Friday, 24 December 2021

தமிழர்களுக்கு தேவை ஒரு ஜே ஆர் ஜயவர்த்தன

  


2009இல் பின்னடைவைச் சந்தித்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது ஒரு சிக்கலான புவிசார் அரசியல் போட்டியில் மாட்டுப்பட்டுள்ளது. அதைக் கவனமாக வெளியே எடுத்து வெற்றியடையச் செய்யக் கூடிய அரசில் அறிவு, அரசியல் அனுபவம், அரசியல் வஞ்சனை, சம்பந்தப்பட்டவர்களை அணைத்து கெடுக்கும் நரித்தனம், எதிரியை ஏமாற்றும் மதிநுட்பம் எதுவும் தற்போது உள்ள எந்த ஓரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் இல்லவே இல்லை.

மாறும் உலக ஒழுங்கில் தமிழ் ஈழம்

மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகியவற்றிடையேயான ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தொடர்பான இந்த நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் நிலைப்பாட்டை தாண்டி செல்ல முடியாத ஒரு நிலை உருவாகி வருகின்றது. தம்மை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் தமிழ் நாடாளுமன்ற அரசியல்வாதிகளும் அரசியல் ஆய்வாளர்கள் என தம்மை நினைத்துக் கொள்பவர்களும் ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்துதான் நாம் தப்பிப் பிழைக்க முடியும் என்கின்றனர். 2019-ம் ஆண்டு டிரம்பின் ஆட்சியில் சிங்களவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இந்தியா மூலமாகத்தான் அமெரிக்காவை அணுக வேண்டும் என அமெரிக்கா விடுத்த நிர்ப்பந்தத்தை சிங்களவர்கள் தமது இறைமைக்கு அது பேரிடர் எனச் சொல்லி கடுமையாக எதிர்த்தபடியால் அமெரிக்கா அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டது. மேற்கு நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் தமிழர்கள் அந்த மாதிரியான எதிர்ப்பை காட்டவில்லை. காட்டும் துணிவு அவர்களிடம் இல்லை. 13இற்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற வஞ்சனையுடன் அதை ஜெனீவா மனித உரிமைக்கழகம் வரை இந்தியா கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்றும் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கும் என்றும் உலக அரங்கில் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் துணிவு யாருக்கும் இல்லை. இதை ஈழத் தமித்தரப்பினர் சரியாகச் செய்யாத வரை இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்லும்படி ஈழத்தமிழர் தரப்பினர் மேற்கு நாடுகளுக்கும் ஜப்பான், ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் உறுதியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் அடி வாங்கிய பின் அழுது கொண்டு போய் ஆசிரியரிடம் முறைப்பாடு செய்யும் அப்பாவி மாணவர்களின் நிலையிலேயே இருக்கின்றனர்.

இலங்கையில் அமெரிக்கா செய்த மூன்று நகர்வுகள்

1980களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியில் சிக்குப்பட்டது. பிலிப்பைன்ஸ்ஸில் அப்போது ஏற்பட்ட உறுதிப்பாடற்ற நிலை அங்கு பெரும் படைத்தளத்தை வைத்திருந்த அமெரிக்காவிற்கு சவாலாக அமைந்த படியால் அதற்கு மாற்றீடாக அது இலங்கையைத் தேர்ந்தெடுத்தது. இந்திரா காந்தியின் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடும் இந்தியாவின் படைத்துறை வளர்ச்சியும் 1971இல் வங்காளதேச விடுதலையில் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்தமையும் இந்தியாவை கையாள்வதற்கு இலங்கை அமெரிக்காவிற்கு தேவை என்ற நிலையை ஏற்படுத்தியது. அப்போதைய தொழில்நுட்ப நிலையில் அமெரிக்க கடற்படைக் கலன்களுக்கு தேவை ஏற்படும் போது எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய ஒரு துறைமுகம் அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதற்கு அது திருக்கோணாமலை துறை முகத்தை தெரிவு செய்தது. அமெரிக்கர்களுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திடம் திருகோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையம் ஒன்றை அங்குள்ள பிரித்தானியா உருவாக்கி பாவிக்கப்படாமல் இருந்த எண்ணெய் குதங்களை பாவித்து கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. பிரித்தானியா தனது குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தெற்காசியாவில் முதல் முதலாக இலங்கையிலேயே தனது வானொலி ஒலிபரப்பு நிலையத்தை ஆரம்ப்த்தது. இலங்கையின் பூகோள அமைப்பு வானலைத் தொடர்பாடலுக்கு உகந்ததாக இருக்கின்றது. அதனால் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கிடையிலேயான அதி-தாழ் அலைவரிசை (ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தை அமெரிக்காவ்ன் குரல் (Voice of America) அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் சிலாபத்தில் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டது. இந்தியாவைப் போல் அதிக இறக்குமதிக் கட்டுப்பாடு உள்ள இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாக மாற்றி அதைச் சிங்கப்பூரைப் போல் பொருளாதார வளர்ச்சியடையச் செய்து இந்தியர்களை அவர்களின் அரசின் பொருளாதரக் கொள்கையில் வெறுப்படையச் செய்வதும் அமெரிக்காவின் மூன்றாவது உபாயமாக இருந்தது.

இலங்கையை விழிப்புடன் கண்காணித்த இந்திரா

இலங்கையில் அமெரிக்கா மிக இரகசியமாகச் செய்யும் நகர்வுகளை இலகுவாக அறியும் திறன் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவிற்குச் அப்போது இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனை 1971-ம் ஆண்டு போரை ஆரம்பித்த போது அதை முன் கூட்டியே அறியாத சிறிமா திரையரங்கைல் ஆங்கிலப் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அது தொடங்க முன்னரே பழுதடைந்த படியால் அவசர தரையிறக்க அனுமதி வேண்டி கூர்க்கா படையினர் நிறைந்த இரு துருப்புக் காவி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் இந்திரா காந்தி தங்க வைத்திருந்தார். திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சிறிமா படம் பார்ப்பதையும் இடையில் நிறுத்தி விட்டு இந்திரா காந்திக்கு தொலை பேசி அழைப்பு விடுத்து அவசர உதவி கோரினார்.  அதற்கு பதிலளித்த இந்திரா எங்கள் படையினர் ஏற்கனவே கொழும்பில் நிற்கின்றார்கள் என்றார். பின்பு முப்பதிற்கும் மேற்பட்ட உலங்கு வானூர்திகள் இலங்கை வந்து காட்டுக்குள் இருந்த கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது குண்டு வீசி அழித்தன. இலங்கையில் அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளை உரிய நேரத்தில் அறிந்திருந்தார்.

தேடாமலே கிடைத்த பொல்லு

தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றம், அம்பாறை அபகரிப்பு, 1974 இலங்கை அரசு செய்த தமிழாராய்ச்சிப் படுகொலை, 1981இல் யாழ் நூல் நிலைய எரிப்பு போன்றவை இலங்கை தமிழர்களை பிரிவினைப் போராட்டத்தை தூண்டியிருந்தது. அமெரிக்கா பக்கம் சாயும் இலங்கையை மிரட்டுவதற்கான காரணிகளை இந்திரா காந்தி தேடி அலைய வேண்டிய நிலை இருக்க வில்லை. பங்களாதேசத்திற்கு உதவி செய்தது போல் ஈழத் தமிழர்களுக்கும் இந்திரா காந்தி உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருந்தனர். தமிழர்களுக்காக போராடியவர்களில் சிலருக்கு தமிழ் ஈழத்தையோ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையோ இந்திரா ஆதரிக்க மாட்டர் என்று தெரிந்தும் அவருடன் இணைந்து சிங்களத்திற்கு எதிராக செயற்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் அரசு கட்டவிழ்த்து விட்டது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களம் அட்டூழியம் செய்தது. அதை இந்திரா காந்தி இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் சபையும் (Indian Bar Council) அதை இனக்கொலை என்றது. இலங்கையில் இருந்து பலர் இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்தனர். அவற்றை எல்லாம் வைத்து இலங்கைக்கு எதிராக உலக அரங்கில் இந்திரா காந்தி பெரிய பரப்புரைகளைச் செய்தார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது இலங்கைப் பிரச்சனையை முன்வைக்க தவறுவதில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள் என்பதையும் தெரிவிக்க தவறுவதில்லை. தனது நாட்டின் உறுதிப் பாட்டிற்கு பங்கம் எனவும் எடுத்துரைப்பார். இலங்கையில் வான் மார்க்கமாக தரையிறக்குவதற்கு என முப்பதினாயிரம் படையினரையும் இந்திரா காந்தி தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்திராவின் பலவிதமான நகர்வுகளுக்கு மத்தியிலும் ஜே ஆர் ஜெயவர்த்தனே தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களை கூட்டிக் கொண்டே போனார். தனது தயவில் அமைச்சராக இருந்த சௌ. தொண்டமானை புது டில்லிக்கு ஜே ஆர் அனுப்பி இந்தியப் படைகள் வருவது மலையத் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது எனச் சொல்ல வைத்தார். இந்த நிலையில் இந்திரா காந்தி கொல்லப்பட ராஜீவ் காந்தி இந்திய தலைமை அமைச்சரானார். இருவருக்குமிடையில் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. ஆசியாவின் கிழக் குள்ள நரி என விபரிக்கப்பட்ட ஜே ஆர் ஜயவர்த்தனே ராஜீவ் காந்தியையும் அவரது அரசுறவியலாளர்களையும் கையாளும் தந்திரத்தை சிறப்பாக மேற் கொள்ளத் தொடங்கினார். அவரது முதலாவது வெற்றி அவரது வேண்டுகோளின் பேரில் ராஜீவ் காந்தி இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜீ பார்த்தசாரதியை பதவி நீக்கம் செய்ததே. வங்களாதேச விடுதலைப் போரில் ஹென்றி கிஸ்ஸிங்கரை திணறடித்த அரசுறவியலாளர் ஜீ பார்த்தசாரதி. அதன் பிறகு வந்த வெளியுறவுத் துறைச் செயலர் ரொமேஸ் பண்டாரியின் மகளின் திருமணத்திற்கு தாராளமான பங்களிப்பு செய்து அவரைத் தனது கைக்கூலியாக்கினார் ஜே ஆர். அப்போது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசுறவியலாளர்கள் JR cornered Rajiv – ஜே ஆர் ராஜீவை முடக்கிவிட்டார் என்ற வாசகம் பரவலாக அடிபட்டது. இலங்கையில் ஒரு தனிநாடு அமைக்கும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என்பதை புரிந்து கொண்டு தனது காய்களை ஜே ஆர் நகர்த்தினார். யாழ் குடா நாட்டை மட்டும் பிரித்துக் கொடுக்க தான் தயார் என ஒரு போலியான முன்மொழிவை தமிழ்ப்போராளிகள் முன் வைத்தார். அதை ராஜீவும் இந்திய அரச வளாகத்தின் தென் மண்டலத்தில் உள்ளவர்களும் விரும்ப மாட்டார்கள் என்பதை அறிந்தே அப்படி ஒரு நகர்வைச் செய்தார். இந்தியாவிற்கு ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தால் அது தமிழ்ப்போராளிகளை அழிக்கும் என்பதை உணர்ந்த ஜே ஆர் ராஜீவுடன் ஓர் ஒப்பந்தத்தையும் செய்து இலங்கை அரசியல் யாப்பிற்கு 13வது திருத்தத்தைச் செய்தார். அதனால் இந்திய படையினர் ஜே ஆரின் கூலி வாங்காத கூலிப் படையாக வந்து தமிழ்ப் போராளிகளின் படைக்கலன்களை பறித்தது கொடுக்க மறுத்தவர்களிற்கு எதிராகவும் அப்பாவிகளுக்கு இலங்கையில் சிங்களவர்கள் கூடச் செய்யாத வன்முறைகளைச் செய்தது. IPKF என்பது Indian Peace Keeping Force அல்ல Innocent People Killing Force என சிங்கள ஊடகங்கள் கிண்டலடித்தன. பின்னர் 13-ம் திருத்தத்தை நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடிப்பதிலும் ஜே ஆர் வெற்றி கண்டார்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பன்னாட்டு மட்டத்தில் செயற்படும் அனுபவமோ அறிவோ துளியளவும் கிடையாது. சிங்கள அரசியவாதிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய் வருவார்கள். வெளிநாடு அரசியல்வாதிகளையும் சந்திப்பார்கள். அவர்களது அதிகாரிகள் வெளியுறவுத் துறையில் வெளிநாடுகளில் பயிற்ச்சி பெற்றதுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். ஓரு இறைமையை வேண்டி நிற்கின்ற இனத்தின் அரசுறவியலாளர்களாக செயற்படக்கூடிய எவரும் தமிழர்களிடையே இல்லை. தமிழர்களின் அந்த வலிமையற்ற நிலையை அறியாமல் சிலர் தமிழர்களுக்கு என ஒரு வெளிநாட்டு கொள்கை தேவை ஒரு சிந்தனைக் கலம் (Think Tank) தேவை என்கின்றனர்.

தமிழர்களுக்கு தேவை ஜே ஆர் ஜயவர்த்தன போன்ற வஞ்சகம், கபடம், துணிவு, அர்ப்பணிப்பு மிக்க ஒரு தலைவர்.

Tuesday, 21 December 2021

இலங்கையில் அமெரிக்கத்தலையீட்டின் வரலாறும் ராஜபக்சேக்களின் முடிவும்

  


இலங்கையில் அமெரிக்கத் தலையீடு பிரித்தானியக் குடியேற்ற ஆட்சி நடக்கும் போது 1813-ம் ஆண்டு சென்ற அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் கப்பலுடன் ஆரம்பமானது. அப்போது இலங்கை தலைநகராக இருந்த காலியில் அது தரையிறங்க பிரித்தானிய அரசு அனுமதிக்காமல் தமிழர் பிரதேசத்திற்கு போகும்படி பணித்தது. இலங்கையின் தென்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பிரித்தானிய ஆங்கிலத் திருச்சபையுடன் பிணக்கு ஏற்படாமல் இருக்கவே இப்படிச் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையினர் தெல்லிப்பளையின் தமது முதலாவது பாடசாலையை ஆரம்பித்தனர். தொடர்ந்து பல பாடசாலைகளை அமைத்து மத மாற்றங்களுடன் ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு கல்வி புகட்டினர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் பாடசாலை, உடுவில் ஆடவர் பாடசாலை ஆகியவை அப்போது அவர்கள் உருவாக்கிய பிரபல பாடசாலைகளாகும். உடுவில் மகளிர் பாடசாலை தெற்காசியாவில் உருவாக்கிய வதிவிட வசதிகளுடன் உருவான முதல் பாடசாலையாகும். மானிப்பாயில் அமெரிக்கர்கள் உருவாக்கிய போதனா வைத்தியசாலையும் தெற்கு ஆசியாவில் உருவான முதல் போதனா வைத்தியசாலையாகும்.

அமெரிக்காவின் ஜே ஆரும் திருச்செல்வமும்

அமெரிக்கர்களின் அரசியல் தலையீடு S. W. R. D பண்டாரநாயக்க 1956-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது தீவிரமடைந்தது. பெரிய நிலக்கிழாரான பண்டாரநாயக்க இலங்கையின் ஆட்சியைப் பிடிக்க ஒரு குறுக்கு வழியை பின்பற்றினார். ஒரு பக்கம் தீவிர சிங்கள-பௌத்த பேரினவாதியாகவும் மறுபுறம் ஒரு சமூகவுடமைவாதியாகவும் தன்னை முன்னிறுத்தி சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற உறுதி மொழியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் பல தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். இது அமெரிக்காவை மிகவும் விசனத்திற்கு உள்ளாக்கியது. அவரது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ களமிறங்கியதாக நம்பப்படுகின்றது. அதன் இலங்கை முகவர்களாக ஜே ஆர் ஜெயவர்த்தனேயும் எம் திருச்செல்வமும் செயற்பட்டதாக ஐயம் பரவலாக உண்டு. எம் திருச்செல்வம் எஸ் ஜே வி செல்வநாயகத்தை பண்டாரநாயக்காவின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டினார். அப்போது இலங்கை அரசின் சட்டமா அதிபராக இருந்த எம் திருச்செல்வத்தின் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட பண்டாரநாயக்க அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பினார். செல்வநாயகத்தின் கிளர்ச்சியை வைத்து இலங்கையில் ஓர் இனக்கலவரம் ஐக்கிய தேசியக் கட்சியால் திரைமறைவில் தூண்டப்பட்டது. நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் இலங்கையில் இணைப்பாட்சி (சமஷ்டி) ஆட்சி முறைமையை ஏற்படுத்தி சிங்களத்துடன் தமிழுக்கும் ஆட்சி மொழியில் ஈடான நிலை ஏற்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். உடனே ஜே ஆர் ஜயவர்த்தனே தனது இனவாதத்தை கக்க தொடங்கினார். இலங்கையை இரண்டாக பிளப்பதாக சித்தரிக்கும் பதாகைகளுடன் கொழும்பில் இருந்து கண்டிக்கு ஒரு நடைப்பயணத்தை மேற்கொண்டார். பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றார். இவற்றின் பின்னணியில் சிஐஏ செயற்பட்டதாக நம்பப்படுகின்றது.

மீண்டும் திருச்செல்வத்தின் பின்னால் அமெரிக்காவா?

1965-ம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போதிய அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாதபடியால் மீண்டும் எம் திருச்செல்வம் களத்தில் இறங்கி எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியை டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கினார். அந்த ஆட்சியில் தமிழ்மொழி சிறப்பு விதிகள் சட்டம் இடதுசாரிகளினதும் பௌத்த பிக்குகளினதும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டது. அக்காலகட்டத்தில் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அதனால் 1970இல் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் தனியார் சொத்துக்களை அரசுடமையாக்கியதுடன் சீனாவுடன் நெருங்கிய நட்பை பேணியது.

அமெரிக்கா (பின்னால்) போன பீலிக்ஸ்

1970இல் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியில் அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருந்தது. முக்கியமாக மேற்குலக ஆதரவான ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தை சிறிமா அரசுடமையாக்கியது அமெரிக்காவைச் சினப்படுத்தியது. அவரது ஆட்சியில் இடதுசாரிகளான என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியதுடன் அந்நியச் செலவாணிக் கையிருப்பும் மோசமான நிலையில் இருந்தது. இலங்கைக்கு அமெரிக்கா கோதுமை மாவை இலங்கை ரூபாவில் விற்பனை செய்து அந்த ரூபாக்களை அமெரிக்க தூதுவரகத்தின் பெயரில் இலங்கை நடுவண் வங்கியில் பி. எல்-480 என்னும் பெயரில் வைப்பிலிடப்பட்டது. அந்தக் கணக்கில் இருந்து பெருமளவு தொகையை அமெரிக்க தூதுவரகம் மீளப் பெற முயன்ற போது நிதியமைச்சராக இருந்த என் எம் பெரேரா அதற்கு அனுமதி வழங்க மறுத்தார். பின்னர் சிறிமாவோவின் மருமகனானவரும் சுதந்திரக் கட்சியில் செல்வாக்கு செலுத்தியவருமான பீலீக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். என் எம் பெரேரா அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். முதல் முறையாக இலங்கை அமைச்சர் ஒருவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தில் பதவி ஏற்பு செய்து கொண்டார். ஆம் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அமெரிக்காவிலேயே நிதி அமைச்சராக இலங்கைத் தூதுவர் முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, பொதுவுடமைக் கட்சி ஆகிய இடது சாரிக் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு தனித்தனியே இயங்கத் தொடங்கின. சிறிமாவும் அவர் மகனும் பிரிந்தனர். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததுடன் மீண்டும் அது ஆட்சியைக் கைப்பற்ற பதினேழு ஆண்டுகள் எடுத்தன. அதுவும் இடது சாரிக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க ஆதரவு தாராண்மைவாதக் கட்சியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் மாறிய பின்னரே அது நடக்கக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் தளம் அமைக்க முயன்ற அமெரிக்கா

ஜே ஆர் ஜயவர்த்தனேயின் ஆட்சிக்காலத்தில் இலங்கையை அமெரிக்காவின் செய்மதி நாடாக மாற்றும் முயற்ச்சி தீவிரமாக நடைபெற்றது. இலங்கையில் அமெரிக்காவின் படைத்துறைக்கு தேவையான வசதிகளை திருமலையிலும் சிலாபத்திலும் அமைக்க முயற்ச்சி செய்யப்பட்டது. தமிழர்களை பாவித்து அதை இந்தியா குழப்பலாம் என உணைர்ந்த அமெரிக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் தனக்கு பின்னால் இணைக்க எஸ் ஜே வி செல்வநாயகத்தின் மருமகனான ஏ ஜே வில்சனையும் எம் திருச்செல்வத்தின் மகனான நீலன் திருச்செல்வத்தையும் களத்தில் இறக்கியது. அவர்கள் இணைந்து பல இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் தமிழர் பிரச்சனைக்கு அதிகாரமில்லாத மாவட்ட அபிவிருத்தி சபைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி அதை நிராகரித்த போது அமெரிக்க தூதுவர் அப்போதைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரைச் சந்தித்து அதை ஏற்கும்படி வற்புறுத்தியது. அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தன்னும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற பணிப்புரையுடன் ஜே ஆர் ஜெயவர்த்தன தனது அமைச்சர்களான சிறில் மைத்தியூவையும் காமினி திசாநாயக்கவையும் பெரும் காடையர் கூட்டத்துடன் யாழ்ப்பாணம் அனுப்பினார். அவர்கள் யாழ் பொது நூல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். தமிழர்களிடையே ஒரு தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது. அமெரிக்க திட்டத்தை தவிடு பொடியாக்க இந்தியாவிற்கு தேவையான கடப்பாரையை நூலக எரிப்பாலும் 1983 கலவரத்தாலும் கொடுத்தார். இந்தியா தமிழர்களுக்கு நல்லவன் போல் நடித்து அமெரிக்காவின் திருமலை மற்றும் சிலாபம் திட்டங்களை முறியடித்து தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்திற்கு 1987இல் இருந்து 2009வரை பேருதவி செய்தது.

சுக்கு நூறாக உடைந்த அமெரிக்காவின் ஜெய சிக்குறு

விடுதலைப் புலிகளின் தீரமிகு போராட்டத்தால் 1990களின் பிற்பகுதிகளில் இலங்கை திணறியது. கடல் மூலமாக வடக்கில் உள்ள படை முகாம்களுக்கு விநியோகம் செய்வதற்கு இந்தியாவின் தயவு தேவைப்பட்டது. இதை விரும்பாத அமெரிக்கா இலங்கைப் படையினர்க்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் கொடுத்து தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையை கைப்பற்றும் போரை வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) என்னும் பெயரில் ஒரு பெரும் படைநடவடிக்கையை 1997இல்ச் ஆரம்பித்தது. சிறிது சிறிதாக சிங்களப் படையினர் முன்னேறி வருகையில் விடுதலைப் புலிகள்1999இல் கொண்டு வந்த படைக்கலன்கள் அடங்கிய கப்பல் ஒன்றை இந்தியா கடல் கடக்க விட்டுக் கொடுத்தது. விடுதலைப்புலிகள் கொண்டு வந்த பல்குழல் ஏவுகணைச் செலுத்தி சிங்களப் படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஆசியா நோக்கிய சுழற்ச்சி மையத் திட்டத்தில் இந்தியாவின் ஆதரவு அவசியம் என்பதை அமெரிக்காவிற்கு ஜெய சிக்குறு படைநடவடிக்கையில் தோல்வி உணர்த்தியது. அதன் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது செய்த பொருளாதார தடைகளை 2000இல் இருந்து நீக்கி இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆரம்பித்தன.

போருக்கு உதவியவரக்ளுக்கு உரிய கூலி இல்லை

மஹிந்த ராஜபக்சவும் அவரது உடன் பிறப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செய்த போரில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உதவிகள் செய்தன. போரில் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் Status of Forces Agreementஐயும் இந்தியாவுடன் Comprehensive Economic Partnership Agreementஐயும் மஹிந்தவின் அரசு செய்யும் என எதிர்பார்த்து தோல்வியடைந்தன. மஹிந்தவின் அரசு சீனா இலங்கையில் பல முதலீடுகளைச் செய்தது. அமெரிக்கா பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் பல தலையீடுகளை இலங்கையில் செய்தது. ராஜபக்சேகளின் கட்சியில் மைத்திரிபால சிரிசேன என்பவரை தூங்குநிலைத் தாக்குதலாளி (Sleeper Cell) ஆக மாற்றியது. வெளிநாட்டு உளவுத்துறையினரின் தூண்டுதலால் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை சிங்களப் பேரினவாதிகள் செய்தனர். அதனால் அவர்களின் ஆதரவு தேர்தலில் கிடைக்காமல் இருக்க சதி செய்யப்பட்டது. தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவோம் என அமெரிக்கா சந்திரிக்கா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் மூலம் உறுதி வழங்கப்பட்டது. மஹிந்தவின் சோதிடர் கிரக நிலை சாதகமாக இருப்பதால் முன் கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் தாமதித்தால் தோல்வி ஏற்படும் என பொய்யான ஆலோசனை வழங்கினார். அவருக்கும் வெளிநாட்டு தூண்டுதல் இருந்தது. அது எந்த நாடு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் போட்டுடைத்த ஐக்கிய தேசியக் கட்சி

அமெரிக்கா தனது சதிகளால் ஆட்சி பீடமேற்றிய மைத்திரியும்-ரணிலும் மோசமாக ஆட்சியை நடத்தி திறனற்ற ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் எல்லாவற்றையும் போட்டுடைத்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்ட தென்றார். ராஜபக்சே குடும்பத்தினர் மைத்திரி-ரணில் ஆட்சியில் நடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு எனவும் சிங்களவர்களை தம்மால் மட்டும் பாதுகாக்க முடியும் என தேர்தல் பரப்புரை செய்து 2019 நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2020இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இலகுவாக வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது.

நிதி நெருக்கடி

மைத்திரி-ரணில் அரசுக்கு பன்னாட்டு நாணய நிதியம் வழங்கியிருந்த $1.5பில்லியன் பெறும் வசதி ராஜ்பக்சேக்களின் ஆட்சிக்கு வந்தவுடன் இடை நிறுத்தப்பட்டது. அதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பதை இலகுவாக ஊகிக்கலாம். 2020 ஒக்டோபர் மைக் பொம்பியோ கொழும்பு சென்றார். அப்போது இலங்கையின் வெளிநாட்டுக்கடன் $15பில்லியன் அதற்கான வட்டியைக் கூட கட்ட முடியாத நிலையில் இருந்தது. அமெரிக்காவுடன் இலங்கை Status of Forces Agreement செய்தால் மிலேனியம் சவால் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 500 மில்லிய டொலர் நிதியுதவி அமெரிக்கா வழங்கும் என்ற மைக் பொம்பியோவின் முன்மொழிவை ராஜபக்சேக்கள் நிராகரித்தனர். இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கொடுக்கவும் இலங்கை மறுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து செயற்படும் Fitch, S & P, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கையின் கடன்படு திறனை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றன. இவை தொழில்சார் நிறுவனங்கள் என்றாலும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட மாட்டாது எனச் சொல்ல முடியாது. தரம் தாழ்த்தப்பட்டமையால் பன்னாட்டு முதலீட்டு சந்தையில் இலங்கையால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவின் சிறிமா கால Action Replay

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1970-77 ஆட்சியில் செய்தமை போன்ற நகர்வுகளை அமெரிக்கா 2021இல் இலங்கையில் செய்கின்றது. பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்று வந்து நாடாளுமன்ற உறுப்பினராகி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அமெரிக்கா சென்று நிதியமைச்சரானது போல் இது இருக்கின்றது. பசிலுக்கு நிதித்துறையில் எந்த அனுபவமோ ஆற்றலோ இல்லை. அமெரிக்காவில் இருந்தோ இந்தியாவில் இருந்தோ இலங்கைக்கு நிதி உதவி, கடன் வசதி ஏதும் கிடைக்கவில்லை. சீனாவிடம் இருந்து அவற்றைப் பெற்றால் இரு நாடுகளின் சினத்திற்கு உள்ளாக வேண்டி வரும். பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றால் மக்களுக்கு அரசு வழங்கும் நன்மைகள் பல நிறுத்த வேண்டியிருக்கும். அது மக்களிடையே ராஜபக்சேக்களுக்கு இருக்கும் வெறுப்பை அதிகரிக்கும். ஏற்கனவே விலைவாசி அதிகரிப்பு பண்டங்களுக்கன பற்றாக் குறை போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறிமாவின் சுதந்திரக் கட்சியை 17 ஆண்டுகள் ஆட்சிக்கு வராமல் செய்தது போல் ராஜபக்சேக்களை இன்னும் பல ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாமல் செய்யப் போகின்றதா அமெரிக்கா.

Monday, 20 December 2021

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்கள் அழிக்குமா?

  


2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா கடலில் இருந்தும் இஸ்ரேல் தரையில் இருந்தும் வீசப்படும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்துள்ளன. இரு நாடுகளும் தீவிரவாதிகளின் சிறிய ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் கூட்டமாக வந்து தாக்கும் ஆபத்தை எதிர் நோக்க லேசர் கதிர்களை பாவிக்க முயல்கின்றன. அமெரிக்கா தனது பெரிய கடற்கலன்களை எதிரி பல சிறிய படகுகளில் வந்து தாக்குதவதை தடுக்க லேசர் கதிர்களைப் பாவிக்கப் போகின்றது. அத்துடன் இரசியா மற்றும் சீனா போன்ற படைத்துறைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் பெருமளவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்கக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்கள்

லேசர் கதிர்களை ஒரு இலக்கின் மீது வீசும் போது அது உடனடியாக அந்த இலைக்கை கருகச் செய்துவிடும். ஒலியின் வேகம் ஒரு செக்கனுக்கு ஆயிரத்து நூறு அடி பயைப்பது. மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக்) என்பது ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்திற்கு மேல் இயங்குவது. தற்போது உள்ள மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளின் ஆகக் கூடிய வேகம் ஒலியின் வேகத்திலும் 24 மடங்காகும். ஆனால் லேசர் கதிர்களின் வேகம் ஒலியின் வேகத்திலும் ஒரு மில்லியன் மடங்காகும். ஒளியின் வேகத்தில் இயங்கும் லேசர் கதிர்கள் ஒரு செக்கனுக்கு 186,000மைல்கள் பயணிக்கும். சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வர 4 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

லேசர் படைக்கலன்களின் நன்மை:

துல்லியத் தாக்குதல். அசையும் இலக்குகளை (கடற்கலகள், தாங்கிகள், விமானங்கள், ஏவுகணிகள்) துல்லியமாக தாக்குவது கடினமானதாகும். லேசர் கதிர்கள் பிரபஞ்சத்திலேயே அதிக வேகத்தில் பணிப்பதால் அவை இலக்குகளை உடனடியாகவும் துல்லியமாகவும் தாக்கும். படைத்துறையில் Sensor-to-shooter time என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதவது எதிரி இலக்கை காணுதலுக்கும் அதன் மீது தாக்குதல் நவத்துவதற்கும் இடையில் உள்ள நேர இடைவெளி. சிறந்த கதுவிகளும் (ரடார்கள்) லேசர் கதிர் வீச்சும் அந்த நேர இடைவெளியை வெகுவாக குறைக்கும்.

2. மலிவானது. முன்னூறு டொலர்கள் செலவழித்து ஹமாஸ் அமைப்பு உருவாக்கும் ஆளில்லா போர் விமானத்தை தாக்கி அழிக்க இஸ்ரேலுக்கு $80,000 செலவில் உருவாக்கிய ஏவுகணை தேவைப்படுகின்றது. லேசர் கதிர் வீச்சுக்களை நூறு டொலர்களுக்கும் குறைவான செலவில் உருவாக்கலாம்.

3. மீள் நிரப்பல் தேவையில்லை. ஏவுகணைச் செலுத்தி ஒன்றில் இருபது ஏவுகணைகள் இருக்கும். அவற்றால் எதிரியின் இலக்குகளை தாக்கிய பின்னர் அவற்றில் ஏவுகணைகளை மீளவும் நிரப்ப பல நிமிடங்கள் எடுக்கும். லேசர் செலுத்திகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தால் அது தொடர்ச்சியாக லேசர் கதிர்களை எதிரியின் இலக்குகளை நோக்கி வீசிக் கொண்டே இருக்கும்.

லேசர் படைக்கலனிகளின் வகைகளும் வலிமையும்

1996இல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஆளில்லாவிமானங்களை அழிக்கும் லேசர் கதிர் வீசிகளை உருவாக்க தொடங்கின. இஸ்ரேல் தனியே உருவாக்கிய லேசர் படைக்கலன்கள் 100கிலோ வாட் வலிமையானவை. அமெரிக்கா உருவாக்கியவை 300 கிலோ வாட் வலிமையானவை. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.


அமெரிக்க கடல்-சார் பரிசோதனை

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக கப்பலான USS Portlandஇல் இருந்து High-energy lacer system மூலம் செலுத்தப்பட்ட லேசர் கதிர்கள் ஏடன் வளைகுடாவில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு இலக்கை அழித்துள்ளது. 2021 டிசம்பர் மாதம் 14-ம் திகதி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை கடற்போரில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்கர்கள் மார்தட்டுகின்றார்கள். USS Portlandஇன் கட்டளைத் தளபதி Laser weapon is redefining the war at sea என்றார். 2020 மே மாதம் அமெரிக்க கடற்கலன் ஒன்றில் இருந்து ஆளில்லா விமானத்தை லேசர் கதிர்கள் மூலம் அழிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த லேசர் கதிர்கள் 150 kilo watt வலுவுடையவை.

அமெரிக்கா பரிசோதிக்க தேர்வு செய்த இடம்

எரித்திரியா, யேமன், ஜிபுக்த்தி, சோமாலியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் நடுவே உள்ள ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா தனது புதிய கடல்-சார் லேசர் படைக்கலன்களை பரிசோதனை செய்துள்ளது. தீவிரவாதிகள் அமெரிக்காவின் பாரிய கடற்கலன்களை பல கூட்டங்களாக வரும் சிறு படகுகள் மூலம் செய்யும் தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தனது புதிய லேசர் படைக்கலனை உருவாக்கியுள்ளது. பரிசோதித்த இடமும் திவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்து மிக்க இடமாகும்.

பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கி பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 300கிலோ வாட் வலிமையான லேசர் படைக்கலன்கள் வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise missiles) மட்டுமே அழிக்க வல்லன. மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்க மேலும் வலிமை மிக்க லேசர் கதிர்கள் உருவாக்க வேண்டும்.

சீனா வின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

2018-ம் ஆண்டு சீனா செய்த மொத்த மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைப் பரிசோதனைகள் பத்து ஆண்டுகளாக அமெரிக்கா செய்த பரிசோதைனைகளிலும் பார்க்க அதிகமானதாகும். அமெரிக்கா சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் படைத்தளங்களை வைத்திருப்பதைப் போல் சீனாவால் அமெரிக்காவைச் சுற்றிவர படைத்தளங்களை வைத்திருக்க முடியவில்லை. இதைச்  சமாளிக்க சீனா கண்ட ஒரே வழி மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளாகும். இத்துறையில் சீனாவின் மிகையான வளர்ச்சி அமெரிக்காவிற்கு படைத்துறைச் சமநிலையில் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதைச் சமாளிக்க அமெரிக்கா லேசர் கதிர் வீச்சை நம்பியுள்ளது. அதற்கான ஆய்வு வேலைகள் இரகசியமாகவும் துரிதமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய தனியான விண்வெளிப்படையணியில் லேசர் கதிர்வீசிகள் இணைக்கப்படும் போது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பெரும் சவால்களை எதிர் நோக்கும்.

முதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கையில் அவற்றில் லேசர் கதிர் மூலம் ஒரு துளை ஏற்படுத்தி அவற்றை செயலிழக்கச் செய்வது அமெரிக்காவின் நோக்கம் போல் இருக்கின்றது. லேசர் கதிர் வீசிகள் செய்மதிகளில், விமானங்களில், கடற்கலன்களைன் இணைக்கப்படவிருக்கின்றன. இறுதியில் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை கருக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா களமிறக்கும். அதன் மூலம் சீனாவிற்கான படைத்துறைச் சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக்கலாம். பின்னர் சீனா வேறு வழி தேடும்.

லேசர் கதிர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/03/blog-post.html

Friday, 17 December 2021

HAWC: அமெரிக்காவின் புதிய சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை

  


அமெரிக்க வான்படையும் Defence Advanced Research Projects Agency (DARP) என்னும் படைத்துறை முகவரகமும் இணைந்து புதிய வகை வானில் இருந்து வானுக்கு தாக்குதல் செய்யும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கான ஏவுகணைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தை Raytheon நிறுவனத்திற்கும் ராம்ஜெட் இயந்திரத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை Northrop நிறுவனத்திற்கும் 2019-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக் என அழைப்பர்பறக்கும் விமானம்பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது.


இயந்திரங்கள் வளியில் உள்ள ஒட்சிசனையும் எரிபொருளையும் (பெற்றோல், டீசல்) இணைந்து எரியச் செய்து உந்துவலுவை (thrust) உருவாக்குகின்றன. வளிமண்டலத்திலும் உயரமாகச் செல்லும் ஏவூர்திகள் (ராக்கெட்) தமக்கு தேவையான ஒட்சிசனை (Oxygen) தம்முடன் எடுத்துச் செல்லும். தாரை (ஜெட்) விமானங்கள் தமக்கு தேவையான ஒட்சிசனை வளிமண்டலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும். ஒலியிலும் வேகமாக இயங்கும் விமானங்களும் ஏவுகணைகளும் Ramjet, Scramjet ஆகிய இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. Ramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க ஆகக் கூடியது ஆறுமடங்கு வேகத்தில் இயக்க வல்லன. Scramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகம் வரை இயக்க வல்லன.


Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதுடன் அது பாய்ந்து கொண்டிருக்கும் இறுதிக் கட்டத்தில் அதன் பாயும் திசையையும் வழியையும் மாற்றலாம். மற்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை திசை மாற்ற முடியாது. ஆனால் சீனா 2021 ஜூலை மாதம் பரிசோதித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை திசை மாற்றக் கூடியது. ஆனால் அதனால் இலக்கை துல்லியமாக தாக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் புதிய ஏவுகணை துல்லியமாக தாக்க வல்லது என நம்பப்படுகின்றது. Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்பவர்கள் இது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறையை சாரும் என்கின்றனர். குறுகிய கால அவகாசத்தில் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதுடன் அவையில் பாய்ச்சல் தூரமும அதிகம் என்கின்றனர். ஆனால் தூரம் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை. இவற்றின் இன்னும் ஓர் அம்சம் இவற்றைக் குறைந்த செலவில் உருவாக்கலாம். முதலாவதாக ஏவும் பரிசோதனை 2021 செப்டம்பர் மாதமளவில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பெரும்பாலும் அது அமெரிக்காவின் B-52 H குண்டு வீச்சு விமானத்தில் இருந்து வீசப்பட்டிருக்கலாம். இரசியா HAWC ஏவுகணைகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. சீனா வானில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசும் வல்லமையை இன்னும் அடையவில்லை எனவும் சொல்லப்படுகின்றது. அமெரிக்காவின் HAWC ஏவுகணை எந்த விமானத்தில் இருந்து வீசப்படுகின்றதோ அந்த விமானத்தின் பறப்பு வேகமும் ஏவுகணையின் வேகத்திற்கு வலுவூட்டும்.

HAWC ஏவுகணைகள் காற்றை சுவாசிக்கும் தன்மை கொண்டவை என்பதால் காற்றுடன் உரசும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பு குறைவாக இருக்கும் அத்துடன் காற்று ஏற்படுத்தும் வேகக் குறைப்பும் குறைவானதாகவே இருக்கும். ஒட்சிசன் செறிவாக உள்ள வளிமண்டலத்தில் Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் மிகவும் சிறப்பாக செயற்படும் எனப்படுகின்றது. அதாவது சிறந்த செலுத்துதற்கையாள்கையும் (manoeuvrability) வேகமும் அதன் சிறப்பு அம்சமாக இருப்பதுடன் அவற்றை எதிரிகளால் இலகுவில் இனம் காண முடியாது.

HAWC ஏவுகணைகளின் அடுத்த தலைமுறை ஏவுகணைகள் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களான B-52, B-1 Lancer ஆகிய குண்டு வீச்சு விமானங்களில் இருந்தும் F-35, F-15 போன்ற சண்டை விமானங்களில் இருந்தும் இலகுவாக வீசக் கூடியவையாக இருக்கும்.

Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் எப்படி இரசியாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளான எஸ்-400 மற்றும் எஸ்-500 ஆகியவற்றிற்கு எதிராக எப்படிச் செயற்படும் என்பதை ஒரு போர் முனையில்தான் கண்டறிய முடியும்.

Wednesday, 15 December 2021

இலங்கையில் இருந்து கூலி கிடைக்காமல் ஏங்கும் இந்தியா

 


கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் கடனையும் இலங்கைக்கு வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனக் கப்பல்கள் தமிழர்களின் கடற்பரப்பில் காவல் நாய்கள் போல் நின்று தமிழர்களுக்கு உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் தடுக்கவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாக இல்லை. ஆனால் இலங்கையில் இருந்து தனக்கு வேண்டியதை சீனா துறைமுகங்களாகவும் தீவுகளாகவும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் சீனா செய்யாதவற்றைச் செய்த ஒரு நாட்டுக்கு சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் சிங்களவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.

இலங்கையும் அமெரிக்க இந்திய உறவும்

இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் எதிர் எதிர் நிலையில் இருந்தன. 1970களில் இருந்து அந்த முரண்பாடு தீவிரமடைந்தது. அமெரிக்க நெறியாள்கையில் சிங்களம் நடத்திய ஜெயசிக்குறு படை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் இந்தியா செய்த விட்டுக் கொடுப்புடன் 1998 மே மாதம் முறியடித்தனர். அந்த முறியடிப்பு இந்தியாவைப் பகைத்து இலங்கையில் அமெரிக்காவால அரசுறவியல் நகர்வுகளை வெற்றிகரமாக செய்ய முடியாது என அமெரிக்காவை உணர வைத்தது. அதன் பின்னர் இந்தியாவுக் அமெரிக்காவும் இணைந்து செயற்பட ஆரம்பித்தன. 1999இல் இந்தியா பாக்கிஸ்த்தானிடையே நடந்த கார்கில் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு இந்தியாவை திருப்தியடைய வைத்தது. அமெரிக்கா இஸ்ரேல் இந்தியவிற்கு ஆதரவாக தனது வான்படையை அனுப்பியதை எதிர்க்கவுமில்லை. 2000-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டார். 32 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அதிபர் புது டில்லிக்கு மேற்கொண்ட பயணம் அதுவாகும். இந்தியாவின் அணுக்குண்டு பரிசோதனையின் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது விதித்த பொருளாதாரத் தடை 2001-ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன பின்னர் சிங்களவர்களுக்கு இரண்டு நாடுகளும் இணைந்து ஆதரவு வழங்குவதும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒழிப்பதும் ஆரம்பமானது. அமெரிக்காவின் பயங்கரவாததத் திற்கு எதிரான போரில் இந்தியா இணைவதற்கு நிபந்தனையாக விடுதலைப் புலிகளை அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிபந்தனையாக இருந்தது. இலங்கையின் நட்புப் பட்டியலில் இந்தியாவிற்கு முதன்மை நிலையைப் பெறுவதற்காக இந்தியா இதைச் செய்தது. இரண்டு நாடுகளும் இலங்கை இனக்கொலையின் கூட்டுப் பங்காளிகளாக செயற்பட்டன. இலங்கையை இந்தியாவின் பின்புறமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. ஆனால் இலங்கையை கையாளும் திறன் இந்திய வெளியுறவுத்துறைக்கு இல்லாத படியால் இலங்கை சீன சார்பு நாடாக 2009இன் பின்னர் ராஜபக்சேக்களின் ஆட்சியில் மாறிக் கொண்டது. இந்தியாவை இலங்கை தொடர்ந்து ஏமாற்றியது.  இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும் விதம் அமெரிக்காவிற்குத் திருப்தி அளிக்காததால் 2013-ம் ஆண்டு அமெரிக்கா தனது கையில் இலங்கை விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டது. மாலை தீவிலும் அதையே செய்தது. இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தை ஒழிக்கும் தன் தந்திரோபாய நடவைக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி 2013-ம ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க நிர்பந்தித்தது. ஆனாலும் இலங்கையின் சில்லறைக் கூலிகள் போற் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்த பின்னரே அதற்கு ஆதரவு வழங்கினர்.

இந்தியாவின் அயோக்கியத் தனம்
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.

சீபா வேண்டாம் சீ போ என்ற இலங்கை

சிங்களவரக்ளுக்கு இனக்கொலை செய்ய உதவி செய்த இந்தியா அதற்கான கூலியாக சீபா ஒப்பந்தம் எனப்படும் Comprehensive Economic Partnership Agreement (CEPA) ஒப்பந்தத்தை இலங்கை இந்தியாவுடன் செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு போர் நடக்கும் போது கையொப்பம் இட வேண்டும் என இந்தியா நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் கையொப்பம் இடுவோம் என இலங்கை இழுத்தடித்தது. 2005-ம் ஆண்டு சீபா ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. 2008இல் ஒரு புறம் போர் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடினமான 13சுற்றுப் பேச்சு வார்த்தை செய்யப்பட்டு ஓர் ஒப்பந்தம் வரையப்பட்டது. போரில் பின்னரும் இலங்கை கையொப்பமிடவில்லை, 2013இல் ஒப்பந்தத் தில் கையொப்பமிட மாட்டோம் இன இலங்கை கையை விரித்து விட்டது. 2015-ம் ஆண்டு தலைமை அமைச்சர் பதவிக்கு வந்த ரணில் விக்கிர்மசிங்கவும் சீபா ஒப்பந்தத்தை நிராகரித்து இந்தியாவின் முகத்தில் கரி பூசினார். இதனால் இனக்கொலைக்கு கூலி வேலை செய்த இந்தியா ஏமாற்றப்பட்டது.

இலங்கை இந்திய சீபா ஒப்பந்தம்

இலங்கையின் சில தொழிற்துறையினர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீபா எனப்படும் பரந்த பொருளாதார பங்காண்மை ஒப்பந்தம் தமக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியா தமக்குத் திறந்து விடப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கையை சீபாவிற்கு சம்மதிக்க வைக்க தனது சலுகைக்களை முக்கியமாக ஆடை உற்பத்தித் தொழிலில் அதிகரித்தது. ஏற்கனவே சுங்கவரியின்றி மூன்று மில்லியன் துண்டுகளை இலங்கை ஏற்றுமதி செய்யலாம் என்றிருந்தது. இதை இந்தியா இரட்டிப்பாக்கியதுடன் மேலும் பல மில்லியன் துண்டுகளை குறைந்த சுங்கவரியுடன் இலங்கை ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் வெறுப்பை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அரசியல்வாதி விமல் வீரவன்ச சிபாவில் இலங்கை ஒப்பமிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா தனது நாட்டு வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்த ஒப்பத்தத்தை நிர்ப்பந்தித்தது என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் என்கிறார்; இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கை தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு ஈடானது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது. சீபா ஒப்பந்தம் என்ற பேச்சு எழுந்த போது இலங்கையில் பல சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் தொழில் நெறிஞர்களும் (Professionals), இடதுசாரிகளும் பொங்கி எழுந்தனர்.


இலங்கையின் நெருக்கடி

அமெரிக்காவில் இருந்து செயற்படும் கடன்படு திறன் தரப்படுத்தும் மூன்று நிறுவனங்கள் இலங்கை அரசின் கடன்படு திறனை தரம் தாழ்த்திய பின்னர் இலங்கை அரசு பன்னாட்டு நிதிச் சந்தையில் கடன்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு செலவாணிக் கையிருப்பு குறைந்த நிலையில் இலங்கைக்கு இலகு கடனும் நிதி உதவியும் அவசரம் தேவைப்படுகின்றது. சீனாவிடம் கடனோ நிதி உதவியோ பெறுவதாயின் சீனாவிற்கு பெரும் விட்டுக் கொடுப்புக்களை இலங்கை செய்ய வேண்டும். அது இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் கடும் விசனத்திற்கு உள்ளாக்கும். இலங்கையின் ஏற்றுமதியின் மூன்றில் இரண்டு பங்கு மேற்கு நாடுகளுக்கும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் செய்யப்படுகின்றது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வந்தால் இலங்கை அவர்களின் எல்லா நிபந்தனைகளுக்கும் அடி பணிய வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாயின் அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அரசு மக்களுக்கு செய்யும் சமூகநலக் கொடுப்பனவுகள் பலவற்றை நிறுத்த வேண்டி வரும். அதனால் ராஜ்பக்சேக்கள் அடுத்த தேர்த்தல்களில் தோல்விகளைச் சந்திக்க வேண்டி வரும்.

இலங்கையில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நெருக்கடிக்கு உதவி செய்து இலங்கையை சீபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியா முயல்கின்றது. இலங்கையின் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா ஒரு நான்கு அம்சத் திட்டத்தை முன் வைத்துள்ளது:

1. உணவு, மருந்து, எரிபொருள் கொள்வனவிற்கு கடன வழங்குதல்

2. நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம்

3. திருகோணமனை எரிபொருள் குதங்களை மேம்படுத்துதல்

4. இலங்கையில் இந்திய முதலீட்டிற்கு இலங்கை வசதி செய்து கொடுத்தல்

இவற்றைச் செய்த பின் இந்தியாவிற்கான கூலி கிடைக்குமா?

Monday, 13 December 2021

சீன அச்சுறுத்தல் ஜப்பானை வல்லரசாக்குகின்றது

  



உலகத்திலேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக நடந்த இப்போரில் மூன்று மில்லியன் சீனப்படை வீரர்களும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். முதலாம் ஜப்பான் – சீனப் போர் 1894-1895 ஆண்டுகளில் நடந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த ஆசிய நாடுகளில் மோசமான போர்க்குற்றங்கள் நடந்தன. சீனப் பெண்களை ஜப்பானியர்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர். சீனா ஜப்பானின் அட்டூழியங்களை அதன் மக்கள் மனதில் ஆழமாக பதித்து  வைத்துள்ளது. சீனாவில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பானிய விளையாட்டு வீரர்களைக் கண்டவுடன் சீனப் பார்வையாளர்கள் கூச்சலிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை நிறைந்த வேற்றுமை

சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது. உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும்.வ்

கிழக்குசீனக்கடல்

கிழக்குச் சீனக் கடசீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  2013 நவம்பர் 24-ம் திகதி சீனா இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமா பிரகடனம் செய்தது. சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியது. 2013 நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நம்பகமற்ற தன்மை

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் அமெரிக்காவின் நம்பகத்தைனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.வ் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருந்தது. சீனாவின் மிகையான படைத்துறை வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அயல் நாடுகளின் மீது சீனா அதிகரிக்கும் ஆதிக்கமும் ஜப்பானை தனது பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றது. அதனால் தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதுடன் அந்த நாடுகளுக்கான தனது படைக்கலன் விற்பனையையும் அதிகரிக்கவும் முடியும்.

ஜப்பானின் பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கை – 2020

2020 ஜூலை 13-ம் திகதி ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஜப்பான் F-35 போர்விமானங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் F-X போர்விமானங்கள், மூன்று P-1 ரோந்து விமானங்கள் ஏழு SH-60K ரோந்து உலங்கு வானூர்திகள், ஆளில்லாப் போர்விமானப் படையணி, வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்பும் விமானங்கள், இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி, ஆளில்லாமல் நீரின் கீழ் இயங்கும் கலன்கள் போன்றவை ஜப்பானியப் படையில் இணைக்கப்படும் என சொல்கின்றது. அமெரிக்க உற்பத்தி F-35 போர்விமானங்கள் 157ஐ வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 42 F-35-B விமானங்களும் அடங்கும். F-35-B விமானங்கள் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தக் கூடியவகையில் குறுகிய தூர ஓட்டத்துடன் வானில் எழும்பவும் செங்குத்தாக உலங்கு வானூர்தி போல் தரையிறங்கவும் (Short take off and vertical landing STOVL) வல்லன. சீனாவை அதிக கரிசனை கொள்ள வைத்த F-35 விமானங்களை அமெரிக்காவின் Lockeed Martin, Northdrop Grumman பிரித்தானியாவின் BAE System ஆகியவை உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. வானாதிக்கம், வான்மேன்மை, இலத்திரனியல் போர், தாக்குதல், வேவு, உளவு, கண்காணிப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய பற்பணிப் போர் விமானங்களாகும்.

ஜப்பானின் விமானம் தாங்கிக் கப்பல்

ஜப்பானிடம் இரண்டு Izumo வகை நாசகாரிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை உண்மையில் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல்களாகும். இவை நீர்மூழ்கி அழிப்புப் பணிகள், கிழக்கு சீனக் கடல் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைச் செய்வதுடன் கட்டுப்பாட்டகம்+கட்டளையகம் ஆகவும் செயற்படக்கூடியவை. 248 மீட்டர் நீளமுள்ள இவற்றை ஜப்பான் மேலும் மேம்படுத்தி அவற்றில் அமெரிக்கத் தயாரிப்பான F-35-B ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை ஜப்பான் உள்ளடகிக் கொண்டிருக்கின்றது. இது ஜப்பானின் வலிமை மிக்க கடற்படையை மேலும் வலிமையுள்ளதாக்கின்றது.

சீனாவிற்கு எதிரான இரு தீவுச் சங்கிலிகளில் ஜப்பான்



சீனாவின் பசுபிக் பிராந்திய ஆதிக்கத்தை தவிற்பதற்கு இரண்டு சங்கிலித் தொடர் தீவிகளை அமெரிக்கா வியூகமாக வகுத்துள்ளது. முதலாவது சங்கிலித்தீவில் ஜப்பானின் யொக்கோசுக்கோ, ஒக்கினோவா ஆகிய தீவுகள், கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் எனவும் ஜப்பானியத்தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவு, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் தீவுக் கூட்டம் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தீவுச் சங்கிலிகளிலும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகின்றது. சீனா தைவானை ஆக்கிரமித்தால் இவ்விரு தீவுச் சங்கிலிகளும் சீனாவின் வர்தகப் போக்குவரத்தை முற்றாக தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சீனா அறியும்.

ஜப்பானின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

1997-ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை ஜப்பான் வாங்க முயன்ற போது அவற்றை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்கா அறிவித்தது. தனது உயர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா F-22 போர்விமான ங்களை எந்த நாட்டுக்கும் விற்பனைச் செய்யவில்லை. அப்போது ஜப்பான் தனது நாட்டிலேயே உயர்தர விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்தது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கி முடிக்கும் போது அது பிந்தங்கிய ஒரு விமானமாகிவிடும் என்பதால் ஜப்பான் நேரடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. இதே வழியை பிரித்தானியாவும் பின்பற்றியது. அமெரிக்கா 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முதல் விமானத்தை உருவாக்கி பரீசித்துள்ளது. ஜப்பானின் F-X என்னும் பெயர் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதில் ஜப்பான் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். எதிரிகளின் கதுவிகளால்(ரடார்களால்) அவற்றைக் கண்டறிய முடியாது. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு

இந்தியாஜேர்மனிதென் ஆபிரிக்காபிரேசில் ஆகிய நாடுகளைப் போல ஜப்பானும் ஒரு வல்லரசாக விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகைபொருளாதார வலுபடை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை. ஜப்பானின் வயோதிபர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பு ஜப்பானின் ஒரு பாதகமான அம்சமாகும்.

 

அமெரிக்க சீனப் போர் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2020/10/2021.html

இந்தியா ஜப்பானிய உறவின் முக்கியத்துவம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2014/09/blog-post_8.html

Thursday, 9 December 2021

இடியப்பச்சிக்கலைத் தெளிவாக்கிய மோடி புட்டீன் சந்திப்பு

  


2021 டிசம்பர் 6-ம் திகதி இரசிய அதிபர் புட்டீன் இந்தியா சென்று தலைமை அமைச்சர் மோடியுடன் ஒரு குறுகிய நேர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளார். புட்டீன் 2021இல் செய்த இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கானதாக அமைந்துள்ளது. முதலாவது பயணமாக அமெரிக்க அதிபரைச் சந்திக்க ஜூன் மாதம் ஜெனீவாவிற்கு சென்றிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களிடையே நடந்த 21வது இந்திய இரசிய உச்சி சந்திப்பு இதுவாகும். இரசியாவின் சென் அண்டுரூ கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்ட நான்கு வெளிநாட்டவரகளுள் நரேந்திர மோடியும் ஒருவராவர். தனிப்பட்ட ரீதியில் இருவருக்கும் இடையில் சிறப்பான நட்பு நிலவுகின்றது. அதாவது chemistry நல்லா workout ஆகுது.

படைக்கலன் கொள்வனவால் வலிமையடைந்த உறவு

இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவது 1962-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து மிக்-21 போர் விமான ங்களை கொள்வனவு செய்ததில் இருந்து ஆரம்பித்தது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் படைக்கலன்களை கொள்வனவு செய்வது முக்கிய பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளும் இணைந்து பல படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றன. அதில் முக்கியமானது பிரம்மோஸ் ஏவுகணைகளாகும். இரு நாட்டு கூட்டு உற்பத்தியில் ஆரம்பிக்கப் பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் சரிவரவில்லை. செலவு அதிகம் எனச் சொல்லி இந்தியா அதிலிருந்து விலகி விட்டது. அதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படவில்லை. 2011இல் இருந்து 2015 வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் படைக்கலன் இறக்குமதில் 70% இரசியாவில் இருந்து செய்யப்பட்டது. அதன் அடுத்த ஐந்தாண்டுக் காலப்பகுதியான 2016-2020இல் அது 49% ஆகக் குறைந்து விட்டது. அதே காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவை பெரிய பாதுகாப்பு பங்களி நாடாக (Major Defence Partner) அறிவித்தது. அதன் மூலம் பல புதிய படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டது. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய மறுக்கும் நீர்மூழ்கிகளை அணுவலுவில் இயக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா இரசியாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது.

சிக்கலான உறவு

2014-ம் ஆண்டில் இருந்து வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்படுகின்றது. அதே ஆண்டு இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்க இரசிய உறவில் முறுகல் தீவிரமடைந்துள்ளது. அதே ஆண்டு தென் சீனக் கடலில் சீனா செயற்கை தீவுகளை உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அமெரிக்க சீன உறவில் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சீனா தைவானை தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவும் சீனாவும் தமக்கிடையிலேயான உறவை மேம்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை உறுதி செய்ய குவாட் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றது. அமெரிக்காவிடமிருந்து எல்லா படைக்கலன்களையும் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும் இந்தியாவால் கொள்வனவு செய்ய முடியாது. அமெரிக்கா எல்லாவற்றையும் மற்ற நாடுகளுக்கு வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல சில விற்பனைகள் மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்தப்படுவதுடன் சிலவற்றிற்கு இறுக்கமான அறிவுசார் காப்புரிமையை அமெரிகா கடைப்பிடிக்கின்றது. இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்தால் இரசியா பாக்கிஸ்த்தானிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யலாம் என்ற செய்தியை இரசியா மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் அத்துமீறல்களைச் செய்வதை தடுக்க இந்தியாவிற்கு அமெரிக்காவின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சாதகமாக இரசியா தனது இரத்து அதிகாரத்தை பாவிப்பது வழமை. அதற்காக இரசியாவின் உறவு இந்தியாவிற்கு அவசியமாகின்றது. இந்தியாவின் இந்த நிலையை சமாளிக்க பிரான்ஸ் முன்வந்தது. பிரான்ஸ் தேவையான படைக்கலன்கள் தேவையானபோது ஐநா இரத்துப் பாவனை என்ற அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பிரான்ஸ் தயாராகியது. இந்தவிதமான இடியப்பச் சிக்கலின் நடுவில் மோடி – புட்டீன் சந்திப்பு நடந்தது.

எஸ்-400 வான் பாதுகாப்பு முறைமை

இந்தியாவிற்கான இரசியத் தயாரிப்பு வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400இன் விநியோகத்தை துரிதப் படுத்துமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே புட்டீன் தன் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். எஸ்-400 பாக்கிஸ்த்தான் – இந்தியப் படைத்துறைச் சமநிலையை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும். சீனாவிற்கும் பிரச்சனையாக அமையும். இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிற்கு எதிராக படைக்கலன் விற்பனை தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று மூதவை உறுப்பினர்கள் ஒரு சட்ட மூலத்தை அமெரிக்க நாடளுமன்றத்தில் சமர்பித்ததுடன் குவாட் அமைப்பின் உறவை பாதிக்கும் எந்த ஒரு தடை உத்தரவிற்கும் அமெரிக்க அதிபர் உடன்படக் கூடாது என்ற கோரிக்கையையும் அவரிடம் விடுத்தனர்.

எஸ்-400 பற்றிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2021/08/400-f-35.html

2+2 உரையாடல்

அமெரிக்காவும் இந்தியாவும் 2+2 உரையாடல் என்னும் பேச்சு வார்த்தையை ஆண்டு தோறும் இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து நடத்திவருகின்றனர். இவை இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் உலக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதை உறுதி செய்கின்றன. அதே போன்ற உரையாடலை இனி இந்தியாவும் இரசியாவும் செய்ய மோடி – புட்டீன் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா அமெரிக்காவிற்கு கொடுக்கும் முக்கியத்துவ போல இரசியாவிற்கும் கொடுக்க விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது.

இரசியாவின் சமரச முயற்ச்சி

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடயே சமரசம் செய்ய புட்டீன முன்வந்தார். பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இரசியா தலைமை வகித்த காலத்தில் இந்திய சீன முறுகல் நடந்தது. இந்த இரு அமைப்புக்களிலும் சீனா, இரசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. 2020 செப்டம்பரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இரசியா இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேரடியாக சந்திக்க வைத்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளினதும் படையினரும் எல்லையில் தமக்கிடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்த ஒத்துக் கொண்டனர். இரசியா சீனாவுடனும் இந்தியாவுடனும் ஏற்படுத்தியுள்ள கேந்திரோபாய உறவு இப்படி ஒரு பிரச்ச்னையை தீர்க்கும் தன்மையை இரசியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்ச்சியை இரு நாடுகளும் கவனத்தில் எடுக்கவில்லை. சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆக்கிரமிப்பு என அடையாளமிட்டிருந்தது. இந்தியா இன்றுவரை இந்தியாவிற்கு படைக்கலன்களை விநியோகம் செய்வதில் காத்திரமான பங்கை வகிக்கின்றது. சீனாவும் பல படைத்துறைத் தொழில் நுட்பங்களை இரசியாவில் இருந்தே பெறுகின்றது.

மோடி – புட்டீன் ஒப்பந்தங்கள்

இருபத்தெட்டு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்பேடுகளும் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், எரிபொருள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விண்வெளி, கனிமவள ஆய்வு, கலாச்சார பரிவர்த்தனை, கல்வி என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஒப்பந்தங்கள், புரித்துணர்வு குறிப்பேடுகள் கைச்சாத்திடப்பட்டன. இரசியாவின் AK-203 Assault Rifleகளை இந்தியாவில் இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யும் ஒப்பந்தம். மொத்தமாக 500,000 ரைபிள்கள் உற்பத்தி செய்யப்படும். இப்படிப்பட்ட படைத்துறை ஒத்துழைப்பு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தத்தம் நடுவண் வங்கிகளை இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவும் இந்தியாவும் செய்யும் வர்த்தகத்திலும் பார்க்க பத்து மடங்கு வர்த்தகம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்றது. அத்துடன் இந்திய-சீன வர்த்தகம் இந்தியாவிற்கு பாதகமான முறையில் நடக்கின்றது. சீனா போதிய அளவு இறக்குமதியை இந்தியாவில் இருந்து செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.

சீன வேலப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம் என்னும் 2013-ம் ஆண்டு எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2013/05/blog-post_21.html

அமெரிக்க இந்திய உறவின் வளர்ச்சி இந்திய இரசிய உறவை பாதிக்காது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...