Monday, 9 January 2017

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா?


அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பேன் எனக் கருத்து வெளியிட்டது பலஸ்த்தீனியப் பிரச்சனைக்கு ஈர் அரசுத் தீர்வு என்ற அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றுவேன் எனத் தன்னைச் சந்தித்த இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவிடம் தெரிவித்திருந்தார்.

மருமகன் Jared Kushner
டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஒரு யூதராவார். யூத மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் Jared Kushnerஐக் கைப்பிடிப்பதற்காக மகள் இவங்கா யூத மதத்திற்கு மாறினார். மருமகன் Jared Kushner டிரம்பிற்கு தேர்தல் பரப்புரையின் போது பேருதவியாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர். அவர் டிரம்ப்பின் ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிப்பார். அவர் வெள்ளை மாளிகையில் பணி புரிவதை பெரிதும் விரும்புகின்றார்.

அன்று நடக்காதது இன்று நடக்குமா?
ஜோர்ஜ் புஷ்பில் கிளிண்டன் ஆகிய முன்னை அமெரிக்க அதிபர்களும் தமது தேர்தல் பரப்புரையின் போது ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதுவரகத்தை மாற்றப் போவதாகச் சொல்லியிருந்தனர். ஆனால் தேர்தலில் வென்ற பின்னர் அப்படிச் செய்யவில்லை. ஆனால் டிரம்ப் வித்தியாசமானவர். அத்துடன் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில மூதவை உறுப்பினர்கள் ஜெருசலேத்தை இஸ்ரேலியத் தலைநகராக ஏற்றுக் கொள்ளும் சட்ட மூலத்தை அமெரிக்கப் பாராளமன்றதின் மூதவையில் 2017-01-03-ம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.  பலஸ்த்தீனியர்கள் தமது அரசின் தலைநகர் கிழக்கு ஜெருசலேம் என நம்புகின்றனர். ஜெருசலேத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்து அதை இஸ்ரேலின் தலைநகராக்கினால் மேற்குக் கரையில் அமைதி குலையும் என பலஸ்த்தீனியர்கள் எச்சரிக்கின்றனர்.

அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத்திரும்புமா?
புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஜெருசலேத்திற்கு அமெரிக்கத் தூதுவரகத்தை நகர்த்தும் எண்ணம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஜோர்தானியத் தகவற்துறை அமைச்சர் அதனால் அமெரிக்காவுடன் நட்பைப் பேணும் அரபு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றார். ஜோர்தானைப் பொறுத்தவரை தூதுவரகத்தை நகர்த்துவது செங்கோட்டைத் தாண்டியது போலாகும் என்றார் மேலும் அவர். மேலும் இந்த நகர்வு அரபுத் தீவிரவாதிகளுக்கு ஒரு கொடையாக அமைந்து அரபு நாட்டு வீதிகளெங்கும் கலவரம் உண்டாகும் என்றார். அரபு நாடுகளிலேயே அமெரிக்காவுடன் அதிக நெருக்கமான உறவைப் பேணும் நாடு ஜோர்தான் ஆகும். ஜோர்தான் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து மற்ற அரபுநாடுகளும் இதே போன்ற ஆட்சேபனையைத் தெரிவிக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. 1967-ம் ஆண்டுப் போரின் போது ஜோர்தானிடமிருந்தே இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேத்தைக் கைப்பற்றியது.

ஐநா தீர்மானம் – 181
ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலம் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை அது ஒரு பன்னாட்டு நகரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. 1947-ம் ஆண்டு ஜெருசலேம் நகர் தொடர்பாக ஐநா சபையில் தீர்மானம் -181 நிறைவேற்றப்பட்டது. அதன்படி அது ஐநாவால் நிர்வகிக்கப்படும் தனி நிலப்பரப்பாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரபுக்கள் எதிர்த்தனர். பல பன்னாட்டு அமைப்புக்கள் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கவிருக்கும் டேவிட் ஃபிரீட்மன் தான் ஜெருசலேத்தில் கடமையாற்றக் காத்திருப்பதாகச் சொல்லியுள்ளார். 

அவலத்தில் புனித நகரம்
1089-ம் ஆண்டு ஜெருசலேம் நகரை சிலுவைப் போரில் கைப்பற்றிய மேற்கு நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களை விரட்டினர். 1187இல் ஜெருசலேமை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர்கள் யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். ஜெருசலேமின் பழைய நகரத்தின் வட கிழக்குப் பகுதி முஸ்லிம் பகுதி எனவும் அதற்கு வட மேற்குப் பகுதி கிறிஸ்த்தவப் பகுதி என்றும், ஆர்மீனியன் பகுதி என்றும் யூதப் பகுதி எனவும் வகுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்க் இடையிலான மோதல்களைத் தவிர்க்க உதுமானியப் பேரரசின் ஆட்சியின் போது அங்கு பல சுவர்களும் கதவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் 1967-ம் ஆண்டு பழைய நகரத்தில் யூதர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டிருக்கலாம். 1967-ம் ஆண்டின் பின்னர் பல யூதர்கள் அங்கு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். 1517-ம் ஆண்டில் இருந்து உதுமானியப் பேரரசின் பிடியில் இருந்த ஜெருசலேம் நகரை 1917-ம்  ஆண்டு பிரித்தானியத் தளபதி general Edmund Allenby  கைப்பற்றிய பின்னர் அதன் புனித தன்மையை மதிப்பதற்காக தனது குதிரையில் இருந்து இறங்கி நடந்து சென்றார். ஆனால் குடியேற்றவாதம், சியோனிசம், அரபுத் தேசியவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், யூத எதிர்ப்புவாதம் (anti-Semitism) ஆகியவற்றின் நடுவில் அந்த புனித நகரம் அல்லல் படுகின்றது. கடவுள் உலகைப் படைக்கும் போது ஒன்பது பங்கு அழகை ஜெருசலேம் நகருக்கும் ஒரு பங்கு அழகை எனைய உலகிற்கும் கொடுத்தாராம். ஆனால் இன்று உலக அவலக்களின் பத்தில் ஒன்பது பங்கு ஜெருசலேமில் இருக்கின்றது. 

இரு போர்கள்
1948இல் நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆர்மிஸ்றிஸ் உடன்படிக்கைகளின் படி வரையபட்ட ஆர்மிஸ்றிஸ் கோடுகளின்படி மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலினுடைய பகுதியாக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் போது கிழக்கு ஜெருசலேம்ம்மேற்குக் கரைகாசா நிலப்பரப்புசினாய் பாலைவனக் கோலான் குன்றுகள் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

கிழக்கும் மேற்கும் வேறா ஒன்றா?
பலஸ்த்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் பெரும் முள்ளாக இருப்பது ஜெருசலம் நகர். இரு தரப்பினரும் அது தமக்குச் சொந்தம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மேற்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலின் இருப்பை பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் கிழக்கு ஜெருசலேத்தை ஒட்டியே பெரும் முரண்பாடு நிலவுகின்றது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறுநாட் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம்த்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு இஸ்ரேல் ஜெருசலேம் சட்டம் 1980ஐ தனது பராளமன்றத்தில் நிறைவேற்றி முழு ஜெருசலேமும் தனது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்-478 நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட சட்டம் பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தெரிவித்தது தீர்மானம்-478. அத்துடன் ஐநா உறுப்பு நாடுகள் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்தில் அமைக்கக் கூடாது எனவும் அந்தத் தீர்மானம்-478 சொல்கின்றது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா வாழ் யூதர்களின் முயற்ச்சியால் அமெரிக்கப் பாராளமன்றம் 1996-ம் ஆண்டு ஜெருசலேம் தூதுவரகம் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்பதுடன் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரகம் டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேம்த்திற்கு மாற்றப்பட வேண்டும் எனச் சொல்லியது. அந்தச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதை 2016-ம் ஆண்டு வரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் செயற்படுத்தவில்லை. தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அதனை நிறைவேற்றுவேன் என்கின்றார். அதற்கு ஏற்ற வகையில் இஸ்ரேல் ஜெருசலேம் நகரில் யூதர்களைக் குடியேற்றுவதை அதிகரித்துள்ளது. 1967-ம் ஆண்டு கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதால் அங்கிருந்து வெளியேறிய இஸ்லாமியர்களை மீண்டும் அங்கு வந்து குடியேறும் படி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மேஸே தயான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பல இஸ்லாமியர்கள் மீண்டும் சென்று குடியேறினார்கள். 

அன்று கதை வேறு
இஸ்ரேல் என்ற நாடு உருவாகிய முதல் மூன்று ஆண்டுகளில் அது பல தத்துக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சுற்றிவர எதிர்ப்புணர்வு மிக்க அரபு நாடுகளின் மத்தியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இருப்புப் பற்றி பல ஐயங்கள் நிலவின. அரபுக்களின் ஆக்கிரமிப்பு ஆபத்தின் மத்தியில் பல முயற்ச்சிக்கு மத்தியில் இஸ்ரேலை பல நாடுகள் அங்கிகரித்தன. முதலில் அமெரிக்க ஒரு சட்டபூர்வ நாடாக அங்கீகரிக்கவில்லை. ஒரு உண்மை சார் நாடாகவே அங்கீகரித்தது. இஸ்ரேலை முதலில் அங்கீகரித்த நாடுகளில் சோவியத் ஒன்றியமும் ஒன்று.

அமெரிக்க கடவுட்சீட்டுச் சட்டம்
2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம் எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது. ஆனால் இது ஐநாவின் நிலைப்பாடான ஜெருசலேம் ஒரு தனிப் பிராந்தியம் என்ற நிலைப்பாட்டிறு முரணாக இருந்தது. அத்துடன் பல அரபு நாடுகளின் ஆத்திரத்தையும் கிளறியிருந்தது. இதனால் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த எல்லா அதிபர்களும் அதையே கடைப்பிடித்தார்கள்.  அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்தது.

இன்னும் ஒரு தீர்மானம்
2016 டிசம்பர் 23-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் மேலும் ஒரு தீர்மானம் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. கிழக்கு ஜெருசலேத்தில் செய்யப்படும் யூதக் குடியேற்றங்களைக் கண்டித்ததுடன் அவை சட்டபூர்வமானதல்ல என்கின்றது அந்தத் தீர்மானம்-2334இந்தத் தீர்மானம் பலஸ்த்தீனியர்களாலோ அல்லது அதை முன் மொழிந்த எகிப்தியராலோ வரையப்பட்டது அல்ல ஒரு மேற்கு நாட்டு வல்லரசுதான் அதை வரைந்தது என அதன் வாசகங்களை வாசிக்கும் போது தெரிகின்றது என்றார் ஐநாவிற்கான இஸ்ரேலியப் பிரதிநிதி. அதை வரைவதில் மட்டுமல்ல அதை நிறைவேற்றுவதற்கான ஆதரவு தேடுதலிலும் பிரித்தானியா பெரும் பங்கு வகித்தது. இது இஸ்ரேல் தொடர்பாக டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் தோன்றப் போகும் முரண்பாட்டிற்கு கட்டியம் கூறுகின்றது. தீர்மானம்-2334ஐ அமெரிக்கா தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்ய வேண்டும் என புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பராக் ஒபாமாவிடம் விடுத்த வேண்டு கோளையும் புறக்கணித்து ஐநா பொதுச்சபையில் அமெரிக்க தீர்மானம்-2334 தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பல இஸ்ரேலியர்கள் ஐநா தீர்மானங்கள் தம்மை ஏதும் செய்யாது என மார் தட்டிக் கொண்டிருக்கையில் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இட்டு அவற்றுக்கு எதிரான தடைகளை விதிப்பதை இட்டு ஐநாவில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கிறிஸ்த்தவர்களின் வாதம்
1944-ம் ஆண்டு லெபனானில் பிறந்த மரோனைற் கிறிஸ்த்தவரான சரித்திரவியலாளர் பிலிப் ஹிற்றி என்பவர் அமெரிக்க அரசுக்குச் சாட்சியமளிக்கையில் பலஸ்த்தீனத்தில் யூதர்களுக்கு என்று ஒரு அரசு இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்த போது விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உட்படப் பல யூதர்கள் ஆட்சேபனை தெரிவித்து தமது தரப்பு விவாதங்களை முன்வைத்தனர்.

வரலாறு எங்கு ஆரம்பமானது – அரபு வாதம்
அரபுக்கள் பலஸ்த்தீனியத்தின் வரலாறு 1948இல் இருந்து பார்க்க விரும்புகின்றார்கள் 1948இல் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றபட்ட யூதர்களால் இஸ்ரேல் உருவானது என்கின்றார்கள் அவர்கள். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் பல அரபு நாடுகள் இருந்தன. இன்றும் சில நாடுகள் வாயளவில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஈரான் மட்டுமே அதை ஓரளவிற்கு செயலிலும் காட்டுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக உறவுகளை வைத்திருக்கின்றன. மக்கா,  மதீனா ஆகிய இரு பெரும் புனித நகர்களைப் போலவே ஜெருசலேமும் இஸ்லாமியர்களின் புனித நகராகும். அங்குள்ள மலைக் கோவிலில் இருந்தே இறை தூதுவரான அல்லா சொர்க்கத்திற்கு பறந்து சென்றார் என்கின்றனர் அரபுக்கள்.

வரலாறு எப்போது ஆரம்பித்தது – யூதர்களின் வாதம்
இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின்வாதம்.  இற்றைக்கு 3286 ஆண்டுகளுக்கு முன்னர். மோசஸ் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை மீட்டுக் கொண்டு ஜோர்தானிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புறமாக ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பை இஸ்ரேலியர்களின் நாடாக்கினார். இப் பிரதேசம் இப்போது இஸ்ரேல் என்றும் மேற்குக் கரை என்றும் காஸா நிலப்பரப்பு என்றும் ஜோர்தான் நாடு என்றும் நான்கு பகுதிகளாக இருப்பதே தமது தாயகம் என்கின்றனர் யூதர்கள். அங்கிருந்து பல படையெடுப்புக்களால் தாம் விரட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறினோம் என்பது யூதர்களின் கருத்து. இஸ்ரேலியர்களின் அரசு கிறிஸ்த்துவிற்கு முன்னர் 796ம் ஆண்டில் இரண்டாகப் பிளவு பட்டது. அதன் வடபகுதியை கி.மு 55-ம் ஆண்டு அசிரியப் பேரரசு கைப்பற்றியது. கி மு 422-ம் ஆண்டு பபிலோனியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்களின் புனித ஆலயத்தை அழித்தனர். இஸ்ரேலியர்கள் பலர் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர். கி மூ 352-ல் மீண்டும் இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்கு வந்து மீண்டும் தமது ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். ஆனால் நாற்பது ஆண்டுகளின் பின்னர் கிரேக்கர் இஸ்ரேலைக் கைப்பற்றினர். பின்னர் கி. மு 63-ம் ஆண்டு ரோமப் பேரரசு இஸ்ரேலை ஆக்கிரமித்தது. மீண்டும் இஸ்ரேலியர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டது. கி. பி 638-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் கலிஃபா ஒமரின் தலைமையில் இஸ்ரேலைக் கைப்பற்றினர். 1299-ம் ஆண்டு உதுமானியப் பேரரசு இஸ்ரேலைக் கைப்பற்றியது. பலஸ்த்தீனம் என்பது ஒரு நாடல்ல அது ஒரு பிரதேசத்தின் பெயர் என்கின்றனர் யூதர்கள். பைபிளில் பல இடங்களில் Peleshet எனச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் Philistine எனத் திரிபுபட்டு பலஸ்த்தீனம் ஆனது என்கின்றனர் எனத் கிறிஸ்த்தவர்கள். 1920-ம் ஆண்டு உதுமானியப் பேரரசிடமிருந்து கைப்பற்றப் பட்ட மத்திய தரைக்கடலை ஒட்டிய ஒரு பிரதேசத்திற்கு பிரித்தானியப் பேரரசு பலஸ்த்தீன ஆணையகம் எனப் பெயரிட்டத்தில் இருந்தே பலஸ்த்தீனம் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது

மலைக்கோவில் வாசலில்
ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். . அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.  புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள் Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது.  பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர்  பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது.  சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர்.

மானிடப் பேரிடர்  
மேற்குக் கரைகிழக்கு ஜெருசலேம்காசா ஆகியவை தமது பிரதேசம் அங்கு தங்களுக்கு ஒரு சுதந்திரமான நாடு வேண்டும் என்பதே பலஸ்த்தீனியர்களின் தற்போதைய நிலைப்பாடு.  மானிடப் பேரிடர் தெடந்து நடக்கும் இடமாக பலஸ்த்தீனத்தின் மேற்குக் கரை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்கின்றது. இஸ்ரேலின் தொடர் நில அபகரிப்பினாலும் யூதக் குடியேற்றங்களாலும் மேற்கு கரையின் வரைபடத்தில் பலஸ்த்தீனியர்களின் பிரதேசத்தையும் யூதக் குடியேற்ற நிலப்பரப்பையும் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கறையான் அரித்த துணி போலத் தோற்றமளிக்கின்றது. இஸ்ரேல் 1967-ம் ஆண்டு போரில் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசலம் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்லும் இஸ்ரேல் அங்கு வாழும் பலஸ்த்தீனியர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை. அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை ஜோர்தானும் தன்னுடைய நாட்டுக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் 420,000 பலஸ்த்தீனியர்கள் நாட்டற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் ஜோர்டான் கடவுச் சீட்டு வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் ஜோர்டானில் வேலை பார்ப்பதாயின் அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும். உலகத்தின் எந்த மூலையில் பிறந்தாலும் ஒரு யூதருக்கு இஸ்ரேலில் குடியுரிமை வழங்கப்படுகின்றது. கிழக்கு ஜெருசேலத்தில் இரண்டு இலட்சம் யூதர்கள் படைத்துறையின் பாதுகாப்புடன் குடியேற்றப் பட்டுள்ளார்கள். 2011 ஒக்டோபர் யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம் உறுப்புரிமை பெற்றது அமெரிக்காவைச் சினமூட்டி அதை அந்த அமைப்பில் இருந்து வெளியேற வைத்தது. 

1993-ம் ஆண்டு பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலும் செய்த ஒஸ்லோ உடன்படிக்கையில் மேற்குக் கரையையும் காசா நிலப்பரப்பையும் பலஸ்த்தீனியர்கள் நிர்வகிக்க ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பலஸ்த்தீனியர்கள் தங்களது பிரதேசம் என உரிமை கோரும் கிழக்கு ஜெருசலேம் பற்றி முடிவு எடுப்பது பின் போடப்பட்டது. 

படைத்துறைதொழில்நுட்பம்பொருளாதாரம் ஆகியவற்றில் இஸ்ரேல் அடைந்து வரும் வளர்ச்சி அபரிமிதமானது. அதேவேளை அரபு நாடுகளிடையேயான ஒற்றுமையின்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் பலஸ்த்தீனியர்களுக்கு சாதகமாக இல்லை. ஐ எஸ் அமைப்பு பலஸ்த்தீனியர்களுக்கு ஆதரவாகவோ இஸ்ரேலுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. இஸ்ரேலால் தான் நினைத்ததை நடத்தி முடிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.


Sunday, 1 January 2017

2017இல் உலகம் பற்றிய ஓர் ஆய்வு

2017-ம் ஆண்டில் உலகின் போக்கை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படி மாற்றப் போகின்றார் என்ற கரிசனை பல உலக அரசுறவியலாளர்களாலும் ஆய்வாளர்களிடமும் தோன்றியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு கணிசமான அதிகாரங்கள் உள்ளன. பல சட்டங்கள் நூறு உறுப்பினர்களைக் கொண்ட மூதவையில் 60 உறுப்பினர்களின் ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்ற முடியும். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் மட்டுமே தற்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளுடன் அமெரிக்க அதிபர் செய்யும் உடன்படிக்கைகள் மூதவையின் அங்கீகாரம் பெறவேண்டும். இதனால் அமெரிக்க மூதவை உலக விவகாரங்களில் டிரம்ப் எடுக்கும் தனி மனிதப் போக்கான முடிவுகளுக்குத் தடையாக அமையும்.

ஐநாவைக் கெடுத்தவர் கொரியாவைக் கெடுப்பாரா?
தென் கொரியாவின் அதிபராக ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவு செய்யப்பட்டால் அது 2017-ம் ஆண்டின் மிக மோசமான நிகழ்வாக அமையப் போகின்றது. 2016-ம் ஆண்டின் இறுதியில் பொதுச் செயலாளர் பதவி முடியப் போகும் பான் கீ மூனை தென் கொரியாவின் அதிபராக்குவதற்கு தற்போது தென் கொரியாவில் அதிபராக இருக்கும் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உருவாக்கப்பட்டனவா என்ற ஐயமும் நிலவுகின்றது. ஐநாவின் வரலாற்றில் மிக மோசமான பொதுச் செயலாளராகக் கருதப்படும் பான் கீ மூனும் அவரது ஆலோசகராகக் கடமையாற்றிய விஜய் நம்பியாரும் இலங்கையின் இனக்கொலைக்கு துணை போனார்களா என்ற கேள்விக்கான விடை ஐநாவின் உள் இரகசியங்கள் அம்பலப்படும் போது மட்டும் தெரிய வரும்.

தென் சீனக் கடல்
2017இல் பிரச்சனைக்குரிய பிரதேசமாக தென் சீனக் கடல் இருக்கும். அமெரிக்காவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவிற்கு எதிராக மோசமான கருத்துக்களை வெளியிட்டவருமான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தென் சீனக் கடலைக் கலக்கப் போகின்றார்கள். 1962இல் நடந்த கியூப ஏவுகணை நெருக்கடி போல் இரு வல்லரசுகள் ஒரு போரின் விளிம்பு வரை செல்லக் கூடிய நிலை தென் சீனக் கடலில் உருவாகலாம்.


நேட்டோவிற்கும் துருக்கிக்கும் இடையில் முறுகல் உருவாகலாம்.
துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வழங்கப்படுவதற்குச் செய்யப்படும் இழுத்தடிப்பு துருக்கியை அதன் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது துருக்கிக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும் துருக்கியின் கொள்கையும் அமெரிக்காவின் கொள்கையும் முரண்பட்டுக் கொண்டன. இரசியாவுடனும் ஈரானுடனும் துருக்கி இணைந்து செயற்படுவது அமெரிக்காவிற்கு உகந்தது அல்ல. துருக்கியும் இரசியாவும் இணையும் போது மத்திய தரைக்கடலில் இரசியாவில் ஆதிக்கம் அதிகரிக்கும். துருக்கிய ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்கள் நேட்டோவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உகந்தவையாக இல்லை. அமெரிக்காவின் மிகப் புதிய ரக F-35 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை துருக்கி செய்துள்ளது. நேட்டோவிற்கும் துருக்கிக்கும் பிளவு ஏற்பட்டால் F-35இன் தொழில்நுட்பத் தகவல்கள் இரசியாவிற்குச் செல்ல வாய்ப்புண்டு.  2017இல் துருக்கியும் மேற்கு நாடுகளும் தமது உறவை மீள் பரிசீலனை செய்து கொள்ளும்.

மலிவான பணம் இனி இல்லையா?
ஐக்கிய அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கொள்கையை புதிய அதிபர் டிரம்ப் தேர்தல் பரப்புரையின் போதே வெளியிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என மக்கள் எடுத்த முடிவு பிரித்தானியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்திலும் பொருளாதார உறுதிப்பாடின்மையை உருவாக்கியுள்ளது. இதனால் பிரித்தானியாவிலோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ வட்டி விழுக்காடு அதிகரிக்கப்பட மாட்டாது. சீனாவில் நிலவும் உள்நாட்டுக் கடன் பிரச்சனை வட்டி அதிகரிப்புக்கு ஏதுவாக இல்லை. பிரித்தானியப் பவுண் தொடர்ந்தும் வலுவற்ற நிலையில் இருப்பதால் இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பிரித்தானியாவில் விலைவாசி அதிகரிப்பு 2.7 விழுக்காட்டை எட்டலாம் என பிரித்தானிய நடுவண் வங்கி எதிர்வு கூறியுள்ளது. வட்டி அதிகரிப்பிற்கான நிர்ப்பந்தத்தை அதிகரிக்கின்றது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கும் போது வளர்முக நாடுகளில் இருந்து மூலதனம் அமெரிக்காவை நோக்கி நகரும் போது அந்த நாடுகளில் வட்டி விழுக்காடு அதிகரிக்க வேண்டி வரும். சீனா, இரசியா போன்ற நாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் மூலதன வெளியேற்றத்தையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளன.

தேர்தல்கள் நிறைந்த ஆண்டு
2017-ம் ஆண்டில் பிரான்சிலும் ஜேர்மனியிலும் நடக்கவிருக்கும் தேர்தல்கள் உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் கூடியவையாக இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க நாடான ஜேர்மனியில் ஐரோப்பா மட்டுமல்ல உலக அரங்கிலும் சிறந்த தலைவராகக் கருதப் படும் அஞ்செலா மேர்க்கெல் அவரது குடிவரவிற்கு சார்பான கொள்கைகளால் உள் நாட்டில் தனது பிரபலத்தை இழந்துள்ளார். பிரான்ஸில் 2017 ஏப்ரலில் நடக்க விருக்கும் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக அமையும். வலதுசாரி வேட்பாளரான மரைன் லி பென்னின் வெற்றி பெற்றால் பிரான்சும் பிரித்தானியாவின் பாதையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஆபத்து உண்டு. அதை இத்தாலியும் கிரேக்கமும் பின்பற்றும் போது ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் போகும் ஆத்துக்கு 2017 வித்திடலாம்.

இரசியப் பொருளாதாரம் மீட்சியுறும்.
இரசியாவின் பொருளாதாரம் 2015-ம் ஆண்டு 3.8விழுக்காடு சுருங்கிய இரசியப் பொருளாதாரம் 2016-ம் ஆண்டு 0.5 விழுக்காடு மட்டுமே சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2017-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பதையில் செல்லும் என பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் 5.6விழுக்காடாக இருந்த விலைவாசி அதிகரிப்பு 2017இல் அரைவாசியாகலாம் எனவும் ப.நா. நிதியம் சொல்கின்றது.

உலகெங்கும் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கும்
2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட போல்ரிக் நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவீனங்களை 2017இல் அதிகரிக்கவிருக்கின்றன. லத்வியா 60 விழுக்காட்டாலும் லித்துவேனியா 35 விழுக்காட்டாலும் எஸ்த்தோனியா 9 விழுக்காட்டாலும் தமது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்கவுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட போலாந்து தனது படைத்துறைச் செலவை 9 விழுக்காட்டால் அதிகரிக்கவுள்ளது.

இரசியா மேலும் வலுவடையும்
2020-ம் ஆண்டு தனது படைத்துறையை மிகவும் புதுமைப்படுத்தும் இரசியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இரசியப் படைக்கு 900 தாங்கிகளும் கவச வண்டிகளும் ஐந்து கேந்திரோபாயத் தாக்குதல் விமானங்கள் உட்பட 170 போர் விமானங்களும் எட்டு போர்க்கப்பல்களும், ஒன்பது தாக்குதல் படகுகளும் 2017-ம் ஆண்டு இணைக்கப் படவிருக்கின்றன. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைப் படைப்பிரிவுகள் மூன்றை இரசியா 2017-ம் ஆண்டு உருவாக்கும். கருங்கடலில் செயற்படும் இரசியக் கடற்படையில் மேலும் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைக்கப்படும். 2016-ம் ஆண்டின் இறுதியில் தனது படையினருக்கு உரையாற்றிய விளடிமீர் புட்டீன் தமது படை தமது எதிரிகளிலும் பார்க்க வலிமையானது என்றார்.

அமெரிக்காவும் விட்டு வைக்காது
அமெரிக்க விமானப் படையினர் தமது விமானித் தட்டுப்பாட்டை நீக்க 2017இல் 4000 புதிய விமானிகளை இணைப்பதுடன் விமானிகளின் ஊதியத்தையும் அதிகரிக்கவிருக்கின்றனர். அமெரிக்காவின் புதிய F-35 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் A வகை விமானங்கள் 43 விமானப் படைக்கும், B variants விமானங்கள் 16 Marine Corps படைப்பிரிவிற்கும், நான்கு C models கடற்படைக்கும் சேர்க்கப்படவுள்ளன.
அமெரிக்கா தனது புதிய F-35 போர் விமானங்கள் உலக கேந்திரோபாயச் சமநிலையை தமக்கு சாதகமாக மாற்றும் என எதிர்பார்க்கின்றது. 2017 ஓகஸ்ட் மாதம் F-35 ஐரோப்பாவில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அது எதிரியின் எங்க ஏரியா உள்ளே வராதே (anti-access area denial environment) நிலைப்பாட்டைத் தகர்க்கும் என அமெரிக்கப்படை நம்புகின்றது.

தீவிரவாத அமைப்புக்கள்
சிரியாவில் அடக்கப்பட்ட நிலையிலும் ஈராக்கில் முடக்கபட்ட நிலையிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு தனது 2017ஐ ஆரம்பிக்கின்றது. சிரிய அதிபர் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக ஐ எஸ்ஸிற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் 2017இல் வெளியில் தெரியக் கூடிய வகையில் ஆதரவுகளை வழங்க மாட்டாது. ஆனல் ஈரானுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளைத் திசை திருப்ப மறைமுக ஆதரவுகள் இனிவரும் நாட்களில் ஐ எஸ்ஸிற்கு கிடைக்கும். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா, நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ கரம், எதியோப்பியாவில் செயற்படும் அல் ஷபாப், காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் ஆகியவை 2016-ம் ஆண்டு சந்தித்த பின்னடைவுகள் 2017இல் மேலும் மோசமாகலாம்.

இரசியாவும் சுனி முஸ்லிகளும் மோதுவார்கள்
இரசியாவின்  144மில்லியன் மக்கள் தொகையில் சுனி முஸ்லிம்கள் இருபது மில்லியன்களாகும். இந்த நிலையில் சுனிகளுக்கு எதிராக சிரியாவில் இரசியா செயற்பட்டமை உள்நாட்டில் ஒரு பாதகமான சூழலை இரசியாவிற்கு ஏற்படுத்தும். சிரியாவில் இரசியப் படைகள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்ல சிரியா, ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள சியா ஆட்சியாளர்கள்டுடன் படைத்துறை ரீதியில் இணைந்து செயற்படுவதும் ஈராக்கில் உள்ள சியா ஆட்சியாளர்களுடன் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் சுனி முஸ்லிம்களை இரசியாவிற்கு எதிராக திரும்பச் செய்ய வாய்ப்புண்டு. அமெரிக்க உளவுத் துறை இரசியாவிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரை ( proxy war) சுனி முஸ்லிம்கள் மூலம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

எரிபொருள் விலை
பன்னாட்டு வலு முகவரகம் 2017இல் உலக மசகு எண்ணெய்க்கான தேவை 1.3 மில்லியன் பீப்பாய்களால் அதிகரிக்கு என எதிர்வு கூறியுள்ளது. எரிபொருள் உற்பத்தி நாடுகள் எரிபொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த 2017இலும் முயற்ச்சி செய்யும். ஆனால் அமெரிக்காவின் ஷேல் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும் அமெரிக்கா தேவை ஏற்படின் தனது எரிபொருள் இருப்பை உலகச் சந்தையில் விற்கத் தயாரக இருப்பதும் 2017இல் எரிபொருள் விலையை பெருமளவில் அதிகரிக்க விடாது. சில ஆய்வாளர்கள் 2017இன் முற்பகுதியில் மசகு எண்ணெய் விலை 53டொலர்களாகவும் ஆண்டு இறுதியில் 56 டொலர்களாகவும் இருக்கும் என எதிர்வு கூறியுள்ளனர். ஒரு சிலர் 2018இன் இறுதியில் 100டொலர்கள் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவின் நாணயமற்ற செய்கை
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நரேந்திர மோடியின் அரசு நாணயத்தைச் செல்லாமற் செய்தமை நாட்டின் பணப் புழக்கத்தை குறைத்துள்ளது. நாணயத் தாள்களைச் செல்லுபடியற்றதாக்கிவிட்டு போதிய அளவு புதிய தாள்களை வேண்டுமென்றே அடிக்காமல் விட்டனர். இது வங்கிகளின் நிதி இருப்பை அதிகரிக்கப் பண்ண செய்யபட்ட சதி. குறைக்கப்பட்ட நாணயப் புழக்கம் 2017-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் G-20 நாடுகளில் அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடாக 2017இலும் இந்தியா திகழும். உலக அரங்கிலும் தனது செல்வாக்கை இந்தியா தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால் இந்தியா பல உள்நாட்டுப் பிரச்சனைகளை தொடர்ந்தும் எதிர்கொள்ளும். 2016இல் விழ்ச்சியடைந்த எரிபொருள் விலை விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது. 2017இல் அந்த உதவி இல்லாமல் போகலாம்.

சீனா
சீனக் கூட்டாண்மைகளின் (Corporates) கடன்பளு 18ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என Bank for International Settlements மதிப்பிட்டுள்ளது. இது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 170 விழுக்காடாக இருப்பது ஓர் ஆபத்தான நிலையாகும். கடன் கொடுத்த வங்கிகள் பேராபத்தை எதிர்கொள்கின்றன. சீனாவின் நாணயத்தின் மதிப்புக் குறைந்த வேளையிலும் 2016-ம் ஆண்டு ஒக்டோபரில் சீனாவின் ஏற்றுமதி 7.3 விழுக்காட்டால் குறைந்துள்ளது. புதிய அமெரிக்க அதிபரின் வர்த்தகக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்படப்போகும் நாடாக சீனா அமைய வாய்ப்புண்டு. சீனாவின் நாணயப் பெறுமதி ஏற்ற இறக்கத்தில் சீன அரசு விதிக்கும் கட்டுப்பாடும் சீனாவில் இருந்து மூலதனங்கள் வெளியேறுவதற்கு சீன அரசு விதித்துள்ள தடைகளும் இல்லாவிடில் சீன நாணயம் மதிப்பற்ற ஒன்றாகிவிடும் எனக் கூறும் பொருளாதார நிபுணர்களும் உள்ளனர். பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சீனா தென் சீனக் கடலில் தனது விரிவாக்க முயற்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அமெரிக்கா தனது அணுகு முறையை மாற்றும் வரை அதைத் தடுக்க முடியாது. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுக்கு எதிராக சீனா தனது நடவடிக்கைகளை சற்று அடக்கி வாசிக்கும். அமெரிக்காவும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு 2016இன் இறுதியில் உச்சமடைந்திருக்கும் நிலையில் இந்திய எல்லைகளைல் சீனப்படைகள் ஆதிக்கம் காட்டுவதைக் குறைத்துக் கொள்ளும்.

தீவிரவாத அமைப்புக்கள்
ஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசின் கோட்டையாக விளங்கிய அலெப்பேயின் வீழ்ச்சி அதன் அழிவிற்கு வழிவகுக்காது. சிரிய உள்நாட்டுப் போர் 2017இல் தணியலாம் ஆனால் முடிவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு அதிக படைக்கலன்கள் கிடைக்கும். ஆனால் அவை இஸ்ரேலுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டால் அதன் பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஹிஸ்புல்லா அறியும். அல் நஸ்ரா அமைப்பு சிரியாவில் அதிக தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளும். ஹமாஸ் அமைப்பு தொடர்ந்தும் பதுங்கியிருக்கும். கஷ்மீரில் இந்தியா தனது அடக்கு முறையை அதிகரிக்கும்.

இணையவெளி மோதல்கள்
இணையவெளி ஊடுருவல்கள் திருட்டுக்கள் கொள்ளைகள் மட்டுமல்ல தீவிரவாத நடவடிக்கைகள் கூட 2017இல் அதிகரிக்கும். அதற்கு எதிரான போர்முறைமைகளும் அதிகரிக்கும். இது இரசியா அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளிடை பெரும் மோதல்களையும் உருவாக்கும்.

பல பன்னாட்டு உடன்படிக்கைகள் 2016இல் பெரும் சவால்களைச் சந்திக்கும். இரசியாவும் சீனாவும் ஐநா சபையில் மேற்கு நாடுகளுக்கான தமது சவால்களையும் தடைகளையும் அதிகரித்து உலகில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அசைக்க முயலும்.


மொத்தத்தில் 2017இல் உலகம் திணறப் போகின்றது. 

Friday, 30 December 2016

2016 ஒரு மீள் பார்வை

2016-ம் ஆண்டு கொலைகளுடன் ஆரம்பமானது. ஒரு புறம் இஸ்லாமிய அரசு தம்மிடம் அகப்பட்ட மேற்கு நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொன்றது. மறு புறம் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் தான் பயங்கரவாதிகள் எனக் கருதுவோரை எந்தவித விசாரணையும் இல்லாமல் கொன்றுகொண்டிருந்தது. 2016 ஜனவரி இரண்டாம் திகதி சவுதி அரேபியாவில் 47 பேர் கொல்லப் பட்டனர். இதில் சியா இஸ்லாமிய மத போதகரான ஷேக் நிமர் அல் நிமர் அவர்களைக் கொன்றது உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 2016-ம் ஆண்டு இறுதியிலும் சிரிய நகர் அலெப்பேயில் பல்கொலைகள் நடந்தன. அதன் எதிரொலியாக துருக்கியில் இரசியத் தூதுவர் படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சக் கோரிக்கை மோசமடைந்த ஆண்டு
சிரியா, ஈராக், ஆப்கானிஸ்த்தான், யேமன், மியன்மார் போன்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர்களும் குழப்பங்களும் 2016-ம் ஆண்டை கடந்த 70 ஆண்டுகளிலேயே மோசமாகப் பாதிக்கப் பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். இதனால் பல இலட்சக் கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு அபாயகரமான பாதைகளில் பயணித்து தஞ்சக் கோரிக்கை செய்தனர். கனடாவைத் தவிர எல்லா நாடுகளிலும் குடிவரவிற்கு எதிரான கொள்கை வலுப்பெற்றது. தேர்தல் வாக்கு வேட்டைகளில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகள் குடிவரவிற்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டனர். 

சீன இரசிய உறவு உச்சமடைந்தது.
2016-ம் ஆண்டு இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு உச்சமடைந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வளர்ச்சியடைந்து இரசியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா 2016இல் மாறியுள்ளது. அது மட்டுமல்ல இரசியாவிடமிருந்து அதிக அளவில் படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் நாடாக சீனா 2016இல் உருவெடுத்துள்ளது. இரு நாடுகளும் படைகலன் உற்பத்தி தொடர்பாக பல ஒத்துழைப்புக்களைச் செய்யவும் ஆரம்பித்துள்ளன.

சீனா ஒத்திவைத்த கொள்கைகள்
2016-ம் ஆண்டு சீனா தனது இரு பெரும் கொள்கைகளை ஒத்திவைத்துள்ளது. ஒன்று தைவானை ஆக்கிரமித்துத் தன்னுடன் இணைப்பது. இரண்டாவது சீன நாணயத்தை உலக நாணயமாக்குவது. சீனாவின் உள்ளூர் கொள்வனவை அதிகரிக்கச் செய்து பொருளாதாரம் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை பெருமளவில் குறைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதை உணர்ந்த சீனா தனது நாணயத்தின் பெறுமதி தேவைக்கேற்ப அடிக்கடி மாற்றும் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு சீனா தனது நாணயத்தின் பெறுமதியை குறைந்த நிலையிலேயே வைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இதனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. 23 மில்லியன் மக்களைக் கொண்ட தைவானில் அது தனிநாடாக வேண்டும் என்ற கொள்கையுடையோர் வெற்றி பெற்ற நிலையிலும் அங்குள்ள இளையோர் மத்தியில் சீனா மீதான வெறுப்பு அதிகரித்த நிலையிலும் அதை ஆக்கிரமித்தோ அல்லது வேறு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மூலமாகவோ அதை தன்னுடன் இணைக்கும் கொள்கையை சீனா ஒத்தி வைத்துள்ளது. ஆனால் சீனா தைவானை தனது 34வது மாகாணம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருக்கின்றது. டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துச் சொல்ல தைவார் அதிபர் ஷாய் இங் வென் தொலைபேசி மூலம் தொடர்பாடல் செய்தமை தொடர்பாக சீனா தெரிவித்த கருத்துக்கள் அதை உறுதி செய்துள்ளன. 2016-ம் ஆண்டின் முதல் வாரத்தில் சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகை உலுப்பியது. ஆனால் ஆண்டு இறுதியில் சீனா சுதாகரித்துக் கொண்டது. ஆனாலும் சீனாவை ஒரு சந்தை பொருளாதாரமாக எப்போது மாற்றுவது என்பதில் சீன ஆட்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவை இன்னும் எடுக்கவில்லை.

ஈரான்
பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்ட ஈரான் தனது உறவை சீனாவுடனும் இரசியாவுடனும் மேம்படுத்திக் கொண்டது. ஆனால் இரசியாவிற்க் தனது விமானத் தளங்களைப் பாவிக்க ஈரான் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இரசியாவுடன் ஈரான் செய்த ஒத்துழைப்பு சிரியாவில் ஈரானுக்கு வேண்டியவரான பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்குவதில் ஈரானியப் படைத்துறையின் உயர் அதிகாரிகள் நேரடியாகப் பங்கு பற்றினர். 2016-ம் ஆண்டின் இறுதியில் சிரியாவில் 25000 ஈரானியப் படைகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. அலெப்பேயை அசத்தின் படைகள் இரசிய விமானத் தாக்குதல்களின் உதவியுடன் விடுவிக்கச் செய்த போரை ஈரானியப் படைகளே நெறிப்படுத்தின. இரசியாவின் வேண்டுதலுக்கு இணங்க சிரியாவில் நடக்கும் போர் தொடர்பான “சமாதானப் பேச்சு” வார்த்தையில் ஈரானையும் ஒரு தரப்பாக இணக்க அமெரிக்கா 2016 ஒக்டோபரில் இணைத்துக் கொண்டது ஈரானுக்கு உலக அரசுறவியல் வெற்றியாகும்.

அசையாத புட்டீனும் இரசியாவும்
2014-,ம் ஆண்டில் இருந்தே உலக அரங்கில் புட்டீன் தலைமையிலான இரசிய எழுச்சி வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் திக்கு முக்காடச் செய்துகொண்டிருக்கின்றது. சிரியாவில் இருந்து மேற்கு ஐரோப்பா நோக்கி புகலிடக் கோரிக்கையாளரை அவர் திட்டமிட்டு அனுப்பினாரா என்பதை உறுதி செய்ய முடியாத போதும் அந்த புகலிடக் கோரிக்கையாளர்களால் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. 2016இல் உலக எரிபொருள் விலையை இருபது டொலர்கள் வரை வீழ்ச்சியடையச் செய்து இரசியாவில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி அங்கு அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு எதிரான கிளர்ச்சியை உருவாக்க அவரின் எதிரிகள் போட்ட திட்டம் 2016இல் வெற்றியளிக்கவில்லை. இரசியாவின் 2016-ம் ஆண்டிற்கான பாதீடு எரிபொருள் விலை நூறு டொலர்கள் என்ற அடிப்படையில் 2015-ம் ஆண்டு தீட்டப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் தேய்வடைந்த நிலையிலும் புட்டீனின் செல்வாக்கு இரசியாவில் ஆட்டம் காணாமல் இருக்கின்றது. சதுரங்க ஆட்டத்திலும் குங்குபூ சண்டையிலும் வல்லவரான புட்டீன் எதிரியை திக்கு முக்காடச் செய்தவதிலும் தருணம் பார்த்து எதிரியை தாக்குவதிலும் தான் வல்லவர் என 2016-ம் ஆண்டு சிரியாவில் நிரூபித்துள்ளார். பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார்.

குர்திஷ் போராளிகள் - தீரமிக்க போர்
2016-ம் ஆண்டில் பல முனைகளில் குர்திஷ் போராளிகள் தீரமிக்க பல போர்களைச் செய்தார்கள். பல இடங்களில் இருந்து இஸ்லாமிய அரசு அமைப்பினரை விரட்டி அடித்தார்கள் ஆனால் ஈராக்கிலோ சிரியாவிலோ அவர்களுக்கு என சட்ட பூர்வ சுயாட்சி உரிமை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் அழிக்கப்பட்ட பின்னர் குர்திஷ் மக்களுக்கு எதிரான இனக்கொலை தொடர வாய்ப்புண்டு. அப்போது அமெரிக்க ஏற்கனவே செய்தது போன்று குர்திஷ் மக்களை கால்வாரி விட்டுவிடும். அவர்களுக்கு என்று ஓர் அரசு இன்னும் உருவாகவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளைச் செய்யவே அவர்களது நிதி போதாது. ஒருதலைப் பட்சமான இணைப்பாட்சி அரசு ஒன்றை சிரியாவில் பிரகடனம் செய்தார்கள். மற்ற அமைப்புக்களும் அப்படிப் பிரகடனம் செய்யும் போது எல்லோரும் இணைந்து ஒரு கூட்டாட்சியை அமைப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் தமக்கென நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மற்ற அமைப்புகள் அப்படி ஒரு பிரகடனம் செய்யவில்லை.

மாசுபட்ட சீனா
சீனாவின் சூழல் மோசமாக மாசுபட்டு விட்டது. 46 கோடி மக்கள் சீனாவின் சூழல் மாசுபாட்டில்னால் பாதிக்கப் பட்டுள்ளனர். எங்கும் புகை மண்டலமாக இருப்பதால் அடிக்கடி மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனப் பலநகரங்களில் பல தடவைகள் உத்தரவிடப்படுவதுடன் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்படும். ஆனால் அதிபர் ஜி ஜின்பிங் நாட்டையும் பொதுவுடமைக் கட்சியையும் தனது இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்துள்ளார். ஷி துரிதமாக அதிகாரத்தை தன் வசப் படுத்தியது போல் வேறு எவரும் சீனாவில் செய்யவில்லை. அவரது தந்தைக்கு சீனப் பொதுவுடமைக் கட்சிக்குள் இருந்த செல்வாக்கும் அவருக்கு உதவியாக இருந்தது. கட்சி, படைத்துறை பொருளாதாரம், குடிசார் சமூக அமைப்பு என எல்லாவற்றிலும் தனது பிடிகளை அவர் இறுக்கிக் கொண்டிருக்கின்றார். பொருளாதார நிபுணரான லி கெக்கியாங்கை பொருளாதார விடயங்களில் கூட ஷி ஓரம் கட்டிவிடுகின்றார்.

இந்தியா
தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் இந்தியா மொத்தத் தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் இருந்த பிரித்தானியாவை ஆறம் இடத்திற்கு தள்ளி தான் ஐந்தாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பல ஐயங்கள் நிலவுகின்றன. 2016-ம் ஆண்டின் மோசமான சொதப்பலாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நாணயத் தாள்களைச் செல்லாது என அறிவித்தது அமைந்தது. இந்தியா பாக்கிஸ்த்தான் மீது அதிக நெருக்கடிகளைக் கொடுக்கின்ற அளவிற்கு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கின்றது. இந்தியா பாக்கிஸ்த்தானை உலக அரங்கில் ஓரம் கட்டிவிடும் என பாக்கிஸ்த்தானிய ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

துருக்கி
துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துருக்கியில் மக்களாட்சியை மலரச் செய்தவர்கள் படைத்துறையினரே. அங்கு மக்களாட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் உலகப் பொருளாதரம் சிக்கலடைந்தும் துருக்கியின் பிராந்தியம் பெரும் குழப்பமடைந்தும் இருக்கும் நிலையிலும் துருக்கியில் ஓர் உறுதியற்ற நிலை உருவாகுவது விரும்பத்தக்கதல்ல. 2016 ஜூலை 16-ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் துருக்கியப் படைத்துறையினரின் ஒரு பகுதியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இறங்கினர். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இஸ்தான்புல்லை துருக்கியின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பொஸ்பரஸ் பாலத்தை அவர்கள் முதலில் மூடினர்காவற்துறையைச் சேர்தவர்கள் பலர் தலைநகர் அங்காராவிலும் இஸ்த்தான்புல்லிலும் கைது செய்யப் பட்டனர். விடுமுறையில் அதிபர் ரிசெப்  எர்டோகன் தங்கியிருந்து விட்டு வெளியேறிய உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு நடந்தது. இது அவரைக் கொல்ல எடுத்த முயற்ச்சி எனக் கருதப்பட்டது. புரட்சியாளர்கள் படைத்தள பதியாகிய Chief of Defense General Hulusi Akarஐ பணயக் கைதியாகப் பிடித்தனர்உலங்கு வானூர்தி ஒன்று தலைநகர் அங்கோராவின் மேலாகப் பறந்து ரவை மழை பொழிந்தது. ஆனால் துருக்கியில் தனது செல்வாக்கை அதிகரிக்க அதிபர் எர்டோகன் அரங்கேற்றிய நாடகம் இது எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

படைக்கலன்களின் போட்டி
2016-ம் ஆண்டு பல புதிய படைக்கலன்கள் பாவனைக்கு வந்தன அமெரிக்காவின் F-35 lightening என்னும் விமானம் இரசியாவின் SU-35 என்னும் விமானம் சீனாவின் J-20 என்னும் போர் விமானம் ஆகியவை உலகக் கவனத்தை ஈர்த்தன. இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் இந்தியா படைக்கலன் விற்பனையை ஆரம்பித்துள்ளது. ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் இரசியாவின் -300, -400 ஆகியவையும் அமெரிக்காவின் தாட் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் 2016இல் பாவனைக்கு வந்தாலும் இதுவரை சரியான முறையில் போர்க்களத்தில் பாவிக்கப்படவில்லை. உலக வரலாற்றில் அதிக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் AC-130J Ghostrider என்னும் புதிய போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கப் போவதாக அறிவித்தது. இந்த விமானம் அமெரிக்கப் படைகளுக்கு நெருக்கமாக நின்று செயற்படக்கூடியது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் இதை ஒரு a badass plane என விமர்சிக்கின்றனர்.  badass என்பது a tough, uncompromising, or intimidating person எனப் பொருள்படும். இந்த விமானம் வலிமை மிக்கதும் விட்டுக்கொடுக்காததும் பயமூட்டுவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.

சனியனை இறக்கி பெனியனுக்குள் விட்ட பிரித்தானியா
பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையற்றவர்களின் வாயை அடக்குவதற்காக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் விலகுவதா என அறிய ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தினார் முடிவுகள் அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைய அவர் பதவி விலகினார். இது ஐரோப்பிய ஒன்றியத்திலும் பிரித்தானியாவிலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆண்டு
2016இல் சமூகவலைத்தளங்கள் தகவற்பரிமாற்றத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தின. பல பொய்யான செய்திகள் கூட பரப்பப்பட்டன. சுதந்திரமான தகவற்பரிமாற்றத்திற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் சமூகவலைத்தளங்கள் மூலம் பல செய்திகள் பரப்பப்பட்டன. அமெரிக்கத் தேர்தலின் இறுதி நேரத்தில் பல பொய்யான செய்திகள் சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டன. 


2016-ம் ஆண்டு உலகெங்கும் வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது. அதுமட்டுமல்ல வெள்ளைத் தேசிய வாதம் டொனால்ட் டிரம்பின் வெற்றியில் தலையெடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு சிரியா ஈராக் யேமன் ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் பெரும் போரையும் மேலும் லிபிய உடபடப் பல நாடுகளில் பெரும் குழப்ப நிலையையும் 2017 ஆண்டிற்கு சொத்தாகக் கொடுக்கின்றது. 

Friday, 23 December 2016

உலகமயமாதல் இனி பின்வாங்குமா?

உலகமயமாதல் என்பது தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாச்சாரம், சூழல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களினதும் வளர்ச்சிகளினதும் விளைவாக உருவானது. நாடுகள் இவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் தமது செல்வத்தைப் பெருக்க முயல்வதே உலகமயமாதலாகும்ஆனால் பெரு முதலாளிகள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை விரிவாக்குவதே உலகமயமாதலின் உண்மையான நோக்கமாகும்.

உலகமயமாதலின் வரலாறு
உலகமயமாதல் என்ற சொல் 1970களில் உருவானது. அப்போது அதிகரித்துக் காணப்பட்ட உலக வர்த்தகம், முதலீடு, பயணங்கள், தகவற்பரிமாற்றம் போன்றவை தொடர்பான ஆய்வுகளின் விளைவாக இந்தச் சொல் உருவானது. உண்மையான உலகமயமாதலின் ஆரம்பப் புள்ளியாக எதைக் கொள்வது என்பதில் சில முரண்பாடுகள் நிலவுகின்றன. சிலர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததுதான் உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர். வேறு சிலர் கைத்தொழிற்புரட்சியே உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர் இற்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளிடையேயான வர்த்தகம் உருவானது.   உலக வர்த்தகத்தின் முதலாம் கட்டத்தில்   நறுமண உணவுப் பொருட்களும் அறிவுமே அதிகம் பண்டமாற்று அடிப்படையில் பரிமாறப்பட்டன. ஆனால் 1400களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே உலக வர்த்தகத்தை பெரிய அளவில் வளரச் செய்தது.  மனிதர்களும் பண்டங்கள் போல் பாவிக்கப்பட்டு அடிமை வியாபாரம் செய்யப்பட்டனர். இது உலக வர்த்தகத்தின் இரண்டாம் கட்டம். இதில் படைவலு மிக்க நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமித்தன. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையிலான போரே முதலாம் இரண்டாம் உலகப் போர்களாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒரு புதிய உலக ஒழுங்கு” உருவானது. அது உலக வர்த்தகத்தின் மூன்றாம் கட்டமாகும். 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியாவே உலகின் பெரு வல்லரசாகவும் பெரிய செல்வந்த நாடாகவும் இருந்தது. அதன் நாணயமே உலக நாணயமாக விளங்கியது

தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாதலும்.
1765இல் ஜேம்ஸ் வற் அவர்கள் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தது உலக வர்த்தகத்தின் முக்கிய அம்சமாகும். அது உலக வர்த்தகத்தை மேம்படுத்தியதுடன் பிரித்தானியாவின் உலக ஆதிக்கத்திற்கு உந்து வலுவானது. தொழில்நுட்பத்தால் இலகுவாக்கப் பட்ட போக்கு வரத்து வசதிகளும் தொடர்பாடல் வசதிகளும் உலகமயமாக்குவதை கொண்டிருக்கின்றன.  1830களில் கண்டு பிடிக்கப்பட்ட மின்சாரத் தந்தியும் உலக வர்த்தகத்தை மேம்படுத்தப் பயன்பட்டதுகைத்தொழிற் புரட்சியின் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கும் விற்பனை செய்யவும் அந்த உற்பத்திகளுக்கு தேவையான மலிவான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் நீராவியில் இயங்கும் கப்பல்களும் மின்சாரத் தந்திகளும் பெரிதும் பயன்பட்டது. 1971இல் கண்டு பிடிக்கப்பட்ட மைக்குறோ புறொசெஸர் (Micro processor) தற்போது இணைய வெளியூடான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பணப்பரிமாற்றங்களுக்கும் வழிவகுத்தது

உலகமயமாதலுக்கான அமைப்புக்கள்
1946-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாணய நிதியம் (IMF), 1947இல் செய்யப்பட்ட வரிகளுக்கும் வர்த்தகத்துக்குமான பொது உடன்படிக்கை, 1947இல் உருவாக்கப்பட்ட உலகவங்கி, 1957இல் உருவாக்கப் பட்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஆகியவை நாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையே. பல பன்னாட்டு மாநாடுகள் கூட்டங்கள் உலகமயமாக்குதலை இலகுவாக்குவறகான உடன்படிக்கைகளைச் செய்வதற்க்கு கூட்டப்பட்டன. பல நாட்டு ஆட்சியாளர்களின் உலகப் பயணங்கள் வர்த்தக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.

சொன்னவை வேறு நடந்தவை வேறு
உலகமயமாதல் சூழல் பாதுகாப்பிற்கு உகந்தது என வாதிடப்பட்டது. ஆனால் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையப் பேசினார்கள் ஆனால் செயலில் ஏதும் இல்லை. சூழல் பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வளர்முக நாடுகளின் மூளைவளங்களை கடத்துவதே வளர்ச்சியடைந்த நாடுகளின் பணியாக இருக்கின்றது. உலகமயமாதலினால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்காவின் புதிய-தாராண்மைவாதிகள் உலகம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படும் என நம்பினார். உலகெங்கும் ஒரேமாதிரியான ஆட்சி முறைமை, ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை, ஒரேமாதிரியான வெளியுறவுக் கொள்கை வருமென நம்பினர். ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா, மார்கிரெட் தச்சர், ரொனி பிளேயர் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் மென்வலு அழுத்தங்கள் சரிவராத இடங்களில் இவர்கள் தாராண்மைத் தலையீட்டாளர்களாக மாறினார்கள். முதலாவது தலையீடு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது. இது இவர்களின் உலகமயமாதல் கொள்கை தொடர்பான ஐயங்களை உலகெங்கும் ஏற்படுத்தியது. உலகமயமாதல் என்னும் போர்வையில் இவர்கள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.
உலகமயமாதலால் சீனா பெரும் நன்மையடைந்ததா?
1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னர் சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டது. அதனால் தனது பொருளாதாரத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உலக வர்த்தகத்தில் தான் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சீனாப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் உணர்ந்து உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்காக வளர்ந்துள்ளதுசீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும்இலகுவான உலக வர்த்தகத்தால் சீனா கைத்தொழில்நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது. மேற்கு நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வது என்னும் பெயரில் சீனத் தொழிலாளர்களை மிகக் குறைந்த ஊதியம் வழங்கி தமது உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொண்டன. உலகத்தின் தொழிற்சாலை (factory of the world) உலக உற்பத்திவலுவின் நிலையம் (the world’s manufacturing powerhouse) ஆகிய பட்டங்கள் சீனாவிற்குச் சூட்டப்பட்டன. 19-ம் நூற்றாண்டு பிரித்தானியாவிற்கு இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிரித்தானியா தனது கண்டுபிடிப்புக்கள் மூலம் இந்தப் பட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் உலக உற்பத்தி நிறுவனங்கள் பொருத்து நிலையமாகவே (assembly plant of the world) சீனா உண்மையில் இருக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதனால் சீனாவின் உள்நாட்டுக் கண்டுபிடிப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன. உலக அரங்கில் போட்டி போட்டு வர்த்தகம் செய்யக் கூடிய உயர் தொழில்நுட்பத் திறன் பெறாத நாடுகள் கைத்தொழில் மயமாக்கப்பட முடியாத நாடுகளாகும். சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் ஏற்றுமதியில் தங்கியிருப்பது சீனாவையே கவலையடைய வைத்துள்ளது. சீனாவின் தொழிலாளர்கள் குறைந்த அளவு ஊதியம் பெறுவதால் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவு மிகவும் தாழ்ந்த நிலையிலேயா உள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு கொள்வனவு அதன் தேசிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கையில் சீனாவில் அது மூன்றில் ஒரு பங்காக இருக்கின்றது. இதனால உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடையும் போது அது சீனாவை மோசமாகப் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டில் இருந்து சீனா இதில் அதிக அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளது.

மாறுகிறது நெஞ்சங்கள்
 தற்போது 161 நாடுகள் இறக்குமதிகளுக்கு பெறுமதிசேர் வரிகள் விதிக்கின்றன. அமெரிக்கா சீனாவில் இருந்து செய்யும் இறக்குமதியால் அமெரிக்காவின் 3.2,மில்லியன் பேர்கள் வேலைகளை இழந்ததாகவும் ஜப்பானிடமிருந்து செய்யும் இறக்குமதியால் 896,000இற்கு மேற்பட்டவர்கள் வேலைகளை இழந்ததாகவும் அமெரிக்காவில் இருந்து கூச்சல்கள் எழுகின்றன. உலகமயமாதல் அமெரிக்காவை கைதொழிலற்றதாக்குகின்றது (deindustrializing) எனவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 2008-ம் ஆண்டில் உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து யூரோநாணய வலயத்தில் ஏற்பட்ட நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றமை, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலதுசாரிகளின் செல்வாக்கு அதிகரித்தமை, டொனால்ட் டிரப்பின் வெற்றி ஆகியவை உலகமயமாதல் செல்வந்த நாடுகளான வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களையும் பொருளாதார ரிதியாகப் பாதித்துள்ளது 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வெற்றியைக் கொடுத்ததில் முக்கியமானது உலக வர்த்தகம் தொடர்பாக அவர் முன்வைக்க கருத்துக்களே. உலகமயமாதல் எமது தொழிற்சாலைகளையும் எமது செல்வங்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டன என்றார் அவர். ஹிலரி கிளிண்டன் வென்றிருக்க வேண்டிய பென்சில்வேனியா, மிச்சிக்கன், விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்களில் டிரம்ப் பெரு வெற்றியீட்டியமைக்குக் காரணம் அந்த மாநிலங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டமையே.

மக்களின் விசனமும் டிரம்பின் வெற்றியும்.
உலகமயமாதல் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் பல நாடுகளில் செயற்படுவதால் பல வருமான வரி ஏய்ப்புக்களைச் செய்யக் கூடியதாக இருந்தது. இந்த நாடுகளில் பலர் வேலைகளை இழந்ததால் அவர்கள் செலுத்தும் வரியும் இல்லாமல் போனது. இவற்றால் அரச வருமானங்கள் குறைந்து கொண்டே போனது. அதனால் சமூக நலக் கொடுப்பனவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. உட்கட்டுமானங்களின் பராமரிப்புகளும் மேம்படுத்துதல்களும் மோசமடைந்தன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் பல பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர். உலகமயமாதல் அமெரிக்காவிற்கு நன்மையளிக்கவில்லை சில செல்வந்தர்களுக்கு மட்டும் நன்மையளித்தன என அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கி விட்டனர் என்பதை உணர்ந்த டொனால்ட் டிரம்ப் அதற்கு ஏற்பத் தனது தேர்தல் பரப்புரை வியூகத்தை வகுத்து வெற்றி கண்டார். இதையே Robert Putnam தனது Bowling Alone  என்னும் நூலில் American elites had been building an empire at the expense of a nation எனக் குறிப்பிட்டார். இதுதான் உலகமயமாக்குதலை இப்போது பின்வாங்கச் செய்கின்றது. அமெரிக்கா பல நாடுகளுடன் செய்த மற்றும் செய்ய முயன்று கொண்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கைகள் இனிச் செல்லுபடியற்றதாக்கும்.

தேவை ஒரு புதிய உலக ஒழுங்கு
உலக நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டிற்கு ஒன்றின் மீது ஒன்று தங்கியிருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உலகெங்கும் உள்ள வர்த்தக நிறுவனங்களை உலகளாவிய  போட்டி போடவைத்து தரமான மலிவான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு சில நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மட்டும் உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்த வைக்கும் நிலையை மாற்றி உலங்கெங்கும் உள்ள நிறுவனங்கள் உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமது வர்த்தகங்களைச் செய்து உலகெங்கும் நன்மையளிக்கும் வகையில் செயற்பட்டு இலாபமீட்டும் புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...