Monday 21 October 2013

சீன விரிவாக்கத்தின் முதல் இலக்கு

சீனாவின் பிரந்திய ஆதிக்கக் கனவினதும் விரிவாக்க இலட்சியத்தின் முதல் இலக்காக தாய்வானே இருக்கிறது. 1979-ம் ஆண்டு சீனா ஐக்கிய அமெரிக்காவிடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் சிறந்த உறவை உருவாக்கியது. சீனா தனது பிரதான எதிரி முதலாளித்துவ நாடுகளல்ல பொதுவுடமை நாடான சோவியத் ஒன்றியமே எனக் கருதியது. சோவியத் ஒன்றியம் சீனாவைத் தாக்கலாம் என்ற ஒரு நிலைமை அப்போது நிலவியதால் அமெரிக்காவும் செஞ் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன. அப்போது சீனாவுடன் அமெரிக்க தனது உறவுக்கான பரிசாக தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒத்துக் கொள்ளவிருந்தது.

தாய்வான் உறவுச் சட்டம்

தாய்வான் அரசு அமெரிக்கப் பாராளமன்றமான கொங்கிரசின் இரு அவைகளான மக்களவையிலும் மூதவையிலும் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தாய்வான் தனித்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. சீனாவிடமிருந்து தாய்வானை ஐக்கிய அமெரிக்கா பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கப் பாராளமன்றம் 1979இல் தாய்வான் உறவுச் சட்டம் என்று ஒரு சட்டத்தை உருவாக்கியது. தாய்வான் உறவுச் சட்டத்தில் சீனக் குடியரசு என்ற பதம் பாவிக்காமல் தாய்வானை ஆளும் அதிகாரம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. ஆனால் அச்சட்டத்தின் படி தாய்வான் ஒரு நாடாக கருதப்பட்டு ஒரு நாட்டுடன் வைத்துக் கொள்ளக் கூடிய இராசதந்திர உறவுகள் யாவும் மேற்கொள்ளலாம். தாய்வானை வெளி அச்சுறுத்தல்களில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்கிறது அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம். அதன் பிரகாரம் இன்று வரை அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் 1984-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. அமெரிக்கா தாய்வான் மீதான சீனாவின் இறைமையை ஏற்க மறுத்து வருகிறது. அமெரிக்கப் பாராளமன்றம் 2007-ம் ஆண்டு வெளிவிட்ட ஆய்வறிக்கை தாய்வான் மீதான சீனாவின் இறைமையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீள் உறுதி செய்தது. அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம் சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எனச் சீனா கருதுகிறது.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பல்
அமெரிக்காவைப் பொறுத்தவரை தாய்வான் அதனது மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல். அமெரிக்காவிடமிருந்து தாய்வான் பல போர் விமானங்களை வாங்கிக் குவித்துள்ளது. தாய்வான் 2013-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேலும் பல நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய விமானங்களை வாங்கவுள்ளது.

சீன அமெரிக்க முறுகல்கள்

சீனப் பெருநாட்டிற்கு எதிராக தாய்வானின் இருப்பிற்கு அமெரிக்கா பேருதவி செய்து வருகிறது. அமெரிக்கா தாய்வானுக்குச் செய்து வரும் படைக்கல விற்பனைகளை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனாலும் அறுபது ஆண்டுகளாக சீனா தாய்வானைத் தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா தடுத்து வருகிறது. 1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 2006இல் அமெரிக்கா ஆறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தாய்வானிற்கு விற்றதால் ஆத்திரமடைந்த சீனா அமெரிக்காவுடனா தனது படைத்துறைத் தொடர்புகளைத் துண்டித்தது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தாய்வானின் முக்கியத்துவம்.
சீனாவின் மூன்று புறம் அதன் எல்லைகள் பல நாடுகளுடனான தரைப் பகுதியே. அதன் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆழமில்லாத கடலால் ஆனது. சீனா தனது நீர் முழ்கி கப்பல் படைகளை விருத்தி செய்ய ஆழ்கடல்களைச் சூழக் கொண்ட தாய்வான் அவசியம் தேவை. ஜப்பானின் கடல் வழிப்பாதைகள் தங்கு தடையின்றி நடப்பதற்கு சுதந்திரமான தாய்வான் உதவியாக இருக்கிறது. தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் சீனாவால் ஜப்பானின் இலகுவான கடற்பாதைக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும். இலங்கையிலும் ஆழ்கடல் கரையைக் கொண்ட அம்பாந்தோட்டையை தனது தளமாகச் சீனா தெரிந்து எடுத்தது தன் எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கருத்தில் கொண்டே. அண்மையில் சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள கடற்பகுதியின் ஆழ பரிமாணங்களை மதிப்பீடு செய்தமை அப்பகுதிக்கு ஏற்ப தனது நீர் மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்காக இருக்கலாம். ஆபிரிக்க நாடுகளின் கனிம வளங்களும் மத்திய கிழக்கின் எரிபொருள்களும் சீனாவிற்கு தங்கு தடையின்றி கிடைக்க சீனாவிற்கு ஒரு பலமிக்க கடற்படை அவசியம். தாய்வானில் சீனா ஒரு கடற்படைத் தளம் இருந்தால் அது பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் ஆதிக்கத்தை உறுதி செய்யும்.

தாய்வானின் சரித்திரம்

தாய்வானை 1623-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சிய் செய்தனர். பின்னர் 1662-ம் ஆண்டு சீனா டச்சுக்காரர்களை விரட்டி தனது ஆட்சியின் கீழ் தாய்வானைக் கொண்டு வந்தது. 1894-ம் 1895-ம் ஆண்டு நடந்த போரில் ஜப்பான் தாய்வானையும் கொரியாவையும் சீனாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பானிடம் இருந்து 1952இல் செய்த சான் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி தாய்வானை ஜப்பானிடம் இருந்து விடுவித்தன. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. 1971இல் தாய்வான் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து விலக்கப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. 1949/50இல் சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சி சீனாவை மக்கள் சீனக் குடியரசு என்றும்(செஞ்சீனா) சீனக் குடியரசு(தாய்வான்) என்றும் இரண்டாகப் பிரித்தது. செஞ்சீனா பொதுவாகச் சீனா என்று அழைக்கப்படுகிறது. அது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஒரு வல்லரசு. அத்துடன் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. பொருளாதார உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. சீனா எப்போதும் தாய்வானைத் தனது ஒரு மாகாணம் என்றே கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

உறவை வளர்த்த இரு சீனாக்கள்

தாய்வான் தன்னை சீனக் குடியரசு என்றும் தாய்வானை சீனா தனது நாட்டின் ஒரு மாகாணம் என்றும் சொல்லி வந்தன. 1992இல் இரு நாடுகளும் உறவுகளை உருவாக்கி வளர்க்க முயன்றன. இதற்காக தாய்வானும் சீனாவும் ஒரு நாடுகள் ஆனால் இரு அரசுகள் என்ற நிலைப்பாட்டை தாய்வான் எடுத்தது. ஆனாலும் இன்று வரை ஒன்றை ஒன்று சந்தேகக் கண்களுடனேயே பார்க்கின்றன.காலப் போக்கில் தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம் என சீனா உறுதியாக நம்புகிறது. வளம் குறைந்த தாய்வானிய மக்களிக்கு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனா இணைய வேண்டிய ஒரு நாடாக மாறலாம் என சீனா நம்புகின்றது.

தாய்வானை நோக்கிய சீனாவின் வியூகம்

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சீன ஏவுகணைகள் தாய்வானைக் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீனா புதிதாக உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய DF-21D ஏவுகணைகள் முக்கியமானவை. இவற்றை Anti-Ship Ballistic Missile (ASBM) என அழைப்பர். 35 அடி உயரமும் 15 தொன் எடையும் கொண்ட DF-21D ஏவுகணைகள் 1200மைல்கள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குகள் வேகத்தில் பாயக் கூடியவை. இவை அமெரிக்கக் கடற்படைக்குப் பெரும் சவாலாகும். இந்த ஏவுகணைகளை எப்படிச் சமாளிப்பது என்று 2012-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஆனால் சீனாவின் DF-21D எந்த ஓர் இடத்திலும் பரீட்ச்சித்துப் பார்க்கப்படவில்லை என்பதால் அதன் நம்பகத் தன்மை பற்றி சில படைத்துறைஆய்வாளர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகளை பறப்பின் போது வைத்து அழிப்பது திசை மாற்றுவது போன்ற உத்திகள் ஆலோசிக்கப்பட்டன. அமெரிக்காவின் புதிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R. Ford இந்த ஏவுகணைகளை சமாளிக்கக் கூடியன என நம்பப்படுகிறது. அமெரிக்கா 2013 மே மாதம் உருவாக்கிய  RIM-162 ESSM "Evolved Sea Sparrow," ஏவுகணைகள் சீனாவின் DF-21D ஏவுகணைகளை அவற்றின் பறப்பின் போது இடை மறித்து அழிக்கக் கூடியவை.  அமெரிக்கா தனது படைத்துறையின் செயற்பாட்டிற்கு செய்மதிகளிலும் இணையவெளித் தொடர்பாடல்களிலும் பெரிதும் தங்கியிருக்கின்றது. செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா உருவாக்கியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இணைய வெளியில் களவாக ஊடுருவி அவற்றைச் செயற்படாமற் செய்யும் திறன் மிக்க இணைய வெளிப்படையணியையும் சீனா உருவாக்கியுள்ளது.




சீனாவின் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சி
2013-ம் ஆண்டு சீனா 2013A, 2013B, 2013C என்னும் பெயரில் தனத் பெருமளவு படையினரைக் கொண்ட தாய்வான் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சிகளைச் செய்துள்ளது. சீனாவின் முப்படைகளும் இதில் ஈடுபடுத்தப் பட்டு உண்மையான சூடுகளுடன் பயிற்ச்சிகள் செய்யப்பட்டன. பெருமளவு படைக்கலன்கள் நகர்வும் இதன் போது பரீட்சிக்கப்பட்டன.

எத்தைனை காலம் அமெரிக்காவால் தாய்வானைக் காப்பாற்ற முடியும்.
நலிவடையும் அமெரிக்கப் பொருளாதாரமும் வலிவடையும் சீனப் பொருளாதாரமும் சீனாவின் கடன் இன்றி அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமலும் அமெரிக்காவிற்கு கடன் கொடுக்காமலும் சீனாவால் தனது பொருளாதாரப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாது. சீனா ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருக்கும் பொருளாதாரத்தை மாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்கு ஒரு வலிமை மிக்க உள்ளூர் சந்தை அதற்கு அவசியம். அதற்கு தாய்வானை தன் நாட்டுடன் இணைத்துக் கொள்வது உதவியாக இருக்கும். அண்மைக் காலமாக தாய்வானில் படைத்துறைச் சமநிலை சீனாவிற்குச் சாதகமாகி வருகின்றது. இதை ஈடு செய்ய தாய்வான் அமெரிக்காவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்க முற்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமெரிக்கா புதிய போர் விமாங்களை விற்காமல் ஏற்கனவே தாய்வானிடம் இருக்கும் அமெரிக்கத் தயாரிப்புப் போர் விமானங்களை தரமுயர்த்த ஒப்புக் கொண்டது. அதுவும் சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆனால் இந்த விமானப் படைத் தரமுயர்த்தல் சீனாவிற்கு சாதகமாகச் சரிந்து கொண்டிருக்கும் படைத்துறைச் சமநிலை சீர் செய்யப் போதாது என்று படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீனா தனது படைத்துறை வலிமையை உள்ளுர்ப் பார்வையாளர்களுக்கும் உலக அரங்கிற்கும் காட்ட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் உள்ளது. சீனா தொடர்ந்து தாய்வானை தன்னுடன் இணைப்பதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சீனாவிற்கு அமெரிக்க சீனாவிற்கு விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. 2020இற்கும் 2025இற்கும் இடையில் சீனா தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...