Friday, 11 February 2022

அரபு யூத உறவை மாற்றும் ஈரான்

  

ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வரைக்கும் பாய்ந்து தாக்கக் கூடிய நிலையும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரான் வரை சென்று தாக்கக் கூடிய வலிமையையும் தற்போது பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளைச் சூழவுள்ள பிராந்திய போட்டியில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அரபுக்கள், யூதர், ஈரானியர் என்ற முப்பெரும் இனங்களுக்கிடையிலான் போட்டியையும் அது மாற்றி அமைத்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு உள்ளான அரபு நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுடன் பல வழிகளில் ஒத்துழைக்கின்றன. ஈரானின் படைத்துறை வளர்ச்சியும் அது இரசியா, சீனா, வட கொரியா ஆகியவற்றுடன் அதிகரிக்கும் ஒத்துழைப்பும் அரபி நாடுகளைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது.

இஸ்ரேலுடன் படைத்துறைப் பயிற்ச்சி

ஐக்கிய அரபு அமீரகம், பாஹ்ரேன் ஆகிய் நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஐந்து நாள் போர்ப்பயிற்ச்சியை செங்கடலில் 2021 நவம்பர் மாதம் செய்தன. உலகத்தை வியப்பிற்கு உள்ளாக்கிய இந்தப் போர்ப்ப்யிற்ச்சியைத் தொடர்ந்து 2022 பெப்ரவரி 2-ம் திகதி IMX-22 என்னும் பெயரில் சவுதி அரேபியா, ஓமான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியை நடத்தின. ஏழு ஆண்டுகளாக நடக்கும் இப்போர்ப்பயிற்ச்சியில் இஸ்ரேல் முதற் தடவையாக இணைந்து கொண்டது. பாரசீகக் குடா அரபுக் கடல், ஓமான் வளைகுடா, செங்கடல், வட இந்துமாக்கடல் என பரந்த கடற்பரப்பில் நடந்த இப்போர்ப்பயிற்ச்சியில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவு முக்கிய பங்கு வகித்தது. இஸ்ரேலுடன் அரசுறவை வைத்துக் கொள்ளாத சவுதி அரேபியா அதனுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை மேற் கொண்டமைக்கு காரணம் ஈரானின் படைத்துறை வளர்ச்சி பற்றிய கரிசனையே.

பொது எதிரி ஈரான்

சவுதி அரேபியாவிற்கு வேறு நாடுகள் படைக்கலன்களை அல்லது படைத்துறைத் தொழில்நுட்பங்களை வழங்கும் போது இஸ்ரேல் தவறாமல் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும். ஆனால் சவுதி அரேபியாவின் ஏவுகணை உற்பத்திக்கு சீனா உதவி செய்த போது இஸ்ரேல் ஏதும் பேசவில்லை. சவுதியின் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட மாட்டாது என இஸ்ரேல் நம்பும் அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையில் உறவு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் வளர்ந்துள்ளது. அந்த ஏவுகணைகள் ஈரான் மீது வீசப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என இஸ்ரேல் அறியும். 2020 செப்டம்பரில் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகமும் பாஹ்ரேனும் அரசுறவுகளை ஏர்படுத்திக் கொண்டமைக்கு பொது எதிரியான ஈரானுக்கு எதிரான கூட்டு அமைக்க வேண்டும் என்ற நோக்கமே காரணம். 2012-ம் ஆண்டு ஈரானின் வடக்கு எல்லையில் உள்ள இஸ்லாமிய நாடாகிய அஜர்பைஜானின் விமானத்தளங்களை இஸ்ரேலிய விமானங்கள் பாவிப்பதற்கு இரகசியமாக அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக இஸ்ரேல் தனது படைக்கலன்களை தடையின்றி அஜர்பைஜானுக்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டது. 2020-ம் ஆண்டு நடந்த அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் அஜர்பைஜான் வெற்றி பெற்றதில் துருக்கியினது பகிரங்கப் பங்களிப்பும் இஸ்ரேலின் இரகசியப் பங்களிப்பும் முக்கிய பங்களித்தன. 2021 செப்டம்பரில் ஈரானிய ஊடகம் ஒன்று ஈரானுக்கும் இரசியாவிற்கும் எதிராக அஜர்பைஜானை அமெரிக்கா, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் பாவிக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியிருதது.

ஈரானின் சியா பிறைத்திட்டம்

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் படைத்துறை அடிப்படையிலும் அரசுறவியல் அடிப்படையிலும் வலிமை மிக்க நாடாக ஈரான் இருக்கின்றது. உள்நாட்டிலேயே பல படைக்கலன்களை உருவாக்குவதில் ஈரான் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகின்றது. ஈராக்சிரியாலெபனான்யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் வலிமையாக உள்ளது. ஈராக்சிரியாலிபியாஎகிப்து ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஈரானின் சியா பிறைத் திட்டத்தின் முதல் இலக்கு ஈராக்இரண்டாம் இலக்கு சிரியா. சிரியாவில் ஈரான் செய்த படைத்துறை மற்றும் அரசுறவியல் நகர்வுகள் சியா இஸ்லாமியரான பஷார் அல் அசாத்தை பதவியில் நீடிக்கச் செய்கின்றதுடன் இரசியாவையும் துருக்கியையும் ஈரானுடன் ஒத்துழைக்கச் நிர்ப்பந்தித்துள்ளது. அசாத்தை பதவியில் இருந்து அகற்ற சவுதி அரேபியாஐக்கிய அரபு அமீரகம் உட்படப் பல அரபு நாட்டு ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சி ஈரானின் நகர்வுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சியா பிறைத்திட்டம் நிறைவேறி அதனால் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் திறனையும் பெற்றால அதை மத்திய தரைக்கடலில் ஒரு வல்லரசாக்கும்.  

மேனா பிரதேசம்

அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையில் மேனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் கொடுத்து வந்தது. இப்போது அமெரிக்கா தனது கவனத்தை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து மேனா பிரதேசத்தில் குறைக்கின்றது. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கை எரிபொருள் விநியோகம், கடற்போக்குவரத்து, இஸ்ரேலின் பாதுகாப்பு, இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு, ஈரானை அடக்குதல் ஆகியவை முதன்மையானவை. இஸ்ரேல் படைத்துறையிலும் உளவுத்துறையிலும் முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அயல் நாடுகள் தனித்தோ அல்லது பல ஒன்றிணைந்தோ அதன் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈரான் இஸ்ரேல் கரிசனை கொள்ளும் அளவிற்கு தனது படைக்கல உற்பத்தியை பெருக்குகின்றது. ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியிலும் யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் பலரை அமெரிக்கா அழித்த நிலையிலும் பல அரபு நாட்டு செல்வந்தர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்குவதைக் நிறுத்திய நிலையிலும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம் தீவிரமடைய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் எரிபொருள் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருப்பதால் அது தனது தேவையின் 40%ஐ உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 42% மற்ற அமெரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. தனது தேவையில் 12%ஐ மட்டுமே வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா பெறுகின்றது. அதனால் அமெரிக்காவில் தமது பாதுகாப்புக்கு தங்கியிருந்த வளைகுடா நாடுகள் தமது பாதுகாப்பில் மாற்றம தேவை என்பதை உணர்ந்துள்ளன. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கையில் ஈரானை அடக்குதல் மட்டுமே அதன் அதிக கவனத்தைப் பெறுகின்றது. ஈரானை அடக்கும் பொறுப்பை இஸ்ரேலும் அரபு நாடுகளும் இணைந்து மேற் கொண்டால் தனது பாரம் குறையும் என்பதால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்த்தான் என்னும் ஈரானின் இரண்டு எல்லை நாடுகளில் அமெரிக்கப் படையினர் பெருமளவில் இருந்தமை ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஈராக்கை தனது செய்மதி நாடாக்க ஈரான் விரும்புகின்றது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அமெரிக்கா செலுத்தி வந்த அக்கறை மெல்ல மெல்ல குறைந்து கொண்டு போகின்றது.

மேனா பிரதேசத்திற்கான குவாட் அமைப்பு

அமெரிக்கா, இரசியா, ஐக்கிய அமீரகம், இந்தியா ஆகிய நாடுகளை இணைத்து மேனா பிரதேசத்திற்கான குவாட் அமைப்பு உருவாக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது ஏற்பாடு செய்யப்பட்டது. 2021-10-20-ம் திகதி இந்த நான்கு நாடுகளும் ஒரு மெய்நிகர் கூட்டத்தையும் ஜெய்சங்கர் இஸ்ரேலில் இருக்கும் போது நடத்தினார்கள். மேனா பிரதேசக் குவாட் அமைப்பு ஈரானைக் கையாள்வதுடன் சீனாவையும் அப்பிரதேசத்தில் எதிர் கொள்வதற்கும் மத்திய தரைக் கடலில் இருந்து அரபுக் கடல்வரையான பிரதேசத்தை அந்த நாடுகளும் தமக்கு சாதகமாக வைத்திருப்பதற்கும் உருவாக்கப்பட்டது.

ஈரானின் ஆதரவுடன் வட யேமனில் இருந்து செயற்படும் ஹூதி எனப்படும் அன்சர் அல்லா அமைப்புப் போராளிகள் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் செய்வது. போல் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலை உள்ளது. 2300கிமீஇற்கும் அதிகமான தொலைவில் இருக்கு ஹூதி போராளிகளால் டெல் அவீவ் மீது ஆளிலிப் போர் விமானத்தாக்குதல் செய்ய முடியாது.  ஈரானின் ஆளிலிப் போர்விமானங்களின் பற்ப்பு தூரம் அதிகரிக்கும் போது மேலும் பல மாற்றங்களை மேனா பிரதேசத்தில் எதிர்பார்க்கலாம். 


Monday, 7 February 2022

வேகமாக வளரும் இரசிய-சீன நட்பு

  


மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர். ஜோர்ஜியா, சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளிற்கு தயக்கம் இன்றி படையினரை அனுப்பினவர் புட்டீன். சீனா மற்ற நாடுகளிற்கு தனது படையினரை அனுப்ப தயக்கம் காட்டுகின்றது. அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை. 

வித்தியாசமான இரசிய சீன உறவு 

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற ஒரு கேந்திரோபாயப் பங்காண்மை அல்ல. அந்த உறவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற உயர் நிலை பொருளாதாரக் கூட்டமைப்பும் அல்ல. சீனாவினதும் இரசியாவினதும் ஆட்சி முறைமைகள் வேறுபட்டனவாக இருப்பதால் அந்த உறவு ஒரு கொள்கைக் கூட்டணியும் அல்ல. அதே வேளை அது தேவைக்கு ஏற்ப ஒன்று கூடி பின்னர் கால் வாரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியும் அல்ல. அது அமெரிக்க உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ளவும் இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்ச்சி. இரசியாவும் சீனாவும் 4200கிமீ நீளமான தரை எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு 2006-ம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. சீனா தனது கொல்லைப் புறத்தில் மக்களாட்சியில் வளர்ச்சியடைந்த தைவான் இருப்பதையும் இரசியா தனது எல்லையில் வளருகின்ற மக்களாட்சி கொண்ட உக்ரேன் இருப்பதையும் விரும்பவில்லை. உலகில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைக் கைப்பற்றக் கூடிய வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் கைப்பற்றும் எண்ணம் எந்த நாட்டுக்கும் இல்லை.

எரிபொருள் வர்த்தகம்.

சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பைக் குறைத்து இரசியாவில் இருந்து பெறும் இயற்கை வாயு மூலம் தனது எரிபொருள் தேவையை சமாளிக்க சீனா முயல்கின்றது. சைபீரியா வலு (Power of Siberia) என்னும் எரிவாயுக் குழாய்த்திட்டம் மூலம் இரசியா சீனாவிற்கு சைபீரியாவில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கவிருக்கின்றது. புட்டீனின் சீனப் பயணத்தின் போது இரசியாவின் Rosneft நிறுவனமும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனமும் சீனாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு மில்லிய தொன் எண்ணெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. எரிவாயு விநியோகத்தையும் தற்போது உள்ள ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லிய கன மீற்றர் அளவில் இருந்து 48பில்லியன் கமீ ஆக உயர்த்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. சீனாவின் பொருளாதாரம் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க ஆறு மடங்கு பெரியது. ஆனாலும் உலக அரங்கில் புட்டீனும் ஜின்பிங்கும் ஒருவருக்கு ஒருவர் இணையானவர்களாக செயற்படுகின்றார்கள்.  

இரசிய சீன கூட்டுப் போர்ப்பயிற்ச்சி

Vostok 2018என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியை இரசியாவும் சீனாவும் செய்யதனVostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய் மிகப்பெரிய படைபயிற்ச்சி இதுவாக அமைந்தது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபட்டன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி நடந்தது. Tsentr-2019 (Center-2019) என்னும் பெயரில் 2019 செப்டம்பர் 16-21 வரை இரசியாவும் சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான், கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்ஹ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளும் இணைந்து படைப்பயிற்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தன.

பொருளாதார ஒத்துழைப்பு

2001-ம் ஆண்டில் $10.7பில்லியனாக இருந்த இரசிய-சீன வர்த்தகம் 2021இல் 14 மடங்காக அதிகரித்து $140பில்லியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 35% அதிகரித்தது. இரசியா தனது ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க முயல்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரசியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நடுவண் ஆசிய நாடுகளூடாகவும் நடக்கின்றது. புட்டீனின் பயணத்தில் இரசியாவின் தலைமையிலான யூரோ ஆசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt and Road Initiative) ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

நாட்டுறவிலும் உயர்ந்த நட்பு

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவிலும் பார்க்க ஜின்பிங்கிற்கும் புட்டீனிற்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்கின்றது. இருவரும் தத்தம் நாடுகளைத் தாமே உயிருள்ளவரை ஆளவேண்டும் என விரும்புகின்றார்கள். இருவரும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் மனித உரிமை என்னும் பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றன என இருவரும் கருதுகின்றனர். நேட்டோ விரிவாக்கத்தை இரசியா எதிர்ப்பதை ஜீ ஜின்பிங் ஆதரிக்கின்றார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றார் புட்டீன்.

சீனாவிற்கு சாதகமான உறவா?

இரசிய சீன உறவு சீனாவிற்கு இரசியாவிலும் பார்க்க அதிக நன்மையளிப்பதாக இருக்கின்றது என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவரின் கவனம் முழுமையாக சீனாவின் பக்கம் போகாமல் உக்ரேன் பக்கமும் போகச் செய்வதாக புட்டீன் உக்ரேனுக்கு எதிராகச் செய்யும் படை நகர்வுகள் அமைந்துள்ளன. பராக் ஒபாமா ஆசிய சுழற்ச்சி மையம் என்ற முன்னெடுப்பைச் செய்ய முயன்றபோது இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்ததால் அவர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா பன்னாட்டுக் கடல் பிராந்தியம் எனக் கருதும் தென் சீனக் கடலில் சீனா இரு செயற்கைத் தீவுகளை அமைத்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு எதிராகச் செய்ய முயலும் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்கு சீனாவில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரு படி உறவை உயர்த்தும் கூட்டறிக்கை

2021 ஜனவரியில் சீனாவின் ஊடகத்தில் இரசிய அதிபர் புட்டீன் எழுதிய Russia and China: A future-oriented strategic partnership என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இரசிய சீன உறவின் மேம்பட்ட நிலைக்கு சான்றாகி நிற்கின்றது. 2022 பெப்ரவரி 4-ம் திகதி இரு நாட்டுத் தலைவர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐயாயிரத்தி முன்னூறுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்த நீண்ட அறிக்கையில்:

1. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது உள்ள ஒன்றிற்கொன்று நன்மையளிக்கும் சிறந்த உறவை தொடர்ந்தும் பேணுவதும் மேம்படுத்துவதும்;

2. இரசியாவின் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt & Road Initiative) இணைந்து செயற்படுவது.

3. ஆர்க்டிக் வலயத்தில் இணைந்து செயற்படுவது.

4. இரு நாடுகளும் உலக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவாலையிட்டு கரிசனை கொண்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இன்னொரு நாட்டின் பாதுகாப்பை பலியிடக் கூடாது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

5. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இரு நாடுகளும்

அறம்சார் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் விதிகளுக்கமைந்த உலக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.

6. நேட்டோ விரிவாக்கத்தை இரு நாடுகளும் எதிர்க்கின்றன. (உக்ரேன் என்ற வார்த்தையே அந்த கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.)

7. இரசியா-சீனா-இந்தியா என்றவடிவத்தில் ஒத்துழைப்பை விரும்புகின்றோம்.

8. கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒத்துழைக்க விரும்புகின்றோம்.

இரசியாவும் சீனாவும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது அவற்றின் பொது எதிரிகளுக்கு பெரும் சவாலாகும். பல நட்புக்களின் வலிமையை பொது எதிரியே முடிவு செய்கின்றான். அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குளிகால ஒலிம்பிக்-2022இல் நடுங்குகின்றது.

இரசிய சீனக் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.bilaterals.org/?joint-statement-of-the-people-s

Thursday, 3 February 2022

அமெரிக்கத்தாக்குதலில் ஐஎஸ் தலைவர் தற்கொலை

 

அமெரிக்காவின் உலங்கு வானூர்திகளு தாக்குதல் ஆளிலிவிமானங்களும் செய்த தாக்குதலில் ஐ எஸ்  எனப்படும் இஸ்ல்லாமிய அரசு  அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 03-02-2022 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 


சிரியாவின் வட மேற்குப் பகுதியில் துருக்கியை ஒட்டியுள்ள இத்லிப் மாகாணத்தின் Atmeh என்னும் கிராமத்தில் ஒலிவ் மரங்களால் சூழப்பட்ட ஒரு மூன்று மாடிக்கட்டிடத்தில் ஐ எஸ் தலைவர் அல்-குரேஷி தங்கியிருந்தார். அவரது வீட்டின் மீது அமெரிக்கச் சிறப்புப் படையணியினர் அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தியபோது கட்டிடத்தின் உள்ளிருந்து பெரிய குண்டு வெடிப்பு நடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. கட்டிடம் முற்றுகையிடப்பட்டுள்ளது சரணடையுங்கள் என்ற உரத்த அறிவிப்பைக் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். அல் குரேஷி செய்த தற்கொலைக் குண்டு வெடிப்பினால் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா தெரிவித்தது.

தாக்குதலுக்கு முன்னர் அல்-குரேஷி இருந்த வீட்டைச் சுற்றவர உள்ள வீடுகளின் முன்னர் உலங்கு வானூர்தியால் இறக்கப்பட்ட அமெரிக்கப் படையினர் அவ்வீடுகளில் உள்ள பெண்களையும் சிறுவர்களையும் வெளியேறும் படி பணித்தார்கள். 

 2019-ம் ஆண்டின் பின்னர் சிரியாவில் அமெரிக்கப் படையினர் செய்த இந்தத் தாக்குதல் இரண்டு மணித்தியாலங்கள் நடந்தது. கட்டிடத்தின் சிதைபாடுகளுக்குள் இருந்து கொல்லப்பட்ட நான்கு பெண்களினதும் ஆறு சிறுவர்களினதும் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 13 பேர் அங்கு கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. தாக்குதல் செய்த இருபத்தி ஐந்து அமெரிக்கப் படையினரும் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.


குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட சிரியாவில் உள்ள கொபானி நகரத்தில் உள்ள வான்படைத்தளத்தில் இருந்தே அமெரிக்க உலங்கு வானூர்திகள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.  குர்திஷ் போராளிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியக் குடியரசுப் படையினரின்(Syrian Democratic Force) உச்தவியுடன் தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. 

தமது இருப்பிடங்களை மிக இரகசியமாகவும் அடிக்கடி மாற்றிக் கொண்டும் வாழும் ஐ எஸ் அமைப்பின் தலைவரை ஒரு துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தமை அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். 

ஈராக்கிலும் சிரியாவிலும் 2010களில் குர்திஷ் மக்களை ஐ எஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்தனர். அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக கடும் தாக்குதல் செய்து வருகின்றனர். 

2019-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கியரான அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை தமது தலைவராக ஐ எஸ் அமைப்பின் சுரா சபை தெரிவு செய்தது. 

பல்லாயிரக் கணக்கான யதீஷிய பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிய ஐ எஸ் அமைப்பின் தலை கொய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே. அமெரிக்காவின் திமிர் அதிகரிக்கின்றது என்பது தான் கவலைக்குரியது.

Wednesday, 2 February 2022

அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய சீன ஹைப்பர்சோனிக் விஞ்ஞானி

 



ஹொங் கொங்கில் இரகசியமாகச் செயற்பட்டு வந்த பிரித்தானிய உளவுப் பிரிவான எம்.ஐ.16இன் உதவியுடன் சீனாவின் ஹைப்பர்சோனிக் (மீயுயர்-ஒலிவேக) ஏவுகணைத்துறையில் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் காத்திரமான இரகசியங்களுடன் அமெரிக்காவிற்கு தப்பி ஓடியுள்ளார். Aviation Industry Corporation of China என்ற படைத்துறையைச் சேர்ந்த சீன நிறுவனத்தின் hypersonic glide vehicle உருவாக்கும் திட்டத்தில் இவரும் பணிபுரிந்திருந்தார். சீனாவின் இரண்டாயிரம் மைல்கள் பாயக்கூடிய DF-17 ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மேற்கு நாடுகள் 5-ஜீ அலைக்கற்றையை நடை முறைப்படுத்துவதில் திணறிக் கொண்டிருக்கையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையையும் தாண்டி சென்றுள்ளது. படைத்துறையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவது அதன் படைவலிமையை பலவகையில் முன்னேற்றிக் கொன்டிருக்கின்றது. செய்மதி, தொழில்நுட்பம், ஏவுகணைத்தொழில்நுட்பம், அலைக்கற்றைத் தொழில்நுட்பம், துளிம இயந்திரவியல் (quantum mechanics), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆகியவற்றை இணைத்த படைக்கலன்களை உருவாக்குவதில் சீனா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் கனவு 2030இல் தன்னை ஒரு ஈடு இணையற்ற வல்லரசாக்க வேண்டும் என்பதே.

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, இரண்டாவது பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் எனவும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் எனவும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை. அதை எப்படித்தடுப்பது என சீனாவின் போட்டி நாடுகள் தீவிர முயற்ச்சி செய்வதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் முக்கிய பகுதியான மிதவை வண்டி (Glide Vehicle) தொழில்நுட்பம், ஏவுகணைகளை (Missiles) ஏவூர்திகளில் (Rockets) இணைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சீனாவில் இருந்து வெளியேறிய விஞ்ஞானி அறிவும் தகவல்களும் கொண்டிருந்தார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமானதாகும். அத்துடன் மிதவை வண்டி தொழில்நுட்பம் அந்த ஏவுகணையை எதிர்பாராத பதையில் இட்டுச்செல்வதால் அதை சுட்டு வீழ்த்துவதும் கடினம். இந்த தொழில்நுட்பம் பற்றி அறிந்த சீன விஞ்ஞானிக்கு உரிய பதவி உயர்வை சீனாவின் பொதுவுடமைக் கட்சி வழங்காமையினால் அவர் கடும் விரக்தியடைந்திருந்தாராம்.

ஏவூர்திகளில் மிதவை வண்டிகளையும் ஏவுகணைகளையும் இணைக்கும் தொழில்நுட்பம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/10/rockets.html

நாடு தாவிய சீன விஞ்ஞானி ஓர் உயர்தர விஞ்ஞானி அல்லர். அவரு நடுத்தர நிலையில் உள்ள ஒருவரே. ஆனாலும் அவர் கடத்திக் கொண்டு செல்லும் தகவல்கள் அவரிலும் பார்க்க பெறுமதி மிக்கதாக இருக்கும். பிரித்தானியாவில் கல்வி கற்ற அந்த சீன விஞ்ஞானி ஒரு துடுப்பாட்டப் பிரியருமாகும். ஹொங் கொங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த பிரித்தானிய எம்.ஐ.16இன் உளவாளியுடன் அவர் தொடர்பு கொண்டு தனக்கும் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மேற்கு நாட்டில் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாராம். அத்தக் கோரிக்கை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயிடம் தெரிவிக்கப்பட்டதாம். உடனே இரண்டு அமெரிக்க உளவாளிகளும் மூன்று பிரித்தானிய உளவாளிகளும் அந்த விஞ்ஞானியையும் அவரது குடும்பத்தினரையும் சீனாவில் இருந்து வெளியேற்றத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களாம்.

2021 ஓகஸ்ட் மாதம் இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானி ஒருவர் துரோகச் செயலுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். எப்படிப்பட்ட துரோகச் செயல் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவர் தொழில்நுட்பத்தகவல்களை இரசியாவின் போட்டி நாடுகளுக்கு விற்பனை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சீனா விஞ்ஞானியை கடும் ஆபத்துக்களுக்கு நடுவில் கடத்திச் சென்றமை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிலும் பார்க்க சீனா முன்னிலையில் இருக்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது. சீன விஞ்ஞானி கொண்டு வரும் தகவல்கள் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உற்பத்தியைத் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Tuesday, 1 February 2022

இலங்கையின் கடன் நெருக்கடி தீர ஆலோசனைகள்

 


இலங்கை கடன் நெருக்கடி இப்போது தீர்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அதற்காக சில ஆலோசனைகள்:

இலங்கை நடுவண் வங்கியின் முன்னர் ஓர் இலட்சுமி சிலையை வைத்து அதற்கு ஆறுகாலப் பூசை செய்யவும்.

ஒவ்வொரு நாணயக்குற்றியிலும் தாளிலும் குபேரனின் உருவத்தை சேர்க்கவும்

அட்சய திருதியையிலன்று உலகச் சந்தையில் தங்கத்தை வாங்கி வைக்கவும்.

தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்‌ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது மிகவும் பயன் தரும். தீபாவளி அன்று மாலை குபேர பூசை செய்யவும் 16 விளக்குகள் நெய்யினால் ஏற்றிக்கொள்ளவும். மஹாலஷ்மிக்கு அர்ச்சனைக்கு வில்வம் இலை,இல்லையெனில் தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் இல்லையென்றால் லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தவும்

சக்கரை பொங்கல், பால் தேன், சிறிது நெய் ஆகியவற்றை நெய்வேத்தியமாகப் படைத்து இந்த மந்திரத்தைச் 108 தடவை உச்சரிக்கவும்:

ராஜாதி ராஜாய IMF ஸாஹிநே

நமோ வயம் வைஸ்ரவணாய WORLD BANK குர்மஹே!

ஸ மே காமாந் காம காமாய ADBANK மஹ்யம்

கர்மேஸ் வர வைஸ் ரவணாய PB of China ததாது!

குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!


வங்கிகளை வாஸ்துப்படி மாற்றி அமைக்கவும்.

அலரி மாளிகையின் குபேர மூலையில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை ஒரு மஞ்சள் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி வைக்கவும்.

இலங்கையின் சாதகத்தில் கடன் தொல்லைக்குரிய ஆறம் அதிபனாகிய சீனேஸ்வரனுக்கு சாந்தி செய்யவும்.

இலங்கைப் பொருள்களை உலகில் உள்ள அனைவரும் வாங்க உலக கொள்வனவாளர்களை வசியம் செய்யவும்.

இலங்கைக்கு கடன் கொடுத்த சீனாவிற்கு எதிராக பில்லி, சூனியம் செய்யவும்.


Monday, 31 January 2022

இரசியாவிற்கு எதிரான பொருளாதார தடை பயன் தருமா?

  



உக்ரேன் எல்லையில் இரசியா மொத்தமாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட 56 முதல் 70 வரையிலான உத்திசார் சமரணிகளை (Battalion Tactical Group) நிறுத்தி வைத்துக் கொண்டு தாம் உக்ரேனை ஆக்கிரமிக்கப் போவதில்லை எனச் சொல்கின்றது. நேட்டோ அமைப்பில் உக்ரேனை இணைக்கக் கூடாது, இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளில் குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பவை உள்ளிட்ட பல நிபந்தனைகளைக் கொண்ட ஓர் ஒப்பந்த நகலை இரசியா ஒரு தலைப்பட்சமாகத் தயாரித்து அதில் நேட்டோ நாடுகள் கையொப்பமிட வேண்டும் என இரசியா நிர்ப்பந்திக்கின்றது. மொத்தத்தில் உக்ரேனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நேட்டோவை இரசியா மிரட்டுகின்றது.

இரசியா வேண்டுவது

உக்ரேனை மட்டுப்படுத்தப் பட்ட இறைமையுள்ள நாடாகவும் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும் இரசியாவிற்கான கவசப் பிரதேசமாக இருக்கக் கூடியதாக மற்றுவதற்காகவே இரசிய அதிபரு புட்டீன் தன் படைநகர்வுகளைச் செய்துள்ளார். 2000-ம் ஆண்டே இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறையை ஈடு இணையற்றதாக மேம்படுத்தும் இருபது ஆண்டு திட்டத்தை வகுத்திருந்தார். அத்திட்டம் 2020இல் நிறைவேற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் போல் மீளவும் ஒரு வலிமை மிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் உக்ரேனிய எல்லையில் இரசியப்படைகள் குவிப்பது ஆரம்பமானது. அது 2021இன் இறுதியில் ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் டொன்பாஸ் பிரந்தியத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு பிரிவினைவாதப் போர் நடக்கின்றது. அதை ஒரு தனிநாடாக இரசியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்லவில்லை. அங்குள்ள அரசுக்கு ஒரு சிறப்பு நிலை உருவாக்குவதும் இரசியாவின் நோக்கமாக இருக்கின்றது. உக்ரேனை இரசியாவில் இருந்து பாதுகாக்க நேட்டோப் படைகள் களமிறங்க மாட்டாது என நேட்டோ தெரிவித்துள்ளது. இரசியா தனது நிலப்பரப்பில் மட்டுமல்ல தனது நட்பு நாடான பெலரஸிலும் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள கிறிமியாவிலும் கருங்கடலிலும் அஜோவ் கடலிலும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தன் படையினரைக் குவித்து வைத்துள்ளது.

ஏவுகணைப் பிரச்சனை

பாயும் தூரங்களை அடிப்படையாக வைத்து மரபுவழி ஏவுகணைகளும் அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. நடுத்தரதூர ஏவுகணைகள் 1000-5500 கிமீ (620-3420மைல்)

2. குறுந்தூர ஏவுகணைகள் 500-1000கிமீ (310-620மைல்)

3.  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இவை 5500கிமீ (3400) மைல்களுக்கு மேல் பாயக் கூடியவை.

அமெரிக்காவும் இரசியாவும் இந்த அணுக்குண்டு உற்பத்தியை மட்டுப்படுத்த சீனா அவற்றின் உற்பத்தியை அதிகரித்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்கா நடுத்தர தூர ஒப்பந்த த்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்கா இரசியாவின் எல்லை நாடுகளில் நடுத்தர தூர அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பது இரசியாவின் வேண்டுகோள்களில் ஒன்றாக இருக்கின்றது.

பொருளாதாரத் தடைகளுக்கான முன்னேற்பாடுகள்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் அதற்கு எதிராக கொண்டு வரப்படவிருக்கும் பொருளாதாரத் தடை எல்லாத் தடைகளிற்கும் தாயாக அமையும் என அமெரிக்கா தெரிவிக்கின்றது. அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினரகள் இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கான சட்ட மூலத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். சில பொருளாதாரத் தடைகள் உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்ய முன்னரே நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை கத்தியில் நடப்பதைப் போலாகும். இரசியாவின் எரிபொருள் உற்பத்தியையும் ஏறுமதியையும் பாதிக்க்க கூடிய வகையில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் அது அமெரிக்கா உட்பட உலக பொருளாதாரத்தை பாதிக்கும். இரசியாவில் பணவீக்கம், பங்குச் சந்தைச் சரிவு, போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத் தடை செய்வது பற்றி தீவிர ஆலோசனகள் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் செய்யப்படுகின்றன. இரசியாவின் பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத்தடை கொண்டு வருவதுடன் புட்டீன் உட்பட இரசியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் மீதும் பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்படலாம். இரசிய திறைசேரி விற்பனை செய்யும் கடன் முறிகள் மீதான முதலீட்டிற்கும் தடை விதிக்கப்படலாம். பிரித்தானியாவிலும் 2022 பெப்ரவரி முதலாம் திகதி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டு வருவதற்கான சட்டஙகள் நிறைவேற்றப்படலாம். இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் அதற்கான ஏற்றுமதிகள் மீது தடை விதிக்கப்படலாம். கொவிட்-19 தொற்று நோயினால் உருவான பல பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல் இருக்கும் மேற்கு நாடுகளுக்கும் இரசியா மீதான பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கல்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான Society for Worldwide Financial Telecommunication (SWIFT)இல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம். இரசியா மீது ஒரு பொருளாதாரப் போர் தொடுக்க அமெரிக்கா முயன்கின்றது. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை ஆக்கிரமித்த போதும் அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இரசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இரசியா விட்டுக்கொடுக்கவில்லை.

தயார் நிலையில் உள்ள இரசியா

2014இன் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்துள்ளது. தற்போது அது $639 பில்லியனாக உள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 20% மட்டுமே. அமெரிக்காவின் கடன் 133% ஆகும். 2014இன் பின்னர் இரசியா தனது உள்நாட்டு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை பெருமளவு அதிகரித்துள்ளது. சீனாவிற்கான இரசிய ஏற்றுமதி ஆண்டுக்கு $100பில்லியனாக உயர்ந்துள்ளது. சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் இரசியா அதிகரித்துள்ளது. கணினிகளின் இதயமான குறைகடத்திகள் (Semi-conductors) உற்பத்தியில் அமெரிக்கா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவற்றை இரசியாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தால் அதில் இருந்து விடுபட இரசியாவும் சீனாவும் இணைந்து செயற்படலாம்.

இரசியர்கள் பல நெருக்கடிகளை தாங்கி நிற்கும் ஆற்றலும் தேசப்பற்றும் உள்ளவர்கள். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படும் இரசியர்கள் இரசிய ஆட்சியாளர்கள் மீது வெறுப்புக் கொள்வார்கள் என அமெரிக்கா நினைக்கின்றது. அதேவேளை இரசியர்களுக்கு மேற்கு நாடுகள் மீது உள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.

Monday, 24 January 2022

13என்னும் முடமான திருநங்கைதான் மணமகளா?


 ஈழத்தமிழன் என்னும் இளைஞன் தமிழீழம் என்னும் பெண்ணைக் காதலித்தான் அவர்களின் காதல் திருமணம் நோக்கி முன்னேறுவதைப் பொறுக்காத வில்லன் சிங்களவன் இந்தியா என்னும் அடியாளைத் தன் கைக்கூலியாக்கினான். ஈழத்தமிழன் காதல் திருமணம் செய்தால் தனது மகன்களும் காதல் திருமணம் செய்வார்கள். அதனால் வரதட்சணை கிடைக்காமல் தனது பிழைப்பு நாறிப்போகும் என உணர்ந்த இந்தியா எனும் அடியாள் ஈழத்தமிழனே உனக்கு மணமகள் தமிழீழம் அல்ல பதின்மூன்றே உனக்குரியவள் அவளையே நீ திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டினான். பதின்மூன்று ஒரு முடமான திருநங்கை என்பதால் அவளைத் திருமணம் செய்ய மாட்டேன் என ஈழத்தமிழன் மறுத்து விட்டான். ஆனாலும் இந்தியா என்ற அடியாளும் சிங்களவன் என்ற வில்லனும் மணமக்கள் சம்மதம் இல்லாமலே தட்டுக்களை மாற்றி திருமண நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால் ஈழத்தமிழன் தமிழீழம் என்னும் காதலியை உறுதியாக காதலித்தான் அவனது காதல் கைக்கூடும் வேளையிலே இந்தியா என்னும் கூலி அடியாள் ஈழத்தமிழனை மறைந்திருந்து தாக்கி அவனது சொத்துக்களை எல்லாம் அழித்து அவனை ஒரு பிச்சைக்காரன் என்ற நிலைக்கு தள்ளினான். பின்னர் பிச்சைக்காரனான உனக்கு இனி எவனும் பெண் கொடுக்க மாட்டான் நீ பதின்மூன்றையே திருமணம் செய் என்றான். எல்லாம் இழந்த ஈழத் தமிழன் தன் காதலை மட்டும் இழக்கவில்லை. 

தமிழீழத்தின் மீதான காதலில் ஈழத்தமிழன் உறுதியாக இருப்பதால் சினமடைந்த இந்தியா என்னும் கூலி அடியாள் ஈழத்தமிழனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு Quarterஉம் Side dishஉம் கொடுத்து தன் பக்கம் இழுத்து நீங்கள் எல்லோரும் ஈழத்தமிழனை நிர்ப்பந்தித்து அவனை பதின்மூன்றைத் திருமணம் செய்து வைக்கும்படி என்னை மன்றாடும்படி செய்யுங்கள் என்றான். அது முடியாமல் போனதால் Quarterஇற்கும் Side dishஇற்கும் விலை போனவர்கள் எல்லோரும் கூடி இந்தியா என்னும் அடியாளிற்கு ஈழத்தமிழனை பதின்மூன்று என்னும் முடமான திருநங்கையை திருமணம் செய்து வைக்கும் படி கடிதம் எழுதினார்கள். 

சிங்களத்தின் அடியாளாகிய இந்தியா ஊரில் உள்ள எல்லாக் திருமணத்தரகர்களிடமும் ஈழத்தமிழனுக்கு பதின்மூன்று தான் நிச்சயிக்கப்பட்ட மணமகள் அதை விட அவனுக்கு வேறு பெண் இல்லை என நம்ப வைத்துள்ளான். சிங்களவன் என்னும் வில்லனின் நிலத்தில் எப்போதும் கண் வைத்திருந்த அமெரிக்கா என்னும் கட்டப் பஞ்சாயத்துக்காரன் இந்தியா என்னும் அடியாளுடன் இணைந்து செயற்படுகின்றான். தமிழீழத்தை ஈழத்தமிழனுக்கு திருமணம் செய்து வைத்தால் சிங்களவன் என்னும் வில்லன் கதை முடிந்து விடும் என இருவரும் மிரண்ட்டி அவன் காணிகளை அபகரிக்கின்றார்கள்.

இத்தால் சகலரும் அறிய வேண்டியது:

1. இந்தியாதான் ஈழத்தமிழனின் முதலாம் எதிரி

2. Quarterஇற்கும் Side dishஇற்கும் விலை போனவர்கள் ஈழத்தமிழனின் இரண்டாம் எதிரிகள்

3. சிங்களவன் ஈழத்தமிழனின் மூன்றாம் எதிரி

4. அடியாள் இந்தியாவின் அசிங்க முகத்தை எல்லா திருமணத் தரகர்கள் மத்தியிலும் ஈழத்தமிழன் அம்பலப்படுத்த வேண்டும்.

5. சிங்களவனின் அடியாள் இந்தியாவின் எதிரிகளை ஈழத்தமிழன் தேடிச்சென்று நண்பர்களாக்கி அவர்களை தனக்கும் தமிழீழத்திற்கும் திருமணம் செய்ய உதவ வைக்க வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் என்னை மன்னிப்பார்களாக

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...