Sunday 4 December 2011

காஸாவைக் கலங்கடிக்கும் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள்

ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. . ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. பதினாறு இலட்சம் மக்களைக் கொண்ட காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்கள்  மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸா வாசிகள் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்களை "இரைச்சல்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இஸ்ரேலியப் படையினர் மீது தாக்குதல் நடந்தால் சில நிமிடங்களுக்குள் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்கள் காஸாப் பகுதியில் தாக்குதல்களை நடத்தும்.

சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும்  ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன. இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்களின் தாக்குதல்களில் பல சிறுவர்கள் உட்படப் பல அப்பாவிப் பொது மக்கள் அடிக்கடி கொல்லப்படுவதுண்டு. இதற்கு இஸ்ரேல் பலஸ்தீனிய தீவிரவாதிகள்  பொது மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பதாக வியாக்கியானம் கூறுகிறது.

மனித உரிமை ஆர்வலர்கள் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்கள் என்றால் கொலை என்று அர்த்தம் என்று கூறுகின்றனர். இஸ்ரேலின் Ben Gurion International Airportஇல பல ஆளில்லாப் போர் விமானங்கள் பல நிலை கொண்டுள்ளன. இஸ்ரேல் பல புதிய ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளது. பொதுவாக வருங்காலங்களில் போர்முனைகளில் ஆளில்லாப் போர் விமானங்கள் பெரிதளவு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...