Tuesday 3 June 2014

உலகெங்கும் உள்ள மக்களின் படங்களைத் திருடும் அமெரிக்க உளவுத் துறை

ஐக்கிய அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் உலகெங்கும் உள்ள மக்களின் கோடானு கோடிக்கணக்கான படங்களைத் திருடுவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றால் அனுப்பப்படும் படங்களையும் சமூகவலயத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களையும், காணொளி கூட்டங்கள், காணொளி மாநாடுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் படங்களையும் உலகெங்கும் உள்ள அமெரிக்க உளவாளிகள் திருடுவதாக நியூயோர்க் ரைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது..

உருவப் படங்களை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) கடந்த சில ஆண்டுகளாக பெரு வளர்ச்சியடைந்து வருகின்றது. இதைப் பயன் படுத்தி அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் தனக்குத் தேவையானவர்களின் தகவல்களைச் சேகரிக்கின்றது. இதற்காகக நாளொன்றிற்கு பல இலட்சக் கணக்கான படங்கள் திருடப்படுகின்றன.படங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க அரசும் தனியார் நிறுவனங்களும் பெரும் செலவு செய்து வருகின்றன. தற்போது உள்ள தொழில்நுட்பம் low-resolution images எனப்படும் குறைந்த தரப் படங்களை இனம் காண்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. அத்துடன் வேறு பட்ட கோணங்களில் இருந்து எடுக்கப்படும் படங்களிலும் தற்போது இனம் காணுதலில் சிரமம் உள்ளது. 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லாடனின் படத்தை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) இல் பரீட்சித்த போது அது தாடிவைத்த பில் லாடன் போல் தோற்ற முள்ளவர்களைக் காட்டியதாம். இதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் பெரு வளார்ச்சி கண்டுள்ளது

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் கூகிள், மைக்குறோஸோப்ற், அப்பிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல இணையவெளித் திருட்டுக்களையும் ஊடுருவல்களையும் மேற்கொள்வதாக அதன் முகவராகப் பணியாற்றிய எட்வேர்ட் J ஸ்நோடன் 2011-ம் ஆண்டு அம்பலப்படுத்தி இருந்தார்.

அமெரிக்காவின் சட்டப்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகம் அமெரிக்க அரசின் வண்டிச் செலுத்துனர் அனுமதிப் பத்திரம், கடவுட்சீட்டு போன்றவற்றிற்காக மற்ற அமெரிக்க அரச நிறுவனங்கள் வைத்திருக்கும் ஒளிப்படங்களை தனது தேவைக்காகப் பெறமுடியாது

அமெரிக்க உள்துறை பெரிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.  இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் செய்மதிகளூடாக எடுக்கப்படும் படங்களை வைத்து அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை பிடிக்கலாம். இலங்கையின் இறுதிப் போரின் போது இழைக்கப் பட்ட போர்க்குற்றங்களின் ஆதாரங்கள் போர் முனையில் இருந்து படப்பதிவுகளாகவும் காணொளிப்பதிவுகளாகவும் கொழும்பிற்கு அனுப்பட்டபோது அதை அமெரிக்க உளவுத்துறையும் பெற்றிருக்க வாய்ப்புண்டு.    சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட தொலைபேசி உத்தரவுகள் கூட அமெரிக்காவிடம் இருக்கிறது.   நியூ யோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர்  ரயன் குட்மன் அமெரிக்க உளவுத் துறை இவற்றைப் பகிரங்கப்படுத்தி போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...