Tuesday, 25 March 2014

நாணயமற்ற சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்கும் கனவு.

இலங்கை போன்ற உலகில் உள்ள அயோக்கிய நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் சீனா தனது பொருளாதாரத்தைப் பற்றி சரியான தகவல்களை வெளிவிடுவதில்லை. சீன அரசின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இப்படிப்பட்ட சீனா தனது நாணயமான ரின்மின்பி யுவானை உலக நாணயமாக மாற்றும் திட்டத்துடன் இருக்கின்றது.

சீன அரசின் முக்கிய பெரும் பொருளாதார நோக்கங்கள்:
1. ஏற்றுமதியிலும் உள்கட்டமைப்பிலான முதலீட்டிலும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மீளமைத்து உள்நாட்டுக் கொள்வனவில் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தல்
2. ஆண்டொன்றிற்கு 7.5 விழுக்காட்டிற்கும் அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுதல்
3. நிதிச் சந்தையைச் சீரமைத்து மிகை கடன்
வழங்கலை இல்லாமல் செய்தல்.

உலக நாணயமாக டொலர் வேண்டாம் யூவான் வேண்டும்.                   சீன அரசின் நீண்ட கால பொருளாதார நோக்கங்களில் முக்கியமானதாக தனது யூவான் நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாக உள்ளது. அதன் ஒரு படியாக இனிவரும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் வட்டி வீதத்தில் அரச கட்டுப்பாட்டைக் நீக்கி நிதிச் சந்தை அதை தீர்மானிக்க வழி செய்யப்படும் என மார்ச் 12ம் திகதி சீன அரசு அறிவித்தது. ஆனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்ற மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீன நாணயம் நினைத்த மாத்திரத்தில் மாற்ற நாணயங்களாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவில் கட்டுப்பாடின்றி வெளிநாட்டவர்கள் முதலீடுகள் செய்யக்கூடியதாகவும் அவற்றைத் தேவைப்படும் போது விற்று காசாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவின் மூலதனக் கணக்கு திறந்து விடப்படல் வேன்டும்.  சீனாவின் வங்கித் துறை நவீன மயப்படுத்த வேண்டும். சீனாவின் நிதிச் சந்தை தாராளமயப்படுத்த வேண்டும்.

சீனாவின் வீட்டு விலை பெரும் சரிவைச் சந்திக்குமா?.                         2011-ம் ஆன்டுவரை சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொன்டிருந்தது.இதனால் பல கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர். இதனால் சீன நகரங்களில் வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வீட்டு விலைகள் மிகவும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. இதைச் சமாளிக்க சீன அரசும் தனியார்களும் வீடுகளைக் அதிகமாக நிர்மாணித்தனர். வீட்டு விலைகள் அதிகரித்துக் கொன்டு போவதால் பலர் வீடுகளை வாங்குவதை ஒரு முதலீடாகக் கொன்டனர். பல நகரங்களில் வீட்டு விலைகள் 20 விழுக்காடு அதிகரித்தன. பலர் வீடுகளை வாங்கி அவற்றின் விலை அதிகரிப்பை இலாபமாகக் கருதி வாடகைக்குக் கூட விடாமல் வெறும் வீடுகளாக வைத்திருந்தனர். இவர்களில் பலர் வீடுகளை வங்கிகளில் கடன் பெற்றே  வாங்கினர். ஆனால் கடந்த இரண்டு ஆன்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது. கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை பெற்றவர்கள் வேலைகளை இழந்து மீன்டும் கிராமங்களுக்குச் சென்றனர்.  இதனால் வீட்டு விலைகள் சரிவடைந்து. வங்கிகள் தாம் வழங்கிய கடன்களை மீளப்பெற முடியாமல் போகலாம் என இப்போது அஞ்சப்படுகின்றது. இது பெரிய அளவில் நிகழும் போது சீனாவிலும் சில மேற்கு நாடுகளில் ஏற்பட்டது போன்ற ஒரு கடன் நெருக்கடி ஏற்படலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் வைத்துள்ள சீன அரசால் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சீனாவின் போட்டித் திறன் குறைவடைகின்றதா?                         சீனா உலகச் சந்தையில் மற்ற நாடுகளிலும் பார்க்கக் குறைந்த விலையில் தனது உற்பத்திப் பொருட்களை விநியோகித்தல் சீனாவின் பொருளாதாரவளர்ச்சிக்குப் பெரிதும் உதவிக் கொன்டிருக்கின்றது. சீனாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம் என்பதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை வேறு நாடுகளில் இருந்து சீனாவிற்கு மாற்றின. இதுவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. சீனாவில் பலதொழிற்துறைகளில் ஊழியர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சீனத் தொழிலாளர்கள் உயர் தொழில்நுட்பத் துறைகளில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். சீன ஊழியர்களின் வேதனம் ஆண்டு ஒன்றிற்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இவற்றால் சீனாவின் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இது சீனாவின் உலகச் சந்தையில் போட்டியிடு திறனைப் பாதிக்கின்றது. இந்திய நாணயப் பெறுமதி அண்மைக் காலங்களாக வீழ்ச்சி அடைந்து கொன்டிருப்பதால் வெளிநாட்டு நிறுவங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் உற்பத்திச் செலவு குறைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன. ஜப்பான் சீனாவுடன் உள்ள உறவு கிழக்குச் சீனக் கடலில் உள்ள் தீவுகளுக்கு யாருக்குச் சொந்தம் என்ற முரண்பாட்டால் பாதிப்படைவதால் பல ஜப்பானிய நிறுவனங்களும் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன.

சீனாவில் கடன் நெருக்கடி ஏற்படுமா?                                                                                                  Shanghai Chaori Solar Energy Science & Technology Co என்னும் சீன நிறுவனம் மார்ச் மாத ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுக் கடன் நிலுவையை செலுத்த முடியாமல் போனது உலக நிதிச்சந்தையை உலுப்பியது. இது சீனாவில் ஒரு கடன் நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்வியை உருவாக்கியது.  இதற்கு முன்னர் 2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சீன நிறுவனம் தனது கடன்நிலுவை செலுத்த முடியாத நிலையில் இருந்து தப்பித்துக் கொன்டது. தப்பிக்க வைத்தது சீன அரசா அல்லது சீன அரச வங்கியா என்பது பற்றி யாருக்கும் தெரியாது.  சீனாவில் கடன் அதிகரிப்பு விழுக்காடு அதன் பொருளாதாரவளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இரண்டு இரண்டு  இருக்கின்றது. இப்படியான நிலை இருந்த நாடுகள் பல கடன் நெருக்கடியில் அகப்பட்டதாக வரலாறு சான்று சொல்கின்றது. இதே நிலை சீனாவிற்கும் ஏற்படுமா என்ற அச்சம் இப்போது அதிகரித்துக் கொன்டிருக்கின்றது. 2008 ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து சீனாவின் ஏற்றுமதி குறையத் தொடங்கியது. இதனால் உள்ளூரில் வேலைவாய்ப்புக் குறைந்து மக்கள் அரசுககு எதிராகக் கிளர்ந்து எழுவதைத் தடுக்க சீனா தனது உள்நாட்டு முதலீட்டை கன்னா பின்னா என அதிகரித்தது. தனது வங்கிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க உத்தரவிட்டது. சீனா தனது பொருளாதாரத்திற்கு நானூறு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஊக்குவிப்பைக் கொடுத்தது. பிபிசி தொலைக்காட்சி சீன அரசின் உள்நாட்டு முதலீட்டைப்பற்றி சீனா எப்படி உலகை ஏமாற்றியது என்ற ஆவணப்படத்தில் விபரித்தது. சீன அரச முதலீட்டால் சீனாவில் 26,000 மைல்கள் நீளமான வேகப் பெருந்தெருக்கள் கட்டப்பட்டன, முப்பது விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன, ஐந்து நாட்களுக்கு ஒரு வானத்தைத் தொடும் உயர்மாடிக்கட்டிடங்கள் எழுப்பப்பட்டன, இருபத்தைது நகரங்களில் மெட்ரோ தொடரூந்து முறைமை உருவாக்கப்பட்டது, ஆறாயிரம் மைல்கள் நீளமான உயர்வேகத் தொடரூந்துப் பாதைகளும் தரிப்பு நிலையங்களும் உருவாக்கப்பட்டன, உலகிலேயே நீளமான மூன்று பாலங்கள் கட்டப்பட்டன இப்படி சீன அரச முதலீட்டைப் பட்டியலிட்டது பிபிசி. தனது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி குன்றாமல் இருக்க சீனா இந்தச் முதலீட்டு அதிகரிப்பைச் செய்தது. சீன அரச முதலீடு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 40விழுக்காட்டில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. இது சீனாவால் தொடர்ந்து செய்ய முடியாத முதலீட்டு நிலை எனப் பொருளாதார நிபுணர்கள் விபரித்தனர். கடந்த ஐந்து ஆன்டுகளாக சீனாவின் கடன்வளர்ச்சி 71 விழுக்காடாக இருக்கிறது. சென்ற ஐம்பது ஆண்டு வரலாற்றில் இப்படியான மிகை கடன் வளர்ச்சியைச் சந்தித்த 33 நாடுகளில் 22 நாடுகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி பொருளாதார மந்த நிலைக்கு உள்ளாகின. சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும் வங்கிகளின் கடன்வழங்கல் அதிகரிப்பும் சீனாவில் விலைவாசி உயர்வையும் கடன் நெருக்கடியையும் கொண்டு வரலாம் என்ற அச்சத்தில் சீனா தனது நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தது. சீன வங்கிகளுக்கு கடன் கொடுப்பதை வெகுவாகக் குறைக்கும் படி உத்தரவிடப்பட்டது.

சீனாவின் நிழல் வங்கிகள்                                             நிழல் வங்கிகளுக்கான இலகு வரைவிலக்கணம் ஒன்றை இங்கு கொடுப்பது பொருத்தமானதாகும். அரசு அனுமதி பெற்ற வங்கிகளின் செயற்பாட்டை அரசுக்குத் தெரியாமல் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் நிழல்வங்கிகள் எனப்படும். சீன அரசானது வங்கிகள் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடனுக்கான தேவை சீனாவில் தொடர்ந்தும் உயர் நிலையிலேயே இருந்தது. இதனால் நிழல்வங்கிகள் பல உருவாகி மக்களுக்கு கடன்களைக் கொடுக்கத் தொடங்கியது. இது கட்டுக்கடங்காமல் வளர்ந்து எட்டு ரில்லியன் (எட்டு இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான துறையானது. இது பொருளாதாரத்தின் மீதான சீன அரசின் இறுக்கமான பிடியை இழக்கச் செய்தது. சீனாவில் பெரும் கடன் அதிகரிப்பு ஏற்பட்டது. அது எந்த அளவு என சீன அரச பொருளாதார நிவாகிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சீன அரசு நிழல் வங்கித் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்தது.

 உக்ரேன் விவகாரம் சீனாவிற்கு சாதகமாகலாம்.
உக்ரேன் விவகாரத்தில் இரசியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுவரும் பொருளாதாரத் தடை சீன நாணயத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது. இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நடவடிக்கைகள் ஒரு போர் ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படியான் ஆபத்து அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், ஐரோப்பிய ஒன்றிய யூரோ ஆகிய நாணயங்களின் பெறுமதியைப் பாதிக்கலாம். இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணியைக் கையில் கொண்டதுமான சீனாவின் நாணயம் ஒரு பாதுகாப்பான நாணயமாக உருவாகலாம்.

அசையாது சீனா                                 சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தில் உள்நாட்டு மக்கள் கொள்வனவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இது மூன்றில் இரண்டு பங்காகும். சீனா தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களின் கொள்வனவு வலுவை பெருமளவு அதிகரிக்க வேன்டும். குறைந்த ஊதியம் கொடுத்து வேலைவாங்குவதில் இருந்து விலகினால்தான் சீனப் பொருளாதாரம் மேற்குநாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம். சீனாவின் பொருளாதாரத்தைப்பற்றி எழுதும் உலகப் பொருளாதார வல்லுனர்கல் அடிக்கடி பாவிக்கும் வார்த்தை நீர்க்குமிழி என்பதாகும். அது எப்போதும் வெடிக்கலாம். ஆனால் சீனாவின் நிதிக்கட்டமைப்பு ஆரம்ப நிலையேலேயே இப்போதும் உள்ளது. அதனால் நிர்வகிக்க இலகுவானது. சீன நிதிக்கட்டமைப்பில் அரச வங்கிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. பல தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் கொண்ட மேற்கு நாடுகளைப் போல இல்லாமல் இருப்பதால் நாட்டில் பொருளாதாரத் திட நிலையை ஏற்படுத்துவதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதும் சீன அரசிற்கு இலகுவானதே. எந்த ஒரு சீனவங்கியும் வங்குரோத்து நிலை அடையாது என்பது நிச்சயம். உலகிலேயே அதிக அளவான மூன்றரை ரில்லியன் (மூன்றரை இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களை வெளிநாடடுச் செலவாணியாகக் கையிருப்பில் வைத்துள்ள சீன அரசு வங்குரோத்து நிலையை அடையப்போவதில்லை.

Monday, 24 March 2014

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா?

உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல தமிழர்களும் பக்கத்திலுள்ள "பிராந்தியப் பேரரசான" இந்தியாவை நம்பாமல் தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்கூடாது என்ற கூச்சல் சிலரால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூச்சலிடுபவர்கள் தங்கள் "வாதத்திற்கு" ஜோர்ஜியா மீது இரசியா 2008-ம் ஆண்டு செய்த ஆக்கிரமிப்பையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். இரசியா உக்ரேனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட இனக்கொலைகளைத் தெரிந்து கொண்டும் இவர்கள் இப்படிக் கூச்சலிடுவது "கொடுத்த காசுக்கு மேலாலை கூவுதல்" என்ற பதத்தைத்தான் நினைவிற்கு கொண்டு வருகின்றது.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா?
முதலில் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா என்பது பற்றிப் பார்ப்போம். இந்தியாவைச் சிலர் பிராந்திய வல்லரசு என்கின்றனர். பிராந்திய வல்லரசுக்கு இப்படி ஒரு வரைவிலக்கணம் உண்டு:
States which wield unrivaled power and influence within a region of the world possess regional hegemony.
இதன் பொருள்:  ஈடற்ற  வலிமையும் செல்வாக்கும் உலகின் ஒருபிரதேசத்திற்குள் செயலாட்சி புரியக் கூடிய ஒரு அரசு பிராந்திய ஆதிக்கமுள்ளது. சீக்கிம் நாட்டை தனது ஒரு மாநிலமாக இணைத்த போதும் பங்களா தேசத்தைப் பாக்கிஸ்த்தானில் இருந்து பிரித்த போதும் இந்தியாவிடம் ஒரு பிராந்திய ஆதிக்கம் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவைச் சூழவுள்ள எந்த நாட்டிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதில்லை. இந்தியாவிடம் வலிமை இருந்தாலும் அது  ஈடற்ற வலிமை அல்ல. இந்தியாவிற்கு மிஞ்சிய வலிமை சீனாவிடம் இருக்கிறது. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடக்கூடிய வலிமை பாக்கிஸ்த்தானிடம் இருக்கிறது. நேப்பாளம், மியன்மார்(பர்மா), இலங்கை ஆகிய நாடுகளின் மேல் இந்தியாவின் ஆதிக்கம் இல்லை. பிரேமதாசாவின் அரசைக் கவிழ்க்க முற்பட்டு இந்தியா பல்லுடை பட்டதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா மூக்குடைபட்டதும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்தியாவின் உயர் இராசதந்திரிகளான விஜய் நம்பியார், கமலேஷ் ஷர்மா போன்றவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் போல் செயற்படுவதும், இந்திய வெளிநாட்டமைச்சர்கள் இலங்கை அதிபர் முன் பணிவுடன் நிற்பதும், நிருபாமா ராவ் போன்றவர்கள் இலங்கை அமைச்சர்கள் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்பதும் இந்தியாவிற்கும் பிராந்திய வல்லரசு என்ற சொல்லிற்கும் வெகு தூரம் என்பதைக் காட்டுகிறது.

உக்ரேனியர்களும்-இரசியாவும் தமிழர்களும்-இந்தியாவும்
இரசியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இரசியா உலகிலேயே அதிக நிலப்பரப்புக் கொண்ட நாடு. இந்தியாவிற்கும் கணிசமான நிலப்பரப்பு உண்டு. இரசியா தனது நிதி வளத்திற்கு மிஞ்சிய அளவிற்கு படை வலுவைக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவும் அப்படியே. இரசியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட ஒரு வல்லரசு நாடு. இந்தியா அப்படியல்ல.  இரசியா தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை. இந்தியாவும் தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை.  ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர அனுமதிக்காது. இரசியா உக்ரேனை அதனது அணுப் படைக்கலன்களை ஒப்படை உனது பிரதேச ஒருமைப்பாட்டிற்கு தான் உத்தரவாதம் என்று பொய் சொல்லிவிட்டு இப்போது உக்ரேனைப் பிய்த்து உதறுகிறது. இந்தியா தமிழர்களை அவர்களின் படைக்கலன்களை ஒப்படை உங்கள் பாதுகாப்பிற்கு தான உத்தரவாதம் என்று பொய் கூறி அவர்களைக் கொன்று குவித்தது.  1932-ஆம் 1933-ம் ஆண்டுகளில் இரசிய அரசு தனது விவசாயத் திட்டத்திற்கு ஒத்து வராத எழுபத்து ஐந்து இலட்சம் உக்ரேனியர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது. உக்ரேனின் பல பிராந்தியங்களில் இரசியர்களைக் குடியேற்றியது. இதற்குப் பின்னரும் இரசியாவைச் சார்ந்து நில்லுங்கள் என்றோ அல்லது இரசியாவைக் "கையாளுங்கள்" என்றோ யாராவது உக்ரேனியர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் நிச்சயம் இரசியாவின் சில்லறைக் கைக்கூலிகளே.  இந்தியா தனது நாட்டிலுள்ள போலி அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிக அளவு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. சில இந்திய அதிகார மையமான தென் மண்டலத்தில் இருக்கும் பிற்போக்குப் பூனூல் கும்பல்கள் தமிழன் என்பவன் சூத்திரன் அவள் ஆளப்பட வேண்டியவன், அவன் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றன. நேரு எஸ் தொண்டமானையும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தையும் இணையவிடாமல் தடுத்தமை, நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்சதீவுத் தாரைவார்ப்பு, தமிழ் இளைஞர்களுக்கு படைக்கலப் பயிற்ச்சி கொடுத்து தனது காரியத்தை இந்தியா சாதிக்க முயன்றமை, ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம், அமைதிப்படையின் போர்க் குற்றம், ரணில் விக்கிரமசிங்க உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முன்வந்த போது இந்தியா அதைக்கடுமையாக எதிர்த்து நிறுத்தியமை,  இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வழங்க வந்த ரணிலின் ஆட்சியை இந்தியா  சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் ஜேவிபியையும் இணைத்துக் கலைத்தமை, முள்ளிவாய்க்காலில் முடிந்த இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு, 2008-ம் ஆண்டு மனித ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியமை இப்படியாக இந்தியத் துரோகப் பட்டியல் மிகவும் நீண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிராந்திய வல்லரசு அல்லாத இந்தியாவைப் பிராந்திய வல்லரசு எனப் பொய் சொல்லி அதை கையாளுங்கள். அதை விட்டு தூரத்தில் உள்ள அமெரிக்கப் பேரரசை நம்பாதீர்கள் எனச் சொல்பவர்களின் நோக்கம் தான் என்ன?

புது டில்லிதானாம் ஜெனிவா
"ஜெனிவாவை நோக்கி தமிழர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் புது டில்லி அசையாமல் ஜெனிவா அசையாது. புது டில்லியை எப்படி அசைப்பது என்பதில்தான் தமிழர்கள் முழுக்கவனமும் செலுத்த வேண்டும்." இப்படி ஆலோசனை சொல்கிறார்கள் இந்திய ஆதரவுக் கூச்சலிடுபவர்கள். உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் ஜெனிவாத் தீர்மானங்களால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் இல்லை என்று. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள  193 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவு பாலாஸ்த்தீனியர்களின் விடுதலைக்கு உண்டு.  இதை வைத்துக் கொண்டு எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிலும் தீர்மானம் நிறைவேற்றி அவர்களிற்கு விடுதலை பெற்றுக்  கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜெனிவாவில் தமிழர்களுக்கு விமோசனம் எப்படியும் கிடைக்காது என்பதை பன்னாட்டு யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பாலஸ்த்தீனியர்களுக்கு அமெரிக்காவின் இரத்து அதிகாரம் போல் தமிழர்களுக்கு சீனாவினதும் இரசியாவினதும் இரத்து அதிகாரங்கள் தடையாக இருக்கும். தமிழர்கள் ஜெனிவாவிற்குப் போனாலும் காரியம் ஆகப் போவதில்லை. புது டில்லிக்குக் காவடி எடுத்தாலும் காரியம் நடக்கப் போவதில்லை.

ஜோர்ஜிய உதாரணம்.
இரசியா 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவின் கீழிருந்த இரண்டு தன்னாட்சியுள்ள பிரதேசங்களில் படை எடுத்து அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த போரில் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு உதவவில்லை. இதற்காக நாம் இந்தியாவிற்கு வால் பிடிக்க முடியாது. ஆனால் 2008-ம் ஆண்டின் பின்னர் ஜோர்ஜியா எப்படி இரசியாவைக் கையாள்கிறது என்பதை கூச்சலிடும் இந்தியக் கைக்கூலிகள் கருத்தில் எடுக்க வேண்டும். 2011-ம் ஆண்டு ஜோர்ஜியப் பாராளமன்றம் 19-ம் நூற்றாண்டில் இரசியா சேர்க்காசியர்களைக் கொன்றதை ஓர் இனக்கொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இரசியாவின் தென் எல்லையில் உள்ள வட கௌக்கௌஸ் பிரதேசத்தில் தன்னாட்சி கோரிப் போராடும் மக்களுடன் தனது தொடர்புகளை ஏற்படுத்தியது. அவர்கள் ஜோர்ஜியாவிற்கு வருவதற்கு பயண அனுமதி(விசா) தேவையில்லை என அறிவித்தது.

அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகளா?
அமெரிக்காவிடம் போகாதே இந்தியாவிடம் போ எனக் கூச்சலிடுபவர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள் என்கின்றனர். ஆனால் உக்ரேன் விவகாரத்தில் இந்தியா இரசியாவிற்கு ஆதரவு தெரிவித்தமை அவர்களின் கூற்றைப் பொய்யாக்குகிறது. வேலிக்கு ஓணான் கதைதான். இந்தியாவில் அதிகமாக உள்ள இளையோர் தொகையும் அதிகமாக உள்ள நடுத்தர வர்க்க மக்கள் தொகையும் இருப்பதால் உலக நாடுகளிற்கு இந்தியா ஒரு கவர்ச்சி மிக்க சந்தையாகத் தெரிகிறது. இதனால்தான் சில பெரிய நாடுகள் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன.

தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டதா?
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டது இதனால் இனித்தமிழர்கள் இந்தியாவை அணுகலாம் என்கின்றனர் இந்தியாவிற்காக கூச்சலிடுபவர்கள். பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் இந்தியா பூட்டைத் திறக்கவில்லை என்று நன்கு தெரிகிறது. இந்தியக் கைக்கூலிகளான சம்பந்தனும் சுமந்திரனும் ஜெனிவாவில் நின்று செய்யும் பரப்புரைகள் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு அள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டில் தமிழர்களின் கொந்தளிப்பு இந்தியாவை மாற்றியதா?
தமிழ்நாட்டில் தமிழர்கள் கொந்தளித்தது இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றனர் இந்தியாவிற்காகக் கூச்சலிடுபவர்கள். அப்படியாயின் தமிழர்களின் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா இனி முன்னிறுதி இலங்கையுடனான தனது அணுகுமுறையை மாற்றுமா?

இந்தியாதான் தமிழர்கள் முதல் எதிரை என்பதை என்று பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள எல்லாத தமிழர்கள் உணர்கிறார்களோ அன்றுதான் தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும்.

அடங்குங்கடா!!!

Monday, 17 March 2014

சிரியக் கிளர்ச்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவில் அரசுக்கு ஒரு வெற்றி

அரபு வசந்தத்தின் ஓர் அம்சமாக உருவான சிரிய அதிபர் பஷார் அசாதத்திற்கு எதிரான கிளர்ச்சி மார்ச மாதம் பதினைந்தாம் திகதியுடன் முன்றாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப்ப்பலி கொண்ட சிரிய உள்நாட்டுப் போர் இருபது இலட்சம் மக்களை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கியது. ஐக்கிய நாடுகள் சபையின்  யூனிசெப இருபத்து மூன்று இலட்சம் சிறுவர்கள் வீடின்றி உணவின்றி கல்விவசதியின்றி இருக்கின்றனர் என்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பதுகாப்புச சபையின் தீர்மானங்கள் எதுவும் சிரிய மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்கின்றது யூனிசெப்.

முன்றாம் ஆண்டு நிறைவான சனிக்கிழமை  சிரிய அரச படைகள்   சிரிய லெபனானிய எல்லையில் உள்ள யப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியதாக சிரிய அரசு அறிவித்துள்ளது. யப்லவூட் நகரம் சிரிய லெபனானிய எல்லைப் பிரதேசத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் வசம் இருந்த கடைசி நகரமாகும். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய படைகளுடன் இணைந்து போராடுவதால் சிரிய லெபனானிய எல்லைப் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தாகும். ஹிஸ்புல்லா அமைப்புப் போராளிகளும் சிரியாவின் அரச படைகளும் இணைந்தே இந்தத் தாக்குதலை வெற்றிகரமாகச செய்தன.  

 சிரிய லெபனானிய எல்லையில் உள்ள யப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து லெபனானில் உள்ள சிரியக் கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தால் லெபனானில் பதட்டம் உருவாகியுள்ளது.

தலைநகர் டமஸ்கஸ் உட்படப் பல முக்கிய நிலைகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுததியுள்ள சிரிய அரச படைகளுக்கு யாப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியமை இன்னும் ஒரு கேந்திர முக்கியத்துவ வெற்றியாகும். சிரியக் கிளரச்சிப் படைகளுக்கு யாப்லவூட் நகர் ஒரு முக்கிய வழங்கற்பாதையாகவும் இருந்தது.

மூன்றாம் ஆண்டு நிறைவைப் பற்றி ஏதும் சொல்லாத சிரிய அரச ஊடகங்கள் சிரியா யாப்லவூட் நகரைக் கைப்பற்றியதை பெரிது படுத்தி அறிவித்தன. ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சிரியக் கிளர்ச்சிப் படைகள் செய்த பல கார் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கான தயாரிப்பு வேலைகள் லாப்வூட் நகரிலேயே செய்யப்பட்டன. ஆனால் சிரியக் கிளர்ச்சிப் படையினர் யாப்லாவூட் நகரைத் தாம் இன்னும் இழந்துவிடவில்லை என்கின்றனர்.

சிரியக் கிளர்ச்சி என்பது நித்திய கண்டம் தீர்க்காயுசு என்பதாகும்.

Saturday, 8 March 2014

வா தமிழா வா ஜெனீவா நோக்கி


நவி பிள்ளை நன்றாய் சீன் போட
டெவிட் கமரூன் ஸ்டண்ட் அடிக்க
சனல் 4 காரன் பிலிம் காட்டினான்
தணிக்கை சபையானது இந்தியா

ஜெனிவாவில் அரங்கேறுகிறது - மீண்டும்
தமிழன் முதுகில் குத்து
தமிழா இன்னும் உன் முதுகில்
குத்த வாங்க இடமுண்டா
விதி என நீ நினைத்து வீழ்திடல் முறையோ
சதியினை முறிக்க நீதியினைக் கேட்க

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி

 
அமெரிக்கத் தயாரிப்பாளர்களை
நம்பிட வேண்டவே வேண்டாம்
எம் போராட்டத்தின்
விநியோக உரிமை எம்முடையதே
உலகெங்கும் வாழ் தமிழர்கள்
எல்லோரும் ஒன்றாய் இணைவோம்
டி ராஜேந்தர் போலாவோம்
எம் போராட்டத்தின் கதையும் நாமே
கதாநாயகர்களும் நாமே பின்னணியும் நாமே
இசையும் நாமே இயக்கமும் நாமே
எதையும் அந்நியர் கையில்
கொடுத்திட வேண்டாம்
விதியென எண்ணி வீழ்திடல் தகுமோ
ஒன்றாகிச் சதியினை வெல்லும் நேரமித

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி


 ஓராண்டுக்குள் விசாரியுங்கள் 
உள்ளக விசாரணை செய்யுங்கள்
ஓராண்டுக்குள் விசாரியுங்கள்
என வஞ்சகமாக ஒவ்வொரு ஆண்டும்
தீர்மானம் போடுகிறார்கள்
பிள்ளையார் திருமணம்தான்
போர்க்குற்ற விசாரணை
என்பது
விதி அது என நினைத்து வீழ்ந்திட வேண்டாம்
ஒன்றாகிச் சதி வெல்ல வேண்டிய தருணமிது

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி 

 
எமது போரட்டத்தின் பில்டிங் தான் சரிந்தது
பேஸ்மென்ற் என்றும் ஸ்ரோங் என உணர்வாய்
நடந்தது எல்லாம் போன வாரம்
இது இந்த வாரம் நாம் எழவேண்டிய வாரம்
இந்தியா எம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி
கட்டத்துரையாக மாறி  ரணகளமாக்கிவிட்டது
எம் போராட்ட வலிமையை
விதி அது என நினைத்து வீழ்ந்திட வேண்டாம்
ஒன்றாகிச் சதி வெல்ல வேண்டிய தருணமிது

வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி


ஈழத்தமிழ் அரசியல் வாதிகளிடையே போட்டி
யார் அதிகம் கெடுப்பதென்று போட்டியோ போட்டி
புலம் பெயர் தமிழ் அமைப்புக்களிடையே போட்டி
எத்தனை கூறுகளாகப் பிரிவது என்று
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போட்டி
இனக்கொலைக்கு யார் உதவுவதென்பதில்
இந்து நாடுகளுக்கும் இசுலாமியநாடுகளுக்கும் போட்டி  

ஈழக் கோவில்களை அழிப்பதற்கு யார் உதவுவது என்பதில்
இப்போட்டிகள் எல்லாம் விதி என நினைத்து வீழ்திடல் தகுமோ
தமிழா வீழ்ந்திடல் தகுமோ
கரம் கொடுத்து விடுதலை தேர் இழுக்க ஒன்றாகிச்
சதி வெல்லும் நேரமிது தமிழா சதி வெல்லும் நேரமிது
 
வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி


ஜெனீவாவில் ஏதும் கிடைக்கப் போவதில்லை
என்பது உணமையே உண்மையே - தமிழா
உண்மையிலும் உண்மையே
ஆனாலும் இந்த உலகத்தின் 
 ஒவ்வொரு மூலையிலும்
நீதி கேட்டு எம் குரல் ஒலிக்கட்டும் - அதனால்
வா தமிழா வா ஜெனீவா நோக்கி - நீ
வா
தமிழா வா ஜெனீவா நோக்கி

Friday, 7 March 2014

அமெரிக்காவின் உளவுத்துறை சிஐஏஇற்கு உக்ரேனிலும் தோல்வி

உலகெங்கும் தன் உளவு நடவடிக்கைகளையும் சதி நடவடிக்கைகளையும் மோசமான பயங்கரவாதச் செயல்களையும் வெற்றிகரமாகச் செய்யும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ எனப்படும் நடுவண் உளவு முகவரகம் இன்னும் ஒரு தோல்வியை உக்ரேனில் சந்தித்துள்ளது.

உக்ரேனில் ஆட்சிக் கவிழ்ப்பில் முன்னின்று செயற்பட்டது போலந்து நாடு ஆகும். உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அதிக நன்மை அடையப் போவது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை நாடான போலந்து ஆகும். ஐக்கிய அமெரிக்கா, போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆட்சிக் கவிழ்ப்பில் ஒன்றிணைந்து செயற்பட்டன. உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளரைப் பதவியில் இருந்து அகற்றினால் இரசியாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் அவர்களுக்கு அவசியமானதும் முக்கியமானதுமாகும். அமெரிக்க உளவுத் துறை கொடுத்த தகவல்கள் பிழையாகிப் போய்விட்டன.
சிஐஏயின் தோல்விப்பட்டியலில் மிக மோசமான தோல்வி நியூயோர்க் நகரில் இருந்த இரட்டைக் கோபுரத்தில் நடந்த் 9/11 தாக்குதலைப் பற்றி அறிய முடியாமல் போனது. ஆனால் ஒரு சதிக்கோட்பாடு (conspiracy theory) சிஐஏயிற்கு இது தெரிந்திருந்தது என்றும் இன்னொரு சதிக் கோட்பாடு சிஐஏதான் அதைச் செய்தது என்றும் சொல்கின்றது. மக்களைக் குழப்புவதற்காக சிஐஏயே இந்தச் சதிக்கோட்பாடுகளைப் பரப்பியிருக்கலாம்.

பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு உற்பத்தி செய்யப்போவதை  சிஐஏ அறிந்திருக்கவில்லை. இது பற்றிய சதிக்கோட்பாட்டின்படி இந்தியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சமநிலைப்படுத்த பாக்கிஸ்த்தானை அமெரிக்கா அணுக்குண்டு உற்பத்தி செய்ய அனுமதித்தது.

ஈராக்கிடம் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் படைக்கலன்கள் இல்லை என்பதை சிஐஏ அறிந்து கொள்ள முடியாமல் போனது அதன் தோவி என்கின்றனர். ஆனால் இது சதிக்கோட்பாட்டின் உச்சம். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் நன்கு தெரியும் அப்போதைய ஈராக் ஆட்சியாளரிடம் வேதியியல் படைக்கலன்களை இல்லை என்று.

உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச்சைப்  பதவியில் இருந்து நீக்கி மேற்கு நாட்டு ஆதரவாளர்களின் கையில் உக்ரேனின் ஆட்சியை ஒப்படைத்தால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் படைநடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார் என அமெரிக்க உளவுத் துறை வெள்ளை மாளிகைக்கு அறிவித்திருந்தது. ஆனால் இது பிழைத்துப் போய் உலகெங்கும் ஒரு பதட்ட நிலையையும் பங்குச் சந்தைகளிலும் பெரும் பாதிப்பையும் உக்ரேன் விவகாரம் ஏற்படுத்தியது.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் உளவுத்துறைக்கான உப குழு இப்போது சிஐஏ பிழையான தகவலைக் கொடுத்தது எப்படி என விசாரிக்கின்றது.

Tuesday, 4 March 2014

உக்ரேனின் கிறைமியா இரசியாவிற்கு சொந்தமானதே

இரசியாவின் பொருளாதாரத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது உக்ரேன் விவகாரம். இரசியாவின் பங்குச் சந்தையில் இரசிய வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் தமது பெறுமதியில் 34 பில்லியன்  (மூவாயிரத்து நானூறு கோடி) டொலர்களை இழந்தன. இரசிய அரசு தனது நாணயமான ரூபிளின் பெறுமதி மோசமடையாமல் இருக்கு பத்து பில்லியன் வெள்நாட்டுச் செலவாணியை இழக்க வேண்டி இருந்தது.

இரசியாவின் வட்டி வீததத்தை5.5% இல் இருந்து 7% இற்கு அதிகரிக்க வேண்டி இருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை அமெரிக்காவிற்கு முந்தி இரசிய நிதிச் சந்தை கடுமையாகத் தண்டித்து விட்டது என்கின்றது. உலகெங்கிலும் உக்ரேன் விவகாரத்தால் பங்குகள் விழ்ச்சியடைந்தன. அமெரிக்க டொலரினது பெறுமதி உயர்ந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தது.

இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேனும் அதன் ஒரு பகுதி எனச் சொல்லப்படும் கிறைமியாவும் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்தவையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளுக்குப் போனால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை வல்லுனர்களின் கருத்தாகும். கிறைமியா என்பது கருங்கடலில் உக்ரேனின் கிழக்கே உள்ள ஒரு குடாநாடு ஆகும். அது உக்ரேனுடன் நிலத் தொடர்புடையது. இதன் இரண்டு மில்லியன் (இருபது இலட்சம்) மக்களில் 58 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இரசியர்களே. இரசியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு கிறிமியாவிலேயே நிலை கொண்டுள்ளது. இரசியா மத்திய தரைக் கடலிலும் மத்தியக் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு கிறைமியாவில் உள்ள அதன் கடற்படைத்தளம் முக்கியமான ஒன்றாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதறிய போது உக்ரேன் ஒரு தனி நாடாகியது. அப்போது இரசியக் கடற்படை கிறைமியாவின் செவஸ்ரப்போல் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க இரசியாவும் உக்ரேனும் ஒத்துக் கொண்டன. இந்த உடன் படிக்கையின் படி கிறைமியா உக்ரேனின் ஒரு பகுதி என்பதாகும். ஆனால் வரலாற்று அடிப்படையில் பார்க்கும் போது கிறைமியா இரசியாவினுடையதே.

இரசியாவின் பிராந்தியமாக இருந்த கிறைமியாவை 1954-ம் ஆண்டு அப்பொதைய இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். அவர் ஒரு உக்ரேனியர் என்பதால் இப்படிச் செய்தார்.

    1783-ம் ஆண்டு இரசியா கிறைமியாவைத் தனதாக்கியது.

    1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறைமியாவைப்பறிக்க ஒட்டொமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறைமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது.

 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறைமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது.

    1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது. 

    1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது.

    1944-ம் ஆண்டு கிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர். 

    1945-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது.  .

    1954-ம் ஆண்டு கிறைமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது.

    1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறைமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறைமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார்.

    1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறைமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 

Monday, 3 March 2014

சீனாவிற்கு எதிரான கடலடிப் போர்க்கூட்டணி

சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் தமது விமானம் தாங்கிக் கப்பல்களை புதியனவாக்குதலிலும் வலிமிக்கவையாக்குவதிலும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.  சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் பின் தங்கி இருக்கின்றன. இந்த இடைவெளியை சீனா தனது நீர்மூழ்கிக்கப்பற்படையை வலுமிக்கதாக்கி நிரப்ப முயல்கின்றது. நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வீசக் கூடிஅ அதிவேகமாக நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகளை சீனா உருவாக்கிவருகின்றது.

சீனா மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய லயோனிங் எனப்படும் விமானம் தாங்கிக்கப்பல் வெறும் பயிற்ச்சிக் கப்பலாக மட்டுமே செயற்படக் கூடியது ஒரு போர் கப்பலாக அல்ல எனச் சொல்லப்படுகின்றது. தொழில்நுட்பக் கோளாறுகளும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கக் கூடிய திறன் மிக்க நாசகாரிக்கப்பல்கள் சீனாவிடம் இல்லை என்பதாலும் சில படைத் துறை ஆய்வாளர்கள் சீனாவின் லயோனிங் விமானம் தாங்கிக் கப்பல் போர்முனைக்கு உகந்தது அல்ல என்கின்றனர்.

சீனாவின் லியோனிங்கின் விமானம் தாங்கு மேடை 999 அடி நீளமானது. இந்தியாவின் விக்ராந்தின் மேடை 860 அடி நீளமானது. ஜப்பானின் இஜுமோ என்னும் உழங்கு வானூர்தி தாங்கிக் கப்பலின் மேடை 814 அடி நீளமானது. ஜப்பானிய அரசமைப்புச் சட்டம் ஜப்பான் ஒரு விமானம் தாங்கிக்கப்பலை வைத்திருப்பதைத் தடை செய்கின்றது. இதனால் ஜப்பானில் இஜுமோ ஓர் உழங்கு வானூர்திக் கப்பலாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேவை ஏற்படும்போது ஐம்பது போர்விமானங்களை தாங்கிச் செல்லக் கூடியது. இந்தியாவின் விக்ராந்தில் 36 விமானங்கள் மட்டுமே.


சீனாவுடனும் இந்தியாவுடனும் ஒப்பிடுகையில் ஜப்பானிடம் மிகவும் திறன்மிக்க கப்பல்கட்டும் தொழிற்துறை இருக்கின்றது. ஜப்பான் தனது நாசகாரிக் கப்பல்களில் இருந்து நிலையான இறக்கைகள் கொண்ட ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை உள்ளடக்குவது குறித்து தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றது. இவற்றால் கிழக்குச் சீனக் கடலில் சீனப் படையினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஜப்பான் நம்புகின்றது. ஜப்பான் தனது நாசகாரிக் கப்பல்களை சிறிய விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றவும் திட்டமிடுகின்றது. ஏற்கனவி ஜப்பானிடம் மூன்று உழங்கு வானுர்தி தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன.  RQ-4 Global Hawk என்னும் அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களையும் ஜப்பான் வாங்க உத்தேசித்துள்ளது.

2014-ம் ஆண்டு சீனா தனது புதிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் தாக்கும் திறனை அதிகரிக்கவுள்ளது. சீனாவின் JL-2 நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு ஏவுகணைகள் 14,000 கிலோமிட்டர் அதாவது 8,699 மைல்கள் வரை பாயக் கூடியவை. இவற்றால் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய், அலஸ்கா போன்ற மாநிலங்கள் மீது அணுக்குண்டுத் தாக்குதல்களை செய்யும் திறனை சீனா பெறுகின்றது.

உலகிலேயே படைத்துறைச் செலவு அதிகரிப்பு ஆசிய நாடுகளில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஆசியப் படைத்துறைச் செலவு 2011இலும் பார்க்க 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் படைத்துறைச் செலவு மற்றா ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது.

சீனா உருவாக்கியுள்ள அதிவேகமாகச் செல்லும் ஏவுகணைகள் அமெரிக்கா பல பில்லியன்கள் செலவி உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செல்லுபடியற்றதாக்கியுள்ள வேளையில் சீனா தனது புதிய தர நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ள. சீனாவிடம் மொத்தமாக 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆறு அணுவலுவில் இயங்கிக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக் கூடியவை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைமுகங்களான அம்பாந்தோட்டை, சிட்வே, சிட்டகொங், குவாடர் ஆகிய துறை முகங்கள் ஆழ்கடல் துறைமுகங்களாக இருக்கின்றன. சீனா தனது எதிர்கால கடற்படை வலுவில் நீர் மூழ்கிக் கப்பல்களிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என இது சுட்டி நிற்கின்றது. சீனா தனது நீர் மூழ்கிகளில் இருந்து வீசக் கூடிய ஏவுகணைகளில் வலுவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதன் மற்ற நொக்கம் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்பதாகும்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் வலுவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 35 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய P-8A Poseidon என்னும் ஏவுகணைகளை வேட்டையாடும் போர் விமானங்கள் பரீட்சித்துப் பார்த்த வேளையில் அவை வெற்றி அளிக்கவில்லை. இந்த P-8A Poseidon விமானங்கள் எட்டை இந்தியாவும் வாங்கியிருந்தது.

தாய்லாந்தின் கடற்படையினருக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பயிற்ச்சிகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் தாய்லாந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவிருக்கின்றது.  வியட்னாம் ஏற்கனவே இரசியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிவிட்டது. பிலிப்பைன்ஸ்சும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. மியன்மார் இந்தியாவிடமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களைக் கண்டறியும் உணரிகளை வாங்கியுள்ளது. ஜப்பான் தனது நாட்டில் உள்ள தளங்களில்  அமெரிக்க நீர்மூழ்கி வேட்டை விமானங்களை நிறுத்த அனுமதித்துள்ளது. சீனாவிற்கு கிழக்கேயும் தென் கிழக்கேயும் உள்ள இந்தச் சிறிய நாடுகளின் நிதிவளம் பெரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடமளிக்காத வேளையில் இவை தமது கடற்படைப் படகுகளின் திறனையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நீர்மூழ்கி போர் ஒத்திகையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் மேலும் பல படைத்துறைகளில் இணைந்து செயற்படலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாய்வான் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஒத்திகையைச் செய்துள்ளது. இதில் நீர்மூழ்கிகளை அழிக்கும் முறைமை பரீட்சிக்கப்பட்டது. மியன்மார் 2015-ம் ஆண்டில் இருந்து தனக்கு என ஒரு நீர்மூழ்கிப் படையை உருவாக்கவிருக்கின்றது. மலேசியாவிடமும் சிங்கப்பூரிடமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன அவை தமது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் வலுவையும் அதிகரிக்கவிருக்கின்றன. சீனாவிற்கு சவால் விடும் வகையில் ஜப்பானிடம் பெரிய நீர்மூழ்கிப்படை இருக்கின்றது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல்
2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் புதிப்பிக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானில் நிலை கொள்ளவிருக்கின்றது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலுக்குப் பதிலால ரொனால்ட் ரீகன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்ஷா திட்டம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனத்தில் இருந்து 200 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தில் உயர் தொழில் நுட்ப கடற்படைத் தளம் ஒன்று சீன அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத்தின் கீழ் வரும் இந்தத் தளத்தில் நிலத்துக் கடியில் இந்தியாவின் அணுக்குண்டுகள் தாங்கிய அரிகாந்த் நீர்மூழ்கிக் கப்பலை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இந்தியக் கடற்படையின் கிழக்குக்கட்டளையகத்தின் கீழ் அரிஹாந்த் நீர்மூழ்கிக்கப்பல், ஜலஷ்வா என்னும் ஈருடகக் கப்பல், சக்ரா என்னும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட ஐம்பது கடற்கலன்கள் இருக்கின்றன. இந்தத் துறைமுகத்தில் எதிரிப்படைகளின் தாக்குதல்களிலும் கண்காணிப்பிலும் இருந்து கடற்படைக்கலன்களை மறைத்து வைக்கக் கூடிய வசதிகள் உண்டு.

வலிமை மிக்க இந்தியக் கடற்படை
இந்தியா தனது கடற்படை வலுவை நிதானமாகவும் உறுதியாகவும் வளர்த்து வருகின்றது. மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிக நீண்டதும் எதிரிகளின் அச்சுறுத்தல் மிகுந்ததுமான கடற்பரப்பைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. பாக்கிஸ்த்தான், இலங்கை, மியன்மார், சீனா, பங்களாதேசம் ஆகிய நாடுகளுடன் கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு மிக வலிமையுள்ள கடற்படை அவசியம். இந்தியாவிடம் 160 கப்பல்கள் கொண்ட இரு கடற்படைப் பிரிவுகள் இருக்கின்றன. ஒரு விமானம் தாங்கிக் கப்பல், இருபது நாசகாரிக் கப்பல்கள், ஒரு அணுவலுவில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல், 14 மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் என ஒரு பெரும் கடற்படை இந்தியாவிடம் உண்டு. அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த அனுபவமும் பயிற்ச்சியும் இந்தியக் கடற்படைக்கு உண்டு. பாக்கிஸ்த்தானிடம் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் உண்டு. இவை இந்தியாவிற்கு எதிராக மட்டுமே செயற்படும் என எதிர்பார்க்கலாம். இவற்றைச் சமாளிக்க வேண்டிய நிலையும் இந்தியாவிற்கு உண்டு.

ஜப்பானைச் சுற்றியுள்ள நாடுகள் தமது படைத்துறை வலுவை சீனாவிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடனேயே வளர்த்து வருகின்றன. இந்த நாடுகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். ஆசிய ஆட்சியாளர்களுக்கு படைத்துறைப் போட்டி அவசியமாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்குத் தேவைப்படுவது அமைதியும் அபிவிருத்தியுமே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...