Friday 19 June 2015

ஜெருசலம் யாருக்குச் சொந்தம்?

அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு வகையில் முக்கியத்துவம் பெற்றது. முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் செயற்பாட்டில் எந்த அளவு தூரம் அதன் பாராளமன்றம் தலையிடலாம் என்பது. இரண்டாவது ஜெருசலம் தனக்குச் சொந்தமானது என இஸ்ரேல் சொல்லுவது எந்த அளவிற்கு உண்மையானது. ஏப்ரகாமிய மதங்கள் எனக் கருதப்படும் யூத மதம், கிருஸ்த்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகிய மூன்றிற்கும் ஜெருசலம் நகர் முக்கியமானதாகும்.

2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது.

இஸ்ரேலியர்களுக்கு என ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசும் இருக்க வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா நீண்டகாலமாக வெளிப்படுத்தும் ஒரு நிலைப்பாடாக இருந்தது. அதே வேளை ஜெருசலம் இந்த இரு அரசுகளுக்கும் சொந்தமில்லாத ஒரு தனிப்பிராந்தியமாக ஐக்கிய அமெரிக்க அரசு கருதி வருகின்றது. அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.  2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய கடவுச்சீட்டுச் சட்டத்தில் கையொப்பமிட்ட ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தில் உள்ளது போல் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடப்படுவதைத் தான் நிறைவேற்றப் போவதில்லை எனத் தெரிவித்தார். அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய சட்டம் அமெரிக்க அரசமைப்பு குடியரசுத் தலைவருக்கு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக வழங்கிய உரிமையை மீறுவது என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. அவருக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் கடவுட்சீட்டு என்பது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடவுட்சீட்டுக்குரியவர் தொடர்பான தகவல் பரிமாற்றப் பத்திரம் என்றும் அதில் என்ன தகவல் இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.

ஜெருசலம் நகர்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்த போது எந்த ஒரு நாடும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலுடன் தூவரக உறவைக் கொண்ட நாடுகள் எல்லாம் தமது தூதுவரகங்களை டெல் அவீவில் மட்டுமே திறந்தன.

 பலஸ்த்தீனியத் தேசியவாதம்
பலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர். அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான். பலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத்  ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது. ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர்.

இஸ்ரேலின் உருவாக்கம்
தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம். ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.

அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.ஏப்பிரஹாம் என்பவரில் இருந்தே அரபுக்களும் யூதர்களும் தோன்றினார்கள். ஏப்ரஹாம் தனது மாற்றாந்தாய் ம்களான சேராவைத் திருமணம செய்தார். அதன் மூலம் பிறந்த  ஒரு மகனான ஐசக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள். ஏப்பிரஹாமின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் இஸ்மயிலின் வழித்தோன்றல்கள் அரபுக்கள் (Genesis 16:1-16). ஏப்பிரஹாமின் உண்மையான வாரிசு யார் என்பதில் அரபுக்களும் யூதர்களும் முரண்பட்டுக் கொள்கின்றனர். எல்லா அரபுக்களும் இஸ்லாமியர்கள் அல்லர். எல்லா இஸ்லாமியர்களும் அரபுக்கள் அல்லர்.


இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின் வாதம். ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர கிலோ மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர கிலோ மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர கிலோ மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.  புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது. பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர்  பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது. சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். இரத்தக் களரியையே கடந்த காலமாகக் கொண்ட புனித நகரான ஜெருசலம் இனிவரும் காலங்களிலும் மூன்று புனித மார்க்கங்களில் இரத்தைக்கறை பூசும் என்பது நிச்சயம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...