Tuesday 18 January 2022

இலங்கையில் சீனா மறைமுக படைத்தளம் அமைக்குமா?

  


சீனாவின் அரசுறவியல்(Diplomatic) நகர்வுகள் எப்போதும் தொலைநோக்கமும் உள்நோக்கமும் கொண்டவையாகவும் நீண்ட கால அடிப்படையில் செய்யப்படுபவையாகவும் இருக்கும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக சீனா செய்யும் நகர்வுகள் ஐயத்திற்கு இடமானவையாக இருக்கின்றன. சிறிது சிறிதாக இலங்கையை தனது முழுமையான பிடிக்குள் சீனா கொண்டுவர முயல்வது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது போல் செயற்பட்டாலும் இலங்கையை இந்தியா தனித்து கையாள முடியாது என்பதாலும் இலங்கையை இந்தியாவை தனித்து கையாள்வதை அமெரிக்கா விரும்புவதில்லை என்றபடியாலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபட்டு இலங்கையை சீனாவின் பிடிக்குள் செல்வதற்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றன. இருந்தும் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் இன்னும் இல்லை.

இலங்கை சீன உறவு

SWRD பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது 1957 பெப்ரவரியில் இலங்கையில் சீனத் தூதுவரகம் திறக்கப்பட்டது. அதில் இருந்து இரு நாடுகளுக்குமிடையில் ஒரு முறைசார் உறவு ஆரம்பமானது. இரு தரப்பு வர்த்தகங்கள் அப்போது முக்கிய பங்கு வகித்தது. சீனாவிற்கு இலங்கையில் இருந்து இரப்பரும் இலங்கைக்கு சீனாவில் இருந்து அரிசியும் விற்பனை செய்யப்பட்டன. இலங்கையில் சீனா தனது பொதுவுடமைவாதத்தை பரப்ப காத்திரமான முயற்ச்சி எடுத்ததில்லை. ரொஹண விஜயவீர தலைமையில் இலங்கையில் செய்த பொதுவுடமைப் புரட்சிக்கு சீனா உதவி செய்யவில்லை. அது உதவி செய்திருந்தால் விஜயவீரா தலைமையில் நடந்த புரட்சியின் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கலாம். தோழர் சண்முகதாசனின் சீன சார்பு பொதுவுடமைக் கட்சியில் ஒரு முண்னணி உறுப்பினராக தோழர் விஜயவீர இருந்திருந்தார். சிங்களவர்கள் இலங்கையின் எல்லாச்சூழலில் நட்பாக இருக்கும் நாடாக சீனாவைப் பார்க்கின்றனர். 1983இல் இருந்து 2009வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கைக்கு சீனா பேருதவி செய்தது. அதன் பின்னர் உலக அரங்கில் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு ஏற்படும் நெருக்கடிகளை எதிர் கொள்ள சீனாவைப் போல் வேறு எந்த நாடும் நேரடியாக உதவி செய்வதில்லை. 2019-ம் ஆண்டு இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையை எந்த ஒரு நாடும் மிரட்ட நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஆரம்பப்புள்ளியாக அம்பாந்தோட்டை?

சீனா இலங்கை மீது செய்த கேந்திரோபாய நகர்வு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அது செய்த முதலீடு ஆகும். அமெரிக்காவின் கடற்படை வலிமையை தனது நீர்மூழ்கிக் கப்பல் படை மூலம் எதிர் கொள்ளும் சீனாவின் கேந்திரோபாயத்திற்கு அமைய அம்பாந்தோட்டை துறைமுகம் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டது. சீனா மியன்மாரின் சிட்வே, பங்களா தேசத்தின் சிட்ட கொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களில் சீனா செய்த முதலீடு முத்துமாலைத் திட்டம் என அழைக்கப்படுகின்றது. அவற்றின் பூகோள அமைப்பைப் பார்த்த போது அது இந்தியாவின் கடற்பாதுகாப்பின் கழுத்துக்கான சுருக்குக் கயிறு போல் தோற்றமளித்தது. சீனா அம்பாந்தோட்டை துறைமுகம் இரு தரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வர்த்தக நோக்கங்களைக் கொண்டது என தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

இந்தியாவிற்கு மிக அருகில் சீனா

கொழும்புத் துறைமுகத்தின் அதிக இலாபகரமான Colombo International Container Terminal (CICT) என்னும் தெற்கு முனையம் சீனாவின் China Merchant Holding நிறுவனத்திற்கு 2011இல் விற்பனை செய்யப்பட்டது. முதலில் சீன நிறுவனத்திற்கு 50%, Aiken Spence நிறுவனத்திற்கு 35% எனவும், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு 15% எனவும் பன்னாட்டு முனையத்தின் உரிமை பகிரப்பட்டது. பின்னர் சீன நிறுவனம் Aiken Spence இடமிருந்து 35% உரிமத்தையும் பெற்றுக் கொண்து. சீனா அங்கு இலத்திரனியல் முறைமையிலான கப்பல் மற்றும் கொள்கலன் கையாளலை அறிமுகம் செய்தது. தெற்காசியாவில் உள்ள ஒரே ஓர் ஆழ்கடல் துறைமுகமாக Colombo International Container Terminal இருக்கின்றது. இந்திய வர்த்தக கொள்கலன் போக்குவரத்தில் 70% கொழும்பு துறைமுகத்தினூடாக நடக்கின்றது. சீனா உருவாக்கிய செயற்கைதீவாகிய கொழும்பு துறைமுக நகரமும் அதில் அமைந்துள்ள தாமரைக் கோபுரமும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அதிலிருந்து உளவு நடவடிக்கைகளையும் மற்றும் உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சீனாவால் இந்தியாவிற்கு எதிராக செய்ய முடியும். கூடாங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து புது டில்லி வரை தாமரைக் கோபுரத்தில் உச்சியின் நின்று அவதானிக்க முடியும். சீனாவால் யாழ் குடாநாட்டுக் கரையோரத்திலும் ஒரு சிறிய செயற்கைத் தீவை அமைக்க முடியும். அதிலும் ஒரு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம். அப்படி ஒரு தீவு அமைவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும்.

இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க வழி தேடும் சீனா

சீனா தன் அயல் நாடுகளின் வான்பரப்புக்களுள் அடிக்கடி தன் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு வலிமையையும் பொறுமையையும் சோதிப்பதுண்டு. அதே போல அயல் நாட்டுக் கடற்பரப்புக்குள் தனது கடற்படைக்கலன்களையும் மீன்பிடிப்படகுகளையும் சீனா அடிக்கடி அனுப்புவதுண்டு. இந்தியாவிற்கு அதனுடனான எல்லையில் பல சிறு ஆக்கிரமிப்புக்களை சீனா செய்வதுண்டு, இந்தியாவிற்கு சொந்தமான பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளதாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு வான்பரப்பில் சீனா தொல்லை கொடுப்பது குறைவு. இந்திய சீன எல்லை கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் அங்கு விமானங்களுக்கு இடர்மிகு சூழல் நிலவுவதால் சீனா அங்கு தொல்லை கொடுப்பதை தவிர்க்கலாம். இந்தியாவிற்கு கடல் மூலம் தொல்லை கொடுக்க சீனாவிற்கு சிறந்த இடம் இலங்கை தான். ஆனால் இலங்கையில் சீனா ஒரு பகிரங்க படைத்தளத்தை அமைப்பது ஆபத்தானது. அப்படிப்பட்ட தளங்கள் இருந்தால் அவற்றின் மீது இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். கடல், வான், தரை ஆகிய நிலைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். 2021 டிசம்பரில் சீனா மியன்மாரிற்கு (பர்மா) இரண்டு மிங் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியிருந்தது. சீனா ஏற்கனவே பாவித்த அந்த நீர்மூழ்கிகள் டீசலில் இயங்குபவை. இந்த வகை நீர்மூழிகளை ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு வழங்கியது அதுவே முதற்தடவை. 2017-ம் ஆண்டு பங்களாதேசம் இரண்டு நீமூழ்கிகளை சீனாவிடமிருந்து $203மில்லியன்களுக்கு வாங்கியது. 2021 நவம்பரில் சீனா PNS Turghril என்னும் இரண்டு உயர்தரப் போர்க்கப்பல்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கியது. ஏற்கனவே சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான் எட்டு நீர்மூழ்கிகளை வாங்கியிருந்தது. பாக்கிஸ்த்தான் எட்டு Frigate கப்பல்கள் ஐந்து Corvette கப்பல்கள் எட்டு நீர்முழ்கிக் கப்பல்களை ஒரு குறுகிய காலப்பகுதியில் தனது கடற்படையை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் வாங்கியமை உலகத்தை வியக்க வைத்தது.

இரகசியப் படைத்தளஙகள்

ஒரு வல்லரசு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளத்தை பகிரங்கமாக அமைக்கலாம். யாருக்கும் தெரியாமல் இரகசிய படைத்தளங்களையும் அமைக்கலாம். மறைமுகப் படைத்தளங்களை அமைக்கலாம். சீனாவின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத்துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் ஆகியவற்றில் இரகசியமாக படைக்கலன்களை சீனாவால் வைத்திருக்க முடியும். பெரிய கொள்கலன்கள் உள்ளே ஏவுகணைச் செலுத்திகளையும் ஆளிலிப் போர் விமானங்களையும் மறைத்து வைத்திருக்கலாம். தேவை ஏற்படின் துரிதமாக பொருத்தக் கூடிய பல பெரிய படைக்கலன்களையும் சீனாவால் இலங்கையில் வைத்திருக்க முடியும். இந்தியாவின் உளவுத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே இவற்றை இனம் கண்டு அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

மறைமுகப் படைத்தளங்கள்

இலங்கையில் சீனா மறைமுகமான படைத்தளத்தை அமைக்க செய்யக் கூடியவை:

1.இலங்கைக்கு பலவிதமான படைக்கலன்களை சீனா விற்பனை செய்தோ அல்லது உதவியாக வழங்கியோ இலங்கையின் பல்வேறு இடங்களில் நிறுத்தலாம். நாசகாரிக் கப்பல்கள், சேமக்கப்பல்கள் (corvette), நீர்முழ்கிக் கப்பல்கள் வேவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள், இலத்திரனியல் போர் விமானங்கள் போன்றவை இவற்றில் அடக்கப்படலாம்.

2. மேற்படி கப்பல்களையும் விமானங்களையும் இயக்குவதற்கு இலங்கைப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதற்கும் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான ஆளணிகள் என்னும் போர்வையில் சீனப்படையினர் இலங்கையில் தங்கலாம்.

3. இந்தியாவுடனான போர் என்று வரும் போது மேற்படி கப்பல்களும் விமானங்களும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக திடீர்த்தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

இலங்கையில் சீனா பகிரங்க படைத்தளங்களை அமைப்பதிலும் பார்க்க இரகசிய மற்றும் மறைமுக படைத்தளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...