Tuesday 31 December 2013

2013இல் எழுச்சி பெற்ற அல் கெய்தா

அல் கெய்தா ஈராக்கின் மேற்குப்பகுதியையும் சிரியாவின் கிழக்குப் பகுதியையும் இணைத்து தமக்கென ஒரு நாட்டைப் பிடிக்கும் உத்தியில் ஈடுபட்டுள்ளது. சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் அண்மைக்காலங்களாக அல் கெய்தா தனது பிடியை இறுக்கிக் கொண்டே போகின்றது. 

அன்பர் மாகாணத்தில் உள்ள சுனி அரசியல்வாதிகளுக்கும் ஈராக்கின் சியா ஆட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சியா ஆட்சியாளர்கள் அன்பர் மாகாணத்தில் பல அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக சுனி பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து இன்று(டிசம்பர் 31) பன்னிரண்டு பாராளமன்ற உறுப்பினர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குத்லான 9-11 இன் பின்னர் அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்டது. இதனால் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். முக்கியமான தன்னிச்சைக் குழுக்கள்:
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அரபுக் குடாநாட்டில் அல் கெய்தா- இது யேமலின் செயற்படுகிறது.  -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.

அல் கெய்தாவிற்குத் எதிர்பாராமல் அரபு வசந்தத்தம் என்னும் பெயரில் துனிசியா, லிபியா,  எகிப்து ஆகிய நாடுகளில் இசுலாமியர்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியாளர்கலை விரட்டினர். இந்தப் புரட்சிகளில் அல் கெய்தா ஓரங்கட்டப்பட்டிருந்தது. பின்னர் அல் கெய்தா விழித்துக் கொண்டு தனது தந்திரோபாயமான வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான புனிதப்போரோடு மட்டும் நிற்காமல் அடைக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிரான இசுலாமிய மக்களின் எழுச்சியிலும் தன்னை இணைத்துக் கொள்கின்றது. இந்த மாற்றப்பட்ட தந்திரோபாயத்தின் ஒன்றாக சிரியாவில் ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான போராளிகளுக்குள் அல் கெய்தா ஊடுருவிக் கொண்டது.

புதிய மனித வெடி குண்டுகள்
2013இல் அல் கெய்தாவினர் ஒரு புதிய வெடிகுண்டுகளை உருவாக்கியுள்ளனர் என்றது அமெரிக்க உளவுத் துறை. அக் குண்டுகள் ஈரமான வெடிக்கக் கூடிய பதார்த்தத்தில் தோய்த்து எடுக்கப்படும். அந்த ஆடை உலர்ந்தவுடன் அந்தப் பதார்த்தம் வெடிக்கும். இந்த வகைக் குண்டுகள் விமான நிலையங்களில் தற்போது உள்ள ஒளி வருடிகளால்(Scanners) கண்டறிய முடியாதவையாகும். இக்குண்டுகளை அல் கெய்தாவின் இப்ராஹிம் அல் அசிரி என்னும் நிபுணர் உருவாக்கியுள்ளார். 

மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிராக துவாரெக் என்னும் சிறுபான்மை இனத்தவர் போராடி பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது தானும் அதற்குள் நுழைந்து கொண்டது. அல் கெய்தாவிற்கு எதிரான போரில் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொண்டன. தாம் நேரடியாக அல் கெய்தாவிற்கு எதிராக போர் புரிவதைத் தவிர்த்து ஆபிரிக்க நாடுகளில் தமக்கு ஆதரவான நாட்டுப் படைகளுக்கு பயிற்ச்சி அளித்து அவர்களை தமது தலைமையின் கீழ் இசுலாமியப் போராளிகளுடன் போர் புரியும் தந்திரத்தை உருவாக்கின. இந்த இரு மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள் மாலியில் மோதிக் கொண்டன. மாலியில் பிரேஞ்சுப் படைகள் அல் கெய்தாவை விரட்டியதற்குப் பலி கொடுக்கும் முகமாக எண்ணூற்றிற்கும் அதிகமானவர்களை அல்ஜீரியாவில் அல் கெய்தா ஆதரவுப் படைகள் பணயக் கைதிகளாக்கினார்கள். 39 வெளிநாட்டினர் இந்த பணயக் கைதி நாடகத்தில் கொல்லப்பட்டனர். மாலியில் பிரேஞ்சுப்படைகள் தாக்குதல் நடாத்திய போது அல் கெய்தாவினர் லிபியாவிற்குள் ஓடி ஒளிந்தும் கொண்டனர்.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் 6000இற்கு மேற்பட்டவர்களை அல் கொய்தா 2013-ம் ஆண்டு கொன்று குவித்தது. சிரியாவிலும் ஈராக்கிலும் இசுலாமிய அரசுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  ஜபத் அல் நஸ்ரா {Jabhat al-Nusra and the Islamic State of Iraq and al-Sham (ISIS)}என்ற அல் கெய்தா சார்பு இயக்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது. ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல சிரிய நகரங்கள் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேற்கு ஐரோப்பா உட்படப் பல நாடுகளில் இருந்து 11,000 அல் கெய்தாப் போராளிகள் சிரியா சென்று அல் கெய்தாவில் இணைந்து போராடுகின்றனர். சிரியாவில் அல் கெய்தாவில் போராடும் ஐரோப்பிய இளைஞர்கள் இருவரைப் பேட்டி கண்ட அமெரிக்க ஊடகம் ஒன்று நீலக் கண் அல் கெய்தா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிவிட்டிருந்தது.

சோமாலியாவில் அல் கெய்தாவின் ஆதரவு இயக்கமான அல் ஷபாப்பினருக்கு எதிராக ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் படைகள் எடுத்த நடவடிக்கைக்குப் பழிவாங்கும் முகமாம கென்யாத் தலைநகர் நைரோபியில் உள்ள கடைத் தொகுதியில் அல் ஷபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடாத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஒரு பிரித்தானியப் பெண் தலைமை தாங்கியது மேற்குலக நாடுகளை உலுப்பியது. நான்கு நாட்கள் அந்தக் கடைத் தொகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் வைத்திருந்தனர்.

இப்போது இசுலாமிய மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் எகிப்தியப் படைத்துறையும் மோதுவதை அல் கெய்தா மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றனர். எகிப்தியப் படைத்துறை இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வன்முறையை தொடரத் தொடர அவர்கள் தம்மைப் போல் மிகவும் தீவிரவாதிகளாக மாறித் தம்முடன் இணைவார்கள் என அல் கெய்தா நம்புகிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பார்த்து வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க புனிதப் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்கிறது அல் கெய்தா.எகிப்தில் இப்போது பலர் அல் கெய்தாவில் இணையத் தொடங்கி விட்டார்கள்.

அல் கெய்தா தொடர்பான நிபுணர்கள் அல் கெய்தா பெரிதும் செயலிழக்கச் செய்துவிடப்பட்டதாகச் சொல்கின்றனர்:  "Al Qaeda central no longer exists as an effective organization," says Fawaz Gerges, a professor at the London School of Economics and Political Science, who has done extensive field research on al Qaeda. "Most of its skilled leaders and lieutenants have been either killed or captured. It is no longer capable of carrying out spectacular operations along the 9/11 lines."
London School of Economicsஇன் அரசறிவியற்துறைப் பேராசிரியர் Fawaz Gergesஇன் கருத்துப்படி அல் கெய்தாவின் மையப்பகுதி இப்போது ஒரு செயற்படும் அமைப்பாக இல்லை. அதன் திறன் மிக்க தலைவர்களும் தளபதிகளும் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் விட்டனர். அதனால் இப்போது 9/11 போன்ற ஒரு தாக்குதலைச் செய்ய முடியாது. ஆனால் சிரியா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் செய்திகள் பேராசிரியர் Fawaz Gergesஇன் கூற்றை மறுதலிக்கின்றன. 2014இல் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னர் சரியான உண்மை தெரிய வரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...