Wednesday 23 June 2010

இலங்கைக்கு வேண்டாதவர் ஐநா ஆலோசனைக் குழுவில்.


இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்க அமைக்கப் பட்டுள்ள குழு தொடர்பாக இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன் இலங்கையில் ஓர் உயர்மட்டக் குழு கூட்டப் பட்டுள்ளது.

பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடும்போது இலங்கையும் ஒரு வேட்பாளரை நிறுத்த முயன்றது. இலங்கை சார்பில் ஒருவர் போட்டியிட்டால் அது பான் கீ மூனின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்யும். இலங்கைப் பிரதிநிதி போட்டியில் இருந்து விலக திரை மறைவில் சில உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தென் கொரியரான பான் கீ மூனும் அவரது உதவியாளரான சதீஸ் நம்பியார் என்ற மலையாளியும் இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றன.

சர்வ தேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐநா விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கை புரிந்த அட்டூழியங்களை பல அதிர்ச்சியூட்டும் காணொளிகள் மூலமாக வெளிக் கொணர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அது அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கால தாமதத்திற்கான காரணம் இலங்கையுடன் திரை மறைவில் பான் கீ மூன் பேச்சு வார்த்தைகளில் ஈடு பட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டும். கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி இலங்கை ஐரோப்பியாவையோ அல்லது அமெரிக்காவையோ சேர்ந்தவர்கள் ஆலோசனைச் சபையில் இடம்பெறுவதை விரும்பவில்லை. அந்தக் கோரிக்கையை முழுதாக பான் கீ மூனால் நிறைவேற்ற முடியாற் போய்விட்டது. அவர் தன்னிச்சையாகவும் நியமிக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் பாயும். அவர் ஆசியான் நாடுகளின் பிரதிநிதியையும் அமெரிக்கப் பிரதி நிதியையும் ஆபிரிக்கப் பிரதி நிதிகளையும் கலந்தாலோசித்து இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோரை நியமித்துள்ளார். இலங்கைப் போர் குற்றங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா ஒரு திடமான கொள்கையை கடைப் பிடிக்கவில்லை. பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) எப்படி நடந்து கொள்வார் என்று எதிர்வு கூற முடியாது.

பான் கீ மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் அவர்கள் ஏற்கனவே இலங்கையில் அமைக்கப் பட்ட பன்னாட்டு சுதந்திர நிபுணர் குழுவில் (International Independent Group of Eminent Person) இடப் பெற்றிருந்தவர். இக்குழு இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக விசாரணை செய்ய முயன்ற போது இவருக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனால் இவர் தமக்கு வேண்டப்படாதவர் என்று இலங்கை கருதுகிறது. அதனால் அதிர்ச்சியுமடைந்துள்ளது.

ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக இன்னும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக பான் கீ மூன் இலங்கையுடன் கலந்தாலோசித்திருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பான் கீ மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழு தொடர்பாக இலங்கை அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...