Tuesday 14 January 2014

ஈராக்கிலும் சிரியாவிலும் அல் கெய்தா மோதல்

2003-ம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்த ஐக்கிய அமெரிக்கப்படைகள் 2011-ம் ஆண்டு அங்கிருந்து நாலாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களுடனும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட காயப்பட்ட படையினருடனும் வெளியேறின. 2011-ம் ஆண்டின் பின்னரும் ஒரு தொகுதி படையினரை அமெரிக்கா ஈராக்கில் வைத்திருக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. அமெரிக்கா தான் ஈராக்கில் தோல்வியடைந்ததாக அறிவிக்கவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டில் ஈராக்கில் அல் கெய்தாவின் ஆதிக்கம் அதிகரித்தமை ஈராக்கில் அமெரிக்காவின் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்ததாகக் சுட்ட்டிக் காட்டுகின்றது.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் 6000இற்கு மேற்பட்டவர்களை அல் கொய்தா 2013-ம் ஆண்டு கொன்று குவித்தது.
ஈராக்கில் சுமார் அறுபது விழுக்காடு சியா முசுலிம்களும் சுமார் முப்பத்தைந்து விழுக்காடு சுனி முசுலிம்களும் வாழ்கின்றனர்.
ஈராக்கின் சுனி முசுலிம்கள் வாழும் பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் அல் கெய்தா ஆதரவு இயக்கமான Islamic State of Iraq and al-Sham தன் வசமாக்கிக் கொண்டு வருகின்றது. ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் பல பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. அபு பக்கர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஐ.எஸ்.ஐ. எஸ் இயக்கம் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியவுடன் அங்கு ஜபத் அல் நஸ்ரா என்ற அமைப்பை உருவாக்கியது. தீவிரமாகப் போராடிய ஜபத் அல் நஸ்ரா சிரியாவில் பல வெற்றிகளை ஈட்டியது. ஆனால் நளடைவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கும் ஜபத் அல் நஸ்ராவிற்கும் இடையில் பிளவு ஏற்பட்டுவிட்டது. அபு முகம்மது அல் ஜல்வானியின் தலைமையில் ஜபத் நஸ்றா தனிய இயங்கத் தொடங்கியது.  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு லெபனானிலும் தனது களமுனையைத் திறந்துள்ளது. அங்கு சிய முசுலிம்களின் அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தியது.

யேமனில் செயற்படும் அல் கெய்தா   அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா என்னும் பெயரிலும் சுருக்கமாக AQAP எனவும் அழைக்கப்படுகின்றது. இசுலாமிய மக்ரெப்பிற்கான அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) என சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

டிசம்பர் 31-ம் திகதி ஐ.எஸ்.ஐ அமைப்பினர் அஹ்ரர் அல் ஷாம் அமைப்பின் தளபதியும் மருத்துவருமான ஒருவரின் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உடலை கையளித்தனர். இதைத் தொடர்ந்து ஈராக்கிலும் சிரியாவிலும் செய்ற்படும் எல்லாப் போராளிக் குழுக்கழும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமப்பினருக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளனர். ஈராக்கில் பல சியா இசுலாமியர்களுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் கண்மூடித்தனமான தாக்குதல்களை அடிக்கடி மேற்கொள்ளும். இதை அல் கெய்தாவின் பின் லாடனுக்கு பின்னரான தலைவர் ஐமன் ஜவஹாரி கடுமையாகக் கண்டித்தார்.

ஈராக்கிலும் சிரியாவிலும் அல் கெய்தா ஆதரவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு என்று ஒரு பிரதேசம் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதை ஒழித்துக் கட்ட ஈராக்கிய அரசிற்கு அமெரிக்கா சிறிய ஆளில்லாப் போர் விமானங்கள் உட்படப் பல படைக்கலன்களை வழங்கியுள்ளது. மாலியில் அல் கெய்தா பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது பிரெஞ்சுப் படைகள் அங்கு ஆக்கிரமித்து அல் கெய்தாவிடமிருந்து பெரும் நிலப்பரப்பை மீட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த வெளிநாட்டுப் போராளிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த சிரியப் பிரதெசங்களில் மதச் சட்டங்களைக் கடுமையாக அமூல்படுத்தினார்கள். இப்போது எல்லா இயக்கங்களும் கூடி ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவதால் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைக் கைவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தப்பி ஓடுகின்றது. ஆனாலும் ஈராக்கில் ஃபலூஜா நகரை ஐ.எஸ்.ஐ.எஸ் ஜனவரி 4-ம் திகதி கைப்பற்றியது. கடந்த இரண்டு வாரங்களாக ஈராக்கிய அரச படைகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கும் இடையில் அன்பர் மாகாணத்தில் கடும் சண்டை நடக்கின்றது.

துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து செயற்படும் இடைக்கால சிரிய அரசான சிரியத் தேசிய சபை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் எதிராகப் போராடக் கூடிய சுதந்திரத் தேசிய சபை என்னும் ஒரு கூட்ட்டமைப்பை உருவாக்க முயற்ச்சி செய்கின்றது. மதவாத இசுலாமியப் போராளிகளின் கூட்டமைப்பான இசுலாமிய முன்னணியையும் தம்முடன் இணைக்க இடைக்கால அரசு எனப்படும் சிரியத் தேசிய சபை முயற்ச்சி செய்கின்றது. இது வெற்றி அளித்தால் ஜனவரி இறுதியில் ஜெனிவாவில் நடக்கும் பேச்சு வார்த்தையில் அசாத்திற்கு எதிரான போராளிகள் ஒன்றாக இணைந்து பங்கு பற்றுவார்கள். இவர்களுக்கு துருக்கியினதும் சவுதி அரேபியாவினதும் ஆதரவு உண்டு. இந்த இணைப்பு முயற்ச்சி மதவாதப் போராளிக் குழுக்களை மிதவாதக் குழுக்களுடன் ஒன்றிணைக்கும். அத்துடன் மதவாதப் போராளிகளுக்குள் பிளவையும் ஏற்படுத்தலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...