Saturday 12 December 2015

சிரியாவில் ஈரானின் பின்வாங்கலும் இரசியாவின் மாற்றமும்

சிரியாவில் பல உயிரிழப்புக்களைச் சந்திப்பதால் ஈரானின் படையணியினர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ஈரானின் படையான Iranian Revolutionary Guard Corpsஇன் சிறப்புப்  படையணியான Quad Forcesஐச் சேர்ந்த 7000 பேர் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாகப் போர் புரியவும் ஆலோசனைகள் வழ்ங்கவும் அனுப்பப்பட்டனர். தற்போது அவர்களின் தொகை 700ஆகக் குறைந்துவிட்ட்டது.

சுனி இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகாக் கொண்ட சிரியாவில் சியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான அலவைற் இனக் குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத் பதவியில் இருக்கின்றார். அவரது உதவியுடன் சியா முஸ்லிம் நாடான ஈரான் லெபனானில் உள்ள சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு தொடர்ந்து உதவி செய்கின்றது. அசாத்தின் ஆட்சி அகற்றப்பட்டால் அது ஈரானுக்கு ஒரு கேந்திரோபாய இழப்பாகும். இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு ஈரானுக்கு சிரியாவில் ஈரானுக்கு ஆதரவான ஆட்சி இருப்பது அவசியமாகின்றது. இந்த கேந்திரோபாய அவசியம் மதவாத ஈரானிய ஆட்சியாளர்களையும் மதசார்பற்ற ஆட்சி செய்து வரும் அல் அசாத்தையும் இணைத்து வைத்துள்ளது.


2011-ம் ஆண்டில் அரபு வசந்தத்துடன் உருவான அசத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையினராவர்கள் சுனி இஸ்லாமியர்கள் என்பதால் மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட கிளர்ச்சி சிய-சுனி இஸ்லாமியர்களிடையான மோதலாக மாறிவிட்டது. சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என சவுதி அரோபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் ஆகிய நாடுகள் முயல்கின்றன.


சிரியாவில் இரசிய விமானங்கள் தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force of the Revolutionary Guard Corps சிரியப் போர் முனையில் பெரும் ஈடுப்பாடு காட்டுகின்றது. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிரியப் படைகள் பெரும் ஆளணி இழப்புக்களால் நிலை குலைந்து போயிருந்தன. அவர்களது உள்ள வலுவும் குறைந்து போயிருந்தது. இந்த நிலையிலேயே ஈரானும் இரசியாவும் சிரியாவில் அதிக ஈடுபாடுகள் காட்டின. ஈரானியப் படையினரின் சிரிய நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான தகவல்களை ஈரானிய அரசு தன் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை.




ஈரானியப் படைகளுக்கு அண்மைக்காலங்களாக சிரியப் போர் முனையில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. ஈரானில் இருக்கும் கடுமையான செய்திக் கட்டுப்பாடுகளால் ஈரானியப் படைகளுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பான செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் ஈரானியப் படையினருக்கு நடக்கும் இறுதிக் கிரியைகளில் இருந்தும் உச்சத்தலைவர் கொமெய்னியின் இரங்கற் செய்திகளில் இருந்தும் ஈரானியப் படைகளுக்கு ஏற்படும் உயிழப்புக்கள் அதிகரித்து வருவதை அவதானிக்கும் போது 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 67ஈரானியப் படைகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகின்ற்து. இது முன்னைய மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளிலும் பார்க்க அதிகமானதாகவும் இருக்கின்றது.

அமெரிக்க வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி 2015-டிசம்பர்  -15-ம் திகதி செவ்வாய்க் கிழமை இரசியா சென்று சிரியா தொடர்பாகா இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வேற்பாடுகள் மற்றும் ஒற்றுமைஇ தொடர்பாக ஆராயவிருக்கின்றார்.

சிரிய அரச படைகள்  போர் புரிந்து கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றாத நிலையில் அவர்களுடன் ஒரு பேச்சு வார்த்தையின் மூலம்  ஹொம்ஸ் நகரை சிரிய அரசு பெற்றுக் கொண்டது. அதற்குப் பதிலாக Free Syrian Army உட்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் செய்வதில்லை என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது. இதை உறுதி செய்யும் முகமாக Free Syrian Armyயின் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு இரசியா விமானக் குண்டு வீச்சு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் இரசியா படைக்கலன்களும் வெடிபொருட்களும் Free Syrian Armyக்கு வழங்கப் போவதாக புட்டீன் அறிவித்துள்ளார்.  ஹொம்ஸ் நகரில் இரசியா ஒரு விமானத் தளதையும் உருவாக்கவுள்ளது. Free Syrian Army போராளிகளை இதுவரை பயங்கரவாதிகள் என அழைத்து வந்த இரசியா இப்போது அவர்களுடன் இணைந்து ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடுவது ஒரு திருப்பு முனையாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...