Wednesday 2 February 2022

அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய சீன ஹைப்பர்சோனிக் விஞ்ஞானி

 



ஹொங் கொங்கில் இரகசியமாகச் செயற்பட்டு வந்த பிரித்தானிய உளவுப் பிரிவான எம்.ஐ.16இன் உதவியுடன் சீனாவின் ஹைப்பர்சோனிக் (மீயுயர்-ஒலிவேக) ஏவுகணைத்துறையில் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் காத்திரமான இரகசியங்களுடன் அமெரிக்காவிற்கு தப்பி ஓடியுள்ளார். Aviation Industry Corporation of China என்ற படைத்துறையைச் சேர்ந்த சீன நிறுவனத்தின் hypersonic glide vehicle உருவாக்கும் திட்டத்தில் இவரும் பணிபுரிந்திருந்தார். சீனாவின் இரண்டாயிரம் மைல்கள் பாயக்கூடிய DF-17 ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மேற்கு நாடுகள் 5-ஜீ அலைக்கற்றையை நடை முறைப்படுத்துவதில் திணறிக் கொண்டிருக்கையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையையும் தாண்டி சென்றுள்ளது. படைத்துறையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவது அதன் படைவலிமையை பலவகையில் முன்னேற்றிக் கொன்டிருக்கின்றது. செய்மதி, தொழில்நுட்பம், ஏவுகணைத்தொழில்நுட்பம், அலைக்கற்றைத் தொழில்நுட்பம், துளிம இயந்திரவியல் (quantum mechanics), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆகியவற்றை இணைத்த படைக்கலன்களை உருவாக்குவதில் சீனா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் கனவு 2030இல் தன்னை ஒரு ஈடு இணையற்ற வல்லரசாக்க வேண்டும் என்பதே.

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, இரண்டாவது பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் எனவும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் எனவும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை. அதை எப்படித்தடுப்பது என சீனாவின் போட்டி நாடுகள் தீவிர முயற்ச்சி செய்வதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் முக்கிய பகுதியான மிதவை வண்டி (Glide Vehicle) தொழில்நுட்பம், ஏவுகணைகளை (Missiles) ஏவூர்திகளில் (Rockets) இணைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சீனாவில் இருந்து வெளியேறிய விஞ்ஞானி அறிவும் தகவல்களும் கொண்டிருந்தார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமானதாகும். அத்துடன் மிதவை வண்டி தொழில்நுட்பம் அந்த ஏவுகணையை எதிர்பாராத பதையில் இட்டுச்செல்வதால் அதை சுட்டு வீழ்த்துவதும் கடினம். இந்த தொழில்நுட்பம் பற்றி அறிந்த சீன விஞ்ஞானிக்கு உரிய பதவி உயர்வை சீனாவின் பொதுவுடமைக் கட்சி வழங்காமையினால் அவர் கடும் விரக்தியடைந்திருந்தாராம்.

ஏவூர்திகளில் மிதவை வண்டிகளையும் ஏவுகணைகளையும் இணைக்கும் தொழில்நுட்பம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/10/rockets.html

நாடு தாவிய சீன விஞ்ஞானி ஓர் உயர்தர விஞ்ஞானி அல்லர். அவரு நடுத்தர நிலையில் உள்ள ஒருவரே. ஆனாலும் அவர் கடத்திக் கொண்டு செல்லும் தகவல்கள் அவரிலும் பார்க்க பெறுமதி மிக்கதாக இருக்கும். பிரித்தானியாவில் கல்வி கற்ற அந்த சீன விஞ்ஞானி ஒரு துடுப்பாட்டப் பிரியருமாகும். ஹொங் கொங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த பிரித்தானிய எம்.ஐ.16இன் உளவாளியுடன் அவர் தொடர்பு கொண்டு தனக்கும் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மேற்கு நாட்டில் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாராம். அத்தக் கோரிக்கை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயிடம் தெரிவிக்கப்பட்டதாம். உடனே இரண்டு அமெரிக்க உளவாளிகளும் மூன்று பிரித்தானிய உளவாளிகளும் அந்த விஞ்ஞானியையும் அவரது குடும்பத்தினரையும் சீனாவில் இருந்து வெளியேற்றத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களாம்.

2021 ஓகஸ்ட் மாதம் இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானி ஒருவர் துரோகச் செயலுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். எப்படிப்பட்ட துரோகச் செயல் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவர் தொழில்நுட்பத்தகவல்களை இரசியாவின் போட்டி நாடுகளுக்கு விற்பனை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சீனா விஞ்ஞானியை கடும் ஆபத்துக்களுக்கு நடுவில் கடத்திச் சென்றமை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிலும் பார்க்க சீனா முன்னிலையில் இருக்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது. சீன விஞ்ஞானி கொண்டு வரும் தகவல்கள் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உற்பத்தியைத் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...