Saturday 1 June 2013

ஆசியப்படைச் சமநிலையைக் குழப்பும் பாக்கிஸ்த்தான்

சீனாவுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் தந்திரமாக நட்பைப் பேணிவரும் பாக்கிஸ்த்தான் ஆசியாவில் படைவலிமை மிக்க நாடாக மாறிவருகிறது. பக்கிஸ்த்தானின் அதிகரித்து வரும் படை வலிமையும் அரசியல் தேறலும் ஆசியப் பிராந்தியத்தின் படைச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் ஈராகினதும் லிபியாவினதும் அணுக் குண்டு உற்பத்தியிலும் தற்போது ஈரானினதும் வட கொரியாவினது அணுக்குண்டு உற்பத்தியிலும் அதிக அக்கறை செலுத்திய வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் பாக்கிஸ்த்தானிய அரசு இசுலாமியத் தீவிரவாதிகள் கைக்குப் போக விடாமல் பார்த்துக் கொள்கின்றன. பாக்கிஸ்த்தனிடமிருந்துதான் ஈரானுக்கும் வட கொரியாவிற்கும் அணுக் குண்டு உற்பத்தி தொழில்நுட்பம் பரவியது.

1,500களுக்கு கூடிய வீச்சுள்ள ஏவுகணைகளைக் கொண்டுள்ள பாக்கிஸ்த்தானின் அணுக் குண்டுகள் பிராந்திய படைச் சமநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அமெரிக்க ஆட்சேபனையையும் மீறி சீனாவும் பாக்கிஸ்த்தானும் 2013 பெப்ரவரி மாதம் மிகவும் இரகசியமாகச் செய்து கொண்ட அணு மின் உற்பத்தி உடன்பாடு பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டு உற்பத்தியையும் மேம்படுத்த உதவும்.

சீனாவின் படைபல அதிகரிப்புக்கு ஏற்ப இந்தியா தனது படைபலத்தைப் பெருக்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவின் படைபலத்திற்கு ஈடாக தனது பலத்தைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. இந்தியா அணுக்குண்டு உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானியர் புல்லைத் தின்றாவது அணுக்குண்டை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பாக்கிஸ்த்தானிய முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பாக்கிஸ்த்தான் அதன் படை வலிமைக்கு ஈடுகொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.

2013 பெப்ரவரி மாதம் தனது Shaheen-1 (Falcon-1) HATF-IV/Vengeance-IV short-range ballistic missile என்னும் எறியியல் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த பாக்கிஸ்த்தான் அடுத்த கட்டமாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுக் குண்டுகளை ஏவும் திறனைப் பெற முயல்கிறது.  இந்திய படைத்துறை வல்லுனர்களை இலகுவாகக் குழப்ப பாக்கிஸ்த்தானின் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் அணுக்குண்டுகளால் முடியும். பாக்கிஸ்த்தானியப் படைத்துறை நிபுணர்கள் நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய அணுக்குண்டுகள் இந்தியாவுடனான தமது படைத்துறைச் சமநிலையை தமக்குச் சாதகமாகத் திருப்பும் என நம்புகின்றனர். பாக்கிஸ்த்தானிய நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் அணுக்குண்டுகளை முழுமையாக இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் நம்புகின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...