Sunday 11 October 2020

தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத வட கொரிய அதிபர்

  


வட கொரியாவின் பொதுவுடமைவாதத்தை கொள்கையாகக் கொண்ட தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழா 10/10/2020 சனிக்கிழமை பாரிய படை அணிவகுப்புடனும் பலவித படைக்கலன் காட்சிப்படுத்தலுடனும் கிம் இல் சங் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. 2017-ம் ஆண்டின் பின்னர் ஒரு படை அணிவகுப்பு நடந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் மேடைக்கு வரும்போது வாணவேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. வட கொரிய மக்கள் அவர் நீடூழி வாழ்க என கண்ணீர் மல்க குரல் எழுப்புவதை தொலைக்காட்சிகள் காண்பித்தன. வழமைக்கு மாறாக இந்த முறை படை அணிவகுப்பு இரவில் நடந்தது.

மிரட்டல் இல்லாத உரை

தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவில் 25 நிமிட உரையாற்றிய கிம் ஜொங் உன் தனது உரையில் அமெரிக்காவைப் பற்றியோ அதன் அதிபர் டிரம்பைப் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை என்பதுடன் அவர் எந்த ஒரு மிரட்டலையும் விடுக்கவில்லை. உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு தன் ஆறுதலையும் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர் விரவில் குணமடைய வேண்டும் என கிம் ஜொங் உன் செய்தி அனுப்பியிருந்தார். வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மக்களுக்காக பணிபுரிந்த படையினரை அதிபர் பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தனது நாட்டுப் படைக்கலன்கள் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே; நாம் எந்த ஒரு முற்கூட்டிய தாக்குதல்களையும் மேற்கொள்ள மாட்டோம்; ஆனால் எமது பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் போது எமது முழு வலுவையும் நாம் பாவிப்போம் என்றார்.



மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜொங் உன்

கொவிட்-19 தொற்று நோயால் சீன எல்லையை மூடியமை, சூறாவளி, வெள்ள பெருக்கு, பொருளாதாரத் தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரிய மக்களிடம் கிம் ஜொங் உன் மன்னிப்பு கேட்டார். கண்ணீரை அடக்கிக் கொள்ள அவர் அப்போது முயற்ச்சிப்பது போலிருந்தது. வட கொரியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்கு தான் காரணமல்ல வட கொரியாவின் எதிரிகள்தான் காரணம் என அவர் தனது மக்களுக்கு காட்ட முயன்றார் என சில விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



விம்பத்தை மாற்ற முயற்ச்சி

பொதுவாக வட கொரியா வெளிவிடும் காணொலிக் கீற்றுகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றை மறைமுகமாக உள்ளடக்கி இருக்கும். ஆனால் வட கொரியா அண்மையில் ஆங்கில மொழியில் வெளிவிட்ட காணொலிக் கீற்றி சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. வட கொரியாவின் மென்மையான பகுதியையும் செழிப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பன்னாட்டு அரங்கில் வட கொரியாவிற்கு இருக்கும் குளப்படிகாரன் என்ற விம்பத்தை மாற்றும் முயற்ச்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.



மிகப் பெரிய ஏவுகணை

75-ம் ஆண்டு விழாவில் எல்லாவற்றிற்கும் மேலாக கவனிக்கப்பட்டது அங்கு காட்சிப்படுத்தப் பட்ட உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை. 22சில்லுகள் கொண்ட ஒரு நீண்ட பார ஊர்தி அதைத் தாங்கிச் சென்றது. அது இதுவரை ஏவிப்பரிசோதிக்கப்படவில்லை. வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் (solid fuel) மூலம் இயங்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகளிலும் பார்க்க திண்ம எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகள் துரிதமாக நகர்த்தப்படக் கூடியவை. வட கொரியா 2017-ம் ஆண்டு பரிசோதித்த Hwasong -14 என்னும் கண்ட விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை 13,000கிமீ (8100மைல்) தூரம் 150கிலோ(330இறாத்தல்) எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிக் கொண்டு பாயக் கூடியது. அதனால் அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்க முடியும். தற்போது காட்சிப் படுத்தியது அதிலும் பெரிய தோற்றத்தைக் கொண்டது.

கருத்து வெளியிடாத தென் கொரியா

2020-10-10 சனிக்கிழமை வட கொரியா காட்சிப் படுத்திய ஏவுகணை பற்றி தென் கொரியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே வட கொரியா மேலும் வலிமையுள்ள ஏவுகணைகளை உருவாக்குவதாக தென் கொரியா தெரிவித்திருந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வட கொரியா தொடர்ந்து மேம்படுத்தப் பட்ட ஏவுகணைளை உருவாக்குவது ஏமாற்றமளிக்கின்றது என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தலை கருத்தில் கொண்டாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் வேளையில் ஏவுகணைப் பரிசோதனை எதையும் நடத்தி டொனால்ட் டிரம்பை சங்கடத்திற்க்கு உள்ளாக்கவோ ஆத்திரப்படுத்தவோ கிம் ஜொங் உன் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது.. ஒரே ஒரு கட்சியும் ஆளும் கட்சியுமான தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்வின் போதோ அல்லது அதற்கு ஓரிரு நாட்களின் முன்னதாகவோ பெரிய ஏவுகணைப்பரிசோதனையைச் செய்து உலகின் கவனத்தை கிம் ஜொங் உன் அவகளால் தன்பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதை வைத்து தன் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கக் கூடியவகையில் வட கொரியாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்பதை கிம் ஜொங் உன் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் வட கொரியா தனது ஏவுகணைகளை மேம்படுத்துவதைக் கைவிடாமல் இருக்கின்றது. பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் தொலைதூர ஏவுகணை தற்போது இருக்கும் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பத்தால் இடைமறிப்பதற்கு கடினமானதாகவிருக்கும். வட கொரியாவின் அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது.  அமெரிக்காவின் எந்தப் பாகத்திலும் அணுக்குண்டுகளை வீசக் கூடிய ஏவுகணைகள வைத்திருக்கும் வட கொரியா அமெரிக்காவை மிரட்டும் தன் முயற்ச்சியை மனம் தளராமல் தொடர்கின்றது.வ்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...