Tuesday, 27 May 2014

மோடியின் அமைச்சரவைத் தேர்வு கூறுவது என்ன?

மோடி          ராஜ்நாத்,           அருண்,        சுஸ்மா
மோடியின் தலைமையில் 24 அமைச்சர்களும்(Cabinet Ministers), 10 இணை அமைச்சர்களும் (Independent Minister of State)  12 துணை அமைச்சர்களும் (Minister of State) இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் அமைச்சரவையில் (Cabinet) அதிகப்பேர் இடம் பெறக் கூடாது என்பதற்காக இணை அமைச்சுப் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணை அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் தாமாகவே அந்த அமைச்சுப் பதவியை மற்றவர்களின் மேற்பார்வை இன்றி வகிப்பார்கள். துணை அமைச்சர்கள் அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவியாக இருப்பார்கள். இணை அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள்.

கடந்த காங்கிரசு அரசில் 34 அமைச்சர்கள் இருந்தனர்.

சிறிய அமைச்சரவை சிறந்த ஆட்சி என்ற உறுதி மொழியுடன் மோடி தன் அமைச்சர்களைத் தெரிவு செய்தார். பல்வேறு அரச திணைக்களங்களை சிறந்த முறையில் ஒருகிணைப்புச் செய்து செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் என்றார் மோடி. அத்துடன் உயர் நிலை அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்து கீழ்நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கபப்டும் என்றார். இந்திய அரசின் இருநூறு பில்லியன் (இரண்டாயிரம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டங்கள் நிறைவேற்றுப்படாமல் நிலுவையில் உள்ளன. சிவ சேனா அதிக அமைச்சுப் பதவிகளைக் கேட்கிறது. இந்தியாவில் அமைச்சரவையும் சாதிகளிடை சமநிலை பேணப்பட வேண்டிய ஒன்று. உத்தரப் பிரதேசம், மஹராஸ்ட்ரா, பிஹார் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் இந்த மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் புதிய அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வரலாற்றில் அதிக அளவு ஆட்கள் கலந்து கொண்ட தலைமை அமைச்சர் பதவி ஏற்பு வைபவமாக மோடியின் பதவி ஏற்பு அமைந்தது. பதவி ஏற்பு வைபவத்தின் பின்னர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப் பெரும் தள்ளு முல்லு ஏற்பட்டது.

 முக்கேஸ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் தமது குடும்பத்தினருடனும் மேலும் அசோக் ஹிந்துஜா, சுனில் மிட்டல், ராஜன் மிட்டல்,  குமாரமங்கலம் பிர்லா, சசி ருய்யா, கௌதம் அடானி, வி என் தூட் ஆகிய பெரும் பணக்காரர்களும் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியப் பெரு முதலாளிகளின் மொத்தச் சொத்து மதிப்பு பெருமளவில் உயர்ந்து விட்டது. ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் பங்குச் சந்தை விலை அதிகரிப்பு ஆகியவற்றால் இது நடந்தது. ஏழைகளின் சொத்து மதிப்பு????

மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்து தமது வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையில் வழமையாக பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், தலித்துக்கள் பெருமளவில் பாஜகவிற்கு வாக்களித்து இருந்தனர். மோடி பதவிக்கு வந்தால் இந்தியாவில் இலகுவாக முதலீடு செய்யலாம் என உலகெங்கும் வாழும் குஜராத்தியர்கள் மோடிக்கு பெரும் ஆதரவு வழங்கினார்கள். 

தலைமை அமைச்சர் மோடியின் மாதச் சம்பளம் 50,000 ரூபா. இத்துடன் மேலதிகமாக மாதம் 65,000 ரூபாக்கள் வழங்கப்படும். இன்னும் constituency allowance என மாதம் 45,000 ரூபாக்கள் வழங்கப்படும். அவரது மாதாந்த மொத்த வருமானம் 160,000 ரூபாக்கள்.
நன்றி தினமணி

மோடியின் அமைச்சரவையில் முக்கியமானவர்கள்:
ராஜ்நாத் சிங் (உள்துறை ),
சுஸ்மா சுவராஜ் (வெளியுறவுத் துறை)
அருண் ஜெட்லி(நிதி, பாதுகாப்பு),
வெங்கையா நாயுடு(கிராம அபிவிருத்தி, பாராளமன்ற அலுவல்கள்),
நிதின் கட்காரி(தரைப் போக்குவர்த்து,  கப்பல் போக்குவரத்து),
உமா பார்தி (நீர்வளம், கங்கை சுத்தீக்ரைப்பு),
மனேக்கா காந்தி(பெண்கள், சிறுவர் அபிவிருத்தி),
ஆனந்த் குமார் (இரசாயனமும் உரமும், மேலதிகமாக பாராளமன்ற அலுவல்)
ரவி சங்கர் பிரசாத் (தொலைத் தொடர்பு, சட்டம், நீதி),
ஸ்மிரிடி இரானி(மனித வள மேம்பாடு),
ஹர்ஸ் வர்தன (சுகாதாரம், குடும்பநலம்)

கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளில் இருந்து அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட முக்கியமானவர்கள்:
ராம் விலாஸ் பஸ்வான்(லோக் ஜன சக்திக் கட்சி- பிஹார் மாநிலம்), ஹர்சிம்ரத் கௌர் பதல்(அகாலித் தளம் கட்சி- பஞ்சாம் மாநிலம்)
ஆனந்த் கீற்( சிவசேனா - மும்பாயைத் தலைநகராகக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலம்)
அசோக் கஜபதி ராஜு (தெலுங்கு தேசம் கட்சி - ஆந்திரா)

மோடியின் அமைச்சரவையில் ஒரே ஒரு முசுலிம் அமைச்சர் இடம்பெற்றுள்ளார். நஜ்மா ஹெப்துல்லா சிறுபானமை விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடியின் அமைச்சரவையின் சராசரி வயது 57. மோடி தனது அமைச்சரவையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்களை இணைக்கவில்லை. இதனால் எல் கே அத்வானி, முர்ளி மனோகர் ஜோஸி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். சுப்பிரமணிய சுவாமி தான் தனக்கு உள்ள அதிகாரத்தை(?) பாவித்து நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக சாதி உயர்த்துவதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்து மதப்படி ஒருவரின் சாதியை அவரது பிறப்பு நிர்ணயிக்கும். யாரையாவது மேல் சாதிக்கு உயர்த்துவதாயின் 101 பார்ப்பனர்கள் யாகம் செய்து தங்கத்தால் செய்யப்பட்ட பசுவின் வயிற்றுக்குள் அவரைச் செலுத்தி பின்னர் அவர் மீண்டும் இப்பூமியில் அப்பசுவின் வயிற்றில் இருந்து பிறப்பது போல் செய்து அவர் சாதி உயர்த்தப்படுவார். சு. சுவாமி எப்போதும் கோமாளித்தனமாக ஏதாவது செய்வார். குடும்பத்தை அடிப்படையாக வைத்து வந்த அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவில்லை. பாவம் வருண் காந்தி(இந்திராகாந்தியின் பேரனும், சஞ்சய் காந்தியின் மகனும்). ஆர்.எஸ்.எஸ் உறுதியாகச் சொல்லிவிட்டது 75 வயதிற்குக் கூடிய அத்வானி அவைத் தலைவர் (சபாநாயகர்) பதவி கூட ஏற்கக் கூடாது என்று.

இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் மனேக்கா(இயற்பெயர் மேனஹா) காந்திக்கு சுற்றுச் சூழல் துறை கொடுக்கப்படவில்லை. இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பிரச்சனை கொடுக்காமல் இருக்க அவரிடம் அத்துறை வழங்கப்படவில்லை.

 தேர்தலின் போது மோடியின் வலது கரமாகச் செயற்பட்ட அஜித் ஷாவிற்கு அமைச்சுப்பதவி கொடுக்கப்படவில்லை. அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக்கப்படலாம். மோடி தான் கட்சியைக் கைப்பற்ற இப்படிச் செய்திருக்கலாம்.

மலையாளிகள் எவரும் அமைச்சரவையில் இல்லை. மேற்கு வங்கத்தில் இருந்தும் யாரும் இல்லை, இந்த மாநிலங்களில் பாஜக படுதோல்வியடைந்தது. தமிழ்நாடு கன்னியாகுமரியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன் இராதாகிருஷ்ணனுக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  திருச்சியில் பிறந்த  நிர்மலா சீதாராமனுக்கு (M Phil in International Studies) வர்த்தக இணை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா மக்களவையிலோ(லோக்சபா) மாநிலங்களவையிலோ(ராஜ்ய சபா) உறுப்பினர் அல்ல.

பாஜக எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் மாநிலத்தில் இருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை என்பது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஏழு பெண் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். 

 இராமாயணம் நாடகத் தொடரில் சீதையாக நடித்தவரும் ராகுல் காந்திக்கு எதிராக அமெதியில் போட்டியிட்டுத் தோற்றவருமான ஸ்மிரிடி இரானியும். இவருக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பட்டதாரி கூட இல்லாத ஸ்மிரிடி இரானி எப்படி மனைத வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகலாம் எனக் காங்கிரசுக் கட்சியினர் கேள்வி எழுப்பினர். இமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, மெகாலயா, நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுடன் ஆறு ஒன்றியப் பிரதேசங்களில் (Union Territories) இருந்து எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என காங்கிரசுக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரணாப் முஹர்ஜீ, ப சிதம்பரம், நட்வர் சிங், அர்ஜுண் சிங், சரத் பவார் ஆகியோரின் அனுபவம் கல்வியுடன் ஒப்பிடுகையில் புதிய அமைச்சரவை ஒரு தூசு என்கின்றனர் காங்கிரசுக் கட்சியினர்.

உலகிலேயே மிக நீண்ட கழிப்பிடமான இந்திய தொடரூந்துப் பாதையையும் உலகிலேயே மிக நீண்ட குப்பைத் தொட்டியான கங்கை நதியையும் எப்படி புதிய அமைச்சரவை எப்படிச் சமாளிக்கப் போகிறது?

 சுஸ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக இடம் பெற்றது ஈழத் தமிழர்களுக்கு உகந்தது அல்ல.  பதவி ஏற்பு வைபத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டது ஒரு நல்ல ஆரம்பமும் அல்ல.

இந்திய வங்கிகளின் கடன் அறவிடும் விழுக்காடு குறைந்து கொண்டே போகின்றது. சென்ற ஆண்டு 3.8 விழுக்காடாக இருந்த அறவிட முடியாக்கடன் இந்த ஆண்டு 4.4விழுக்காடாக உயர்ந்து விட்டது.  இது புதிய அமைச்சரவைக்கு பெரும் சவாலாக அமையும். இந்தியா கடன் நெருக்கடியை நோக்கி நகராமல் பார்க்க வேண்டிய பொறுப்பு பெரும் பொறுப்பு. வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் பெரும் பூதாகாரப் பிர்ச்சனை. இந்தியாவில் உறுதியான நிலை ஏற்பட அதன் பொருளாதாரம் குறைந்தது எட்டு விழுக்காடாவது வளர வேண்டும். இப்போது அதன் வளர்ச்சி ஐந்திலும் குறைவு.


புதிய அரசு செய்ய வேண்டியவை:

சிவப்பு நாடாக்களை அறுத்தெறிதல்
சட்டங்களை இலகுவாக்குதல்
உள்கட்டுமான அபிவிருத்தி (Infrastructure development)
நதிநீர்ப்பங்கீடு
வெளிநாட்டு முதலீடுகளைக் கவருதல்
உலகச் சந்தையில் இந்தியாவின் போட்டியிடு திறனை மேம்படுத்தல்
உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியை அபிவிருத்து செய்தல்
விவசாயிகள் தற்கொலைகளை நிறுத்துதல்
கிராமங்களுக்கு வங்கித் துறையை விரிவாக்குதல்.

சவால்கள்
1. இந்தியாவில் குஜராத்தியர்களுக்கு எதிரான இனவாதம் இனித் தூண்டப்படலாம். கேரளத்து ஊடகங்கள் அதை ஆரம்பித்து விட்டன.                    2. இந்தியாவின் வரலாற்றில் பார்ப்பனர் அல்லாதவர் தலமை அமைச்சரானால் அவர் இரண்டு ஆண்டுகள் கூட நீடித்ததில்லை.
3. அயல் நாடுகளுடனான உறவு
4. காங்கிரசு ஆதரவாளர்களைக் கொண்ட நிர்வாக சேவை
5. சிவ சேனா மும்பாய் நகரில் செய்யக் கூடிய கலவரங்கள்
6. பார்பர் மசூதியும் இந்துத்துவவாதிகளும்.
7. மாற்றுக் கட்சிகளின் கைகளில் உள்ள மாநில அரசுகள்
8. காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்த குடியரசுத் தலைவர்
9. பாஜகவிலும் பார்க்க அதிக  காங்கிரசுக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை.
10. மனவலிமை இழந்த இந்தியப் படையினர்.
11. முன் அனுபவம் அதிகம் இல்லாத பல அமைச்சர்கள்

Sunday, 25 May 2014

சிரியப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க புதியவகை நீதிமன்றம்.


சிரியப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டை பன்னாட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லும் வரைபுத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 15 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 13 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் இரசியாவும் சீனாவு அதை தமது வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரத்தால் இரத்துச் செய்துவிட்டன.  ஆனால் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றுடன் சில அரபு நாடுகளும் இணைந்து புதிய ஒரு வகையில் சிரியப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க ஆலோசித்துவருகின்றன. இதை உலகெங்கும் வாழ் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மேற்படி நாடுகள் புதிய வகையான் ஒரு திட்டத்தை உருவாக்கவுள்ளன. அது தமிழர்களுக்குத் தேவையான ஒன்றாக அமையலாம்.

சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் காட்டார் நாட்டின் நிதி உதவியுடன் பெருமளவில் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிரியாவின் காவற்துறையில் பணிபுரிபவர்கள் மூலம் எடுக்கப்பட்ட 55,000 ஒளிப்படங்கள் சிரியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களாக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வழக்குத் தொடுநர்களின் ஆலோசனையுடன் சிரியப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை தயாரிக்கப்பட்டது.

மேற்படி குற்றச் சாட்டுகளை  Hybrid Court எனப்படும் கலப்பு நீதி மன்றம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் தீர்மானம் ஒன்றின் மூலம் உருவாக்கி அதில் வைத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருப்பது போல் பொதுச் சபையில் வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரம் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. இரசியா கிறிமியவைத் தன்னுடன் இணைத்ததைச் செல்லாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.  இரசியாவிற்கு எதிராக 100 வாக்குகளும் ஆதரவாக 11வாக்குகளும் அளிக்கப்பட்டன, 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது இரசியாவிற்கான ஆதரவுத் தளம் பலவீனமானது என்பதை எடுத்துக் காட்டிவிட்டது. இதனால் ஐநா பொதுச்சபையில் சிரிய ஆட்சியாளர்களை விசாரிக்க ஒரு நீதி மன்றம் அமைக்கும் ஒரு தீர்மானத்தை அரபு நாடுகளும் மேற்கு நாடுகளும் இணைந்து கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். இவர்கள் அமைக்கும் கலப்பு நீதி மன்றம் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட கலப்பு நீதி மன்றங்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கம்போடியாவில் கம ரூஜ் அமைப்பின் போர்க்குற்றங்களை அமைக்க ஒரு கலப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. கலப்பு நீதிமன்றம் என்பது ஐநா பொதுச் சபையின் மேற்பார்வையில் பல நாட்டு நீதியாளர்களைக் கொண்டு உருவாக்கப்படும். இது பன்னாட்டுச் சட்டங்களையும் உள்நாட்டுச் சட்டங்களையும் கருத்தில் கொண்டு விசாரித்துத் தீர்ப்பளிக்கும்.

1993-ம் ஆண்டு முன்னாள் செக்கொஸ்லாவியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக் உருவாக்கப்பட்டது.

1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கம ரூஜ்ஜிற்கு எதிரான நீதி மன்றத்திற்கு ஜப்பான், இலங்கை, போலாந்து, கம்போடியா, சாம்பியா, ஆகிய நாட்டு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

2002-ம் ஆண்டு இன்னும் ஒரு கலப்பு நீதிமன்றம் சியாரா லியோனில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நியமிக்கப்பட்டது.

சிரியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் கலப்பு நீதிமன்றம் நான்காவது தலைமுறை நீதிமன்றமாக அமையவிருக்கின்றது இது முந்தைய மூன்றுவகையான நீதிமன்றங்களை விட அதிக நியாயாதிக்கம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்ட அறிஞர்களும் தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.

Friday, 23 May 2014

சீனாவிலும் இசுலாமியத் தீவிரவாதம்

2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும்.

2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக்கூடாது மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.

தீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும்  சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட  முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.

சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.

2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான  காரணங்கள்:

1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.
2 உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.
3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது
4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள்.

Wednesday, 21 May 2014

மோடியும் மாநிலங்களவையும்(ராஜ்ய சபா)

பச்சை அம்புகள் தேர்ந்து எடுக்கப்படுவதைக் குறிக்கும்..
இந்திய மக்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்களை யார் பாதுகாப்பது என்பது பற்றி தேர்தல் மூலம் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களாட்சி முறைமையிலான தேர்தல் என்னும் பெயரில் இந்திய மக்கள் புது டில்லியில் உள்ள மக்களவைக்கும் 28 மாநிலங்களில் உள்ள் சட்ட சபைகளுக்கும்  உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பார்கள்.தேர்தல் முடிவுகளை கட்சிகள் செய்யும் பரப்புரைகள் முடிவு செய்யும். பரப்புரையின் வலுவும் திறனும் கட்சிகளுக்கு இந்தியப் பெரு முதலாளிகளிடமிருந்து கிடைக்கும் பணத்தால் நிர்ணயிக்கப்படும்.

இந்திய ஆட்சி  அதன் குடியரசுத் தலைவரிடமும், அதன் பாராளமன்றத்தின் இரு அவைகளான லோக் சபா எனப்படும் மக்களவையிடமும், ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிடமும் இருக்கின்றது. மக்களவையின் 543 உறுப்பினர்களை மக்கள் நேரடியான வாக்களிப்பின் மூலம் தேர்ந்து எடுப்பார்கள். தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகளுமாக 335 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர். பரப்புரைக்கு முப்பதினாயிரம் கோடி ரூபாக்கள் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

250 உறுப்பினர்களைக் கொண்டது மாநிலங்களவை. இதில் 238 உறுப்பினர்களை மாநில சட்ட சபை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள். மிகுதி 12 பேரையும் இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். இதற்கு  இலக்கியம், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்து எடுப்பது வழமை. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரையும் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார்கள்.

இந்தியக் குடியரசுத் தலைவரை மாநிலங்களின் சட்ட சபை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள்.

இந்தியாவில் பொதுவாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட வேண்டுமாயின் பொதுவாக அது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் இடவேண்டும்.  புதிதாக  இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திர மோடிக்கு இப்போது உள்ள பிரச்சனை இது தான். முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்தவர். இரண்டாவது தற்போது 245 உறுப்பினர்களைக் (5 பேர் மணடியைப் போட்டுவிட்டனராம் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்) கொண்ட மாநிலங்களவையில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

காங்கிரசுக் கட்சி                        --------------------------------- 68
பாரதிய ஜனதாக் கட்சி          ---------------------------------   42
ஜெயலலிதாவின் அதிமுக ---------------------------------  10
மம்தா பனர்ஜீயின் திரிணாமுல் காங்கிரசு---------------12
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ----------                  14
முலாயம் சிங்கின் சமாஜவாதக் கட்சி-------------- ----   9
 ஒரிசா நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா---------------- 6
தெலுங்கு தேசம் -------------------------------------------------6
பொதுவுடமைக் கட்சி (CPI) -----------------------------------2  
பொதுவுடமைக் கட்சி (மக்ஸியம்) (CPI(M)----------------9
மிகுதி பல்வேறுபட்ட மாநிலக் கட்சிகளின் உறுப்பினர்களாகும்.

இதுவரைகாலமும் காங்கிரசுக் கட்சி பாஜகாவின் ஆதரவுடனும் சில சட்டங்களை நிறைவேற்றியது. உதாரணமாக தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டியது என்ற படியால் பாஜகவின் ஆதரவுடன் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் பல சட்ட மூலங்கள் இப்போதும் நிலுவையில் உள்ளன.     காங்கிரசிற்கும் அதன் கூட்டணிகளுக்கும் மொத்தமாக 102 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உண்டு.

எல்லாச் சட்டங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. வரவு செலவுத் திட்டம உட்பட்ட நிதி தொடர்பான சட்டங்களை மக்களவை நிறைவேற்றி விட்டு மாநிலங்களவைக்கு அவற்றை அனுப்பும். மாநிலங்களவை அவற்றை நிராகரிக்க முடியாது. அதில் மாற்றம் செய்யும் படி வேண்டுதல் விடுக்கலாம். அந்த மாற்றங்களின்றி மக்களவை அவற்றை நிறைவேற்றலாம்.

தற்போது உள்ள மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம்  2016-ம் ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போதும் பெரிதான மாற்றங்கள் பாஜகவினருக்கு சாதகமாக ஏற்படாது. பாராளமன்றத் தேர்தலுடன் நடந்த ஆறு சட்டசபைகளுக்கான தேர்தலிலும் பாஜக பெரிய வெற்றி பெறவில்லை.  இதனால் மோடி பல சிறிய கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

கூட்டுக் கூட்டம்
மாநிலங்களவையில் நரேந்திர மோடி ஒரு சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தால் அவர் இரு சபைகள் கூட்டுக் கூட்டத்தில் அதை நிறைவேற்றலாம். கூட்டுக் கூட்டம் கூட்டும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அது மோடியின் முதல் பிரச்சனை.   அரசமைப்பு சட்டத்தின் மீது திருத்தம் கொண்டுவரும் சட்ட மூலங்களுக்கு கூட்டுக் கூட்டம் கூட்ட முடியாது. கூட்டுக் கூட்டம் கூட்டினால் அங்கு 543 மக்களவை உறுப்பினர்களும் 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் கூடி இருப்பார்கள். மொத்தம் 798. அதில் மோடியின் கூட்டணி கட்சியின் மக்களவை உறுப்பினர் 345 மாநிலங்களவை உறுப்பினர்கள் 42ம் சேர்ந்து மொத்தம் 386 உறுப்பினர்கள். இதற்கு செல்வி ஜெயலலிதாவின் கட்சி பெரிதும் பயன்படும்.  மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் போதும் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு மோடிக்குத் தேவை. மொத்தத்தில் அம்மா காட்டில் மழைதான். அந்த சொத்துக் குவிப்பு வழக்கு!!!!!

Tuesday, 20 May 2014

சீனப் படைத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றச்சாட்டு

உலக வரலாறறில் முதற்றடவையாக ஒரு நாடு இன்னொரு நாட்டுப் படைத்துறை அதிகாரிகள்மீது இணையவெளித் திருட்டுக் குற்றச்ச்சாட்டுச் செய்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க அரசின் சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர் ஐந்து சீனப் படைத் துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். Wang Dong, Sun Kailiang, Wen Xinyu, Huang Zhenyu, Gu Chunhui ஆகியோர் மீது குற்றம் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் செயற்படும் படைத்துறைப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் அமெரிக்காவின் அணு ஆராய்ச்சி, உருக்குத் தொழில்நுட்பம், சூரியவலுத் தொழில்நுட்பம் போன்றவை தொடர்பான இரகசியங்களை சீன அதிகாரிகள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களின் அணியானது பிரிவு 61398 என அழைக்கப்படுகிறது.

Westinghouse Electric, Alcoa, Allegheny Technologies, U.S. Steel, the United Steelworkers union, and SolarWorld ஆகிய நிறுவங்களின் கணனிகளள இணைய வெளியூடாக ஊடுருவி இரகசியங்களை 2006-ம் ஆண்டில் இருநநது  சீனர்கள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணனியில் ஊழல் செய்யச் சதி செய்தது, வர்த்தக நலனுக்காக அனுமதியின்றிக் கணனிக்குள் நுழைந்தது, கணனகளின் மாற்றீட்டுக் குறியீடுகளையும் கட்டளைகளையும் சிதைத்தது, அத்துமீறிய அடையாளத் திருட்டு, வர்த்தக இரகசியங்களைத் திருடியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. குற்றம் சுமத்தைப்பட்டவர்களுக்கு 15 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதற்கு அமெரிக்க அரசு சீன அரசிடம் இவர்களைக் கைது செய்து அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதை சீன அரசு ஏற்றுக்கொண்டு இவர்களைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள் அமெரிக்க நிறுவனங்கள், வர்த்தகக் கூட்டமைப்புக்கள், தொழிலாளர் ஒன்றியங்கள் ஆகியவற்றின் காணனிகளை ஊடுருவித் தகவல்களைத் திருடி அவற்றைச் சீன அரச உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.

அமெரிக்கா வேண்டுமென்றே திரிக்கப்பட்ட குற்றச்சாட்டை வைப்பதாக சீனா பதிலுக்குக் குற்றம் சாட்டுகிறது.  உலகிலேயே இணையவெளி ஊடுருவிகளால் அதிகப் பாதிக்கப்படும் நாடு சீனா என்கின்றது சீனா. ஆனால் அமெரிக்க சட்ட மாஅதிபர் தமது நாடு வர்த்தக ரீதியான உளவு வேலைகளில் ஈடுபடுவதுமில்லை அதை ஊக்குவிப்பதுமில்லை என்றார்.  சீனாவில் இருந்து செய்யப்படும் இணைய வெளி உளவு வேலைகள் சீன நிறுவனங்களுக்கு உலகச் சந்தையில் சாதமான நிலையை உருவாக்கும் நோக்குடன் செய்யபப்டுவதாகவும் அவற்றால் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக இழப்பீடு ஏற்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.

ஆனால் எட்வேர்ட் ஸ்நோடன் வெளிக் கொண்டுவந்த இரகசியங்கள் அமெரிக்காவை உலகிலேயே மோசமான இணையவெளி உளவாளியாகக் காட்டிவிட்டது.     இதை நீங்கள் வாசிக்கும் போது அல்லது அதைத் தொடர்ந்து சீனாவும் ஒரு குற்றப்பத்திரிகையை வெளிவிடலாம.

சென்ற ஆண்டு அமெரிக்காவின் Fire Eye என்னும் நிறுவனத்தின்  Mandiant   பிரிவு சீனாவின் இணையவெளி ஊடுருவிகள் எனக் குற்றம் சாட்டப்படும் அணி 61398 பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

வர்த்தக நிறுவனங்களின் இரகசியங்களளத் திருடுவதால் ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் முன்னூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுகீன்றன.


Sunday, 18 May 2014

எரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்

கடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.

எரிபொருள் பாதுகாப்புக் கையிருப்பு
அமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.

எரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்காடு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்டு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
தற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.

எண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்!
உலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து  மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா தன்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது.  அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.





என்ன இந்த ஷேல் எரிவாயு?
ஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும்  களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும். 

ஷேல் வாயு அரசியல்
இரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன் உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன்   இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்த இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும்  பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.

மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம்

இரத்த ஆறு கடந்து  
கண்ணீர்க் கடல் நீந்தி
தீயாகத் தீயில் கருகி
துரோகச் சூறவளியில் சுழன்று
இளமை துறந்து
உறவு இழந்து
குடும்ப இனிமை இழந்து
பள்ளி பிரிந்து
நட்பு மறந்து
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

கத்தும் கடல் அலையாடி
வேகப் படகுகள் பல ஓட்டி
சுற்றும் பகை விரட்டி
தாயக் கடல் தமிழன் ஆள
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

குண்டு மழையிடை முன்னோடி
செங்குருதிப் புனலாடி
பிஞ்சுக் கால்களுடன்
கட்டாந்தரை நடந்து
தாயக மண் காக்க
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

துணையென வந்து
கால்வாரிய 
துரோகிகள் மத்தியிலே
காக்கவென வந்து 
கழுத்தறுத்த இந்தியாவிற்கு
எதிராகக் களமாடி
இனமானம் காக்க
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
இத்தனை கொடுமைகள் மத்தியில்
பிஞ்சுத்தோள் கொடுது
தாயக விடுதலைக்காக
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

பல கோடி செலவழித்து
பல்லாயிரம் சாகடித்து
பாலர்களைச் சிதறடித்து
பாவியர் செய்த போரில்
உணவின்றி உறக்கமின்றி
உரிய மருந்தின்றி
தேசிய உணர்வோடு களமாடி
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

பூகம்பத்துள் பூவென
சூறாவளிக்குள் சுடரென
புயலிடைப் பறவையேன
துயரங்கள் பல சுமந்து
தம் தாகம் என்றும்
தமிழீழத் தாயகம் என முழங்கி
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி


யாரோ எவனோ தன் 
ஒரு தாலி அறுத்தமைக்கு
ஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்த
சேலையணிந்த இத்தாலி முசோலினியின்
சதியை எதிர்த்து எமக்காக
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

சைட்டிஸ்ஸுக்கும் வழியில்லாதவன்
விஸ்கிக்கு ஆசைப்பட்டதுபோல்
இறந்தவர்க்கு அழக்கூட உரிமையில்லா
தேசியக் கூட்டமைப்பு
குடியரசு வேட்பாளர் 
விக்கி ஐயா என்கின்றது
இந்த மாயவாதிகளை நம்பாமல்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

கைப்பேசிக்காரர்கள் கைகளில் ஊடகங்கள் இப்போ
பூடகமாகப் பொய்யுரைக்கும் ஊடகங்களை நம்பாமல்
தாயகம் தேசியம் தன்னாட்சி
என்னும் மும்மணிக்காய் 
மூச்சாகி நின்ற கணமணிகளுக்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...