Thursday, 4 January 2018

ஈரானிய ஆர்ப்பாட்டம் உள்ளக எழுச்சியா வெளிநாட்டுச் சதியா?

ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து கிளர்ச்சியாக மாறுவதுண்டு. கிளர்ச்சி பின்னர் புரட்சியாக மாறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆட்சி மாற்றம் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவும் இருக்கலாம். தீய ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டும் வரலாம். 2017-12-28-ம் திகதி ஈரானில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் ஒரு வாரத்துக்குள் வேறு வேறு வடிவம் எடுத்தது. ஆரம்பத்தில் பொருளாதாரக் காரணங்களுக்காக அதிபர் ரௌஹானிக்கு எதிராக உருவான ஆர்ப்பாட்டம் பின்னர் சுதந்திரம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டமாக மாறியது. இப்போது உச்சத் தலைவர் கொமெய்னி ஒழிக என்றும் ஆட்சிமுறைமை மாற்றப்பட வேண்டும் என்றும் கூக்குரலிடும் ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது.

அரச ஆதரவு ஆர்ப்பாட்டம்
2018-01-03 புதன் கிழமை ஈரானிய அரசு அரச ஊழியர்களையும் மாணவர்களையும் அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் படி தூண்டியது.  முதலாம் திகதி திகட்கிழமை வரை 12 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் மூன்றாம் திகதி அது 21 ஆக உயர்ந்து விட்டது. ஈரானிய அரசு பொதுமக்கள் உடையில் தனது படையினரை ஏவு விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதாகவும் மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.


பச்சைப் புரட்சி
2009-ம் ஆண்டு பச்சைப் புரட்சி என்னும் பெயரில் நடந்த ஆர்ப்பாட்டம் அடக்கப்பட்டது. அதில் 2 முதல் 3 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். அது மத்திய தர வர்க்கத்து மக்கள் தேர்தலில் ஊழல் நடந்தது என்ற ஆத்திரத்தில் செய்த ஆர்ப்பாட்டம். இப்போதைய ஆர்ப்பாட்டம் ஈரானிய அடித்தட்டு மக்களால் செய்யப்ப்டுகின்றது. இது ஈரானிய வட கிழக்கு நகர் மஷ்சட்டில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் விலைவாசி எதிர்ப்புத்தான் ஆரம்ப நோக்கமாக இருந்தது. அதிலும் முக்கியமாக அரிசி விலைக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகத்தான் ஆரம்பித்தது.  முக்கிய பங்கு வகித்தது. இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் கொம் நகருக்குப் பரவியது. தொடர்ந்து ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்கும் விரிவடைந்தது. தற்போது பெரும்பாலான ஈரானிய நகர்களில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

மரியாதை இழந்த கொமெய்னி
இஸ்லாமியக் குடியரசு வேண்டாம். புரட்சிப்படை அழிக. சர்வாதிகாரி ஒழிக.  “death to Rouhani” “death to khamenei” என்பவை அவர்களின் கூக்குரலாக இருந்தது. கொம்ய்னி என்ற சொல் பாவிக்காமல் செய்யட் அலி என்ற அவரது முதற்பெயரைப் பாவித்தனர். காவற்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் கொழுத்தப்பட்டன. ஈரான் ஐந்து வல்லரசு நாடுகளுடனும் ஜேர்மனியுடனும் செய்த யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையின் படி நீக்கப்பட்ட பொருளாதரத் தடையால் வறிய மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஈரானில் வேலையற்றோர் 12%. இளையார் மத்தியில் 12%இலும் அதிக வேலையின்மை காணப்படுகின்றது. விலைவாசி அதிகரிப்பு பத்து விழுக்காட்டிலும் அதிகமாகும்.

பேசும் கைப்பேசிகள்
ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் கைப்பேசிகளினூடகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடந்தபோது ஒரு மில்லியன் கைப்பேசிகள் மட்டும் ஈரானில் பாவனையில் இருந்தன. இப்போது 48மில்லியன் கைப்பேசிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 40மில்லியன் மக்கள் பாவிக்கும் செயலி டெலிகிராஃப் மூலமாக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்துபவர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர் மொஹம்மட் ஜாம். ஆனால் ஆர்ப்பாட்டம் ஒரு தலைமை இன்றி நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. விகிதாசார அடிப்படையில் உலகில் அதிக அளவு இறப்புத் தண்டனை ஈரானில் வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஈரானிய ஆர்ப்பாட்டங்களுக்கு வேறு வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டன:

1. ஈரானில் கடுமையான மதவாதிகள், மிதமான மதவாதிகள் என இரு பிரிவினர் ஆளும் தரப்பினரிடையே உள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில் மிதவாதிகளே வெற்றி பெற்றனர். மிதவாத அதிபருக்கு இடைஞ்சல் கொடுக்க கடும்போக்காளர்கள் கிளப்பிய ஆர்ப்பாட்டமாக இருக்கலாம். 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஹசன் ரௌஹானி.
2. இயல்பான மக்கள் எழுச்சியால் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
3. வெளியார் சதியால் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. இதில் சவுதி அரேபியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை இணைந்து அல்லது தனியாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூபம் போட்டிருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன் ஈரானிய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கவனமாகக் கையாள்வதன் மூலம் ஆர்ப்பாட்டம் பெருகாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

ஈரானிய மக்கள் உணவிற்காகவும் சுதந்திரத்துக்கும் அழுகின்றார்கள் என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானிய மக்கள் தமது அரசை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்றார் டிரம்ப்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் Gholamali Khoshroo அமெரிக்கா ஈரானிய விவகாரங்களில் தலையிடுவதாக தனது கடிதம் மூலம் குற்றம் சுமத்தினார். அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தை மீறியுள்ளதுடன் பன்னாட்டுச் சட்டங்களையும் மீறியுள்ளது என்றார் அவர். இதற்காக அமெரிக்கா மீது மற்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.  அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் தத்தமது டுவிட்டர்களில் அபத்தமான கருத்துக்களை வெளியிட்டு ஈரானிய மக்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என்ற குற்றச் சாட்டையும் அவர் முன் வைத்தார்.


ஜோர்ஜ் டபிளியூ புஷ் காலத்தில் துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எலியட் ஏப்ராம்ஸ் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார். ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்க ஆதரவை ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் சதிதான் இந்த ஆர்ப்பாட்டம் என்ற சாயத்தைப் பூச வழிவகுக்கும் எனச் சொல்லும் சிலர் அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஈரானிய ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதன் மூலம் அதற்கு ஈரானிலும் உலகிலும் பிரபல்யப்படுத்த முடியும் எனச் சிலர் நம்புகின்றனர்.

பெண்டகனில் பணிபுரிந்தவரும் தற்போது American Enterprise Instituteஇல் ஒரு கல்வியாளராகப் பணிபுரிவருமான மைக்கேல் ரொபின் வார்த்தைகள் மூலமான ஆதரவை மட்டும் அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் அதைத் தாண்டி இப்போது செல்லக் கூடாது என்கின்றார். ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூதாவை உறுப்பினர் ரொம் கொட்டன் இது அமெரிக்காவின் பிரச்சனை அல்ல ஈரானிய மக்களின் பிரச்சனையாகும் என்றார். அமெரிக்கா அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் தாராண்மைவாதிகள் பலரின் கருத்தாக இருக்கின்றது.

2009-ம் ஆண்டு ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போதிய ஆதரவை வழங்காமல் இருந்தது தவறு என எல்லாம் முடிந்த பின்னர் அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாய் இருந்த ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார். ஈரானின் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை கொடுக்க 2009இல் கிடைத்த சந்தர்ப்பத்தை பராக் ஒபாமா கை நழுவ விட்டார் என்ற குற்றச் சாட்டும் அப்போது முன் வைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு எதிரான ஈரானிய அரசின் அடக்கு முறைகளைச் சாக்காக வைத்து ஈரானுக்கு எதிராக மேலதிகப் பொருளாதாரத் தடைகளை மனித உரிமைகளைக் காரணம் காட்டி கொண்டு வருவதற்கு டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் காத்திருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி அமெரிக்காவின் சதிதான் ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என ஈரானிய உச்சத் தலைவர் தெரிவித்த கருத்து அபத்தமானது எனச் சொல்லி நிராகரித்தார். மேலும் அவர் ஈரானிய மக்கள் சுதந்திரம் வேண்டி இயல்பாகக் கிளர்ந்து எழுந்துள்ளார்கள்; 2009-ம் ஆண்டு உலகம் விட்ட தவறை இம்முறையும் விடக்கூடாது என்றார். ஈரானியக் குடிமக்கள் அடிப்படை உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் வெள்ளை மாளிகைப் பேச்சாளர்.

அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மனித உரிமைப் பிரச்சனையாக எழுப்ப வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. நிக்கி ஹேலி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் என்றார்

அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தமது நோக்கமல்ல ஆனால் நடக்கும் ஆர்ப்பாடத்தால் ஈரானிய அரசு தனது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்றனர். உண்மையில் 2018 ஜனவரி 4-ம் திகதியில் உள்ள நிலைமையின் படி ஈரானில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமளவிற்கு ஆர்ப்பாட்டம் தீவிரமடையவில்லை. வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கருத்தும் டிரம்பின் டுவிட்டர்களும் நிக்கி ஹேலியின் உரைகளும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டதாகவே இருக்கின்றன.

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஈரானிய ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்கும் மக்கள் ஈரானிய அரசைத் தூக்கி எறிவார்கள் என்கின்றார். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாட்டு வெளியுறவுத் துறையினர் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமது கருத்துக்களை கவனமாக வெளியிடுகின்றனர். ஈரானிய மக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றார் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரி. அவரது கருத்து ஈரானிய அதிபரின் கருத்தை ஒட்டியதாக இருக்கின்றது.

ஈரானுக்கு மூன்று மோசமான எதிரிகள் இருக்கின்றனர்.

முதலாவது இஸ்ரேல். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலகில் இருக்கக் கூடாது என்பது ஈரானிய ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு ஈரான் பலவகைகளில் உதவி செய்கின்றது. ஈரானியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கின்றது. ஈரானியப் படைகள் அடுத்து லெபனானிலும் பெருமளவு நிலைகொள்ளலாம் என இஸ்ரேல் கருதுகின்றது. ஈரானியப் படைகள் லெபனான் கோலான் குன்றுகள் பக்கம் போனால் நிச்சயம் அங்கு போர் வெடிக்கும்.

ஈரானின் இரண்டாவது எதிரி அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு அழிவு வரட்டும் என்பது ஈரானிய ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் பதமாகும். ஈரான் அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படும்பயங்கரவாதிகளுக்குஈரான் ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இப்போதும் பின் லாடனின் குடும்பத்தினர் ஈரானில் வசிக்கின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் நடந்து கொள்கின்ற விதமும் யேமனில் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈரான் உதவி செய்தவும் அமெரிக்காவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மூன்றாவது எதிரி சவுதி அரேபியா. இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள பகைமை சியா பிரிவிற்கும் சுனி பிரிவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் உருவானது என்பதிலும் பார்க்க ஈரானில் மதப் புரட்சி நடந்து மதவாத ஆட்சி ஏற்பட்டமையே பகமைக்கு முக்கிய காரணம். ஈரானிய மதவாதிகள் அதே போன்ற ஆட்சி முறைமையை சவுதி உட்பட மற்ற அரபு நாடுகளிலும் உருவாக்க முனைகின்றார்கள் என்ற அச்சம் சவுதி ஆட்சியாளர்களை ஈரானிய ஆட்சியாளர்களைக் கடுமையாக வெறுக்க வைக்கின்றது.

ஊடகங்களின் பூடகங்கள்
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் பிரபலமான ஊடகமான அல் மொனிட்டர் ஈரானிய ஆர்ப்பாட்டம் இஸ்ரேலை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது என்கின்றது. ஆர்ப்பாட்டம் தீவிரமடையும் விதம் அமெரிக்காவை ஆச்சரியப்பட வைக்கின்றது என்றது அமெரிக்காவின் பிரபல ஊடகமான வேல் ஸ்றீட் ஜேர்ணல். ஈரான் தனது வெளியுறவுத் துறையின் செயற்பாட்டிற்காக அதிலும் முக்கியமாக யேமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் செலவு செய்யும் பல பில்லியன் டொலர்களை நிறுத்தி அதை உள் நாட்டு அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்கின்றது வேல் ஸ்றீட் ஜேர்ணல். அரப் நியூஸ் என்ற சவுதி அரேபிய ஊடகத்தின் ஆசிரியத் தலையங்கத்தில் ஈரான் அயல் நாடுகளைக் குழப்புவதை விடுத்து தன் நாட்டில் நல்லபடியாக ஆள முயல வேண்டும் என்கின்றது.  அல் ஜசீரா ஈரானில் கடுமையான பதவிப் போட்டி இருப்பதன் விளைவே ஆர்ப்பாட்டம் என்கின்றது.

ஈரானில் ஓர் உள்ளக கிளர்ச்சி இயல்பாகவே தோன்றுவதற்கான காரணிகள் பல உண்டு. ஈரானில் 2017 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான சலுகைகள் பல நிறுத்தப்பட்டு எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டது. ஈரானிய அதிபர் ரௌஹானிக்கும் அவருடன் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற Mohammad Baqer Qalibafஇற்கும் இடையில் இன்னும் பகைமை நிலவுகின்றது. ரௌஹானியின் இன்னொரு போட்டியாளர் இப்ராஹிம் ரைசி. அவரது தலைமையில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கூட்டு செயற்படும் நகரமான மஷ்சட்டில்தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. அந்த நகரின் பள்ளிவாசலில் அவரது மாமனர் மதகுருவாக உள்ளார்அடுத்த உச்சத் தலைவர் யார் என்ற போட்டியும் கடுமையாக உள்ளது. 

அட்ர் பிரான்ஸ் அதிபர் போட்ட குண்டு
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து தமது பொது எதிரியான ஈரானுக்கு எதிராக ஒரு போரை ஆரம்பிக்க உலகை இட்டுச் செல்கின்றன என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன் குற்றம் சாட்டினார்.

ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் உள்ளே உருவாக்கப் பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதை ஈரானின் மூன்று எதிரிகளும் ஈரானின் ஆட்சியாளர்களுக்கு எதிராக அதைத் திருப்ப தம்மால் முயன்ற எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் ஈரானில் உச்சத்தலைவர், பாராளமன்றம், அதிபர், படைத்துறை ஆகிய நான்கு முக்கிய அதிகார மையங்கள் உள்ளது. படைத்துறையும் உச்சத் தலைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன. அந்த ஒற்றுமை இருக்கும் வரை ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது கடினம். படைத்துறைக்குள் வெளி சக்திகள் ஊடுருவுவது மிகவும் கடினம் என்பதை சிஐஏ ஈரானியப் படைத்தளபதிக்கு ஒரு இடை ஆள் மூலம் ஈராக் மற்றும் சிரியா தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அவர் வாசிக்கவே மறுத்து விட்டார். அந்த அளவிற்கு ஈரானியப் படையினர் மத்தியில் அமெரிக்க வெறுப்பு உள்ளது

Wednesday, 3 January 2018

2018இல் உலகம் எப்படி இருக்கும்?

எரிந்து முடிந்து கொண்டிருக்கும் சிரியா, துள்ளும் வட கொரியா, பரிதவிக்கும் யேமன், 2008இல் தொடங்கி இன்னும் முடியாத உலகப் பொருளாதாரப் பிரச்சனை, திக்கற்று நிற்கும் குர்திஷ் மக்கள், பிராந்திய ஆதிக்கத்திற்கும் போட்டியிடும் ஈரானு, சவுதி அரேபியாவும், தொடர்ந்து வஞ்சிக்கப்படும் பலஸ்த்தீனியர்கள், அசைக்க முடியாத நிலையை உறுதி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல், தென் சீனக் கடலை மெதுவாகவும் உறுதியாகவும் ஆக்கிரமிக்கும் சீனா, சுயநலனை முன்வைப்பதை அதிகரித்த ஐக்கிய அமெரிக்கா, சமூக பொருளாதாரச் சிக்கல் மிகுந்த தென் அமெரிக்கா போன்றவற்றை உலகம் தலையில் சுமந்த படி 2018இல் காலடி எடுத்து வைக்கின்றது.

Cyber Pearl Harbour and Cyber NATO
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பைக் கொடுத்த Pearl Harbour தாக்குதல் போல அமெரிக்காமீது ஒரு இணையவெளித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் அமெரிக்கப் பாதுகப்புத் துறையினரை கடந்த சில ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துள்ளது. அது போன்ற நாடுகள் கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீதும் செய்யப்படலாம் என்ற அச்சமும் பரவலாக உண்டு அதைத் தடுக்க ஒரு Cyber NATO உருவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நாடுகள் இணையவெளிப் போர் புரியும் ஆற்றலுக்கும் இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் ஆற்றலுக்கும் அதிகம் செலவு செய்யும். எல்லா மேற்கு நாடுகளும் இணைந்து இணையவெளித் தாக்குதலுக்கு எதிராக NATO போன்ற ஒரு கூட்டமைப்பை உருவாகும்.

ஆசியா
ஜப்பான, சீனா என எழுச்சியுறும் வல்லாதிக்க நாடுகளான ஜப்பானிலும் சீனாவிலும் உறுதியான தலைவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். ஜி ஜின்பிங் தனக்குத்தானே சர்வாதிகாரியாக முடிசூடிக் கொண்டுள்ளார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதன் உள்நாட்டுப் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபாட்டு இருப்பதும் அங்கு மக்கள் ஒரு பிராந்தியத்தில் இருந்து இன்னொரு பிராந்தியத்திற்கு குடி பெயர்வதற்கு அரச அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனை இருப்பதும் 2018இல் சீன அரசுக்கு தலையிடி கொடுக்கக் கூடிய மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கலாம்.  அதிக வயோதிபர்களைக் கொண்ட மக்கள் தொகை, பாதுகாப்புக்கு அமெரிக்காவில் தங்கியிருப்பு, சீன அச்சுறுத்தல்.
நீண்ட கால மந்த நிலையில் பொருளாதாரம். தென் கொரியாவின் மிரட்டல் ஆகிய பிரச்சனைகள் ஜப்பானை 2018இல் ஆட்டிப் படைக்கப் போகின்றது. இந்த நிலையில் ஜப்பான் தனது அரசுறவியல் கொள்கையை மாற்றி யோசிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் ஒரு பட்டி ஒரு தெரு என்னும் புதியபட்டுப்பாதை திட்டத்தில் ஜப்பான் தானும் இணைவதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. உலக நாடுகள் எங்கும் உட்கட்டுமானங்கள் தொடர்பான ஏற்றுமதி செய்தல் மற்றும் ஈடுபடுதல் போன்றவற்றில் சீனாவிடம் தனது வருமானத்தை ஜப்பான் இழந்து கொண்டிருக்கின்றது. அதை மீளக் கட்டி எழுப்புவதில் சீனாவின் போட்டியாளராக இருப்பதிலும் பார்க்க பங்காளியாக இருப்பதால் ஜப்பான் அதிக நன்மை பெற முடியும் என ஜப்பானியர்கள் கருதுகின்றார்கள். இதில் இணக்கம் கண்டால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான முரண்பாட்டில் விட்டுக் கொடுப்புகள் அல்லது சமரசங்கள் ஏற்பட்டால் சீன விரிவாக்கத்தை தடுக்கும் அமெரிக்க, ஜப்பானிய, இந்தியக் கூட்டணி வலுவிழக்கலாம். ஆனால் ஜப்பான் தனது படைவலிமையை அதிகரிப்பதை நிறுத்தப் போவதில்லை. 2018-ம் ஆண்டில் ஜப்பான் தன்னுடைய உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை அமெரிக்காவின் அதிநவீனமான F-35-B விமானங்கள் தாங்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கவிருக்கின்றது. சீன ஆட்சியாளர்கள் மக்கள் மீதான தமது பிடியை மேலும் இறுக்கவிருக்கின்றார்கள். சீனாவின் காவற்துறை 2018இல் படைத்துறையின் கீழ் கொண்டு வரப்படவிருக்கின்றது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் பெப்ரவரி 9-ம் திகதி முதல் 25-ம் திகதிவரை நடை பெறவிருக்கின்றது. அங்கு வட கொரியாவின் பரப்பரப்புக்கள் பல நடைபெறலாம்.

இந்தியா 2018இல் பாக்கிஸ்த்தானுடனும் பங்களாதேசத்துடனுமான தனது எல்லைகளை அடைத்துக் கொள்ளவிருக்கின்றது. எல்லை தாண்டிய தீவிரவாதம் சட்ட விரோதக் குடிவரவு போன்றவற்றைத் தடுப்பதற்காக இந்தியா இதை முன்னெடுக்கவிருக்கின்றது. 2017-ம் ஆண்டின் இறுதி வாரத்தில் கூட இந்தியாவின் மூன்று படைவீரர்களை பாக்கிஸ்த்தானியப் ப9-டைகள் கொலை செய்தன. அதற்குப் பதிலடியாக இந்தியப் படையினர் எல்லை தாண்டிச் சென்று பாக்கிஸ்த்தானியப் படை நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பினர். அமெரிக்கா இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை வளர்ப்பதும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் பாக்கிஸ்தானுடன் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதும், இந்தியா பாக்கிஸ்த்தானுடனான படை வலிமை இடைவெளியை தனக்கு சாதகமாக அதிகரிப்பதும் பாக்கிஸ்த்தானை சீனா பக்கம் அதிகம் சாய வைக்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதை பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீருடாகச் செல்வது இந்தியாவை கடும் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியா தைவானுடன் படைத்துறைத் தொடர்புகளை ஏற்படுத்துவது சீனாவை ஆத்திரப்படுத்துகின்றது. இவற்றால் இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் 2018இல் கடுமையாக முரண்பட வேண்டியிருக்கும்.

ஈரான்
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகியவை தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானுக்கு பல தொல்லைகளைக் கொடுக்கலாம். எரிபொருள் விலையும் ஈரானுக்கு சாதகமாக இருக்காது. உள்நாட்டில் இயல்பாகவும் வெளிநாடுகளின் தலையீட்டுடனும் பல குழப்பங்கள் உருவாகலாம். 2018இல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளை ஈரான் எதிர் கொள்ளவேண்டியிருக்கும். லெபனான் வரை தனது ஆதிக்கத்தை நீட்டும் ஈரானின் திட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும். ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிடமிருந்து பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

கிழக்கு ஐரோப்பியா
உக்ரேனில் பிரச்சனை உக்கிரமடையும். ஏற்கனவே உக்ரேனுக்கு ஜவலின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்யும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. உக்ரேனுக்கு தாக்கும் திறன் கொண்ட படைக்கலன்களை வழங்குவதில்லை என்ற கொள்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக 2017இன் இறுதியில் முடிவு செய்தது. இது இரசியாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலகின் தரம் மிக்க தாங்கிகளை உற்பத்தி செய்யும் இரசியாவின் தாங்கிகளை எதிர்க்கக் கூடிய வகையில் அமெரிக்கா உருவாக்கிய ஜவலின் ஏவுகணைகளை உக்ரேனில் பரீட்சித்துப் பார்க்க அமெரிக்கா முயல்வதாகத் தெரிகின்றது. அமெரிக்காவின் FGM-148 Javelin ஏவுகணைகள் தனி ஒருவரால் தூக்கிச் செல்லக் கூடியது. அதனால் மறைந்திருந்து தாக்குவதற்கு இலகுவானதாகும். இவை அமெரிக்காவின் இரு பெரும் படைக்கல உற்பத்தி நிறுவனங்களான Raytheon, Lockheed Martin ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டவை. பெலரஸ் 2018இல் இரசியாவிடமிருந்து மின்சாரம் வாங்கப் போவதில்லை என 2017இன் இறுதியில் பெலரஸ் அறிவித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரசியாவுடன் படைத்துறை ரீதியில் அதிக ஒத்துழைப்புச் செய்யும் நாடு பெலரஸ் ஆகும். பெலரஸை ஒரு சர்வாதிகாரி போல் ஆண்டு கொண்டிருக்கின்றார் அலெக்சாண்டர் லுக்காஷெங்கோ. அவரது ஆட்சி முறைமை ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ இணைவதற்கு ஏற்புடையதல்ல. ஆனால் இரசியாவிற்கான பெலரஸின் கேந்திர முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து அவர் இரசியாவுடன் பொருளாதார ரீதியில் பேரம் பேச முயல்வது எப்படி வெற்றியளிக்கும் என்பதை 2018 எமக்குச் சொல்லும். ஆனால் பெலரஸை தமது நாட்டின் ஒர் பகுதியாகப் பார்க்கும் விளடிமீர் புட்டீனின் கொள்கையை பெலரஸியர்கள் விரும்பவில்லை. தமது அயல் நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமான லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைந்திருப்பதை. பெலரஸியர்கள் அக்கறையுடன் அவதானிக்கின்றார்கள். அந்த மூன்று போல்ரிக் நாடுகளின் அபிவிருத்தி பெலரஸை இரசியாவிடமிருந்து விலகத் தூண்டும் என்பதை புட்டீன் அறிவார். அதனால் அந்த போல்ரிக் நாடுகளுக்கு பிரச்சனை கொடுத்து பெலரஸை அடக்கும் முயற்ச்சியில் 2018இல் புட்டீன் ஈடுபடலாம்.

மேற்கு ஐரோப்பா
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, ஜேர்மனியில் உறுதியற்ற ஆட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களை மீறும் போலாந்து, அதை வழிமொழியும் ஹங்கேரி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல தலையிடிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுக்க விருக்கின்றது.

தேர்தல்கள் நிறைந்த அமெரிக்கா
2018-ம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. மூதவையில் 33 தொகுதிகளுக்கான தேர்தலும் அத்துடன் நடக்கும். பிரேசிலிலும் மெக்சிக்கோவிலும் அதிபர் தேர்தல் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. மெக்சிக்கோ அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும். அமெரிக்காவின் 482,000 வேலைவாய்ப்புக்கள் மெக்சிக்கோவுடனான வர்த்தகத்தில் தங்கியிருக்கின்றது. கியூபாவின் தற்போதைய அதிபர் ராவுல் காஸ்ரோ 2018இல் ஓய்வு பெற உப அதிபர் Miguel Díaz-Canel அவரது இடத்திற்கு வரவிருக்கின்றார். பெருவில் நடைபெறவிருக்கும் தென் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டிலும் ஆர்ஜெண்டீனாவில் நடை பெறவிருக்கும் G-20 நாடுகளின் மாநாட்டிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்கின்றது டிரம்பின் வித்தியாசமான நிலைப்பாடு மற்ற நாட்டுத் தலைவர்கள் பலரை அவர் நேரில் சந்திப்பதில் அவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும். ஹ்யூமோ சாவோஸ் 1999-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட உள் நாட்டுக் குழப்பம் அங்கிருந்து இரண்டு மில்லியன் மக்களை வெளியேற்றியுள்ளது. 2018-ம் ஆண்டிலும் பெருமளவு மக்கள் வெளியேறலாம். அது பிராந்திய அமைதிக்குப் பாதகமாக அமையலாம். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளிடையேயான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். 2018-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கைக்களுக்கு குறைவிருக்காது.

பங்குச் சந்தை
உலகப் பங்குச் சந்தை 2017இல் சாதனை மிகு வளர்ச்சியைக் கண்டபடியால் சில அதிக விலைகளைச் சரி செய்யும் வகையில் 2018இல் பங்குச் சந்தை வளவர்ச்சி மிதமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. உலகப் பொருளாதார வளர்ச்சி வளர்முக நாடுகளின் அதிலும் முக்கியமாக இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் தங்கியுள்ளது. 2018இல் 10முதல் 15 விழுக்காடு வளர்ச்சியை உலகப் பங்குச் சந்தை பெறலாம்.

தொழில்நுட்பமும் எரிபொருளும்
பட்டரி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து பட்டரியில் இயங்கும் வாகனங்களின் பாவனை அதிகரிக்கும். அது எரிபொருள் விலைகளுக்கு சவாலாக அமைவதல் எரிபொருள் விலை 2018இலும் மந்தமாகவே இருக்கும். எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் தலைமையை சவுதி அரேபியா இழக்கும் வாய்ப்பு உள்ளது. இரசியா தலைமை தாங்கலாம், ஒபெக் என்ற அமைப்பே செயலிழக்கலாம் அல்லது கலைக்கப்பட்டு புதிய அமைப்பு இரசியா தலைமையில் உருவாகலாம். 3D அச்சு, செயற்கை விவேகம் போன்ற தொழில் நுட்பங்களும் ஆளில்லா விமானங்கள் மூலமான விநியோகங்களும் 2018இல் மேன்மையடையும். மைக்குறோசொப்ட் இன் அதிபர் பில் கேட்ஸ்ஸின் கருத்துப்படி இனி வரும் காலங்களில் விஞ்ஞானம், இயந்திரவிய, பொருளாதாரம் ஆகியவற்றில் திறன் மிக்கவர்களுக்கே வேலை வாய்ப்புக்களின் முதலிடம் கிடைக்கும்.
 

ஊடகங்கள் – சமூகவலைத்தளங்கள்

பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படும் அவற்றிற்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பெரும் செல்வந்தர்கள் கைகளில் பல ஊடகங்கள் இருப்பதால் சமூகவலைத்தளங்களின் பாவனை 2018இல் அதிகரித்துக் கொண்டே போகும்.

மேற்காசியா
சவுதி அரேபியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் என்பது மட்டுமல்ல பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும். பல அபிவிருத்தித் திட்டங்களைக் கைவிட வேண்டி வரும். சவுதி அரேபியாவின் இஸ்ரேலை எதிர்க்காத நிலைமை வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பைப் பாதித்து மேற்காசிய கேந்திரோபாய சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பலஸ்தீனியர்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும். 2018இல் புதிய அணுகு முறைகளை பலஸ்த்தீனியர்கள் மேற்கொள்ளுவார்கள்.

Fintech என்னும் நிதித் தொழில்நுட்பம்
நிதித்தொழில்நுட்பம் என்பது நிதிச் சந்தை, பங்குச் சந்தை, வங்கித் துறை, மறைந்தநாணயங்கள் (crypto-currencies) ஆகியவற்றில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தை இணைத்து அதன் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை இலகு படுத்துவதும் துரிதப்படுத்துவதுமாகும். Fintech நிதித் தொழில்நுட்பத்தில் இலண்டன் தனது மேலாண்மையை உறுதி செய்யும் வகையில் 2017-ம் ஆண்டு பல முதலீடுகளைச் செய்துள்ளதுசன்பிரான்ஸிஸ்கோ, பீஜிங், நியூயோர்க் ஆகிய நகரங்கள் நிதித்தொழில்நுட்பத்தில் ஏற்கனவே முன்னணி நிலையில் உள்ளன. நிதித்தொழில்நுட்பத்தின் மூலம் இலண்டனில் 2.4பில்லியன் முதலீடுகள் நிதிச் சந்தையில் பெறப்பட்டுள்ளன. இது மற்ற ஐரோப்பிய நகரங்களான ஸ்ரொக்ஹொம், பரிஸ், அம்ஸ்ரடம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். 2017-ம் ஆண்டு இந்தத் துறையில் பிரித்தானியா 825மில்லியன் பவுண் முதலீடு செய்துள்ளது.


இணையவெளிப் போர் முறைமை
2018இல் அதிகம் செய்திகளில் அடிபடவிருப்பது இணையவெளிப் போர் முறைமை, இணைய வெளித் திருட்டு மற்றும் ஊடுருவல்களே. இவற்றிற்கு எதிரான பாதுகாப்புக்களில் எல்லா நாடுகளும் அக்கறை செலுத்தும். இணையப் பாவனை தொடர்பான் நம்பிக்கையீனம் 2018இல் அதிகரிக்கும். நாடுகள் தமது தேர்தல்களை இணையவெளியூடான பாதிப்பில் இருந்து பாதுகாப்பதில் அதிக அக்கறைக் காட்டும். போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் போன்றவற்றில் இணையவெளித் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கான தொழில்நுட்பத்தை உள்ளடக்குதல் 2018இல் அதிகரிக்கும். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் இரசியா இணையவெளி மூலம் பரப்புரைகளைச் செய்தும் இணையவெளி ஊடுருவல் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்தும் தனக்கு சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தும் முயற்ச்சியில் ஈடுபடலாம் என இரு அமைப்புக்களும் கரிசனை கொண்டுள்ளன. இதற்காக அந்த நாடுகளுடன் பாதுகாப்புத் துறையிலும் இணையவெளியிலும் பல ஒத்துழைப்புக்களை மேற்கொள்ளவிருக்கின்றன. அதில் முதற்படியாக 2018-ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும் போலாந்தும் பல ஒத்துழைப்புக்களைச் செய்யவதற்காக தலைமை அமைச்சர் தெரெசா மே 2018இன் முற்பகுதியில் போலாந்து செல்லவிருக்கின்றார்.


தேசியவாதங்களும் பிரபலவாதங்களும் அதிகரிக்கவிருக்கும் 2018இல் உலக வருமான சமமின்மை, போர்கள், போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்வுகாண முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத்தனம் 2018இல் மேலும் அம்பலமாகும். 

Sunday, 31 December 2017

2017 ஒரு மீள் பார்வை

துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லின் இரவு விடுதியில் உஸ்பெக்கிஸ்த்தானிய இளைஞர் துப்பாக்கியால் சுட்டு 39 பேரைக் கொலை செய்ததுடன் 2017-ம் ஆண்டு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்று சாட், லிபியா, ஈரான், யேமன், சிரியா, சோமாலியா ஆறு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதை தடை விதிப்பது என்ற குண்டை வெடிக்க வைத்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு மட்டும்தான். உலகத்திலேயே சாதியை ஏற்றுக் கொண்ட ஒரே அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பு.

அசிங்கப்பட்டாண்டா அமெரிக்காக்காரன்
தனக்குச் சாதகமாக இல்லாதவை எல்லாம் போலிச் செய்திகள் என ஒரு புறம் டொனால்ட் டிரம்ப் அதிர்ந்து கொண்டிருக்க அவர் பதவி ஏற்ற முன்னரே அவரது தேர்தல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பித்துவிட்டன. உலகெங்கும் தேர்தல்கள் பலவற்றில் தலையிட்டு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தேர்தலில் இரசியா தலையிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது தொடர்பான விசாரணையும் பல குற்றப் பத்திரிகைகளும் 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. வெள்ளை மாளிகையில் ஒன்றுமாக டுவிட்டரில் ஒன்றுமாக டிரம்ப் இரண்டு ஆட்சிகள் செய்து கொண்டிருக்கின்றார். பாக்கிஸ்த்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

கலங்கடித்தார் கிம் ஜொங் உன்
2017இல் உலகைக் கலங்கடித்து அமெரிக்காவைத் திணறடித்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆவார். சீனா அவருக்கு எதிராக உருவாக்கலாம் எனக் கருதப் பட்ட அவரது மாற்றன் தாய் மகன் மலேசிய விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது தொடர்ச்சியான அணுக்குண்டுப் பரிசோதனைகளையும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா தடுமாறுகின்றது. டிரம்ப் வட கொரியாவை முழுமையாக அழிக்கப்படும் என்ற மிரட்டல் கூட எடுபடவில்லை.

சரிந்த இஸ்லாமிய அரசு
2017இல் ரக்கா, ரமாடியா, மொசுல் எனப் பல நகரங்களை ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் இழந்தது. அவர்களின் இஸ்லாமிய அரசு ஆட்டம் காண்கின்றது. அவர்களுக்கு எதிரான போரில் பாவிக்கப் பட்ட குர்திஷ் மக்கள் மீண்டும் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களது தனிநாடு கோரும் கருத்துக் கணிப்புக்கு வலிமையான மக்கள் ஆதரவு இருந்த போதும் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் எதிர்ப்பை மட்டும் பெற்றது. ஸ்பெயினில் இருந்து கடலோனியர்கள் பிரிந்து செல்வதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கு எதிராக ஸ்பானிய அரசு கடுமையாக நடந்து கொண்டது. 

சறுக்கிய சவுதி
 2017இல் உலகத்தை அதிர வைத்தது சவுதி அரேபியா. யேமனில் இறப்பு வீடுகள், மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புக்கள் என கண்டபடி குண்டுகளை வீசி அப்பாவிகளைக் கொலை செய்து கொண்டிருக்கும் சவுதி அரேபியாவில் வழமைக்கும் மரபிற்கும் மாறாக மன்னர் தனது மகன் MBS என மேற்கு நாட்டு ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் மொஹமது பின் சல்மனை முடிக்குரிய இளவரசர் ஆக்கினார். அவர் தனது மேற்கு நாட்டு இரசிகர்களைத் திருப்திப் படுத்த பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையைத் தளர்த்தினார். சவுதிக்குப் போட்டியாக ஈரானும் பெண்களுக்கு சாதகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஈரானுக்கும் சவுதிக்கும் இடையிலான பிராந்திய ஆதிக்கப் போட்டி சிரியாவில் இரத்தக் களரியை ஏற்படுத்தி அந்த நாட்டை சின்னா பின்னப் படுத்தியது. சவுதி விரும்பியது போல் சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை உருவாக்க முடியாமல் போனது அதற்கு பெரும் தோல்வியே. அடுத்து லெபனான் தலைமை அமைச்சரைப் பதவி விலக்க சவுதி எடுத்த முயற்ச்சியும் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து எரிபொருள் விலை மந்தமாக இருப்பது சவுதிக்கு அடுத்த பேரிடியாக 2017இல் அமைந்தது.

ஆக்கிரமிப்பைத் தொடரும் இஸ்ரேல்
 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரின் ஐம்பதாண்டு நிறைவு 2017இல் வந்தது. அப்போது இஸ்ரேல் ஜோர்தானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசலேமையும் தன்னிடம் ஏற்கனவே இருந்த மேற்கு ஜெருசலேமையும் இணைத்த நகரில் தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை அமைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதற்கு எதிராக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்படப் பல நாடுகள் குரல் கொடுத்தன.

திசை மாறிய ஊடகத்துறை 
சமூகவலைத்தளங்களின் ஆதிக்கம் உலகத் தொடர்பாடலில் 2017இலும் இருந்தது. அதற்கு எதிரான சதிகள் பல 2017இல் மேற்கொள்ளப்பட்டன. இரசியா அமெரிக்கத் தேர்தலில் தலையிட முகநூலைப் பாவித்தது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. 2017 பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை அம்பலப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் அம்பலப் படுத்தின. மியன்மாரில் நடந்த பல படுகொலைகளும் சமூகவலைத்தளங்களினால் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத சிம்பாப்பே
சிம்பாப்பேயில் தன் மனைவியை தனக்குப் பின்னர் ஆட்சியில் அமர்த்த முயன்ற முகாபேயை அவரது கட்சியினர் ஆட்சியில் இருந்து அகற்றினர்.
இந்தியப் படைகளும் சீனப் படைகளும் ஒன்றிற்கு ஒன்று அண்மையாக பூட்டான் எல்லையில் முறுகல் நிலையில் இருந்து பின்னர் போர் ஆபத்து தணிந்தது. நேப்பாளத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறையும் உளவுத் துறையும் செய்த தவறுகள் அங்கு இந்தியாவிற்குப் பாதகமான அரசை ஆட்சிக்கு கொண்டு வந்தது.

உக்கிரம் தணியாத உக்ரேன் 
2017-ம் ஆண்டு முழுவதும் உலகில் கொதிநிலையில் உக்ரேன் இருந்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தின. சாதகமான முடிவு எட்டப்படவில்லை. ஔமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் செய்யக் கூடிய படைக்கலன்களை விநியோகிக்க முடிவு செய்தது.

பரிதாபத்துக்குரிய பிரித்தானியா
2017இல் உலகின் முன்னணி நாடுகளில் பரிதாபத்திற்கு உரிய நிலையில் பிரித்தானியா இருந்தது. சிறப்பாகச் செயற்பட முடியாத தலைமை அமைச்சர். அவரை மாற்றினால் கட்சிக்குள் மோதல் தீவிரமடையும் என்பதால் அவரை மாற்ற முடியாமல் ஆளும் கட்சி தவிக்கின்றது. வீராப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்த பிரித்தானியா எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றது. அதே வேளை பிரான்ஸ் சிறாப்பாக ஒரு புதிய அதிபரைத் தேர்ந்தெடுத்தது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நனமை எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்க மூன்றாவது முறையாகவும் ஜேர்மனியில் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்செலா மேர்கெல் உறுதியான ஆட்சியை அமைக்க முடியாமல் தவிக்கின்றார். போலாந்திலும் ஒஸ்ரியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாதகமான ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த போது பிரித்தானிய ஊடகங்கள் அவற்றின் உளவுத்துறைகள் மீது குற்றம் சாட்டின. ஆனால் இலண்டனிலும் மன்செஸ்டரிலும் மோசமான தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன.

அவலப் பட்ட ரொஹிங்கியர்கள்
2017-ம் ஆண்டின் மிகப் பெரும் பேரவலத்தை மியன்மாரில் வாழும் இஸ்லாமியர்களான ரொஹிங்கியர்கள் சந்தித்தனர். மேற்கு நாடுகளின் ஊடகங்களால் சமாதான தேவதையாக விமர்சிக்கப்பட்ட ஆங் சூ கீ அதைக் கண்டிக்காமல் நியாயப் படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார். மியன்மாரில் நடப்பதை இனச்சுத்தீகரிப்ப் என விபரித்தார் ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன். ஆனால் அவரது சுதந்திரமான செயற்பாட்டுக்கு பல இன்னல்கள் வருவதாக அவர் தனது பணிமையில் பணிபுரிவோருக்கு ஆண்டு இறுதியில் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்ததுடன் தான் 2018உடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் இரணாம் காலத்திற்கான பதவி முயற்ச்சியில் தான் ஈடுபடப் போவதிலலை எனவும் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய நாடுகள் கட்டாரைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டன. கட்டார் ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் உறவை வைத்திருப்பதும் அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது.

பங்குச் சந்தை
2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகப் பங்குச் சந்தை ஒரு சிறிய அளவு மட்டுமே விலை அதிகரிப்பைக் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டு சாதனை மிக்க ஓர் ஆண்டாகும். கடந்த இருபது ஆண்டுகளில் 2013-ம் ஆண்டும் 2017-ம் ஆண்டும்தான் Dow Jones சுட்டியின் சாதனை மிகு ஆண்டுகளாகும். Dow Jones 26%, S&P 20%, Nasdaq 30% என சுட்டெண் அதிகரிப்பைக் கண்ட ஆண்டு 2017 ஆகும்.  2017-ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை உலகப் பங்குச் சந்தையில் நிகர முதலீடு 149பில்லியன் டொலர்களாகும். இது 2016-ம் ஆண்டு முழுக்க முதலிட்ட தொகையிலும் பார்க்க 16பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும்.

நுண்நாணயம்(cryptocurrency)
2017-ம் ஆண்டு நுண்நாணயங்களின் ஆண்டாகும். நுண்நாணயங்களில் ஒன்றான Bitcoin 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் $1000 ஆக இருந்து ஆண்டின் இறுதியில் $19,000 ஆக அதிகரித்தது. ஆண்டின் பிற்பகுதியில் சீனாவும் இறுதிக் பகுதியில் தென் கொரியாவும் நுண்நாணயங்களுக்கு தடை விதித்தமை அதன் பெறுமதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. வட கொரியா பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிய நுண்நாணயங்களைப் பயன்படுத்தியமை 2017இல் அதன் விலை அதிகரிப்புக்கு வழியமைத்தது.

பட்டுப்பாதை
29 நாடுகளின் அரசுத் தலைவர்கள், உலக வங்கி, பன்னாட்டு நாண்டிய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட வலயமும் பாதையும் மாநாடு (Belt and Road Forum)  ஒன்றை சீனா 2017-ம் ஆண்டு மே 14-ம் திகதி அமர்க்களமாக நடத்தியது. டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடியும் தலைமையும் ஆட்டம் காணும் வேளையில் அவற்றைத் தான் பிடிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காணமைத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்ததமையை சீனா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது. கொழும்பு பன்னாட்டு நிதி நகரம், கென்யா தொடருந்து திட்டம் போன்றவை எல்லாம் புதிய பட்டுப்பாதையின் பகுதிகளே.
F-35
அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457  F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது.

MiG-29
2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம்  Mig-35 போர் விமானங்களின் பறப்பை. இதற்கென ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் 3300 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Mig-35 போர்விமானங்கள் MiG-29இல் இருந்து மேம்படுத்தப்பட்டவையாகும். இப்போர்விமானங்கள் ஆரம்பத்தில் thrust vectoring எனப்படும் திசைமாற்றுத் திறன் தொழில்நுட்பமும் AESA radarரும் இல்லாமல் இருந்தன. பின்னர் அவை Mig-35இல் இணைக்கப்பட்டன. இரசியாவின் RSK-MiG போர்விமான உற்பத்தி நிறுவனத்தின் தொடர் இருப்பை உறுதி செய்யும் வகையில் மிக்-35 போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து வானுக்கும் தரைக்கும் கடலுக்கும் ஏவுகணைகளையும் குண்டுகளையும் மிக்-35 போர்விமானங்கள் வீசக்கூடியவை. 2018-ம் ஆண்டிற்குள் 37 மிக்-35 போர்விமானங்கள் இரசிய வான்படையில் இணைக்கப்படும்பறப்பு வேகம், தாங்கிச் செல்லக் கூடிய படைக்கலன்களின் எடை(payloads) துரிதமாகத் திசைமற்றும் தன்மை(maneuverability), புலப்படாத்தன்மை (stealth), எதிரி இலக்குகளை இனம்காணும் தன்மை, வானாதிக்கம் செலுத்தும் திறன் (air superiority), பார்வைத் தொலைவு (Beyond Visual Range), எரிபொருள் மீள் நிரப்பும்வரை பறக்கக் கூடிய தூரம் ஆகியவை போர்விமானங்களின் முக்கிய அம்சங்களாகும்

தீவிரவாதம்
22-03-2017 பிற்பகல் 2.-40  ஒரு தாக்குதலாளி ஒரு மகிழூர்தியை ( a motor car that is classified as sport utility vehicle) வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்தின் மேலாக நடந்து சென்றவர்கள் மோதிக் கொண்டு சென்றார். அவரது வண்டி தெரு ஓரத்தில் மோதி மேலும் ஓட்ட முடியாத நிலை வந்தவுடன் கையில் இருந்த சமையலறைக் கத்தியுடன் பாராளமன்ற வளாகத்தினுள் Carriage Gates entrance ஊடாக ஓடினார். அவரைத் தடுக்க வந்த காவற்துறையாளரைக் குத்திய போது இன்னும் ஒரு காவற்துறையாளர் அவரைச் சுட்டுக் கொன்றார். கத்தியால் குத்தப்பட்ட காவற்துறையாளர் அமைச்சர் ஒருவரால் கொடுக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். தெரு ஓரம் நடந்து சென்றவர்களில் இருவர் கொல்லப்பட்டன்னர் 39 பேர் மருத்தவ மனையில் சிகிச்சை அழிக்கப் படும் வகையில் காயமடைந்தனர். மன்செஸ்டர் நகரிலும் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. 



2017-ம் ஆண்டின் இறுதி அதிரடிகளாக இந்தியா தைவானுடன் தனது உறவுகளை வளர்ப்பதும், இரசியாவில் இருந்து மின்சார இறக்குமதி செய்வதை பெலரஸ் நிறுத்தியதும் அமைந்துள்ளது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...