Friday, 18 February 2022

ஐரோப்பிய ஒன்றியம் பெருவல்லரசாகுமா (Superpower)?

  


ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரிய, குரோசியா, சைப்பிரஸ், செக் குட்யரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்ரா, நெதர்லாந்து, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவேக்கிய, சிலோவேனியா, ஸ்பெயின், சுவீடன் ஆகிய 27 நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இருகின்றது.  அது ஓர் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும். அதற்கு என ஒரு நாடாளுமன்றம், நீதித்துறை போன்றவை இருந்தாலும் அது ஒரு நாடு அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் ஒரு செழுமையையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு வல்லரசாக வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்றியம் உருவாக்கப்படவில்லை. செழுமைக்கும் அமைத்திக்கும் படைவலிமை அவசியமாகும். 

எது பெருவல்லரசு?

எது பெருவல்லரசு என்பது பற்றி பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் ஆகியவை உலகப் பெருவல்லரசாக கருதப்பட்டன. பனிப்போர்க் காலத்தின் போது அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகப் பெருவல்லரசாகக் கருதப்பட்டன. தற்போது அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக கருதப்படுகின்றது.  இரசியாவும் சீனாவும் உலகப் பெருவல்லரசு என்போரும் உண்டு. அவை இரண்டும் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன என்போரும் உண்டு. உலகப் பெருவல்லரசு என்பது உலகின் எப்பாகத்திலும் தனது ஆதிக்கத்தை தனது பொருளாதார மற்றும் படைவலிமையால் நிலைநாட்டக் கூடியதாகவும் உலக அமைப்புக்களில் தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாகவும் உலக வர்த்தக ஒழுங்கை உருவாக்கக் கூடியதாகவும்  உலக ஒழுங்கை நிலைநாட்டக் கூடியதாகவும் இருக்கும்.

வலிமை மிக்க நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்

பிரான்ஸ் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வல்லரசு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருக்கின்றது. அத்துடன் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் ஆகியவை வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட நாடுகள். G-7 நாடுகளிலும் G-20 நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை 447மில்லியன். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றது. அதன் மொத்த உற்பத்தி உலகின் உற்பத்தியில் 14% ஆக இருக்கின்றது. மற்ற வல்லரசு நாடுகளின் மொத்த உற்பத்தி உலக உற்பத்தியுடன் பார்க்கையில் அமெரிக்கா 15.83%, சீனா 15.82%, பிரித்தானியா 2.2%. பெயரளவு(Nominal) தனிநபர் வருமானம் எனப் பார்க்கும் போது ஐரோப்பிய ஒன்றியம்-$41,504, சீனா $16,642, இந்தியா $2191, அமெரிக்கா $65,100 என இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொண்டன. அவற்றின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பொருளாதாரம் மேம்படும் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிநபர் வருமானம் மேலும் அதிகரிக்கும். உலக வர்த்தகத்திலும் அதன் செயற்பாட்டை முடிவு செய்வதிலும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இணையாக நிற்கின்றது. 

மென்வல்லரசு

ஒரு நாடு வல்லரசா என்பதை அதன் படைவலிமையும் பொருளாதார வலிமையும் முடிவு செய்கின்றன. ஒரு நாடு மென்வல்லரசா என்பதை அதன் அரசியல் மதிப்பு, கலாச்சார விழுமியங்கள், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவை முடிவு செய்கின்றன. பன்னாட்டு அமைப்புக்களில் ஒரு நாட்டுக்கு இருக்கும் ஆதரவும் மென்வல்லரசுத் தனைமையை முடிவு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும். உலகின் முதல்தர மென்வல்லரசாக பிரான்ஸ் இருக்கின்றது. ஜெர்மனி மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமெரிக்காவையும் சீனாவையும் விஞ்சக் கூடிய நிலையில் இருக்கின்றது. வல்லரசு என்பது கண்டங்களைத் தாண்டி தனது படைகளையும் பொருளாதாரத்தையும் மென்வலு அழுத்தத்தையும் முன்னிறுத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தால் அப்படிச் செய்ய முடியும். 2021-ம் ஆண்டு தென் சீனக் கடலின் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் தம் கடற்படையை அங்கு அனுப்பின. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அங்கு படையனுப்பிய வேற்றுப் பிரதேச நாடுகளாக இருந்தன.

பொருளாதாரத்தை மேம்படுத்த படைத்துறை அவசியம்

Alexandar Stubb 2008-ம் ஆண்டு பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய அரசியல் ஒன்றியமாகவும் மிகப்பெரிய ஒற்றைச் சந்தையாகவும் மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருப்பதால் அதை ஒரு உலகப் பெருவல்லரசு (World Superpower) எனச் சொல்லலாம் ஆனால் படைத்துறையும் வெளியுறவுத் துறையும் அதற்கு ஏற்றாற் போல் இல்லை என்றார். 2018-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் ஐரோப்பா தொடர்பான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வைத்தது. பொருளாதார மேம்பாடும் படைத்துறையும் கைகோர்த்துச் செல்ல வேண்டியவை. பிரித்தானியாவின் பொருளாதாரமும் அதன் படைவலிமையும் இணையாக வளர்ந்த போதுதான் அது ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. தற்போது அமெரிக்காவும் அதையே செய்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறை வளர்ச்சிக்கு ஈடாக அதன் பொருளாதாரம் வளரவில்லை. சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தன் படைத்துறையைப் பெருக்குகின்றது.

2014இல் வெளிப்பட்ட வலிமையின்மை

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் தனது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்ட போலாந்து அமெரிக்காவிற்கு பணம் கொடுத்து தனது நாட்டில் அமெரிக்காவை படைத்தளம் அமைக்கும் படி வேண்டியது. இது ஐரோப்பிய நாடு ஒன்று தனது பாதுகாப்பிற்கு இன்னொரு கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைத் தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய சுதந்திரம் அவசியம் என்ற கருத்து உறுப்பு நாடுகளிடையே பரவத் தொடங்கியது. 2022இன் ஆரம்பத்தில் இரசியா உக்ரேனுக்கு எதிராக பெரும் படையைக் குவித்தமை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள இரசிய எல்லையில் இருக்கும் சிறிய நாடுகளை தமது பாதுகாப்பையிட்டு கரிசனை கொள்ள வைத்துள்ளது.  

தனித்துவத்தை விரும்பும் பிரான்ஸ்

பிரான்ஸ் அமெரிக்காவிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்ற விருப்பமுடையது. அது தனக்கு தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றில் பலவற்றை பிரான்ஸால் மலிவு விலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். பிரான்ஸ் தனது கேந்திரோபாய தன்னாளுமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அதே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என பிரான்ஸ் நினைக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு தனியான படையணி தற்போது இல்லை, ஆனால் அதன் உறுப்பு நாட்டுப் படைகளுக்கு என ஐரோப்பிய ஒன்றியம் தனியான படைத்துறை கட்டுப்பாடு-கட்டளையகத்தை வைத்திருக்கின்றது. பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த போது ஒன்றியத்திற்கு என ஒரு படையணி இருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு படையணி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நேட்டோ

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் படைவலிமை அதிகரிக்கும் போது அவை தமது பாதுகாப்பில் நேட்டோவின் முதன்மை நாடான அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைக்கப்படுவதுடன். நேட்டோவின் வலிமையும் அதிகரிக்கும். வலிமை அதிகரித்த நேட்டோவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதிக்கமும் அதிகரிக்கும். அமெரிக்க ஆதிக்கத்தை ஐதாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் அப்படி நடப்பதை விரும்புகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தனி அமைப்பாகப் பார்க்கும் போது அதன் அதிகாரம் அதிக அளவு உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வலிமை மிக்க அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இன்னும் அதிக அளவு அரசியல் ஒன்றிணைப்பு தேவைப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலேயான பிளவுகளால் உருவாகியுள்ள பிரச்சனை சீனாவிற்கு தைவானால் உள்ள பிரச்சனையிலும் மிகச் சிறியது. அதை தீர்ப்பதற்கு மோதல் தேவைப்படாது. ஒன்றிய உறுப்பு நாடுகள் பொருளாதாரம், படைத்துறை, வெளியுறவு தொடர்பாக தங்களது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து ஒன்றியத்திற்கு என பொதுவான ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அது நடக்கும் போது ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுக்கும்

Wednesday, 16 February 2022

உக்ரேனில் புட்டீன்: பதுங்கலா பின்வாங்கலா?

  

2022 பெப்ரவரி 15-ம் திகதி இரசியப் பாதுகாப்புத்துறை உக்ரேன் எல்லையில் இருந்து பத்தாயிரம் படையினரை விலக்குவோம் என அறிவித்தவுடன் உலகப் பங்குச் சந்தைச் சுட்டிகள் அதிகரித்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருந்த அமெரிக்காவின் Dow Jones சுட்டி 400 புள்ளிகளால் அதிகரித்தது. 2022 பெப்ரவரி 14-ம் திகதி இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரேன் நெருக்கடி தணிக்க வாய்ப்புள்ளது எனச் சொன்னவுடன் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி அதிகரித்தது. இரசியப் பங்குச் சந்தையின் சரிவும் குறைந்தது. இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு வார்த்தைக்கு முக்கியமாக படைக்கலக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு இன்னும் இடமுள்ளது என்று அறிவித்தமை போரை தவிர்க்க இரசியா விரும்புகின்றது என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இரசியா படைகளை விலக்கவில்லை மேலும் படைகளை உக்ரேன் எல்லைக்கு அனுப்பியுள்ளது என்றும் தற்போது 150,000படையினர் உக்ரேன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரசியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்

உக்ரேன் நெருக்கடிக்குப் பின்னர் இரசியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வது ஐம்பது விழுக்காட்டால் குறைந்து போயிருந்தது. இந்தோனேசியா, அல்ஜீரியா, எகிப்த்து ஆகிய நாடுகள் இரசியாவிடமிருந்து வாங்கவிருந்த SU-35 போர் விமானங்களை வாங்குவதில்லை என முடிவெடுத்தன. இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை வந்தால் SU-35இன் முக்கிய பாகங்களை இரசியா மேற்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் போகும். அதனால் SU-35இன் செயற்படு திறன் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் எல்லையில் படை குவித்ததைத் தொடர்ந்து இரசியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். உக்ரேன் நெருக்கடியால் எரிபொருள் விலை அதிகரிக்கின்றது. அது இரசியாவின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும். ஆனால் உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடையால் ஏற்படவிருக்கும் பொருளாதாரப் நெருக்கடி எரிபொருள் வருமான அதிகரிப்பால் வரும் நன்மையை இல்லாமற் செய்யலாம். 

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2022/01/blog-post_31.html

போர் வேண்டாம் உக்ரேனைப் பிரிப்போம்

“எமக்கு போர் வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் வேண்டாம்” என்ற இரசிய அதிபர் புட்டீனின் வாசகம் உலகத்தை உலுப்பியுள்ளது. இரசியாவின் பத்தாயிரம் படையினர் விலக்கல் அறிவிப்பை உக்ரேனும் நேட்டோ நாடுகளும் கவனத்துடன் வரவேற்றன. உக்ரேன் நேரில் காணும் வரை அதை நம்ப மாட்டோம் என்றது. அமெரிக்கா தாம் அதை உறுதி செய்து கொள்வோம் என்றன. இரசிய அதிபர் சமாதான சமிக்ஞையை ஒரு புறம் வெளிப்படுத்த மறுபுறம் உக்ரேனின் இரண்டு வங்கிகள் இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதேவேளை இரசிய நாடாளுமன்றம் உக்ரேனின் கிழக்குப் புறமாக பிரிவினை வேண்டி நிற்கும் Donetsk, Luhansk ஆகியவற்றை குடியரசுகளாக அங்கீகரிக்க அதிபரைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இவை புட்டீனின் பின் வாங்கலுக்கான அறிகுறிகள் இல்லை.

இரண்டு கழுகுகள்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் 1990களில் அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினராகவும் வெளியுறவுத்துறைக் குழுவின் உறுப்பினராக இருந்த போது முன்னாள் சோவியத் ஒன்றிய செய்மதி நாடுகளாக இருந்த போலாந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகளை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைப்பதற்கு முன்னின்று உழைத்தார். நேட்டோ விரிவாக்கத்தில் விருப்பம் உள்ளவராக ஜோ பைடன் கருதப்படுகின்றார். ஜெர்மனியை கிழக்கு மேற்கு என இரு நாடுகளாகப் பிரித்து நின்ற பேர்லின் சுவர் 1989-ம் ஆண்டு தகர்க்கப்பட்டமை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. பேர்லின் சுவர் தகர்க்கப் பட்டபோது கிழக்கு ஜெர்மனியில் சோவியத்தின் உளவுத்துறையில் பணிபுரிந்தவர் தற்போது இரசிய அதிபராக இருக்கும் விளடிமீர் புட்டீன். சோவியத் ஒன்றியத்தை நிலை நிறுத்த உழைத்தவர். அவர் கண் முன்னே அது சரிவதை பார்த்துக் கொண்டிருந்தவர்.

உறுதிமொழி பற்றி உறுதி செய்ய முடியவில்லை

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் கிழக்கு ஜெர்மனியை மட்டும் நேட்டோவில் இணைக்கும் மற்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைக்க மாட்டாது என இரசியாவிற்கு ஜோர்ஜ் புஷ் ஒரு உறுதி மொழியை வழங்கியிருந்தார் என இரசியர்கள் நம்புகின்றனர். 12-09-1990இல் அப்படி ஓர் உறுதி மொழி ஜோர்ஜ் புஷ்ஷால் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கப்பட்டது என புட்டீன அடித்துச் சொல்கின்றார். அது பற்றி எந்த எழுத்து மூலமான ஆதாரமும் இல்லை. இப்போது அப்படி ஓர் உறுதி மொழி வழங்கப்படவில்லை என்கின்றன மேற்கு நாடுகள். ஆனால் தங்களுக்கு துரோகமிழைக்கப் பட்டு விட்டதாக பல இரசியர்கள் நம்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 20-ம் நூற்றாண்டில் நடந்த ஒரு புவிசார் அரசியல் விபத்து என விளடிமீர் புட்டீன் கருதுகின்றார். சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என அவர் கருதுகின்றார்.

இளகிய இரும்பென நினைக்கின்றாரா பைடன்

உக்ரேனில் இருந்து பத்தாயிரம் படையினர் விலக்கப்படுவார்கள் என இரசியா அறிவித்தவுடன் உலக மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் நாம் முழு வலிமையுடன் பாதுகாப்போம். உக்ரேனின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என முழங்கினார். இரசியாவின் பத்தாயிரம் படைவிலக்கலை இளகிய இரும்பென நினைத்து அவர் பாய்ந்து பாய்ந்து அடிப்பது போல் அவரது உரை அமைந்திருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் இரு கட்சிகளும் இணைந்து இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் இரசியாமீது முன்பு எப்போதும் இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அறிக்கை விட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் உலகெங்கும் உள்ள நாடுகளையும் திரட்டி பொருளாதாரத்தடை செய்ய வைப்போம் எனவும் பைடனின் உரையில் சூளுரைக்கப்பட்டிருந்தது.  

உக்ரேனின் ஏவ்கணை வலிமை பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2022/02/javelins-t-90-tanks-nlaw.html

புட்டீனின் பிரச்சனைகள்

1, நேட்டோ ஒற்றுமை: புட்டீன எதிர்பார்த்தது போல் உக்ரேனை எப்படி இரசியாவிடமிருந்து பாதுகாப்பது என்பது தொடர்பாக முறுகல் தோன்றவில்லை. அவர்களிடையே எப்படி அணுகுவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்தன. பிரான்ஸ் அதிபரும் ஜேர்மனிய அதிபரும் தமது பாணியில் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஆனால் உக்ரேன் நேட்டோவில் இணைவது தொடர்பாக நேட்டோ தலைவர்களிடம் ஒரே கருத்து இருந்தது. உக்ரேன எந்தப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது என்பது உக்ரேனின் இறைமையுடன் தொடர்புடையது என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். உக்ரேனை இரசியாவிற்கு விட்டுக் கொடுத்தால் இரசியா அத்துடன் நிற்காமல் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துள்ள லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என புட்டீன அடம் பிடிக்கலாம் என நேட்டோ தலைவர்கள் கருதலாம்.

2. பருவ நிலை: 2022 பெப்ரவரி நடுப்பகுதியில் இரசியா உக்ரேனுக்குள் படைகளை அனுப்பினால் அது இரண்டு வாரங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். இரசியாவின் உயர்ந்த எதிர்பார்ப்பு உக்ரேனில் தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்ந்த்துவது ஆகும். உக்ரேனியர்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னால் உறுதியாக திரண்டு நிற்பதுடன் பலர் படையில் சேர விருப்பமும் தெரித்துள்ளனர். மார்ச் மாத ஆரம்பத்தில் உக்ரேனை முடியுள்ள பனி பகுதியாக உருகத் தொடங்கி பனிச்சேறு உருவாகும். அது இரசியப் படையினருக்கான வழங்கல்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விமான மூலமாக உணவு, சுடுகலன்கள், எரிபொருள், படைக்கல உதிரிப்பாகங்களை விநியோகிக்க வேண்டி வரும். அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரேனுக்கு போல்ரிக் நாடுகளூடாக வழங்கியுள்ளது.

3. படைக்கலன்கள்: தரையூடான படை நகர்விற்கு முழு ஆதாரமாக போர்த்தாங்கிகள் செயற்படும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ள போர்த்தாங்கிகளிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையான தாங்கி அழிப்பு ஏவுகணைகள் தற்போது உக்ரேனிடம் உள்ளன. அதனால் இரசியப் படையினர் பெரும் ஆளணி இழப்புக்களை சந்திப்பர். 2014-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்கா உக்ரேனிற்கு படைக்கலன்களையும் பயிற்ச்சியையும் வழங்க $2.7பில்லியனச் செலவழித்துள்ளது. 

4. பொருளாதாரம்: மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற பல நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவரும் போது இரசியா பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்ளும்.

5. உக்ரேனின் உறுதிப்பாடு: உக்ரேனை இலகுவில் மிரட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் இரசியா உக்ரேன் எல்லையில் ஒரு இல்ட்சம் படையினரைக் குவித்தது. உக்ரேன் விட்டுக் கொடுக்காத நிலையில் மேலும் முப்பதினாயிரம் படையினரைக் குவித்தது. அதற்கும் உக்ரேன் மசியவில்லை. 2014 இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னர் 84% உக்ரேனியர்கள் இரசியாவை விரும்புபவர்களாக இருந்தனர். 2019இல் அது 32% ஆக குறைந்தது. உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி 2019 அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் போது ஒரு நடுநிலையாளராக இருந்தார். பின்னர் அவர் இரசியாவை வெறுப்பவராக மாறிவிட்டார். 

6. ஜெர்மனி கடுமையான நிலைப்பாடா? இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜெர்மனி மட்டுமே இளகிய நிலையில் இருந்தது. ஜெர்மனி அதிபரின் நிலைப்பாடு தொடர்பாக ஜெர்மனியிலும் மேற்கு நாடுகளிலும் எதிர்ப்பு உருவானது. ஜெர்மனிய அதிபர் புட்டீனைச் சந்திக்க முன்னரே அவர் தனது நிலைப்பாடு மாறும் என்ற செய்தியை இரசியாவிற்கு தெரியப்படுத்தி இருக்கலாம். உக்ரேன் மீது இரசியா போர் தொடுத்தால் ஜெர்மனூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை குழாயூடாக வழங்கும் Nordstream-2 திட்டத்திற்கு ஜெர்மன் முட்டுக்கட்டை போடும் முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. 

புட்டீன் புகழுக்கு பங்கம்

பெரியதாக வீராப்பு பேசும் புட்டீன் உக்ரேன் திரையரங்கில் அரங்கேற்ற முயன்ற காட்சி உப்புச் சப்பில்லாமல் முடிவது அவரது விம்பத்திற்கு பங்கம் ஏற்படும். அதனால் அவர் வீராப்பு பேசக் கூடிய வகையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நேட்டோவுடன் செய்ய வேண்டும் அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகள் மூலம் ஒரு தாக்குதலை உக்ரேன் மீது செய்ய வேண்டும். இது போன்ற Face saving நடவடிக்கைகள் எதையாவது செய்து தப்ப வேண்டும். அமெரிக்க பைடனும் பிரித்தானிய ஜோன்சனும் பெப்ரவரி 16-ம் திகதி புட்டீன் போர் தொடுப்பார் என அறிவித்த நிலையில் அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல புட்டீன் 15-ம் திகதி படை விலக்கலை அறிவித்தார். 

மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் புட்டீன் உறுதியாக நிற்பார். தனது எல்லை நாடுகளில் நேட்டோ எந்தப் படையையும் நிறுத்தக் கூடாது இரசியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தக் கூடிய வகையில் படைக்கலன்களைக் குவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த அவர் தொடர்ந்து முயற்ச்சி செய்வார்.

புட்டீனின் மீண்டும் சோவியத் உருவாக்கம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/12/blog-post_30.html

கிழக்கு ஐரோப்பாவில் முடியாததை அவர் நடுவண் ஆசியாவில் செய்ய முயலலாம். அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வர துருக்கி எண்ணுகின்றது. அவற்றைப் பொருளாதார அடிப்படையில் சுரண்ட சீனா தொடங்கி விட்டது.  

Monday, 14 February 2022

உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW

  


உக்ரேன் எல்லையில் மேலும் முப்பதினாயிரம் படையினரை நிறுத்தி மொத்தப் படையினர் எண்ணிக்கையை 130,000 ஆக உயர்த்திய இரசியா சொல்கின்றது தான் உக்ரேனை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று. அமெரிக்கா சொல்கின்றது எந்த நேரமும் இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்று. உக்ரேன் அதிபர் சொகின்றார் பதட்டம் வேண்டாம், பதட்டம் எதிரிக்கு சாதகமாக அமையும் என்று. இரசியப் படையினர் விமானத் தாக்குதல்களுடனும் எறிகணை வீச்சுகளுடனும் தாங்கிகளும் கவச வண்டிகளும் முன்செல்ல உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் இரசியப் போர்த் தாங்கிகளும் உக்ரேனின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் கடுமையாக மோதிக் கொள்ளும். உக்ரேன் படையினர் நகரங்களில் மரபு வழிப் போர் முறைமையையும் கிராமங்களில் கரந்தடிப் போர் முறையையும் பின்பற்றலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

உக்ரேனிடம் குறைந்த தாங்கிகள்

இரசியா உக்ரேனுக்கு எதிராக 1200 போர்த்தாங்கிகளை நிறுத்தியுள்ளது. இது உக்ரேனின் மொத்த தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க முன்னூறு அதிகமானதாகும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பக் கூடிய தாங்கிகளிலும் பார்க்க அதிக அளவு தாங்கி அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனுக்கு வழங்கி அவற்றை இயக்கும் பயிற்ச்சியையும் அளித்துள்ளன. போர்க்களத்தில் தாங்கிகளும் தாங்கிகளும் மோதுவது குறைவு சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உருவாக்கிய T-64 தாங்கிகளை தற்போது உக்ரேன் மேம்படுத்தி உற்பத்தி செய்கின்றது. ஆனாலும் உக்ரேன் அரசின் அறிவிப்பின் படி 2014 முதல் 2016வரை உக்ரேனின் 440 போர்த்தாங்கிகளை உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள இரசிய ஆதரவு பிரிவினைவாதிகள் அழித்துள்ளனர். தாங்கிகளை ஏவுகணைகளும் சேணேவிகளும் ( artilleries) அழிக்க வல்லன. 

பிரித்தானிய ஏவுகணைகள்

பிரித்தானியா தனது New Generation Light Anti Tank Weapon (NGLAW) எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளில் இரண்டாயிரத்தை உக்ரேனுக்கு அவசரமாக 2022 ஜனவரியில் அனுப்பி வைத்துள்ளது. பிரித்தானியாவின் BAE, பிரான்ஸின்THALES, சுவீடனின் SaaB, அமெரிக்காவின் RAYTHEON ஆகிய படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து NGLAW எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளை 2002இல் இருந்து உருவாக்கியுள்ளன. பின்லாந்து, லக்சம்பேர்க், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவை விற்பனை செய்யப்பட்டும் உள்ளன. தோளில் காவிச் சென்று ஏவக் கூடிய NGLAW 27.5இறத்தல் எடையுள்ளது. எண்ணூறு மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அது துல்லியமாகத் தாக்கக் கூடிய வகையில் அது கணினிமயப்படுத்தப் பட்டுள்ளது. இதன் பாயும் வேகம் ஒரு செக்கண்டுக்கு 200மிட்டர் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு 440மைல் ஆகும்.

உக்ரேனில் உக்கிரமான பரீட்சைக் களம்

சிரியாவிற்கு முப்பது T-90 போர்த்தாங்கிகளை இரசியா வழங்கியிருந்தது. அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு தனது ஜவலின் ஏவுகணைகளை வழங்கியிருந்தது. சிரியாவில் குர்திஷ்களும் சிரியப் படையினரும் நேரடி மோதல்களை எப்போதும் தவிர்த்தே வந்தனர். ஆனாலும் சிரியாவின் ஐந்து T-90 போர்த்தாங்கிகளை போராளிகள் அழித்திருந்தனர். சிரியப் போரில் இரசியாவின் வலுவற்ற புள்ளி அதன் குழாய்கள் என அறியப்பட்டது. அதை அழித்துவிட்டால் தாங்கி இயங்கும் ஆனால் அதனால் சரியாக படைக்கலன்களை வீச முடியாது. அமெரிக்காவின்ன் Tube-launched optical tracked wire guided missiles (TOW) மூலமாகவே T-90 போர்த்தாங்கிகள் அழிக்கப்பட்டன. ஆனால் உக்ரேனிடமுள்ள ஜவலின் ஏவுகணைகள் TOW ஏவுகணைகளிலும் பார்க்க சிறந்தவை. ஜவலின் ஏவுகணைகளை Fire & Forget ஏவுகணைகள் என அழைப்பர். அவற்றை இலக்கை நோக்கி ஏவுவிட்டால் மிகுதி வேலையை அவையே பார்த்துக் கொள்ளும் இலக்கு அசைந்து சென்றாலும் ஜவலின் தன் திசையையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். T-90 போர்த்தாங்கிகள் தன்னைச் சுற்ற ஒரு புகைக் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியின் அகச்சிவப்பு உணரிகளைக் குழப்பிவிடும் செயற்பாடு கொண்டவை. சிரியாவில் அவை போதிய பாதுகாப்பை வழங்கவில்லை.  ஜவலின் ஏவுகணைகள் மூன்று மைல் தொலைவுவரை பாய்ந்து தாங்கிகளை அழிக்க வல்லவை. இரசியாவின் மிக்ச் சிறந்த தாங்கிகள் T-14 Armata ஆகும். இவற்றில் எதிரியின் ஏவுகணைகளை குழப்பி திசைமாற்றும் திறன் உண்டு. அதனால் அமெரிக்கா தனது ஏவுகணைகளில் கம்பி வழிகாட்டியைப் பயன் படுத்துகின்றது. ஏவுகணைகளில் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் அதன் மூலம் எதிரியின் இலக்கு தொடர்பான தகவல்களை ஏவுகணைக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் ஏவுகணைக்கு இலக்குத் தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும். இதனால் இரசிய தாங்கிகளை அமெரிக்க ஏவுகணைகள் அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனின் சொந்த உற்பத்தி தாங்கிகள்

உக்ரேனியர்கள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது மிகச் சிறந்த படைக்கல உற்பத்தியாளர்களாக இருந்தார்கள். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த பின்னர் தமது படைத்துறை உற்பத்தியை தீவிரப்படுத்தினர். அவர்கள் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளுக்கு ஈடான Stugna-P anti-tank missilesகளை 2018 ஆண்டில் உற்பத்தி செய்தார்கள். அந்த ஆண்டில் மொத்தம் 2500 ஏவுகணைகள் உற்பத்தி செய்தனர். அவை பல இரசிய கவச வண்டிகளையும் வழங்கல் வண்டிகளையும் இரசியா 2014இல் ஆக்கிரமித்த உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அழித்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஜவலின் ஏவுகணைகளை எஸ்தோனியா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

பதுங்கு குழிகள்

குறுந்தூர ஏவுகணைகள் மூலம் எதிரியின் தாங்கிகளை அழிப்பதற்கு சிறந்த மறைவிடங்கள் அவசியமாகும். இரசியப் படைகளை எதிர்பார்த்து மூன்று மாதங்களாக காத்திருக்கும் உக்ரேனியப் படையினர் அமைத்துள்ள மறைவிடங்களை இரசிய விமானங்கள் முன் கூட்டியே அழிக்காமல் இருப்பதில் உக்ரேனின் வெற்றி தங்கியுள்ளது. 1994இல் செஸ்னியப் போராளிகள் குறுந்தூர ஏவுகணைகள் மூலம் பல இரசிய தாங்கிகளை அழித்தார்கள். இரசியாவின் bunker-buster குண்டுகளின் திறனும் உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாகும்.

எண்ணிக்கையில் குறைந்த இரசிய தாங்கிகள்

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், பிரித்தானியா வழங்கிய ஏவுகணைகள், உக்ரேனின் சொந்த தயாரிப்பு ஏவுகணைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் வரும் எண்ணிக்கை இரசியா உக்ரேனுக்கு அனுப்பவிருக்கும் 1200 போர்த்தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பல மடங்காக வரலாம். அவற்றுடன் இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய  ஏவுகணைகளை வீசக் கூடிய Bayrktar TB2 ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி உக்ரேனுக்கு வழங்கியதுடன் உக்ரேனில் அவற்றை உற்பத்தியும் செய்ய அனுமதியும் வழங்கியுள்ளது. அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் ஆர்மினியாவிடமிருந்த இரசிய தாங்கிகளை துருக்கியின் ஆளிலிப் போர்விமானங்கள் துவம்சம் செய்து அஜர்பையானுக்கு வெற்றி கொள்ள வைத்தன.

உலகில் மிகச் சிறந்த தாங்கிகளை உருவாக்கும் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தால் பெரும் சவாலை அங்குள்ள ஏவுகணைகளால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உக்ரேன் அதற்கான தேர்வு நிலையமாகலாம்.

Friday, 11 February 2022

அரபு யூத உறவை மாற்றும் ஈரான்

  

ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வரைக்கும் பாய்ந்து தாக்கக் கூடிய நிலையும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரான் வரை சென்று தாக்கக் கூடிய வலிமையையும் தற்போது பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளைச் சூழவுள்ள பிராந்திய போட்டியில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அரபுக்கள், யூதர், ஈரானியர் என்ற முப்பெரும் இனங்களுக்கிடையிலான் போட்டியையும் அது மாற்றி அமைத்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு உள்ளான அரபு நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுடன் பல வழிகளில் ஒத்துழைக்கின்றன. ஈரானின் படைத்துறை வளர்ச்சியும் அது இரசியா, சீனா, வட கொரியா ஆகியவற்றுடன் அதிகரிக்கும் ஒத்துழைப்பும் அரபி நாடுகளைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது.

இஸ்ரேலுடன் படைத்துறைப் பயிற்ச்சி

ஐக்கிய அரபு அமீரகம், பாஹ்ரேன் ஆகிய் நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஐந்து நாள் போர்ப்பயிற்ச்சியை செங்கடலில் 2021 நவம்பர் மாதம் செய்தன. உலகத்தை வியப்பிற்கு உள்ளாக்கிய இந்தப் போர்ப்ப்யிற்ச்சியைத் தொடர்ந்து 2022 பெப்ரவரி 2-ம் திகதி IMX-22 என்னும் பெயரில் சவுதி அரேபியா, ஓமான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியை நடத்தின. ஏழு ஆண்டுகளாக நடக்கும் இப்போர்ப்பயிற்ச்சியில் இஸ்ரேல் முதற் தடவையாக இணைந்து கொண்டது. பாரசீகக் குடா அரபுக் கடல், ஓமான் வளைகுடா, செங்கடல், வட இந்துமாக்கடல் என பரந்த கடற்பரப்பில் நடந்த இப்போர்ப்பயிற்ச்சியில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவு முக்கிய பங்கு வகித்தது. இஸ்ரேலுடன் அரசுறவை வைத்துக் கொள்ளாத சவுதி அரேபியா அதனுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை மேற் கொண்டமைக்கு காரணம் ஈரானின் படைத்துறை வளர்ச்சி பற்றிய கரிசனையே.

பொது எதிரி ஈரான்

சவுதி அரேபியாவிற்கு வேறு நாடுகள் படைக்கலன்களை அல்லது படைத்துறைத் தொழில்நுட்பங்களை வழங்கும் போது இஸ்ரேல் தவறாமல் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும். ஆனால் சவுதி அரேபியாவின் ஏவுகணை உற்பத்திக்கு சீனா உதவி செய்த போது இஸ்ரேல் ஏதும் பேசவில்லை. சவுதியின் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட மாட்டாது என இஸ்ரேல் நம்பும் அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையில் உறவு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் வளர்ந்துள்ளது. அந்த ஏவுகணைகள் ஈரான் மீது வீசப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என இஸ்ரேல் அறியும். 2020 செப்டம்பரில் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகமும் பாஹ்ரேனும் அரசுறவுகளை ஏர்படுத்திக் கொண்டமைக்கு பொது எதிரியான ஈரானுக்கு எதிரான கூட்டு அமைக்க வேண்டும் என்ற நோக்கமே காரணம். 2012-ம் ஆண்டு ஈரானின் வடக்கு எல்லையில் உள்ள இஸ்லாமிய நாடாகிய அஜர்பைஜானின் விமானத்தளங்களை இஸ்ரேலிய விமானங்கள் பாவிப்பதற்கு இரகசியமாக அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக இஸ்ரேல் தனது படைக்கலன்களை தடையின்றி அஜர்பைஜானுக்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டது. 2020-ம் ஆண்டு நடந்த அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் அஜர்பைஜான் வெற்றி பெற்றதில் துருக்கியினது பகிரங்கப் பங்களிப்பும் இஸ்ரேலின் இரகசியப் பங்களிப்பும் முக்கிய பங்களித்தன. 2021 செப்டம்பரில் ஈரானிய ஊடகம் ஒன்று ஈரானுக்கும் இரசியாவிற்கும் எதிராக அஜர்பைஜானை அமெரிக்கா, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் பாவிக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியிருதது.

ஈரானின் சியா பிறைத்திட்டம்

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் படைத்துறை அடிப்படையிலும் அரசுறவியல் அடிப்படையிலும் வலிமை மிக்க நாடாக ஈரான் இருக்கின்றது. உள்நாட்டிலேயே பல படைக்கலன்களை உருவாக்குவதில் ஈரான் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகின்றது. ஈராக்சிரியாலெபனான்யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் வலிமையாக உள்ளது. ஈராக்சிரியாலிபியாஎகிப்து ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஈரானின் சியா பிறைத் திட்டத்தின் முதல் இலக்கு ஈராக்இரண்டாம் இலக்கு சிரியா. சிரியாவில் ஈரான் செய்த படைத்துறை மற்றும் அரசுறவியல் நகர்வுகள் சியா இஸ்லாமியரான பஷார் அல் அசாத்தை பதவியில் நீடிக்கச் செய்கின்றதுடன் இரசியாவையும் துருக்கியையும் ஈரானுடன் ஒத்துழைக்கச் நிர்ப்பந்தித்துள்ளது. அசாத்தை பதவியில் இருந்து அகற்ற சவுதி அரேபியாஐக்கிய அரபு அமீரகம் உட்படப் பல அரபு நாட்டு ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சி ஈரானின் நகர்வுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சியா பிறைத்திட்டம் நிறைவேறி அதனால் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் திறனையும் பெற்றால அதை மத்திய தரைக்கடலில் ஒரு வல்லரசாக்கும்.  

மேனா பிரதேசம்

அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையில் மேனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் கொடுத்து வந்தது. இப்போது அமெரிக்கா தனது கவனத்தை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து மேனா பிரதேசத்தில் குறைக்கின்றது. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கை எரிபொருள் விநியோகம், கடற்போக்குவரத்து, இஸ்ரேலின் பாதுகாப்பு, இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு, ஈரானை அடக்குதல் ஆகியவை முதன்மையானவை. இஸ்ரேல் படைத்துறையிலும் உளவுத்துறையிலும் முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அயல் நாடுகள் தனித்தோ அல்லது பல ஒன்றிணைந்தோ அதன் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈரான் இஸ்ரேல் கரிசனை கொள்ளும் அளவிற்கு தனது படைக்கல உற்பத்தியை பெருக்குகின்றது. ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியிலும் யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் பலரை அமெரிக்கா அழித்த நிலையிலும் பல அரபு நாட்டு செல்வந்தர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்குவதைக் நிறுத்திய நிலையிலும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம் தீவிரமடைய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் எரிபொருள் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருப்பதால் அது தனது தேவையின் 40%ஐ உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 42% மற்ற அமெரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. தனது தேவையில் 12%ஐ மட்டுமே வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா பெறுகின்றது. அதனால் அமெரிக்காவில் தமது பாதுகாப்புக்கு தங்கியிருந்த வளைகுடா நாடுகள் தமது பாதுகாப்பில் மாற்றம தேவை என்பதை உணர்ந்துள்ளன. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கையில் ஈரானை அடக்குதல் மட்டுமே அதன் அதிக கவனத்தைப் பெறுகின்றது. ஈரானை அடக்கும் பொறுப்பை இஸ்ரேலும் அரபு நாடுகளும் இணைந்து மேற் கொண்டால் தனது பாரம் குறையும் என்பதால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்த்தான் என்னும் ஈரானின் இரண்டு எல்லை நாடுகளில் அமெரிக்கப் படையினர் பெருமளவில் இருந்தமை ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஈராக்கை தனது செய்மதி நாடாக்க ஈரான் விரும்புகின்றது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அமெரிக்கா செலுத்தி வந்த அக்கறை மெல்ல மெல்ல குறைந்து கொண்டு போகின்றது.

மேனா பிரதேசத்திற்கான குவாட் அமைப்பு

அமெரிக்கா, இரசியா, ஐக்கிய அமீரகம், இந்தியா ஆகிய நாடுகளை இணைத்து மேனா பிரதேசத்திற்கான குவாட் அமைப்பு உருவாக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது ஏற்பாடு செய்யப்பட்டது. 2021-10-20-ம் திகதி இந்த நான்கு நாடுகளும் ஒரு மெய்நிகர் கூட்டத்தையும் ஜெய்சங்கர் இஸ்ரேலில் இருக்கும் போது நடத்தினார்கள். மேனா பிரதேசக் குவாட் அமைப்பு ஈரானைக் கையாள்வதுடன் சீனாவையும் அப்பிரதேசத்தில் எதிர் கொள்வதற்கும் மத்திய தரைக் கடலில் இருந்து அரபுக் கடல்வரையான பிரதேசத்தை அந்த நாடுகளும் தமக்கு சாதகமாக வைத்திருப்பதற்கும் உருவாக்கப்பட்டது.

ஈரானின் ஆதரவுடன் வட யேமனில் இருந்து செயற்படும் ஹூதி எனப்படும் அன்சர் அல்லா அமைப்புப் போராளிகள் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் செய்வது. போல் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலை உள்ளது. 2300கிமீஇற்கும் அதிகமான தொலைவில் இருக்கு ஹூதி போராளிகளால் டெல் அவீவ் மீது ஆளிலிப் போர் விமானத்தாக்குதல் செய்ய முடியாது.  ஈரானின் ஆளிலிப் போர்விமானங்களின் பற்ப்பு தூரம் அதிகரிக்கும் போது மேலும் பல மாற்றங்களை மேனா பிரதேசத்தில் எதிர்பார்க்கலாம். 


Monday, 7 February 2022

வேகமாக வளரும் இரசிய-சீன நட்பு

  


மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர். ஜோர்ஜியா, சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளிற்கு தயக்கம் இன்றி படையினரை அனுப்பினவர் புட்டீன். சீனா மற்ற நாடுகளிற்கு தனது படையினரை அனுப்ப தயக்கம் காட்டுகின்றது. அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை. 

வித்தியாசமான இரசிய சீன உறவு 

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற ஒரு கேந்திரோபாயப் பங்காண்மை அல்ல. அந்த உறவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற உயர் நிலை பொருளாதாரக் கூட்டமைப்பும் அல்ல. சீனாவினதும் இரசியாவினதும் ஆட்சி முறைமைகள் வேறுபட்டனவாக இருப்பதால் அந்த உறவு ஒரு கொள்கைக் கூட்டணியும் அல்ல. அதே வேளை அது தேவைக்கு ஏற்ப ஒன்று கூடி பின்னர் கால் வாரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியும் அல்ல. அது அமெரிக்க உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ளவும் இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்ச்சி. இரசியாவும் சீனாவும் 4200கிமீ நீளமான தரை எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு 2006-ம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. சீனா தனது கொல்லைப் புறத்தில் மக்களாட்சியில் வளர்ச்சியடைந்த தைவான் இருப்பதையும் இரசியா தனது எல்லையில் வளருகின்ற மக்களாட்சி கொண்ட உக்ரேன் இருப்பதையும் விரும்பவில்லை. உலகில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைக் கைப்பற்றக் கூடிய வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் கைப்பற்றும் எண்ணம் எந்த நாட்டுக்கும் இல்லை.

எரிபொருள் வர்த்தகம்.

சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பைக் குறைத்து இரசியாவில் இருந்து பெறும் இயற்கை வாயு மூலம் தனது எரிபொருள் தேவையை சமாளிக்க சீனா முயல்கின்றது. சைபீரியா வலு (Power of Siberia) என்னும் எரிவாயுக் குழாய்த்திட்டம் மூலம் இரசியா சீனாவிற்கு சைபீரியாவில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கவிருக்கின்றது. புட்டீனின் சீனப் பயணத்தின் போது இரசியாவின் Rosneft நிறுவனமும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனமும் சீனாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு மில்லிய தொன் எண்ணெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. எரிவாயு விநியோகத்தையும் தற்போது உள்ள ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லிய கன மீற்றர் அளவில் இருந்து 48பில்லியன் கமீ ஆக உயர்த்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. சீனாவின் பொருளாதாரம் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க ஆறு மடங்கு பெரியது. ஆனாலும் உலக அரங்கில் புட்டீனும் ஜின்பிங்கும் ஒருவருக்கு ஒருவர் இணையானவர்களாக செயற்படுகின்றார்கள்.  

இரசிய சீன கூட்டுப் போர்ப்பயிற்ச்சி

Vostok 2018என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியை இரசியாவும் சீனாவும் செய்யதனVostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய் மிகப்பெரிய படைபயிற்ச்சி இதுவாக அமைந்தது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபட்டன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி நடந்தது. Tsentr-2019 (Center-2019) என்னும் பெயரில் 2019 செப்டம்பர் 16-21 வரை இரசியாவும் சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான், கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்ஹ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளும் இணைந்து படைப்பயிற்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தன.

பொருளாதார ஒத்துழைப்பு

2001-ம் ஆண்டில் $10.7பில்லியனாக இருந்த இரசிய-சீன வர்த்தகம் 2021இல் 14 மடங்காக அதிகரித்து $140பில்லியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 35% அதிகரித்தது. இரசியா தனது ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க முயல்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரசியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நடுவண் ஆசிய நாடுகளூடாகவும் நடக்கின்றது. புட்டீனின் பயணத்தில் இரசியாவின் தலைமையிலான யூரோ ஆசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt and Road Initiative) ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

நாட்டுறவிலும் உயர்ந்த நட்பு

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவிலும் பார்க்க ஜின்பிங்கிற்கும் புட்டீனிற்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்கின்றது. இருவரும் தத்தம் நாடுகளைத் தாமே உயிருள்ளவரை ஆளவேண்டும் என விரும்புகின்றார்கள். இருவரும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் மனித உரிமை என்னும் பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றன என இருவரும் கருதுகின்றனர். நேட்டோ விரிவாக்கத்தை இரசியா எதிர்ப்பதை ஜீ ஜின்பிங் ஆதரிக்கின்றார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றார் புட்டீன்.

சீனாவிற்கு சாதகமான உறவா?

இரசிய சீன உறவு சீனாவிற்கு இரசியாவிலும் பார்க்க அதிக நன்மையளிப்பதாக இருக்கின்றது என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவரின் கவனம் முழுமையாக சீனாவின் பக்கம் போகாமல் உக்ரேன் பக்கமும் போகச் செய்வதாக புட்டீன் உக்ரேனுக்கு எதிராகச் செய்யும் படை நகர்வுகள் அமைந்துள்ளன. பராக் ஒபாமா ஆசிய சுழற்ச்சி மையம் என்ற முன்னெடுப்பைச் செய்ய முயன்றபோது இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்ததால் அவர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா பன்னாட்டுக் கடல் பிராந்தியம் எனக் கருதும் தென் சீனக் கடலில் சீனா இரு செயற்கைத் தீவுகளை அமைத்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு எதிராகச் செய்ய முயலும் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்கு சீனாவில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரு படி உறவை உயர்த்தும் கூட்டறிக்கை

2021 ஜனவரியில் சீனாவின் ஊடகத்தில் இரசிய அதிபர் புட்டீன் எழுதிய Russia and China: A future-oriented strategic partnership என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இரசிய சீன உறவின் மேம்பட்ட நிலைக்கு சான்றாகி நிற்கின்றது. 2022 பெப்ரவரி 4-ம் திகதி இரு நாட்டுத் தலைவர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐயாயிரத்தி முன்னூறுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்த நீண்ட அறிக்கையில்:

1. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது உள்ள ஒன்றிற்கொன்று நன்மையளிக்கும் சிறந்த உறவை தொடர்ந்தும் பேணுவதும் மேம்படுத்துவதும்;

2. இரசியாவின் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt & Road Initiative) இணைந்து செயற்படுவது.

3. ஆர்க்டிக் வலயத்தில் இணைந்து செயற்படுவது.

4. இரு நாடுகளும் உலக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவாலையிட்டு கரிசனை கொண்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இன்னொரு நாட்டின் பாதுகாப்பை பலியிடக் கூடாது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

5. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இரு நாடுகளும்

அறம்சார் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் விதிகளுக்கமைந்த உலக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.

6. நேட்டோ விரிவாக்கத்தை இரு நாடுகளும் எதிர்க்கின்றன. (உக்ரேன் என்ற வார்த்தையே அந்த கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.)

7. இரசியா-சீனா-இந்தியா என்றவடிவத்தில் ஒத்துழைப்பை விரும்புகின்றோம்.

8. கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒத்துழைக்க விரும்புகின்றோம்.

இரசியாவும் சீனாவும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது அவற்றின் பொது எதிரிகளுக்கு பெரும் சவாலாகும். பல நட்புக்களின் வலிமையை பொது எதிரியே முடிவு செய்கின்றான். அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குளிகால ஒலிம்பிக்-2022இல் நடுங்குகின்றது.

இரசிய சீனக் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.bilaterals.org/?joint-statement-of-the-people-s

Thursday, 3 February 2022

அமெரிக்கத்தாக்குதலில் ஐஎஸ் தலைவர் தற்கொலை

 

அமெரிக்காவின் உலங்கு வானூர்திகளு தாக்குதல் ஆளிலிவிமானங்களும் செய்த தாக்குதலில் ஐ எஸ்  எனப்படும் இஸ்ல்லாமிய அரசு  அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 03-02-2022 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 


சிரியாவின் வட மேற்குப் பகுதியில் துருக்கியை ஒட்டியுள்ள இத்லிப் மாகாணத்தின் Atmeh என்னும் கிராமத்தில் ஒலிவ் மரங்களால் சூழப்பட்ட ஒரு மூன்று மாடிக்கட்டிடத்தில் ஐ எஸ் தலைவர் அல்-குரேஷி தங்கியிருந்தார். அவரது வீட்டின் மீது அமெரிக்கச் சிறப்புப் படையணியினர் அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தியபோது கட்டிடத்தின் உள்ளிருந்து பெரிய குண்டு வெடிப்பு நடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. கட்டிடம் முற்றுகையிடப்பட்டுள்ளது சரணடையுங்கள் என்ற உரத்த அறிவிப்பைக் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். அல் குரேஷி செய்த தற்கொலைக் குண்டு வெடிப்பினால் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா தெரிவித்தது.

தாக்குதலுக்கு முன்னர் அல்-குரேஷி இருந்த வீட்டைச் சுற்றவர உள்ள வீடுகளின் முன்னர் உலங்கு வானூர்தியால் இறக்கப்பட்ட அமெரிக்கப் படையினர் அவ்வீடுகளில் உள்ள பெண்களையும் சிறுவர்களையும் வெளியேறும் படி பணித்தார்கள். 

 2019-ம் ஆண்டின் பின்னர் சிரியாவில் அமெரிக்கப் படையினர் செய்த இந்தத் தாக்குதல் இரண்டு மணித்தியாலங்கள் நடந்தது. கட்டிடத்தின் சிதைபாடுகளுக்குள் இருந்து கொல்லப்பட்ட நான்கு பெண்களினதும் ஆறு சிறுவர்களினதும் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 13 பேர் அங்கு கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. தாக்குதல் செய்த இருபத்தி ஐந்து அமெரிக்கப் படையினரும் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.


குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட சிரியாவில் உள்ள கொபானி நகரத்தில் உள்ள வான்படைத்தளத்தில் இருந்தே அமெரிக்க உலங்கு வானூர்திகள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.  குர்திஷ் போராளிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியக் குடியரசுப் படையினரின்(Syrian Democratic Force) உச்தவியுடன் தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. 

தமது இருப்பிடங்களை மிக இரகசியமாகவும் அடிக்கடி மாற்றிக் கொண்டும் வாழும் ஐ எஸ் அமைப்பின் தலைவரை ஒரு துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தமை அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். 

ஈராக்கிலும் சிரியாவிலும் 2010களில் குர்திஷ் மக்களை ஐ எஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்தனர். அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக கடும் தாக்குதல் செய்து வருகின்றனர். 

2019-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கியரான அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை தமது தலைவராக ஐ எஸ் அமைப்பின் சுரா சபை தெரிவு செய்தது. 

பல்லாயிரக் கணக்கான யதீஷிய பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிய ஐ எஸ் அமைப்பின் தலை கொய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே. அமெரிக்காவின் திமிர் அதிகரிக்கின்றது என்பது தான் கவலைக்குரியது.

Wednesday, 2 February 2022

அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய சீன ஹைப்பர்சோனிக் விஞ்ஞானி

 



ஹொங் கொங்கில் இரகசியமாகச் செயற்பட்டு வந்த பிரித்தானிய உளவுப் பிரிவான எம்.ஐ.16இன் உதவியுடன் சீனாவின் ஹைப்பர்சோனிக் (மீயுயர்-ஒலிவேக) ஏவுகணைத்துறையில் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் காத்திரமான இரகசியங்களுடன் அமெரிக்காவிற்கு தப்பி ஓடியுள்ளார். Aviation Industry Corporation of China என்ற படைத்துறையைச் சேர்ந்த சீன நிறுவனத்தின் hypersonic glide vehicle உருவாக்கும் திட்டத்தில் இவரும் பணிபுரிந்திருந்தார். சீனாவின் இரண்டாயிரம் மைல்கள் பாயக்கூடிய DF-17 ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மேற்கு நாடுகள் 5-ஜீ அலைக்கற்றையை நடை முறைப்படுத்துவதில் திணறிக் கொண்டிருக்கையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையையும் தாண்டி சென்றுள்ளது. படைத்துறையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவது அதன் படைவலிமையை பலவகையில் முன்னேற்றிக் கொன்டிருக்கின்றது. செய்மதி, தொழில்நுட்பம், ஏவுகணைத்தொழில்நுட்பம், அலைக்கற்றைத் தொழில்நுட்பம், துளிம இயந்திரவியல் (quantum mechanics), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆகியவற்றை இணைத்த படைக்கலன்களை உருவாக்குவதில் சீனா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் கனவு 2030இல் தன்னை ஒரு ஈடு இணையற்ற வல்லரசாக்க வேண்டும் என்பதே.

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, இரண்டாவது பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் எனவும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் எனவும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை. அதை எப்படித்தடுப்பது என சீனாவின் போட்டி நாடுகள் தீவிர முயற்ச்சி செய்வதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் முக்கிய பகுதியான மிதவை வண்டி (Glide Vehicle) தொழில்நுட்பம், ஏவுகணைகளை (Missiles) ஏவூர்திகளில் (Rockets) இணைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சீனாவில் இருந்து வெளியேறிய விஞ்ஞானி அறிவும் தகவல்களும் கொண்டிருந்தார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமானதாகும். அத்துடன் மிதவை வண்டி தொழில்நுட்பம் அந்த ஏவுகணையை எதிர்பாராத பதையில் இட்டுச்செல்வதால் அதை சுட்டு வீழ்த்துவதும் கடினம். இந்த தொழில்நுட்பம் பற்றி அறிந்த சீன விஞ்ஞானிக்கு உரிய பதவி உயர்வை சீனாவின் பொதுவுடமைக் கட்சி வழங்காமையினால் அவர் கடும் விரக்தியடைந்திருந்தாராம்.

ஏவூர்திகளில் மிதவை வண்டிகளையும் ஏவுகணைகளையும் இணைக்கும் தொழில்நுட்பம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/10/rockets.html

நாடு தாவிய சீன விஞ்ஞானி ஓர் உயர்தர விஞ்ஞானி அல்லர். அவரு நடுத்தர நிலையில் உள்ள ஒருவரே. ஆனாலும் அவர் கடத்திக் கொண்டு செல்லும் தகவல்கள் அவரிலும் பார்க்க பெறுமதி மிக்கதாக இருக்கும். பிரித்தானியாவில் கல்வி கற்ற அந்த சீன விஞ்ஞானி ஒரு துடுப்பாட்டப் பிரியருமாகும். ஹொங் கொங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த பிரித்தானிய எம்.ஐ.16இன் உளவாளியுடன் அவர் தொடர்பு கொண்டு தனக்கும் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மேற்கு நாட்டில் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாராம். அத்தக் கோரிக்கை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயிடம் தெரிவிக்கப்பட்டதாம். உடனே இரண்டு அமெரிக்க உளவாளிகளும் மூன்று பிரித்தானிய உளவாளிகளும் அந்த விஞ்ஞானியையும் அவரது குடும்பத்தினரையும் சீனாவில் இருந்து வெளியேற்றத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களாம்.

2021 ஓகஸ்ட் மாதம் இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானி ஒருவர் துரோகச் செயலுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். எப்படிப்பட்ட துரோகச் செயல் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவர் தொழில்நுட்பத்தகவல்களை இரசியாவின் போட்டி நாடுகளுக்கு விற்பனை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சீனா விஞ்ஞானியை கடும் ஆபத்துக்களுக்கு நடுவில் கடத்திச் சென்றமை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிலும் பார்க்க சீனா முன்னிலையில் இருக்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது. சீன விஞ்ஞானி கொண்டு வரும் தகவல்கள் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உற்பத்தியைத் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...