Friday 17 January 2014

ஜப்பானின் நட்புக்கரமும் பற்றத் தயங்கும் இந்தியாவும்.

இந்தியாவும் ஜப்பானும் தமது நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் தேவை ஏற்படும்போது கூடிப் பேசுவதை இருவருடன் இருவர் பேச்சு வார்த்தை எனப் பெயரிட்டுள்ளனர். ஜனவரி ஆறாம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் கடல்சார் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் குடியரசுத் தினத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இற்சுனொரி ஒனோடேராவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனியும் புது டில்லியில் சந்தித்து உரையாடிய போது இருவருடன் இருவர் என்ற ரீதியில் பேசுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிடம் இருந்து இந்தியா சின்மாய்வா யூஎஸ் -2  என்னும் ஈருடக விமானங்களை வாங்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. சின்மாய்வா யூஎஸ் -2 விமானங்கள் கடல் மேற்பரப்பில் படகு போல் மிதக்கவும் கூடியவை.



இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பின்னர் ஜப்பான் எந்த ஒரு நாட்டிற்கும் படைக்கலன்கள் விற்பதில்லை என்ற முடிவில் இருந்து மாறி இந்தியாவிற்கு இந்த ஈரூடக விமானங்களை விற்க முன்வந்துள்ளது. ஜப்பானின் இந்த மாற்றம் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஜப்பானும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்கவிருக்கின்றன என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. 1998இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து ஜப்பான் இந்தியாமீது சில பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே 2007-ம் ஆண்டு எழுதிய அழகிய நாட்டை நோக்கி: ஜப்பானிற்கான எனது பார்வை (Towards a Beautiful Country: My Vision For Japan)  என்னும் நூலில் இந்திய ஜப்பானிய உறவின் முக்கியத்துவத்தை எதிர்வு கூறி இருந்தார். இதுவரை ஜப்பானை ஆண்டவர்களில் சின்சே அபேயே இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒருவராவார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சின்சோ அபே தனது மக்காளாட்சிப் பாதுகாப்பு வைரம் (Democratic Security Diamond) என்னும் முன் மொழிவில் அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, வியட்னாம், ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடன் இணைந்து படைக்கல உற்பத்தியில் ஈடுபடவும் ஜப்பான் விரும்புகிறது. இரு நாடுகளின் தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் குறைந்த ஊதியத் தொழிலாளர்களையும் வைத்து மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் இரு நாடுகளாலும் படைக்கல உற்பத்தி செய்ய முடியும். இது இரு நாடுகளின் படைக்கலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் உலகின் பல நாடுகளுக்கு படைக்கலன்களை விற்பனை செய்யவும் முடியும்.


ஜப்பான் நாடானது இந்துமாக்கடல் மற்றும்  பசுபிக்கடல் நாடுகளையும்  அமெரிக்காவையும் இணைத்து ஒரு பெரும் கூட்டணியை சீனாவிற்கு எதிராக அமைக்க விரும்புகின்றது. இதற்கு இந்தியா சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றது. இந்தியா சீனாவைப் பகைக்க விரும்பவில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய சீன வர்த்தகம். இரண்டாவது ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் ஆதரவுடன் இந்தியா ஒரு வல்லரசாக விருப்பம் கொண்டுள்ளது. பல இந்தியப் பெரு முதலாளிகள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள்.

இந்திய சீன வர்த்தகத்தைப் பற்றி வாசிக்க இந்த இணைப்பில் சொடுக்கவும்:
சீன வேலைப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...