Monday, 5 May 2014

ஆசியாவைச் சைட் அடிக்கும் அமெரிக்காவும் சுழட்டும் ஒபாமாவும்




ஏப்ரல் மாதம் 24-ம் திகதியில் இருந்து 29-ம் திகதிவரை ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு பயணம் மேற் கொண்டிருந்தார். அவருக்கு சென்ற இடமெல்லாம் ஆரவாரமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. சீன விரிவாக்கற் கொள்கையா அமெரிக்க ஆதிக்கக் கொள்கையா என்ற என்ற போட்டிக்கும் வட கொரியாவின் அணுக் குண்டு ஆராய்ச்சிக்கும்  இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒபாமா ஆசியான் மாநாட்டிற்கு செல்லவிருந்தமை அமெரிக்காவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் இரத்துச் செய்யப்பட்டது. இம்முறையும் சகுனம் சரியில்லை. மலேசியா விமானத்தைத் தொலைத்து விட்டுத் தேடுகின்றது. தென் கொரியா கப்பல் கவிழ்ந்து தலையில் கைவைத்துக் கொண்டிருக்கின்றது.

2013-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இரத்துச் செய்யப்பட்ட பராக் ஒபாமாவில் ஆசியப் பயணம் பின்னர் மத்திய கிழக்கில் சிரியப் பிரச்சனை மற்றும் ஈரானின் அணு ஆராய்ச்சிக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தளர்த்துவது பற்றிய பேச்சு வார்த்தையால் முதலில் தடைபட்டது. பின்னர் உக்ரேன் விவகாரத்தால் இழுபட்டது. நான்கு நாடுகளுக்குமான பயணம் பல பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் அமெரிக்கா ஆசியாவைச் சுரண்டுவதை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

பராக் ஒபாமாவின் நான்கு ஆசிய நாடுகளுக்கான பயணத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த சீன அரச ஊடகம் ஆசியாவின் பெரும்பூதத்தை ஒரு கூட்டுக்குள் அடக்கும் முயற்ச்சி என்றது. அமெரிக்க அதிபரின் ஆசியப் பயணத்திற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக சீன வெள்நாட்டமைச்சர் லத்தின் அமெரிக்க நாடுகளான கியூபா, வெனிசுவேலா, ஆர்ஜெண்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

பராக் ஒபாமாவின் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்:
1. குடுமி சும்மா ஆடாது: வர்த்தகம், வர்த்தகம், வர்த்தகம்.
2. சீனாவைச் சமாளித்தல்.
3. வட கொரியாவை அடக்குதல்.
4. ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு வலுவூட்டல்
5. பிலிப்பைன்ஸிற்கு நம்பிக்கையூட்டல்.

ஆசியச் சுழற்ச்சி மையம்
ஐரோப்பியப் பொருளாதாரங்கள் இனி வரும் காலங்களில் மெதுவாகவே வளர்ச்சியடையும் என்ற நிலையிலும் அமெரிக்கா இனி எரிபொருளில் தன்னிறைவு கண்டு ஒரு எரிபொருள் ஏற்றுமதி நாடாக மாறவிருக்கின்றது என்ற நிலையிலும் அமெரிக்கா, வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஆசிய நாடுகளில் தனது கவனத்தைத் திருப்புவதற்கு ஆசியச் சுழற்ச்சி மையம் எனப் பெயரிட்டுள்ளது. அமெரிக்கா தனது தலைமையில் ஆசிய பசுபிக் நாடுகளுடன் ஒரு பொருளாதார மற்றும் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கனவுகளில் ஒன்றாக இருக்கின்றது. 2012-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசியச் சுழற்சிமையம் என்பது ஒரு கேந்திரோபாய மீள் சமநிலைப்படுத்தல் எனப்படுகின்றது. இதனால் ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் பெயரிலும் பார்க்க மீள் சமநிலைப்படுத்தன் என்ற பெயரே இப்போது அதிகம் பாவிக்கப்படுகின்றது. இது கிழக்கு ஆசியாவையும் பசுபிக் நாடுகளையுமே முக்கிய மாக உள்ளடக்குகின்றது. 2018-ம் ஆண்டு சீனா மொத்தத் தேசிய உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சி விடும் என எதிர்பார்கப்படுகின்றது. அதே வேளை இந்தியா சீனாவிலும் பார்க்க சிறப்பான மக்கள் தொகைக் கட்டமைப்பை கொண்டுள்ளது. சீனாவில் உள்ள இளையோர் தொகை வீகிதாசாரத்திலும் பார்க்க இந்தியாவின் இளையோர் தொகை வீகிதாசாரம் அதிகமாக உள்ளது. இவ்விரண்டு நாடுகளினதும் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளிள் ஐந்து மடங்கு வளரும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் ஒன்றரைப் பங்கு மட்டுமே வளரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சியின் மையப்புள்ளிகளாக இந்த இரு நாடுகளும் இருப்பதுடன் பிரச்சனைக்கு உரிய நாடுகளாகவும் சமாளிப்பதற்கு மிகவும் சிரமமான நாடுகளாகவும் இருக்கின்றன. ஆசியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளையும் திட்டங்களையும் இந்த இரண்டு நாடுகளும் தலைகீழாக மாற்றக்கூடியனவாக இருக்கின்றன. அதே வேளை அமெரிக்காவுடனான வர்த்தகம் இன்றி சீனப் பொருளாதாரம் செயற்படமுடியாத நிலை இருக்கின்றது. அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா அந்த ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் நிதியை அமெரிக்க அரசிற்கு கடனாகக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை இருக்கின்றது. அப்படிச் செய்யாவிடில் அமெரிக்க நாணயத்தின் பெறுமதி சீன நாணயத்துடன் ஒப்பீட்டளவில் தேய்மானம் அடைந்து அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி பெரும் பாதிப்படையும். இதானால் சீனா ஒரு பண்டாக் கரடி எனக் கருதப்படலாம் எனக் கருதும் அமெரிக்க ஆய்வாளர்களும் உண்டு. அதே வேளை படைத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா ஒரு யாளி என அச்சம் தெரிவிக்கும் ஆய்வாளர்களும் உண்டு.

ஆசியச் சுழற்ச்சி மையம் என ஒன்று இல்லையா?
ஹிலரி கிளிண்டன் ஐக்கிய அமெரிக்காவின் அரசு துறை செயலராக இருந்த போது அவரது பயணங்களில் பெரும்பான்மையானவை ஆசியப் பிராந்திய நாடுகளுக்கானதாக இருந்தது. 2011-ம் ஆண்டு ஹிலரி ஆசிய நாடுகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலையை அடைந்துவிட்டன என்றார். அதனால் அமெரிக்காவின் கவனங்களும் வளங்களும் ஆசியாவை நோக்கி நகர்த்தப் பட வேண்டும் என்றார். 2012-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பாதீட்டில் ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தல் வலியுறுத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்பது வெறும் எண்ணக் கரு மட்டுமே அப்படி ஒன்று நடைமுறையில் இல்லை என்போரும் உண்டு. அமெரிக்கக் கடற்படைக் கலன்களில் 55 விழுக்காடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இருக்கின்றன. இவை மேலும் அதிகரிக்கப்படும். ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தலின் முதற் படை நகர்வாக ஒஸ்ரேலியாவின் டார்வின்  துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சீனாவின் அதிருப்தியைச் சம்பாதிக்காமல் இருக்க ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தலில் படைத்துறைக்கான ஒத்துழைப்புப் பற்றி அதிகம் பேசுவது தவிர்க்கப்பட்டது.

பசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கை
அமெரிக்கா ஆசிய பசுபிக் நாடுகளைக் கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கை (Trans-Pacific Partnership) (TPP) ஒன்றைக் கைச்சாத்திட முயல்கின்றது. இதில் ஒஸ்ரேலியா, புரூணே, சிலி, கனடா, ஜப்பான், மலேசியா, மெக்சிக்கோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, வியட்னாம் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த உடன்படிக்கையில் இந்த நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் நாடுகளுக்கிடையிலான வர்த்தகங்களில் சுங்கவரியைக் குறைத்தலும் இல்லாமற் செய்தலும் முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை 65 கோடிகளுக்கு மேலாகும். இதில் மேலும் தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் இணைக்க அமெரிக்கா விரும்புகிறது.

கழுவுற மீனில் நழுவுற மீனாக ஜப்பான்
பராக் ஒபாமாவின் ஆசியப் பயணத்தின் முதற் தரிப்பு ஜப்பான் ஆகும். அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களும் ஜப்பானிய உற்பத்தி நிறுவனங்களும் சம தளத்தில் போட்டி போடுவதற்கு வாய்ப்பாக ஜப்பான் தன் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகள் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது. ஆனால் இந்த விவகாரத்தில் ஜப்பான் கழுவிற மீனில் நழுவுற மீனாக இருக்கின்றது. இதில் ஓர் உரிய உடன்பாடு எட்டாமையினால் அமெரிக்க அதிபர் பராக் ஒபமாவும் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே அபேயும் ஒரு கூட்டறிக்கையை வெளிவிட முடியவில்லை. பசுபிக் கடந்த வர்த்தக உடன்படிக்கையிலும் பெரிதான உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் ஜப்பானும் சீனாவும் கடுமையாக முரண்பட்டுக் கொள்ளும் செங்காகு சிறு தீவுக் கூட்டங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் உடன்படிக்கையின் ஐந்தாம் பிரிவின் கீழ் அமெரிக்கா செயற்படும் என்பதை ஒபாமா உறுதி செய்தார்.

மலேசியாவில் கயிற்றில் நடந்த ஒபாமா
மனித உரிமை மீறல்கள், எதிர் கட்சிகளுக்கு எதிரான மோசமான அடக்கு முறைகள் நிறைந்த மலேசியாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளூர் அரசியல் பற்றிப் பேசாமல் கயிற்றின் மேல் நடப்பது போல நடந்து கொண்டார். மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவுடன் பொருளாதார மற்றும் படைத்துறை ஒத்துழைப்பு மட்டுமல்ல மக்களாட்சியை மேம்படுத்துவது தொடர்ப்பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. சீனாவைப் பொறுத்தவரை மலேசியாவில் ஒரு அமெரிக்கப் படைத்தளம் அமைவது அதற்கு கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறு போல் அமையும். மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நிரிணை சீனாவின் உலக வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையமாகும். மலேசியா தனது மனித உரிமை விவகாரங்களில் அதிக அக்கறை காட்டவேண்டும் என மலேசியத் தலைமை அமைச்சர் நஜிப் ரசாக்கிடம் கூறியதாக ஒபாம தெரிவித்தார். அதே வேளை போலிக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அன்வரை ஒபாமா சந்திக்கவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம வாய்ப்புக்கள் வழங்காமல் மலேசியா பொருளாதாரத்தில் சிறப்படைய முடியாது என்றார் ஒபாமா.

தென் கொரியாவில் வைத்து வட கொரியாவிற்கு மிரட்டல்
வட கொரியா எந்நேரமும் தனது நான்காவது அணுக்குண்டு வெடிப்புப் பரிசோதனையைச் செய்யலாம் என்ற நிலையில் ஒபாமா தென் கொரியாவிற்குப் பயணம் செய்தார். அங்கிருந்து அவர் வட கொரியாவிற்குப் பல மிரட்டல்களை விடுத்தார். வட கொரியா மேலும் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் என்றார். வட கொரியாமீதான பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்படும் என்றார். அத்துடன் நிற்கவில்லை தனது நட்பு நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கா படை நடவடிக்கைகள் செய்ய ஒரு போதும் தயங்காது என முழங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை ஜப்பானியப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தமைக்கு ஜப்பான் மன்னிப்புக் கேட்க வேண்டும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்

பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா அவசியம்
சீனாவால் கிழக்குச் சீனக் கடலில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்காவுடனான உறவு மிக அவசியமானதாக இருக்கிறது. இரு நாட்டுக் கடற்படைகளும் ஏற்கனவே பலதடவைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்பட்டன. இதனால் ஒபாமாவின் பிலிப்பைன்ஸ் பயணம் அமெரிக்காவிற்கு படைத்துறை ரீதியில் வெற்றியாகும். பிலிப்பைன்ஸில் அமெரிக்கப்படைகள் மேலும் அதிகரிக்கப்படவிருக்கின்றன. பிலிப்பைன்ஸ் மேலும் படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவிருக்கின்றது. இரு நாடுகளும் பத்து ஆண்டு கால ஒன்றை ஒன்று பாதுகாக்கும் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திட்டன.

வானத்தில் இருந்து சனியனை இறக்கிய சீனா
சீனா தனது அயல் நாடுகளுடன் உறவை மேம்படுத்தாமல் அவற்றுடன் எல்லை முரண்படுகளை வளர்ப்பதால் அந்த நாடுகள் உலகக் காவற் துறை என தன்னை நினைக்கும் அமெரிக்காவை தங்கள் துணைக்கு அழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா குழப்பிய குட்டையில் அமெரிக்கா மீன் பிடிக்க முயல்கின்றது. அமெரிக்கா உக்ரேனில் இரசியாவுடனும் முரண் பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஒரு போதும் வேண்டாத  ஒன்று இரசியாவும் சீனாவும் இணைவதாகும். இவ்விரு நாடுகளுடன் உலகெங்கும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளும் இணைந்தால்?

Wednesday, 30 April 2014

இந்தியத் தேர்தல் மோடியுடன் மோடி மோதுவதாக மாறிவிட்டது.

இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி என்ற பெருமையைக் காங்கிரசுக் கட்சி இழந்து விட்ட நிலையிலும் மகாத்மா காந்தியைக் கொன்ற கும்பலின் கட்சி பாரதிய ஜனதாக் கட்சி என்பதை இந்தியர்கள் மறந்து விட்ட நிலையிலும் இந்தியப் பொதுத் தேர்தல் நடந்து கொன்டிருக்கின்றது. ஏப்ரல் 7ம் திகதியில் இருந்து தொடர்ந்து 36 நாட்கள் நடைபெறும் இந்தியப் பொதுத் தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் மக்கள் வாக்களித்து விட்டு வாக்குகள் எண்ணப்படும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பிராந்தியத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டது. வேறு ஒரு பிராந்தியத்தில் கட்சிகள் கூட்டணி தொடர்பாகப் பேச்சு வார்த்தை செய்து கொன்டிருந்தன.
இந்தியப் பொதுத் தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெறுகின்றது. ஒன்பது பிராந்தியங்களாகப் பிரித்து வேறு வேறு நாட்களில் தேர்தல் நடக்கின்றது. தேர்தல் நடக்கும் பிராந்தியங்களுக்கு ஏற்ப கட்சிகளின் பரப்புரையின் நிறங்களும் மாறிக் கொன்டிருக்கின்றது. உதாரணத்திற்கு முஸ்லிம்கள் குறைவாக வாழும் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கும் போது பஜகா தனது இந்துத்துவாக் கொள்கையை அதிகம் முன்னிலைப்படுத்துகிறது. தமிழ்நாட்டில்தான் அதிக சுவாரசியமான சுலோகங்கள் வாதங்கள் நடப்பதாக வட இந்திய அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மோடியா லேடியா(ஜெயலலிதா) பஜகாவினரும் அ.தி.மு.கவினரும் மோத மோடியும் இல்லை லேடியும் இல்லை என் டாடி(கருணாநிதி)தான் என்றார் ஸ்டாலின். தேர்தலின் பின்னர் எல்லோருமே கேடிகள்தான்.
ஊழலற்ற ஆட்சி, திறமையான அரச முகாமை, பொருளாதார மேம்பாடு, மத சார்பின்மை, வேலையில்லாப் பிரச்சனை போன்றவை முக்கியமான பிரச்சனையாக இருக்கும் இந்தியாவில் தனிமனித விமர்சனங்களே அதிகம் தேர்தல் பரப்புரையின் போது முன்னிலைப் படுத்தப்படுகின்றன.  வேட்பாளர் தெரிவில் அதிக முக்கியத்துவம் தொகுதியில் உள்ள சாதிக் கட்டமைப்புக்கு கொடுக்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் திருச்சித் தொகுதியில் எல்லாக் கட்சியினரும் ஒரு சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. அடுத்த முக்கியத்துவம் குடும்பத்துக்கு கொடுக்கப்படுகின்றது. உத்தரப் பிரதேசத்தில் அகிலேச் யாதவ் முதலமைச்சராக இருக்கின்றார். அவரது தந்தை முலாயம் சிங்  யதவ், மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  முலாயம் சிங்கை எதிர்த்துப் போட்டியிடுபவர் இன்ன்ம் ஒரு அரசியல்வாதியின் மகள். பாஜகவின் சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சினிமா நடிகை ஹேமமாலினியை ஒரு அரசியல்வாதியின் மகன் எதிர்த்துப் போட்டியிடுகின்றார்.

மாநில அரசு வேறு மைய அரசு வேறு.
நரேந்திர மோடி ஒரு நிர்வாகத் திறன் மிக்கவராகவும் குஜாராத் மாநிலத்தில் தொடர்ந்து பத்து ஆன்டுகளுக்கு மேல் முதலமைச்சராக இருந்து மாநிலத்தை அதிகம் முன்னேற்றினார் என பாஜகட்சியினர் பரப்புரை செய்கின்றனர். குஜராத்திலும் பார்க்க கேரளா, தமிழ்நாடு ஆகிய நாடுகள் பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் முன்னணியில் இருக்கின்றன என காங்கிரசுக் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் பெண்களின் கல்வியில் பெற்றோர் காட்டும் அக்கறை வட மாநிலங்களில் காட்டப்படுவதில்லை இதனால் குஜராத் கல்வியில் பின் தங்கி இருக்கின்றது எனவும் குஜராத்தில் மது விலக்கு நடைமுறையில் இருப்பதால் அங்கு மாநில அரசின் வருமானம் குறைந்து இருக்கிறது எனவும் பதில் விவாதம் முன் வைக்கப் படுகின்றது. இந்தத் தேர்தல் அதிக அளவில் இணையவெளிப் பரப்புரை செய்யப்படுகின்றது. இந்தியாவில் மாநிலத்தில் சிறப்பாக் ஆட்சிய் செய்வதற்கான திறமை வேறு மைய அரசில் சிறப்பாக ஆட்சி செய்வதற்கான திறமை வேறு. அண்மைக்காலங்களாக இந்திய மைய அரசிற்கு கூட்டணிகளை கவனிப்பதிலேயே அதிக வலு விரயமாகின்றது. இந்திய மைய அரசு அயல் ஆடுகளுடனான உறவும் வர்த்தகமும், பாதுகாப்பு, நாணயக் கொள்கை, செலவாணிக் கையிருப்பு, பண வழங்கல் கொள்மை எனப் பலப்பல ஒன்றிகு ஒன்று முரண்பட்டதும் ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடியதுமான வெளிக் காரணிகளையும் உட்காரணிகளையும் சமாளிக்க வேண்டும். இதுவரை இந்தியப் பாராளமன்ற உறுப்பினராகக் கூட இருந்திருக்காதவர் மோடி. தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமைச்சரவை அனுபவமில்லாத பலரை அவர் அமைச்சராக்க வேண்டியிருக்கும்.

ஈழப் பிரச்சனை அலை                                          
ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரசு ஆட்சி செய்த அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் ஓரளவிற்கு அம்பலப்படுத்தப் பட்ட நிலையில், காங்கிரசுக் கட்சியுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லாத நிலையில் எல்லாத் தொகுதிகளிலும் அது தோல்வியடையும் என எதிரர்பார்க்கப் படுகின்றது. ஆனால் எல்லாத் தொகுதிகளிலும் அது கட்டுப்பணத்தை இழக்க வேன்டும் என தமிழின உணர்வாளர்கள் விரும்புகிறார்கள். காங்கிரசுக் கட்சி தனது கட்டுப்பணத்திற்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதவர்களின் வாக்குகளில் தங்கி இருக்கின்றது. குறிப்பாக மலையாளிகள் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசு கட்டும்பணம் இழக்காமல் போகலாம். முஸ்லிம்கள் அதிகமுள்ள தேனித் தொகுதியிலும் காங்கிரசு கட்டுப்பணம் பெறலாம். 39 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரசுக் கட்சி 4 தொகுதிகளில் கட்டுப்பணம் பெறலாம்.  தமிழீழத்திற்கு ஆதரவான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை பாஜகட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தோழர் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வைக்கோ ஐயா இம்முறை பெரு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் விருதுநகரிலும் மேலும் அவரது கட்சியைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஈரோட்டிலும் ஜோயல் தூத்துக்குடியிலும் வெற்றி பெறுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாமகவும் மூன்று தொகுதிகளில் வெற்றியீட்டலாம். தோழர் திருமா சிதம்பரத்தில் இம்முறையும் வெற்றி பெறுவார். விஜயகாந்த் விசயமில்லாதகாந்த் என மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

காந்தி  குடும்பத்தின் அன்னபட்சியின் கீதம்-Swan Song                                             காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது  இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை.  இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை.

இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.

மாமியாரை மாட்டிய மருமகன்
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.

மோடி நல்லவரா கெட்டவரா?
இந்தியத் தேர்தல் களத்தில் விவாதம் இப்போது மோடி நல்லவரா அல்லது கெட்டவரா என்ற கேள்வியைச் சுற்றித்தான் அதிகம் நடக்கின்றது. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகக் கூடாது என்பதைத் தான் தமது பக்க விவாதமாகக் காங்கிரசுக் கட்சியினர் முன்வைக்கின்றனர். அவர்கள் தம் கேடயமாகப் பயன்படுத்தும் மத சார்பின்மை, நிலையான ஆட்சி போன்றவற்றில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. காங்கிரசுக் கட்சி சார்பான ஊடங்கள் மோடியை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் அதிக அக்கறை காட்டுகின்றன.

ஊழல்
பாஜகவின் எடியூரப்பா கர்நாடகாவில் செய்த ஊழல்கள் அதற்கு அங்கு படு தோல்வியை கொடுக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு.    2ஜி அலைக் கற்றை ஊழல்,  நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.

Monday, 28 April 2014

ஆட்டம் காணும் இரசியப் பொருளாதாரமும் அசையாத புட்டீனும்

உலக நிலப்பரப்பின்  ஐந்தில் ஒரு பகுதியை மீண்டும்  தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர  இரசியா முயல்கின்றது.    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீண்டும் இரசிய ஆதிக்க வலயத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் திட்டமாக இருக்கின்றது.     1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம்விழ்ச்சியடைந்த பின்னர்   மீண்டும் சோவியத் ஒன்றிய நாடுகளை ஏதாவது ஒருவகையில்   தன்னுடன் இணைக்க இரசியா    பலவழிகளில் முயன்று கொண்டிருக்கின்றது.   1991-ம் ஆண்டிலேயே சிஐஎஸ் எனப்படும் சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம் என்னும் பெயரில் முதல் இணைப்பு நடந்தது.   இந்தக் கூட்டமைப்பு முதலில் இரசியா, உக்ரேன், பெலரஸ் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து உருவாக்கின. இரு வாரங்கள் கழித்து ஆர்மேனியா, அஜர்பைஜான், கிர்கிஜ்ஸ்த்தான், மொல்டோவா, தேக்மெனிஸ்த்தான், தயிகிசஸ்தான், உஸ்பெகிஸ்த்தான் ஆகிய எட்டு நாடுகள் இணைந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து ஜோர்ஜியா இணைந்தது. இரசியா தனது ஆதிக்க நிலப்பரப்பை விரிவாக்குவதை அதன் எதிரிகள் விரும்பவில்லை. இதனால் ஜோர்ஜியாவிலும் உக்ரேனிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. அவை இரசியாவிற்கு எதிராகத் திரும்பின. இரசியாவிற்கு மேற்காக உள்ள நாடுகளை நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் தம்முடன் ஒன்றன் பின்னர் ஒன்றாக இணைக்க இரசியாவிற்கு கிழக்காக உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுடன் சீனா தனது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதை கடந்த பத்து ஆண்டுகளாகப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த விளடிமீர் புட்டீன்
  • தனது செல்வாக்கை இரசிய மக்கள் மத்தியில் உயர்த்தினார்.
  •  தனது உள்நாட்டு எதிரகளையும் விமர்சகர்களையும் கடுமையாகத் தண்டித்தார்.
  • இரசியப் பொருளாதாரத்தை சீர் செய்து மேம்படுத்தி எரிபொருள் ஏற்றுமதி மூலம் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்தார்.
  • இரசியப் படைகளுக்கு சிறந்த பயிற்ச்சி கொடுத்தார்
  • இரசியாவைன் படைக்கலங்களை நவீன மயப் படுத்தினார்..
  • இவற்றின் மத்தியில் பில் கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் எல்லாம் முந்தி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகின் முதலாம் பணக்காரர் ஆனார்.
  • அவரது சொத்து மதிப்பு 75 பில்லியன் அதாவது 750 கோடி அமெரிக்க டொலர்கள் எனப்படுகின்றது.
தன்னையும் தனது நாட்டையும் பலமாக்கிய புட்டீன் ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டி அதைப் போரில் அடக்கி அதன் பிராந்தியம் ஒன்றை இரசியாவின் ஆதிக்கதிற்குள் கொண்டு வந்தார். உக்ரேனின் கிறைமியாவை இரசியாவுடன் இணைத்தார். இதனால் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைக்களை மேற் கொண்டன.

இதனால் இரசியப் பொருளாதாரம் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது    2014-ம் ஆண்டு இரண்டரை விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த இரசியப் பொருளாதாரம் உக்ரேன் விவகாரத்தால் ஒரு விழுக்கடு மட்டும் வளரும் என இரசியாவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் உலக வங்கி     இரசியப் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு  வரை சுருக்கமடையலாம் என எதிர்வு கூறியுள்ளது.

நிதியுண்டு பயமில்லை
2014-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இரசியாவில் இருந்து 51 பில்லியன் அதாவது 510 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் வெளியேறிவிட்டன.   சில கணிப்பீடுகள் 71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள்   இரசியாவில் இருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்கின்றன.   ஏற்கனவே இரசிய பொருளாதாரத்தின் வலுக் குறைந்தபடியால் 2013-ம் ஆண்டு 62 பில்லியன் டொலர் முதலீடு இரசியாவில் இருந்து வெளியேறியது. முழு ஆண்டுக்குமான 62 பில்லியன் வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் 2014 ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான முதலீடு வெளியேற்றம் மிக அதிகமானதாகும். இதுவரை உக்ரேனுக்கு இரசியா கழிவு விலையில் எரிவாயுவை வழங்கி வந்தது.   இப்போது இரசியா உக்ரேனிற்கு வழங்கும் எரிவாயுவின் விலை 80விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரேன் தனது எரிவாயுவை வேறு இடங்களில் இருந்து வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதுவும்  இரசியாவின் வருமானத்தைப் பாதிக்கும். இரசியா தனது குறுங்கால நிதிப் பிரச்சனையை    அதன் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு 400 பில்லியன் அதாவது 4,000 கோடி அமெரிக்க டொலர்களை வைத்துச் சமாளிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இரசியாவின் வட்டி விழுக்காடு 5.5இல் இருந்து 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில்   இரசியப் பங்குச் சந்தை 11விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.   மற்ற வளர்முக நாடுகளின் பங்குச் சந்தை 3விழுக்காடு மட்டுமே வீழ்ச்சியடைந்திருந்தது.  2014 பெப்ரவரி மாதம் 6.2விழுக்காடாக இருந்த இரசியப் பணவிக்கம் மார்ச் மாதம் 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்கின்றது இரசியப் பொருளாதார அமைச்சு.

கடங்காரா???
கடன்படு திறன் மதிபீடு முகவர் அமைப்பான standard & Poor , ரஷ்யாவின் கடன்படு திறன் மதிப்பினைக் குறைத்துள்ளது.    இது இரசியாவின் நாணய மதிப்பிலும் இரசியாவில் வெளியார் முதலீட்டிலும்   பெரும் பாதிப்பை மேலும் ஏற்படுத்தும்.

சரியாத செல்வாக்கு சரியான செல்வாக்கு
ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்   இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்கலாம்.    இதனால் இரசியப் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் எனக் கருதப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை விளடிமீர் புட்டீனை பணியச் செய்யும் என மேற்கு நாடுகள் எண்ணுகின்றன.   ஆனால் இரசியாவில் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இதனால் ஏற்கனவே உக்ரேனின் கருங்கடல் குடாநாடான கிறைமியாவைத் தனதாக்கிக் கொண்ட உக்ரேன் இனி உக்ரேனின் கிழக்குப் பிராந்திய நகரங்களை ஒன்றன் பின் ஒன்றாக தனதாக்கிக் கொள்ளலாம் என நம்பப்படுகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் கிறைமியாவைப் போலவே இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அங்கு உக்ரேன் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துபவர்கள் இரசியாவின் படைத்துறைப் பயிற்ச்சியை நன்கு பெற்றவர்கள் என்கின்றார் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதி பிலிப் பிறீட்லவ்.

ஏற்கனவே  உக்ரேன் மீது போர் தொடுக்கும் அதிகாரத்தை   இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் பாராளமன்றத்திடம் இருந்து பெற்றுவிட்டார்.    உக்ரேனிய எல்லையில் பெருமளவு இரசியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 2014 மே மாதம் உக்ரேனில் தேர்தல் நடந்து அங்கு ஒரு உறுதியான அரசு அமையவிடாமல் தேர்தலை குழப்பும் நோக்கம் விளடிமீர் புட்டீனிற்கு உள்ளது என மேற்கு நாட்டுப் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த தென் ஒஸ்ஸெற்றியப் போருடன் நேட்டோவின் விரிவாக்கம் ஒரு முடிவிற்கு வந்தது.

பெரிய மீனும் சிறிய மீனும்
ஒரு பெரிய நாடு  ஒரு சிறிய நாட்டைத்  தன்னுடன் இணைக்க முயல்வதும் அதை பார்த்துக் கொண்டு மற்ற சில நாடுகள் எதிர்ப்பதும்,  சில நாடுகள் தாம் உண்டு தம் நாடு உண்டு என இருக்க முயல்வதும்   சில நாடுகள் நடுநிலை வகிப்பது போல் காட்டிக் கொள்வதும் சில நாடுகள் தம் பொருளாதாரத்தில் அக்கறை கொண்டிருப்பதும் முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் போது இருந்த நிலை என அண்டுரு ஸ்ரவேர்ஸ் என்னும் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்துள்ளார். 1914-ம் ஆண்டு உருவான உலகப் போரை அப்போது வலுவாக இருந்த பிரித்தானியாவால் தடுத்திருக்க முடியும் என்பது போல் இப்போது வலுவாக இருக்கும் ஜேர்மனியால் இன்னும் ஒரு ஐரோப்பியப் போரைத் தடுக்க முடியும்.   ஜேர்மனி தனது எரிபொருள்த் தேவையின் பெரும்பகுதியை இரசியாவில் இருந்தே பெற்றுக் கொள்கின்றது. இரசியாவுடனான மோதல்   ஜேர்மனியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.   அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு   இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும்.   ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும்   உறுதியாக நின்றால்    இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும்   என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.    2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொண்ட பின்னர்   அமெரிக்கா சிவனே என உட்கார முடியாமல் ஐரோப்பாவில் ஒரு வல்லரசுடன் ஒரு போர் முனையைத் திறக்க முடியுமா எனபதும் பெரும் கேள்வி. ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது.
உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. அதற்கு என்ன நடந்தது என்பதை இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதுதான் தெரியும்.

உக்ரேன் விவகாரமும் ஜெனிவா போனது
உக்ரேன் பிராந்தியத்தில் பதட்டத்தைத் தணிக்கும் நோக்குடன் இரசியா, உக்ரேன், ஐக்கிய அமெரிக்கா, ஐரோபிய ஒன்றியம் ஆகியவை ஜெனிவானில் கூடின. அங்கு இரசியா கிறைமியா புதிய இரசியாவின் ஒரு பகுதி என்றது.    உக்ரேனியப் பிரச்சனை அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான பிரச்சனை அல்ல    அது உக்ரேனியர்களின் பிரச்சனை.    உக்ரேனில் வாழும் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்றது இரசியா.     பெரிய வெள்ளியில் இருந்து உயிர்த்த ஞாயிறுவரை ஒரு மோதல் தவிர்ப்பு கிழக்கு உக்ரேனில் செய்யப் போவதாக அறிவித்தனர்.   ஆனால் அது கடைப்பிடிக்கப்படவில்லை.



வேட்டியை மடிச்சுக் கட்டிய புட்டீன்
கிறைமியா இணைப்பைத் தொடர்ந்து   கருங்கடலுக்குள் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான யூ.எஸ்.எஸ் டொனால்ட் குக்கிற்கு மிக அண்மையாக இரசியாவின் இரு எஸ்யூ-24 போர் விமானங்கள் 90 நிமிடங்களில் 12தடவைகள் மாறி மாறிப் பறந்து சென்றன. எஸ்யூ-24 போர் விமானங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள பலதடைவகள் முயன்ற போதும் பதில் கிடைக்கவில்லை.   இது இரசியா தனது பிராந்திய ஆதிக்கத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை   எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் பத்து இலட்சம் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் கடந்த இருநூறூ நூற்றாண்டுகளாக கிறைமியயவில் தான் வைத்திருக்கும் கடற்படைத் தளத்தை இரசியா என்ன விலை கொடுத்தும் பாது காக்கும் என உலகிற்கு உணர்த்துகின்றது. கிழக்கு உக்ரேனில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை அடக்கப் போன உக்ரேனியப் படையினர் கட்சி மாறி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்ததாகச் சொல்லப்படுகின்றது. அதே வேளை அங்கு ஏற்கனவே பல இரசியப் படையினர் இரகசியமாக ஊடுருவி விட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஒரு நாட்டின் தயக்கம் இன்னொரு நாட்டின் வாய்ப்பு.
ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தயக்கம் விளடிமீர் புட்டீனுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கின்றது. அத்துடன் பல பொருளாதார நெருக்கடிகள்    இனிவரும் காலங்களில் இரசியாவிற்கு வந்தாலும் இரசிய மக்கள் பெருமளவில் புட்டீனின் பின் நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற முயன்றால் இரசியா தனது எரிபொருளை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்கலாம். இதனால் புட்டீன்  தனது மேற்கு நோக்கிய இரசிய விரிவாக்கத்தை தொடரலாம். இதற்கு இரசியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரோபாயச் சொத்தாக மற்ற நாடுகளில் வாழும் இரசியர்கள் இருக்கின்றனர்.   இவர்களுடன் இரசியா நெருங்கிய உறவைப் பேணுகின்றது.   கிறைமியாவை ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் ஒரு துளி இரத்தம் சிந்தாமல் இரசியா தனதக்கியமைக்குக் காரணம் கிறைமியாவில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதே.

மோல்டோவா
பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர்.   இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால்    அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள்    இரசியாவுடன் இணைந்து விடுவார்கள்.     ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். 

இரசிய குடியேற்ற ஆட்சியும் நேட்டோவும்
எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இது இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும்.   நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால்   மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து   அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக  வாழுகின்றனர்.ஆரம்பம் முதலே உக்ரேன் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நாடு போலாந்து. உக்ரேனில் இருந்த இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச் அவர்களை பதவியில் இருந்து அகற்றி அங்கு மேற்குலகிற்கு சார்பான ஒரு ஆட்சியை அமைப்பதில் போலாந்து அதிக அக்கறை காட்டியது. ஐக்கிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் உக்ரேன் சென்று நிலைமைகள் தொடர்பாக உக்ரேன் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட போலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தோமஸ் சீமோனியக் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெலைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அமெரிக்கப் படையினர் போலாந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைக்களில் ஈடுபடுவதாக இரு தரப்பினரும் பெண்டகனில் ஒடததுக் கொண்டனர். ஆனால் போலாந்தில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினர் உக்ரேனில் எந்த வித படை நடவடிக்கககளும் மேற்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.


பணயக் கைதிகள்
உக்ரேனின் தென் கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க்கில் (Donetsk) உக்ரேன் அரசுக்கு எதிரான இரசியக் கிளர்ச்சிக்காரர்கள் ஐரோப்பாவில் பாதுகாப்புக் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் (Organization for Security and Cooperation in Europe ) கண்காளிப்பாளர்களாகப் பணிபுரியச் சென்ற ஜேர்மனியர்களைப் பணயக் கைதிகளாக்கி உக்ரேனிய அரசு கைது செய்த தமது ஆட்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமநிலையும் சமரசமும்
1991-ம் ஆண்டு நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தன் பொருளாதாரத்தையும் படை வலுவையும் மேம்படுத்திய இரசியா கிழக்கு ஐரோப்பாவில் தன் ஆதிக்க பரப்பை விரிவாக்க முயல்கின்றது. ஐரோப்பாவில் 1991-ம் ஆண்டு குழம்பிய சமநிலை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமநிலையை அடைந்தது. உக்ரேனை தம்முடைய ஆதிக்க வலயத்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை என்ற போர்வையில் மேற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இழுத்தபோது இந்தச் சமநிலைக்கு ஆபத்து உண்டானது. பின்னர் 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்ரேன் விவகாரத்துடன் குழம்பிவிட்டது. சிலியில் அலண்டேயின் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்த சதி வேறு லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொல்ல செய்த சதி வேறு. உக்ரேனில் அரபு வசந்தப் பாணியில் மக்களைத் தெருவில் இறக்கி ஆட்சி மாற்றம் செய்யப் பட்டது. அங்கு குழம்பிய சமநிலை ஒரு பொருளாதாரப் போரின் மூலமும் படை நகர்த்தல்கள் மூலமும் மீள் சமநிலப்படுத்தப்படும். ஆனால் நீண்ட காலம் எடுக்கும்.

Saturday, 26 April 2014

இந்தியப் பாராளமன்றத் தேர்தல் மலையாளிகளுக்கு படுதோல்வியைத் தருமா?

2014 ஏப்ரல் 6-ம் திகதியில் இருந்து மே மாதம் 12-ம் திகதிவரை நடக்கும் இந்தியப்  பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் கேரல மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி மாட்டாது என எதிர்பார்க்கப் படுகின்றது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் காட்சி கேரளாவில் அமோக வெற்றியீட்டியது. அதைத் தொடர்ந்து இந்திய மைய அரசின் அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த எட்டுப்பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேரளாவைச் சேர்ந்த:
 1 ஏகே அந்தோனி முக்கிய அமைச்சான பாதுகாப்புத் துறை அமைச்சராகவும்,
2, சசி தரூர் மனித வளத்துறை இணை அமைச்சராகவும்,
3. கொடிக்குன்னில் சுரேன் தொழிலாளர் துறை இணை அமைச்சராகவும்,
4. வயலார் ரவி கடல் தாண்டிய இந்தியர் விவகார அமைச்சராகவும்,
5 கே வி தோமஸ் நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சராகவும்
6. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள் துறை இணை அமைச்சராகவும்,
7. கேசி வேணுகோபால் வலுவளத்துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றனர்.
 இவர்கள் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஈ அஹமட் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றார்.

இந்தியச் சுதந்திரத்தின் பின்னர் கடவுளின் பூமி எனப்படும் கேரளாவை பொதுவுடமைக் கட்சியினரும் காங்கிரசுக் கட்சியினரும் மாறி மாறி ஆண்டனர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியது. இதுவரை காலமும் எந்த ஒரு பாராளமன்றத் தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபைத் தேர்தலிலோ கேரளாவில் பாரதிய ஜனதாக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றதில்லை

கேரளாவில் இம்முறை 2 கோடியே 42லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்க உள்ளனர். 20 தொகுதிகளில் மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தியாவிலேயா அதிக அளவு படித்தவர்களையும் 25விழுக்காடு முஸ்லீம்களையும், 56விழுக்காடு இந்துக்களையும் கொண்ட கேராளவின் மதவாத்திற்கு ஆதரவு மிகவும் குறைவு. ஆனால் கேரளத் தலித்துக்கள் தாங்கள் காங்கிரசுக் கட்சியால் புறக்கணிக்கப் பட்டதாகக் கருதி சில தலித்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சியை ஆதரிக்கின்றார்கள். ஆனாலும் கேரளாவில் பாரதிய ஜனாதாக் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என ஒரு கருத்துக் கணிப்பும் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் இன்னொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்தன. சென்ற முறை 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சி இம்முறை 9 இடங்களிலும் சென்ற முறை நான்கு இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் கூட்டணி இம்முறை 11 இடங்களில் வெற்றி பெலாம். இதனால் நாரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறாமல் போகலாம். அத்துடன் புது டில்லி அரசில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் மலையாளி அதிகாரிள் பலரும் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருப்பதாலும் சோனியா காந்திக்கு மலையாளி ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பதாலும் பல இந்திய மைய அரசின் மலையாள அதிகாரிகளின் தலை உருளலாம்.

Monday, 21 April 2014

காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா?

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது  இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை.  இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை

இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

Silent Modeஇல் தொடரும் மன்மோகன் சிங்
எங்கும் தேர்தல் என்று வரும் போது தலைமை அமைச்சராக இருப்பவர் தனது அரசு செய்தவற்றைப் பற்றிப் பொறிபறக்கப் பரப்புரை செய்வார். ஆனால் மன்மோஹன் சிங் இப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்.

பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.

ஊழல்
 கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு.    2ஜி அலைக் கற்றை ஊழல்,  நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.

Sunday, 20 April 2014

இந்திய இரசிய விஞ்ஞானிகள் உருவாக்கும் சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள்

இந்திய இரசிய விஞ்ஞானிகள் இணைந்து சிறிய பிரம்மோஸ்-எம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்தியா தாங்கிச் செல்லும் மிக்-29 விமானங்களிலும் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களிலும் இருந்து வீசக்கூடியதாக சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.

பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.

20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.

இந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது







Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...