக்கை அற்ற அமெரிக்கர்களை ஒழித்துக் கட்டுவதே என அல் கெய்தா பரப்புரை செய்து கொண்டிருக்க. இஸ்லாமியப் "பயங்கரவாதத்திற்கு" எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்க. இஸ்லாமியர்களும் மனிதர்களே அவர்களும் இம்மண்ணில் வாழ வேண்டும் என எழுந்தவர்கள்  இவர்கள் இருவரும். அரபு மக்கள் தமது மக்கள் எழுச்சியை மல்லிகைப் புரட்சி என அழைத்தனர். மேற்கு நாட்டு ஊடகங்கள் அதை அரபு வசந்தம் என அழைத்தன. துனிசியா, எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்பட்டனர். 14 மாத எழுச்சியில் 4 ஆட்சியாளர்களின் மொத்த 117 ஆண்டுகால ஆட்சி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

துனிசியாவில் தந்தையற்ற தன் குடும்பத்தைக் காப்பாற்ற தெருவோரம் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த மொஹமட் பௌஜிஜியை எழு அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகக் கொடுத்த மறுத்தமைக்காக துனிசிய அரச காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தி தாக்கி அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் தற்கொலை செய்து கொள்ள துனிசியாவில் உருவான இளையோர் எழுச்சி மேற்காசியவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள பல நாடுகளிற்கும் பரவியது. அல்ஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, சூடான், சவுதி அரேபியா, பாஹ்ரேன், ஈராக் எனப் பல நாடுகளில் மக்கள் ஆடம்பர வாழ்கை வாழும் அக்கிரம ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தனர். மன்னராட்சி அல்லது படைத்துறையினரின் ஆட்சி மட்டுமே மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் நடக்கின்றன.


ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. எகிப்த்தில் உருவான மக்கள் எழுச்சி அமெரிக்காவின் பாதுகப்புத்துறையினரையும் உளவுத் துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமெரிக்கா தான் பாதுகாத்து  வந்த அடக்கு முறை ஆட்சியாளர்களில் ஒருவரான ஹஸ்னி முபாரக்கைக் கைவிடும் அளவிற்கு நிலை மோசமாக இருந்தது.

துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல்  18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள். அது பெரும் மக்கள் எழுச்சியாக மாறி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியை எகிப்த்தில் இருந்து அகற்றியது. ஆனால் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களோ புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களின் மதசார்பற்ற கொள்கைக்கு முரணான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர். அவர்களின் ஆட்சி ஹஸ்னி முபாராக்கின் ஆட்சியிலும் பார்க்க மோசமானதாக அமைந்தது. இதனால் இளைஞர்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்தபோது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு படையினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். மீண்டும் மக்கள் அடக்கு முறை ஆட்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் ஒரு மக்கள் எழுச்சி எகிப்தில் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை. எகிப்தின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகித்த உல்லாசப் பயணத்துறை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இளையோர் மத்தியிலான வேலைவாய்ப்பின்மையே அரபு வசந்தத்திற்கு வித்திட்டது. அது அரபு வசந்த எழுச்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்துள்ளது.  எகிப்தின் பாதீட்டுப் பற்றாக்குறை பத்து விழுக்காட்டிலும் அதிகம். அதன் கடன் பளு அதன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.

லிபியாவில் அரபு வசந்தம் ஒரு பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. கடாஃபியைப் பதவியில் இருந்து வெளியேற்றத் துடித்த மேற்கு நாடுகள் அவரது படையினருக்கு எதிராக போர் விமனத் தாக்குதல்கள் வழிகாட்டி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றிக் கொல்ல வழி வகுத்தன. தேர்தலுக்காக கடாஃபியிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் இரகசியங்கள் அவருடன் அழிக்கப்பட்டன. லிபியா இப்போது ஒரு தேறாத தோல்வியடைந்த நாடக இருக்கின்றது. இரண்டு அரசுகள் இப்போது அங்கு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. பல போர்ப்பிரபுக்கள் மத்தியில் லிபிய மக்கள் சிக்குண்டு கொண்டிருக்கின்றனர். ஆபிரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிபியாவில் உலகின் தலை சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கடாஃபியின் ஆட்சியால் செய்யப்பட்டன. அறுபது இலட்சம் மக்களும் நன்கு வாழக்கூடிய எண்ணெய் வளம் அங்கு இருக்கின்றது. ஆனால் 2015-ம் ஆண்டு டிசம்பரில் லிபியாவின் அரசியல்வாதி ஒருவர் அடுத்த சோமாலியாவாக லிபியா மாறப்போகின்றது என எச்சரித்தார்.

சிரியாவின் அரபு வசந்த எழுச்சி முதலில் சியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டியாக மாறியது. பின்னர் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டிக்களமானது. தற்போது உலக வல்லரசுகளின் போட்டிக் களமாகியுள்ளது. சிரிய நகரங்களின் அரைவாசி தரைமட்டமாகிவிட்டது. தற்போது பிரச்சனை பஷார் அல் அசாத்தின் அடக்குமுறை மிக்க ஆட்சியை அகற்றுவதல்ல இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது என்பதே! மற்ற எல்லா நாடுகளையும் விட மோசமான உயிரிழப்பு சிரியாவிலேயே ஏற்பட்டது. மூன்று இலட்சத்திற்கு மேலான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். 65இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

அரபு வசந்தத்தின் பின்னர் ஈராக் மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களின் ஆட்சி, குரிதிஷ் மக்களின் ஆட்சி, ஐ எஸ் அமைப்பினரின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் அங்கு நிலவுகின்றன. அதன் பொருளாதாரம் மோசமாகின்றது. ஈராக்கில் யதீஷியர்கள் இனக்கொலைக்கு உள்ளானார்கள்.

சவுதி அரேபியாவிலும் பாஹ்ரேனிலும் உருவான மக்கள் எழுச்சியையும் அதை சவுதி அரேபியப் படைகள் மூர்க்கத்தனமாக அடக்கியதைப் பற்றியும் மேற்கு நாட்டுப் பத்திரிகைகள் பெரிது படுத்தவில்லை. அமெரிக்காவின் படைத்தளமுள்ள பாஹ்ரேனில் ஈரானிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பெரும் போராட்டம் செய்தனர். நிலைமை மோசமானவுடன் சவுதி அரேபியா தனது படைகளை அங்கு அனுப்பி கிளர்ச்சிக்காரர்களை அடக்கியது. பஹ்ரேனில் அரபு வசந்தத்தின் பின்னர் மோசமான அடக்கு முறை நிலவுகின்றது.

அரபு நாடுகளில் ஓர் நல்ல ஆட்சி முறைமை இருந்ததில்லை. அவ்வப்போது வந்த ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர மற்ற எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் மிக்கதும் திறனற்றதுமான ஆட்சியையே செய்தனர். துனிசியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் அரபு வசந்தத்திற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க மோசமான ஆட்சி, மோசமான அடக்கு முறை, மோசமான மனித உரிமை மீறல்கள், மோசமான பொருளாதாரச் சூழல் ஆகியவை நிலவுகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலைமை அண்மையில் இல்லை. அரபு வசந்தம் துயரைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை.

Tuesday, 19 January 2016

ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கலின் விளைவுகள்

எண்பது மில்லியன் கல்வியறிவு மிக்க மக்களைக் கொண்ட நாடாகிய ஈரானின் சரித்திரப் பெருமை தனித்துவமானது. அதன் எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் அபரிமிதமானது. அதன் புவிசார் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.மேற்கு நாடுகள் ஈரானுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடை முடிவிற்கு வந்துள்ளது. ஈரான் “preparing for takeoff.” என ஈரானியர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் 18வது பெரிய பொருளாதாரம் உலக வர்த்தகத்தில் தடையின்றி ஈடுபடக் கூடிய நிலையை எட்டியுள்ளமை உலகப் பொருளாதாரத்திற்கு உகந்த ஒன்றே. ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஈரான் மீதான பொருளாதாரத்  தடை நிக்கப்பட்ட 2016 ஜனவரி 16-ம் திகதி ஈரானிய வரலாற்று ஏட்டின் பொன்னான பக்கம் என்றார்.

இறக்கை நறுக்கப்பட்ட ஈரான்
யூரேனியப் பதப்படுத்தும் குழாய்களான centrifuges ஈரானிடம் 19,000 இருந்தன. அது இப்போது 6104ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.  ஈரானிடம் நவீன centrifuges ஆயிரம் இருந்தன அவை இப்போது இல்லாமற் செய்யப் பட்டுள்ளன.  தாழ்-நிலையில் பதப்படுத்தப் பட்ட யூரேனியம் ஈரானிடம் 19,000இறாத்தல்கள் இருந்தன. அவை இப்போது 660 இறாத்தல்கள் ஆகக் குறைக்கப் பட்டுள்ளன. ஈரான் புளூட்டோனியத்தைப் பாவித்து அணுக்குண்டு தயாரிக்க முடியாதபடி செய்யப்பட்டுள்ளது. ஈரான் பதப்படுத்திய 8.5 தொன் யூரேனியம் இரசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஈரான் முழுமையான ஊடுருவல் கண்காணிப்புக்கு  (the most comprehensive, intrusive inspectio) உட்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

அமெரிக்க ஈரானிய உறவில் மாற்றம்
1979-ம் ஆண்டு ஈரானில் அமெரிக்க சார்பு மன்னர் ஷாவிற்கு எதிராக நடாந்த மதவாதப் புரட்சிக்குப் பின்னர் அமெரிக்க ஈரானிய உறவு ஒரளவிற்கு சீரடைந்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக ஈரான் கைது செய்த இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் எதிர்பார்த்ததிலும் பார்க்க துரிதமாகவும் (24 மணித்தியாலத்தினுள்) சுமூகமாகவும் விடுவிக்கப் பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் அமெரிக்காவில் படித்த ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹமட் ஜவார் ஜரிஃப்பும் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருடன் ஒருவர் தொலைபேசியீல் உரையாடுகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் 1981-ம் ஆண்டில் இருந்து வந்த நிதிப் பிணக்குத் தீர்க்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி(Hassan Rouhani)
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி 2013-ம் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை நீக்குவேன் என்ற உறுதி மொழியுடன் தேர்தலில் போட்டியிட்டு எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர் - தற்போது இருப்பவர் அலி கொமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப் பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும்.   இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். தற்போது உள்ள உச்சத் தலைவர் அலி கொமெய்னி  வல்லரசு நாடுகாளுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு உரிய அதிகாரம் வழங்கியிருந்தார்.

தேர்தலை ஒட்டிய நகர்வுகள்
ஈரானியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16-ம் திகதி நடக்கவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் அதிபர் ஹசன் ரௌஹானியைப் போலவும் அவரது கரங்களை வலுப்படுத்தும் விதத்திலும் தாராண்மைவாத உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஏதுவாக ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. ஈரானும் தனது யூரேனியப் பதப்படுத்துதலை 2015 ஜூலை மாதம் ஈரானும் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் இணைந்த P-5+1 என்னும் குழுவுடன் செய்து கொண்ட உடன்பட்டிக்கையின் படி ஈரான் மாற்றியமைத்துள்ளது. உடனடியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டது. 2015 ஜூலை மாதம் உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது 2016 ஜூலை மாதம் உடன்படிக்கை நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவசரமாக உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்டுள்ளது.ஆனால் பொருளாதாரத் தடை நீக்கப் பட்டதால் ஏற்படும் நன்மைகள் பொது மக்களைப் போய்ச் சேர பல மாதங்கள் எடுக்கும்.

ஈரான் பணத்தை என்ன செய்யும்?
ஈரானிற்குச் சொந்தமான ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப் பட்டிருந்தது. அவை இப்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை ஈரான் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கும், சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்க மேலும் உதவிகளைச் செய்யும் என சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் சொல்கின்றன. இதே கருத்தை இஸ்ரேலும் கொண்டுள்ளது.  ஈரானில் உள்ள தீவிரவாதிகளின் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி இவர்களுடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றார். அவரது கைகளை வலுப்படுத்த சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபனைகளுக்கு இடையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப் பட்டுள்ளது.

முதலீடு தேடும் ஈரான்
ஈரானுக்கு தற்போது ஒரு ரில்லியன் வெளிநாட்டு முதலீடு தேவைப் படுகின்றது. அதற்கு ஓர் உறுதியான ஆட்சியும் அமைதியான சூழலும் அவசியம். ஈரானில் உள்ள தீவிரவாதப் போக்குடையவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டு முதலீடு சாத்தியமல்ல.   அமெரிக்க நிறுவனங்கள் ஈரானில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டூகின்றன. ஈரான் உடனடியாக மேற்கு ஐரோப்பாவிலிருந்து114 Airbus jets வாங்கவிருக்கின்றது. பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட மறுநாளே ஐரோப்பிய அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஈரானுக்குப் படையெடுத்தனர். இரசியா தனது படைக்கலன்களை பெருமளவில் ஈரானுக்கு விற்பனை செய்யலாம். துருக்கிக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்த இரசியா அங்கு இருந்து இறக்குமதி செய்யாமல் போன பொருட்கள் பலவற்றை ஈரானில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால் இரசியாவிற்குப் பேரிடியாக அமையப் போவது ஈரான் எரிபொருள் ஏற்றுமதி செய்யப் போவதால் ஏற்படப் போகும் எரிபொருள் விலை வீழ்ச்சியே. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஈரானுக்கு எதிரான அல்லது இஸ்ரேல் சொற்படி ஆடும் அல்லது இரண்டும் இணைந்த ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஈரானில் நிலைமைகள் தலைகீழாகலாம் எனச் சில முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

எரியும் எரிபொருள் விலை வீழ்ச்சிக்கு ஈரானும் எண்ணெய் ஊற்றும்
ஈரான் தான் ஏற்கனவே உற்பத்தி செய்த 50 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை கடலில் கப்பல்களில் வைப்பிலிட்டுள்ளது. ஈரான் இனி நாள் ஒன்றிற்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய விருக்கின்றது. மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 20 டொலர்களாகக் குறைவது நிச்சயம் என்றும் பத்து டொலர்களாக வீழ்ச்சியடைவது சாத்தியம் என்றும் சொல்லப் படுகின்றது. இது  இரசியா, வெனிசுவேலா போன்ற நாடுகளை மோசமாகப் பாதிக்கப்படவிருக்கின்றன. எல்லா எரிபொருள் உற்பத்தி நாடுகளும் பாதிக்கப்படும். சீனாவிலும் இந்தியாவிலும் எரிபொருளுக்கு விதிக்கப் படும் வரிகள் அதிகரிக்கப் படும். இது அந்த நாடுகளில் பாதீட்டுப் பற்றாக் குறையை சீர் செய்ய உதவும்.

ஈரானின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதன் மீது அமெரிக்கா செய்த பொருளாதாரத்தடைகள் தொடர்ந்தும் இருக்கும். அதே வேளை ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா சில புதிய தடைகளையும் விதித்துள்ளது. ஈரானின் எதிர்கால நகர்வுத் திசையில் பெப்ரவரி மாதம் நடக்கும் தேர்தல் தீர்மானிக்கும்.

Monday, 18 January 2016

பங்குச் சந்தையில் சீனாவின் சண்டித்தனம்

முதலாளித்துவப் பொருளாதாரம் போல் சரிவு (recession) மீட்சி (recovery) என்ற சுழற்ச்சிக்குள் அகப்படாமல் சீனா ஆட்சியாளர்கள் கால் நூற்றாண்டுகளாக சீனாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி தொடர் வளர்ச்சிப் பாதையில் இன்றுவரை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 2016இலும் சீனப் பொருளாதாரம் ஐந்துக்கு மேற்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிப்பைப் பெறும்.

சீனாவின் இரு பங்குச் சந்தைகள்

2016-ம் ஆண்டின் முதல் வாரத்தில் சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகை உலுப்பியது. சீனாவின் பொருளாதாரத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியிலும் சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போதும் எதிர்மறையான கருத்துக்கள் பல சீன பொருளாதாரத்திற்கு எதிராக முன்வைக்கப் பட்டன. சீனா இரு பொருளாதாரக் கட்டமைப்புக்களைக் கொண்டது. ஒன்று பிரதான சீனாவிலும் மாற்றது ஹொங்கொங்க் தீவிலும் இருக்கின்றன. அதே போல் ஏ-பங்குகள் என்றும் பி-பங்குகள் என இருவகையான பங்குகள் இருக்கின்றன. ஏ-பங்குகள் உள்நாட்டு நாணயத்திலும் பி-பங்குகள் அமெரிக்க டொலரிலும் விற்று வாங்கப்படும். ஹொங்கொங்இலும் பிரதான சீனாவில் உள்ள ஷென்ஜென் நகரிலும் இரு பங்குச் சந்தைகள் உள்ளன. சீன நாணயத்திற்கும் இரு முகங்கள் உள்ளன. ஒரு முகம் ஹொங்கொங்கிலும் மறுமுகம் பிரதான சீனாவிலும் இருக்கின்றன. இரு இடங்களிலும் சீன நாணயத்தின் பெறுமதி வேறுபட்டதாக இருக்கும்

சீனா சந்தைக்குச் சென்ற நீண்ட பாதை

சீனாவின் அரச முதலாளித்துவப் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற எடுக்கும் முயற்ச்சி பல சவால்களைச் சந்திக்கின்றது. 1978-ம் ஆண்டு சீனப் பொருளாதாரத்தை திட்டமிடுதலையும் கட்டுப்படுத்தலையும் சீன ஆட்சியாளர்கள் தளர்த்தத் தொடங்கினர். சீனப் பொருளாதாரத்தின் செயற்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இம் முயற்ச்சி தொடங்கப் பட்டது. ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து சீனா கற்றுக்கொள்ள அப்போது விரும்பியது.1979இல் வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு 1980இல் சீனா பன்னாட்டு நாணய நிதியத்திலும் உலக வங்கியிலும் இணைந்து கொண்டது. அத்துடன் சீனாவில் பல சிறப்புப் பொருளாதார வலயங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதியாக உருவாக்கப் பட்டன. 1981இல் சீன விவசாயிகள் இலாபமீட்ட அனுமதிக்கப் பட்டனர். 1982இல் சீனப் பொருளாதாரத்தைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றும் ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1984இல் சீனக் கரையோர நகரங்கள் பதின்நான்கு சிவப்பு நாடா இல்லாமலும் வரிவிலக்கு உரித்துடையவையாகவும் ஆக்கப்பட்டு வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டன. 1986 சந்தைப் பொருளாதாரத்திற்கு உரிய சட்டங்கள் இயற்றப்பட்டன. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 13வது மாநாட்டில் அரச துறைக்கு மாற்றீடாகத் தனியார் துறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன நாணயத்தின் அதிகரித்த பெறுமதியை உணர்ந்து கரையோர அபிவிருத்தி உபாயங்கள் வகுக்கப் பட்டன. 1988இல் தனியுடமை, பங்குடமை, வரையறுக்கப்பட்ட பொறுப்புடை பங்காண்மை ஆகியவற்றை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1990இல் ஷங்காய், ஷென்ஜென் ஆகிய நகரங்களின் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டன. 1992இல் சமுகவுடமைச் சந்தைப் பொருளாதாரம் என்பது சீனப் பொருளாதாரத்தின் சீர்திருத்த இலக்காக பதின்நான்காவது பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து வங்கிச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 1997இல் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சீனாவைச் சிறிதளவே பாதித்தது. 1994இல் சீன நாணயம் முகாமைப்படுத்தப்பட்டு நாணயச் சந்தையில் மிதக்க விடப்பட்டது (a market-based, but managed floating exchange rate system). அத்துடன் முழுச் சீனாவிலும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டது. 1997இல் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவை அதிகரிப்பதின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1999இல் ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு சீன மக்கள் பி-பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சீனாவில் விலைக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது. விவசாய ஏற்றுமதிக்கான உதவிகள் நீக்கப்பட்டன. 2003-இல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவின் ஏ-பங்குகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

சீனாவும் உலக வர்த்தகமும்

1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.

உடைக்கப்பட்ட மடை
கடந்த ஆறுமாதமாக சீனாவில் இருந்து வெளியேறும் மொத்த மூலதனத்தின் விகிதம் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. சீன நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புடம் சீனாவில் இருந்து ஒரு புறம் நிதி சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்க மறுபுறம் சீனப் பங்குகள் விலை வீழ்ச்சியடையப் போகின்றது என்ற அச்சத்தில் நிதி சீனாவில் இருந்து வெளியேறுகின்றது. இது சீன நாணயத்தின் பெறுமதியை பெரிதும் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க 595பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும். சீனப் பொருளாதாரம் வலுவிழந்ததால் அதன் இறக்குமதி பெரு வீழ்ச்சியை அடைந்துள்ளது. சீனாவில் இருந்து முதலீடு மடைதிறந்த வெள்ளம் போல் வெளியேறுகின்றது. சீன மக்கள் சீனாவின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை இழக்கின்றனர். சீனப் பொருளாதாரம் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது அல்லது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. பெரிய ஆபத்தா அல்லது சாதாரண சிக்கலா எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. காரணம் சீனாவின் புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தவை அல்ல. சீனாவின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்றோ அல்லது சீனப் பங்குகள் விலை வீழ்ச்சி அடையப் போகின்றன என்றோ முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் சீனாவில் உள்ள முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறுவார்கள். இது சீனாவின் நாணயத்தின் பெறுமதியையும் பங்குகளின் விலைகளையும் மேலும் வீழ்ச்சியடையச் செய்யும்.

கலங்கிய சீனப் பங்குச் சந்தை

சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி தொடர்ந்து குறைந்து கொண்டு போனதால் சீனப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கின. 2016 ஜனவரி 7-ம் திகதி ஷாங்காய் பங்குச் சுட்டி 11.7 விழுக்காட்டும், ஷென்ஜென் பங்குச் சுட்டி15.2 விழுக்காடும் வீழ்ச்சியடைந்து 1.1ரில்லியன் டொலர்கள் பெறுமதியான் சொத்து இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் இரண்டு சுட்டிகளும் முறையே 2விழுக்காடும் 1.1 விழுக்காடும் அதிகரித்தன. இந்த அதிகரிப்புக் காரணம் சீன அரசின் தலையீடே. ஜனவரி 13-ம் திகதி சீனாவின் வர்த்தகம் தொடர்பான் சாதகமான புள்ளிவிபரங்கள் வெளிவந்த போதும் அது பங்குச் சந்தையில் சாதகமான நிலையை உருவாக்கவில்லை.

சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம்
சீனா சந்தையை அரச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்க விடவேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக முனவைக்கப் படுகின்றது. சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் என ஒன்று இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! அமெரிக்கா உட்பட எல்லா சந்தைப் பொருளாதார நாடுகளும் சந்தையில் தலையிடுவதுண்டு ஆனால் சீனா சந்தையில் சண்டித்தனம் விடுகின்றது. தான் நினைத்தபடி சந்தையில் எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கின்றது.  பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது வட்டி விழுக்காட்டை குறைப்பதும் வங்கிகள் நடுவண் வங்கிகளில் வைத்திருக்க வேண்டிய வைப்பீட்டைக் குறைப்பதும்தான் பொதுவான நடவடிக்கைகள். ஆனால் சீனா பல தடவை வட்டி விழுக்காட்டைக் குறைத்ததும் வைப்பீட்டுக் கோரிக்கையைக் குறைத்ததும் பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. இதனால் சீனா சண்டித்தன நடவடிக்கைகளில் இறங்கியது.

சீனாவின் சண்டித்தனங்கள்

1. சீனாவின் சண்டித்தனம்-பெரு நிறுவனங்களுக்குத் தடை

சீனாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க சீனப் பெரு நிறுவன்ங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் சீன அரசு தடை விதித்தது.

2. சீனாவின் சண்டித்தனம்-புதிய பங்கு விற்பனைத் தடை

சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை

3. சீனாவின் சண்டித்தனம் -  சுற்று முறிப்பு

சீனாவின் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க சீனா ஒரு சுற்று முறிப்பை (Circuit Breaker)அறிமுகப் படுத்தியது. அதன் படி சீனப் பங்குகளின் விலைகள் 5 விழுக்காடு விழுந்தால் பங்குகளை விற்கவோ வாங்கவோ முடியாதபடி பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படும்.இந்த சுற்று முறிப்பை 2016 ஜனவரி 4-ம் திகதி சீனா அறிமுகம் செய்தது. ஆனால் நான்கு விழுக்காடு விலை வீழ்ச்சி வந்தவுடன் சந்தை மூடப் படப்போகின்றது என உணர்ந்த முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் பங்குகளின் விலைகள் மேலும் துரிதமாகச் சரியத் தொடங்கியது. இதனால் சுற்று திரும்பப் பெறப்பட்டது.

4. சீனாவின் சண்டித்தனம்- குறுகியகால விற்பனைத் தடை
குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை.

சீனா ஆட்டம் காணலாம் கவிழாது
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் அவற்றின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் நூறு விழுக்காட்டிற்கும் அதிகமாக நடக்கும். ஆனால் சீனாவில் நடக்கும் பங்கு வர்த்தகம் சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் மூன்றில் முப்பது விழுக்காடு மட்டுமே. இதனால் சீனப் பங்குச் சந்தைச் சுட்டெண் சீனப் பொருளாதார வளர்ச்சியின் சுட்டியாகக் கருத முடியாது. சீனா பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றது. அது சோவியத் ஒன்றியம் போல் கவிழப்போவதில்லை.  ஜப்பானைப் போல் ஒரு தொடர் பொருளாதார மந்த நிலையையும் அடையப் போவதில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே போகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...