Thursday, 9 December 2021

இடியப்பச்சிக்கலைத் தெளிவாக்கிய மோடி புட்டீன் சந்திப்பு

  


2021 டிசம்பர் 6-ம் திகதி இரசிய அதிபர் புட்டீன் இந்தியா சென்று தலைமை அமைச்சர் மோடியுடன் ஒரு குறுகிய நேர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளார். புட்டீன் 2021இல் செய்த இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கானதாக அமைந்துள்ளது. முதலாவது பயணமாக அமெரிக்க அதிபரைச் சந்திக்க ஜூன் மாதம் ஜெனீவாவிற்கு சென்றிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களிடையே நடந்த 21வது இந்திய இரசிய உச்சி சந்திப்பு இதுவாகும். இரசியாவின் சென் அண்டுரூ கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்ட நான்கு வெளிநாட்டவரகளுள் நரேந்திர மோடியும் ஒருவராவர். தனிப்பட்ட ரீதியில் இருவருக்கும் இடையில் சிறப்பான நட்பு நிலவுகின்றது. அதாவது chemistry நல்லா workout ஆகுது.

படைக்கலன் கொள்வனவால் வலிமையடைந்த உறவு

இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவது 1962-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து மிக்-21 போர் விமான ங்களை கொள்வனவு செய்ததில் இருந்து ஆரம்பித்தது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் படைக்கலன்களை கொள்வனவு செய்வது முக்கிய பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளும் இணைந்து பல படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றன. அதில் முக்கியமானது பிரம்மோஸ் ஏவுகணைகளாகும். இரு நாட்டு கூட்டு உற்பத்தியில் ஆரம்பிக்கப் பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் சரிவரவில்லை. செலவு அதிகம் எனச் சொல்லி இந்தியா அதிலிருந்து விலகி விட்டது. அதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படவில்லை. 2011இல் இருந்து 2015 வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் படைக்கலன் இறக்குமதில் 70% இரசியாவில் இருந்து செய்யப்பட்டது. அதன் அடுத்த ஐந்தாண்டுக் காலப்பகுதியான 2016-2020இல் அது 49% ஆகக் குறைந்து விட்டது. அதே காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவை பெரிய பாதுகாப்பு பங்களி நாடாக (Major Defence Partner) அறிவித்தது. அதன் மூலம் பல புதிய படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டது. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய மறுக்கும் நீர்மூழ்கிகளை அணுவலுவில் இயக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா இரசியாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது.

சிக்கலான உறவு

2014-ம் ஆண்டில் இருந்து வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்படுகின்றது. அதே ஆண்டு இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்க இரசிய உறவில் முறுகல் தீவிரமடைந்துள்ளது. அதே ஆண்டு தென் சீனக் கடலில் சீனா செயற்கை தீவுகளை உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அமெரிக்க சீன உறவில் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சீனா தைவானை தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவும் சீனாவும் தமக்கிடையிலேயான உறவை மேம்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை உறுதி செய்ய குவாட் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றது. அமெரிக்காவிடமிருந்து எல்லா படைக்கலன்களையும் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும் இந்தியாவால் கொள்வனவு செய்ய முடியாது. அமெரிக்கா எல்லாவற்றையும் மற்ற நாடுகளுக்கு வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல சில விற்பனைகள் மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்தப்படுவதுடன் சிலவற்றிற்கு இறுக்கமான அறிவுசார் காப்புரிமையை அமெரிகா கடைப்பிடிக்கின்றது. இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்தால் இரசியா பாக்கிஸ்த்தானிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யலாம் என்ற செய்தியை இரசியா மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் அத்துமீறல்களைச் செய்வதை தடுக்க இந்தியாவிற்கு அமெரிக்காவின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சாதகமாக இரசியா தனது இரத்து அதிகாரத்தை பாவிப்பது வழமை. அதற்காக இரசியாவின் உறவு இந்தியாவிற்கு அவசியமாகின்றது. இந்தியாவின் இந்த நிலையை சமாளிக்க பிரான்ஸ் முன்வந்தது. பிரான்ஸ் தேவையான படைக்கலன்கள் தேவையானபோது ஐநா இரத்துப் பாவனை என்ற அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பிரான்ஸ் தயாராகியது. இந்தவிதமான இடியப்பச் சிக்கலின் நடுவில் மோடி – புட்டீன் சந்திப்பு நடந்தது.

எஸ்-400 வான் பாதுகாப்பு முறைமை

இந்தியாவிற்கான இரசியத் தயாரிப்பு வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400இன் விநியோகத்தை துரிதப் படுத்துமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே புட்டீன் தன் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். எஸ்-400 பாக்கிஸ்த்தான் – இந்தியப் படைத்துறைச் சமநிலையை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும். சீனாவிற்கும் பிரச்சனையாக அமையும். இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிற்கு எதிராக படைக்கலன் விற்பனை தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று மூதவை உறுப்பினர்கள் ஒரு சட்ட மூலத்தை அமெரிக்க நாடளுமன்றத்தில் சமர்பித்ததுடன் குவாட் அமைப்பின் உறவை பாதிக்கும் எந்த ஒரு தடை உத்தரவிற்கும் அமெரிக்க அதிபர் உடன்படக் கூடாது என்ற கோரிக்கையையும் அவரிடம் விடுத்தனர்.

எஸ்-400 பற்றிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2021/08/400-f-35.html

2+2 உரையாடல்

அமெரிக்காவும் இந்தியாவும் 2+2 உரையாடல் என்னும் பேச்சு வார்த்தையை ஆண்டு தோறும் இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து நடத்திவருகின்றனர். இவை இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் உலக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதை உறுதி செய்கின்றன. அதே போன்ற உரையாடலை இனி இந்தியாவும் இரசியாவும் செய்ய மோடி – புட்டீன் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா அமெரிக்காவிற்கு கொடுக்கும் முக்கியத்துவ போல இரசியாவிற்கும் கொடுக்க விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது.

இரசியாவின் சமரச முயற்ச்சி

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடயே சமரசம் செய்ய புட்டீன முன்வந்தார். பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இரசியா தலைமை வகித்த காலத்தில் இந்திய சீன முறுகல் நடந்தது. இந்த இரு அமைப்புக்களிலும் சீனா, இரசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. 2020 செப்டம்பரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இரசியா இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேரடியாக சந்திக்க வைத்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளினதும் படையினரும் எல்லையில் தமக்கிடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்த ஒத்துக் கொண்டனர். இரசியா சீனாவுடனும் இந்தியாவுடனும் ஏற்படுத்தியுள்ள கேந்திரோபாய உறவு இப்படி ஒரு பிரச்ச்னையை தீர்க்கும் தன்மையை இரசியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்ச்சியை இரு நாடுகளும் கவனத்தில் எடுக்கவில்லை. சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆக்கிரமிப்பு என அடையாளமிட்டிருந்தது. இந்தியா இன்றுவரை இந்தியாவிற்கு படைக்கலன்களை விநியோகம் செய்வதில் காத்திரமான பங்கை வகிக்கின்றது. சீனாவும் பல படைத்துறைத் தொழில் நுட்பங்களை இரசியாவில் இருந்தே பெறுகின்றது.

மோடி – புட்டீன் ஒப்பந்தங்கள்

இருபத்தெட்டு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்பேடுகளும் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், எரிபொருள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விண்வெளி, கனிமவள ஆய்வு, கலாச்சார பரிவர்த்தனை, கல்வி என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஒப்பந்தங்கள், புரித்துணர்வு குறிப்பேடுகள் கைச்சாத்திடப்பட்டன. இரசியாவின் AK-203 Assault Rifleகளை இந்தியாவில் இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யும் ஒப்பந்தம். மொத்தமாக 500,000 ரைபிள்கள் உற்பத்தி செய்யப்படும். இப்படிப்பட்ட படைத்துறை ஒத்துழைப்பு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தத்தம் நடுவண் வங்கிகளை இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவும் இந்தியாவும் செய்யும் வர்த்தகத்திலும் பார்க்க பத்து மடங்கு வர்த்தகம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்றது. அத்துடன் இந்திய-சீன வர்த்தகம் இந்தியாவிற்கு பாதகமான முறையில் நடக்கின்றது. சீனா போதிய அளவு இறக்குமதியை இந்தியாவில் இருந்து செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.

சீன வேலப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம் என்னும் 2013-ம் ஆண்டு எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2013/05/blog-post_21.html

அமெரிக்க இந்திய உறவின் வளர்ச்சி இந்திய இரசிய உறவை பாதிக்காது.

Monday, 6 December 2021

இந்தியாவிற்கு 114 பற்பணிப் போர்விமானங்களை விற்கும் போட்டி

  


2019 ஏப்ரலில் இந்திய வான்படைக்கு 114 பற்பணிப் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக இந்திய அரசு அறிவித்து அதற்கான வழங்கல் அறிவிப்புக்களையும் உலகெங்கிலும் இருந்து கோரியிருந்தது. 114 விமானங்களுக்குமான மொத்த விலை 18 பில்லியன் டொலர்கள் அண்மைக்கால வரலாற்றின் மிகப் பெரிய படைக்கலன் கொள்வனவாக அமைந்துள்ளது. 2021 ஒக்டோபர் இந்தியாவின் வான்படைத்தளபதி வீ ஆர் சௌதாரி 114 பற்பணிப் போர் விமானங்களை வழங்குவதற்கு பல பன்னாட்டு விமான உற்பத்தியாளர்கள் முன்வந்து பத்திரங்கள் கையளித்துள்ளதாகவும் கொள்வனவின் அடுத்த கட்டத்தை நோக்கி தாம் நகர்வதாகவும் தெரிவித்திருந்தார். போயிங், லொக்கீட் மார்ட்டின், யூரோஃபைட்டர், இரசிய யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசன், சாப் ஆகிய முன்னணி விமான உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு 114 பற்பணி போர்விமானங்களை வழங்க முன் வந்துள்ளன.

வானில் ஆதிக்கம் செலுத்துதல், வானில் இருந்து வானுக்கு தாக்குதல், வானில் இருந்து தரைக்கு குண்டு வீசுதல், வேவு பார்த்தல், கண்காணிப்பு, முற்சென்று வானைக் கட்டுப்படுத்துதல், இலத்திரனியல் போர் முறை, எதிரிவிமானங்களை இடைமறித்தல் போன்ற பல பணிகளைச் செய்யக் கூடிய விமானங்களை பற்பணிப் போர் விமானம் என அழைப்பர். முன்பு ஒவ்வொருவிதமான பணிகளுக்கும் என்றும் ஒவ்வொரு வகையான விமானங்கள் தயாரிக்கப்பட்டன. பின்பு பல பணிகளையும் செய்யக் கூடிய ஒரே விமானம் உருவாக்கப்படுகின்றன. இருந்தும் இப்போதும் வேவு பார்த்தலுக்கு தனியான விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.



இந்தியாவிடம் தற்போது உள்ள சோவியத் ஒன்றிய காலத் தயாரிப்பு விமானங்களான மிக்-21 மற்றும் மிக்-27 போர்விமானங்களை சேவையில் இருந்து அகற்றி விட்டு புதிய பற்பணி விமானங்களை வாங்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக வாங்கிய ரஃபேல் போர் விமான ங்களை வாங்கி முடிக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. இந்த முறை 114 போர்விமான ங்களை துரிதமாக வாங்கி முடிக்க இந்தியா முயல்கின்றது. 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது பாதுகாப்புச் செலவிற்கு அதிக நிதி செலவு செய்வதால் ஆளும் கட்சியின் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு.



இந்தியாவின் தேஜஸ்

இந்தியாவின் மிராஜ்-2000மிக்-29 ஆகிய போர்விமானங்கள் 30ஆண்டுகள் பழமையானவை. ஜகுவார் போர்விமானங்கள் 40ஆண்டுகள் பழமையானவை. 2014 பெப்ரவரி பாக்கிஸ்த்தானால் கைப்பற்றப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் ஓட்டிச் சென்ற மிக்-21 விமானம் 44 ஆண்டுகள் பழமையானவை. இந்தியா அவசியமாகவும் அவசரமாகவும் தனது விமானங்களைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. மிக்-21 போர் விமானங்கள் பழமையடைந்ததால் உள்நாட்டிலேயே அவற்றிற்கு ஈடான பாரம் குறைந்த தாக்குதல் போர்விமானமாக தேஜஸ் விமான உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தேஜஸ் விமானங்களில் பாரம் குறைந்த பற்பணிப் போர்விமானங்களும்தாக்குதல் போர்விமானங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டில் அவை உற்பத்தி செய்யப்பட்டு விமானப் படையில் இணைக்கப்பட்டன. முன்னூறுக்கு மேற்பட்ட தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப் படையில் உள்ளன. 2016-ம் ஆண்டு இந்தியக் கடற்படையினர் தேஜஸ் விமானங்களை வாங்க மறுத்தமைக்கு இரு காரணங்களைக் கூறினர். ஒன்று அவை பாரம் அதிகமானவை. இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலில் குறைந்த தூரம் ஓடி எழும்புபவதற்கான போதிய உந்து வலு அவற்றிடம் இல்லை. அதனால் F414 என்னும் இயந்திரங்களால் இயக்கப்படும் தேஜஸ் மார்க் – 2 என்ற விமானங்கள் உருவாக்கப்பட்டன. 201 தேஜஸ் மார்க் - 2 விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. தேஜஸ் மார்க்-1 விமானங்களில் இஸ்ரேலின் AESA ரடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேஜஸ் மார்க்-2 விமானங்கள் தற்போது உருவாக்கும் நிலையில் உள்ளன. முன்னோடி உருவாக்கல்களுக்கு என அமெரிக்காவின் ஜெனரஸ் எலெக்ரிக் நிறுவனம் தனது இரண்டு F414-INS6 இயந்திரங்களை வழங்கியுள்ளது.  திட்டம் வெற்றியளித்தால் அறுநூறு மில்லியன் டொலர்களுக்கு தொண்ணூற்றி ஒன்பது F414-INS6 இயந்திரங்களை ஜெனரல் எலெக்ரிக் விற்பனை செய்யும். அத்துடன் F414-INS6 இயந்திரங்களின் 60விழுக்காடு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வழங்கப்படும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா காவேரி கே-9கே-10 என்னும் விமான இயந்திரங்களை உள்நாட்டில் உருவாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. ஜெனரல் எலெக்ரிக்கின் இயந்திரத் தொழில்நுட்பம் காவேரி இயந்திரங்களை உருவாக்குவதைத் துரிதப்படுத்தும். தேஜஸ் மார்க் – 2 விமானங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் Uttam AESA ரடார்கள் இணைக்கப்படவுள்ளன. Uttam AESA வானில் இருந்து வானிற்கு மட்டுமே செயற்படக் கூடியவை வானில் இருந்து தரைக்கு அவை போதிய பயனைத் தராது. இந்திய வான்படையினர் 46 முதல் 56 வரையிலான தேஜஸ் மார்க்-2 இன் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கான வகைகளை வாங்கவுள்ளனர்.

எதை இந்தியா வாங்கும்?

சுவீடனின் Gripen விமானங்களிலும் தேஜஸ் விமானத்தைப் போலவே அமெரிக்காவின் General Electric நிறுவனத்தின் இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. ஆனால் Gripen இல் பாவிக்கப்படுவை F414-GE-39. Gripen – E விமானங்களில் 33% பாகங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகின்றன. ரஃபேல் விமானம் ஒன்றை வாங்க 1820 கோடி ரூபா செலவாகும் Gripen – E விமானம் ஒன்றை வாங்க 1050கோடி ரூபா போதும். ரஃபேலின் பறப்புத்தூரம் Gripen இலும் பார்க்க 500கிமீ அதிகமானதாகும். இரசிய விமானங்கள் சுவீடன் வான்பரப்பில் அத்து மீறுவதை தடுக்க சுவீடனின் விமானங்களில் சிறந்த இலத்திரனியல் செயற்பாடுகள் உள்ளன. Gripen விமானங்களின் உற்பத்தியாளர்களான சுவீடனின் SAAB நிறுவனம் இந்தியாவின் TATA நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை இந்தியா வாங்கினால் அது பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். நிபந்தனைகள் காப்புரிமையில் இருந்து மனித உரிமைவரைக்கும் இருக்கும். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் F-15EX பற்பணிப் போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. Apach Guradian மற்றும் Chihook ஆகிய உலங்கு வானூர்திகளையும் C-17 என்னும் படையினர் போக்குவரத்து விமானங்களையும் P8I ரோந்து விமான ங்களையும் இந்தியாவிற்கு விற்பனை செய்த போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தால் இந்தியாவிற்கு FA-18 Super Hornet விமானங்க்ளை விற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் FA-16 போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. இரசியா தனது மிக்-35 விமான ங்களை விற்பனை செய்ய முயல்கின்றது.

இரசியாவின் மிக்-35 பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2017/02/35.html

இந்தியாவிற்கு 114 போர்விமானங்களை யார் விற்பனை செய்வது என்ற போட்டியில் பிரான்ஸின் ரஃபேலும் சுவீடனின் Gripen உம் முன்னணியில் நிற்கின்றன.

Friday, 3 December 2021

அமெரிக்க நீர்மூழ்கிமீது சீன நீர்மூழ்கி மோதியதா?

 


2021 ஒக்டோபர் 2-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் USS CONNECTICUT என்னும் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கடியில் இனம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதால் அதில் பயணித்துக் கொண்டிருந்த 11 கடற்படையினர் காயப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்திருந்தன.  இந்த செய்தியை அமெரிக்கா 7-ம் திகதி தான் வெளியிட்டது. USS CONNECTICUT இந்த நிகழ்வின் பின்னர் குவாம் தீவில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தைச் சென்றடைந்தது. USS CONNECTICUT பனிப்போர் காலத்தில் தேவை ஏற்படின் சோவியத் ஒன்றியத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களை துரிதமாக தாக்கி அழிப்பதற்கு 1990களில் $3பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப் பட்ட நீர்மூழ்கிக்கப்பலாகும். அந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கடல் ஓநாய் என்ற குறியீட்டுப் பெயருண்டு.



தொடர்ந்து பயணித்த USS CONNECTICUT

USS CONNECTICUTஇன் அணித்தலைவர் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் அணு உலை பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றதுடன் அது செயற்படு நிலையில் உள்ளது என்றார். மோதலின் பின்னர் அது 1500மைல்கள் பயணித்தது. ஆனால் அப்பயணம் நீருக்கடியில் இல்லாமல் நீரின் மேற்பரப்பில் செய்யப்பட்டது. 

தகவல் சூறையாடும் USS CONNECTICUT

National Interest என்னும் அமெரிக்க ஊடகம் USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலில் நவீன உளவறியும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்கின்றது. அது செல்லும் கடற் பிரதேசத்திலும் கரையிலும் உள்ள தொடர்பாடல்களைப் அக்கருவிகள் பதிவு செய்யக் கூடியவை என்கின்றது அந்த ஊடகம். தென் சீனக்கடல் போன்ற ஆழம் குறைந்த கடலில் உளவு பார்ப்பதற்கு சாதாரண கப்பல்களிலும் பார்க்க நீர்மூழ்கிக்கப்பல்கள் சிறந்தவை. National Interest எப்படிப் பட்ட பொருளில் USS CONNECTICUT மோதியது என்பதை உறுதி செய்யவில்லை என்கின்றது.

சீனாவின் கருத்து

சீனாவின் South China Morning Post ஊடகமும் மர்மமான பொருள் ஒன்றில் USS CONNECTICUT மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. US Naval Institute News இன் இணயத்தளத்திலும் தெரியாத நீரடியில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அணுக்கசிவு ஆபத்தை இனம் காணுவதற்காக மோதல் நடந்த இடம் பற்றிய தகவல்களை சீனா அமெரிக்காவிடம் கோரியுள்ளது. அமெரிக்கா அந்த நீர்மூழ்கிக் கப்பலகளில் பயணித்தவர்களைத் தனிமைப் படுத்து அணுக்கதிர்வீச்சுக்கு அவர்கள் உள்ளாகியுள்ளார்களா என ஆய்வு செய்கின்றது. மோதிய நீர்மூழ்கிக்கப்பல் பல விஞ்ஞானிகளாலும் நிபுணர்களாலும் ஆய்வு செய்யப்படுகின்றது.

ஹைனன் தீவு மோதல்

2001-ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தென் சீனக் கடலில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான EP-3 SERIES-II Signal Intelligence என்னும் உளவு விமானத்தை இரண்டு சீனாவின் J-811 இடைமறிப்பு விமானங்கள் சூழ்ந்து கொண்டன. அதில் ஒரு விமானம் EP-3 AERIES-II இன் கீழ்ப்பகுதியில் மோதியது. அதில் இருந்த ஒருவர் விமானத்தில் இருந்து வெளியேறி காணாமல் போனார். விமானத்தில் பயணித்த ஏனைய 24 பேரும் அவசர மாக சீனாவின் ஹைனன் தீவில் சீன அனுமதியுடன் தரையிறங்கினர். அவர்களையும் விமானத்தையும் சீனா கைப்பற்றியது. விமானத்தின் தொழில்நுட்பத்தை அறிய அதை சீன நிபுணர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துக் கொண்டனர். அமெரிக்கா தனது விமானத்தையும் பயணிகளையும் திருப்பித் தருமாறு வற்புறுத்திய போது. விமானத் துண்டங்களையும் பயணிகளையும் திருப்பிக் கொடுத்தது. EP-3 AERIES-II உளவு விமானம் பன்னாட்டு வான்பர்ப்பில் பறந்து கொண்டே நூறுமைல்களுக்கும் அப்பால் உள்ள தொடர்பாடல்களை பதிவு செய்யவும் அங்குள்ள இலத்திரனியல் கருவிகளில் உள்ள தகவல்களைச் சூறையாடவும் வல்லது. அதன் ஆபத்தை உணர்ந்தே சீனா அதன் மீது மோதி தரையிறக்கியது. இதே போன்று USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலுக்கும் நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

தாமதம் ஏன்?

ஒக்டோபர் 2-ம் திகதி நடந்த நிகழ்வை அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க ஏன் ஐந்து நாட்கள் தாமதித்தது என்ற கேள்வி இந்த நிகழ்வில் சீனா தொடர்புபட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. சீனா USS CONNECTICUT உள்ள உணரிகளால் இனம் காணப்படாத மூலகங்களால் ஆக்கப்பட்ட பொருள்களை அது வரும் வழியில் வைத்திருக்கலாம் எனவுக் கருதப்பட்டது.

செய்மதிப் படங்கள்

Type – 94 Jin Class SSBN என்ற சீனாவிற்கு சொந்தமான அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கப்பல் சேதத் திற்கு உள்ளான வேளையில் சேதமடைந்த நிலையின் இன்னொரு சீனக் கடற்கலம் வழிகாட்ட நீரின் மேற்பரப்பில் பயணித்து சீனாவின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கின் கடற்கரையில் உள்ள Bohai Shipyard சென்று திருத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. HI Sutton என்ற படைத்துறை ஆய்வாளர் தனது hisutton.com என்ற இணையத்தளத்தில் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் செய்மதியான Sentinel-2 எடுத்த படங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஆனால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று மோதியிருக்கலாம் என அவர் கருத்து வெளியிடவில்லை. ஆனால் Elmer Yuen என்பவர் இந்திய Youtube Channel ஒன்றிற்கு அமெரிக்காவின் USS CONNECTICUT நீர்முழ்கிமீது சீனாவின் Type – 94 Jin Class SSBN நீர்மூழ்கி மோதியது என்கின்றார். ஆனால் அது உறுதிப்படுத்த முடியாதது என்றும் சொல்கின்றார்.


அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிகள் இரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதுவது பாரிய சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீன நீர் மூழ்கி மோதியிருக்குமா?

Thursday, 2 December 2021

இரசிய விரிவாக்கம் உண்மையா?

  




2021 நவம்பர் 2-ம் திகதி இரசியக் கட்டுப்பாட்டில் உள்ள கிறிமியாவில் இருந்து கருக்கடலில் உள்ள எதிரிக் கப்பல்களை அழிக்கும் பயிற்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆறவது கடற்படைப் பிரிவை USS Mount Whitney என்னும் ஈருடக கட்டளைக் கப்பல் தலைமையிலும் P-8A என்னும் நீர்மூழ்கி எதிர்ப்பு உளவு (Anti-submarine spy planes) விமானங்களின் துணையுடனும் கருங்கடலுக்கு 2021 4-ம் திகதி அனுப்பியுள்ளார்.

நேட்டோ விரிவாக்கம்

1989இல் சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் நடந்த மக்கள் கிளர்ச்சியால் ஜெர்மனியை கிழக்கு மேற்கு எனப் பிரித்த பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கிழக்கு ஜேர்மனியை விட்டுக் கொடுக்கும் போது  நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது என ஒரு வாய் மூலமான உறுதி மொழியை அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இரசிய அதிபர் மிக்கையில் கொர்பச்சோவிற்கு வழங்கியிருந்தார். ஆனால் 1991இன் இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் அவற்றின் படைத்துறைக் கூட்டமைப்பான வார்சோ ஒப்பந்த நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டன. இதை இரசியா தன்னை தனிமப்படுத்தும் முயற்ச்சியாகப் பார்த்தது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசியாவின் கவசப் பிராந்திய நாடுகள் என இரசியப் படைத்துறையினர் கருதுகின்றனர். அவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது இரசியாவின் இருப்புக்கு ஆபத்து என்பது உண்மையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளில் கைகளில் இருந்தால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்னும் அளவிற்கு உக்ரேனின் பூகோள அமைப்பு இருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா இரசியா வசம் இல்லாமல் இரசியக் கடற்படை இயங்க முடியாது என்னும் அளவிற்கு அது இரசியாவிற்கு முக்கியம் வாய்ந்தது.



ஜோர்ஜிய வரலாறு

ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசிய வெளியுறவுக் கொள்கையின் இரண்டு கண்கள் எனச் சொல்லலாம். இரண்டு நாடுகளும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலே அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார-அரசியல் கூட்டமைப்பிலோ இணையாமல் தடுப்பது இரசியாவின் கோந்திரோபங்களில் முதன்மையானது. இரண்டு நாடுகளினதும் பகுதிகளை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து வைத்துள்ளது. ஒரு தனி நாடாக இருந்த ஜோர்ஜியாவை 1804-ம் ஆண்டு இரசியா ஆக்கிரமித்துக் கொண்டது. இரசியாவில் 1918இல் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் போது ஜோர்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. 1921-ம் ஆண்டு இரசிய செம்படையினர் ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து இரசியா உருவாக்கிக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவில் பிறந்த ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் உச்சத் தலைவராகப் பணியாற்றி அதை படைத்துறையிலும் பொருளாதாரத்திலும் மேம்படுத்தி ஒரு வல்லரசாக மாற்றியதுடன் இரண்டாம் உலகப் போரில் வெற்றியடையவும் வைத்தார். அவர் சோவியத் ஒன்றியத்தின் மக்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டார். அதனால் ஸ்டாலினின் செயலை அவரது எதிரிகள் Mass Terror என அழைத்தனர். 1953இல் ஸ்டாலின் மறைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நிக்கித்தா குருசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஜோர்ஜியாவில் உள்ள பொதுவுடமைவாதிகள் கடுமையாக எதிர்த்ததுடன் 1956-ம் ஆண்டு ஜோர்ஜியாவை தனிநாடாகப் பிரகடனப்ப்டுத்தினர். அவர்களை சோவியத் ஒன்றியம் இரும்புக்கரங்களால் நசுக்கியது. 1991-ம் ஆண்டு ஜோர்ஜியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பின்னர் அது தனிநாடாக உருவாக்கப்பட்டது. இருந்தும் பல இரசியப் படைத்தளங்கள் ஜோர்ஜியாவில் தொடர்ந்தும் இருக்க அனுமதிக்கப்பட்டது. 1992இல் ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினை வாதம் தலை தூக்கியது. 1993இல் இரசியாவின் சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் அமைப்பில் ஜோர்ஜியா இணைந்து கொண்டது. அதனால் ஜோர்ஜியாவில் இருந்த பிரிவினைவாதப் பிரச்சனையைத் தீர்க இரசியா உதவி செய்தது. இரசிய அமைதிப் படை ஜோர்ஜியாவில் நிலை கொண்டது. 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கப் படையினர் ஜோர்ஜியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்க அங்கு சென்றனர். இது இரசிய ஜோர்ஜிய உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 2002 செப்டம்பர் மாதம் இரசியாவின் செஸ்னியப் பிரதேசத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஜோர்ஜியா உதவி செய்யக் கூடாது என இரசிய அதிபர் புட்டீன் எச்சரித்தார். 2003 நவம்பரில் ஜோர்ஜியாவில் நடந்த ரோஸ் புரட்சியால் அதிபர் Shervardnadze பதவி விலகினார். 2006-ம் ஆண்டு ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்தது. ஜோர்ஜியா ஐரோப்பிய் ஒன்றியத்தில் இணைய விரும்பியது. அதேவேளை ஜோர்ஜியா அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணையும் கருத்துக் கணிப்பு வெற்றி பெற்றதுடன் அது ஜோர்ஜிய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் இரசியா கடும் விசனமடைந்தது. ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினைவாதத்தை இரசியா ஊக்குவித்தது. ஜோர்ஜியாமீது ஓகஸ்ட் 8-ம் திகதி இரசியா பெரும் ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. தெற்கு ஒசெசிட்டியாவும் அப்காசியாவும் தனிநாடுகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டன. அவற்றை இரசியா, வெனிசுவேலா, சிரியா, நிக்கிராகுவா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த போருடன் நேட்டோவின் விரிவாக்கத்தை இரசியா ஒரு முடிவிற்கு கொண்டு வந்தது. 2015-ம் ஆண்டு இரசியப் படையினர் தெற்கு ஒசெசிட்டிய-ஜோர்ஜிய எல்லையில் மேலும் ஒன்றரை கிலோ மீட்டர் முன்னேறின.


இரசியாவை நேட்டோவால் தடுக்க முடியுமா?

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் இரசியா ஒரு போர் மூலம் முழுமையாக கைப்பற்ற முயன்றால் அதைத் தடுக்க இரசியாவிற்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்த முடியுமா? உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்த போது இரசிய அரசுறவியலாளர்கள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தால் தம்மால் அமெரிக்காவை ஒரு கதிர்விச்சு மிக்க சாம்பல் மேடாக்க முடியும் என எச்சரித்திருந்தனர். உக்ரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இரசியா மிகவும் இரகசியமாகவே மேற்கொண்டது. கணினிகள் பாவிக்காமல் பழைய தட்டச்சுக்கள் பாவிக்கப்பட்டன. தகவல் பரிமாற்றங்கள் பழைய முறையில் செய்யப்பட்டன. இரசியாவுடனான நேட்டோ நாடுகளின் மோதல் ஜேர்மனியில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும். ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும் உறுதியாக நின்றால் இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வல்லரசு நாடுகள் எப்படியும் ஒரு போரைத் தவிர்க்கவே முயற்ச்சிக்கும். ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது. உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது.

மோல்டோவா

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் தவிர மோல்டோவா நாடும் இரசியாவின் ஆக்கிரமிப்பு அச்சத்தை எதிர்கொள்கின்றது. பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர். இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால் அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இரசியாவுடன் இணைந்து விடுவார்கள். ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.

போல்ரிக் நாடுகளும் நடுவண் ஆசிய நாடுகளும்

எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இதுவும் இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும். நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால் மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர்.

உக்ரேன் எல்லையில் 2021 டிசம்பர்ல் குவித்திருக்கும் இரசியப் படைக்கலன்களினதும் படையினரதும் எண்ணிக்கை முழுமையாக உக்ரேனை ஆக்கிரமிக்கப் போதுமானதாக இல்லை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். முழுமையான தயாரிப்புக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படலாம் எனவும் அவர்கள் சொல்கின்றனர். உக்ரேன் நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட நாடாக இல்லாத போதிலும் அது நேட்டோவுடன் தனது பாதுகாப்பு தொடர்பாக பல பங்காண்மை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. 1997இல் தனித்துவமான பங்காண்மைப் பட்டயத்தில் இரு தரப்பும் கையொப்பமிட்டுள்ளன. 2009இல் குறைநிரப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா அபகரித்த போது உக்ரேனுக்கு கைகொடுக்கவில்லை. 

இரசியா உலக அரங்கில் தான் 1991இற்கு முன்பு வைத்திருந்த நிலையை மீளப் பெற வேண்டும் என நினைக்கின்றது.

Tuesday, 30 November 2021

அப்பாவிகள் பாதிக்கப்படும் ஈரான் – இஸ்ரேல் இணையவெளிப் போர்

  


போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். Rt Rev Dr Rowan Williams என்னும் திருநாமம் கொண்ட ஆர்ச் பிஷப் ஒஃப் கண்டபரி (Archbishop of Canterbury) இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) அதி உயர் ஆண்டகையாக இருந்தவர். 2007ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரன சிங்களப் படை நவடிக்கைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:

  • "It is undoubtedly inevitable that what you might call surgical military action against terrorism should take place",

Archbishop Williams said in reports filed by TamilNet and the BBC Sinhala service on May 11, 2007. அவரது கருத்துப்படி சிங்களவர்களின் படை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்று. அது சந்தேகத்திற்கு இடமின்றி தவிர்க்க முடியாத ஒரு சத்திர சிகிச்சை. இதைக் கடுமையாக எதிர்த்து ஒரு சிங்கள ஆங்கிலிக்கன் கிருத்தவர் Rt Rev Dr Rowan Williamsஅவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் முக்கியமான அம்சம்:

What your irresponsible comments have done are to :-

1. Encourage even greater violation of the human rights of the Tamil civilian population by the Sri Lankan Armed Forces.

2. Give invaluable support to Sinhalese ethno-religious chauvinists who are determined to make multi-ethnic, multireligious, multilingual and multicultural Sri Lanka into a Sinhala-Buddhist nation. Today, these extremist elements in Colombo are celebrating your comment – an indication of the damage that has been done by a flippant remark.

3. Strengthen the stance of President Rajapakse and his brothers to establish a fascist dictatorship and embark on a genocidal massacre of the Tamils in the North-East. The photograph of Rajapakse greeting you has been circulated all over the world, enhancing his flagging international image and decreasing yours.

4. Make Tamil civilians in the North-East, who are being brutalised by the current murderous regime, feel that their suffering is of no concern to you, and that what is being done to them is inevitable ‘surgical military action” which “should take place”.

இது இங்கிலாந்து திருச்சபையும் தமிழர்களின் முதுகில் குத்தியது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பலவகைப் போர்கள்

விடுதலைப் போர், சுதர்ந்திரப் போர், அறப்போர், ஆக்கிரமிப்பு போர், பயணப் போர், தாக்குதல் போர், தற்பாதுகாப்புப் போர், கரந்தடிப் போர், விடுவிப்புப் போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈடற்ற போர், தரைப்போர், வான் போர், கடற்போர், விண்வெளிப்போர், நிலகீழ்ப்போர், சாம்பல் வலயப் போர், மதப்போர், நிகராளிப்போர், இணையவெளிப்போர் எனப் போரில் பல வகைகளுண்டு.

ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் போரில் நிகராளிப் போரும் இணையவெளிப்போரும் முக்கியமானவை. ஒரு தரப்பு மற்றத் தரப்பிற்கு எதிராக முன்றாம் தரப்புகளுடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும். ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றினூடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும்.

ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இவையிரண்டையும் இணையவெளிப் போருக்குள் அடங்கும்.

ஈரான் மீது பலவகையான இணையவெளித் தாக்குதல்களை இஸ்ரேல் செய்து வருகின்றது. அவற்றில் மிகவும் பிரபலமானது Stuxnet என்னும் வைரஸ் மூலம் ஈரானிய யூரேனியம் பதப்படுத்தல் மீது அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செய்த தாக்குதலாகும். அது பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.veltharma.com/2012/06/blog-post_05.html

கமெய்னி எரிபொருள் எங்கே?

2021 ஒக்டோபர் மாத இறுதியில் ஈரானின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள கொடுப்பனவு முறைமைகள் (payment systems) மீது இஸ்ரேல் செய்ததாகக் கருதப்படும் இணையவெளித் தாக்குதலில் மூலம் சேதப்படுத்தப் பட்டது என்ற செய்தியை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நவம்பர் 27-ம் திகதி அம்பலப்படுத்தினர்.. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல ஈரானில் உள்ள இலத்திரனியல் அறிவிப்புப் பதாகைகளில் கமெய்னி எரிபொருள் எங்கே எனக் கேட்கும் வாசகங்கள் இலத்திரனியல் ஊடுருவல் மூலம் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. பாதிக்கப்பட்ட 4,300 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கொடுப்பனவு முறைமையை மீளச் செயற்பட வைக்க 12 நாட்கள் எடுத்தன. இந்தத் தாக்குதல் ஈரானில் உள்ளவர்களின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய கணினித்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாகச் செய்யப்பட்டது. ஈரானில் இருந்து இஸ்ரேலின் தன்னினச் சேர்க்கையாளர்களின் இணையத்தை ஊடுருவி பெற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பலரது பாலியல் தொடர்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல இஸ்ரேலியப் பிரபலங்கள் சங்கடத்திற்கு உள்ளாகினர்.

இஸ்ரேலின் தாக்குதலால் விரக்தியடைந்த ஈரானியர்கள் சிரியாவின் Homs மாகாணத்தில் உள்ள Al Tanf இல் இருக்கும் 200 படையினரைக் கொண்ட அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தினர் என அமெரிக்கா அறிவித்தது

2021 ஏப்ரல் மாதம் ஈரானின் தொடருந்து சேவை நிலையங்களில் தொடருந்துகள் வரும் நேரம் அறிவிக்கும் இலத்திரனியல் பதாகைகளில் தாமதம், இரத்து, போன்ற வாசகங்களை பதிவேற்றி பயணிகளையும் தொடருந்து சேவைகளையும் குழப்பி ஈரானிய மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. சில அறிவிப்புக்களில் கமெய்னிக்கு அழைப்பு விடுக்கவும் எனவும் பதிவுகள் மாற்றப்பட்டன.

2021-ம் ஆண்டு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தலில் மின்வெட்டு, ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து எனவும் இணைய வெளித்தாக்குதல் மூலம் நடந்தன.

இஸ்ரேலிலி இருந்து செய்யப்படுவதாக கருதப்படும் இணையவெளித் தாக்குதல்கள் ஈரானிய சிறைச்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள கணினித் தொகுதிகளில் செய்யப் பட்ட ஊடுருவல்களால் பல சிறைக்கைதிகளின் தகவல்கள் மாற்றப்பட்டதால் கைதிகள் மீது அட்டூழியங்கள் நடந்தன.

2019-ம் ஆண்டு ஈரானில் இருந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினித் தொகுதிகளில் செய்யப்பட்ட தாக்குதல்களால் பல நூறு மில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தக் கூடிய இணைய வெளித்தாக்குதல்கள் தாற்போது அதிகரித்துச் செல்கின்றன என்பதை இஸ்ரேலும் ஈரானும் ஒன்றின் மீது ஒன்று செய்யும் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.

Wednesday, 24 November 2021

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

  


94,000 இரசியப் படையினர் உக்ரேன் எல்லையில் குவிக்கபட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையை மேற்கோள் காட்டி புளூம்பேர்க் ஊடகம் 2021 நவம்பர் 21-ம் திகதி தகவல் வெளியிட்டது. உக்ரேன் அரசு பிரிவினைவாதிகள் கையில் உள்ள உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள Donetsk மற்றும் Luhansk பிரதேசங்களில் இரசியப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தயார் நிலையை விரிவு படுத்தி வருகின்றன என அறிவித்துள்ளது. உக்ரேனின் இறைமைக்குட்பட்ட அந்த இரண்டு பிரதேசங்களும் 2014இல் தம்மை தனி நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ளன. 2014இல் உக்ரேனின் கிறிமியாப் பகுதியை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்கப் படைத்துறையினர் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் எல்லையை நோக்கி இரசியா படைநகர்வு செய்வதைப் பற்றி அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கென் உக்ரேனை ஆக்கிரமிப்பது பற்றி இரசியாவிற்கு தன் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்

எல்லைகளில் தொல்லை

இரசியா உக்ரேன் எல்லையில் படைகளைக் குவிக்கையில் இரசியாவின் நட்பு நாடான பெலரஸ் போலாந்து எல்லையில் பெருமளவு தஞ்சக் கோரிக்கையாளர்களை மேற்காசிய நாடுகளில் இருந்து கொண்டு வந்து குவித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் பெலரஸ் மீது மேலும் பொருளாதாரத் தடையை அதிகரிக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து பெலரஸ் தஞ்சக் கோரிக்கையாளர்களை போலாந்து எல்லையில் இருந்து அகற்றி விட்டது. பெலரஸின் பின்னால் இரசியா நின்று செயற்படுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. இரசியா மேன் படையினரையும் (Reserve Force) என்றுமில்லாத அளவில் திரட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2021 நவம்பர் முதலாம் திகதி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் அதிபர் வில்லியம்ஸ் பேர்ண் இரசியா சென்று உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அமெரிக்காவின் எச்சரிக்கையை இரசியாவிடம் தெரிவித்திருந்தார்.

கேந்திர முக்கியம்மிக்க உக்ரேன்

இரசியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருக்கும் உக்ரேன் இரசியாபோலாந்துசுலோவேனியாஹங்கேர்பெலரஸ்மொல்டோவாருமேனியா ஆகிய நாடுளுடனும் அஜோவ் கடலுடனும் செங்கடலுடனும் எலைகளைக் கொண்டுள்ளது. இரசிய எல்லையில் உக்ரேனுக்குள் உயர் மலைத் தொடர் இருப்பது இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளில் இருந்தால் அது இரசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பதற்கு இரசியா தயாராக உள்ளது என்பதை உக்ரேனுக்கு எதிராக இரசியா 2014இல் செய்த படை நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இரசியாவின் செய்மதி அழிப்பு ஏவுகணைப் பயமுறுத்தல்

இரசியா தனது செய்மதி அழிப்பு ஏவுகணைகளை (AST Anti Satellite Missiles) 2021 நவம்பர் 15-ம் திகதி வெற்றிகரமாக பரிசோதித்தது. இரசியாவில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை Direct-Ascent missile வகையைச் சார்ந்தது. அது தரையில் இருந்து செலுத்தப்பட்டு நேரடியாக இலக்கின் மீது மோதி வெடிக்கக் கூடியது. விண்வெளியி இருந்த இரசியாவின் சொந்த செய்மதி ஒன்றை அது அழித்த போது பல துண்டங்களாக சிதறியது. அத்துண்டங்கள் வான்வெளியில் உள்ள பல செய்மதிகளுக்கு ஆபத்தானவை என்பதால் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடும் விசனமடைந்தது. இரசியாவால் முப்பதிற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகளை அழித்து அமெரிக்க படையினரைக் “குருடாக்க” முடியும் என்ற இரசிய உளவுத்துறை தெரிவித்தது.

பொருளாதார காரணிகள்

உக்ரேன் இரசியாவின் யூரேசியா பொருளாதாரக் கூட்டணையில் இணைய வேண்டும் என இரசியா விரும்புகின்றது. இரசியா பொருளாதார வலிமையை அடைவதை விரும்பாத மேற்கு நாடுகள் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை விரும்புகின்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதறகான நிபந்தனைகளை நிறவு செய்யும் அளவிற்கு அதன் பொருளாதாரம் இன்னும் மேன்மையடையவில்லை. அதனால் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் சில வர்த்தக் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அவற்றின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழமானதும் முழுமையானதுமான சுதந்திர வர்த்தக வலயத்தில் உக்ரேனும் ஒரு நாடாக இணைந்துள்ளது. இதில் உக்ரேனைப்போலவே மொல்டோவா, ஜேர்ஜியா ஆகிய நாடுகளும் உள்ளன.

இருதலைக் கொள்ளியெறும்பாக அமெரிக்கா

அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இரசியாவுடனான தனது முறுகல் நிலையை உறை நிலையில் வைத்திருக்க முடிவு செய்திருந்தது. இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரேயடியாக தாக்குதல் செய்தால் அமெரிக்காவால் இரண்டு முனைகளில் அதிக அளவு மீயுயர் ஒலிவேக ஏவுகணைகளை (Hypersonic Missiles) வைத்திருக்கும் இரு வல்லரசு நாடுகளுடன் போர் செய்ய முடியாது. இதை இரசியா தனக்கு சாதகமாகப் பார்க்கின்றது. அத்துடன் 2010-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவிற்கு பல தொல்லைகளை இரசியா கொடுத்து வருகின்றது. சிரியாவில் அமெரிக்காவை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்காவில் பல இணையவெளி ஊடுருவல் இரசியாவில் இருந்து செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

இரசியாவின் வரவு செலவுக் கணக்கு

உக்ரேனின் டொன்பாஸ் பகுதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு இரசியா பெருமளவு செலவழிக்க வேண்டி இருக்கின்றது. உக்ரேனை முழுமையாக கைப்பற்றினால் இந்தச் செலவுகளைத் தவிர்க்கலாம் என்ற கருத்து இரசியாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க உக்ரேனியப் படைகள் தற்போது அதிக பயிற்ச்சியும் மேலதிகப் படைக்கலன்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. இரசியாவின் ஆக்கிரமிப்புத் திமிரால் உக்ரேனியர்கள் அதிக சினம் கொண்டுள்ளனர். அதனால் உக்ரேனியப் படையினர் அதிக ஈடுபாட்டுடன் இரசியர்களை எதிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேனை பெருமளவு இழப்புக்களுடன் இரசியா கைப்பற்றினாலும் அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரசியா பெருமளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்.



இரசியாவின் தாக்குதல் திட்டம்

உக்ரேனின் உளவுத்துறையின் அதிபர் ஜெனரல் கிரிலொ பனரனோவ் வெளியிட்ட தகவலின் படி இரசியா வானில் இருந்து ஆகாயக்குடைகள் மூலம் தரையிறக்கல், கடல்வழி ஈரூடக தரையிறக்கல், தரைவழி நகர்வு ஆகியவற்றின் மூலம் உக்ரேனை ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது. உக்ரேனை இரசியா பத்து முனைகளில் நாற்பது Battalion Tactical Groups (BTGS) மூலம் தாக்கலாம் என்றான் பனரனோவ். 94,000 படையினர் 1200 தாங்கிகள், 1600 சேணேவிகள், (ஆட்டிலெறிகள்), 330 போர்விமானங்கள், 75 கப்பல்கள், 6 நீர்மூழ்கிகள் போன்றவற்றுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். மிகவுக் குளிரான கால நிலை நிலவும் ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பித்தில் இரசியா தனது ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியப் படைத்துறையின் பேச்சாளர் உலகெங்கும் படைகளை அனுப்பும் நாடுகள் எமது நாட்டு எல்லைக்குள் எமது படையினர் செய்யும் நகர்வுகளை போர் என பீதியைக் கிளப்புகின்றனர் என்றார். இரசிய உளவுத்துறையின் (SVR) அறிக்கை: அமெரிக்கா பயமூட்டுகின்றது. (“Whipping up hysteria”) எனத் தெரிவிக்கின்றது.

Tuesday, 23 November 2021

சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai கணாமற் போனது ஏன்?

 


ZHANG GAOLI என்னும் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் 2018-ம் ஆண்டு தன்னை மிரட்டி உடலுறவு கொண்டதாக Peng Shuai நவம்பர் இரண்டாம் திகதி சீன சமூக வலைத்தளமான Weiboவில் குற்றம் சாட்டினார். அவரது பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டது.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜியாங் ஜெமின் தற்போதைய பொதுச் செயலாளரும் அதிபருமான ஜீ ஜின்பிங் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். ஜீ ஜின்பிங்கை அவர் பதவியில் இருந்து அகற்ற முயற்ச்சி செய்யலாம் என ஜீ அஞ்சுகின்றார். அதனால் அவரது ஆதரவாளரகளை பொதுவுடமைக் கட்சியில் இருந்து அகற்ற ஜீ முயற்ச்சி செய்கின்றார். ஜீ ஜின்பிங் இலக்கு வைத்தவர்களில் முக்கியமானவர் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் ZHANG GAOLI ஆகும். அவர் மீதுதான் சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை சுமத்தினார். சீனாவில் இது போன்று பொதுவுடமைக் கட்சியின் உயர் அதிகாரிகள் மீது விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டுவதில்லை. Peng Shuai குற்றம் சாட்டு வைத்தமையை ஜீ ஜின்பிங் தன் எதிரிகளை பழிவாங்க செய்யும் நகர்வுகள் என முதலில் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

இரண்டு தடவை விம்பிள்டனிலும் பிரெஞ் திறந்த போட்டியிலும் வெற்றி பெற்ற டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை வைத்த சில நாட்களில் காணாமல் போய்விட்டார். அவர் பற்றிய செய்திகள் யாவும் தணிக்கை செய்யப்பட்டன. ZHANG GAOLI மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு போல் மேலும் பல பொதுவுடமைப் புள்ளிகள் மீதும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai குற்றம் சுமத்தலாம் என்பதால் அவரது வாயை மூடுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு பல சீனப் பெண் விளையாட்டு வீரர்களும் இதே போன்ற குற்றச் சாட்டை வைக்கத் தொடங்கினால் பல சீன தலைகளில் தலைகளுக்கு இடர் ஏற்படலாம் என்ற அச்சத்திலும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

சீனாவில் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை பல்கலைக்கழக மாணவிகள், ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் சீன அதிகாரிகளுக்கு எதிராக சுமத்திய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, குற்றம் சாட்டுபவர்களே தண்டிக்கப்படுகின்றார்கள் என அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Peng Shuai தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை #MeToo பரப்புரையாளர்களிடம் முறையிட்டார். சீனா பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களை விரும்புவதில்லை. #MeToo பரப்புரையாளர்களை சீனா கடுமையாக வெறுக்கின்றது. எட்டு வயதில் டெனிஸ் ஆடத் தொடங்கிய 12 வயதில் இருதய சிகிச்சை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் டெனிஸ் விளையாட முடியாது எனச் சொன்ன போதும் அவர் தன் விடா முயற்ச்சியால் சீனாவின் சிறந்த விளையாட்டு வீரர்ராக உருவெடுத்தார். சீனாவின் விளையாட்டுத் துறையின் விதிகளின் படி விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் விளையாடுவதால் கிடைக்கும் வருவாயின் அரைப்பங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். இதை எதிர்த்து முதல் போர்க்கொடி உயர்த்தையவர் Peng Shuai. நாட்டுக்காக விளையாட மாட்டேன் என அவர் சூளுரைத்தபோது அவரைத் தேசத் துரோகியாக சீன ஊடகங்கள் சித்தரித்தன.

2021-11-21 ஞாயிற்றுக் கிழமை 35 வயதான Peng Shuai ஒலிம்பிக் அதிகாரி தோமS பச்சுடன் காணொளியில் உரையாடியதாக செய்தி வெளிவந்தது. இருந்தும் அவரது பாதுகாப்பு பற்றி அந்த அதிகாரி திருப்தியடையவில்லை. அவருடன் உரையாடலில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் Peng Shuai நலமுடன் இருப்பது நிம்மதியளிக்கின்றது என்றார்.

உலக டெனிஸ் அமைப்பின் அதிகாரி 2021 நவம்பர் 22 திங்கட் கிழமை Peng Shuai உடன் இன்னும் ஒரு காணொளி உரையாடலை மேற்கொண்டார். WTA எனப்படும் உலக டெனிஸ் அமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் Peng Shuaiஇன் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவிடத்து தங்கள் அமைப்பில் இருந்து சீனாவை வெளியேற்றுவோம் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். இரு பெரும் டெனிஸ் ஆட்டக்காரர்களான Roger Federer, Rafael Nadal ஆகியோர் Peng Shuaiஇற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். 2022 பெப்ரவரியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கின்றது. மேற்கு நாடுகள் அதைப் புறக்கணிப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கையில் Peng Shuai காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். பன்னாட்டு விளையாட்டு அமைப்புக்கள் அவர் மீது காட்டிய அக்கறைக்கு சீன அரசு பணிந்து விட்டதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...