Tuesday, 13 October 2020

அமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021

 


2016-ம் ஆண்டு தைவான் சுதந்திரமான நாடு என்ற கொள்கையுடைய சாய் இங் வென் அதன் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து சீனா தைவானை தனது ஒரு மாகாணம் என வலியுறுத்துவது அதிகரித்தது. 2019 ஜனவரியில் அமைதியான வழியில் அல்லது அது முடியாதவிடத்து ஒரு போர் மூலமாகாவேனும் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் சூளுரைத்தார். அதன் பின்னர் தைவான் வான்பரப்புக்கு சீன விமானங்களும் அதன் கடற்பரப்பினுள் சீனப் போர்க்கப்பல்களும் அத்து மீறுவது அடிக்கடி நடக்கின்றது. 2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது.



தைவானின் முக்கியத்துவம்

சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்தே ஆக வேண்டும். 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும். 2021-ம் ஆண்டு சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சி செய்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.


சீனத் தாக்குதல்கள்

சீனா தைவானைக் கைப்பற்ற முன்னர் நான்கு பெரும் தாக்குதல்களைச் செய்ய வேண்டும். முதலாவது அமெரிக்க செய்மதிகளை ஏவுகணைகள் மூலம் அழிப்பதுடன் இணையவெளித் தாக்குதல் மூலம் அமெரிக்கப்படையினரின் தொடர்பாடல்களை நிர்மூலம் செய்ய வேண்டும். இரண்டாவது சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சீனப் பொருளாதாரதரத்தின் இதயமான கைத்தொழிற்பேட்டைகளை இலக்கு வைத்து தைவான் தனது மண்ணில் நிறுத்தி வைத்துள்ள ஏவுகணை நிலைகளை அழிக்க வேண்டும். மூன்றாவது அமெரிக்கா பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், ஜப்பான் கடல் ஆகியவற்றில் சீனாவை இலக்காகக் கொண்டு வைத்துள்ள பல படைத்தளங்களை அழிக்க வேண்டும். நான்காவதாக தைவான் நீரிணையில் உள்ள அமெரிக்க கடற்படையை அழிக்க வேண்டும். இறுதி நகர்வாக சீனா பெருமளவு படையினரை தனது கடற்கலன்கள் மூலம் 161கிமீ நீளமான தைவான் நீரிணையைக் கடந்து தைவானில் தரையிறக்கி தைவானைக் கைப்பற்ற வேண்டும்.

அமெரிக்காவின் இரண்டு தீவுச் சங்கிலிகள்.


யொக்கோசுக்கா, ஒக்கினோவா ஆகிய ஜப்பானியத் தீவுகள், தென் கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் தீவுகள் ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. ஜப்பானியத் தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவுக் கூட்டம், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மீது சீன கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் ஆனால் முற்றாக அழிக்க முடியாது. சீனாவிற்கு சீனாவைச் சுற்றியே ஒரு நுழைவுமறுப்பு/இடமறுப்பு (Anti-access/Area denial) தடையைப் போடவே இந்த இரண்டு சங்கிலிகளையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் முதற்கட்ட தாக்குதல்

அமெரிக்காவைப் பொறுத்தவரை போர் இரண்டு கட்டங்களாக இருக்கும். முதற்கட்டத்தில் அமெரிக்க கடற்படையும் வான் படையும் சீனாமீது பதில் தாக்குதல் செய்யும் போது நடக்கும் போரில் சீனாவின் கடற்படை முற்றாக அழிக்கப்படும். ஒரு போர் என்று வரும்போது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் ஒரு மணித்தியாலம் கூட நின்று பிடிக்காது என்பது நிபுணர்களின் கணிப்பு. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மீது சீனா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசும். போரில் அமெரிக்கா ஈடுபடுத்தும் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களில் இரண்டை சீனா அழித்துவிடும் முன்றாவது சேதங்களுடன் விலகிச் செல்லும். சீனாவின் ஏவுகணைத் தளங்களை இந்த மோதலின் போது அமெரிக்கா இனம் கண்டு கொள்ளும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் சீனாவை நோக்கிப் பாயும் அவற்றில் பல சீனாவின் ரடார்களுக்கு பெரிய விமாங்களைப் போல் தோற்றமளித்து ஏமாற்றக் கூடியவை. ஆளில்லாப் போர்விமானங்கள் மீது சீன செய்யும் தாக்குதல்களை வைத்து அவற்றைத் தொடர்ந்து வரும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் சீனாவின் வான் பாதுகாப்பு முறைமையை முற்றாக அழித்து விடும். அதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ், குவாம் தீவு, ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் உள்ள அமெரிக்கப் படைக்கலங்கள் பெரும் அழிவைச் சந்தித்திருக்கும். அமெரிக்காவின் ஹவாய் தீவு மற்றும் மேற்குக்கரை ஆகியவற்றிலும் சீனா தாக்குதல் செய்திருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்காவில் குடிசார் சேவைகள் பல சீனாவின் இணையவெளித்தாக்குதலால் செயலிழந்து இருக்கும். உலகெங்கும் உள்ள பல அமெரிக்கப் படைத்தளங்களில் சீனாவின் தொலைதூர ஏவுகணைகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். அமெரிக்கப் பொருளாதார உற்பத்தி நிலைகள் பல செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்கா பெரிய இழப்பைச் சந்தித்து சீனாவின் தாக்குதல் திறனை அழிக்கும். அமெரிக்கப் படைகள் உலகப் பந்து எங்கும் பரந்து இருப்பதால் எல்லாவற்றையும் சீனாவால் அழிக்க முடியாது. சீனாவின் படைத்தளங்கள் யாவும் உலகப் பந்தைப் பொறுத்தவரை சிறு பகுதியில் மட்டுமே இருக்கின்றது.



மறைந்திருந்து வரும் F-35B

பொதுவாக விமானப் படைத்தளங்கள் பெரிய ஓடுபாதைகளுடன் இருக்கும் அவற்றை இனம் காண்பது எதிரிகளுக்கு இலகுவானதாக அமையும். ஆனால் அமெரிக்காவின் F-35B போர் விமானங்கள் குறுகிய தூரம் மட்டும் தரையில் ஓடி வானில் கிளம்ப வல்லன. அத்துடன் தரை இறங்கும் போது உலங்கு வானூர்தி போல் செங்குத்தாக இறங்க வல்லன அவற்றை அகலமான தெருவில் இருந்து வானில் பறக்க வைக்க முடியும். அதனால் விமானத் தளங்களில் இல்லாமல் வேறு மறைவிடங்களில் வைத்திருக்க முடியும். சீனாவைச் சுற்றவர உள்ள அமெரிக்கப் படை நிலைகளில் உள்ள பல போர் விமானங்கள் சீனத் தாக்குதலில் இருந்து தப்பி சீனாவை தாக்கச் செல்லும் போது அவற்றை சீனாவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும். அவற்றின் குண்டு வீச்சுக்களால் எஞ்சியுள்ள சீன படை நிலைகள் அழிக்கப்படும். F-35B போர் விமானங்களைச் தைவானிற்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலிமை அடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே தைவான் அவற்றை வாங்க விரும்பியது. ஆனால் சீனாவை அது கடும் சினப்படுத்தும் என்பதால் அது தவர்க்கப்பட்டது. அமெரிக்க சீன முரண்பாடு மோசமடையும் போது அது நடக்கலாம்.

அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தாக்குதல்

ஜப்பானியத் தீவுகளை சீனா தாக்குதல் செய்தபடியால் ஜப்பான் ஒரு தாக்குதல் போரை சீனாவிற்கு எதிராக செய்யக் களமிறங்கும். அதே போலவே தென் கொரியாவும் களமிறங்கும். ஒஸ்ரேலியா அமெரிக்காவிற்கு துணை நிற்கும். பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றை சீனாவிற்கு எதிராக களமிறக்கும். இந்தியா சீன எல்லைகளை நோக்கி படைகளை நகர்த்துவதன் மூலம் சீனாவின் கவனத்தை ஐதாக்கும். இந்திய விமானத் தளங்களில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களில் இருந்து பெருமளவு போர் விமானங்கள் வந்து இறங்கும். கொல்கத்தா துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படை நிலை கொள்ளும். தென் சீனக் கடலில் சீனா நிர்மானித்த செயற்கைத் தீவுகளை ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து குண்டுகள் வீசி அழிக்கும். சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி முற்றாகத் தடைபடும். பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகம் அமெரிக்க முற்றுகைக்கு உள்ளாகும். இரண்டாம் கட்டப் போர் சீனாவைத் திக்கு முக்காடச் செய்யும் படைநகர்வுகள் அதிகம் நடக்கும் தாக்குதல் நடக்காது. சீன மண்ணில் எந்த ஓர் அந்நியப் படையும் கால் வைக்க முடியாது. சீனா மீதான தாக்குதலைத் மேலும் தொடர்ந்தால் சீனா அணுக்குண்டைப் பாவிப்பேன் என மிரட்டும். அந்த நிலையில் போர் நிறுத்தப்படும்.

இரசியாவும் மற்ற நாடுகளும்

அமெரிக்க சீனப் போரின் ஆரம்பத்தில் இருந்தே இரசியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தும். சீனாவிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கும். ஆனால் போரில் இறங்காது. சீனாவிற்கான படைக்கலன் விற்பனையையும் இரகசியமாகவே மேற்கொள்ளூம். சீன மக்களுக்குத் தேவையான அதிதியாவசியத் தேவைகளை இரசியா தரைப்பாதையூடாக பகிரங்கமாக வழங்கும். இந்த சூழலை இரசியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்கலாம். வட கொரியா சீனாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கும் ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் செய்யாது. வியட்னாம் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும். வியட்னாம் சீன எல்லையில் தனது படைகளை நகர்த்தி சீனாமீதான அழுத்தத்தை அதிகரிக்கும். திபெத்தில் ஒரு மக்கள் எழுச்சியும் நடக்கும். இந்தியாவில் உள்ள திபெத்தியப் போராளிகள் சீனப் படைகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். நிலைமை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமைந்தால் இந்தியா சீனா கைப்பற்றிய தனது நிலங்களை மீட்கும் நகர்வுகளை மேற்கொள்ளும். தைவான் தன்னிடம் எஞ்சியுள்ள ஏவுகணைகளை சீனாவின் பொருளாதார நிலைகள் மீது ஏவும்.

அமெரிக்கா தைவானை அங்கீகரிக்கும் நிலையை நோக்கி நகர்கின்றது. 2020 ஒக்டோபர் ஆரம்பதில் அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் ஐம்பது பேர் அமெரிக்கா தைவானுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அமெரிக்கவிலும் தைவானிலும் அமெரிக்கா தைவானில் படைத்தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. சீனா தைவானைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகரும் போது தைவானை அமெரிக்கா ஒரு தனிநாடாக அங்கீகரித்து அங்கு தனது படைத்தளத்தை அமைக்க வேண்டி வரும்.

2021-ம் ஆண்டு தைவானைக் கைப்பற்றக் கூடிய அளவு வலிமை சீனாவிடம் இருக்காது. அமெரிக்காவை போர் தவிர்ந்த வேறு அரசுறவியல் நடவடிக்கைகள் மூலம் இரண்டு சங்கிலித் தீவுக் கூட்டங்களில் குறைந்தது அரைப் பங்கு தீவுகளில் இருந்தாவது அமெரிக்காவை வெளியேற்றி அங்கு சீனா படைத்தளங்கள் அமைத்த பின்னரே சீனாவால் தைவானைக் கைப்பற்றுவது பற்றி யோசிக்கலாம்.

Sunday, 11 October 2020

தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத வட கொரிய அதிபர்

  


வட கொரியாவின் பொதுவுடமைவாதத்தை கொள்கையாகக் கொண்ட தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழா 10/10/2020 சனிக்கிழமை பாரிய படை அணிவகுப்புடனும் பலவித படைக்கலன் காட்சிப்படுத்தலுடனும் கிம் இல் சங் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. 2017-ம் ஆண்டின் பின்னர் ஒரு படை அணிவகுப்பு நடந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் மேடைக்கு வரும்போது வாணவேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. வட கொரிய மக்கள் அவர் நீடூழி வாழ்க என கண்ணீர் மல்க குரல் எழுப்புவதை தொலைக்காட்சிகள் காண்பித்தன. வழமைக்கு மாறாக இந்த முறை படை அணிவகுப்பு இரவில் நடந்தது.

மிரட்டல் இல்லாத உரை

தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவில் 25 நிமிட உரையாற்றிய கிம் ஜொங் உன் தனது உரையில் அமெரிக்காவைப் பற்றியோ அதன் அதிபர் டிரம்பைப் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை என்பதுடன் அவர் எந்த ஒரு மிரட்டலையும் விடுக்கவில்லை. உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு தன் ஆறுதலையும் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர் விரவில் குணமடைய வேண்டும் என கிம் ஜொங் உன் செய்தி அனுப்பியிருந்தார். வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மக்களுக்காக பணிபுரிந்த படையினரை அதிபர் பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தனது நாட்டுப் படைக்கலன்கள் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே; நாம் எந்த ஒரு முற்கூட்டிய தாக்குதல்களையும் மேற்கொள்ள மாட்டோம்; ஆனால் எமது பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் போது எமது முழு வலுவையும் நாம் பாவிப்போம் என்றார்.



மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜொங் உன்

கொவிட்-19 தொற்று நோயால் சீன எல்லையை மூடியமை, சூறாவளி, வெள்ள பெருக்கு, பொருளாதாரத் தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரிய மக்களிடம் கிம் ஜொங் உன் மன்னிப்பு கேட்டார். கண்ணீரை அடக்கிக் கொள்ள அவர் அப்போது முயற்ச்சிப்பது போலிருந்தது. வட கொரியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்கு தான் காரணமல்ல வட கொரியாவின் எதிரிகள்தான் காரணம் என அவர் தனது மக்களுக்கு காட்ட முயன்றார் என சில விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



விம்பத்தை மாற்ற முயற்ச்சி

பொதுவாக வட கொரியா வெளிவிடும் காணொலிக் கீற்றுகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றை மறைமுகமாக உள்ளடக்கி இருக்கும். ஆனால் வட கொரியா அண்மையில் ஆங்கில மொழியில் வெளிவிட்ட காணொலிக் கீற்றி சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. வட கொரியாவின் மென்மையான பகுதியையும் செழிப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பன்னாட்டு அரங்கில் வட கொரியாவிற்கு இருக்கும் குளப்படிகாரன் என்ற விம்பத்தை மாற்றும் முயற்ச்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.



மிகப் பெரிய ஏவுகணை

75-ம் ஆண்டு விழாவில் எல்லாவற்றிற்கும் மேலாக கவனிக்கப்பட்டது அங்கு காட்சிப்படுத்தப் பட்ட உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை. 22சில்லுகள் கொண்ட ஒரு நீண்ட பார ஊர்தி அதைத் தாங்கிச் சென்றது. அது இதுவரை ஏவிப்பரிசோதிக்கப்படவில்லை. வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் (solid fuel) மூலம் இயங்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகளிலும் பார்க்க திண்ம எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகள் துரிதமாக நகர்த்தப்படக் கூடியவை. வட கொரியா 2017-ம் ஆண்டு பரிசோதித்த Hwasong -14 என்னும் கண்ட விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை 13,000கிமீ (8100மைல்) தூரம் 150கிலோ(330இறாத்தல்) எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிக் கொண்டு பாயக் கூடியது. அதனால் அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்க முடியும். தற்போது காட்சிப் படுத்தியது அதிலும் பெரிய தோற்றத்தைக் கொண்டது.

கருத்து வெளியிடாத தென் கொரியா

2020-10-10 சனிக்கிழமை வட கொரியா காட்சிப் படுத்திய ஏவுகணை பற்றி தென் கொரியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே வட கொரியா மேலும் வலிமையுள்ள ஏவுகணைகளை உருவாக்குவதாக தென் கொரியா தெரிவித்திருந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வட கொரியா தொடர்ந்து மேம்படுத்தப் பட்ட ஏவுகணைளை உருவாக்குவது ஏமாற்றமளிக்கின்றது என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தலை கருத்தில் கொண்டாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் வேளையில் ஏவுகணைப் பரிசோதனை எதையும் நடத்தி டொனால்ட் டிரம்பை சங்கடத்திற்க்கு உள்ளாக்கவோ ஆத்திரப்படுத்தவோ கிம் ஜொங் உன் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது.. ஒரே ஒரு கட்சியும் ஆளும் கட்சியுமான தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்வின் போதோ அல்லது அதற்கு ஓரிரு நாட்களின் முன்னதாகவோ பெரிய ஏவுகணைப்பரிசோதனையைச் செய்து உலகின் கவனத்தை கிம் ஜொங் உன் அவகளால் தன்பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதை வைத்து தன் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கக் கூடியவகையில் வட கொரியாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்பதை கிம் ஜொங் உன் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் வட கொரியா தனது ஏவுகணைகளை மேம்படுத்துவதைக் கைவிடாமல் இருக்கின்றது. பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் தொலைதூர ஏவுகணை தற்போது இருக்கும் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பத்தால் இடைமறிப்பதற்கு கடினமானதாகவிருக்கும். வட கொரியாவின் அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது.  அமெரிக்காவின் எந்தப் பாகத்திலும் அணுக்குண்டுகளை வீசக் கூடிய ஏவுகணைகள வைத்திருக்கும் வட கொரியா அமெரிக்காவை மிரட்டும் தன் முயற்ச்சியை மனம் தளராமல் தொடர்கின்றது.வ்

Wednesday, 7 October 2020

ஆர்மேனிய அஜர்பைஜானியப் போர்

  


2020-09-27-ம் திகதி ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் போர் ஆரம்பித்துள்ளது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதற்கான போர் இதுவாகும். இப்போர் இந்த இரு நாடுகளுக்கும் ஆதரவு கொடுக்கும் வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே முறுகலை உருவாக்கும். அதனால் இரு சிறிய நாடுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் என இப்போரை ஒதுக்கிவிட ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். ஆர்மேனியாவில் கிருத்தவர்களும் அஜர்பைஜானில் துருக்கிய மொழி பேரும் இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர் என்பதால் நிலைமை மேலும் சிக்கலாகின்றது.

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியின் வரலாறு

ஆர்மேனியா முன்பு ஈரானின் ஒரு பகுதியாக இருந்தது. ஈரானிடமிருந்து இரசியா அதைக் ச்கைப்பற்றி சோவியத் ஒன்றிய நாடாக்கியது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி மக்களில் பெரும்பான்மையினர் ஆர்மேனியர்கள். இருந்தும் அது அஜர்பைஜானுடன் 1921-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் திகதி இரசியப் பொதுவுடமைக் கட்சி நகர்னோ கரபார்க் மலைப்பகுதி ஆர்மேனியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது. ஆனால் மறுநாள் ஜோசப் ஸ்டாலின் தலையிட்டு அது அஜர்பைஜானுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவை மாற்றினார். அப்பிராந்தியத்தின் 94விழுக்காடு மக்கள் தொகையினர் ஆர்மினியர்களாக இருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரை ஆர்மேனியர்கள் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இரு நாடுகளிடையே மோதலை தேவை ஏற்படும் போது உருவாக்கலாம் என்ற சதித்திட்டம் இருந்ததாக நம்பப்படுகின்றது. பின்பு தொடர்ச்சியான குடியேற்றத்தால் ஆர்மேனியர்களின் தொகை 76விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்து அஜர்பைஜான் தனிநாடாகிய போது நகர்னோ கரபார்க் மலைப்பகுதி அஜர்பைஜானின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதன் படியே ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற நாடுகளும் அஜர்பைஜானை அங்கீகரித்திருந்த படியால் இன்று வரை உலகச் சட்டத்தின் படி அஜர்பைஜானுக்கே அந்தப் பிராந்தியம் சொந்தமானதாகும்.

தனிநாட்டுப் பிரகடனமும் போரும்

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் வாழும் ஆர்மேனியர்கள் தொடர்ச்சியாக அஜர்பைஜான் அரசால் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கப்பட்டும் கலாச்சார அடிப்படையில் அடக்கப்பட்டும் வந்த படியால் அவர்கள் ஆர்மேனியாவுடன் இணைய விரும்பினர். 1988இல் தமது பிரதேசத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்தனர். அஜர்பைஜானியப் படைகள் அங்கு தலையிட்டதைத் தொடர்ந்து ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் போர் மூண்டது. ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் 1988-1992வரை நடந்த போரில் ஆர்மேனியா நகர்னோ கரபார்க் மலைப்பகுதியையும் மேலும் நிலப்பரப்புக்களையும் ஆர்மேனியா கைப்பற்றியது. முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. 1994இல் இருந்து இரசியா தலையிட்டதால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆர்மேனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் நகர்னோ கரபார்க் மலைப்பகுதி தன்னாட்சி உள்ள பிரதேசமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் எரிபொருள் உற்பத்தியால் செல்வம் திரட்டிய அஜர்பைனான் தன் படைவலுவையும் பெருக்கிக் கொண்டது. இப்போது தான் இழந்ததை மீளக் கைப்பற்ற முயல்கின்றது. இரண்டு நாடுகளும் இரசியாவிடமிருந்து படைக்கலன்களைக் கொள்வனவு செய்கின்றன. இரண்டு நாடுகளுடனும் இரசியா பொருளாதாரத் தொடர்புகளை வைத்துள்ளது. ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உண்டு.

அஜர்பைஜானிற்கு துருக்கி ஆதரவு

அஜர்பைஜானிற்கும் துருக்கிக்கும் இடையில் கலாச்சார மற்றும் வரலாற்று அடிப்படையிலான தொடர்புகள் உள்ளன. துருக்கியும் பாக்கிஸ்த்தானும் அஜர்பைஜானிற்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியர்கள் 1500பேரை துருக்கி அஜர்பையானிற்கு கூலிப்படைகளாக அனுப்பியுள்ளது. போரின் போது கொல்லப்பட்ட 50 சிரியர்களின் உடலங்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அஜர்பைஜான் படைகள் ஆளில்லாப் போர் விமானங்களின் உதவியுடன் முன்னேறியுள்ளன. அவற்றை துருக்கி வழங்கியிருக்கலாம். துருக்கிய விமானங்கள் வேவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆர்மேனியாவின் விமான எதிர்ப்பு நிலைகளை தாக்கி அழித்த அஜர்பைஜான் ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது ஆட்டிலறி நிலைகளை அழிக்கத் தொடங்கியுள்ளன. துருக்கிய F-16 போர் விமானம் ஆர்மேனியாவின் SU–25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மேனியா குற்றம் சாட்டுகின்றது.



ஆர்மேனியாவிற்கு இரசியா ஆதரவு வழங்க வேண்டியுள்ளது

இரசியாவின் Collective Security Treaty Organization என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் ஆர்மேனியாவும் உறுப்புரிமையுடையது. 1992 கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் இரசியா, ஆர்மேனியா, கஜகஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அந்த உடன்படிக்கையின் படி ஆர்மேனியா மீது தொடுக்கப்படும் தாக்குதலை மற்ற நாடுகள் தம்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதி ஆர்மீனியாவைப் பாதுகாக்க வேண்டும். ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உள்ளது. உடன்படிக்கையின் படி இரசியா ஆர்மேனியாவிற்கு உதவி செய்யாது போனால் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மற்ற நாடுகள் இரசியாமீது வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும். அது இரசியாவின் பிராந்திய நலன்களைப் பாதிக்கும்.

இருதலைக் கொள்ளி எறும்பாக ஈரான்

ஈரானுடன் 27மைல் நீள எல்லையைக் கொண்ட ஒரே கிருத்தவ நாடு ஆர்மேனியா. ஈரானின் ஒரு பகுதியாக இருந்த ஆர்மேனியாவின் கிருத்த மக்கள் பலர் இப்போதும் ஈரானில் வசிக்கின்றனர். பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட அஜர்பைஜானியர்களும் ஈரானில் வசிக்கின்றனர். இஸ்ரேலிடம் அதிக படைக்கலன்களை வாங்கிக் குவிக்கும் அஜர்பைஜானுடன் ஈரான் தொடர்பு வைப்பது ஈரான் உலகில் உருவாக்க முயலும் தனது விம்பத்திற்கு ஆபத்து. அஜர்பைஜான் இஸ்ரேலிடம் வாங்கிய ஆளில்லா விமானங்கள் ஈரனுக்கு அடிக்கடி அத்து மீறிப்பறக்கின்றன.  அஜர்பைஜானைப் பாவித்து இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரானை வேவு பார்ப்பதாக ஈரான் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. ஈரானியப் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் ஆர்மேனிய அஜர்பைஜானியப் போரில் ஈரான் பெரிதாக ஈடுபடாது. அஜர்பைஜானூடாக ஈரான் தனது சபாஹர் துறைமுகத்தில் இருந்து இரசியாவிற்கு ஒரு தொடரூந்து பாதையையும் அமைக்க முயல்கின்றது. இது போன்ற காரணங்களால் ஈரான் யாருக்கு ஆதரவளிப்பது எனத் தடுமாறுகின்றது. 

விலகி இருந்து இரசிக்கும் அமெரிக்கா

ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் நடக்கும் போரானது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் நிகராளிப் போர்(Proxy war) என அமெரிக்கா கருதுகின்றது. சிரியப் போரின் இறுதிக் கட்டத்தில் இரசியாவும் துருக்கியும் ஒன்றாக நின்று சிலகாலம் ஒத்துழைத்தது. அமெரிக்காவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் சிரியாவிலும் லிபியாலும் இரண்டு நாடுகளும் முரண்படத் தொடங்கின பிரான்சில் ஆர்மேனியர்கள் வாழ்கின்றனர். பிரான்ஸ் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றது. பிரான்சும் துருக்கியும் நேட்டோ உறுப்பு நாடுகள் என்பதால் நேட்டோ கூட்டமைப்பு விலகி நிற்கின்றது. அமெரிக்கா தனது நலன்கள் அங்கு பாதிப்படையவில்லை என்பதால் இந்தப் போரில் அக்கறை காட்டவில்லை. இதனால் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்த யாரும் இல்லை எனற நிலை உருவாகியுள்ளது.  

தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor)

இது பன்னிரண்டுக்கு மேற்பட்ட எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து மத்திய ஆசியாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கஸ்பியன் கடலூடாகவும் துருக்கியூடாகவும் கருங்கடலூடாகவும் எரிபொருள் வழங்கும் திட்டத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் இத்திட்டத்திற்கு தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அஜர்பைஜான், தேர்க்மேனிஸ்த்தான், கஜகஸ்த்தான், ஈராக் உட்படப் பல நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதன் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் தமது எரிபொருள் தேவைக்கு தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் பெரும்பகுதி எரிபொருள் அஜர்பைஜானுக்கு சொந்தமான கஸ்பியன் கடற்படுக்கையில் இருந்து பெறப்படுகின்றது. இத்திட்டத்தை ஆர்மேனியா அஜர்பைஜான் போர் மூலம் குழப்புவது இரசியாவிற்கு நன்மையளிக்கக் கூடியது. இரசியாவின் நேர்ட்ஸ்றீம் குழாய்க்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து பிரச்சனை கொடுப்பதற்கு இரசியா பழிவாங்குகின்றது எனச் சொல்லலாம். அஜர்பைஜான் நாள் ஒன்றிற்கு ஏழு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யையும் 780மில்லியன் கனவடி எரிவாயுவையும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அஜர்பைஜானில் இருந்து செல்லும் குழாய்கள் ஆர்மேனியாவிற்கு அண்மையில் உள்ள பிரதேசங்களூடாகச் செல்கின்றன.


ஐக்கிய நாடுகள் சபை ஆர்மேனியப்படைகள் நகர்னோ கரபார்க் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. துருக்கி தலையிட்டு போர் நிலைமையை அஜர்பைஜானுக்கு சாதகமாக மாற்றியதால் இரசியா ஆர்மேனியாவிற்கு ஆதரவாக செயற்பட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. அல்லது இரசியாவின் மற்ற நட்பு நாடுகள் இரசியாமீது ஐயம் கொள்ள முனையலாம். பொருளாதார அடைப்படையிலும் படைத்துறை அடிப்படையிலும் துருக்கி அகலக் கால் வைப்பதை இரசியா விரும்பலாம். இரசியா ஆர்மேனிய நிலங்களை தான் பாதுகாத்துக் கொண்டு பிரச்சனைக்குரிய நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் ஆர்மேனியா தனது முழு வலுவையும் பாவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அது போரைத் தீவிரப்படுத்தும்.

Monday, 5 October 2020

அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்தியாவின் பாதுகாப்பு

  


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் ஒரு நாடு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும். சீனா சிறிது சிறிதாக இந்தியாவின் நிலப்பரப்பை படைக்கலன்களைப் பாவிக்காமல் இரகசியமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனப் போரியல் நிபுணர் “போர்க்கலையின் உச்சம் எனப்படுவது போர் செய்யாமல் எதிரியை விழுத்துவது” என்றார். சீனா கைப்பற்றிய இந்திய நிலங்களை ஒரு போரால் மட்டுமே இந்தியாவால் மீளக் கைப்பற்ற முடியும். ஆனால் போர் தொடுத்தால் பல விதத்திலும் பெரும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும். சீனாவும் இந்தியாவும் அணுக்குண்டை தாம் முதலில் பாவிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டன. அணுக்குண்டு பாவிக்காமல் போர் செய்தாலும் இரு நாடுகளும் பெரும் ஆளணி இழப்புக்களை, உட்கட்டுமான அழிவுகளை, பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதுடன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளி ஆகிய தளங்களில் உக்கிரமாக நடக்கும்.

பொருளாதார வலிமை மிக்க சீனா

இந்தியாவின் வான் படையினரும் தரைப்படையினரும் சீனா இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை தடுக்கும் முயற்ச்சியில் வெற்றியடைந்தாலும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல் வேறுபட்ட ஏவுகணைகளை சமாளிப்பது இந்தியாவிற்கு முடியாத காரியமாகலாம். சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க இரண்டரை மடங்காக இருக்கின்றது. சீனாவிடமிருக்கும் 3.4ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கையிருப்பு இந்தியாவினதிலும் பார்க்க எட்டு மடங்காகும். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேன்மை மிக்கதாக அமைந்தது. 2008இன் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையதாக இருந்தது. அதே போல 2020-ம் ஆண்டு கொவிட்-19 தொற்றுநோயின் பின்னர் பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தேய்வடையும் போது சீனாவினுடைய பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றது. 2008இன் பின்னர் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது போல் 2020இன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டாகத்தான் இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் வளரும் போது அதற்கு உரிய மரியாதை உலக அரங்கில் செலுத்தப்பட வேண்டும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 2017-ம் ஆண்டே சீனா உலக மேடையை முழுமையாக எடுக்க வேண்டும் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் Road & Belt Initiative மூலம் உலக ஆதிக்கத்தின் மையப்புள்ளியை அத்லாண்டிக்கில் இருந்து பசுபிக்கிற்கு மாற்ற நினைக்கின்றது என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர். 

கடலில் விழுமா சீனா?

சீனாவின் எரிபொருள் தேவையில் 87விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் 77 நாட்களுக்கு பாவிக்கக் கூடிய எரிபொருளை மட்டும் இருப்பில் வைத்திருக்க முடியும். சீனாவின் எரிபொருள் வழங்கலைத் துண்டிக்க சீனாவிற்கு எதிராக இந்தியாவால் இரண்டு கடல் முற்றுகைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து செய்யும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சீனக் கப்பல்கள் மலக்காய் நீரிணையூடாக பயணிப்பதைத் தடுத்தல்.  இரண்டாவது பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தையும் அதை ஒட்டியுள்ள கரையோரப் பிரதேசங்களை முற்றுகையிட வேண்டும். அதனால் சீனாவிற்கு செல்லும் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருள்கள் செல்வதையும் சீனாவில் இருந்து அதன் ஏற்றுமதிகள் உலகெங்கும் செல்வதையும் இந்தியா தடுக்க வேண்டும். இதற்கு பாக்கிஸ்த்தானின் கடற்படையை முற்றாக அழிக்க வேண்டும். அதனால் பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான போரில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும். ஆகையால் இரண்டாவது முற்றுகை தரைப்போரில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம். அந்தமான் நிக்கோபார் தீவில் இந்தியாவின் கடற்படை வலிமை சீனக் கடற்படை மலாக்கா நீரிணையை தாண்டி வர முடியாதபடி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். ஒஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவில் {Cocos (Keeling) islands} இந்தியா துரிதமாகப் படைக்கலன்களை குவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். உலக அரங்கில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக களம் இறங்கும் முடிவை எடுக்கச் செய்தால் இந்து மாக்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படைக்கு பிரெஞ்சுக் கடற்படை உதவி செய்யும் நிலை உருவாக்கலாம்.

படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு நிலையில் இந்தியாவின் நிலங்களை சிறிது சிறிதாக சீனா அபகரிப்பதை தடுப்பதற்கு இந்தியா தன்னை படைக்கல அடிப்படையிலும் அரசுறவியல் அடைப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் சீனாவிலும் வலிமையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா தன் படைத்துறை வலிமை  சீனாவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியா பல பொருளாதார தியாகங்களைச் செய்ய வேண்டும்.ன்ச்அரசுறவியல் அடிப்படையில் இந்தியா தன்னை வலிமைப்படுத்தச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். இந்திய சீனப் போர் நடக்கும் போது பாக்கிஸ்த்தானும் நேரடியாக போரில் இறங்கலாம் அல்லது இந்தியாவிற்கு பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீனாவிற்கு சாதகமாக போரைத் திருப்ப முயலலாம். இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிப்பதை நிறுத்த இந்தியாவின் படைத்துறை சீனாவிலும் வலிமையானதாக இருக்க வேண்டும் அல்லது இந்தியா சீனாவிற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட படியால் எந்த ஒரு நாடும் அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஜப்பான் அடிக்கடி வலியுறுத்தும் குவாட் என்னும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியாவைக் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா காட்டி வந்த தயக்கம் அந்தப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதே வேளை தென் கொரியாவும் வியட்னாமும் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன.

இரசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் இணைந்த படைக்கல உற்பத்தியும்

இரசியாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். அதனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்குதல் செய்வதை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும். சீன பல புதிய படைக்கலன்களை இரசியாவிடமிருந்தே வாங்குகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து புதிய படைக்கல உற்பத்தியில் ஈடுபட வேண்டும் அப்படி உற்பத்தி செய்யும் படைக்கலன்களை ஒரு நாட்டின் அனுமதியின்றி மற்ற நாடு எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இந்த அடிப்படியிலேயே செய்யப்பட்டது. இரசிய தொழில்நுட்பங்களை இரசியாவிடமிருந்து வாங்கும் படைக்கலன்களில் இருந்தே சீனா பெறுகின்ற படையால் இது சீனாவை படைக்கல உற்பத்தியில் பின்னடைவைச் சந்திக்க வைக்கும். உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரசியா முன்வந்துள்ளது. அதை சீனாவிற்கு விற்பனை செய்வதும் தடைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு முறைமைகளை இரசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

அரசுறவியல் மேம்பாடு

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் நடக்கும் போது அமெரிக்காவும் ஜப்பானும் மேலும் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கச் செய்யும் அளவிற்கு இந்திய அரசுறவுகள் மேம்பட்டவையாக இருக்க வேண்டும். சீனாவுடன் போர் செய்யும் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரும் அளவிற்கு சீனாவிற்கு நட்பு நாடுகள் இல்லை என்பது இந்தியாவிற்கு வாய்ப்பானதாகும். வியட்னாம் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகின்றன. வியட்னாமுடனான ஒத்துழைபு சீனாவை ஆத்திரப் படுத்தும் என இந்தியா இதுவரை தயக்கம் காட்டியது.

இந்தியாவில் அமெரிக்கப் படைத்தளம்.

கொல்கத்தாவில் அமெரிக்க கடற்படைத்தளமும் வான்படைத்தளமும் அமைத்தால் இந்திய சீனப் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமையும். ஜப்பானும் தென் கொரியாவும் தமது நாடுகளில் அமெரிக்கப் படைத்தளஙக்ளை அமைக்க அனுமதித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலோ உலக அரங்கின் அவற்றின் தனித்துவமான கொள்கைகளிலோ விட்டுக்கொடுப்புக்களை பெரிதாகச் செய்வதில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு பகுதியான சில்கிரி இணைப்புப் பாதையை சீனாவல் அசைக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தலம். அமெரிக்காவின் F-35 போவிமானங்கள் ஐம்பதையாவது இந்தியா வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப் படவேண்டும்.

பல் துறைப் படைக்கலன்கள்

ஆழ்கடலில் செயற்படக் கூடிய கடற்படை, அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் முனை அனுபவம் கொண்ட படைத்துறை, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் படைக்கலன்களை வாங்கக் கூடிய ஒரே நாடு என்ற நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக இருக்கின்றன. சீனாவின் மிகப் பெரிய பின்னடைவு பல ஆண்டுகளாக போர் முனை அனுபவம் இல்லாத படைத்துறை என்பதே. இந்திய சீனப் போர் என ஒன்று வரும்போது இந்தியாவின் செய்மதிகளை சீனா அழித்து இந்தியப்படையினரைன் தொடர்பாடல்களை சிதைக்கலாம். பதிலுக்கு இந்தியாவும் சீனச் செய்மதிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். இணையவெளித்தாக்குதல் பலவற்றை சீனா செய்யலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியைப் பெறவேண்டும். சுவீடனின் Gripen E fighter விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்தவை என நிருபணமானவை. சீனாவின் உளவு விமானங்களை இந்தியா செயலிழக்கச் செய்வதற்கு Gripen E fighter வாங்க வேண்டும். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுநிலைகளையும் போரின் ஆரம்பத்திலேயே இந்தியா அழிக்கும் அளவிற்கான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறவேண்டும். அவற்றை அழிக்க தரையில் இருந்தும் வானில் இருந்தும் பெருமளவு ஏவுகணைகளை போர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்தியா வீச வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை இந்தியாவிற்கு இரகசியமாக வழங்க அமெரிக்கா தயங்காது. இந்திய சீனப் போர் என்று ஒன்று வந்தால் சீனாவின் பொருளாதார நிலைகளை இந்தியா துவம்சம் செய்யும் என்ற உணர்வை சீனாவிற்கு இந்தியா ஏற்படுத்த வேண்டும். சீனா இந்தியாவிற்கு ஆறுபது பில்லியன் டொலருக்கும் அதிமான ஏற்றுமதியை இந்தியாவிற்கு செய்கின்றது.

இந்தியா மீதான அச்சத்தை சீனாவிற்கு ஏற்படுத்துவது இலகுவான ஒன்றல்ல அதே வேளை அது இயலாத ஒன்று அல்ல. இப்போதிருக்கும் இந்தியாவையிட்டு சீனா கலவரப்படவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவையிட்டு சீனா அச்சமடைந்துள்ளது. இந்தியா தனது தற்போதைய நிலையை மாற்றாவிடில் அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு சீனாவிடமிருந்து பல பிரச்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

Tuesday, 29 September 2020

மீண்டும் வரும் நோர்வே மாரீசன்

 


இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாளர் எனவும் அழைக்கப்படும் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் சிங்கள தமிழ் பிரச்சனை தொடர்பாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிடுகின்றார். கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளிதழுக்கு எரிக் சொஹெய்ம் வழங்கிய செவ்வியும் தமிழ் ஆய்வு பயிலகம் நடத்திய வலையரங்கத்தில் அவர் வழங்கிய கருத்துக்களும் நாம் உற்று நோக்கப் பட வேண்டியன.

2001 செப்டம்பர் 11-ம் திகதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் உலகில் எந்த ஓர் அரசற்ற அமைப்பும் தமக்கு என படைக்கலன்களையோ படையணிகளையோ வைத்திருக்கக் கூடாது என அமெரிக்கா முடிவெடுத்த பின்னர் இலங்கைக்கான அமைதித் தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளைக் கொண்ட இணைத் தலைமை நாடுகள் என ஒரு குழுவும் இலங்கையின் அமைதி முயற்ச்சிக்காக உருவாக்கப் பட்டது.

எரிக் சொல்ஹெய்ம் 2020 செப்டம்பரில் டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தமிழர் தரப்பிலும் சிங்களத்தரப்பிலும் உள்ள தீவிரப்போக்குடையோர் தன்னைக்  கடுமையாக தாக்குவதாக நொந்து கொண்டார். மேலும் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள்:

·         இரண்டு தரப்பிலும் இருந்த போரை நாடுபவர்களால் தனது சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது.

·         விடுதலைப் புலிகள் ஒரு வலிமையான நிலையில் இருந்து கொண்டே அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டனர்.

·         அமைதிப் பேச்சு வார்த்தையின் போது விடுதலைப் புலிகள் தம்மை வலிமைப் படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கை அரசு தன்னை வலிமைப்படுத்திக் கொண்டது.

·         பாலசிங்கத்தின் ஆலோசனையைக் கேட்கும் வரை பிரபாகரனின் செயற்பாடுகள் ஒழுங்காகவிருந்தன. அவரின் ஆலோசனையைக் கேட்டிருந்தால் தமிழர்களின் தற்போதைய நிலை வேறுவிதமாகவிருக்கும்.

·         சரணடைய வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம்

·         கண்மூடித்தனமான தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

·         ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னர் பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு உதவியது.

·         போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.

·         இந்தியாவில் இணைப்பாட்சி உள்ளது. அங்கு பல்லின மக்கள் அமைதியாக வன்முறையின்றி வாழ்கின்றார்கள்.

·         இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பணியாற்றும்படி அழைக்கப்பட்டால் நான் மீண்டும் வருவேன்.

தற்போதைய புவிசார் அரசியல் இயங்கசைவியலில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் (Future of Eelam Tamils in the current geo-political dynamics) என்னும் தலைப்பில் தமிழ் ஆராய்ச்சி பயிலகம் என்னும் அமைப்பு 2020 செப்டம்பர் 26-ம் திகதி ஒரு வலையரங்க கலந்துரையாடலை நடத்தியது. அதில் பயிலகத்தைச் சார்ந்த அருண்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் அவருடன் எரிக் சொல்ஹெய்ம், வி உருத்திரகுமார், அய்யாநாதன், கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். மே-17 இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அருண்குமார் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றார். ஈழத்தமிழர்களின் வரலாற்றை சுருக்கமாக விபரித்த அருண்குமார் தற்போதைய புவிசார் அரசியல் நிலை பற்றியோ அல்லது அதன் இயங்கசைவியல் பற்றியோ எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. கலந்துரையாடலில் கலந்து கொண்ட மற்றவர்களும் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கவில்லை. இலங்கையில் எரிக் சொல்ஹெயம் செய்த அமைதி முயற்ச்சி பற்றியும் அதன் தோல்வி பற்றியும் கலந்துரையாடினார்கள்.

எரிக் சொஹெய்ம் வழமைக்கு மாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அனடன் பாலசிங்கம் அவர்களை வெகுவாகப் புகழ்ந்து புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவரகள் மீது சேறு பூசுவதில் அதிக நேரம் செலவிட்டார். லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலை தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

எரிக் சொல்ஹெய்ம் சொல்லிய முக்கிய கருத்துக்கள்:

·         திரு பிரபாகரன் அவர்களுக்கு உலக அரசுறவியல் பற்றிய சரியான அறிவு இல்லை.

·         திரு பாலசிங்கத்தின் ஆலோசனைகளை திரு பிரபாகரன் கேட்காத படியால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

·         ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக திரு பாலசிங்கம் சொல்ஹெய்மிடம் கூறினார்.

·         உலக அரசுகளைப் பற்றி திரு பிரபாகரன் புரிந்து கொள்ளாத படியில் புலிகளின் படைக்கலன் கொள்வனவு தடுக்கப்பட்டது.

·         முழுமையாக வேண்டும் அல்லது ஒன்றுமே வேண்டாம் என்ற திரு பிரபாகரனின் பிழையை தமிழர்கள் விடக்கூடாது.

·         தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

·         தமிழர்கள் கூட்டாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

·         தமிழர்கள் எல்லோர் மீதுக் குற்றம் சுமத்துவதால் எதையும் பெறப்போவதில்லை

·         திரு பிரபாகரன் விட்ட தவறான பன்னாட்டு சமூகத்தின் சொற்களை கேளாமல் விட்டமையை தமிழர்கள் இனிச் செய்யக் கூடாது.

·         தமிழர்கள் ஒற்றுமையாக நின்று காந்திய வழியில் போராட வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார் சொன்னவை:

·         ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தனர்.

·         அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தில் இலங்கை அரசு தனது படைக்கலன்களை அதிகரிக்க அனுமதித்த பன்னாட்டு சமூகம் விடுதலைப் புலிகளின் படைக்கலன் கொள்வனவைத் தடை செய்தது.

·         தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு

·         இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்த உரிமையையும் கொடுக்க மாட்டாது.

·         அன்னை தெரெசாவே இலங்கை அதிபராக வந்தாலும் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுக்க மாட்டார்.

·         தமிழர்கள் மத்தியில் பிரிந்து செல்வது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப் படவேண்டும்.

அய்யாநாதன் சிங்களவர்களைப் பொறுத்தவரை இணைப்பாட்சி என்பது ஒரு கெட்ட வார்த்தை என்றார். அய்யாநாதன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டும் கோபம் கொண்டவராகவும் உரையாற்றினார். தமிழர்கள் மற்றவரகள் மீது குற்றம் சாட்டக் கூடாது எனச் சொல்லும் சொல்ஹெய்ம் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் குற்றம் சாட்டுவதை கிருஷ்ணா சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் அமைதிக்கான நோர்வேயின் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்த ஒரு கட்டத்திலும் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. மாறாக ஈழத் தமிழர்களை இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அத்துடன் இணைப்பாட்சியை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். . சிங்கள அமைச்சர் ஒருவர் நாம் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுத்தாலும் அதை இந்தியா அனுமதிக்காது என இலங்கைப் பாராளமன்றத்திலேயே வைத்து திரு சம்பந்தரைப் பார்த்து சொன்னார். தமிழர்கள் காந்தீய வழியில் போராட வேண்டும் என காந்தீய வழியில் போராடிய திலீபனை இந்தியா உதாசீனம் செய்தமையால் இறந்ததை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கையிலும் அந்த நினைவு கூரலை சிங்களம் தடை செய்யும் வேளையிலும் எரிக் சொல்ஹெய்ம் எமக்கு காந்தீய வழியில் போராடச் சொல்கின்றார். தந்தை செல்வா காந்தீய வழியில் போராடிய போது சிங்களம் தமிழர்கள் மேல் கடைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டதை நாம் மறக்க மாட்டோம். சொல்ஹெய்ம் அமைதியைத் தேடி எம்மிடம் 2000-ம் ஆண்டு வரவில்லை எம்மைத் திசை திருப்பும் மாயமானாகவே வந்தார். 2009 மே மாதம் புலிகள் தமது படைக்கலன்களை மௌனித்த பின்னர் அவர் தன் அமைதி முயற்ச்சியைக் கைவிட்டார். அதன் பின்னர் இணைத் தலைமை நாடுகள் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. அவரது MISSION ACCOMPLISHED. ராஜீவ் கொலைபற்றி அழுத்தமாக குறிப்பிட்ட சொல்ஹெய்ம் அவரது அமைதிப்படை செய்த இனக்கொலை பற்றி ஏதும் சொல்லவில்லை. மஹிந்த அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறி போரை ஆரம்பித்த போது சொல்ஹெய்ம் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவரும் அதற்கு உடந்தையாக இருந்தாரா? சிங்களைப் படையினரின் ஆனையிறவு முகாமை எதிர்பாராதவிதமாக கைப்பற்றிய விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் தாக்குதல் நடத்தினர். அதனால் இலங்கை படையினரால் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என உணர்ந்த நாடுகள் சதிமூலம் தோற்கடிக்க அனுப்பிய மாயமான் எரிக் சொல்ஹெய்ம். திரு அண்டன் பாலசிங்கம் அது சொன்னார் இது சொன்னார் என அவர் உயிரோடு இருக்கும் போது சொல்லாதவற்றை இப்போது சொல்கின்றார். நான் சொல்கின்றேன்: என்னிடம் திரு பாலசிங்கம் சொன்னார் எரிக் எனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்து தன்னை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திரும்பும்படி கோரினார் என்று. என்னிடம் தமிழ்ச்செல்வன் சொன்னார் எரிக் சொல்ஹெய்ம் எம்மை அழிக்க வந்திருக்கும் சதிகாரன் என்று.

எரிக் சொல்ஹெய்ம்மின் அமைதி முயற்ச்சி படுதோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம்:

1. அவருக்கு தமிழர்கள் தொடர்பான சிங்களவர்களின் மனப்பாங்கு பற்றி ஏதும் அறியாமை

2. இலங்கையைச் சூழவுள்ள புவிசார் அரசியல் நிலைமைகள் பற்றி அவருக்கு புரிதல் இல்லாமை

3. தமிழரகள் மீது இந்தியத் தென்மண்டலத்தில் உள்ள சில பூனூல்கலும் சில மாலியாளிகளும் எந்த அளவிற்கு வஞ்சம் வைத்திருக்கின்றனர் என்பது பற்றி அவருக்கு தெரியாது.

தமிழர்களைச் சூழவுள்ள தற்போதைய புவிசார் அரசியல் இயங்கசைவியல் பற்றி வலையரங்கத்தில் சொல்லாமல் விட்டவை:

·         சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் உருவாகியுள்ளது

·         சீனா தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு போர் உருவாகும்.

·         இந்தியா தனது எனச் சொல்லும் நிலப்பரப்புக்களை சீனா கைப்பற்ற முயல்கின்றது.

·         இலங்கையை தனது கேந்திரோபாய நலன்களுக்கு உகந்ததாக மாற்ற அமெரிக்காவும் இந்தியாவும் முயல்கின்றன.

·         தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ உகந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

·         இலங்கை தமது நலன்களுக்கு எதிராக சீனாவுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடாது என அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றன.

·         இந்தியப் பேரினவாதம் தனது பிடியை மற்ற மாநில மொழிகளைப் பேசுபவர்கள் மீது இறுக்க தீவிரமாக முயல்கின்றது.

·         ஈழத்தமிழர்கள் முழுமையாக தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் இருக்க வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன. அதற்கான முயற்ச்சிகளைத் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன என்பதன் அடையாளமே நோர்வேயின் மாயமான் ஆகிய எரிக் சொஹெய்ம் மீளவும் வந்துள்ளார்.

 

மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கின்றது.  அதை மேம்படுத்துவதற்கான அனுசரணை என்னும் பெயரில் எரிக் சொல்ஹ்ய்ம் இலங்கையில் நுழைய திட்டமிட்டுள்ளார். இலங்கையின் மீன்வளத்தின் மீது நோர்வேயிற்கு எப்போதும் ஒரு கண் உள்ளது. அதற்காக சிங்களவர்களுக்கு நோர்வே மீது இருக்கும் வெறுப்பை இல்லாமல் செய்ய சொல்ஹெய்ம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது தொடர்ந்து சேறு பூசிக்கொண்டே இருப்பார்.

Wednesday, 23 September 2020

தமிழீழக் கட்சிகளும் இந்தியாவும்

  

அதிமுகவை பாஜக ஆட்டுவிப்பது போல் இந்திய ஈழத் தமிழ் கட்சிகளை ஆட்டுவிக்கப் போகின்றது. அண்ணா திமுகாவை கட்டுப்பாட்டுக்குள் பாரதிய ஜனதாக் கட்சி எடுத்தது போல் ஈழத் தமிழ் கட்சிகளை இந்திய மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க  முயல்கின்றது

தற்போது பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அண்ணா திமுக இருக்கின்றது. நடுவண் அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றது. அன்று ஜிஎஸ்ரி வரி முதல் இன்று வேளாண் சட்டங்கள் வரை தமிழ்நட்டுக்கான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் அண்ணா திமுக பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  

செல்வி ஜெயலலிதா பிழைக்க மாட்டார் எனத் தெரிந்தவுடன் பாஜக அரசு அண்ணா திமுகாவிற்குள் பிளவைக் கொண்டு வருகின்றது. திருமதி சசிகலா நடராஜ சிறையில் அடைக்கப்படுகின்றார். அநாதை போல் நின்ற பன்னீர்செல்வதிற்க்கு பாஜக கை கொடுக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமியா பன்னீர்செல்வமா என்ற பிரச்சனை வந்தபோது இருவருக்கும் இடையில் அவர்களே உடன்பாட்டை செய்து வைக்கின்றனர். உடன்பாடு செய்த பாஜாக அண்ணா திமுகவின் சட்டாம் பிள்ளையாகிவிட்டது.

ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் இரண்டு மாடுகளான பன்னீரையும் எடப்பாடியையும் தமிழக ஆட்சி என்னும் வண்டியை இழுக்கும் இரு மாடுகளாக்கிவிட்டு வண்டி ஓட்டியாக பாஜக தன்னை ஆக்கிக் கொண்டது. இரண்டு மாடுகளுக்கும் மூக்கணாங்கயிறு தேவைப்படவில்லை ஆடிட்டரின் பூநூலே போதுமானதாக இருக்கின்றது. வண்டி ஓட்டியில் கையில் சாட்டைகளாக சிபிஐ என்னும் நடுவண் அரசின் புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை இருக்கின்றன. பாஜகவுடனான நிர்ப்பந்தக் கூட்டணியால் 2019 மே மாதம் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் அண்ணா திமுக தோல்வியைச் சந்தித்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜகவின் தந்திரம்: நானே பிளவு படுத்தி பின் நானே ஒன்று படுத்தி சட்டாம் பிள்ளையாவது.

ஈழத்திலும் பிளவு,

2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட்டன. யாரும் எதிர்பாராத வகையில் திரு விக்கினேஸ்வரன், திருமதிஅனந்தி சசிதரன் போன்றோர் கட்சிகளை தொடக்கினர். சுரேஸ் பிரேமச்சந்திரன் புது டில்லி போய் வந்தவுடன் ஒரு கூட்டணி ஒன்று உருவானது. பல கட்சிகள், மதப் பிளவு, சாதிப் பிளவு பிராந்தியப் பிளவுகள் ஈழத்தமிழ் மக்களிடையே உருவானது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமே இல்லாத அதிக அளவு கட்சிகள் மற்றும் குழுக்கள் போட்டியிட்டதை பார்த்தோம்.

ரணிலின் கையில் அதிகாரம் இருந்த போது அவரின் கைப்பிள்ளையான சுமந்திரன் எல்லாவற்றையும் கட்டி ஆண்டார். இப்போது ரணில் செல்லக்காசாகிய நிலையில் சுமந்திரனே கட்டிவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். இப்போது இந்தியா எல்லோரையும் ஒன்று படுத்துவது போல் நாடகமாடி களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான களமாக தியாகி திலீபனின் நினைவேந்தல் பாவிக்கப்படுகின்றது.

 கொழும்பைக் கையாள மீண்டும் தமிழர்கள் வேண்டும்

இந்தியாவிற்கு உகந்த ஆட்சி கொழும்பில் இல்லை. பல தமிழ் கட்சிகளுக்கு பிரச்சனை கொடுக்கும் ஆட்சியாக ராஜபக்சேக்களின் ஆட்சி இருக்கின்றது. அவர்களின் பல அரசியல் நடவடிக்கைகளுக்கு அரச படையினலும் காவற்றுறையினரும் ஈடுபடலாம். தற்போதைய பாராளமன்றக் காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் மக்கள் முன் போய் தங்கள் சாதனை எனச் சொல்லும் படி எதையும் ஈழத் தமிழ்கட்சிகளால் செய்ய முடியாது. பன்னாட்டு புதிய தாராண்மைவாத ஒழுங்கு இப்போது செயலிழந்துள்ளது. அதனால் பன்னாட்டரங்கிலும் ஈழத் தமிழ் கட்சிகளுக்கு ஆறுதல் இல்லை. அநாதைகளாக அவர்கள் இருக்கின்ரார்கள்.

சீனா சரணம் கச்சாமி நிலையில் இலங்கை

மோசமடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோய் தாக்கத்தின் பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது. அதற்கு இலகு கடன் சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும். இந்தியாவே சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய் என்ற வெளிநாட்டுக் கொள்கையுடைய சீனா இலங்கைக்கு கடன் கொடுத்து அதை தன் பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்ளும்.

சீனாவிடம் கடன் பட்டு இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் இலங்கை சீனாவுடன் இணைந்து செயற்பட்டால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு தமிழர்கள் தேவைப்படும். எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டது. அவ்வப்போது அவர்களை ஒன்றுபடுத்துவது போல் நாடகமும் ஆடியது. பின்னர் அவர்களது படைக்கலன்களைப் பறித்தெடுத்தது. அதன் திருத்திய பதிப்பின் முதலாம் அத்தியாயத்தை இப்போது இந்தியா எழுதத் தொடங்கிவிட்டது. தமிழ்க் கட்சிகளை ஒன்று படுத்துவது போல் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. 2021 மே மாதத்திற்கு முன்னர் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமனத்திற்கான தேர்தலில் பாஜக எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என துடிக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல இனி வரும் மாதங்களில் பாஜக சில போலி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மோடி எனது நண்பர் என்றவரும் மோடி என் பின்னால் இருக்கின்றார் என்பவரும் மோடியைப் புகழ்ந்து கருத்துக்களை இனி வரும் சில மாதங்களில் வெளிவிடுவார்கள். 

Monday, 21 September 2020

வல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்

 


F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்துள்ளது. முதலாவது பரீட்சார்த்த பறப்பை 2020 செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் பரீட்சார்த்தமாகப் பறக்கவிட்ட செய்தி செப்டம்பர் 14-ம் திகதி வெளிவந்த போது உலக பாதுகாப்புத்துறைகளின் விற்பன்னர்கள் மட்டுமல்ல அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். Air Force Association’s Virtual Air, Space & Cyber Conference என்ற மாநாட்டிலேயே அமெரிக்க வான்படையினர் இந்தத் தகவலை முதலில் வெளிவிட்டனர். எந்த நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியது என்ற தகவல் கூட வெளிவிடப்படவில்லை. அடுத்த தலைமுறைப் போர்விமானத்தின் முதலாவது பறப்பைச் செய்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என பலதரப்பினரும் எதிர்பார்த்தனர். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்க இருபது ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. புதிய அடுத்த தலைமுறை போர்விமானம் ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா எண்மிய உற்பத்தி தொழில்நுட்பத்தில் (Digital Manufacturing Techniques) மிகவும் முன்னேறியுள்ளது என்பதை 2019 ஜனவரியில் போயிங் நிறுவனம் உற்பத்தி செய்த T-15 போர்விமானம் எடுத்துக் காட்டியது. Next Generation Air Dominance என்னும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விமானம் தொடர்பான எல்லாத் தகவல்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் தொழில்நுட்பத்தை சீனா இணைய வெளியூடாக திருடி தனது ஜே-20, ஜே-30 ஆகிய போர்விமானங்களை உருவாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அந்த வகையான திருட்டுக்கள் நடக்காமல் இருக்க அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் உலகில் பாவனைக்கு வரும் போது உலகப் போர்முறைமையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்
வலிமை மிக்க புதிய படைக்கலன்கள் உருவாக்கப் படும் போது படைத்துறை ஆதிக்க சமநிலை மாறி புவிசார் அரசியில் மாற்றங்கள் ஏற்படும். இரசியாவும் சீனாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையே இன்னும் முழுமையாக உருவாக்க முடியாமல் இருக்கும் போது அமெரிக்கா ஒரு படி மேலே சென்று விட்டதா? இரசியாவின் SU -3 5, SU -57 ஆகிய போர்விமானங்களும் சீனாவின் J-20 போவிமானமும் புலப்படாத் தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ளன.  அதிலும் சீனாவின்  J-20 போர்விமானத்தில் Super cruise என்பது இல்லவே இல்லை. 

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்

2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது. இதன் மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியும் சுவீடனும்ம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 2030-ம் ஆண்டுதான் முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்கா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை பரீட்சார்த்தமாகப் பறக்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து தலைமுறைப் போர்முறைமைகள்

முதலாம் தலைமுறைப் போர்முறைமையில் படையினரை வரிசைப் படுத்துதல் அணிவகுப்பு ஆகியவை முக்கியத்துவமானதாக இருந்தது.

இரண்டாம் தலைமுறைப் போர்முறைமையில் ரைபிள் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளடக்கப்பட்டன.

மூன்றாம் தலைமுறைப் போர் முறைமையில் படை நகர்வு வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எதிரியைப் பல முனைகளில் தாக்குதல் இதில் அடங்கும். இதில் தாங்கிகளும் விமானப்படையின் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்ட்ன.

நான்காம் தலைமுறைப் போர்முறைமையில் பல புதிய தளபாடங்கள் உள்ளடக்கப்பட்டன. அரசற்ற அமைப்புக்களும் போரில் ஈடுபட்டன. போர்த்தாக்குதல்களின் பொதுமக்களும் கொல்லபடுதல் தவிர்க்க முடியாததாகியது. போரில் அரசியலின் ஆதிக்கம் அதிகரித்தது. உளவியல் போர் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிரி நாட்டு மக்களுக்களுக்கான விநியோகங்களை நிர்மூலமாக்குதலும் போரின் பகுதியானது.

ஐந்தாம் தலைமுறைப் போர்முறைமையில் தகவல் தொழில்நுட்பம், புலப்படா விமானங்களும் தாங்கிகளும் கடற்கலன்களும் உள்ளடக்கப்பட்டன. போலிச் செய்திகளைப் பரப்பி எதிரி நாட்டின் படையினரையும் மக்களையும் பிளவுபடுத்தல் திசை திருப்பல் போன்றவையும் இதில் உள்ளன. தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை ஆகியவனவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் வலையமிடல் (Networking) முக்கியத்துவம் பெறுவதுடன். இதில் பல்-திரளப்போர் முறை (multi-domain warfare) உள்ளடக்கப்பட்டுள்ளது.

 


பல்-திரளப்போர் முறை (multi-domain warfare)

இனிவரும் காலங்களில் போர்விமானங்கள் பாரிய அளவில் வலையமாக்கம் (networking) உள்ளடக்கப்படும். இதனால் பல போர் விமானங்கள் ஒன்றாக இணைந்து செயற்படமுடியும். தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.



லேசர் படைக்கலன்கள்

அடுத்த தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் படைக்கலன்கள் இணைக்கப்படும். 2017-ம் ஆண்டு அமெரிக்கா உலங்கு வானூர்திகளில் இருந்து செயற்படுத்தும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்தது. ஒளியின் வேகத்தில் செயற்படும் லேசர் படைக்கலன்கள் ஒலியிலும் பார்க்க பலமடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இலகுவில் அழித்துவிடும். 2020 மே மாதம் அமெரிக்கப் கடற்படையினர் லேசர் படைக்கலன்களைப் பாவித்து விமானங்களை அழிக்கும் பரிசோதையை செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லா நாசகாரிக் கப்பல்களிலும் லேசர் படைக்கலன்களைப் பொருத்திக் கொண்டிருக்கின்றது.

முப்பரிமாண அச்சிடல்

எதிர்காலப் போரிலும் படைத்துறை உற்பத்தியிலும் முப்பரிமாண அச்சிடலும் முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றது. படையினரின் தலைக்கவசம் முதல் படைக்கலன்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் உட்பட நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதி வரை முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படும். போரின்போது படையினருக்கு தேவையான வழங்கல்களில் பெரும்பகுதி முப்பரிமாண அச்சிடல் மூலம் துரிதமாக உற்பத்தி செய்யப்படும். தற்போது பல புதிய போர்விமானங்களின் உதிரிப்பாகங்கள் முப்பரிமாண அச்சிடல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை உற்பத்திச் செலவையும் நேரத்தையும் பெருமளவில் மிச்சப்படுத்துகின்றன. போர் முனைகளில் காயப்படும் வீர்ர்களுக்கு தேவையான புதிய உறுப்புக்களையும் முப்பரிமாண அச்சிடல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 2011-ம் ஆண்டு முப்பரிமாண அச்சிடல் மூலம் உருவாக்கிய உலகின் முதலாவது ஆளில்லா விமானம் வெற்றீகரமாகப் பறக்கவிடப்பட்டது.

விண்வெளிப்படை

ஒரு நாட்டு செய்மதி மற்ற நாட்டு செய்மதியை அழிப்பதும் செய்மதிகளில் இருந்து ஏவுகணைகளையும் குண்டுகளையும் வீசுவதும் உளவு பார்த்தலும் வேவுபார்த்தலும் இணையவெளிப் போர் செய்வதும் விண்வெளிப் படையின் முக்கிய செயற்பாடுகளாக அமையும். 2018 ஓகஸ்ட் 9-ம்  டிரம்ப் அமெரிக்காவின் ஆறவது படையாக விண்வெளிப்படையை அறிவித்தார். அதற்கான சட்டமும் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. 1990இல் இருந்தே இரசியா தனது விண்வெளிபடையை ஆரம்பித்து விட்டது.2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.2016-ம் ஆண்டு சீனா விண்வெளிப்படையை உருவாக்கத் தொடங்கியது.

ஆறாம் தலைமுறைப்போர்முறைமை

1991-ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக நடந்த போரை அவதானித்த இரசியாவின் Major-General Vladimir Slipchenko ஆறாம்தலைமுறைப் போர்முறைமை என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இப்போர் முறைமையில் தொலைவில் இருந்தே துல்லியமாகத் தாக்கக் கூடிய படைக்கலன்களை எதிரியின் மீது ஏவி அழித்தல் பயன்படுத்தப்பட்டன. தாக்குதல்களுக்கு செய்மதிகள் மூலம் தகவல் திரட்டப்பட்டது. Global Positioning System(GSP) முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் மனித இயந்திரங்களான ரொபோக்கள் படையினராகச் செயற்படுவதும் எதிர்காலப் போர்முறைமையில் முக்கியமாக இடம்பெறும்.

 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...